Thursday, September 26, 2013

நகரங்களின் குப்பையிலிருந்து மீண்டு எழும் முயற்சி.


    இவ்வுலகில் வாழ்வதற்கு பயமாக இருக்கிறது. செய்திதாள்கள் சுமந்து வரும் செய்திகள் மனத்தின் ஆழத்தில் கிடக்கும் பயத்தை உடனடியாக பிறசவிக்கின்றன. நண்பனே நண்பனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல நண்பர்களுடன் முயற்சிக்கின்றான். நம் வாழ்வின் மீதான நம்பிக்கை இச்செய்திகளால் நாம் இழக்க வேண்டியிருக்கிறது. பாதுகாப்பின் அவசியத்தை தேட வேண்டியுள்ளது. இதை எழுதும் இத்தருவாயில் என் நினைவுக்கு வரும் நிகழ்வு பாதுகாப்பு வரி ஆலயத்தில் விதித்த பாதிரியார் குறித்த என் நண்பர் சேவியர் சொன்ன செய்தியாகும்.  தம் மக்களை காப்பாற்ற பாதுகாப்பு வரி விதித்த பாதிரியார் உண்மையில் தீர்க்க தரிசியாக காட்சியளிக்கிறார்.

    சேவியருடன் உரையாடலில் ஊழலில் ஈடுபடும் பாதிரியார்கள் பற்றி சக பாதிரியார் எழுதிய புகார் கடிதம் குறித்து வாசகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதுவும் பொது சொத்து பாதுக்காப்பிற்காக எழுதப்பட்டது தான். அக்கடிதத்தின் வாசகம் இது தான்.
   
   “நீங்கள் யாரும் யோக்கியர்கள் அல்ல. உங்களின் தவறுகளை நீங்களே அறிவீர்கள். உங்களைப் பற்றி சொல்லும் படியாக ஒன்றுமில்லை. இதை உணர்ந்து நீங்களே இடத்தை காலிசெய்து விடுங்கள்”

    இதை எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்க்கிறேன். அரசியலாகட்டும்,அரசு அலுவலகமாகட்டும், தனி நபர் நிறுவனமாகட்டும், தொண்டு நிறுவனமாகட்டும், அரசு சாரா நிறுவனமாகட்டும் இப்படி எல்லா இடங்களிலும் இதை பொருத்திப்பார்க்கிறேன்.
விளைவு என்னவாக இருக்கும்?

உங்களின் பதில் கட்டாயம் இப்படிதான் இருக்கும்.
இக்கடிதத்தை எழுதியவர் தண்டிக்கப்பட்டு இருப்பார்.
ஆனால் இக்கடிதம் எழுதியவர் அதன் பின் அமைதியாகி விட்டதாக அறிந்தேன். (மிரட்டப்பட்டிருப்பார்).

நம்முடைய பொருளாதரமே குடியை ஆதாரமாக கொண்டு செயல்படும் நிலையில் , சமீபத்திய குடிக்கான சர்வேயில் நாம் முதலிடம் பிடிக்கவில்லையே என ஆதங்கப்படும் சமூகவலைத்தள ஆர்வலர்களின் ஸ்டேட்டஸ் ஏகப் பட்ட லைக் வாங்கியிருந்தது. அதில் நானும் லைக்கி விட்டேன். ஏனென்றால் இந்த ஸ்டெட்டஸ் நம் மக்கள் குடியினால் கெட்டு குட்டிச்சுவராகிப் போன வாழ்வின் ஆவணமாக கருதுகிறேன். குழந்தைகளுடன் குழந்தைகளாக தெரிவதால் குடி எவ்வாறு குடியை பாதித்துள்ளது என்பதை நான் அறிவேன்.

ஆங்கில பரீட்சை நன்றாக எழுதாத நன்றாக படிக்கும் மாணவனைப் பார்த்து ஏண்டா உடம்பு எதுவும் சரியில்லையா? தேர்வு மீண்டும் வைக்கட்டுமா?  நாளைக்கு எழுதிக் கொள்ளலாம் என கனிவுடன் கேட்டேன்.
“இல்ல சார் பரவாயில்லை. மனசுக்கு சரியில்லை. ( ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்)”
”என்னடா? பெரிய மனுசனாட்டம் பேசுற?”
”எங்க அத்தை நேத்து தூக்குமாட்டிகிட்டு செத்து போச்சு சார்”
”ஏண்டா? எதுவும் குடும்ப பிரச்சனையா?”
”அட இல்லைங்க சார்… எல்லாம் எங்க மாமாவால தான்..!”
”என்னடா உங்க மாமா எதுவும் திட்டி விட்டாரா?”
”இல்லை சார்.. தினமும் குடிச்சுட்டு வந்திருக்கு… காசு கேட்ட கொடுக்கல…குழுவில வாங்கின கடனை கூட அடைக்க முடியல… வீட்டுக்கு எதுவும் தரதில்லை..டெய்லி தண்ணிப் போட்டு சலம்பியிருக்கு…. அதான் தூக்கு போட்டுகிட்டாங்க…”
”என்னடா கோழையாட்டம் …. உங்க அம்மா அப்பா கண்டிக்கலையா….?”
”எங்க மாமாவா  எதுவும் கேக்காது சார்… எங்க அத்தை மவன்கள் தான் பாவம் சார் ஒருத்தன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். இன்னொருத்தனுக்கு ஒன்றரை வயதாகிறது.”
”யாருடா பார்த்துக்கிற… எங்க அம்மா தான் சார் …. அது என்னையும் ஊருக்கு (வரிச்சியூர்) கூட்டிகிட்டு போயிடுச்சா… அதான் ரிவிசன் விடாம வந்துட்டேன்… யோசிச்சு யோசிச்சு எழுத வேண்டியதாய் இருக்கு…”
அதற்குள் பக்கத்திலிருந்த மற்றொரு மாணவி,
“சார்..இப்படிதான் சார்… எங்க அம்மா ஒருதடவ தூக்கு மாட்டிக்க போனாங்க.. நானும் எங்க அண்ணணும் ஒரே அழுகை …அப்புறம் சேலையை அவுத்துகிட்டு அழுதுச்சு….இந்நேரம் நாங்களும் அனாதையாகி இருப்போம்.. ஆனா இன்னும் எங்க அப்பா திருந்தல சார்…”
”எனக்காக குடிக்காத அப்பா.. ன்னு சொல்லு..”
”அட போங்க சார்…. சொன்னா என்ன அடிக்க வரும்.. .
அருகிலிருந்த மாணவன்,
”எங்க அம்மா… வாங்கி வந்த வார சம்பள காச… தூக்கிட்டுப் போயிட்டாரு சார்…எங்க அப்பா குடிக்க…. எங்க அம்மா ஒரே சண்டை … நாங்க ஞாயிற்று கிழமை மூழுவதும் பட்டினியா கிடந்தோம்… ”

      வீடுகளில் குடியினால் அஸ்திவாரங்கள் ஆட்டம் கண்டுவருவதை யாரும் உணர வாய்ப்பில்லை. குழந்தைகளின் உள்மன வலியின் கொடூரம் சமூகத்தில் எப்படி வெளிப்படும் என்பதை கண்டு பயப்படுகிறேன். குடியினால் இவர்கள் மரணத்தை தேடிக்கொள்வதுடன் , குடும்பங்களிலும் மரணத்தை விதைப்பதை உணர்வதில்லை. இதனை உணர்த்துவதற்கான சந்தர்பங்களையும் அரசு ஏற்படுத்தி தரவில்லை. குடி குடியைக்கெடுக்கும் என அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள வாசகங்கள் போதையேறி வீழ்ந்து கிடக்கின்றன. போதை தலைக்கு ஏறி , குமட்டி, பித்து களைந்து , அவர்கள் எடுக்கும் வாந்திகளில் உருண்டு , சித்தம் கலங்கி, வேதனையின் சீல்கள் அப்பிய கண்களுடன் வரும் குழுந்தையின் அழுகுரல்களை கேளுங்கள் ஆட்சியாளர்களே , ஒருவேளை நீங்கள் மதுகடைகளை முடுவதற்கான சாத்தியங்கள் நிகழக்கூடும்.

    கடந்த வாரம் நடந்த விநாயகர் திருவிழா ஊர்வலங்களினால் மதுரை மாநகராட்சியில் 500 டன் குப்பைகள் அள்ளமுடியாமல் தேங்கியுள்ளன. 1600 டன் குப்பைகள் விழாவை ஒட்டி அள்ளப்பட்டிருக்கிறது. தேங்கியுள்ள குப்பைகளை  அப்புறப்படுத்த கமிஷனர் 90டிப்பர் லாரிகள் ,11 டம்பர் பிளேசர்கள்,5 காம்பேக்டர்கள்,37 டிராக்டர்கள், 37 ஆட்டோக்க்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

     நம் மனக்குப்பைகளையும் அள்ள இப்படிப்பட்ட வாய்ப்பு இருக்குமானால் எவ்வளவு சிறப்பானதாக வாழ்வு அமைந்திருக்கும். நான் இப்படி கிறுக்கி என் மனக்குப்பைகளை அகற்றுவதுண்டு. யோகா, தியானம் தராத ஒரு மன அமைதி ஏற்படுகிறது. நீங்களும் முயற்சியுங்களேன்.

மதுரை சரவணன்.
9344124572

Wednesday, September 18, 2013

பிழையின்றி தொடங்கும் பகல்

தென்றல் தழுவி
என்னை காமுறுகையில்
கதிரவன் சூட்டை மூட்டி
காமத்தை பெருக்கினான்

எங்கிருந்தோ வந்த மணம்
அவளின் நினைவை கிள்ளி
அள்ளிச் சென்றது
திடுக்கிட்டு எழுந்த போது
எப்போதும் போல் கோப்புக்கள்
தேங்கியிருந்தன
அவளின் நினைவுகளை போன்று
என்னை சுற்றி

எப்போதும் போல்
கடந்து சென்றது பகல்

கனவுகளின் களைப்பில்
கண்கள் மூடிய
என்னை மீண்டும் தழுவியது
அவள் குரல்
அலைக்கற்றையின் உதவியுடனே

இரவில்
என் படுக்கையறையில்
உருவாக்கிய தோட்டங்கள்
விடியலில் காணாமல் போகின்றன
ஆப்பிள் மரஙகள்
ஆப்பிள்கள்
உண்ணப்படாமல்.....

