Wednesday, March 25, 2015

பாக்யாவில் வந்துள்ள கவிதை



வகுப்பறைக்குள் அமர்ந்திருக்கும்
குழந்தைகளின் மனதிற்குள்
எப்போதும் வந்துகொண்டே இருக்கின்றன
வீட்டின் நினைவுகள்
தொட்டி மீனின் கனவுக்குள் இருக்கும்
கடலைப்போல் !

மதுரை சரவணன்.

(இந்த வாரம் பாக்யா வார இதழில் வெளிவந்துள்ள எனது கவிதை ) 


Monday, March 23, 2015

எல்லா மாற்றத்திற்கும் மதுரை ஒரு தொடக்கமே! அரசியல் வாதிகள் ஜாக்கிரதை...!

ஒவ்வொரு வாரமும் வரமே...!
*
எல்லா செயல்களுக்கும் துவக்கமாக மதுரை இருக்கின்றது.

ஞாயிறு இளைஞர்களின் தூக்க நாள், சனி இரவின் கொண்டாட்டங்களின் நீண்ட உற்சாகத்திற்கு பின் அலுப்பை நீக்கும் நாள், குடித்து விட்டு மட்டையாகும் நாள், குடும்பத்துடன் செலவிடும் நாள் என்பதெல்லாம் தவிர்த்து இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான நாள் என்பதாக மதுரையின் ஞாயிறு மாறியிருக்கின்றது.

எதிர்காலம் சிறப்பானதாக இளைஞர்கள் கைகளில் அமைவதற்கான விடியலின் அறிகுறி. முத்துகிருஷ்ணனின் பசுமைநடையில் ஆரம்பித்த எழுச்சி, நாணல்காடான், விழித்தெழு மதுரை, ஐலீட் இந்தியா என தொடர்ந்து எதாவது ஒருவகையில் மதுரை ஞாயிறுகளில் விழித்து கொண்டே இருந்தது. அதன் தொடர்ச்சியாக மற்றொரு இயக்கம் ’வா நண்பா தோள் கொடு ’ வாரம் தோறும் மரம் நடுவது, எதாவது ஒரு பொது இடத்தை சுத்தம் செய்வது என தொடர்கின்றது. இந்த இளைஞர்கள் கூட்டம், மக்கள் இயக்கமாக மாறி வருவது கவனிக்க வேண்டிய ஒன்று.

சமீபத்தில் சென்ற ஞாயிறு (15/03/2015) 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பச்சை நிற பனியன்களுடன் எல்லீஸ் நகரில் குழி தோண்டி மரம் நட்டு கொண்டிருந்தனர். மெல்ல விசாரித்தேன்.

அப்போது அங்கு ஒரு வயதான பாட்டியம்மா, பெயர் ரூப்லா என்று சொன்னார்கள். அவர் அவர்களை , “தம்பி இங்க நாம் தோண்டனும், இந்த வீட்டுக்காரங்க தண்ணீ ஊத்தி செடி வளர்த்திருவாங்க..”என அன்பு கட்டளை பிறப்பிக்க , அந்த அம்மாவின் குரலுக்கு அடிபணிந்து ஓடி ஓடி குழி தோண்டி, செடி வைத்து தண்ணீர் ஊற்றி முள் வேலி அமைத்து கொண்டிருந்தார்கள்.

சற்று தள்ளி போனால் ஒரு ஆட்டோக்காரர் , பெயர் முத்துராமன் என்பவர் அந்த இளைஞர்களுடன் செடி வைக்க குழி தோண்டி கொண்டிருந்தார். அவரும் இவர்களுக்கு உதவியாக பல இடங்களை வீட்டின் முன் வீட்டுக்காரர்களின் அனுமதியோடு மரம் நட்டுக் கொண்டிருந்தார்கள்.

சரி என போலீஸ் ஸ்டேசன் எதிரில் உள்ள டீக்கடை அருகில் சென்றால், பா னு என்ற முஸ்லீம் பெண்மணி , “இங்கு ஊன்றியவுடன் அடுத்த தெருவில் ஊன்ற வேண்டும். வேப்பங் கன்று ஊன்றுங்கள் ”என அன்பு கட்டளை பிறப்பிக்க , அந்த பச்சை சீருடை அணிந்த நண்பர்கள் பொது மக்கள் உதவியுடன் அவ்வீதியில் பரபரப்பாக தொண்டாற்றி கொண்டிருந்தனர்.

அந்த இளைஞர்களிடம் , அவர்களின் செயல் குறித்து விசாரிக்க யாரை அணுகுவது என விசாரித்தேன். சரவணன் என்றனர்.
நான் தாங்க சரவணன், அதுவும் மதுரை சரவணன் என்றேன்.

சார், சாரி சார். என அடையாளம் காட்டினர். அந்த இளைஞர் மிக எளிமையாக பிட் நோட்டீஸை அப்பகுதியில் உள்ள மக்களிடம் கொடுத்து கொண்டு இருந்தார். மரம் நடுங்கள். கொசுவை ஒழிக்க நீர் தேங்க விடாதீர்கள். டெங்கு ஒழிக்க சுத்தமான சுகாதாரமான சுற்றுப்புறம் அமைத்து கொள்ளுங்கள் என எழுதிய துண்டு பிரசுரம் விநியோகித்து கொண்டிருந்தார்.

அவரிடம் விசாரிக்க, அவர் ரஹ்மான் என்பவர் தான் இதன் தலைவர் என தன்னடக்கத்துடன் தன் கடமையை ஆற்ற தொடங்கினார். ரஹ்மானை அழைக்க, அவர் குழி தோண்டி கொண்டிருந்தார், அவரும் சுந்தரை(பொருளாளர்) பாருங்கள் என கூறினார்.

அதன் பின் அக்கூட்டத்தில் உள்ள மனோகர் என்ற என் கல்லூரி தோழனை சந்தித்தேன். அவன் துணைத்தலைவர் காளியை அறிமுகம் செய்து வைத்தான். அவரும் முள்வேலி வைத்து கொண்டிருக்க, துடிப்பான இளைஞர்களை பார்த்து வியந்தேன்.

நோட்டீஸ் கொடுத்து முடித்து வந்த எம்.சி. சரவணன் ”வா நண்பா ” என்ற படி என் தோளில் கை போட்டார். சிரித்தார். பின் தன் இயக்கத்தை பற்றி தெளிவாக கூற தொடங்கினார்.
ஒவ்வொரு ஞாயிறு தோறும் வா நண்பா மதுரையில் எதாவது ஒரு இடத்தை சுத்தம் செய்து, அவ்விடத்தில் மரம் நட்டு கொண்டிருக்கும். இவர்கள் மரத்தை நடுவதுடன் விட்டுவிடுவதில்லை, அதனை தொடர்ந்து பராமரிக்கின்றார்கள் என்பதே வியப்பாக இருக்கின்றது.

இவர்களுடன் இணைந்து பணியாற்ற சரவணன். எம்.சி. 9894189550 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

உங்கள்பகுதியில் மரம் நடுவதற்கும் , குப்பைகளை அகற்றுவதற்கும் இவர்கள் உதவியை நாடலாம்.

சமீப காலமாக மதுரை விழித்துள்ளது கண்டு பெருமிதம் கொள்கின்றேன். அய்யா அரசியல் வாதிகளே கொஞ்சம் சுதாரிப்பா இருங்க! வேறு என்னத்த சொல்ல..!
மதுரை சரவணன்..

Friday, March 20, 2015

இப்படி தான் ....!

இப்படி தான் கற்றுக்கொள்ள வேண்டும்...! 

சமூகவியல் பாடம் எப்போதும் நம் வாழ்வோடு தொடர்புடையாதாக அமைந்திருப்பதால், அன்றாட நிகழ்வுகள் மூலம் நாம் கற்றவற்றை தொடர்பு படுத்தி, ஒப்புமை காண்பதன் மூலம் நினைவில் அழியாமல் பதிந்து கொள்ள முடியும். 

சாலை விதிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை சாலையில் கடக்கும் போது உற்று நோக்குவதன் மூலமும், நம் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பதன் மூலமும், நாம் கற்றவற்றை எளிதில் நினைவுபடுத்தி, அனுபவ அறிவு பெற்று , அதனை வளப்படுத்தி கொள்ள முடியும்.

பயிர்கள் , விளையும் பொருட்கள், நிலவளம், மண் வகைகள் குறித்து குழப்பமில்லா அறிவு பெற , கிராமத்திலோ அல்லது தாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு களப்பயணம் செய்வதன் மூலம் நேரடியான அனுபவத்தை பெற்று,  எளிதில் நினைவில் வைத்து கொள்வதன் மூலம் , தேர்வு சமயத்தில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். மாவட்டங்கள், மாநிலங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை தம் ஊருடன் நேரடி தொடர்பு மூலமாகவும், நம் உறவினர்களின் இருப்பிடங்களுடன் பொருத்தி பார்ப்பதன் மூலமும் மனதில் நிறுத்தி கொள்ளலாம்.

