Saturday, April 23, 2011

கடைசி பயணம்


                                       நான் ,கபிலன் வீட்டிற்கு வந்த அந்த நாள் தீபாவளி என்று நினைவிருக்கிறது.அந்த நாளை என்னால் என்றும் மறக்க முடியாது. என்னை புகழ் பெற்ற ஜவுளிக்கடையில் இருந்து கண்டெடுத்து வந்தார் ,கபிலனின் மாமா ராகவன். என்னை முதலில் கபிலனின் அண்ணனுக்குத் தான் அறிமுகம் செய்து வைத்தார் மாமா.ஆனால் , இன்று நான்,அவன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானவன். தேவைப்படும் போது எல்லாம் என்னை அனைவரும் பயன்படுத்துவார்கள்.    கபிலனின் அண்ணன் முருகன் ஒரு டிரைசைக்கிள் ஓட்டுனர். முருகன் முதன் முதலில் என்னைப் பார்த்த போது ஆனந்தத்தில் குதித்து மாமாவைக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டான். என்னை அப்படியே அள்ளிக் கொண்டு கண்ணாடியில் அழகுப்பார்த்தான். எனக்கும் தான் அத்தனை மகிழ்ச்சி.
 
    அன்று முதல் ஒருவருடம் அவனுடன் வாழ்ந்தேன். என்னை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டான். தூங்கும் போது கூட என்னை அணைத்துத்தான் படுப்பான். சொல்ல மறந்து விட்டேன் . தீபாவளி அன்று சாமி கும்பிட்டு விட்டு, இருவரும் பயணித்தோம். முதலில் அவன் நண்பன் முத்து வீட்டிற்கு தான் சென்றோம். அனைவரிடமும் என்னை அறிமுகப்படுத்தி ஆனந்தப்பட்டுக் கொண்டான். அனைவரும் என்னை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டனர். நான் நன்றாக எடுப்பாக இருப்பதாக கூறிக் கொண்டனர். பின்பு என்னை ரஜினி படத்திற்கு அழைத்துச் சென்றான். கசங்காமல் இருக்க என்னை அவனின் அக்கிளுக்குள் பிடித்துக் கொண்டான். அவனின் வியர்வை என்னை நனைத்தது . எனக்கு அது ஒரு புது மயக்கத்தை தந்தது. அவனின் உழைப்பின் சுவையை உணரமுடிந்தது. தியேட்டரில் மின்விசிறிக்கு கீழ் காற்று வரும் இடம் பார்த்து அமர்ந்தோம். அன்று தான் நானும் சினிமா கொட்டகைப் பற்றி தெரிந்து கொண்டேன். நிழல் உருவங்களில் மனிதர்கள் வாழும் வாழ்க்கை நிஜ மனிதனை எவ்வளவு கட்டிப்போட்டுள்ளது என்பதனை உணரமுடிந்தது. மாலை வீடு திரும்பினோம். பலகாரங்களை கொரித்து விட்டு மீண்டும் கிளம்பினோம். அவனின் பெண் நண்பர்களைப் பார்க்கச் சென்றோம். அவர்களுக்கும் என்னைக் காட்டி மகிழ்ந்தான்.  
    
