Monday, February 27, 2012

மதுரைக்கார பாசமான பசங்களுக்கு ரெம்பவே நன்றி…!


சனிக்கிழமை நான் என்னுடைய வேகன் ஆர் காரில் அம்மா வீடு வரை சென்று வீடு திரும்பிக் கொண்டு இருந்தேன். 
   
    மாட்டுத்தாவணி வழியாக வந்து , புதூர் பி.டி.ஆர் டிக்கடை அருகில் அய்யார் பங்களா செல்லும் குறுகலான பாதை வழியா தபால் தந்தி நகர் நோக்கி பயணித்தேன். முன்னே வண்டிகள் வரிசையாக நிற்க, நானும் பிரேக் அடித்து நிறுத்தி காத்திருந்தேன். எதிர் வரிசையில் இருந்து வண்டிகள் நகர வழியில்லாமல் முன்னோக்கி டூவிலர் ஆசாமிகள் நகர் , எதிரே மினி பஸ் வர கஷ்டப்பட்டு கொண்டிருந்தது.(எவனுக்கும் வழிவிடாமல் முன்னோக்கி செல்வது தான் மதுரைக்கார டூவிலார்களின் விதிக்கப்படாத விதி)

    என்னை ஹார்ன் அடித்து முன்னோக்கி போக சொல்லி , என் பின்னால் இருந்த மாருதி வேன் எச்சரித்தது. அவர்களுக்கு முடிந்தால் முன் செல் என கைகாட்டி சைகை செய்தேன். ஒரு ஐந்து நிமிடப் போரட்டத்துக்கு பின் மினி பஸ் ஒரு வழியாக என்னை கடக்க, நான் மெதுவாக என் வண்டியை நகர்த்தினேன். 

    அதற்குள் என் முன்னால் இரண்டு பைக்கில் தமிழ் திரைப்பட வில்லன்களைப் போல கருத்த தடித்த உருவத்தில் என் காரை வழி மறித்தனர்.
   
    அதில் ஒருவன் ஏக வசனத்தில் காரை நிறுத்துடா… என்ற மரியாதை தேய்ந்த வார்த்தைகளால் என் வண்டியை அடிக்க வந்தான். நான் வண்டியை ஓரங்கட்டினேன். காரில் இருந்த வாரே என்ன பிரச்சனை…? என்ன வேண்டும்..? என்றேன். அதற்குள் என்னை சுற்றி ஒரே கூட்டம் கூடி விட்டது. (மதுரையில் கூட்டம் கூட காரணம் வேண்டுமா?)

   அவர்களுக்கு பின்னால் மேலும் இரண்டு பைக்குகள் என என்னை சுற்றி வளைத்தனர். ( இப்படி போலீஸ் நிஜத் திருடர்களை சுற்றி வளைத்தால் , நாம் ஏகப்பட்ட வழிப்பறி திருடர்களை பிடித்துவிடலாம்)
கூட்டம் இன்னும் ஆர்வமாக என்ன விசயம் என நான் முந்தும் முன் அவர்களிடம் கேட்டுக் கொண்டது. ( மாகா ஜனங்களே மதுரக் காரங்களுக்கு என்ன பாசம் ரோட்டில எது நடந்தாலும் வந்து ஆஜார் ஆகிவிடுறேங்களே…ஆனா சரியான நேரத்தில் சரியான விசயத்துக்கு உதவ மாட்டீங்களே)

  என்ன நடக்கிறது என்று புரியாமல் இருக்கிறேன். அப்போது தான் ஆஜரான ஒரு பெரிசு (எல்லா தமிழ் சினிமாவிலும் ஆஜாராவதைப் போல) இந்த கார் காரங்களே இப்படி தான், எவன இடிச்சு தள்ளிட்டு வந்தான் என வார்த்தைகளை கொட்டிக் கொண்டிருந்தது.  

   வில்லத்தனம் அதிகமாக உள்ள ஒருவன், நீ பாட்டுக்கு எம்.ஐ.டி காரனை இடிச்சு தள்ளிட்டு வர , அவன் கால் போச்சு தெரியுமா என சொல்லிக் கொண்டு கார் கதவை திறக்க முற்பட்டான். நான் அதுவரை பொறுமைக் காத்தவன் மனதில் தைரியத்தை வரவழைத்து யார் வண்டி இடிச்சுது..? என்ன பிரச்சனை.. ?    என அடித்தொண்டையில் இருந்து கூவினேன்.

   அடுத்தவன், எங்கிருந்து வர்ர…?  

முதல்ல என்ன வண்டி இடிச்சுதுன்னு கேளு…. என நானும் ஒருமையில் பேச வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகினேன்.

கூட்டத்தில் பின்னால் இருந்து முன்னோக்கி வந்தவன்,, என் வண்டியின் முன் உள்ள நெளிவை காண்பித்து , இது எப்ப இடிச்சது என்றான். இது இடித்து ஆறு மாதம் ஆகும் என்றேன். ( சோம்பேறியான நான் காரை என் வீட்டு வாசல் கதவில் இடித்து உள்நோக்கி சென்ற நெளிவை சரிசெய்யாமல் இருந்து விட்டேன்) 

இல்லை , இப்பதான் இடிச்சுட்டு , அவன் கையையும் காலையும் ஒடச்சுட்டு வர்ற… இரத்தம் சொட்ட சொட்ட சூரியா நகரில் கிடக்கிறான் என்றான்.