கிராம சபை,நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக சென்று பார்வையிட்டு, அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் நாம் அதிகமான அறிவை பெற முடியும். அதன் வாயிலாக தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற முடியும்.

நீர் நிலம் காற்று மாசுப்பாடு குறித்து தெளிவான அறிவு பெறவும்,  எளிதில் அதன் பாதிப்புகளை நினைவு படுத்தி கொள்ளவும், மாசு குறித்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவை மேம்படுத்தவும் தங்கள் பகுதியிலுள்ள அல்லது அருகிலுள்ள நதி, ஏரி, குளம், கண்மாய்களை குழுவாக சென்று ஆய்வு மேற்கொண்டு, விவாதிப்பதன் மூலம் என்றும் நினைவில் நீங்காத அறிவை பெறலாம். அருகிலுள்ள தொழிற்சாலை சென்று பார்வையிடுவதுடன் அங்கு காணப்படும் மாசுகட்டுப்பாடு குறித்து அத்தொழிற்சாலை பணியாளர்களுடன் நேரடியாக பேசுவதன் மூலம், எப்போதும் நினைவில் வைத்திருக்கலாம்.

வரலாற்று நிகழ்வுகள், ஆட்சி அமைப்புகள், அரசியல் சட்டங்கள் ஆகியவற்றை எளிதில் நினைவு கொள்ள , அருகிலுள்ள வரலாற்று தளங்களை பார்வையிடுவதன் மூலமும், நேரடியாக அங்கு சென்று அங்கு நிகந்ந்த வரலாற்று நிகழ்வுகளை அங்குள்ள அரசு அலுவலரிடம் நேரடியாக கேட்பதன் வாயிலாக நாம் வரலாற்று சம்பவங்களை நினைவில் வைத்து, தேர்வு நேரத்தில் அதிக மதிப்பெண் வாங்கலாம். வரலாற்று கதைகள் வரலாற்று துணுகுக்கள் செய்திதாள்களில் இருந்து வெட்டி எடுத்து, ஆல்பமாக தயாரித்து நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் எளிதில் நினைவுப்படுத்தி கொள்ளலாம்.

வரலாற்று காலங்களை வருடம் வாரியாக பட்டியல் இட்டு கொள்வதன் மூலமும், அந்த வருடங்களை பிற நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி கொள்வதன் மூலமும் நாம் நினைவில் வைத்து கொள்ள முடியும். உம். முதன் முதலில் ரஷ்யா செயற்கைக் கோள் அனுப்பிய ஆண்டு 1975. அதனை தலைகீழாக நினைவு படுத்தினால், முதன் முதலில் இந்தியா செயற்கைக்கோள் ஆண்டு கிடைக்கும் 1957.
பொதுவாக நாம் சமூகவியல் பாடத்தினை நேரடியான அனுபவம் பெறுதல் வாயிலாகவும், களப்பயணம் மேற்கொள்வதன் வாயிலாகவும், காரண காரியங்களுடன் தொடர்பு படுத்துவதன் மூலமாகவும், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை உற்று நோக்குவதன் மூலமாகவும் நினைவில் நிறுத்தி கொள்ளலாம்.

க.சரவணன். பி.எஸ்.சி.,எம்.ஏ.,எம்.எட்.,

தலைமையாசிரியர்,

Wednesday, March 18, 2015

தொல்லியல் துறை என்ன செய்து கொண்டிருக்கின்றது ? ஆச்சரியம்

இன்று எங்கள் பள்ளியில் பயிலும் 90 மாணவர்களுடன் மதுரை திருமலைநாயக்கர் மகால் சென்றேன். ‘சுவர்சொல்லும் கதைகள் ’ என்ற சமூகவியல் பாடத்திற்கான செயல் திட்டத்தின் ஒருபகுதியாகும். உன் ஊரில் உள்ள கோட்டையை சுற்றி பார்த்து தகவல்கள் சேகரித்து வர செய்யும் செயல்திட்டம் இந்த மஹாலை சுற்றிப்பார்க்கும் நிகழ்வு.

வரலாற்று நிகழ்வுகளை அதன் போக்கில் அவர்கள் புரிந்து கொள்ள செய்வதன் மூலம் குழந்தைகள் வரலாற்றின் அவசியத்தை உணர்வார்கள் என்பதை கண்டு உணர முடிந்தது.

புத்தகத்தில் வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் எண்ணங்களோடு, வரலாற்றை ஆட்சியாளர்களின் சமரத்துடன் எழுதியதை தவிர்த்து நேரடியாக சொன்று காணும் போது ஏற்படும் புரிதலில் வலு அதிகமாக உள்ளதை உணர்கின்றேன்.

என்.சி.எப்.2005 களப்பயணம் மற்றும் உற்று நோக்குதல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று உற்று நோக்கல் மற்றும் களப்பயணத்தின் அவசியத்தை உணர்ந்தேன்.

மாணவர்கள் ஏற்கனவே திருமலைநாயக்கர் குறித்த தகவலை இண்டர் நெட்டில் தேடி இருந்தனர். இருப்பினும், அவர்கள் அறியாத தகவல்கள் எதுவும் இருக்கலாம் என்ற அடிப்படையில் , மகால் தொல்லியல் அலுவலத்தில் , மஹால் குறித்து வரலாற்று நிகழ்வுகள் கூறுவதற்கு தொல்லியல் துறை சார்ந்த ஆட்களை வேண்டி மனு கொடுத்தேன்.

இங்கு காலி பணியிடங்கள் நிரப்ப படவில்லை. அதனால், மஹால் குறித்து கூறுவதற்கு இங்கு யாரும் இல்லை, நீங்கள் ப்ரைவேட் கைட் நியமிக்கலாம். வாசலில் கேளுங்கள் என்றார். எவ்வளவு கேட்பார் என்றேன். 250 என பதிலளித்தார். அவரை தேடினால் கிடைக்கவில்லை. அவர் ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்று விட்டாராம். அவரும் வர மறுத்து விட்டார் என்ற விபரத்தை வாயிலில் டிக்கெட் பெறுபவர் சொன்னார்.

வாசலில் உள்ள அலுவலரிடம் கைட் பற்றி கேட்டவுடன் என்னை ஏற இறங்க பார்த்தார். பள்ளிகுழந்தைகள் சும்மா சுற்றி பார்ப்பதன் வாயிலாக என்ன நிகழ்ந்து விடப்போகிறது என்றேன்? சிரித்தார். பின் அவருக்கு போன் செய்தார். ஸ்கூல் என்றால் பணம் குறைத்து கொடுப்பார்கள் என்பதால் வர மறுக்கிறார் என்றனர். நான் கேட்டதை கொடுக்கின்றேன் என்றேன். கடைசிவரை அவர் வரவில்லை.

சுற்றுலா துறையும் தொல்லியல் துறையும் இப்படி இருந்தால் எப்படி? என்று மனதில் நினைத்தப்போது, என் அருகில் நின்று இருந்த திருக்கனி என்ற மாணவி, “ஏன் சார் , இவ்வளவு பெரிய மகால் பத்தி சொல்ல ஒருத்தர் கூடவா இல்லை? அப்புறம் எப்படி சார், மதுரையை பத்தி எல்லாருக்கும் தெரியும் ? வெளியூரில் இருந்து வருகின்ற மாணவர்கள் பாவம் சார்? ஏமாந்து தானே போவாங்க? ” என கேள்வி எழுப்பினாள்.

அருகிலிருந்த ஐஸ்வர்யா , “சார், நான் சொல்றேன். இது திருமலை நாயக்கர் மன்னரால் 1936ல் கட்டப்பட்ட அரண்மனை. முகலாயர் கால கட்டிட கலையை சேர்ந்தது. இராணி மங்கமாள் காலத்தில் வெள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. பத்து தூண் வரை இந்த மகால் இருந்திருக்கு. இப்ப நாம பார்க்கிறது திருமலைநாயக்கர் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதி ” என கூறினாள். சக ஆசிரியர்கள் சிரிக்க, நாங்கள் பயணித்தோம்.

தூண்களை மாணவர்கள் கட்டி பிடித்தார்கள். வியந்தார்கள். 257 தூண்கள் உள்ளன. இப்போது உள்ள பகுதி சொர்க்க விலாசம் என ஒரு மாணவன் தகவல் பலகையில் தகவலை கொண்டு கூற ஆரம்பித்தான்.