எந்த பிழையுமின்றி
தொடங்குகிறது பகல்


  

Tuesday, September 17, 2013

தி இந்து தமிழ்நாளிதழ் யாருக்கானது....!


எது இலக்கியம்? இந்த கேள்வி என்னை அடிக்கடி வாட்டி எடுக்கும் சாத்தனின் குரலாகவே கருதுகிறேன். காரணம் எதுவாகவும் இருக்கலாம். இதுவாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கும் வரமுடியவில்லை. இதற்காக,  நான் சமகாலத்தில் பழகி, எழுத்துலகில் சிறந்தவர் என சொல்லிக் கொள்ளும் பலரால்,  என்னையே ஆய்வுக்கு உட்படுத்தி தோற்றதும் உண்டு. தோற்றது என்பதை விட உனக்கு இலக்கியம் வராது என விரட்டியடிக்கப்பட்ட சம்பவமும் உண்டு. ஆனால் ஆறுவிரல் கொண்ட என் நண்பன் சொல்வதும் பல சமயம் சரியெனப் படுவதுண்டு.(அப்படி என்ன சொன்னான்? கடைசியில் சொல்கிறேன்)

    இலக்கிய வட்டத்துக்குள் வர வேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும் என்கிறார்கள். நான் எம்.பில் வரை படித்திருக்கிறேன் என்றேன். அவர்கள் என்னை பார்த்து நகைத்து , இவன் ஆட்டைக்கு லாயிக்கில்லை என பல இடங்களில் புறக்கணித்ததும், மட்டம் தட்டியதும் உண்டு. ஒருவேளை இது தான் இலக்கியமோ. உனக்கு ஜெமோ வைத் தெரியுமா? எஸ் ரா வை தெரியுமா? சாருவை தெரியுமா? என்று குறுகிய வட்டத்துக்குள் சமகால எழுத்தாளுமைகளை உள்ளடக்கி அவர்கள் சார்பாக இயங்கி , அவர்களின் புத்தகங்களை படிக்க ஆலோசனைகள் கொடுத்தார்கள். நான் ஆழ்ந்து படிப்பவன் அல்ல. ஏதோ தெரிந்தவற்றை படித்து , என் குழந்தைகளுக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்லும் சாதாரண துவக்கப்பள்ளி ஆசிரிய மனநிலையிலேயே இயங்குகிறேன்.

    மேஜிக்கல் ரியாலிசம் சாருவின் மேஜிக் . அதை அனுபவித்தாயா? என்னால் எந்த இசத்துக்குள்ளும் ரசவாதம் ஆக முடியவில்லை. குழந்தையின் மனநிலை என்னை தடுத்தது. ஒரு வேளை அவர்கள் எல்லாம் கல்லூரியில் பணியாற்றுவதால் சாத்தியமோ. லிபியை பார் அவனும் ஆசிரியர் தானே. அவனால் எப்படி சாத்தியம் ? அவனும் மேல்நிலைப் பள்ளிக்கு வாத்தியான். அவனும் நம்மை காட்டிலும் மேல் நிலை தான் . அது கூட லிபியை இலக்கிய வாதியாக சாத்தியப் படுத்தியிருக்கலாம்.  புத்தக கண்காட்சியில் லிபியுடன் செல்லும் போது , நான் நாவல்களையும் , கதைகளையும் படிப்பதில்லை என்றான். அவனுக்கு மட்டும் இலக்கியம் எப்படி சாத்தியமாயிற்று. என்னை மட்டும் படி படி என்கின்றனர். நான் படித்தது சரியில்லையோ….!

    இலக்கியம் தெரிய வேண்டுமென்றால் மொழிபெயர்ப்பு நூலை வாங்கி படியுங்கள் என்றார்கள். எனக்கு பிரச்சனையில்லை. படித்தேன். அங்கும் பிரச்சனை.  கதா பாத்திரத்தின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. பாடத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை பல இடங்களில் பொருத்திப் பார்க்கும் சாதாரண ஆசிரியர் , அதுவும் அறிவியல் மேல் ஆர்வம் உள்ளவன் எனபதால், எவ்வளவு முயன்றும் பெயர்களை நினைவில் கொள்வதில் தோற்றுப் போகிறேன்.
சமீபத்தில் பட்டு, அப்பாவின் கை துப்பாக்கி போன்ற நூல்களை படித்தேன். தெரியாமல் இலக்கிய கூட்டத்தில் சிக்கிக் கொண்டேன். சீட்டா சரியாக மொழி பெயர்க்கவில்லை. அதன் மூலத்தை படியுங்கள். அதை படமாக எடுக்க போகிறார்கள். அதில் உள்ள சீசனல் வேரியேசனை எப்படி கொண்டு வந்துள்ளான். என்பதில் தான் கதை உள்ளது என விவாதித்து என் மண்டையை காய வைத்து விட்டார்கள். இவர்கள் பட்டு பட்டு என பேசுவது நாம் படித்த பட்டு  தானா?  இல்லை, வேறு எதுவுமோ?  இவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பட்டு போய்விட்டோமா ? என நொடியில் நினைக்க செய்த  சாத்தான் அன்று என்னை இலக்கிய வட்டத்தில் மரிக்க செய்தான்.   

    கற்பழிப்பு, வழிப்பறி, கள்ளக்காதல், காதல் கொலை, தற்கொலை, சிறுமி பாலியல் வன்புணர்வு போன்ற விசயங்களை அன்றாட செய்தி தாளில் வாசித்து விட்டு கடந்து போவது போல என்னால் இதை கடக்கவும் முடியவில்லை.  அதே சமயம் ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி என செய்தியை படிக்கும் போது கொதித்து எழுவது போல எழவும் முடியவில்லை. இதை டைப் அடித்த நேரத்தில் தமிழாசிரியர் செல்போனில் புகைப்படம் எடுத்து பாலியல் தொந்தரவு, அடி உதை என்ற செய்தி டிவியில் அலறிக் கொண்டு இருந்தது. இவர்களுக்கு எல்லாம் எதற்கு ஆசிரியர் பணி. நம் கல்வி முறையில் எதோ குறை இருக்கிறது. எத்தனை தகுதி தேர்வுகள் வைத்தாலும் அடிப்படை ஒழுக்க நெறியை தகுதியாக எடுத்துக் கொள்ள தவறியதேன்?

    அன்னிய நாடுகளை பார்த்து, கற்பித்தலும், அவர்களுக்குரிய நடத்தையும் வேறு. நாங்களும் சாதரண மனிதர்கள் தான் என்று நாய்களுக்கு இணையான பிறவிகள் என்ற மனபோக்கு உண்டா? என தெரியவில்லை.  நாக்கை தொங்கப் போட்டு அலைபவர்கள் தான் என்று கூறுபவர்கள் அந்நாட்டில் போய் கல்வி  தொழில் புரியுங்கள். இந்தியாவில் கல்வி சேவை மட்டும் தான் தேவை. முன் மாதிரியான ஆசிரியர்கள் தான் தேவை. என் குறைந்த பட்ச எதிர்பார்ப்பெல்லாம், தயவு செய்து பள்ளி காம்பவுண்டிலாவது மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுங்கள். காலமும் சட்டமும் நம்மை குற்றவாளிகளாகவே சித்தரிக்கின்றன. அந்த அதிகபட்ச வாய்ப்பு மாணவனுக்கு வழங்கப்பட்ட சூழலில் கண்டிப்பு நம் நடத்தை மூலமாக பயிலட்டும். இப்போதொல்லாம் என் மாணவர்கள் தவறு செய்தால் என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன். அப்படியாவது மாணவர்கள் நம் வலியையும் வேதனையையும் உணரட்டுமே.

    தமில் இலக்கியம் வளர்க்க வேண்டும். எப்படி ? செய்தி தாள் புரட்டிய போது புரட்டி எடுத்தது. செம்மொழி மாநாட்டில் மோசடி. கோடிகள் இல்லா லஞ்ச ஊழல்களுக்கு மதிப்பில்லை போலும். அதனாலோ என்னவோ , கீழ்மட்ட அலுவல்களில் லஞ்சம் தண்ணீர் பட்ட பாடாய் இருக்கிறது.  தண்ணீர் என்றவுடன் அம்மாவின் மினரல் வாட்டர் திட்டம் நினைவுக்கு வருகிறது. நீண்ட பயணங்களின் போது நானும் நா வறட்சியால் தண்ணீர் இன்றி அவதிப்பட்டதுண்டு. அதை விட பேருந்து நிற்கும் இடத்தில் ஒரு லிட்டர் பாட்டில் இல்லை இரண்டு லிட்டர் தான் இருக்கிறது. விலையை விசாரித்தால் எச்சில் தானாகவே ஊறி நா வறட்சியை போக்கி விடும். மறு நாள் பள்ளிக்கு செல்லும் போது சூடு பிடித்து கொள்வது உண்மை. அம்மாவின் ஆசிர் வாதத்தில் தண்ணீர் கிடைத்து விட்டது. பத்து ரூபாயில் . தண்ணீர். சபாஷ். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். (தூரத்தில் இருந்து அதை ஓட்டாக பாராளுமன்ற தேர்தலில் காட்டுங்கள் )அது இருக்கட்டும் .  கலப்படம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ( அட மிக்ஸிங் க்கு சரியா இருக்குதுல்ல….).
  
    ஒருவேளை தி இந்து ஆங்கில நாளிதழ் தமிழில் வெளிந்துள்ளது என் இலக்கிய சந்தேகத்தை நீக்கவா? இல்லை இலக்கியம் என்பது எந்த வட்டத்தில் அடங்கும் என்று சொல்லவா? ஆனால் , தி இந்து வெற்றி பெறும் என்பது அதன் லே அவுட்டிலேயே தெரிகிறது. எனக்கு வந்து சேர வேண்டிய முதல் நாள் பேப்பர் வரவில்லை. ஆனால், இரண்டாம் நாள் பேப்பர் தாமதாமாக வந்தது.  இருப்பினும் மாலைப் படித்த போது மனநிறைவடைந்தேன். நாம் கட்டிய காசு வீண் போகவில்லை. இருந்தாலும் தமிழின் முன்னனி நாளிதழ் போன்று இல்லை என என் மனைவி சொன்ன போது சிரித்தேன். மனச கவர்கிற மாதிரி செய்தி போடணும் என்றாள். இந்த கவர்ச்சி தான் இலக்கியமோ. அட போங்கப்பா… என் ஆசான் தோ.பா பேசிய புத்தக கண்காட்சி பேச்சு நினைவுக்கு வந்தது. எது எக்காலத்திலும் மனதில் நிலைத்துள்ளதோ அதுவே இலக்கியம். எது மக்களுக்கு எக்காலத்திலும் பயனுள்ளதாக இருக்கிறதோ அதுவே இலக்கியம். இதைதான் என் ஆறு விரல் நண்பன் அயல் நாட்டு பயணம் போகிறேன் என்றவன் சொன்னான், நீ எழுதுவதெல்லாம் இலக்கியம். ஆனால் அது அனைவரையும் சென்றடைய வேண்டும். அதை பிறர் செய்கின்றனர். நீ உன் எழுத்து மார்கெட்டிங் ஆகும்போது நீயும் இலக்கியவாதி ஆவாய். உன் எழுத்தும் இலக்கியம் ஆகும்.

