Tuesday, July 6, 2010

மாணவர்களை அடிப்பது சரியா...? தவறா..?

 மாணவர்களை அடிப்பது சரியா...? தவறா..?

இது இன்று அனைவர் மனதையும் உறுத்தும் கேள்வி. அதுவும் எல்,கே.ஜி.குழந்தையை முதுகில் அடித்ததை நாளிதழில்  படத்தில் பார்த்ததும் ...மனம் பதைக்கிறது.

   என் முதல் கேள்வி .....பிஞ்ச மனம் சேட்டை அறியுமா...?நல்லது கெட்டது அறியுமா...?
        கல்வி என்பது பாடத்தை திணித்தல் என்பது தவறான எண்ணம் .கல்வி என்பது உணர்த்துதல், புரியவைத்தல் என்பதை என்று அறிவர்..?
  

        படிப்பு என்பது அடித்தல் மூலம் தான் வரும் என்றால் வீட்டிலேயே பிரம்பால் அடித்து பெற்றோர் படிக்க வைக்க மாட்டார்களா..?
  ஆசிரியர்கள் அடிப்பதை தவிர்த்து , அன்பு , பண்பு , கனிவு, பணிவு , ஒத்துபோதல், தவறை எடுத்து உரைத்தல்,தைரியம் போன்றவற்றை வளர்ப்பவர்களாக இருக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
      கற்றல் என்பது புரிய வைத்தல் என்பதை உணராமல் இன்னும் திணித்தல் என்று இருந்தால் , அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆசிரியர்கள் கட்டுப்பட வேண்டும் .மனித உரிமை மீறலும் பாயும் என்பதை எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்  . 
       பாட சுமைகள் தான் நீங்கள் அடிப்பதற்கு காரணம் என்றால் தைரியமாக அரசுக்கு உங்கள் கோரிக்கைகளை வைக்கவும். யஷ்பால் கமிட்டி சுமையில்லா  கற்றலை வலியுறுத்துகிறது. சமச்சீர் கல்வியில் இன்னும் பட சுமைகளை குறைக்க வழியுண்டு. அதிகம் என்று உணர்ந்தால் எடுத்து சொல்லலாம். உங்கள் கோரிக்கைகளை அடுத்து
புத்த்தகம் வெளி வரும் முன் எடுத்து கூறலாம் .முத்து குமரன் கமிட்டி எடுத்து்ச்சொல்வது சுமையில்ல சுவையான கல்வி என்பதை உணர்ந்து செயல் பட வேண்டும்.
           அடித்தால் தான் படிப்பு வரும் அடியுங்கள் என கூறும் பெற்றோர்கள் கண்டிக்க தக்கவர்கள். பெற்றோர்கள் தம் பிள்ளைகளும் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக அடிக்க தூண்டினாலும் , அடிப்பதால் படிப்பு வராது , வெறுப்பு தான் வரும் என்பதை எடுத்து சொல்லுங்கள். தம் பிள்ளைகளை அரவணைத்து அன்பால் ,மதிப்பெண் அவசியத்தை எடுத்து சொன்னால் நிச்சயம் உணர்ந்தது படிப்பான் . அது தான் நிரந்தரம்.

        கல்வி என்பது மதிப்பெண் சார்ந்ததாக இருக்கும் வரை பெற்றோரும் , ஆசிரியரும் தன்னையறியாமல் இத் தவற்றை  செய்வார்கள் என்பது தான் உண்மை. ஆகவே , நாம் அடிப்படை தேவையான கல்வியில் மாறுதல் உண்டாக்க சிந்திக்க வேண்டும். கல்வியாளர்கள் மதிப்பெண் அடிப்படையிலான மதிப்பிடுகளை தவிர்த்து புதிய உத்திகளை கையாள சிந்திக்க வேண்டும்.

      ஆசிரியர்கள் நவீன கற்றல் முறையின் அடிப்படையில் மாணவர்களுடன் நல்ல இணக்கத்தினை ஏற்படுத்தி , மாணவர்களுடன் ஒரு நட்பு ரீதியான தொடர்பை ஏற்படுத்தும் போது அடித்தல் என்பது மறைந்து , படித்தல் என்பது தானாக நிகழும் .