முகலாய கட்டிடக்கலை என்றால் என்ன? என்றான் சதீஸ். அருகில் இருந்த சம்மிகபூர், “ அது ஒண்ணுமில்லைடா , ( தூண் மேல் உள்ள பகுதியை காட்டி ) இந்த மாதிரி ஆர்ச் வச்சு கட்டினா அது முகலாய கலை. எங்க சொந்தக்கார பாய் தெற்குவாசல் பகுதியில் குடியிருக்கிறார். அவர் வீடு பழையது. அதுவும் இப்படி தான் இருக்கும் , அவர் சொன்னார் ” என்றான்.

வசந்த் வேகமாக ஓடி வந்து , “சார் , கி.பி 1623 லிருந்து 1659 வரை மதுரையை தலைநகராக கொண்டு திருமலை நாயக்கர் ஆட்சி செய்தார் . அவர் 1636ல் இதை கட்டினார். இந்த மகால் திருமலைநாயக்கர் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதி. இவர் தம்பி முத்தைய நாயக்கர் இதுக்கு பின்னாடி இருந்த பகுதியில் இருந்திருக்கார் ” என்று தன் குறிப்பின் மூலமாக கூறினான். சபாஷ் என்றேன்.

அனைவரும் அதன் பிரமாண்டத்தை பார்த்து வியந்தார்கள். இந்த அரண்மனை சுண்ணாம்பினால் கட்டப்பட்டது என்ற போது வாய் பிளந்தார்கள்.
அருங்காட்சியகம் சென்றோம். சிலைகள் சிற்பங்கள் , தமிழ் எழுத்து முறை கண்டு வியந்தனர். சுற்றிப்பார்த்து அப்படியே அமர்ந்தோம். அனைவரும் கொண்டு வந்திருந்த சினாக்ஸ் பிரித்து சாப்பிட்டார்கள். மாணவியர்கள் சார் நாங்கள் ஆடலாமா? என்றனர். சரி என்றேன்
”ஸ்ரீரங்கநாயகனுக்கு தங்கையம்மா, நீ தானம்மா..
மாமதுரையில் மீனாச்சியம்மா..காஞ்சியில் காமச்சியம்மா..
நீ சிரித்தால் முத்துக்களும் முல்லைகளும் சிரிக்குமம்மா..”
என்று பாடல் பாடியப்படி ஆடத்தொடங்கினர். அனைவரும் அமைதியாக கண்டு களித்தோம்.


பணியில் இருந்த ஒரு பெண்மணிவேகமாக ஓடி வந்து , “சார், எங்க சார்..( இணை இயக்குநர்- நாக கணேசன் ) வந்துட்டார், அவர் அங்க குழந்தைகளுக்கு மகால் பத்தி கூறுகின்றார் என்றவுடன் மாணவர்களை அழைத்து சென்றேன். மாணவர்கள் கூறிய தகவல்களை கூறியதோடு, இது புணர் அமைக்கப்பட்டதால் உருவானது என்றும், தென் இந்தியாவில் எஞ்சிய பழமை வாய்ந்த அரண்மனை என்றும், இராமநாதபுரத்தில் இருக்கும் இராமவிலாசம் இது போன்றது என்றாலும் அதை அரண்மனை என்று கூறமுடியாது என்றும், பத்து தூண் பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் தற்சமயம் இருக்கின்றது. அது திருமலை நாயக்கர் தம்பி முத்தைய நாயக்கர் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சியபகுதி ஆகும் என்றும், இராணிமங்கம்மாள் காலத்தில் இக்கோட்டை சிறைபிடிக்கப்பட்டது என்றும், காந்திமீயூசியம் அரண்மனை என்றாலும், அது பணியாட்கள் அல்லது போர்வீரர்கள் தங்கி இருந்த பகுதி என்றும் கூறினார். இராணி மங்கம்மாள் வாழ்ந்த கோட்டையின் பகுதியில்(பெரியார் நிலையம் அருகில் ) மேற்கு மண்டலம் இயங்குகிறது என்றும் கூறினார்.



இந்த அரண்மனையை எத்தனை பேர் கூட்டிகின்றனர் என ஒருவன் கேள்வி கேட்க , ஒரே ஒரு வயதான பெண் மணி மட்டுமே பணியில் உள்ளார் என்றார். சார் எப்படி இருந்த அரண்மனை இன்னைக்கு அதை பெருக்கி சுத்தம் பண்ண கூட யாரும் இல்லை. திருமலை நாயக்கருக்கு தெரிஞ்சா ரெம்ப வருத்தப்பட போறார் என நக்கல் அடித்தாள் அபிநயா.

சார் கோட்டையை யார் பாராமரிக்கிறாங்கன்னு கேள்வி கேட்டீங்க தானே? என்ற மோகன் தாஸ், தொல்லியல் துறை என்றான்.
வசந்த் , “சார், சமண மலை போனோமே போன வருசம்.. அதையும் தொல்லியல் துறை தானே பாதுகாக்குது! என ஆச்சரியப்பட்டான்.

எப்போதும் போல் திருக்கனி எளிமையாக சிந்திக்கும் விதமாக ஒரு கேள்வி எழுப்பினாள், “சார், அப்ப ,மலையை தோண்டாம இருக்க இவுங்க நடவடிக்கை எடுக்கலாம்லே ? எங்க சித்தி ஊரு பக்கம், அதான் சார், திருவாதவூர் பக்கம் தொல்லியல் போர்டை தாண்டியே வெடி வச்சு தகர்த்தி இருக்காங்க.. அதை எல்லாம் இவுங்க பாத்திருக்கலாம் தானே .. தடுத்திருக்கலாம் தானே ? ”
இப்படி எத்தனையோ துறை கண்காணித்திருக்கலாம்? தடுத்திருக்கலாம் ! என்றேன்.
நான் ஐ.ஏ.எஸ் ஆகி இதை எல்லாம் கேட்கிறேன் என்றாள். அருகில் இருந்த வைத்தீஸ்வரி, அப்ப உனக்கு சங்கு தாண்டி என்றாள். நான் அப்பாவியாக ஏன் சங்கு அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்றேன்.
”சார்.. பொங்களூரில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை தூக்கில தொங்க போட்டு கொன்னுட்டாங், உங்களுக்கு தெரியாதா ? “ என்றாள்.
“என்னை எல்லாம் கொல்ல முடியாது. அவிங்களை விட்டு வச்சா தானே என்னை கொல்லுவாய்ங்க.. புடிச்சு உள்ளே போட்டுவேன்” என்றாள். சிரித்தேன். சிந்திக்க ஆரம்பித்தேன்.
கனவு மெய்பட வேண்டும். கல்வி முறையில் மாற்றம் என்பது ஆசிரியர் கையிலே உள்ளது என்பதை மறுக்க முடியாது. மாணவர்களுடன் இந்த அரண்மனையில் நான் வாழ்ந்த அரைநாள் வரலாற்றை .மறக்கமுடியாது. அண்ணாந்து பார்க்கின்றேன், அந்த அரண்மனையினுள் நுழையும் வெளிச்சம் பிரகாசமாகின்றது. அரண்மனை இன்னும் பிரகாசமாகின்றது. மனது முழுவதும் அந்த ஒளியை நிரப்பி கொண்டு இன்னும் உற்சாகமாய் வகுப்பறைக்கு நுழைகின்றேன்.
மதுரை சரவணன்.

Saturday, March 14, 2015

குழந்தைகளும் உரிமையும் – விடுப்பட்ட 14 – 18 ! அதிர்ச்சி தகவல்.


குழந்தைகள் இந்த நாட்டின் வளங்கள் என்பதில் எவருக்கும் ஐயமில்லை. அக்குழந்தைகளை நாம் பதுகாப்பாக வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.  இச்சூழலில் குழந்தைகள் வயது மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து கேள்வியும் எழுகின்றது!

சில நாட்களுக்கு முன் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியினை பெற்றொர்களுக்கு அளித்தப்போது தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் உரிமைகள் குறித்து, அவர்களிடம் கேள்வி எழுப்பினேன். 80 சதவீத பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உரிமையாக பெருமையாக கூறினர். பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதாகவும், நல்லா படிக்க வேண்டும் என்பதற்காகவும் , அதிகமான மார்க் பெறுவதற்காகவும் டியூசன் அனுப்புவதாக கூறினார்கள். இது மட்டுமே குழந்தைகளுக்கு தாங்கள் வழங்கும் உரிமை என அழுத்தம் திருத்தமாக கூறினார்கள்.

50 சதவீதப் பெற்றோர்கள் குழந்தைகளை டிவி பார்க்க அனுமதிப்பதில்லை என்றும் மீதி 50 சதவீதத்தினர் காட்டூன் , போகோ போன்று சுட்டி சேனல்கள் மட்டுமே பார்க்க அனுமதிப்பதாக கூறினார்கள். பெரும்பாண்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நண்பர்களுடன் பேச அனுமதி இல்லை என்றும், தங்கள் குழந்தைகளை வீட்டில் உள்ள பொருட்களை தொடுவதற்கு உரிமை வழங்குவதில்லை (உடைத்துவிடுவதால்)என்றும் மீறி சேட்டை செய்தால் அடித்து திருத்துவோம் என்றும் கூறினார்கள். அதேப்போல் சேட்டை செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கலாமா என்றால் 75 சதவீதம் பேர் சட்டத்தில் இடமில்லை என்று மலுப்பலான பதிலையும், 25 சதவீதம் பேர் அடிக்கின்ற மாடு தான் படியும் என்பது போன்ற பழமொழிகள் சுட்டிக்காட்டி அடிக்கலாம் என்றும் கூறினார்கள்.