     காலை ஐந்து மணிக்கெல்லாம் குளித்து வேலைக்கு கிளம்பினோம். கரும் இருட்டு , காக்கைகளின் சத்தம் . சாலைகள் இரவின் வெறுமையில் எங்களை அதன் துணைக்கு அழைத்துக் கொண்டன. கஷ்டமில்லாமல், இஷ்டப்பட்டு எங்களைப் பயணிக்க அனுமதித்தன. முருகன் தன் தனிமையை விரட்ட , தன்னிடம் உள்ள ரேடியோவை பாட விட்டான். நாங்கள் பயணிக்கப் பயணிக்க இருள் விலகி ஒளி படர ஆரம்பித்தது. விடியலின் ஆரம்பத்தில் , மதுரை ஓபுளாப்படித்துரையில் இருந்து வாழைத்தார்களை டிரைசைக்கிளில் அடுக்கி வைத்துப் பறந்தோம். அவன் இழுக்க இழுக்க சக்கரம் நகர மறுத்தது. தன் மொத்தப் பலத்தையும் திரட்டி ஓங்கி இழுத்து, பெடல் போட்டு அமுக்கி ஓட்டத் தொடங்கினான். நானும் வாழைப்பழங்களுடன், டிரைசைக்கிள் ஓரத்தில் கரைப்படாத இடமாகப்பார்த்து அமர்ந்துக் கொண்டேன். மேடு வரும் போதெல்லாம் , அவனின் புஜங்களின் புடைப்பு , அவனின் உழைப்பின் ஆழத்தை உணர்த்தின. கோரிப்பாளையம் தாண்டி வந்ததும் , மக்கள் கூட்டம் மிகுந்த காபிக் கடையில் நிறுத்தினான். ”யேய் , இது ஆட்டோ நிறுத்துமிடம் ”என ஆட்டோக்காரன் குரலுக்கு பதிலளித்து, என்னையும் அழைத்துக் கொண்டு காபி குடிக்கச் சென்றான்.  
     வெயிலின் தாக்கம் , அவனின் தோல்களில் எரிச்சலை ஏற்படுத்தியது. சித்திரை வெயில் இன்னும் எத்தனைக் கொடுமையாக இருக்கப்போதுன்னு தெரியலை , இந்த டிரைசைக்கிளைப் தூக்கிப்போட்டு ,  என்னைக்கு மோட்டார் வண்டி வாங்கிற காலம் வருமோன்னு தெரியலை என்று புலம்பிக் கொண்டே.. வியர்வைத் துளிகள் தார் சாலையில் ஆவியாகி பறக்க பறக்க , விர் விர் என்று இழுத்தான். காலை எட்டு மணிக்கு புதூர் மார்க்கெட் வந்தோம். எல்லா பழங்களையும் மூட்டம் போட எடுத்துச் சென்றனர். பழுத்த பழங்களை புடா போட்டு , விற்பனைக்கு வைத்திருந்தனர். என்னை அவனின் முதலாளியிடம் காட்டி மகிழ்ந்தான். மீண்டும் அங்கிருந்து, வாழைத்தார்களை எடுத்து வர பயணித்தோம். இந்த முறை வெயில் எங்களை வாட்டியது. எதற்காக சூரியன் கோபம் கொண்டான் என்று தெரியவில்லை , மதுரையின் சாலைகளில் செல்லும் அனைவரையும் சுட்டு வீழ்த்துவது போல  தன் கரங்களை தோட்டாவாக்கி அனைவர் உடம்பையும் துளைத்தது. அன்றாடக் காட்சிகளில் பலர் வெயிலுக்கு மாண்டு போவார்கள் போலும்... வியாதியை விலைகொடுத்து வாங்குவது போல அங்காங்கே உள்ள டீக் கடைகளில் தண்ணீர் அண்டாக்களில் தண்ணீர் நன்றாக இருக்கிறதா என்று கூட பார்க்காமல் மொண்டு குடித்துத் தாகம் தணித்துக் கொண்டனர்.
    ஒரு மணிக்கெல்லாம் வேலை முடிந்தது. வீடு திரும்பியவுடன் , தன் அம்மாவிடம் நூறு ரூபாய் கொடுத்தான். மீதி நூற்று ஐம்பது அப்படியே பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். தலையில் தண்ணீரை ஊற்றி தன் சூட்டைத் தணித்துக் கொண்டான். இருப்பினும் அவனின் உழைப்பில் இருந்த வியர்வை மணம் இன்னும் அவனுடன் ஒட்டிக் கொண்டு தான் இருந்தது. அது என்னை மிகவும் கவர்ந்தது. முதல் நாளிலே அவன் மீது ஒரு காதல் பிறந்தது. மாலை ஐந்து மணி.... என்னை அழைத்துக் கொண்டு செல்லூர் கம்மாய் அருகே உள்ள வண்டிப்பாதைக்கு அழைத்துச் சென்றான். ஒரு சட்டி நிறைய ’கள் என்றுதான் நினைக்கிறேன்’ வாங்கிக் குடித்தான். ஐம்பது ரூபாய் செலவு செய்திருப்பான். ஒரு வித மயக்கத்துடன் அப்படியே தள்ளாடியப்படி , கூடல் நகர் நோக்கி சைக்கிளை மிதித்தான். கம்மாக் கரையோரம் இருந்த குடிசையை பார்த்து ,அதன் ஓரத்தில் சைக்கிளை நிறுத்தினான். பின் குடிசைக்குள் சென்றான். என்னை அந்த குடிசையின் ஒரு மூலையில் கடாசிவிட்டு , வெறி கொண்டவனைப்போல அங்கிருந்தவளைப் புணர்ந்தான். அவளும் அவனுக்காகவே காத்திருந்தவளைப் போல எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவனின் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடு கொடுத்தாள். கால் மணி நேர புணர்தலில் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. எங்கிருந்தோ வந்த விசில் சத்தம் , அவனை பதட்டமடையச் செய்யவே.. “ அட சும்மா பயப்படமா இரு ,நித்தம் மாமூல் கொடுக்கிறேன் .. ஓசியல நக்கி திண்ணுற பயலுக ... நீ காச எடு ... சரி நாளைக்கு வா..” என அனுப்பி வைத்தாள். அவனின் இந்த வியர்வை நாற்றம் என்னை குமட்டச் செய்தது. இவனைப் போய் காதலிக்கிறோமே என்று பயந்தேன். இப்படியாக இவன் வாழ்க்கை  நித்தம் தொடர்ந்தது.