   அதுசரி நான் இலக்கியவாதியா? இல்லை இது இலக்கிய வியாதியா? எது  

எப்படியோ இதை நல்லா மார்கெட்டிங் பண்ணுங்க… ஒரு முடிவுக்கு வரச் 

செய்யுங்க. 

Saturday, September 14, 2013

பள்ளிக் கல்வியில் அரசின் அக்கறை தேவை.- எஸ். முத்துக்குமரன்(முன்னாள் துணை வேந்தர்)

   ஆசிரியர் பணி என்பது புனிதமானது. ஆனால் இன்று கொச்சைப்படுத்திப் பேசப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி படிக்க வைக்க வேண்டும்? வகுப்பறையில் மாணவர்களை கண்டித்து , தண்டனை கொடுப்பது மாணவர்களின் நலனுக்கு என்பது உங்கள் உரிமை. இதை மாணவர்களும் புரிந்து கொள்ளவில்லை. இதற்காக சட்டங்கள் இயற்றி இருப்பதை நான் ஒப்புக் கொள்ளவது அல்ல. இப்போதுள்ள அரசு இதற்கு ஒத்து போகிறது. இதற்கு பள்ளிக் கல்வியை காரணமாக சொல்லக்கூடாது.

    கற்பிக்கும் முறைகள் பல உண்டு. ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பல கற்பிக்கும் முறைகளை படித்திருப்பீர்கள். எந்த முறை சிறந்தது, உங்கள் மாணவர்களுக்கு எது சிறந்ததோ, அதை பயன்படுத்துங்கள். எங்கள் கிராமத்தில் ஒரு சொல்லாடை உண்டு. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும் . பாடுகிற மாட்டை பாடிக்கறக்கணும். அது போல மாணவனுக்கு எது உகந்தது என்பதை உணர்ந்து கற்றுக் கொடுங்கள்.


”கொள்வான் கொள்கை அறிந்து அவன் உள கற்று கொள்ள செய்ய வேண்டும்”. அறுபது முதல் நாற்பது மாணவர்கள் உள்ள வகுப்பறையில் , ஒவ்வொரு மாணவனும் அவனுக்கு தான் சொல்கிறீர்கள் என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். நீங்கள் சொல்லும் கருத்து அனைவருக்கும் பொருந்தும் விதமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனையும் தனிப்பட்ட முறையில் கவனிக்க வேண்டும். 

   குழந்தை வீட்டில் ஓடும், எதையாவது பொருளை எடுத்து விளையாடும். தெரிந்து கொள்ள வேண்டும் ஆவலில் தான் எடுக்கும், தடுத்து நிறுத்தாமல்,  அதனை தெரிந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அதை தான் பள்ளிகளிலே செய்ய வேண்டும். மட்டம்  தட்டி பேசக்கூடாது. மாணவன் உங்களுக்கு தெரியாத கருத்துக்களை கேட்டால், அதனை புறக்கணிக்கும் விதமாக மாணவனை குறை சொல்ல கூடாது. தெரிந்து பின் கூறுங்கள் . விடையளியுங்கள். உங்கள் குறைகளை ஒத்துக்கொள்ளுங்கள். அதனை போக்க முயற்சி எடுங்கள். ஆசிரியர்கள் பதில் தெரிந்தவர்களாக , நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.

    ஆவலை தூண்ட வேண்டும். மாணவர்களிடம் பேசுகின்ற நேரத்தில் முகமலர்ந்து இருந்தால், பயம் இன்றி கேட்பார்கள். நீங்கள் எப்பொழுதும் ஒரு உதாரண மனிதராக இருக்க வேண்டும். மாணவர்கள் முழுவதுமாக ஆசிரியரை தான் நம்புவார்கள். குழந்தையிடம், அப்பா ’தப்பு’ என்று சொன்னாலும், ’இல்லை’ , ’இல்லை’ எங்கள் ஆசிரியர் சொல்லி கொடுத்தது தான் சரி என்பார்கள். அவர் யுனிவர்சிட்டியில் கணித பேராசிரியராக இருப்பார், ஆனால் அவரை குழந்தை நம்பாது. ஆசிரியரை குழந்தைகள் முழுமையாக நம்புகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் , நேர்மையானவர்களாவும், உதாரண புருசர்களாகவும் வாழ்ந்தால் தான் குழந்தைகள் நம்மை மதிக்கும்.

   எங்கிருந்தாலும் ஆசிரியரை மாணவர்கள் ஆசிரியராக தான் பார்க்கிறார்கள். பெரிய பதவியில் இருந்தாலும் , எத்தனை ஆண்டுகளானாலும், என்னுடைய ஆசிரியர் என்று தான் சொல்வார்கள். ஒரு கிளார்க் மேனேஜரான பின் , அவர் கிளர்காக இருந்த காலத்தில் இருந்த மேனேஜரை இவர் என் மேனேஜர் என்று கூறுவதில்லை. இதேப்போல பல துறைகளை சொல்லலாம். என்னுடைய ஆசிரியரை மட்டும் எந்த காலத்திலும் தன்னுடைய ஆசிரியர் என்று தான் சொல்வான். இப்படி பட்ட துறையில் பணியாற்றும் உங்களை பாராட்டுகிறேன்.
மனம் நிறைவாக செயல்பட வேண்டும். இந்த உன்னத பணியை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செயல்பட வேண்டும். மாணவர் மனம் குளிர வேண்டும் . அப்படி செய்வதற்கு உங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். சிறப்பாக செய்தால், உங்களை மாணவர்கள் நல்ல நிலமையில் இருக்கும் நேரத்தில் எண்ணிப் பார்த்து பாராட்டுவார்கள். அந்த விதத்தில் பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

     நானும் , என்னுடைய உயர் கல்வி துறை டைரக்டரும் ஒரு சமயத்தில் தெருவில் நடந்து சென்றோம். எதிர் திசையில் இருந்து ஒருவர் கை அசைத்து என்னை கூப்பிட்டார். நானும் கை அசைத்து நிற்க சொல்லி ரோட்டை கிராஸ் செய்து பேசிவிட்டு திரும்பி வந்தேன். ”யாரது உங்க மகனா?” என்று கேட்டார் டைரக்டர். ”இல்லை, இவன் என் ஸ்டுடண்டு”, என்றேன். நீங்களும் உங்கள் மாணவர்களை மாணவனா ? மகனா? என தெரியாத அளவிற்கு பழக வேண்டும்.

   டெல்லியிலிருந்து சென்னைக்கு குடியேறிய சமயம் நடந்த நிகழ்வு . தமிழகத்தின் சீப் செகரட்ரியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை பார்க்க வேண்டும் என்று அவரை போனில் அழைத்து அட்ரஸ் பெற்றுக் கொண்டேன். 4 லேக் தெரு என்று கூறினார். நானும் சரியாக அந்த ஏரியாவில் வந்து 4 லேக் தெருவில் நின்று கேட்கிறேன். அப்படி யாரும் இல்லையே என்கின்றனர். அப்போது செல்போன் கிடையாது. இவ்வளவுக்கும் அவர் கடந்த மாதம் தான் சீப் செகரட்ரியாகி ரிடையர்டு ஆனவர். அடுத்த வீட்டில் விசாரிக்கிறேன். அதற்கு அடுத்த வீட்டில் விசாரிக்கிறேன். யாருக்கும் தெரியவில்லை. அதற்கு அடுத்த வீட்டில் இருப்பவரிடம் அனுமதிப் பெற்று, அவர் வீட்டிலிருந்த போன் மூலம் , அவரிடம் பேசினேன். நான் முதலில் சென்று விசாரித்த இடத்திற்கு அருகில் சந்து மாதிரி போகிறது . அதில் நாலாவது வீடு தான் அவர் வீடு. அருகில் இருப்பவர்களுக்கே அவரை அடையாளம் தெரியவில்லை.

  நான் ஒருமுறை சிங்கப்பூர் சென்றிருந்தேன். அனைவருக்கும் தெரிந்த சாப்பிங்க் செண்டரில் சாப்பிங் செய்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு குரல், “அய்யா வணக்கங்கய்யா…” யாருப்பா தெரியலையே என்றேன். அவன் என்னை சரியாக அடையாளம் தெரிந்து வைத்திருக்கிறான். அய்யா நான் 66ல் உஙக் கிட்ட மாணவனா இருந்தேன். எங்க இங்க?என்று கேட்டேன்.  நான் ஆப்பிரிக்காவில வேலை செய்யுறேன். போற வழியில சிங்கப்பூரில் பொருட்கள் வாங்கி செல்லலாம் என்று வந்தேன். நீங்க டெல்லியில இருக்கீங்கன்னு சொன்னாங்க.. நீங்க இப்ப சிங்கப்பூர்ல்ல இருக்கீங்களா? 12 ஆண்டுகளுக்கு முன் கிண்டி காலேஜில் என்னிடம் படித்த ஒருவன் டெல்லியில் நான் இருந்த விபரத்தை தெரிந்து வைத்துள்ளான். இரண்டு மாணவர்கள் சந்தித்தால் என்ன நிகழும். ஆப்பரிக்க காட்டில் வாழும் ஒருவன் டெல்லியில் நான் இருந்த விபரத்தை அறிந்து வைத்துள்ளான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆசிரியர்களாகிய உங்களை ஆயுளுக்கும் நினைத்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதுவும் மோசமாக இருந்தால் இன்னும் கூடுதலாகதான் பேசுவார்கள்.