பலரும் அவனுக்கு தங்கள் குழந்தைகள் யோகா, கராத்தே, செஸ் விளையாட தனிப்பயிற்சி அளிப்பதாக கூறினர். அதேப்போல் 90 சதவீதம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த விழிப்புணர்வை வழங்குவதாகவும் கூறினார்கள்.

உண்மையிலேயே குழந்தைகளுக்கு என்ன உரிமை இருக்கின்றது ? என பார்ப்போம்.

ஐக்கியநாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை நமது குழந்தைகளுக்கு நான்கு வகையான அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. 1.உயிர் வாழ்வதற்கான உரிமை (உயர்ந்தபட்ச தரமான உடல்நலம், சத்தான உணவு, வாழப்போதுமான வசதி ) , 2.பாதுகாப்பிற்கான உரிமை (அனைத்துவகைச் சுரண்டல்களிலிருந்தும்) 3. முன்னேற்றத்திற்கான உரிமை (கல்வி, விளையாடுதல், குழந்தைப்பருவவளர்ச்சி, ஓய்வு & கலாச்சார நடவடிக்கை சார்ந்த உரிமை )4. பங்கேற்பதற்கான உரிமை (குழந்தைகள் கருத்து மதிப்பளிப்பது, பகிர்வது, சிந்திப்பதற்கு, தகவல் பெறுவதற்கான உரிமை )  

இந்த குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை,  அடையாளத்தை பாதுகாத்தல் (விதி 8), பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படாமல் இருத்தல் (விதி 9), கருத்துக்களை வெளிப்படுத்துதல் (விதி 12) , பெற்றோரின்கடமைகள் (விதி 18), குழந்தைகளின் நல உரிமை (விதி24), கல்வி உரிமை (விதி 28) விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு (விதி 31) , பாலியல் சுரண்டல் (விதி 34), விற்றலும் கடத்தலும் (விதி 35) , சித்திரவதை, சுதந்திரமின்மை, கொடூரத்தண்டனை (37) என்பது போன்ற  37 விதிகள் மூலம் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்துள்ளது.

இந்த உரிமைகள் நம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றனவா? என்ற போது வாயடைத்து போயிருந்தனர். அதேப்போல் குழந்தைகள் யார் ? என்ற கேள்விக்கு நம் சட்டத்திலுள்ளது போலவே குழப்பமான பதிலையும் தந்தனர். 6வயது முதல் 14 வயது முடிய என்று கூறினார்கள். 0-5 என்ன செய்வது என்ற போது குழம்பினர். சிலர் அவர்கள் பச்சைக்குழந்தைகள் என பதிலளித்து சிரிப்பை வரவழைத்தனர். 14 – 18 வயதை உடையவர்களை குழந்தைகள் என்று அழைக்க கூடாதா? போன்ற கேள்விகளுக்கு அவர்கள் அமைதியாக இருந்தனர். ஏன் இவர்கள் குழம்பி உள்ளார்கள் என்பதற்கு நம் சட்டமும் குழந்தைகளுக்கான வயதை 
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவிதமாக   வேறுபடுத்தி காட்டுகின்றது.

-    
  •   இளஞ்சிறார் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச்)சட்டம் 2000 ல் குழந்தைகளின் வயது 18 என்று குறிப்பிடுகின்றது.
  • -      குழந்தைகள் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குப்படுத்தும் ) சட்டம் – 1986 ல் குழந்தைகளின் வயது 14 என்று குறிப்பிடுகின்றது.
  • -    குழந்தைகள் திருமணச் சட்டம் 2006 S2(b) ன் படி குழந்தை மற்றும் சிறியவர்கள் என்பவர்கள் பெண்ணாக இருந்தால் 18 வயது உட்பட்டவர்கள் என்றும், ஆணாக இருந்தால் 21 வயதுக்குட்பட்டவர் என்கின்றது.
  • -    சுரங்க மற்றும் ஆபத்தான தொழில்கள் தடைச்சட்டம் 16 வயதுகுட்பட்டவர்கள் குழந்தைகள் எனக் கருதுகின்றது.
  • -    பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (2(aa)) குழந்தைகள் என்பவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்கள் என வரையறுக்கின்றது.
  • -    கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ல் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைக்கு மட்டும் இலவசக் கட்டாய கல்வி வழங்கப்படுகின்றது. ஆனால் இந்தச்சட்டம் 14 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பொருந்தாது.

  • -    தேசியக்குழந்தைகள் கொள்கைகள் 2013 குழந்தைகள் என்பவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறுகின்றது.


இவ்வாறாக, நம் சட்டத்தில் குழந்தைகள் நிலை குறித்து தெளிவற்ற நிலை நிலவுகின்றது. இந்த நிலை மாற்றமடைந்து 0- 18 வயது உடையவரை குழந்தைகளாக அறிவிக்க வேண்டும் என்று பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராடி வருகின்றன. 

   மதுரையை சேர்ந்த பார்வத வர்த்தினி (லிட்டில்ஸ் குழந்தைகள் மையம்) என்பவர் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்திவருகின்றார். 0- 18 என மாற்றுவதன் மூலம் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குழந்தைகள் வயது 18 ஆக மாற்ற மடைய செய்ய வேண்டும். 15 -18 வயது உடையவர்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்கின்றார்.

   பயிற்சியின் போது தங்களிடம் உள்ள திறமை குறித்து கேட்டப்போது, சமைக்க தெரியும் என்றும், ருசியாக( கோழிக்கறி, ப்ரியாணி, சாம்பார்) சமைப்பேன் என்றே அனைவரும் பதில் அளித்தனர்.  குழந்தைகளிடம் உள்ள திறமைகள் குறித்து கேள்வி எழுப்பிய போது, அனைவரும் தன் மகன் / மகள் வீட்டுக்கு வந்தவுடன் ஹோம் ஒர்க் எழுதிவிடுவதாகவும், வந்தவுடனே முகம் கழுவி டியூசன் சென்று விடுவதாகவும், தான் கூறும் முன் புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவதாகவும் கூறி படிப்பதை(அதிக மார்க் பெறுவது ) மட்டுமே  திறமையில் வகைப்படுத்தி இருந்தனர்.  ஒருசிலர் தங்கள் குழந்தைகள் குறிப்பிட்ட நடிகரின் சினிமா பாடல்களை முழுமையாக பாடுவதாக கூறினார்கள்.

   இன்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உரிமையாக கல்வி ஒன்றை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருகின்றனர். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு படிப்பு ஒன்றை தவிர வேறு எதுவுமே உரிமையாக வழங்கப்படுவதில்லை. பொழுது போக்கு என்று பேச்சுக்கு இடமில்லை. குழந்தைகள் காலை 8 மணிக்கு பள்ளிக்கு அனுப்பப்பட்டு மாலை 8 மணிக்கு தான் வீடு திரும்புகின்றனர். வந்தவுடன் உணவு அருந்தியும் அருந்தாமலும் உடனே டியூசன் அனுப்பப்படுகின்றார்கள். இரவு டியூசன் முடிந்து வீடு திரும்பும் போது மணி 10 ஆகி விடுகின்றது. அதன்பிறகு மறு நாள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று இரவு நேரப்படிப்பு தொடர்கின்றது.  முடிவில் குழந்தைகள் உறங்க 12 மணி ஆகிவிடுகின்றது. மீண்டும் காலை 6 மணி என இயந்திரத்தனமாக வாழ்க்கை செல்கின்றது.

பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். 14 – 18 வயது தான்  பகுத்து ஆராய்ந்து பார்க்கும் ஆற்றலும், உயர்ந்த எண்ணங்களும், எதிர்கால லட்சியங்களும், சுய அடையாளத்தை கட்டமைத்து கொள்ளும் காலகட்டமாகும். ஆனால் அந்த வயதில் நாம் குழந்தைகளிடம் நம் எண்ணங்களையும்,நம் லட்சியங்களையும் திணித்து , குழந்தைகளின் சுய அடையாளத்தை வெளிப்படுத்த அனுமதி   மறுக்கின்றோம். இதன் விளைவு ? யோசித்தோமானால் அதி பயங்கரமாக இருக்கும் !