சரி போலீசைக் கூப்பிடு என்றான் மற்றொருவன். அதற்குள் பெரிசு.. சவுடாலா காருல.உட்கார்ந்து பதில் சொல்லுறத பாரு…என உசுப்பு ஏத்தினார்.( சினிமாவில் பஞ்சாயத்து காட்சிகள் இம்மாதிரியான சம்பவங்களை பார்த்து தான் , இம்மாதிரியான பெரிசுகளை வைத்து எடுப்பார்களோ..!)

நான் நிதானமாக என்ன வண்டின்னு கேளுங்க.. கலர் என்ன என்று சொல்ல சொல்லுங்க என்றேன்.  உடனே அதில் ஒரு வில்லன் போன் செய்து என்ன கலரு சொன்ன… ஓயிட்டா… அப்புறம் என்ன வண்டி.. சுவிப்ட்டா.. என போனை கட் செய்தான்.  
  
   நல்ல விபரம் தெரிந்து வண்டியை நிறுத்துங்கப்பா… அப்ப நீங்க அந்த ஆக்ஸிடெண்ட பார்க்கலையா என பெரியவர் எனக்கு பதிலாக வாய்ஸ் கொடுத்தார்.

    வந்தவர்கள் ஒரே வரியில் "சாரி சார்" என வண்டியை எடுத்து கிளம்பினர். 
   
   அந்த புள்ளைய இந்த மிரட்டு மிரட்டினத பார்த்த எனக்கே கொஞ்சம் பயமா தான் இருந்தது என பெரியவர் அருகில் உள்ள ஜோடி கமண்டு அடித்தது. அடுத்தவனுக்கு ஒண்ணுன்னா வருஞ்சு கட்டிகிட்டு உதவி செய்யிறதுல மதுரக்காரனுக்கு மிஞ்சினவன் யாருமில்லை. 

    ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். என் மனைவியிடம் நடந்ததை சொன்னோன் . 

    முதலில் நெளிவை எடுங்க..இல்லை எவனோ இடிச்சதுக்கு நீங்க தெண்டம் கட்டப் போறிங்க என சாடினாள்.
    
   வண்டி இடிப்பட்ட உடனே சரிசெய்ய வேண்டும் என பாடம் புகட்டிய மதுரைக்கார பாசமான பசங்களுக்கு ரெம்பவே நன்றி…!


Monday, February 20, 2012

பிப்ரவரி 14 ...



வெகு நாட்களாக
அழகான கவிதை எழுத ஆசை…
அது தான்
உன் பெயரை எழுதிப் பார்த்தேன்
 ------------------------------------------

கொடுத்தும் குறையவில்லை
குறைத்தும் கொடுக்கவில்லை
ஏனெனில்
நான் காதலிக்கிறேன்

 -------------------------------------------------------------
விழுந்து சிதறிய
கண்ணாடித் துண்டாய் …
எங்கு நோக்கிலும்
உன் முகம் மட்டுமே தெரிகிறது….!



சாகித்திய அகாடமி பெற்றுள்ள நூல்கள்


இது வரை சாகித்திய அகாடமி பெற்றுள்ள நூல்கள் விபரம் :
1951 ல் கோபல்லபுரத்து மக்கள் –ராஜநாரயணன்
1956 ல் அலையோசை –கல்கி
1961 ல் அகல் விளக்கு- டாக்டர் மு.வரதராசனார்
1963 ல் வேங்கையின் மைந்தன் - அகிலன்
1971 ல் சமுதாய வீதி –நா. பார்த்தசாரதி
1972 ல் சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
1973 ல் வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்
1977 ல் குருதிப் புனல் – இந்திரா பார்த்தசாரதி
 1980 ல் சேரமான் காதலி – கண்ணதாசன்  
1984 ல் ஒரு காவேரியைப் போல – லச்ஷ்மி
1990 ல் வேரில் பழுத்த பலா –க. சமுத்திரம்
1992 ல் குற்றால குறவஞ்சி(வரலாற்று நாவல்) – கோ.வி. மணிசேகரன்
1993 ல் காதுகள் – மெ.வி. வெங்கட்ராம்
1994 ல் புதிய தரிசனங்கள் – பொன்னீலன்
1995 ல் வானம் வசப்படும் - பிரபஞ்சன்
1997 ல் சாய்வு நாற்காலி - தோப்பில் முகம்மது மீரான்
1998 ல் விசாரணைக் கமிஷன்  - கா. கந்தசாமி
2000 ல் அக்கினி சாட்சி(மலையாளம் டூ தமிழ் மொழிப்பெயர்ப்பு) –சிற்பி பாலசுப்பிரமணியம்
2001 ல் சுதந்திர தாகம் – சி.சு. செல்லப்பா
2003 ல் கள்ளிக்கட்டு இதிகாசம் – வைர முத்து  
2007 ல் இலையுதிர் காலம் – நீலபத்மநாபன்
   

   

Friday, February 17, 2012

மரபையும் புரிந்து கொள்ள உதவும் எச்சங்கள்


    நம்பிக்கை என்பது மனதின் உள் ஆழத்தில் இருந்து பிறக்கும் ஒரு வித உண்மை . குழந்தை பிறப்பில் இருந்து ஆரம்பிக்கும் நம்பிக்கை , வளர்ந்து ஆளான பின்பும், ஒவ்வொரு நிகழ்விலும் தொடந்து,   ஒரு வித பண்பாட்டு சார்ந்த மரபாக மாறி உருவெடுக்கிறது.  