   ஒரு நாள் ... முருகன் வீட்டிற்கு நான் வந்து சரியாக ஒரு வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன். முருகனின் தம்பி ,கல்லூரியில் படிக்கும் கந்தன்  என்னை அள்ளிக் கொண்டு . ”அண்ணன் வந்தா சொல்லுமா.. இன்னைக்கு எங்க காலேஜ் பங்சன் என .. ”சொல்லி விட்டுப் பறந்தான். அவன் படிப்பது மாலைக் கல்லூரியாக இருந்தாலும் , அந்த லேடி டோக் பஸ் ஸ்டாப் அருகில் நின்று நண்பர்களுடன் .. டாவு அடிப்பது தான் அவனின் முதல் படிப்பு. சுசிலா... அவன் விரும்பும் பெண் என்பதை அவனுடன் சென்ற முதல் சந்திப்பிலேயே தெரிந்து கொண்டேன்.  என்னுடைய ராசி என்று அவனின் நண்பர்கள் பினாத்திக் கொண்டார்கள். ”மச்சி.... அசத்தலா...இருக்கடா... இன்னைக்கு உன்னைப்பார்த்து சிரிச்சாடா....” என பிதற்ற .. இவனும் ...”அதாண்டா என் அண்ணன்   ....” அட புரியலையா .. இவன் அண்ணன் என்னை விடாமல் அழைத்துச் செல்லும் ரகசியம் என சொல்லிக் கொண்டான். அன்று முதல் கந்தனுடன்  பழக்கம் ஏற்பட்டது .கந்தனும் கந்தனின் நண்பர்களும் சதா பெண்களைப் பற்றியே பேசிப் பேசி பொழுதைக் கழித்தனர். பெண்களைப் பற்றியும் அவர்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பதைப் பற்றியும் இவர்களாக ஒரு பட்டியலிட்டு , தங்கள் அன்னையின் கடுகு டப்பாவிலிருந்து காசைக் களவாண்டு , அவர்களுக்கு வாங்கி கொடுப்பார்கள் . அதனைப்பெற்றுக் கொண்ட பெண்களும் உன்னை யார் இதெல்லாம் எனக்கு வாங்கித் தரச் சென்னார்கள் எனப் பொரிந்து தள்ளுவார்கள். இவர்களும் ஏமாந்து ஏக்கங்களுடன் பெண்கள் பின்னால் எலியைத் துரத்தும் பூனை போலத் துரத்தி செல்வது வாடிக்கையானது. இதுவரை யாரும் உண்மையாக காதலித்த பாடுமில்லை...