14 – 18 வயது உள்ள வளரிளம் பருவக் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சமூகப் பொருளாதார நிலை அவர்களின் உரிமைகள் குறித்து அரசும் மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் எண்ணற்ற குழந்தைகள் கட்டிடத்தொழிலாளர்களாகவும், மில் தொழிலாளர்களாகவும், விவசாயக்கூலிகளாகவும், கேபிள் பதிப்பவர்களாகவும், செங்கல் சூளைத்தொழிலாளர்களாகவும்  கரும்பு தோட்டக்கூலிகளாகவும் சுரண்டப்படுவார்கள்.

இன்று உலக அளவில் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் பயந்து போய் உள்ளார்கள். பள்ளிகளில் புகுந்து குழந்தைகளை கொல்லும் தீவிரவாதம் அதிர்ச்சியையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது. தீவிர வாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல் உலகில் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலிக்கின்றது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?

"If we are to teach real peace in this world, and if we are to carry on a real war against war, we shall have to begin with the children." என்கின்றார் காந்தி.

ஆம் நம் குழந்தைகளுக்கு அமைதியை போதிப்போம், அதே வேளையில் கொடுக்க வேண்டிய உரிமைகளை கொடுப்போம் . அதுவே உலகம் அமைதிக்கான வழியாகும். 14 – 18 வயது குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையை நாடு முழுவதும் விதைப்போம் !


க. சரவணன், பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.எட்.,
தலைமையாசிரியர் ,

(இக்கட்டுரை - மாணவர் உலகம் என்ற மாத இதழில்( மார்ச் 2015) வெளிவந்துள்ளது. 

Thursday, March 12, 2015

நயன் தாராவுடன் ஒரு டூயிட் !


அப்போது நான் அவனுடன் இருந்தேன். இப்போது நான் எங்கு என்பது தான் தெரியவில்லை. என்ன நடந்தது ? யோசிக்கின்றேன்.
பாண்டி சேரி டூ சென்னை . வேகமாக காரை இயக்கி கொண்டிருந்தான் மாதவன்.
போர் அடிக்குதுடா. பாட்டு எதாவது போட முடியுமா? என கேட்டேன்.
பாட்டு என்ன கேட்கிறது ! இந்த ஹெட் போனை கழுத்தில் மாட்டிக்கொள். நீ இந்த பாடலுக்கு யாரை ஆட வைக்க நினைக்கிறாயோ அவரே வந்து ஆடுவார்.
அது எப்படிடா..? நயன்தாராவை நினைச்சா.. அவுங்க எப்படிடா வருவாங்க.. என்ன தான் நீ விஞ்ஞானி என்றாலும் நம்பும் படியா சொல்லு.. என்றேன்.
அதேப்போல் நடிகரும் வருவார். நீ நினைத்தால் பாடலை இடையில் நிறுத்தி அவர்களின் நடன அசைவுகளை மாற்றி விடலாம் என்றான்.
ஏன் , நானே கூட ஆடலாம் அப்படி தானே ? இது எல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு ! என வியப்புடன் கேட்டேன்.
ஹெட்போனை தலையில் மாட்டிக்கொள் என்றான். தயங்கியப்படி மாட்டினேன்.
காரிலுள்ள டிவிடி ஸ்கிரினை பார்க்க சொன்னான். அதில் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என அத்தனை மொழியிலும் நடிக்கும் திரை நட்சத்திரங்கள் பெயர் பட்டியல் , அவர்களின் புகைப்படங்களுடன் ஒளிர்ந்தது.
ஆம் நீங்கள் நினைத்தது போல் அந்த நடிகையையே தேர்வு செய்தேன். டச் ஸ்கிரின். தொடு என்றான் . தொடு திரையில் அவளை தொட்டேன். அவ்வளவு தான். அவள் எனது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தாள்.
இப்போது பாடலை தேர்வு செய்தேன். அடுத்து லோகேசன் என ஸ்கிரீனில் கேட்டது. சுவிட்சர் லேண்ட் என டைப் செய்தேன். .
இப்போது அந்த திரை நட்சத்திரமும் நானும் சுவிட்சர் லேண்டில். என் காதில் ஒரு மைக் பொருத்தி இருந்தது. என்ன நடிகரை தேர்வு செய்யவில்லையா? என மைக்கில் கேட்டான் மாதவன்.
நான் என்ன மடையனா? நானே ஆடுகின்றேன் என்றேன். அவன் சிரித்தான். இப்போது பாடல் ஒலித்தது. அவள் என்னை முத்தமிட்டவாரு... அவளாகவே ஆட தொடங்கினாள்.
டேய்.. என்னடா.. ஆல் ரெடி புரோகிராம் பண்ணி வச்ச மாதிரி பாடல் கேட்டவுடன் ஆடுகிறாளே..! என்றேன்.
சிரித்தான். நீயும் ஆடு... இல்லை நீ சொல்லும் படி ஆடுவாள். நீ சொல்ற எல்லாத்தையும் செய்வாள் என்றான்.
நிஜமாகவா என்றேன். சந்தேகம் வேண்டாம் என்ஜாய் என போனை கட் செய்தான்.
இப்போது அவள் என் சொல் படி நடக்க தொடங்கினாள்.
அட நீங்க வேறமாதிரி யோசிக்காதீங்க. அவன் ஆல்ரெடி புரோகிராம் பண்ணி வச்ச மாதிரி .. அங்க காமிரா மேன்.. துணை நடிகர்கள், நடிகைகள், இணை இயக்குநர் என எல்லோரும் இருக்கின்றார்கள்.
கட் கட்.. ஒன் மோர் டேக் சார் என ஒருவன் ஓடி வந்தான்.
தாகமாக இருந்தது. ஆப்பிள் சூஸ் தந்தார்கள். சரி நான் எனது நண்பனை பார்த்து விட்டு வருகின்றேன் என்றேன்.
ஹாலோ மாதவா என அழைத்தேன். என்னடா.. ஜாலியா இருக்கீய்யா என்றான்.
இப்போது எல்லோரும் பேக்கப் ஆகி கொண்டு இருந்தார்கள்.
டேய்.. ஹிந்தி நடிகை மல்லிகா ....
உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன். நீ ஒரு தடவை தான் நடிகைகளை செலக்ட் பண்ண முடியும் என்றான்.
இப்போது என் அருகில் யாரும் இல்லை. டேய் எல்லோரும் எங்கு போயிருக்காங்க..!
“உன்ன மாதிரி நம்ம மகேஸ் ... புதுமுகம் யாரையோ வச்சு படம் பண்ணனும் என்றான்..இப்ப தான் அனுப்பி வச்சேன். உன் கூட இருந்த ஆர்டிஸ்ட் எல்லாம் ...அவனோட படம் பண்ண போயிட்டாங்கன்னு நினைக்கின்றேன்”
“இல்லடா எனக்கு போர் அடிக்குது.. போதும் நான் வெளியே வந்துடுறேன்...”
“சாரிடா..உள்ளே சென்றவர்கள் வெளியேறி வருகின்ற ஆராய்ச்சியில் வெற்றி பெற முடியவில்லை. இப்ப கூட எல்லோரையும் அனுப்பி விட்டு உன்னை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்தேன். நீயும் மற்றவர்களைப்போல் பாதி தூரம் வந்தாய்..முழுவதும் வெளியேற இயலவில்லை. இப்போது நீ எங்கு இருக்கின்றாய் என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும் ”
”இப்ப நான் எங்க இருக்கேன்.. உனக்கே தெரியலைய்யா...? “
“ இந்த கனவு உலகத்தில் அவுங்கள தேடி கண்டு பிடிச்சு அவுங்க கூட வேலை பாரு.. வெளியேறும் வழியை கண்டுபிடிச்சதும். நானே வந்து அழைச்சுட்டு போறேன்”.
“ இப்ப நான் எங்க இருக்கேன்... எனக்கே தெரியலைய்யே..! போர் அடிக்குதே..”
“போர் அடிக்குதுன்னு சொன்னதால தானே இந்த நிலமை..இப்ப திரும்பவும் போர் அடிக்குதுன்னா என்ன செய்ய”
என பேசியப்படி காது மைக்கில் மாதவன் சிரிக்கின்றான்.
மதுரை சரவணன்.

Wednesday, March 11, 2015

சுதந்திரமான கற்றல் ..எல்லாம் சாத்தியமே..!


குழந்தைகள் எப்போதும் ஆச்சரியமும் அதியசமும் நிரம்ப இருப்பவர்கள். அவர்கள் இடங்களை வகுப்பறையின் பல நேரங்களில் ஆசிரியர்கள் நிரப்பி கொள்கின்றார்கள். ஆசிரியர்கள் நிரப்பா அந்த பாத்ரூம் இடைவேளையில் மட்டுமே தங்களால் ஆன விளையாட்டுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்கின்றார்கள். ஆனால் அங்கும் நாம் ஒழுங்கு என்கின்ற பெயரில் கட்டுப்பாடுகளை விதிக்கின்றோம். என்ன கொடுமை சரவணா ! இது எனது மனக்குரல் எனக்கு நானே அடிக்கடி கேட்டுக்கொள்வதும் உண்டு.