     நான் சிறுவனாக இருக்கும் போது விளக்கு ஒளியில் தெரியும் நிழலை பார்த்து பேசிவது பழக்கம். அப்போது என் பாட்டி, “டேய் சுவத்து நிழலை பார்த்து பேசாத ஆயுசு குறைஞ்சு போயிடும்” என அதட்டுவார். என் தம்பிக்கு பிறக்கும் போது ஆறு விரல் இருந்தது. உடனே பக்கத்து வீட்டு அத்தை என் தம்பியை பார்த்து அதிர்ஷ்டக் காரன் ஆறு விரல் இருக்கு என்றார். அது மட்டுமல்ல குடும்பத்துக்கு யோகம் என்றார்கள். ரித்திக் ரோஷன் போன்று பலரையும் ஆறு விரலுடன் பார்க்கும் போது (என் தம்பி  உட்பட ) இக் கூற்று உண்மையானதாக இருப்பதாக தோன்றுகிறது.

     அட என்னங்க இன்னைக்கு நம்பிக்கையை பத்தி எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? அது ஒன்றுமில்லீங்க… என் தங்கையின் மகன் தெற்கு வாசல் பள்ளிவாசலுக்கு சென்று மந்திரித்து வருவதாக என் அன்னையை அழைத்துக் கொண்டு சென்றான். இன்றைய கணிணியுகத்தில் இன்னும் இவர்கள் மாறாமல் இருக்கிறார்களே ? இவர்களிடம் ஊறிப்போன நம்பிக்கைகள் தமிழர் பண்பாட்டில் அசைக்க முடியாத ஒரு வித பண்பாட்டு மரபாக மாறி உள்ளதே என ஆச்சரியப்பட வைக்கிறது.

    இன்றும் மதுரை சந்தைப் பேட்டை சிங் கிடம் மந்திரிக்க ஒரு கூட்டமே நீண்ட வரிசையில் காத்திருக்கிறது. அனைத்தும் பச்சிளங்குழந்தைகள். உறை விழுந்திடுச்சு என்று என் மூத்த தம்பி போன வாரம் தன் ஒரு வயது பையனை சிங்கிடம் அழைத்து சென்றான்.

    என் மாமியார் , என் தம்பியின் துணைவியாரிடம் போனில் இதற்கு ஒரு வைத்தியம் சொன்னார். அதை கேட்டு ஆச்சரியம் உண்டாயிற்று. இதோ:
தாய் மாமன் வேட்டியை எடுத்து , வாசப்படியில நின்னு , தொட்டியில போடுற மாதிரி குழந்தையை போட்டு, வேட்டி முனையை உயர்த்தியும் தாழ்த்தியும் பிடிச்சு உருள விடு … மூணு நாளையில உறை விழுந்தது சரியாகிடும் .

    என் அம்மா மருமகளிடம் வீட்டுக்கு தூரமா இருக்கிறப்ப… பால் குடுக்காத.. பிள்ளைக்கு ஆகாது என்றார்.

    “நம்பிக்கைகளின் அடிப்படை மனிதனின் அகமனம் ஆகும். மூளைக்கு அகமனமானது காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட எண்ணங்களை உணர்த்துகிறது. மூளையில் பதியும் அவ்வெண்ணங்கள் உண்மையாகி உறுதிப்படும் போது நம்பிக்கையாகிறது. மனித வாழ்வின் உறுதிப்பாட்டிற்கு ஆதரவு தரும் இந்நம்பிக்கைகள் மனித வாழ்வில் மிகஇன்றியமையாதவை” என்கிறார் ஜேம்ஸ் வின்சென்டர்.

    இப்படிப் பட்ட நம்பிக்கைகள் எப்போது உருவாகின என தெரியவில்லை. என் அம்மாவிற்கு அம்மா இதை அவரிடம் சொல்லி போய் உள்ளார் என்று வைத்துக் கொண்டால் இவை நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் பாதுகாக்கப்பட்டு வருவது புலனாகும்.

    குழந்தை சார்ந்த நம்பிக்கைகள் என் கண்களுக்கு புலப்படுவதற்கு , நான் துவக்கப் பள்ளி தலைமையாசிரியராக இருப்பது காரணமாக இருக்கலாம்.
கண்ணேறு கழித்தல் பற்றி சொல்லியே ஆக வேண்டும். என் பள்ளியில் மூன்று வருடங்கள் முன்னால் நடந்த சம்பவம். சுவேதா என்ற பெண் குழந்தையின் தாய் வெகு நேரமாக பள்ளி தொடங்கியும் காத்திருந்தார். ரவுண்ட்ஸ் வந்தவன் அவரை கவனித்து பள்ளி நேரத்தில் வகுப்புக்கு அருகில் அமர்ந்திருப்பது தவறு என்று எச்சரித்து சென்றுவிட்டேன்.  அரை மணி நேரம் கழித்து என் அறையில் இருந்து பார்த்தால் அவர் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்து இருந்தார்.