     அட பார்த்தீங்களா என்னைப்பற்றி சொல்லவேயில்லை. நான் குஜராத் மாநிலத்தில் கமல் நாத் வீட்டில் உள்ள பருத்தி தோட்டத்தில் வளர்ந்தவன். ஒரு கோடையில் வெடித்து சிதறவே.. என்னை அள்ளிக் கொண்டு .......மும்பையில்  உள்ள ஒரு பருத்தி ஆலையில் விற்றார் கமல் நாத். பின்பு அங்கு என்னை நூலாக்கி , பின் ஆடையாக நெய்தனர். துணி பண்டிலாக மாறிய நான் தமிழ்நாட்டில் ஈரோட்டில் உள்ள ஆனந்தன் கார்மண்ட்ஸ் கம்பெனியில் நாற்பது  சைஸ் சட்டையாக மாற்றப்பட்டு , மதுரை கா. பா கடைக்கு விற்பனைக்கு வந்தேன். அங்கு தான் முதல் முதலாக மாமாவை சந்தித்தேன்.  

    அடுக்கி வைக்கப்பட்ட ராக்கில் என்னைப்போன்று பலரும் இருந்தனர். கூட்டம் அலைமோதியது. அனைவரும் என்னை  எடுப்பார்கள், கண்ணாடி அருகில் செல்வார்கள் . எடுப்பவனுக்கு பிடித்திருந்தாலும் , அருகில் உள்ளவர்கள் ,”டேய், இந்தக் கலரு உனக்கு மேட்ச் ஆகாதுடா...”என சொல்ல என்னைத் தூக்கி ஏறிந்து விடுவார்கள். என்னுடன் இருந்த , எண்பது பேர் அன்று விடை பெற்ற போதும் , என்னை மட்டும் யாரும் சீந்தவில்லை என்ற கவலை இருக்கவே...அருகில் உள்ள டில்லியில் இருந்து வந்திருந்த காக்கி கலர் டி சர்ட்டிடம் “ நான் வந்து பத்து நாளாகுது .. நேத்து வந்த சின்ன பசங்க கூட வெளிய போயிட்டாங்க.. நான் என்ன குறைச்சலாகவா இருக்கிறேன்?மஞ்சள் நிறத்தில் நடு நடுவே பச்சைக் கோடு போட்டு எடுப்பாகத்தானே இருக்கிறேன் ... மனிதப் பசங்களுக்கு டேஸ்டே... தெரியலை... “ என சொல்லிக் கொண்டு இருக்கும் போது ஒரு பெரியவர் என்னை எடுத்து கடைக்காரனிடம் இந்த சட்டை எனக்கு பொருத்தமாக இருக்குமா என கேட்க, அவனும் ஒரு இளிச்சவாயன் கிடைத்தான் என்று மனதில் சொல்லிக் கொண்டே....... இரண்டு வருடமாக இங்கு இருக்கிறேன் என்று மனம் வருந்திய அரக்கு சட்டை யை எடுத்து காண்பித்து ..”லேட்டஸ்ட் மாடல் .. இந்த தீபாவளிக்கு இது தான் ரொம்ப வேகமாக மூவ் ஆகுது”ன்னு ஏமாற்றித் தள்ளினான். எனக்கு சேல்ஸ் மேன் மீது கோபம் வந்தது. இருப்பினும் இரண்டு வருடம் பாவம் அவன் என மனதைத் தேற்றிக் கொண்ட போது தான், ராகவன் மாமா என்னை எடுத்து தன் உடம்புடன் ஒற்றிக் கொண்டு கண்ணாடியில் பார்த்து , மனம் மகிழ்ந்து எடுத்துச் சென்றார். அங்கு போன போது தான் தெரிந்த்தது . நான்  முருகனுக்கு என்பது.