மதிப்பீடு செய்வது எதற்கு? தேர்வுக்கு மாணவன் எவ்வாறு படிச்சுருக்கான் என்பது தெரியவா?  தேர்வு மதிபெண்கள் அதை மட்டும் காண்பிக்கவில்லை. எத்தனை மதிப்பெண் பெற்றுள்ளார்கள்?  மாணவர்கள் அனைவரும் சராசரியாக 50 க்கு மேற்பட்ட மதிப்பெண்கள் எடுக்கிறார்கள் . நீங்கள் சரியாக சொல்லிக் கொடுத்திருந்தால்  அனைவரும் 100 மதிப்பெண்கள் பெற்றிருப்பார்கள். மதிப்பீடு செய்வது, தேர்வு என்பது
1.   நீங்கள் கற்று கொடுப்பது சரிதானா என அறிந்து கொள்ள.
2.   நீங்கள் சரியாக கற்றுக் கொடுக்க பயிற்சிகளின் தேவையை அறிய, பூர்த்தி 
  செய்ய மதிப்பீடு உதவுகிறது. 

3.               அரசு கல்விக்கு செலவு செய்வது பயனுள்ளதா என தெரிந்து கொள்ள
மதிப்பீடு உதவுகிறது. ஆட்சியாளர்கள் சரியாக இருந்தால் பயிற்சியை முறையாக தந்திருப்பார்கள். ஆசிரியர்களிடம் குறை இருக்கிறதா? மாணவர்களிடம் குறை இருக்கிறதா? என்பதை அறிந்து அசம்பிளியில் விவாதித்து இருப்பார்கள். இப்போது இந்த ஆட்சியில் இவை செய்யப்படுவதில்லை.

    தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு செய்தால், நாம் கற்பிக்கும் முறை சரிதானா? என அறிய முடியும். நம்மிடம் உள்ள குறைகளை நீக்கி , மாணவர்களுக்கு குறையின்றி கற்பிக்க வேண்டும். நமக்கு மனநிறைவு ஏற்படும். நாம் காரியத்தை சரியாக செய்தோம் என்றால் மகிழ்ச்சியாக இருப்போம். நாம் மகிழ்ச்சியாக இருந்தால் மென்மேலும் வளர்வோம். நாடு செழிக்கும்.

ஆசிரியர்களுக்கு சிசிஇ சார்பான பயிற்சியை வழங்கும் வேதா நிறுவனத்தின் ஸ்ரீதரை இந்த சமயத்தில் பாராட்டுகிறேன். அவருடன் உதவியாக உள்ள அத்தனை நண்பர்களையும் பாராட்டுகிறேன். இந்த பயிற்சியை பெற்று சிறந்த ஆசிரியராக விளங்க இருக்கும் உங்களையும் பாராட்டுகிறேன்.


இது வேதா அகாடமி சார்பில் மதுரையில் திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் சிசிஇ பயிற்சி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்ரீதர் வழங்கி, அவர் எழுதிய சிசி இ சார்பாக தெளிவான புத்தகங்கள் (2 வால்யூம்) வெளிடீட்டு விழாவில் முன்னாள் வயிஸ் சான்ஸ்சலர்,  (பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்)  எஸ். முத்துக்குமரன் பேசிய உரை.

விழாவில் இரண்டாவது பாகம் மட்டும் தான் இருந்தது. விரைவில் முதல்,இரண்டாம் பாக புத்தகங்களை படித்து , அதற்கான மதிப்பீட்டை விரைவில் எழுதுகிறேன். 




Friday, September 13, 2013

வைகை ஆற்றை விற்கிறார்கள்...ஜாக்கிரதை...!

என் வகுப்பு மாணவர்களை அழைத்துக் கொண்டு வைகை ஆற்றின் சீர்கேட்டை ஆராய்வதற்கு நேற்று காலை 11 மணி அளவில் கள பயணம் மேற்கொண்டோம். மாணவர்கள் உற்சாகத்துடன் களத்தில் இறங்கினர். 

 களப்பயணம் உற்று நோக்கலில் தொடங்கியது. வைகை ஆற்றை அதன் கரையோரம் நின்று ஆய்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டது. மாணவர்களை ஐந்து குழுக்களாகப் பிரித்து, ஆறு எவ்வாறு மாசுப்பட்டுள்ளது என்பதை உற்று நோக்கி, தங்கள் நோட்டுகளில் பதிய செய்ய , அறிவுரைகள் வழங்கப்பட்டது.

     ஆய்வை குருவிக்காரன் சாலையின் தொடக்கத்தில் ஆரம்பித்தோம். அருகிலுள்ள குடியிருப்புகள் , அதில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் குழாய் மூலம் ஆற்றில் கலப்பதை பார்த்த மாணவர்கள் நிச்சயம் நம் ஆங்கிலப்பாடத்தில் கடவுள் பூமிக்கு வருகைபுரிந்து ஆற்றின் அழுகையை விசாரிப்பது போல விசாரித்தால், அய்யோ நம் நெஞ்சு தாங்காது என்று சொல்லி ஆதங்கப்பட்டார்கள் மாணவர்கள்.

  “சார் ... ஒரே நாத்தமா இருக்கு சார்... ” என்று ஐயப்பன் சொல்ல, “அடே இந்த நாத்தமெடுத்த தண்ணியிலும் எருமைமாடு எப்படி படுத்து புரளுது... பாரு” என்றாள் திவ்யா. 
“சார்...கீழே பார்த்து நடங்க சார்.. ஆத்துக்குள்ளேயும் ஆயி.. ஆத்து ஓரத்திலு ஆய்..” என்றாள் த்ரிக்‌ஷா ப்ரியதர்ஷினி. “அங்க பாருங்க சார் ஒரு நாய்.. ஆய் பேலுது..” என்று கார்த்திக் சுட்டிக்காட்டிய இடத்தில் மனித நாயும் அச்செயலை செய்தது. அனைவரும் சிரித்தனர். 

“ஆறு எல்லாம் ஒரே குப்பை  சார்... இந்த ஏரியா மக்கள் ஆத்தில தான் குப்பையை எறியுறாங்க போல “என்றான் சஞ்சய். 
“அட போங்க சார்...வண்டியூர் பக்கம் வாங்க... எங்க ஏரியாவுல...பூ , மாலை அப்புறம் வாழை மட்டை என எல்லாத்தையும் ஆத்தில கரைக்கிறேன்னு போட்டு ஒரே வீச்சம்... இப்ப சாமி கும்பிட்டாங்க....சொல்ல வேண்டியதில்லை...எல்லா குப்பையும் ஆத்துக்குள்ள தான் சார்...” என்று ஆதங்கப் பட்டுக் கொண்டனர் கார்த்திக்கும், மணிப்பாண்டியும்.  



 “சார் ... ஆத்தோரத்தில மரம் நட்டாங்கல்ல.. ஒரு மரம் கூட வளர காணாம்... அடுத்து நாம ஆத்தோரம் மரம் வளர்க்க...மரம் நடுவோம் சார்...” என்று ஆலோசனைகள் வழங்கினாள் பாண்டி மீனா. எங்க வீடு பக்கம் தான், நான் தண்ணீர் ஊற்றுகிறேன் என்று உறுதியளித்தான் உதயக்குமார்.


 சிறுது தூரம் நகர்ந்திருப்போம்.அனைவ்ரும் ஒத்தக் கூரலில் , “சார், அங்க பாருங்க...ஆத்துக்குள்ள... சாயம் போடுறாங்க... என சாயம் ஏற்றி காய வைத்துள்ள சேலைகளையும், அதன் அருகில் புகையை கக்கிக் கொண்டு எரியும் அடுப்பையும் காட்டினார்கள். நானும் சுட்டிக்காட்டி , ஆதங்கப்பட்டேன்.

எங்கு பார்த்தாலும் குப்பை ,இருநூறு அடிக்கொரு சாக்கடை தண்ணீரை ஆத்துக்குள்ள ஓட விடுகிற குழாய், காலைக்கடன் முடித்த தடம்,விலங்குகளின் கழிவுகள், ஆற்றுக்குள் முளைத்துள்ள தொழுவங்கள், ஆற்றின் கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மரச்சாமான்கள் , குப்பை தொட்டிகள் இருக்க அதன் அருகிலே ஆற்றில் வீசியெறியப்பட்ட பலத்தரப்பட்ட கழிவுப் பொருடகள், நெகிழி பொருட்கள் என தாம் பார்த்தை பதிவு செய்தார்கள்.  


“சார் ,ஆத்துக்குள்ள மாட குளிப்பாட்டுறாங்க சார் ..” என்ற தேவதர்ஷினிக்கு, “ அட போப்பா...அந்த தண்ணியிலே கெமிக்கல் சாக்க அலசுறாங்க... அந்த தண்ணியிலேயே .. துணிய தோய்ச்சு போடுறாங்க...”என அலறி பேசினாள் செல்வ ராணி.

“சார்... ஆத்த மாடுமில்ல.. நம்ம காத்தையும் இவனுங்க.. பாழ் படுத்துறாங்க... இவனுகளையெல்லாம் கட்டிப்போட்டு உதைக்கணும் சார்...” என்றான் விக்னேஷ்வரன்.
அதற்குள் இப்ராகிம் “சார்... யாரும் இத கண்டுக்காம இருக்காங்களே.. அப்புறம் எப்படி சார் ... தண்ணீர் மதுரைக்கு கிடைக்கும்.. ” என்றான்.

“சார்... காய்கறி கழுவுகள் .. ஆத்துக்குள்ள தொழுவம் கட்டி கொடுக்குறானுங்க... ” என்றான் தினேஷ். “கார்ப்ரேசன் இதுக்கு வரி போட்டு கடை வாடகை வாங்குற மாதிரி எதாவது வசூல் பண்ணும்டா...” என்றான் தங்கமணி.



 “சார் ஆட்டு இறைச்சி , கோழி இறக்கை இன்னும் பல கழிவுகள் இந்த ஓப்புளப்படி பாலத்தை தாண்டினா இருக்கும் சார்...எனக்கு குடலை புரட்டும் நாம திரும்புவோம் ”என்று கூறி தேவதர்ஷினி எங்களின் ஆய்வுக்கு முற்றுப்புள்ளைவைத்தாள்.


யுவராஜ், “சார்...போற வண்டிகளை  பாருங்க.. எவ்வளவு புகையை  கக்குது.. நுரையீரல் அப்படியே அவுஞ்சு போக போகுது சார்...” என்றான்.