      ஆசிரியர்களைப் பார்த்தால் மாணவர்களுக்கு ஒரு வித பயம் ஏற்படாமல் , பக்தி  உண்டாக்க வேண்டும். மன இறுக்கம் தளர்ந்து , மன நெருக்கம் உண்டாக்க வேண்டும். அதுவே ஒரு வித கற்றல் செயல் தான். இக் கற்றல் முறை அனைத்து வித கருத்து திணிப்புக்களையும் தானாக செயல் படுத்தும். மாணவர் மன நிலை தானாக கற்றல் சூழலுக்கு மாறும். மன சுருக்கம் தவிர்த்து , அறிவு விரிவாக்கத்திற்கு பலன் தரும்.


   பிரம்பை தவிர்த்து ,மாணவ்ர் சுணக்கம் இன்றி படிக்க , மாணவரிடத்தில் இணக்கம் உண்டாக்கி , நம்மிடமும் , படிப்பின் மீதும் உள்ள பயம் தவிர்ப்போம்.

   கல்வி கற்பித்தல் முறை ஆசிரியரை மையப் படுத்துவதாக அமையாமல் , மாணவனை மையப்படுத்தும் விதத்தில் அமைப்போம். அதுவே மாணவனை நம்மிடம் பிரியமாக பழக சொல்லும் , சக மாணவன் உதவியை நாடச் செய்து , நிரந்தரமாக பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்க்கும். ஒருங்கிணைத்து செயல் படுத்தும் தன்மையை ஏற்படுத்தும்.

   அடிப்பதை தவிர்த்து , படிப்பதை மேம்படுத்த முயற்சி செய்வோம். எதிர்காலம் வலுவுள்ளதாக அமைய வலுவான சிந்தனையை ஏற்படுத்த ஆசிரியர்களாகிய நாம் , நமக்குள்ளாக ஒரு விவாதம் செய்து கல்வியில் புதுமைகள் படைப்போம்  .

5 comments:

Unknown said...

அடித்துச் சொல்கிறேன் மாணவர்களை அடிப்பது தவறு ..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

மாணவர்களை அடிக்காமல் வழிக்கு கொண்டு வருவது தான் பெஸ்ட்.. சாய்ஸ்.

Balamurugan said...

குழந்தைகளை அடிப்பதன் மூலம் அவர்களின் அறிவை வளர்த்துவிட முடியாது. நல்ல பகிர்வு.

Anonymous said...

மாணவர்களை அடிக்க கூடாது இது தான் கருது அடிப்பதினால் பசங்கள் ஸ்கூல் போக பயப்படறாங்க .வேலம்மாள் matriculation ஸ்கூல் லே 2003 ஜூலை மாதம் பத்தாம் கிளாஸ் பய்யன் தற்கொலை பண்ணிட்டா காரணம் டீச்சர் எல்லா பசங்க முன்னாடி அடிச்சது தான் ..பசங்க எதா தப்பு பண்ணின கிளாசுக்கு வெளியில் நிர்த்திடுங்க இல்லேனா பெற்றோர்களே கூபிடுங்க ...படிப்பு சொல்லி கொடுக்க தானே டீசெர்ஸ் ..இப்போதெல்லாம் நியூஸ் பேப்பர் எடுத்தா டீசெர்ஸ் பசங்களை அடிச்சா செய்தி நிறையை வருது ...
நம்ம பசங்கள்கு நல்ல வழி காட்டுவாங்க என்று நினைச்சு தானே ஸ்கூல் க்கு அனுப்பறோம் இப்போ உயிருக்கே உத்திரவாதம் இல்லையே பயமா இருக்கு ...

http://rkguru.blogspot.com/ said...

///பிரம்பை தவிர்த்து ,மாணவ்ர் சுணக்கம் இன்றி படிக்க , மாணவரிடத்தில் இணக்கம் உண்டாக்கி , நம்மிடமும் , படிப்பின் மீதும் உள்ள பயம் தவிர்ப்போம்.//// - இதுதான் சரி....

Post a Comment