கொஞ்சம் வீட்டிலும் பள்ளியிலும் அவர்களுக்கான சுதந்திரத்தை தாருங்கள். அவர்கள் எவ்வளவு அதிசயங்களை புதைத்து வைத்துள்ளார்கள் என்பது புரியும்.

நேற்று விலங்குகள் அல்லது பறவைகளுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறுங்கள் என்றேன். அனைவரும் முழித்தார்கள். அவர்களின் திண்டாட்டதிற்கு காரணமும் உண்டு , நல்ல அனுபவமா அல்லது கெட்டதா ? என்பது தான்!

நான் முதலில் எனது அனுபவத்தை கூறினேன். சிறுவயதாக இருக்கும் போது கடவாய் கூட கழுவாமல், எழுந்தவுடன் ரோட்டு முக்கில் உள்ள புட்டுக் கடையில் புட்டு வாங்கி அப்படியே சாப்பிடுவது உண்டு. இதனால் சில நேரங்களில் என் அம்மாவிடமும், பல நேரங்களிலும் எங்கள் பக்கத்து வீட்டு மாமாவிடமும் வசவும், அடியும் வாங்கியது உண்டு. அப்படி ஒரு சமயம் நான் பிட்டு வாங்கி சாப்பிடும் போது அந்த மாமா என்னை பார்த்து விட்டார். உடனே நான் தயங்கி பதுங்கி சென்றேன். அவர் என்னை பார்த்து விட்டார். டேய் மாடு ! என்றார். நான் காது கேளாதவன் மாதிரி நடந்தேன். டேய் மாடு! திரும்பி பாருடா என்றார். நான் திரும்பி பார்க்காமல் சென்றேன். திரும்பவும் மாடு என்றார். நான் நிற்க தொடங்கினேன். அதற்குள் பின்னால் ஒரு மாடு என் முதுகை முட்டி சட்டையை கிழித்து என்னை தூக்கி எறிந்தது என்றேன். சார் நிஜாமாவே நடந்தா ? என கேட்டான் ,மணி.

வசந்த் , “இப்படி தான் சார், எங்க வீட்டுப்பக்கம் ஒரு அண்ணன் டேய் நாய் என்றார். நான் காய போட்டிருந்த நெல்லின் மீது நடப்பதால் திட்டுறார் என நினைத்து , அங்கிருந்து இறங்கி நடந்தேன். பார்த்தா ஒரு நாய் ஓடி வந்து கடிச்சு போட்டது என்றான். அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

கஜேந்திரன், “சார்,நல்லா பழகின நாய் சார், நாய்ன்னா எனக்கு ரெம்ப பிடிக்கும். நான் எல்லா நாயையும் அன்பா முதுகுல தடவுவேன். அப்படி ஒரு நாள் எங்க திண்ணையில் படுத்திருந்த நாயை தடவினேன். திரும்பி கடிச்சிருச்சு..அப்புறம் தொப்புளை சுத்தி ஊசி போட்டேன் “

அனைவரும் சிரித்தனர்.

சரி பாசிடிவ்வா சொல்லுங்க என்றேன். ஒரு சிறுமி எழுந்தாள். நான் சொன்னா சிரிக்க கூடாது என்றாள். சரி சொல்லு என்றேன். நான் சின்ன பிள்ளையா இருக்கிறப்ப.. எங்க வீட்டில ..ஜூலி என்ற பொட்ட நாய் வளர்த்தோம். அனைவரும் சிரித்தனர். சார்..பொம்பள நாய.. பொட்ட நாய்ன்னு தான்னே கூப்பிடணும் என கேட்டாள். நீ ஜூலின்னே சொல்லு எல்லோருக்கும் புரியும். மீண்டும் கதையை தொடர்ந்தாள்.

“சார், எங்கம்மா.. தரையில என்னை படுக்க வச்சிட்டு..வீதியில் காய்கறி கடை போடு இருப்பாங்க.. என் பக்கத்தில அந்த ஜூலி நாய் படுத்து, பாதுகாப்ப இருக்கும். ஒருநாள் நான் தூங்கி எந்திருச்ச வுடனே அழுது இருக்கேன். அம்மாவுக்கு கேட்கல.. நான் என்ன செஞ்சேனா.. அந்த ஜூலி கிட்ட பால் குடிச்சிட்டேன். “ என சிரித்தாள்.

நிஜமாவா என கேட்டேன்.

“ஆமா சார் “

“சார்.. இந்த புள்ள இவ்வளவு அறிவா இருக்கிறப்பவே நினைச்சேன். நாய் பால் குடிச்சா புத்திசாலியாகலாம்” என சிரித்தாள் மோனிசா.
கொஞ்சம் பேசி பாருங்கள். சுவரசியமான செய்திகள் கிடைக்கும். வகுப்பறை ரசிப்பு தன்மையுடன் பயனுள்ளதாக கழியும்.

மதுரை சரவணன்.

Sunday, March 8, 2015

நூல் விமர்சனம் - சிரிக்கும் வகுப்பறை (வம்சி பதிப்பகம்)

சிரிக்கும் வகுப்பறை - நூல் விமர்சனம்.
கட்டாய இலவச கல்வி சட்டம் தண்டனை அற்ற வகுப்பறையை உறுதி செய்கின்றது. இருப்பினும் ஆங்காங்கே பள்ளிகளில் மாணவர்கள் தண்டிக்கப்படுவது வாடிக்கையாகி கொண்டு தான் இருக்கின்றது. தேர்வு, அதன் பின் ஒளிந்துள்ள வெற்றி , இவற்றிற்கு இடையேயான போராட்டத்தில் தண்டனை நிச்சயமானதாகிப் போகின்றது.இந்த தண்டனை, மாணவர்களை எப்படி துரத்துகின்றது என்பதை எஸ்.ராமகிருஷ்ணன் தனது சிரிக்கும் வகுப்பறை என்ற நாவலில் தன் மகனுடன் இணைந்து மிக அற்புதமான நாவலை படைத்துள்ளார்.

தண்டனை முறைகள் குறித்து பேசும் புத்தகங்கள் வரிசையில் ஆயிஷாவுடன் சிரிக்கும் வகுப்பறையும் இணைந்து கொள்கின்றது. இன்று தமிழ் வழிக்கல்வி ஆசிரியர்கள் குழந்தைகளை வீட்டிற்கு சென்று அழைத்துவரும் நிலமையில் எஸ்.ராம கிருஷ்ணன் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள தண்டனை குறித்து தனக்கே உரிய எளிய நடையில் சிறுவர்களுடன் நம்மை பயணிக்க வைக்கின்றார். மிரட்டவும் செய்கின்றார்.

‘சிரிக்கும் வகுப்பறை’ திவாகர் என்ற சேட்டைக்கார சிறுவன் பள்ளிக்கூடங்களில் மாணவர்களை அடிப்பதால், பாடம் கவனிக்காமல் இருப்பதனால், எலியுடன் பேசுகின்றான், பள்ளியில் இருந்து வெளியில் அனுப்ப படுகின்றான். கடைசியில் டிராப் அவுட் ஆகி வீட்டில் அடைக்கப்படுகின்றான். அவன் பள்ளிக்கு செல்வானா? அவன் வேறு என்ன செய்ய போகின்றான் ? என்ற தவிப்பை உண்டாக்கும் நேரத்தில், முரடர்கள், முட்டாள் என ஒதுக்கி தள்ளும் மாணவர்களுக்காக சயனகிரியில் ராபர்ட் லொங்கோ நடத்தும் அக்ரமா என்ற தண்டனைப்பள்ளியில் சேர்வதற்கு திவாகருக்கு அழைப்பு வருகின்றது. பெற்றோரும் எங்கோ இருக்கும் உறைவிடப்பள்ளியில் சேர்ந்து விடுகின்றனர். அங்கு என்ன நடக்கிறது ? அவன் அங்கிருந்து எப்படி தப்பி வருகின்றான் என்பதாக கதை இருக்கிறது.

அக்ரமா பள்ளி எந்த நேரத்தில் தொடங்கி எப்படி முடியும் என்பதும் லொங்கோவால் தான் முடிவு செய்யப்படும். லொங்கோ தண்டனை கருவிகளை உருவாக்கி, அங்கு பயிலும் மாணவர்கள் மீது செயல்படுத்தி, அதை மெட்ரிக் பள்ளிகளுக்கு விற்பனை செய்பவராக இருகின்றார். அப்பள்ளி சமண பள்ளியாக இருந்ததாகவும் அதன் ஆசிரியரை துரத்தியே அப்பள்ளியை நடத்துவதாக கதை சுவராஸ்யம் அடைகின்றது. காற்றில் மிதக்கும் மனிதன் நிர்மயா மற்றும் ஏழு மீன்கள், மலை உச்சியில் குளம் என கற்பனை விரிகின்றது.