        அட கபிலனைப் பற்றி சொல்லவேயில்லையே... அவன் முருகனின் இரண்டாவது தம்பி. கந்தன் என்னை உபயோகித்த பின் முருகன் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. கந்தனும் அவர்கள் நண்பர்கள் ”புதுசா எதாவது வாங்குடா ..”என சொல்லிய பின் என்னையும் என் ராசியையும் மறந்தான். எனவே, கபிலன் என்னை பயன்படுத்த ஆரம்பித்தான். நான் மூன்று வருடம் அவர்களுடன் பழகிவிட்டேன். கபிலன் என்னை அணிந்து செல்லும் போது மட்டுமே கிரிக்கெட் மேட்சில் வெற்றி பெறுவதாக நினைத்தான். ஞாயிற்றுக் கிழமையில் நானும் கபிலனும் மெடிக்கல் கல்லூரி கிரவுண்டில் விளையாடும் போது புழுதி மேலில் பறக்க விளையாடுவோம். அவனின் நண்பர்களும் உனக்கு இந்த சட்டை ராசிடா என சொல்ல அவனும் பேட்டிங் பிடிக்க என்னை தேடிப்பிடித்து எடுத்து அணிந்து செல்வான். அவன் நூறு ரன் எடுத்து போது என்னை தன் கைகளில் சுற்றி தன் தலைக்கு மேலே சுற்றிக் காட்டி , என்னை முத்தமிட்டு மகிழ்ந்து கொண்டாடுவான், இதை  என் வாழ்வில் என்றும் மறக்க முடியாது. அவன் சிறந்த ஆட்டக் காரனாக இருந்தாலும் , அவன் என் ராசிதான் அவனை ஐம்பதுக்கு மேற்பட்ட ரன்களை குவிக்கச் செய்கிறது என நம்பினான். அவனின் குடிசைவீட்டில் வெற்றிக் கோப்பைகளுடன் என்னையும் வைத்து அழகுப்பார்ப்பான். மனிதன் ராசிபலன் பார்த்து தன் உழைப்பில் நம்பிக்கை இழக்கிறான் என்பதை உணராமல் வாழ்வதைப் பார்த்தால் எனக்கு வியப்பாகவும், சிரிப்பாகவும் இருக்கும். இப்படியாவது ராசி என்று சொல்லிக் கொண்டு தன் மீது நம்பிக்கை வைத்துள்ளானே எனும்போது மனம் ஆறுதல் அடையும்.
    
             அன்று எப்போதும் போல சுவற்றில் தொங்கிய என்னை வாரி  கொண்டு , கிரவுண்டு நோக்கி விளையாடக் கிளம்பினான். இன்று தெப்பக் குளம் என்று சொல்லவே... முருகனின் சைக்கிளை எடுத்து கொண்டு சென்றான். மதுரையின் சாலைகள் குண்டும் குழியுமாகப் பல் இளித்தாலும் , மக்கள் எந்த வித சிரமமும் இன்றி நகர்ந்தனர். அவர்கள் மதுரை சாலைகளை தங்களுக்குள் சாமதானப்படுத்திக் கொண்டனர். வேகமாக வந்த லாரி ... சாலையோர சாக்கடை நீரை இவர்கள் மீது அள்ளித் தெளித்துச் சென்றது. ”கோத்தா...கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுறான் பாரு என...” கந்தனின் நண்பன் மணி ஊரே திரும்பிப் பார்க்கும் வண்ணம் கத்த , அவன் பின்னால் வந்த அனைவரும் சிரித்துக் கொண்டு வந்தனர். சாக்கடை என் மீது தான் பட்டது, நான் தான் கோபம் பட வேண்டும் . ஆனால் , எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக மனிதர்கள் இருப்பதை பார்க்கும் போது பல சமயங்களில் என் மனம் பதை பதைக்கும். இப்படித் தான் கபிலனுடன் விளையாடும் ரவி , ஒரு வைடு பால் காட்டாததற்கு எல்லாம் எதிர் டீம் அம்பயராக நிற்கும் எவர் மீதும் கோபப்பட்டு ஸ்டெம்ப் எடுத்து அடிக்கச் செல்வான். அதற்காக ரவி ஆடும் போது எவரும் அம்பயரிங் செய்யப் பயப்படுவார்கள். இன்று ரவி ஆடுவதற்கு வந்திருந்தான். என்ன நடக்க போகுதோ..... என சொல்லிக் கொண்டுத்தான் மணி விளையாட வந்தான். ”டேய்..அனுப்பானடி பசங்க..மோசமானவனுக,  உன் கையைக் கால பொத்திக்கிட்டு வா.. அவனுக காண்டாயிட்டானுகன்னு வச்சுக்க ...அவ்வளவு தான் என “ எச்சரிக்கை விட்டான் டீம் கேப்டன் விஜய்.  
 