கள ஆய்வுகளை வகுப்பறையில் விவாதித்தனர். நல்லதொரு ஆய்வு கட்டுரை தயார் செய்து வருகிறோம் . திங்கள்  தருவதாக உறுதியளித்தார்கள். நான் அவர்களிடம் வைத்துள்ள கோரிக்கை...நம் ஆற்றை காக்க .. நம் வைகையை காக்க என்ன செயல்திட்டம் உருவாக்க வேண்டும் “ என்பதை யோசிக்க சொன்னேன்.

இவ்வளவு தூரம் பயணப்பட்ட நீங்களூம் யோசனைகளை அள்ளித்தரலாம். உங்கள் ஆலோசனைகளையும் கமண்டாக போடவும். காப்போம் மதுரையின் வைகையை..!  

Tuesday, September 10, 2013

நாய்களும் குரைப்பதை நிறுத்தி விட்டன!

 நாய்களும் குரைப்பதை நிறுத்தி விட்டன!
இப்போதெல்லாம் வானிலை அறிக்கை பொய்ப்பதில்லை. சென்னையிலிருந்து மதுரைக்கு மதியம் புறப்பட தயாரானேன். வானம் கருத்து போயிருந்தது. பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கலானேன். சோகத்தின் உச்ச நிலை அழுகை. வானமும் அழுகத் தொடங்கியது. இந்த அழுகை யாருக்காவும் இருக்கலாம். நான் நினைப்பது போல இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு இறந்ததாக கூறப்படும் 1,300 சிரிய நாட்டின் , டமாஸ்கஸ் நகரத்து மக்களுக்கானதாக இருக்கலாம். நீங்கள் நினைப்பது போல ராகுலை முன்னிலைப்படுத்தும் அரசியலுக்காகவோ அல்லது  மோடியை முன்னிலைப்படுத்தும் பஜாவுக்கானதாகவோ இருக்கலாம். பிறர் அழுகையில் நாம் பங்கு கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் அவரை சமாதனப்படுத்த முடியும் என்பதற்காக அல்ல. நாளை நமக்கும் ஆறுதல் தேவைப்படலாம்!

நான் இப்போது நனைவதற்கு தயாராக இல்லை. என்னுடைய யோசனையெல்லாம் , நாளை விநாயகர் சதுர்த்திக்கு பின் பள்ளி துவங்குகிறது. என்னைப் போல பெருநகரத்து விசேசங்களில் பங்கு கொள்ள சென்ற மிகச்சிறந்த இரு ஆசிரியர்களின் இரயில் முன்பதிவு செவ்வாய் தான் கிடைத்தது, ஆகவே விடுப்பு தெரிவித்து சென்றிருந்தனர். ஏற்கனவே பள்ளிக்கு விரைந்து வருகிறேன் என்று தலையில் காயம் ஏற்பட்டு ஒருவர் மருத்துவ விடுப்பு. மற்றொருவர் மகப்பேறு விடுப்பு. இன்னொருவர் புதுமனை புகுவிழா என சொல்லி விடுப்பு. நாளை குழந்தைகளுக்கு என்ன செய்வது . வகுப்புகளை எப்படி பிரித்து தருவது. யோசனையில் மதியம் பேருந்து பிடித்து காலை எப்படியும் பள்ளியை அடைந்து விட வேண்டும் என்று மழையில் விரைந்து வந்த பேருந்தில் ஏற ஓடினேன். முடியவில்லை. வயதின் முதிர்ச்சி இப்படி சகாசங்கள் செய்யும் போது தான் தெரிகிறது. மனதில் என்றும் இளமை ஊஞ்சல் ஆடுகிறது. மனுசியபுத்திரன் சொன்னது போல இளமையில் முதியவர்களுடனும், முதுமையில் தன்னை விட இளம் வயதினருடனும் பழகுவதால் இருக்கலாம். மனுசியபுத்திரன் 30 மதுரை விழாவில் அவரின் உணர்ச்சி வசமிக்க பேச்சை கேட்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர் விரும்புவதைப் போல இளைஞர்கள் சமூக அவலங்களை மீடியாவில் பேச வர வேண்டும். மீடியாக்களும் அழைக்க வேண்டும். மனுஷியபுத்திரனைப் போல பலரும் இளம் எழுத்தாளருக்கான களத்தை கொடுக்க வேண்டும்.
பெருங்களத்தூர் ஸ்டாப் வந்ததும் இறங்கி விடுங்கள் என மச்சினன் நினைவூட்டியதை மனதில் இறுக பற்றிக்கொண்டேன். நடத்துனர் என்னை பார்க்க, நான் சிரிக்க, பெருங்களத்தூர் வந்ததும் சொல்லவும் என நினைவுப்படுத்த, அது சிறுபிள்ளைத்தனமாகவே தெரிந்தது. தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது மனது குழந்தைத்தனமாகவே மாறிவிடுவது ஆச்சரியம் தான்.  

பெருங்களத்தூர் வந்தது. எதிர்புறம் உள்ள பேருந்து தளத்தை அடைய வேண்டும். ஒருவழியாக பெருநகரத்தின் வாகன நெருசலில் அகப்பட்டு, எதிர் திசையை கடக்க கால் மணி நேரம் பிடித்தது. திருநெல்வேலி நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணத்தை தொடர்தேன்.
வண்டி விழுப்புரம் அருகில் சாப்பிட நின்றது. கையில் இருந்த ரூபாய் நோட்டுக்களை எண்ணி பார்த்தேன். ஏடிஎம் வந்ததிலிருந்து பணம் பெட்டிக்குள் புதைந்து விட்டது. நான் பணத்தை தேவையில்லாமல் எடுத்து புழங்குவது குறைந்து விட்டது. ஆனால் பலர் ஏடிஎம் கார்டில் பேலண்ஸ் பார்க்கும் போது பாவமாகவும் தெரிகிறது. யாரோ பணம் போட்டு விடுகிறேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதை நம்பி  கார்டை உரசி பார்த்து 0 எனக் காட்டும் போது, அருகிலுள்ள நம்மைப் பார்த்து பல் இளித்து செல்வது நமக்கே பாவமாக தெரியும். இளம் வயதில் எனக்கே இப்படியொரு அனுபவம் ஏற்பட்டுள்ளது.  

டீ குடித்தேன்.  புஸ்கட் வாங்கினேன்.  ஒரு கும்பல் வயதான ஒருவரை சுற்றி கதை கேட்பதை பார்த்து நானும் சென்றேன். இப்படி வழியில் கேட்கும் கதைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும் . பல சமயம் நம்மை சோகத்தில் ஆழ்த்திவிடும். நான்கு மகன்களை பெத்த தகப்பன் அனாதையாக விடப்பட்ட கதை. அருகிலுள்ள கோயிலுக்கு பெட்டி துணிமணிகளுடன் திருவிழாவிற்கு இளைய மகன் அழைத்து வந்தானாம். சாமி தரிசனம் முடிந்ததும், அவன் துணிமணிகளை எடுத்து கொண்டு, இங்கேயே இரு, நான் வந்து விடுகிறேன் என்று கூறி இருக்கிறான். சந்தேகப்பட்டு, அந்த பையை வைத்து விட்டு செல்ல வேண்டியது தானே என்று சொல்லியிருக்கிறார். அவன் எதையும் காது கேட்காமல் சென்று விட்டான். இன்று வரை வரவில்லை. இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிறதாம். அதை விட அவர் சொன்ன அவலம் எல்லோரையும் கண்கலங்க வைத்து விட்டது. அவன் சென்றது கூட பரவாயில்லை. ஒண்ணுக்கு வருதுன்னு அங்க போயிருந்தா, துரத்துறானுங்க.. மலம் கழிக்க ஒதுங்கினா கல் விட்டு எறியிறானுங்க… கையில காசு இல்லாம பட்டினி கூட இருந்திடலாம். ஆனா இந்த மலம் ஜலம் கழிக்க காசு தேவைப்படுதுப்பா… படாதப்பாடு பட்டுட்டேன். இந்த அழுக்கு வேட்டி சட்டையை பார்த்து நம்பி டிக்கெட் எடுத்து கையில் சோத்துக்கு காசு கொடுத்த மவ ராசங்க நீங்க நல்லா இருக்கணும் என்று அவர்களைப் பார்த்து கும்பிட்டார். அந்த ஹோட்டலில் ரோட்டோரத்தில் முத்திரம் இருக்கும் நபர்களை கம்பு எடுத்து விரட்டியதைப் பார்த்து போது இந்த கதையை கூற ஆரம்பித்துள்ளார். இயற்கை உபாதைகளை கழிக்க இடம் கிடைக்க வில்லை என்றால் நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இதனால் வரை இது பற்றி சிந்தனையில் தோன்றவில்லையே !

திருச்சி பஸ் ஸ்டாண்டில் பேருந்து நுழைந்தது. அப்படி ஒரு கூட்டம். மாநாடு எதையும் உச்சிப்பிள்ளையார் நடத்தினாரோ என்று விசாரித்தால், ஆம்னி பஸ்காரர்கள் ஏமாற்றிய கதையை சொன்னார்கள்.  திருச்சி முன்னாள் டையர் பஞ்சர் பார்த்து வருகிறேன் என்று ஆயிரத்துக்கு மேற்பட்ட காசை கொள்ளையடித்த தெருவில் விட்ட விபரம் அறிந்தேன். எப்படியெல்லாம் மக்களின் அவசர நிலையை உணர்ந்து கொள்ளையடிக்கின்றனர். மதுரை போலீஸ் துறையில் உள்ள மோப்ப நாய் பிரிவில் சிறப்பு எஸ்.ஐ திருட்டு , வழிப்பறி வழக்கில் கைது ஆகியிருக்கிறார். திருப்பதி லட்டு கொடுத்து, பண ஆசாமிகளை சாய்த்து கையில் இருக்கும் நகைகள் ,பையில் இருக்கும் பணம் இவற்றுடன் எஸ்கேப். நாம் சுதாரிப்பாக இருக்காவிட்டால் நம் கை விரல் மோதிரம் கூட மிஞ்சாது. தூங்கியப்படி என் கை பையை பிடிக்க தொடங்கினேன்.
இரவு மூன்று மதுரை மாட்டு தாவணி பஸ் நிலையம் . என் மனைவி இட்ட கட்டளைப்படி கோரிப்பளையம் பஸ் வர , கோரிப்பளையம் சென்றேன். இரவு நிசப்பத்தில் , தார் சாலைகள்  வாகன நெருசல் இன்றி ஓய்வு எடுத்தன. வாகனமற்ற சாலையில் வெறித்தனத்துடன் பேருந்தை இயக்கினார் ஓட்டுனர். நடத்துனர் விசில் ஊதியது கூட தெரியாமல் , வண்டி கோரிப்பளையம் சிக்னல் தாண்டி நின்றது. மெதுவாக நடந்து பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன்.பேருந்து நிறுத்தத்தில் நானும் மற்றொருவரும். நான்கு மணிக்கு தான் இனி பஸ் என வந்த ஆட்டோவில் அவரும் நகர்ந்து விட்டார். வாடகை நூற்றி ஐம்பது. அதில் என்னை வேறு அந்த ஆட்டோ காரன் கூப்பிட்டான். அதேபோல வாடகை கேட்டான். முடியாது என்றவுடன் பறந்தான். துரத்தில் வந்த டிரைசைக்கிள் என்னைப் பார்த்ததும் நின்றது. ஒரு சிறுவன். அவனிடம் ஏறிக் கொள்ளலாமா என கேட்டேன். ரிசர்வ் லைன் வரை செல்கிறேன் வாருங்கள் என்றான்.