    இரண்டாம் வகுப்பு டீச்சர் பாத்ரூம் சென்றார். அவர் சென்ற பின் , சுவேதாவின் தாய் அவர் நடந்து சென்ற பாதையில் இருந்து மண் எடுத்து சென்றார். 
     நான் முதல் வகுப்பு ஆசிரியையிடம் இது பற்றி கேட்ட போது ,  சுவேதவை பற்றி  இரண்டாம் வகுப்பு ஆசிரியை எப்போதும் புகழ்ந்து தள்ளுவதாலும், அவளின் முடி நல்லா இருக்கு, அழகா சீவி பள்ளிக்கு வருகிறாள் என இரண்டாம் வகுப்பு ஆசிரியை கண் வைத்து விட்டதால்  அவருக்கு தெரியாமல் காலடி மண் எடுத்து செல்ல காத்திருந்தார் என விளக்கம் அளித்தார்.

    என் அம்மா நாங்கள் சிறுவர்களாக இருந்த சமயம் இரவு படுக்கும் முன் அனைவரையும் அழைத்து, கண்ணேறு கழிப்பதற்காக சூடத்தை எடுத்து , மூன்று முறை தலையை சுற்றி, உடம்பை தடவி , நாங்கள் அனைவரும் சூடத்தின் மேல் துப்ப , அதனை வாசல் படியில் வெளியில் வைத்து எரித்து விட்டு , பார்க்காமல் வந்து கதவை சாத்திவிடுவார்.  சூடத்தை துப்பும் போது எங்களுக்குள் போட்டி வரும். 
     இதை மூட நம்பிக்கை என இளைய தம்பி சாடுவான். ஆனால், இன்று அவனின் மகளுக்கு தினமும் சூடம் சுற்றி கண்ணேறு கழிப்பதை பார்க்கும் போது ஆச்சரியப்படுகிறேன்.

    சுவேதா அம்மா , அந்த டீச்சரின் காலடி மண்ணை எடுத்து , அதனுடன் மூன்று மிளகாய் வற்றல் எடுத்து, கொஞ்சம் உப்பு , கடுகு சேர்த்து, கையில் வைத்து மடக்கி , தலையில் மூன்று முறை சுற்றி, அதில் துப்பி, எரிகிற அடுப்பில் போட்டு கண்ணேறு கழித்ததாக முதல் வகுப்பு ஆசிரியர் கூறினார். (பின் குறிப்பு: கண்ணேறு இருந்தால் அடுப்பில் போடும் பொருள்களால் தொண்டை கமறாது என்பது நம்பிக்கை. அன்று தொண்டை கமறவில்லையாம்)

    மூட நம்பிக்கை என்பதை விட இதை பழக்க வழக்கம் என்று சொல்வது தான் முறை என்று படுகிறது. கணிணி உலகத்தில் உள்ள நாம் இன்னும் ஆதி வாசிகள் போல இந் நம்பிக்கைகளின் பின்னால் உழன்று திரிவது  எவ்வகையில் நியாயம்? என்பதை விட இவை எச்சங்களாக நம் வாழ்வில் தங்கி விட்டன. அவை வாழ்வில் பிரிக்க முடியாது பின்னி பிணைந்து விட்டன. இவை மட்டுமே நம் பண்பாட்டையும் , மரபையும் புரிந்து வைத்துக் கொள்ள உதவும் எச்சங்களாகும் என நம்புகிறேன்.           
   

Wednesday, February 15, 2012

தவிப்பு



முகம் கழுவி
அமர்ந்து
புத்தகம் விரித்து
அறிவியல், கணக்கு
தமிழ் , வரலாறு
ஆங்கிலம் என எல்லாம்
முடித்து ….
காத்திருக்கிறாள்
தந்தையின் வருகைக்காக
நாட்குறிப்பில் கையொப்பம் பெற…!

Tuesday, February 14, 2012

காதல் கவிதைகள்


அனல் கக்கும் இறுக்கம்
மூச்சு கூட விட முடியாத
நெருசலான பேருந்து பயணத்திலும்
உன் புன்முறுவல்
பெருமூச்சுவிடச் செய்கிறது…
-----------------------------------------------
மெல்லிய சிரிப்பு
பார்த்தும் பார்க்காததுமாக
செல்லும் சுடிதார்
நினைவு படுத்துகிறாள்
பறி கொடுத்த காதலையும்
காதலியையும்…


----------------------------------------------------
பகலில் பெய்யும் மழையை
பிடிக்காததற்கு
பலருக்கு
பல காரணம் இருக்கலாம்
எனக்கு ஒரே காரணம் தான்
உன்னை பார்க்க முடியாமல் போதும்
ஆதலால்….
 ----------------------------------------------------
ஹாரன் அடித்து செல்லும் ஆட்டோ
தடுமாறி செல்லும் ஆம்னி கார்
முந்தி செல்லும் மோட்டர் சைக்கிள்
மெதுவாக முன்னேறும் மிதி வண்டி
ஒழுங்குப்படுத்தும் காவலர்
என எதுவும் தெரியவில்லை
நீ வரும் வரை…!


Monday, February 13, 2012

மாணவனை தண்டிக்க கோரும் அதிகாரம் –ஆசிரியரின் இயலாமையே!


    புலியின் வேட்டைக்கு இணையான ஒரு சம்பவம். புலி தன் எதிரியின் குரல் வளையை மட்டுமே குறி வைத்து தாக்கும் . அதே போன்று சற்றும் எதிர் நோக்காத நேரத்தில் தாக்குதல் , அதில் நிலைக் குலைந்து உயிரை போக்கிக் கொண்ட ஆசிரியை உமா மகேஸ்வரியின் இறப்பு என்னை மட்டுமல்ல , இந்தியாவையே உலுக்கி உள்ளது.