சிரிக்கும் வகுப்பறை -குழந்தைகளுக்கான நாவல் என்பதில் எனக்கு உடன் பாடு கிடையாது. இது கல்வியாளருக்கான நாவல் என்றே கூறுவேன். எந்த குழந்தையும் தன்னை அடிப்பதை விரும்பாது. தான் அடிபடுவதற்கான கருவிகள் குறித்து பேசுவதை தவிர்த்தே விடும். அடிக்க போறேன் என்று மிரட்டினாலே குழந்தைகள் வாய் பொத்தி அமர்ந்து விடும். ஆகவே, இதை குழந்தைகள் விரும்பி படிக்கும் வாய்ப்புகள் குறைவு. இதில் வரும் நிர்மயா , புகை மனிதர்கள், பறக்கும் மீன்கள் குழந்தைகளை கவரும் விதமாக இருந்தாலும், நாவல் முழுவதும் தண்டனை குறித்து பேசுவதாக உள்ளது. குழந்தைகள் விரும்ப மாட்டார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.(சிறுவர்களுக்கான நாவல் வரிசையில் வருவதால்)

“இந்த இடத்தில் ராபர்ட் லொங்கோவைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். மாணவர்களைப் பிரம்பால் அடிப்பது, தலையில் கொட்டுவது, வட்டம் போட்டு அடிப்பது, முழங்கால் போட்டு முதுகில் அடிப்பது, உச்சந்தலையைச் சுவரில் மோத வைப்பது, கன்னத்தில் அறைவது, காதைப் பிடித்து உக்கி போட வைப்பது, மைதானத்தில் ஓட விடுவது, நூறுமுறை இம்போசிஷன் எழுதுவது போன்ற பல்வேறு தண்டனை முறைகளைக் கண்டுபிடித்தவர் லொங்கோ, அவரே இந்தியாவெங்கும் உள்ள பள்ளிகளுக்கு இதை அறிமுகம் செய்து வைத்தவர்.” (பக் 49)
இந்த மாதிரி தண்டனைகளை நாம் கடந்து தான் வந்துள்ளோம். இன்று கல்வி முறையில் மாற்றம் உருவாகி இருக்கின்றது. அதுவும் தமிழ் வழிக்கல்வி குழந்தை மையமாக செய்ல்படுவது குறிப்பிடதக்கது. எஸ்.ராமகிருஷ்ணன் நேரடியாகவே மெட்ரிக் பள்ளியில் நடைமுறைகளை சாடுகின்றார்.

”இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லொன்கோ ஒருதண்டனை முறையை ஆங்கிலப்பள்ளிகளுக்கு கொண்டு விற்றார். அந்த தண்டனை எளிமையானது. பள்ளியில்தமிழ் பேசும் குழந்தைகளின் நாக்கில் ஒட்டும் ரெட் ஸ்டிக்கர் அது. அதை ஒட்டிவிட்டால் சில நிமிசங்களில் நாக்கு புண்ணாகி விடும். எதையும் சாப்பிட முடியாது. பள்ளி முடியும் நேரம் ஸ்டிக்கரை எளிதாக நீக்கி விடலாம். இந்த புண் ஆறுவதற்கு பத்து நாட்களுக்கு மேலாகும். அதுவரை நாக்கில் தண்ணீர் பட்டால் கூட எரியும். இதற்கு பயந்து பிள்ளைகள் தமிழில் பேச மாட்டார்கள் என்பதே இந்தக்கண்டு பிடிப்பின் சிறப்பு “ (பக் 50)
என்ன கொஞ்சம் திகிலாக இருக்கிறதா ! அதனால் தான் குழந்தைகள் இந்தமாதிரி பக்கங்களை கடந்து செல்ல இயலாது. ஆனால் ஆசிரியர்கள், பெரியவர்கள் இந்த நகைச்சுவை முரணை புரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
திவாகர் வாயிலாக எஸ்.ராமகிருஷ்ணன் நம் ஆசிரியர்கள் மீது கேள்விகளை எழுப்புகின்றார். ”ஒரு ஆசிரியருக்குக் கூட புத்தகம் மனப்பாடமாகத் தெரிவதில்லை. பின்பு மாணவர்கள் மட்டும் ஏன் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.” (பக் 20)
எஸ்.ராமகிருஷ்ணன் , நிர்மயா மூலமாக சமகால கல்வி குறித்து பேசுகின்றார். அதற்கு சாட்சியாக கீழ்கண்ட வரிகள் உள்ளன.
“எங்கள் பள்ளியில் தண்டனை கிடையாது. ஆசிரியர்கள் மாணவர் என்ற பேதமில்லை. பரஸ்பரம் பேசி விவாதம் செய்து கற்றுக் கொள்வோம். நான் நடத்தும் பாடங்களை விட இயற்கை அதிகமாக அவர்களுக்குக் கற்று தருகிறது. ஆகவே நல்ல இயற்கையான சூழலில் அவர்கள் தங்கி பாடம் படிக்கிறார்கள்”
“படிக்காத மாணவன் என்று எவருமில்லை. என்ன படிக்க வேண்டும் என்பதில் ஆளுக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. அதைக்கண்டு பிடித்து அவனைப் படிக்க வைப்பேன்” பக் 111.
இன்றைய தமிழ் வழிக்கல்வி நல்ல சூழலை எட்டியுள்ள நிலமையில் மெட்ரிக் பள்ளிகளின் நிலமை மாற வேண்டும் என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் குரல் இந்நாவல் முழுவதும் நன்றாக ஒலித்து இருக்கின்றது. அனைத்து ஆசிரியர்களும் , பெற்றோர்களும் படிக்க வேண்டிய நாவல்.

புத்தகம்: சிரிக்கும் வகுப்பறை (சிறுவர்களுக்கான நாவல்) ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன். வெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை. விலை :ரூ.100/-
நூல் விமர்சனம்: மதுரை சரவணன்.

Tuesday, March 3, 2015

அட இந்த அநியாயத்தை யாருங்க தட்டி கேட்பா?


நீண்ட நாட்களுக்கு பின் என்னுடைய பள்ளி நண்பனும் இன்றும் என்னைப் போன்று உதவி பெறும் பள்ளி ஆசிரியருமான,( கிருஸ்துவ பள்ளியில் பணியாற்றும் ) இளம் ஹீரோ, புன்னகை மன்னன், என்றும் மாறாத இளமையுடன் இருக்கும் ராபர்ட்டை சந்தித்தேன்.

இந்த மாதிரி ஹீரோக்கள் சிக்னலில் தான் சிக்குவார்கள். அவர்களுக்கு சிவப்பு விளக்கு எரியும் போது, அவர்களுடன் பேசுவதற்கு நமக்கான பச்சை விளக்கு எரியும்.

“டேய் எப்படி இருக்க ? நல்லா இருக்கீய்யா? வாடா டீ சாப்பிடுவோம்” என்று பத்தாம் வகுப்பு மாணவனைப்போன்று, என்னை மறந்து அந்த திணமணி தியோட்டர் சிக்னலில் கத்தினேன். முன்னே நகரமுடியாமல் தவித்து கொண்டிருந்த ஆட்டோவில் இருந்த அனைவரும் அந்த கண நேரத்தில் என்னைப்பார்த்து பொழுதை போக்க தொடங்கினார்கள்.

அவனே ஆட்டம் கண்டு விட்டான்.

ஏண்டா கத்தி மானத்தை வாங்குற..? பார் எல்லோரும் நம்மையே பார்க்கின்றார்கள் என்றான். அட நீ என் நண்பண்டா.. உன்ன பார்த்த குசி. ஊர் உலகத்தை விடுடா..எப்படிடா இருக்க. வீட்டுல எல்லோரும் சவுக்கியமா? என்றேன்.ம்ம் என்றான். வண்டிய நிறுத்துடா ஆறுமுகம் டீக்கடையில் டீ சாப்பிடுவோம் என்றேன்.

டிராபிக்கில் சத்தமாக நான் பேசுவது கண்டு பயந்தவன், டீ என்ன வா ... டிபனே வாங்கி தருகின்றேன் என்றான். டேய் சம்பளம் உனக்கு ஏறிவிட்டதா? எங்க சைட்டு பக்கம் சம்பளம் இன்னும் ஏறவில்லை என்றேன். சம்பளத்தை வச்சாடா வண்டி ஓடுது! டிப்பனுக்கு காசு தரமாட்டீய்யா என்றேன்.

