Thursday, July 13, 2017

செகாவ் அமைக்க நினைத்த சானிடோரியம் கேட்கின்றோம் உதயா...!

தொடர்ந்து கல்வியில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் கல்விச் செயலர் குறித்து சொல்லாமல் இருக்க இயலவில்லை. மிக அருமையான திட்டங்கள் வழி மொழிகின்றார். அரசும் அவர் மீது நம்பிக்கை கொண்டு செயல்படுத்துகின்றது. பாராட்டுகள். குவான்டிட்டி சரி செய்யும் உங்களிடம் ஒரு கேள்வி. அரசு பள்ளிகளை தரமான பள்ளிகளாக மாற்ற சுமார்ட் வகுப்பறை போன்ற திட்டங்களால் கொண்டுவருவது சாத்தியமே! ஆனால், அதனை கண்காணிக்க எப்போதும் அரசு தவறுகின்றது. ஏன்?
கண்காணிப்பு என்பது பயிற்சியில் மட்டுமா? அது போதுமா? பயிற்சியில் பெற்றவற்றை வகுப்பறைகளில் கொண்டு சேர்க்கின்றனரா? அதனை யார் சரி செய்வது?
இதனை வாசிப்பவர்கள் அவரிடம் எனது கேள்விகளை கொண்டு செல்லக்கூடும்.
மானிட்டரிங் குறித்து குறிப்பிடும் போது பயிற்சியின் போது மட்டும் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட்டால் தரம் நிச்சயம் உயர்த்தப்படும். பலஅரசு பள்ளிகளில் சரியான கண்காணிப்பு இல்லாததால் போதிய வசதிகள் இருந்தும் குழந்தைகள் இருந்தும் கல்வியின் தரம் குறைவால் ஆங்கில வழிக்கல்வியை தனியாரிடம் நாடிச் செல்கின்றனர்.

அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களை கண்டிக்கும் உரிமை தலைமையாசிரியர்களுக்கு முழுமையாக தரப்பட வேண்டும். ஆன் லைன் மூலம் தினசரி வகுப்பறை நிகழ்வுகளை  தலைமையாசிரியர்கள் அப்லோடு செய்ய  வேண்டும். அதற்கான செயலியை ஏற்படுத்த வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இரு அதிகாரிகள் நியமிக்கப் பட்டு ஒருவர் நிர்வாகத்திற்கும், மற்றொருவர் பள்ளிகளை கண்காணிக்கவும் இருப்பதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு உடனடியஅளிக்கவும் அதே வேளையில் பள்ளிகள் தரம் மிக்க கல்வியை அளிக்கவும் இயலும்.
தற்போது உள்ள நிலையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் தகவல் கொடுக்கவும், நிர்வாகப்பணிகளை சரி செய்யவும் இருப்பதால் பள்ளிகளில் அசிரியர்கள் கண்காணிக்கப்படுவதில்லை. முழுமையான கல்வி போய் சேருவதில்லை.  பாடப்புத்தகங்களை அரசு பாடநூல் நிறுவனமே பள்ளிகளுக்கு கூடுதலாக பணியாளர்களை நியமித்து வழங்கலாம் அல்லது காண்ட்ராக்ட் முறையில் ஏலம் கொடுத்து புத்தகங்களை பள்ளிக்கு அனுப்பலாம்.

மிக முக்கியமான ஒன்று.. ஆசிரியர்கள் கல்வி குறித்தும் கல்வியின் இன்றைய நிலை குறித்து பேசுவதற்கான தளத்தை ஏற்படுத்த வேண்டும். அவசியம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். ரஷ்ய புகழ் பெற்ற எழுத்தாளர் ஆண்டன் செகாவ் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது சக எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி அவரை பார்க்க சென்றார். அப்போது பேசும் போது , ஒரு சானிடோரியம் அமைக்க இருக்கின்றேன் என்று செகாவ் கூறியுள்ளார்.
அவர் நோய்வாய் பட்டு இருந்ததால், கார்க்கி கிராம பகுதியில் நல்ல தொரு மருத்துவ சிகிச்சை மையம் தேவை என நீங்கள் கருதுவது சரியே என்றார்.

உடனே செகாவ்  நான் சிகிச்சை மையம் அமைக்க விரும்புவது நோயாளிகளுக்கு அல்ல. ஆசிரியர்களுக்கு. உண்மையில் அது என்னுடைய கனவு. இந்த இடத்தில் நிறைய தங்குமிடங்கள் அமைத்து ரஷ்யா முழுவதும் உள்ள ஆசிரியர்களை அழைத்து வந்து தங்க வைத்து அவர்களுக்கு கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலையும் முக்கியத்துவத்தையும் எடுத்து சொல்ல வேண்டியிருக்கிறது.
இன்றைய ஆசிரியர்களை ஒரு நோய் பற்றியிருக்கிறது. அது கல்வி குறித்த அலட்சியம். அது களைந்து எறியப்பட வேண்டிய நோய். அதுவே ஆசிரியர்கள் இங்கு தங்கிக் கொண்டு நிறைய படிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். அத்துடன் அவர்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் செகாவ்.

நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் பல ஆசிரியர்கள் அலட்சியமாகவே இருக்கின்றார்கள். ஆகவே , கல்விச் செயலாளரே ஆசிரியர்கள் தொடர்ந்து கல்வி குறித்து பேசுவதற்கு விவாதிப்பதற்கான அரங்கை மாவட்டம் தோறும் ஏற்படுத்தலாமே..!

மதுரை சரவணன்.