    செய்தி தாள்களில் பக்கங்களை நிரப்பும் செய்தியாக இது மறைந்து விடக்கூடாது. இதன் பின்னியை கல்வித் துறை ஆழமாக ஆராய வேண்டும். பல மாற்றங்களை கொண்டு வரும் தமிழக அரசு , மாணவர்களின் மன அழுத்தத்தின் பின்னனியை முழுமையாக ஆராய்ந்து கடுமையான சட்டங்களை கையாள வேண்டும்.

    உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பான மாணவர் தண்டனை சட்டம் ரத்து முற்றிலும் அமலுக்கு வராமல் இருப்பதற்கு யார் காரணம்? ஒரு கொலையை வைத்து ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடிக்கும் அதிகாரம் வேண்டும் என கேட்பது ஆசிரியர்கள் அற்பணிப்பு அற்று  நிலையையே குறிப்பதாக அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.

     திரைப்படங்கள் வன்முறையை புகுத்துகின்றன, டி.வி. சீரியல்கள் தவறான பாதைக்கு மாணவனை அழைத்துச் செல்கின்றன என்பதையும் காரணமாக கூறும் நல் ஆசிரியர்களே தயவு செய்து அவர்களை நல் வழிப்படுத்த , இவை தவறு என உணர்த்த தவறியதேன். இது யார் கடமை?
“பிள்ளையை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்: ஆனால் அவன் நன்றாக படிக்க வேண்டும்.” அன்று மட்டுமல்ல, இன்றும் இப்படி தான் சொல்கிறார்கள் பெற்றோர்கள். என் பள்ளியில் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து மாணவர்களை அடித்து வருகிறார். நானும் பல சர்க்குலர்களை அள்ளி வீசி எச்சரிக்கை விடுத்துள்ளேன். நிர்வாகத்திலும் புகார் அளித்து , உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டியுள்ளேன். பெற்றோரை அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க எழுதி தருமாறு கேட்டால் அவர்கள் சொல்வது இது தான், “காயம் படாமல் அடிக்கட்டும் , அடிச்சால் தானே நல்ல படிப்பான், அடிக்கட்டும்; ஆனால் காலுக்கு கீழே மட்டும் அடியுங்கள் என அவரை கண்டிக்க சொல்வதுடன் வேறு எதுவும் செய்வதில்லை.” சிலர் எழுதி தந்தாலும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதில்லை. இது தான் நிலமை. மாணவர்களை நாம் தொடாமல் இருக்கிறோமா என சுய ஆய்வுக்கு உட்பட்டு இக்கோரிக்கையை வைப்பது நல்லது. அல்லது சட்டப்படி தண்டிக்கும் உரிமையை கேட்பதாகவே அர்த்தப் படுத்தப்படும்.

      மாணவர்களை தொடுவதால், தண்டிப்பதால் நல்வழிப் படுத்த முடியும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும்.

      இன்று மதிப்பெண்களை குறிவைத்து இயங்கும் கல்வி நிறுவனங்கள் பெருகி விட்டன. மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆசிரியர்களும் வகுப்பறையில் செயல்பட தொடங்கி விட்டனர். இயந்திரத்தனமான  திணிப்பு , மாணவனுக்கு மன உளைச்சலை தருவதுடன், அவன் ஆசிரியரிடம் இருந்து தனிமைப் பட்டு விடுகிறான். 

      ஆசிரியரும் மாணவனுடைய மன நிலையை எப்போதும் புறக்கணிப்பவராகவே செயல்பட்டு வருகிறார். ஆசிரியர் மாணவர் உறவு பூஜ்ஜிய நிலையில் அனைத்து பள்ளிகளும் செயல் படுகின்றன என கூறுவது கசப்பாக இருந்தாலும் அது தான் நிஜம்.

   மாதத் தேர்வு, அதன் முன் வகுப்பு தேர்வு, அப்புறம் யூனிட் தேர்வு, அதன் தொடர்ச்சியாய்  ரிவிசன் டெஸ்ட் என அனைத்தும் திணித்தல். தேர்வில்  தவறும் போது கடுமையான சொற்களால் சாடும் ஆசிரியர்கள் மீது தானாகவே வெறுப்பும் , பகையும் கொள்வது உளவியல் ரீதியாக மறுக்க முடியாத உண்மை. இதுவே மாணவன்  மோசமான பாதையை தேர்ந்தெடுக்க தூண்டுகிறது.

     அவன் மன ரீதியாக ஒண்றியுள்ள ஒரே தளம் சினிமா. அவன் தேடும் அத்தனை மகிழ்ச்சியும் கொட்டிக் கிடக்கிறது. அவனுக்கு கிடைக்காத சுதந்திரம் காட்சிப்படுத்தப் பட்டுள்ளதால் , கதாநாயகனாகவே உருமாறுகிறான். சண்டைகளும் , வன்முறைகளும் நிரம்பி வழியும் சினிமாவில் , மன உளைச்சல், மன அழுத்தத்திற்கு உள்ளான அவன் ,எதிரியை தாக்கும் போதேல்லாம் தானே தாக்குவதாக கற்பனை செய்கிறான். அதுவே அவனின் சொந்த வாழ்வில் தொடரும் போது நிஜமாக்கிப் பார்ப்பது இயற்கையே. மாணவன் செயலுக்கு நான் நியாயம் கற்பிக்க வில்லை. எங்கு தவறு தொடங்குகிறது? தயவு செய்து உற்று நோக்குங்கள்; Sorry,   ஆராயுங்கள்.