பள்ளிக்கு டிமிக்கி கொடுக்க கூடாது என்ற என் மனநிலையை அறிந்தோ என்னவோ அவன் வண்டியில் வைத்திருந்த செப்டம்பர் 1ம் தேதிய பேப்பரில் என் கவனம் சென்றது. ( நான் இது நாள் வரை என் சர்வீசில் சிஎல் எடுத்தது கூட இல்லை. என் திருமணத்தை கூட கோடை விடுமுறையில் வைத்தேன். முதல் நாள் பள்ளிக்கு வந்த என்னை கேனையனாக பார்தனர். நான் சரக்கு இல்லாதவன் என்று கூட வாய்கூசாமல் என் காது பட சொன்ன ஆசிரியைகளும் உண்டு. எல்லாம் என் பிறவி பயன்.) “பஸ் இல்லை; அதிக தூரம்” என , காரணங்களை கூறி, கிராமங்களில் உள்ள தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சிலர், தாமதமாக வருகின்றனர். விடுமுறை எடுத்தாலும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. பள்ளிகளை மேற்பார்வையிடவும், வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்த, தொடக்க கல்வி இயக்கம் உத்தவிட்டுள்ளது என்பது தான் அச்செய்தி.

டிரைசைக்கிள் ஓட்டும் பையனிடம் படித்துக் கொண்டே வேலை செய்கிறாயா என்றேன். படிப்புக்கும் நமக்கும் ரெம்ப தூரம் அண்ணே என்றான். அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்றேன். உனக்கு என்ன வயசு ஆகிறது என்றேன். அவன் சுதாரிப்பாக பதினெட்டு. ஒன்பதாம் வகுப்பை விட்டு இரண்டு வருடம் தான் ஆகிறது என்றான். நான் கவனிக்காதது போல எந்த பள்ளி என்று விசாரித்தேன். எனக்கு தெரிந்த ஆசிரியர்கள் பெயரை சொன்னேன். அவனா அந்த கணக்கு வாத்தியான் பொல்லாதவன் அண்ணே அவனால தான் நான் படிப்ப விட்டே ஓடி வந்தேன். சின்ன தப்பு விட்டாலும் துரத்தி துரத்தி அடிப்பான். நமக்கு சரிபட்டு வராது என வந்து விட்டேன். டேய் அந்த அறிவியல் ஆசிரியர் . அண்ணே  அவரு தமிழ் வாத்தியாருண்ணே. படிக்கிற பசங்களுக்கு உதவி செய்வார். செல்லமா வைத்துக் கொள்வார். என்ன மாதிரி கழுசடைகளை எல்லாம் வெளுத்து வாங்குவாரு அண்ணே என்றான். இந்த வாத்தியாரு டிச்சருகளை எல்லாம் பார்த்த எனக்கு எரிச்சல் எரிச்சலா வருதுண்ணே…. என்றான். மௌனமாக இருந்தேன். உங்களுக்கு என்ன தொழில் அண்ணே என்று கேட்டான். வாத்தியாருன்னு சொல்லி, பாதி தொலைவில் இறக்கி விட்டால் நான் வீடு  போகும் தொலைவு இன்னும் சிக்கலாகி விடும். தபால் தந்தி நகர் எங்கு இருக்கிறது? மல்லிகை காபி பார் எங்கு இருக்கிறது? தம்பி மேடு வருகிறது இறங்கி தள்ளி விடுகிறேன் என்று சமாளித்தேன். அட உட்காருண்ணே. சும்மா ஓங்கி மிதிச்சா தன்னால ஓடிப்போகுது என்றான்.

ஆத்திகுளம் சிக்னலில் இறக்கி விட்டான். டீக்கடை திறந்து இருந்தது. டீ குடித்தோம். தாங்ஸ் அண்ணே என்றான். இப்படியே லிப்ட் கேட்டு போன சீக்கிரம் போயிடுவீங்க.. மெயின் ரோட்டில் நடங்கள். அய்யர் பங்களா வழியாக செல்லுங்கள் என்றான். நான் இல்லைப்பா பாரதி ஸ்டோர் வழியா அப்படியே தபால்தந்தி நகர் போயிடுவேன். அங்கிருந்து பனங்காடி நேரு ஸ்கூல் பக்கம் அதான் என்று நடக்க ஆரம்பித்தேன்.
 மனிதனுக்கு  ஓய்வு முக்கியம். இந்த அமைதி , அதன் தனிமை. மர நிழல்கள் நிலா வெளிச்சத்தில் இருட்டில் பயத்தை ஏற்படுத்தியது.  எங்கிருந்தாவது நாய் ஓடி வந்து குரைத்து துரத்த ஆரம்பித்தாள் என்ன செய்வது? நாய் என்றால் அப்படியொரு பயம். இப்போது மாநகராட்சி தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பு மருந்து போடுவதாக படித்தது நினைவுக்கு வந்தது. பூனை கடித்தால் கூட ரேபீஸ் வருமாம். சமீபத்தில் அனுப்பனடியில் ஒருவரை பூனைக்கடித்து அதை சரியாக கவனிக்காமல் விட ரேபீஸ் வந்து இறந்தது நினைவுக்கு வந்தது. எங்கிருந்தோ பூனை கத்த தொடங்கியது. நான் எதிர் பார்த்த படி தெருநாய் படுத்திருந்தது. சலனம் இன்றி அமைதியாக கிடந்தது. அப்படியே நின்று விட்டேன். அடியெடுத்து வைக்க அச்சம். இருந்தாலும் ஒருவழியாக மனதில் தைரியத்தை வரவழைத்து நடக்கலாம் என்று நினைத்த போது, எதிரில் மோட்டார் வாகனம் நாயை உரசியப்படி கடந்தது. நாய் எந்த ஓசையும் எழுப்ப வில்லை. அப்படியே மலையை போல அமைதியாக சரிந்து கிடந்தது. நடந்தேன். எங்கும் குரைத்து குரலை தொடர்ந்து எழுப்பும் இந்த நாய்களுக்கு என்னவாயிற்று. வேகமாக வந்த ஆட்டோவுக்கு வழி விட ஒதுங்கிய போது , கம்பவுண்டு சுவற்றின் அருகில் இருந்து பொஸ் பொஸ் என மூச்சு வாங்கும் நாய் சத்தம் கேட்டது. அந்த இரவில் தூரத்தில் இருந்த வீட்டின் உள்ளே வாட்ச் மேன் கொசு பேட்டை வைத்துக் கொண்டு ஸ்டெபி கிராபி போல கொசுக்களை பந்தாடிக்கொண்டு இருந்தார். டுப், டிப் என சப்தம் பெட்டுல்பொட்டாசு போல காதில் விழுந்ததும். மனம் ஏங்கியது யாராவது துணைக்கு வர மாட்டார்களா?


மீண்டும் நாய். தெருவில் கிராஸ் செய்தது. நான் நடையை தளர்த்தினேன். ஏஆர் மருத்துவமனை. இந்த நாயும் என்னை பார்க்காதது போல கடந்து சென்றது. எங்காவது நாய் குரைக்கும் சத்தம் கேட்காதா என மனம் ஏங்க ஆரம்பித்தது. தூரத்தில் மெதுவாக் ஜீப் வந்தது. அட இந்த இரவிலும் நிதானமாக ஜீப் ஓட்டுகிறார்களே என்று நினைக்க தோன்றியது. அருகில் வந்த போது தான் அது காவல் வாகனம் என்பதை அறிந்து என் மடமையை நினைத்து நெந்து கொண்டேன். பால் வண்டி கடந்து சென்றது. எம்.ஐடியில் காய்கறிகளை வைத்து கடந்து சென்றது. வேகமாக நடக்க தொடங்கினேன். தெருவில் நாய்கள் அங்காங்கே… ஆனால் எந்த ஓசையும் எழுப்ப வில்லை. என்னை கடிக்கவும் வரவில்லை. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னின. கடலில் மீன்கள் துள்ளிவிடுவது போல காட்சி அளித்தது. கடல் என்றவுடன் கச்சத்தீவு நினைவுக்கு வருகிறது. கச்சத்தீவுக்கு செல்ல வழங்கப்பட்ட உரிமை யை, மீன்பிடிக்க வழங்கப்பட்ட உரிமையாக கருதக்கூடாது என்ற மத்திய அரசின் அறிக்கை நினைவுக்கு வந்து , இருப்பினும் இருளை கடந்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தேன். சேவல் கூவும் சத்தம் கேட்டது. சரி நாம் நகரை விட்டு கிராமத்திற்கு வந்து விட்டோம். இப்போதாவது நாய் குரைக்குமா? என உன்னிப்பாக கேட்டேன். நாய்கள் மனிதருடன் பழகி பழகி குரைப்பதை நிறுத்தி விட்டன. எந்த நாயும் கடிக்கவும் இல்லை. குரைக்கவும் கூட இல்லை. வீட்டை அடைந்தேன். 10 கிலோ மீட்டர் நடந்த நடையில் என் செருப்பு காலை கடித்திருந்தது. வலிக்க ஆரம்பித்தது. 

Thursday, September 5, 2013

மார்க் போடு ...! அப்புறம் போன் போடு...!