நான் என்ன உன்னை மாதிரியாடா? கடன் வாங்கிறதும் இல்லை. கடன் கொடுக்கிறதும் இல்லை. இருக்கிறத வச்சு ஓட்டுற அன்றாடம் காட்சி . வக்கத்த வாத்தி தாண்டா இன்னும் என்றேன். இன்னும் உனக்கு அந்த வாய் கொழுப்பு மாறவே இல்லை என்றான் . அது கிருஸ்துவ பள்ளி கற்று கொடுத்த பாடம் என்றேன். போதும்டா உன் பிரசங்கத்தை ஆரம்பிச்சுடாத என்றான்.

ஏண்டா வாய் கொழுப்பா இருக்கிறது தப்பா என கேட்டேன். சீக்கிரம் சிலுவையில் அறைந்து விடப்போகிறார்கள் என்றான். அட போடா சிலுவையில் அறைந்து கொள்வது பேசனாகி போயிருச்சு. என்னமோ பெரிசா இன்னும் பைபிள் காலத்திலேயே இருக்க என்றேன். அவன் என் காதருகே வந்து சத்தமா பேசாத என்றான்.

அங்க பாரு .. என்றேன். அவன் பார்த்தான். எதிரில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பெண் , வண்டி ஓட்டிக் கொண்டிருப்பவன் மண்டையில் தட்டி, ஏபிகே டெக்ஸ் பக்கம் போ என்று கூறி கொண்டிருந்தாள். நான் என்ன சொல்ல வந்தேன் என்பது அவனுக்கு புரிந்தது. புரியாதவன் மாதிரி வா ததா (அண்ணன்) பொங்கல் கடைக்கு போவோம் என்றான். நாடே இப்படி தாண்டா இருக்கு என்றேன். அவன் சிரித்து கொண்டே இரண்டு பொங்கல் , இரண்டு ஆம்பளேட் என்றான்.

டேபிளில் அமர்ந்தோம். நுழையும் போதே ஆர்டர் சொன்னதால், இலையை உடனே போட்டான். டேய் சுவீட் என்றேன். கேசரி மஞ்சள் நிறத்தில் என்னை ஈர்த்தது. ஒரு கேசரி ஆர்டர் செய்தான். இருவரும் பங்கு போட்டு கொண்டோம். சுவையான பொங்கல் வந்தது.

மதுரை திணமணி (தற்போது இல்லை ) தியேட்டர் எதிர்புறம் உள்ள பொங்கல் கடையில் மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரை பொங்கல் விதவிதமாக சுவையுடன் கிடைக்கும்.பல பொங்கல் கடைகள் அப்பகுதியில் உள்ளன. இதை நடத்துபவர்கள் சௌராஷ்டிரா இனத்தை சார்ந்தவர்கள்.

சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள பகுதி . மேலும் அந்த சமூகத்தினர் செய்யும் பொங்கல் தனி சுவையும் ரூசியும் உடையது. அதனை சுவைக்க தவறியவர்கள் பாக்கியம் அற்றவர்கள். அவர்கள் செய்யும் அந்த புளியோதரை எங்குமே இப்படி இருக்க வாய்ப்பே இல்லை.

சௌராஷ்டிரா சமூகத்தினர் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். பட்டு நூல் தொழிலாக கொண்டவர்கள். ஏழை சௌராஷ்டிரா மக்கள் வீட்டில் நெசவு நெய்து பிழைப்பை நடத்துவார்கள். இந்த நெசவு தொழில் நாளடைவில் நலிவடையவே, இது மாதிரி ஓட்டல் தொழிலுக்கு தாவி , சிறபாக செய்து வருகின்றார்கள். அவர்கள் தொழில் மீது கொண்டுள்ள அக்கறை ,அவர்களை மிகவும் சாதுவாக வைத்துவிட்டது. சௌராஷ்டிரா சமூகத்தினர் மென்மையானவர்கள்..

எனக்கு நினைவு தெரிந்தவரை அவர்கள் யாருடனும் சண்டை போட்டு பார்த்ததில்லை. அடித்தால் கூட , அவனுக்கு என்ன கோபமோ ,இப்ப அவன் கோபம் தீர்ந்து போயிருக்குமில்லை என்று அமைதியாக இருப்பவர்கள். அவர்கள் சமணர்களை போன்றே இருப்பதாக உணர்ந்துள்ளேன். சௌராஷ்டிரா பெண்கள் ஒருவித அழகுடன் சினிமா கதாநாயகிகளுக்குரிய சிவப்பில் இருப்பார்கள்.

பொங்கல் மெதுவாக தொண்டையில் இறங்கியது.

வாசலில் ஓனர் யாரோ ஒருவனிடம் தீடீரென்று தர முடியாது என்றார். வெளியில் முரட்டு தனத்துடன் கையில் ஏதோ பேப்பருடன் நன்றாக வளர்ந்த ஒருவன் நின்று இருந்தான். நீ தனியா தொழில் பார்த்திடுவீய்யா ! எங்களை பகைச்சு கிட்டு கடையை நடத்திடுவீய்யா ! என்றான். இவர் உன்னால் முடிந்ததை பார் என்றவரே என் எதிரில் இருந்த சேரில் வந்து அமர்ந்தார்.

அவன் வெளியில் நின்றிருந்த மற்றொருவனை பார்த்து , ததா தர மாட்டாராம்! எவ்வளவு திமிர் பார்த்தியாடா.. இவன் ஒருநாள் சிக்காம வா போயிடுவான். வெட்டியா சீரழிஞ்சிடாத !.ஒழுங்க கொடுத்திடுய்யா.. அப்புறம் நீ வீணா அழியப்போற என்றான்.

நான் சும்மா இருக்காமல் , வெடுக்கென்று , எந்த கட்சிப்பா? இப்படி மரியாதை குறைவா பேசுற என்றேன். யேய் ஒழுங்கு மரியாதையா வந்தோமா சாப்பிட்டோமான்னு போ ! என்றான். மற்ற அனைவரும் அமைதியாக இருந்தனர். அவன் வேட்டி கரையை தேடினேன். எந்த கரையும் இல்லை. போலீஸ்க்கு போன் போடுங்க என்றேன். எங்க போட சொல்லு என்றான். அங்கு உணவு அருந்தி கொண்டிருந்த 10 பேரும் அமைதியாக என் நண்பனைப்போன்று எந்த சலனமும் இன்றி ருசித்து கொண்டிருந்தனர்.

வேகமாக சாப்பிட்ட நண்பன் , கை கழுவும் இடத்திற்கு சென்றவன், அங்கிருந்து , என்னை வாய் மூடும் படி சைகை செய்தான். அதற்குள் வெளியில் இருந்தவன் . வா வா சிக்கமாலா போவான் என்றான். வெளியில் பைக்கில் மூன்று பேர் நின்றிருந்தனர். நான் உள்ளே இருந்து சாப்பிட்டு கொண்டே கவனித்தேன்.

கை கழுவும் இடத்திற்கு சென்றேன். வாய் வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீய்யா.. என்றான். ஏண்டா ராபர்ட் தப்ப தட்டி கேட்க விட மாட்டீங்கிற..? என்றேன். அருகில் இருந்த சர்வரிடம் அவுங்க எந்த கட்சியை சேர்ந்தவங்க என கேட்டேன்.

அவனுங்க எந்த கட்சியும் இல்லை. டெய்லி இப்படி வருவானுங்க. பொங்கல் மூணு நாலு கேட்பானுங்க. பார்சல் கட்டியவுடன் காசு தராம போயிடுவானுங்க. காசு கேட்டா, என்ன உதை வாங்கணுமா ..என மிரட்டி செல்வார்கள். இன்னைக்கு தான் எங்க முதலாளி வாய் திறந்து தர முடியாதுன்னு சொல்லி இருக்கார். நீங்களும் எதுக்குன்னு கேட்டுடீங்க என்றான். நான் கட்சிக்கு டோனேசன் கேட்கிறான்னு நினைச்சேன் என்றேன். சிரித்தான்

அவனுங்க எங்க ஏரியாடா? என்னை அவனுங்களுக்கு தெரியும். உன்னால் எனக்கு தான் பிரச்சனை என நெந்து கொண்டான் ,ராபர்ட். ஏண்டா உனக்கு பிரச்சனை என கேட்டேன். போடா நீ எதிர்த்து பேசினதுக்கு..என்னை வழி மறிச்சு.. காசு கேட்க போறானுங்க. ஒரு தடவை தந்து பழகிட்டா.. வாடிக்கையா கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. இனி அவனுங்களுக்கு கப்பம் கட்ட வேண்டியது தான் என்றான்.

சிரித்தேன். இப்ப கூட நான் சத்தமா பேசினதுக்கு பயந்து தான் , கப்பம் கட்டி இருக்க என்றேன். முழித்தான். இனி அவனை பார்க்கும் போதெல்லாம் பொங்கல் சாப்பிடலாம் என முடிவு செய்து கொண்டேன். விடைப்பெற்றான்.
உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. அந்த ரவுடிகளுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் ?
மதுரை சரவணன்.