    ஏற்கனவே என் பதிவில் சாரதா மடத்தைப் பற்றி குறிப்பிடும் போது , அங்கு மாணவர்களுக்கு சினிமா பகிரப்படுகிறது. சினிமா முடிந்தவுடன் காட்சிக்கு காட்சியாக  நல்லவை கொட்டவை என ஆசிரியர்கள் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு அலசி ஆராயகிறார்கள். பெற்றோர்களாவது தாம் பார்த்த திரைப் படத்தை தன் குழந்தையிடம் இது தவறு , இது நன்று என ஆராய்கிறார்களா? இல்லை . சினிமாவை வாழ்க்கைக்கு உதவும் தளமாகவே பயன்படுத்தும் உளுந்தூர் பேட்டை சாரதா ஆசிரமம் எங்கே? நம் பள்ளிகள் எங்கே?

    சாரதா ஆசிரம மாணவர்கள் டி.வியில் பாய்ஸ் படம் போடுவதை கேபிள் வயரை அறுத்து தடுத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளேன்.படிக்கும் வயதில் காதலிக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுடன் , வீட்டை விட்டு வெளியேறுவதை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அம்மாணவன் கருதியதால் தடுத்துள்ளான்.
  
    எல்லாக் குழந்தையும் நல்ல குழந்தை தான் . அவன் வளர்ப்பில் தான் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றப்படுகின்றான். நம்முடன் பன்னிரண்டு மணி நேரங்களுக்கு மேலாக மாணவர்கள் இருக்கிறார்கள். ( காலை எட்டு மணிக்கு வரும்(சில பள்ளிகளில் ஏழு மணிக்கு ) மாணவன் மாலை ஸ்பெசல் கிளாஸ் முடிந்து வீடு செல்லும் நேரம் இரவு மணி எழு முதல்  எட்டு . அதற்கு பிறகு டியூசன் வேறு   ). தயவு செய்து ஆசிரியர்கள் நம் மீதுள்ள குறைகளை களையவும், எதிர் காலத்தில் இது போன்று எந்த உமா மகேஸ்வரியையும் கொலை செய்யப்படாமல் இருக்கவும் , நாம்  தீவிர அக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

     தமிழக அரசு பாரபட்சம் இன்றி மாணவர்கள்  மன உளைச்சல், மன அழுத்தம் தரும் கல்வி முறையை தடுக்கவும் , மாற்று முறையினை தேர்ந்தெடுக்கவும் ஆராய்ச்சி குழு அமைத்து நம் மாணவர்களை நல்வழிப் படுத்த வேண்டும். சுதந்திரமான கற்றல் சூழல், உண்மையான திறமைக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் கல்வி முறை கொண்டு வர வேண்டும். 
     
     மனப்பாடம் எடுத்து வாந்தி எடுக்கும் கல்வி முறை மாற தேர்வு முறையினை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். உயர் கல்வி பயில வேறுவிதமான நுழைவு முறையினை ஏற்படுத்தி தரவேண்டும்.
  

Sunday, February 12, 2012

எங்கேயும் எப்போதும்



காஞ்சனா…!  கல்லூரி முடித்த சில நாட்களிலே அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லைஅவளிடம் இதுவரை இவ்வளவு அருகில் …. அதுவும் பேச சந்தர்ப்பம் அமைந்ததேயில்லை.  இருந்தாலும் இந்த முறை தைரியத்தை வரவழைத்து பேசிவிட்டான்அவள் அவனின் கனவு தேவதைபள்ளி பருவத்தை கடக்கும்வயதில் , அவனுக்கு மட்டுமல்ல அவனுடன் படிக்கும் அத்தனை விடலைப்பையன்களுக்கும் தான்எத்தனையோ முறை அவளை தொட முயற்சித்து இருப்பார்கள்கடைசி வரைஅவளின் விரலைக் கூட அவர்களால் தொட இயல வில்லை.  ஆனால்இன்று அவளே தொட்டு பேசிய போது … இழந்த ஒன்றை பெற்ற மகிழ்ச்சி.

 அவன் படித்த பள்ளியின் சத்துணவு ஆயா வேத வள்ளியின் ஒரே மகள் காஞ்சனாஅப்போது அவளுக்கு இருபது வயதிருக்கும்இவனுக்கு பதிநான்குஅவளின் எடுப்பான முகம்.துரு துரு கண்கள்கருப்பு என்று சொல்லிவிட முடியாத ஒருவித கவர்ச்சியான நிறம்மொத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்கச் செய்யும் அங்கங்கள்பால் உறுப்புகளை தூண்டும்விதத்தில் குனிந்து நாவல் பழத்தை விற்கும் அழகு , பள்ளியின் ஆண் ஆசிரியர்களையும் பழம் வாங்கி சாப்பிட தூண்டும்.

நீ முருகன் தானே….?கணக்கு பிள்ளை மகன் தானாடா…?  எப்படா மருதைக்கு(மதுரைக்குவந்தீங்க…?”

அக்கா என்று சொல்ல மனமில்லாமல், “ஆமாங்க… நீங்க……..எப்படி இருக்கீங்க…?”