அட எவ்வளவு நாட்கள் தான்  இவர்கள் நமக்கு மார்க் போடுவது ? நாமும் இவர்களுக்கு மார்க் போடும் நாள் வந்து விட்டது. அட இன்னைக்கு தான் ஆசிரியர் தினம். நீங்கள் படித்த ஆசிரியருக்கு மார்க் போட வேண்டாமா? அல்லது அவர் சிறந்த அல்லது நல் ஆசிரியரா என நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டாமா? பேனாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கீழ் கண்ட வினாக்களை படியுங்கள்.

    1.   என் ஆசிரியர் தினமும் சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்பார்.
    2.   தினமும் கதைகள் கூறுவார்.
    3.   கடிந்து பேசியதில்லை. எப்போதாவது கடிந்து பேசி நாங்கள்                 அழுதோமென்றால் , அதற்காக கண் கலங்குவார்.
    4.    தன் வகுப்பறையில் பிரம்பு வைத்திருக்க மாட்டார்.
    5.   வகுப்பறையில் எங்களை விளையாட வைப்பார். சில சமயம்             மைதானத்திற்கு அழைத்து சென்று விளையாட வைப்பார்.                 எங்களுடன்    விளையாடுவார்.
     6.   அவர் வாராத நாட்கள் நகர்வது சிரமம்.  கடினமானதாகவே அந்நாளை     உணர்கிறோம்.
     7.   வகுப்பறையில் கற்பித்தல் உபகரணம் இன்றி பாடம் நடத்தியதில்லை.
     8.   களப்பயணம் அழைத்து செல்லும் போது எங்களை விட்டு அவர்           விலகியதும் இல்லை. நாங்கள் அவரை விட்டு விலகி சென்றதும்         இல்லை.
     9.   பிற ஆசிரியர்கள் அடித்தால் , காரணம் தெரிந்து அந்த ஆசிரியரிடம்       உங்களுக்கு ஆதரவாக பேசி, அடிக்க வேண்டாம் என எடுத்து             கூறுவார்.
     10. மாணவர்கள் உடல்நலக்குறைவால் விடுப்பு எடுத்தால், வீட்டிற்கு          வந்து நலம் விசாரித்து செல்வார்.
     11. வகுப்பில் உள்ள ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வார்.
     12. பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார். தலைமையாசிரியர்      தவறான முடிவு எடுத்திருந்தால்,அத்தவற்றை சுட்டிக்காட்டுவார்.
     13. பாட குறிப்பேடுகளை அன்றே திருத்தம் செய்து தருவார். அன்றைய        வீட்டுப்பாடத்தை அன்றே கையொப்பமிட்டு தருவார்.
    14.  2,4 கோடு நோட்டுக்களில் தானே எழுதி தருவார். எழுத்தை திருத்தம்     செய்ய அறிவுரை கூறுவார்.
    15.  எங்கள் பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் அவரை பிடிக்கும் .
    16. வகுப்பறையில் செல் போன் பேசியதில்லை. அல்லது செல்போன்         பள்ளிக்கு கொண்டு வர மாட்டார்.
   17. மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யாவிட்டால், துரத்தி துரத்தி பிரம்பால்     அடிக்கமாட்டார். முட்டிப் போட்டு வகுப்புக்கு வெளியில் வீட்டுப்பாடம்     செய்ய சொல்ல மாட்டார்.
    18. மாதம் இருமுறை பெற்றோர்களை அழைத்து பேசுவார். மாணவர்         முன்னேற்றத்திற்கு பாடுபடுவார்.
    19. இவர் வகுப்பு எடுப்பதை எல்லா மாணவர்களும் விரும்புவர்.
  20.கரும்பலகையில் எங்களை எழுதுவற்கு அனுமதிப்பார். ஆனால்,           கேள்வி பதில் போன்றவற்றை அவரே எழுதிப்போட்டு சொல்லிக்         கொடுப்பார்.

சரி தாயாராகுங்கள் ! இதில் எத்தனை சரி என பார்க்கவும். 15க்கு மேல் வாங்கினால் உண்மையில் அவர் சிறந்த ஆசிரியர்.ஆசிரிய பணியை நேசிப்பவர்.  10-15 மார்க் வாங்கினால் சுமாரான ஆசிரியர். 5- 10 மதிப்பெண் எடுத்தால் பித்தமில்லாமல் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர். 0-5 உண்மையிலே ஆசிரியராக வேலைப்பார்க்க தகுதியற்றவரிடம் படித்துள்ளோம் .
மார்க் போட்டால் மட்டும் போதாது, போனும் போடணும் சிறந்த ஆசிரியருக்கு !

எல்லா ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துக்கள்..  

Tuesday, September 3, 2013

தலைவா ....ஒரு கலாச்சார சீரழிவு...!

     எங்கே இருக்கிறோம் நாம் ! பல்லாயிரம் ஆண்டுகள் குடும்பங்களாக வாழ்ந்த  நம் வாழ்க்கை, வாழ்வை இயக்கிய சமயம் , அதனை தொடர்ந்து நாம் பேசிய மொழி ,  மொழி வாயிலாக நாம் பரிமாறிய மரபு , அதன் தொடர்ச்சியால் உருவான பண்பாடு என அனைத்தையும் நாம் மறந்து வாழ்கிறோம். நவீன உலக உருவாக்கத்தில் நாம் நாத்திகனாக மாறி , கடவுளை சபித்து, அல்லது அறிவியலில் பெயரால் மதத்தை மறுத்து பேசி , அடையாளத்தை மாற்றி , அழிந்து கொண்டிருக்கிறோம். அதற்காக நான் மதவாதத்தை ஆதரிப்பவன் என்று நீங்கள் நம்பினால் , அந்த புள்ளியில் இருந்து நான் விலகி சென்று விட நேரிடும்.

    இந்த மண்ணின் வாசனையை நாம் மறந்து திரிகிறோம். நாடு கடந்து பொருள் சேர்க்கிறோம். இருப்பினும் இருப்பை விட்டு விட முடியாமல் தவிக்கிறோம். இந்த தவிப்பிற்கும் பிரிதலுக்கும் நடுவில் நம் மண்ணின் மரபுகள் இன்று புதைய தொடங்கியுள்ளன. பல ஊர் திருவிழாக்கள் நம் மரபின் வெளிப்பாடாக, பண்பாட்டின் எச்சமாக இருந்தன. அவைகள் இன்று அருகிவிட்டன். சுருங்கிய குறிகள் ,  கலவிக்கு ஏற்றதல்ல. தனிக்குடும்பங்களாய் சுருங்கி விட்ட பின் , திருவிழாக்கள் அதனைத் தொடர்ந்த கொண்டாட்டங்கள் குறைந்து விட்டன. நாம் நம் மரபுகளையும் , பண்புகளையும் மறந்து, காசுக்காக உறவுகளை துறந்து வாழ்கிறோம். நம் ஊர் தெருக்களில் திரிந்தாலும் களைப்புடன் ஒடுங்கிப்போகிறோம். இயந்திர வாழ்க்கையில் நாம் நம் அடையாளத்தை துரந்து, நம் பழமையை இழந்து , எதையோ தேடுவதாக கருதி நம்மை நாமே புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

       இன்று அகராதியில் புதிய வார்த்தைகளை தேடிச் செல்ல வேண்டிய நிலையுள்ளது. தமிழில் தெருக்களில் சிறார்கள் பேசும் மொழியை ஆய்வு செய்து பாருங்கள் . அத்தனையும் அபத்தங்கள். மொழிக்கான களங்கம். அதற்கான அர்த்தத்தை தேடி சென்றால் நமக்கு அவமானம் தான் மிஞ்சுகிறது. இதனை எந்த வகை நவீனத்தில் சேர்ப்பது. தயவு செய்து உங்கள் குடும்ப சிறுவர்கள் நூற்றில் எத்தனை பேர் நூறு வார்த்தைகளில் எத்தனையான இவ்வகை அபத்த வார்த்தைகளை பேசுகிறார்கள் என்று ஆய்வு செய்யுங்கள் . அப்போது தான் என் ஆதங்கம் புரிய வரும்.

      “அடுத்தவன் ஆட்டோவுக்கு ஆயுத பூஜை போடதடா” போன்ற இரட்டை அர்த்த படங்கள் நமக்கு எந்த வகையான மொழிச்சார்ந்த அறிவைத் தேடித்தரும்? கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்கும்? இப்படிப்பட்ட அபத்த வசனங்கள் நிறைந்த படங்கள் வெளிவரவில்லையே என உயிரை மாய்க்கும் இளசுகளை என்ன வென்று சொல்வது!  அதை விட அதற்கு அப்படத்தின் கதா நாயகன் எதுவும் வருத்தம் தெரிவிக்க வில்லையே என குரல் கொடுக்கும் கூட்டம்  தனி. நாம் எந்த பாதையை தேர்ந்தெடுத்து வாழ்கிறோம். புரியவில்லை. ஆனால், இச்செயல் குறித்து அப்படத்தின் கதாநயகனின் மொளனம் எனக்கு பிடித்திருக்கிறது. இவ்விசயத்தில் அப்படித்தான் நடக்க வேண்டும் . அவரின் எந்த ஆதங்கமும் மற்றவனுக்கு தூண்டுகோலாக இருந்து விடக்கூடாது. சபாஷ் சொல்ல தோன்றுகிறது. படத்தில் தலைவனோ என்னவோ தெரியாது . நிஜ வாழ்வில் தலைவனாகி போனான்.

     கூட்டுக்குடும்ப வாழ்வை நாம் இழந்த நாளிலே , நம் மரபும் நம் தொப்புள் கொடிப்போல அறுந்து விட்டது. நாம் நம் பெற்றோர்களை முதியோர் இல்லங்களை தேடிப்பிடித்து அமர செய்த அன்றே,  பால் குடியை நிறுத்தியது போல நம் பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி, சத்து இழந்த சமூக அமைப்பை உருவாக்கி விட்டோம். இதன் தொடர்ச்சி கலவரம், வன்முறை,  கொலை, கொள்ளை, கற்பழிப்பு என  நீள்கிறது.
(தோ.ப வுடன் நான்... பண்பாட்டு அசைவுகள் நூலுக்கு சொந்தக்காரர்)

     இன்று இரவு 9.30 வாக்கில் அய்யர் பங்களா சந்திப்பில் ஒரு எஸ்.ஐயை இருவர்  போதையில் போட்டு துவைத்து விட்டனர். பின் அருகில் இருந்த கடைக்காரர்கள் ஓடி வந்து அதனை தடுத்து நிறுத்தினர். எதுவுமே செய்யாமல், அவர்களுடன் வந்த ஒரு மாணவனை பொது மக்கள் மடக்கி பிடிக்க, அவனை போலீஸ் (வந்து) மனிதாபிமானம் இன்றி நடுரோட்டில் பொது மக்கள் மத்தியில் துவைக்க தொடங்கினர். என்ன அபத்தம் ! அவன் சாட்சி மட்டுமே. அவனை வைத்து பிறரை பிடிக்கலாம். அதற்காக பிறருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக எல்லோரும் வந்து வதைப்பது எந்த நாகரீகமான செயல் புரிய வில்லை. பொது மக்களில் ஒருவர் என்ன பிரச்சனை என மாட்டியவனிடம் கேட்க , போலீஸ் காரர் சாதிய சொல்லி வஞ்சான் அதனால் சண்டை ஏற்பட்டதாம்.