        பூம் .. பூம் என சங்கு ஊத நான் பாடையில் அமர்த்தப்பட்டு கிடந்தேன்... என் பின்னால் ஊரே திரண்டு வந்தது.. அழகு பெத்த பையன வளர்த்து இப்படி காவு கொடுத்திட்டீய்யே ம்மா...” என கூக் குரல் ஒலிக்க ஒரு நானூற்றூக்கும் மேற்பட்டவர்கள் முருகன் வீட்டிற்கு முன் திரண்டிருந்தனர். என் மீது ரோஜா மாலைகள் மணம் வீசி ... துக்கம் விசாரித்தன. என்னால் பேச முடியாமல் அவனுடனே அமரத்துவமாய் கிடந்து இருந்தேன். ஒரு நிமிடக் கோபம் ஒரு அப்பாவி திறமைசாலியின் உயிரை பறித்து விட்டது. அன்று ரவி என்னவோ அமைதியாகத் தான் இருந்தான். இந்த மணி லாரிக் காரன் மீது இருந்த கடுப்பில் .. பந்து வீசிய எதிராளியை ...”கோத்தா.. தேவடியா மவனே... பந்த எறியாம போடுடா..” என சொல்ல... .அவன் ஸ்டெம்பை எடுத்து அடிக்க ஓங்க .. கபிலன் அவனை தடுக்க போக.. ”ஏண்டா... செல்லூர் காரங்கன்னா... பயந்து ஒதுங்கிப் போவோம்ன்னு நினைப்பா....” என மல்லுக்கட்ட..எங்கோ இருந்து வீசப்பட்ட கல் கபிலன் பொட்டில் பட ... அந்த இடத்திலே உயிர் நீத்தான்.
    
   ”கை, கால் , இடுப்பில எல்லாம் தங்கம் இருக்கான்னு .. பார்த்துக்கங்க... சட்டைப் பையில எதுவும் இருக்கான்னு செக் பண்ணிக்கங்க... என அவனின் கை, கால்களை காடாத் துணியை வைத்துக் கட்டினான் வெட்டியான். அடங்கிப்போனவனை ஏன் கை கால்களைக் கட்டி வைத்து எரிக்கின்றனர் என்று புரியாமல் நானும் அவனுடனே விறகு கட்டைகளுக்கு நடுவில் புதைந்து போனேன். ”பார்கிறவங்க...எல்லாம் மூஞ்சிய பார்த்துக்கங்க.. அய்யா.. மூஞ்சி ..மூடப்போறேன்.. ” என்றான். அதற்கு அடுத்து மனிதக் குரல்கள் அற்றுப் போனது. அழு குரல்களும் ஒடுங்கிப்போகின. மனித வாடையே இல்லாத ஒரு புதிய இடத்திற்கு, எந்த வித அடையாளமும் இல்லாமல்  நானும் அவனுடனே எரிந்து பயணித்தேன்.

Friday, April 1, 2011

தனிமை

குளிர் சாதனப் பெட்டியில் 
அடைக்கப்பட்ட மலர் 
காத்திருக்கிறது ....

மேகம் மறைத்த நிலவு 
வெளிப்பட துடிக்கிறது 

திரை கொண்ட 
மின் சாதனப் பெட்டியில்
முனங்கல்   சத்தங்கள் 

அந்த இரவில் அவனை 
அடையாளம் காட்டுகிறது  

மெல்ல அந்த முனங்கல்  
அவனைத் தொற்றி
தனிமையை வெல்கிறது ...