“ அட நெடு நெடுன்னு வளர்ந்திட்டையாடா… என்ன விட மூத்தவனாட்டம் தான் இருக்க .. பரவாயில்லை சும்மா காஞ்சனான்னே கூப்பிடு..”
மனதிற்குள் சிரித்தான்எத்தனை முறை பெயர் சொல்லி அழைக்க முயற்சித்திருப்போம்இரவு படுக்கையில் கனவில்… அப்போதும் எத்தனை தடுமாற்றங்கள் . காஞ்சனா அக்காசீகாஞ்சனா.. ம்கூம்… அடியே வாடி.. அப்படி பார்க்காதே .. எத்தனை எத்தனை புலம்பல்கள்.. அந்த வலியை சொல்லி மீள முடியாதுஅவனின் எண்ண ஓட்டங்கள் பள்ளி நாட்களைநோக்கி பயணித்தன.  அவளுக்காகவே விடுமுறை நாட்களிலும் பள்ளி இயங்காதா ? என பல முறை துவண்டிருப்பான்கணக்கு வாத்தியாரிடம் வேண்டி விரும்பி சிறப்புவகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து , வெள்ளி , சனிக் கிழமைகளில் பள்ளி விட்டு செல்லும் போதுநாளைக்கு ஸ்பெசல் கிளாசு வந்திருங்க என கொஞ்சி வரசெய்து இருப்பார்கள்.காஞ்சனாவுக்காக அழுகிய பழங்களையும் ,  கலர் கலர் மிட்டாய்களையும் பிடிக்காவிட்டாலும்வாங்கி அவளையே சுவைப்பது போல சுவைத்து இருப்பார்கள்.

காஞ்சனா… (தடுமாறி ) கல்யாணமாயி.. “

கழுத்தில கயிற காணாம்ன்னு கேக்கிறியா…”

வெறும் கழுத்தா ..அப்ப பார்த்த மாதிரியே இருக்கீயேன்னு கேட்டேன்….”

அத ஏண்டா.. கேக்குற.. எங்க ஆத்தா.. நல்லா கல்யாணம் பண்ணி கொடுத்தாஅது பெரிய கதை .. பிடிக்கலை … அத்துகிட்டு வந்திட்டேன்…”
என்ன காஞ்சனா.. சொல்லுற… உன்னை போயி.. “

எல்லா ஆம்பளைகளும்  அப்படி தாண்டா.. என் கஷ்டம் என்னோட… நீ என்ன செய்யுற சொல்லு..”
நான் படிச்சுட்டு கொரியர் சர்வீஸ் வச்சுருக்கேன்.. அப்படியே அரசு வேலை கிடக்குன்னு  மேற்கொண்டு படிக்கிறேன்.. அத விடு .. உன் கதைய சொல்லு

மனதிற்குள் ஒரு பல்பு தோன்றி சிரித்ததுபுருசன் இல்லை .. இவளை கவுத்திட வேண்டியது தான்அந்த வயதிலேயே முருகனும் அவனின் பணக்கார நண்பன் கணேசனும் அவளைகவுத்த பல முறை முயற்சித்திருப்பார்கள். நூறு ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு இருபது ரூபாய்க்கு வேண்டிய , வேண்டாத, விரும்பியவிரும்பாத என எல்லா பொருட்களையும்வாங்கி விட்டு .. மீதி கொடுக்கும் போது ..” என்ன காஞ்சு.. இப்படி பொழைக்க தெரியாத புள்ளையா.. இருக்க..? ஐம்பது ரூபா கொடுத்தா .. எம்பது ரூபா கொடுக்கிற…?மீதி முப்பதுமட்டும் கொடு.. என் மேல பாசம் இருக்கலாம் அதுக்காக.. இப்படியா …முதலுக்கு நஷ்டம் வர மாதிரி பொழப்பு நடத்திற… முருகன மாதிரி பசங்க அப்படியே முழுங்கிட்டுபோயிடுவாங்க.. என் மேல ஒரு இதுன்னா.. வீட்டுக்கு கூப்பிடு வந்திட்டு போறேன்..” என்பார்கள். (என்னாடா பெயர் சொல்லி அழைக்கிறேன்னு திட்டினா.. கணேசன் மட்டும் காஞ்சுபோன பழத்தை வித்தா எப்படி கூப்பிடுவாங்களாக்கும்.. என நக்கல் அடிப்பான்)

உங்களுக்கு உடம்புக்கு ஒரு மாதிரி தான் இருக்குது… பாத்துடா.. எங்கேயும் இப்படி பேசி உத பட்டுக்க போறீங்க.. “ என ரசித்து அவள் விரல் படாமல் விரட்டும் அழகிற்காக பலமுறை பல நூறுகளை கணேசன் இழந்துள்ளான்.

இந்த சந்திப்பு இத்துடன் முடிந்து விடக் கூடாது . இது  தொடர வேண்டும் என்ற முஸ்திப்புடன் திட்டமிட தொடங்கினான்.
என் செல்போன் நம்பர் இந்த விசிட்டிங் கார்டில இருக்கு .. உனக்கு  எதாவது நம்பர் இருக்கா.. கொடு காஞ்சனா. “ தன் விசிட்டிங்க கார்டை நீட்டினான்.   

 காஞ்சனா .. காஞ்சனா என பேச்சுக்கு பல முறை அழைத்து தன் ஏக்கத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல்.. தனக்கு உரிமைப்பட்டவள் என காட்டிக் கொள்ள பலமுறை பெயர்சொல்லி அழைத்தான்.  அவளுக்காக எதையும் இழக்கவும் கொடுக்கவும் தாயாராக இருப்பது போல காட்டிக் கொண்டான்.   கணவனை இழந்த பொழுதிலிருந்து இது போன்றஎத்தனை உரிமை குரல்களை கேட்டிருப்பாள்காஞ்சனா என்ற பெயர் உச்சரிக்கும் வெப்பிலிருந்து  தன்னை காக்க போராடியிருப்பாள்இருந்தாலும் இந்த முறை முருகன் அழைத்ததுபிடித்திருந்ததுஅதற்கு அவனின் விடலையில் அவன் செய்த குசும்பு தனமும்  காரணமாக இருந்திருக்கலாம்தன் காயத்திற்கு மருத்து தேடிய அவளுக்கு அவன் அழைத்ததுஇதமாகவே இருந்தது.  

காஞ்சு கணேசன் என்னடா.. ஆத்தில குளிக்கும் போது செத்து போயிட்டானாமேடா.. நீ கூட போயிருந்தியா…?”

நான் போக.. அவன் இஞ்சினியரிங்க காலேஜ் படிக்கிறப்ப.. அந்த பசங்களோட போயி .. செத்து போயிட்டான்.. என வலது கையே ஒடிச்ச மாதிரி இருந்துச்சு தெரியுமா?.. “

ரெம்ப ஜாலியான பையன்..” என அவர்களின் பேச்சு நீடித்து இருவருக்குள்ளும் ஒரு இணைப்பை உருவாக்கியதுமுருகனும் அவளின் வீட்டு விலாசத்தை பெற்று கொண்டான்.அவளும் இவனின் விலாசத்தை பெற்றுக் கொண்டாள்.  திக்கற்று திரிந்த அவளுக்கு அவனின் பேச்சு சோகத்தை மறக்க செய்துதன் இயல்பை திருப்பி தந்திருந்ததுபடரும்கொடிக்கு ஒரு கம்பமாக இருக்கலாம் என அவனும் தினமும் தொலை பேசியிலும் , நேரிலும் சந்தித்து பேசலானான்.

கணேசனும் , நீயும் எத்தனை முறை என் கைகளை தொட நினைத்து தோற்று போயிருப்பீங்க.. இப்ப நான் உன்னை தொட்டு தொட்டு பேசிறேன்.. நீ இப்பவும் தொட பயப்படுறே…”

இல்ல காஞ்சனா… நானும் பல முறை தொடணும் .. தொடணும்ன்னு..”
அவளுக்கு அவனின் இழுப்பான பேச்சு புரிந்து போயிற்று.

“ என்னடா.. தொட தானே வேணும் எங்க வேணும்னாலும் தொட்டுக்க.. நீ தொடுறதுக்கு ஏங்கினா காஞ்சு டா… “ என சூடு ஏற்றினாள்.

இல்ல .. பேனில பேசும் போது நல்லா தான் பேசுறேன். . உன் வீட்டில தனியா பேசும் போது தான் .. எனக்கு இப்படி தோணுது.. எனக்கு எப்படி சொல்றதுண்ணு தெரியலை..”
அவனின் உள் நோக்கம் தெளிவாக புரிந்தவளாக..

என்னாடா. .. எதையும் தெளிவா பேசுடா… நான் தான் கூச்சப்படாம கிட்ட வந்து பேசிறேன்.. நீ எப்பவும் ஒதுங்கியே போறா… என்ன பசங்கடா.. “

ஆனா  உனக்கு அந்த மாதிரி எண்ணம் இருக்கான்னு தெரியல… ஆனாலும் என் மனசு சொல்லாமலும்.. கேட்காமலும் இருக்க மாட்டீங்குது…”

“எல்லாம் புரியுது…. ஆனா..”

“என்ன காஞ்சனா…ஆனா ஆவன்னான்னு இழுக்கிற… பயமா இருக்கா… “

“எதுக்குடா பயப்படணும்…யாருக்குடா …”

“அதுயில்ல… உன்னை கூப்பிடுற மாதிரி நான் வேறு பொம்பளைகிட்ட போயிறுப்பேனோன்னு ….”
“…….”
“உனக்கு வேணும்னா.. நான் எயிட்ஸ் டெஸ்ட் எடுத்து கொடுக்கட்டா… அதுக்கு பின்னாடி…”

“எனக்கு எந்த டெஸ்டும் தேவையில்ல.. நானே.. பாஸிட்டிவ் தான்…”

“என்ன சொல்ற…?”

“என் புருசனோட சண்டை யில்லை …பாவி எனக்கு எயிட்ஸ் கொடுத்துட்டு ஓடி போயிட்டான்.. எங்க இருக்கான்னு தெரியல… அதுனால உன்னோட எந்த டெஸ்டும் தேவையில்லை… உனக்கு விருப்பன்னா ….”

“ச்சே…. அப்படி ஒண்ணும் இல்லை.. எனக்கு நேரமாயிடுச்சு… நாளைக்கு வரேண்…”

இதே போல எத்தனையோ முருகன் அவளை விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என ஓடியிருப்பார்கள். உண்மையில் அவள் ஒரு நெகடிவ் என்பது அவளுக்கும் விபத்தில் இறந்த அவளின் கணவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.