      அட என்னத்த சொல்ல.. மனம் நொருங்கி வெளியேறினேன். இருப்பினும் என்னால் பிறரைப்போல இயங்க முடியவில்லை. யாரைச்சாடுவது. எதைச்சாடுவது. பண்புகளும் பாசங்களும் இன்றி தவிக்கும் தமிழ் சமூகத்தில் சாராய ஆறு ஓடி , சீரழிக்கிறது. எதையாவது மறக்க நாமும் சாக்கடையில் மூழ்குவோம் என்றால் , அந்த கன்றாவி குடி பழக்கமும் கிடையாது.

       வேலியே பயிரை மேய்கிறது. அதே நேரத்தில் பயிர்கள் சாதியப் பெயரால் வேலிகளையே தின்று வளர துடிப்பதையும் என்னால் சகிக்க முடியவில்லை. இதற்கெல்லாம் நம்மிடம் பெரியவர்கள் இல்லாமல் இருப்பது மட்டுமே காரணமாக தெரிகிறது.  நகர வாழ்வின் நெருக்கடியில் என்னை இழந்து கரைந்து வீடு அடைந்த போது தூக்கமின்றி , சமூகத்தின் அவலைத்தை சிந்தித்து நித்தம் மடிகிறேன் தூக்கம் இழந்து !இந்த புலம்பல் மூலம் பாரத்தை இறக்கி வைத்த பெரு அமைதியில் கண்களை மூடி சாகிறேன். விடியல் நல்லதை தரட்டும். நல்ல பண்பாட்டை உருவாக்கட்டும்.     

Monday, September 2, 2013

கன்னத்தில் முத்தமிட்டாள்...!பதிவர் சந்திப்பில் நிகழ்ந்தவை.

தூறல் போட ஆரம்பித்து  இருந்தது. இந்த தூறல் நோற்றோ தொடங்கியது. இது எப்படியும் வலுத்துவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போது அது சோவ் என்று கொட்ட தொடங்கியது . அட நனைந்து போய் விட்டேன். வெகு நாள் ஆகிவிட்டதல்லவா..! யாருக்கு தான் ஆசையிருக்காது.  அதுவும் அன்பு மழையில் நனைவதற்கு.  நல்ல சகுணம் பார்த்து நெட்டை திறந்து, இரயிலுக்கு முன்  பதிவு செய்து, என்னை அன்புடன் அழைத்து சென்ற தமிழ்வாசி மழைக்கான இடி முழக்கம்.


இரயில் திண்டுக்கலை தொட்டதும் மின்னியது தனப்பாலாய்.. ஹாய் என சிரித்த முகத்தோடு வாழ்த்துக்கள் தெரிவித்து தூற ஆரம்பித்தது. கோணங்கியின் மதினிமார் கதைகள் அசைப்போட்ட படி , பல மதினிமார்களை நோட்டமிட்டு நகர்ந்தது இரயில் . இரவு பணியின் அயர்ச்சியில் உறங்க துடித்த தழிழ்வாசியின் கண்களை அயரச்செய்யாமல் தொடர்ந்து அலறிய அலைப்பேசியில் பட்டிக்காட்டான், ஸ்கூல் பையன், நாய்நக்ஸ் என அரட்டையுடன் வலுத்த மழை மதியம் எங்களை நனைத்தது.

சங்கவி, ராஜா, அட ஏகப்பட்ட சரவணங்க பாஸ்.. இப்படி அன்புமழையில் நனைந்த போது, அட சங்கவி புத்தகம் வெளியிட அகநாழி வாசு கடைக்கு செல்ல முற்பட என் மனசு மணிஜி வாசுவை நோக்கி பயணப்பட்டது. மதுமிதா எனக்கு ஸ்கூல் பையனை நியமித்து அவரை சைதாப்பேட்டையில் வாசு கடையில் விட சொல்ல... கே ஆர் பி செந்தில் அட நான் அங்கு தான் செல்கிறேன் வாருங்கள் என ஸ்கூல் பையனை இந்த ஆசிரியருக்கு உதவ வேண்ட , அவர்களை பின் தொடர்ந்தோம். ஸ்கூல் பையனும் தலைமையாசிரியர் என்று தெரிந்தவுடன் மிகவும் பணிவுடன் நடக்க தொடங்கினார். ( ஆசிரியர் என்று தெரிந்து தான் ஸ்கூல் பையனை எனக்கு உதவிக்கு அனுப்பினாரோ...!)  அன்பு மழையில் அவரின் வாகனம் பறந்தது.

பாலங்கள் தன் பாடியை காட்டி ஆங்காங்கு இன்னும் முழுமையாக முடிக்காப்படாமல் அவதிக் கொடுக்க ... நெருக்கம் நிறைந்த சென்னை சந்துகளை கடந்தோம்.  மோகன் குமாரின் புத்தகம் வெளியிட , ஜாக்கி சேகர்,கேபிள் சங்கர், மணி ஜி, சரவணக்குமார், வாமுகோமு, அதிஷா , பத்மா, தாமோதர் சந்துரு, வால்பையன்  என அன்பு நெஞ்சங்கள் குழுமியிருக்க... வாசு ஒரு படி மேலே போய் இந்த நிகழ்வுக்கு மதுரை சரவணன் வந்தது பெருமையாக இருக்கிறது என அன்பை கொட்டி பொருமழையில் நனைய வைத்தார்.

மறுநாள் சொல்ல தேவையில்லை அத்தனை பதிவுகள் இரண்டு நாளில் படித்திருப்பீர்கள். அது என்னப்பா ஒரு குடும்பமே பதிவு எழுதுகிறார்கள் என ஆச்சரியப்படுத்தினார்கள் டெல்லியிலிருந்து வந்து. ...! அப்போது என் மனைவி , மக்கள் கண் முன் வந்து மறைந்தார்கள். அந்த வகையில் எனக்கு எப்போதும் என் இரண்டு மச்சினன்களும் எழுத ஆதரவு அளிப்பது எனக்கு என் பணிக்கு வலு சேர்க்க உதவுவதை இத்தருணத்தில் நினைத்துப் பார்த்தேன். தருமி என் ஆசான் வழிக்காட்டி. என் போன்ற மாணவர்களுக்கு தோழன் எது சரி எது தவறு என்பதை தட்டி கேட்பவர், தட்டிக் கொடுத்து வேலை வாங்குபவர். தன்க்கு தெரிந்த விசயத்தை பற்றி மட்டும் எழுதி என்றும் அனைவர் மனதில் நிற்பவர். இன்றும் பாடம் கற்றுத்தருபவர். ஆம். தெரிந்ததை மட்டும் எழுது. ஆம் ... கல்வி . அது சார்பாக எழுதும்போது வரும் வரவேற்பு தனித்தான். பத்மா மேடம் என் வாசகர் என தன்னை என்னிடம் அறிமுகப்படுத்தியது நான் தொடர்ந்து எழுத கொடுத்த டானிக்காகவே கருதுகிறேன்.

அட என்ன மனிசனப்பா.. இந்த பாமரன் என்ன பேச்சு.. அட தம்பியை பற்றி சொல்லி எங்களையும் கண்ணீர் விட செய்தார். சிரிக்க செய்தார். சிந்திக்க செய்தார். ஒரு திரைப்படத்தை பார்த்த ஒரு திருப்தி. நிஜமான எழுத்துக்கள் தான் வெற்றிப்பெறும் என்பதற்கு அவரே சாட்சி.

90 டிகிரி மனதை நொருக்கியது. என்னைப் போன்றா ஆசானின் மனங்களில் ஒலித்துக் கொண்டிருந்க்கிறது.

அட சென்னை ... கடைசியில் போடா வெண்ணை என்று சொல்லியது. அந்த வட பழனி பஸ் ஸ்டாப் அடைந்த போது.. ஒரு ஆண் மகன். ஒரு பெண் அதுவும் குண்டு பெண். அவளை இவன் டிராப் செய்கிறான். ( அப்படி தான் அர்த்தம் கொள்ள வேண்டும்) அவள் அவன் கைகளை பற்றுகிறாள். அவன் சரி போய் வருகிறேன் என்கிறான். ஹெல்மெட் அணிந்திருந்தான். தலையில் அப்படியே இருந்தது. அவள் அவன் கைகளை முத்தமிடுகிறாள். கண்களில் பிரிவின் வலி தெரிகிறது. கூடியிருந்த மக்கள் எவரும் கண்டு கொள்ள வில்லை. என் வயிற்று எரிச்சல் மட்டும் தொடருகிறது. பக்கத்தில் தமிழ்வாசி வாசிக்க முடியாமல் திசையை திருப்புகிறார். அவள் இன்னும் கைகளை பிடித்து கொஞ்சம் நேரம் இருந்து விட்டு போ என்கிறாள். அவன் எதோ சொல்ல. அவள் அப்படியே அணைக்கிறாள் . மார்பு முட்டி (ஹக் செய்தல்) அவனை கன்னத்தில் முத்தமிடுகிறாள். அருகில் இருக்கும் போலீசும் இதை கண்டு கொள்ள வில்லை. அட வயிற்று எரிச்சல்.  அவனும் இப்போது அவளை ஹக் செய்கிறான். இருவரும் ஏக்கமுடன் பிரிகிறார்கள். அவளை நான் பார்க்கிறேன். அப்போது தான் அவள் என்னைப் பார்த்தாள்..... அட போங்கப்பா....

முதல் நாள் இரவு ஒன்பது மணி மேலிருக்கும் கமலா தியேட்டரில் இருந்து ஏவிம் ஸ்டுடியோ எதிரில் உள்ள லாட்ஜ்க்கு வந்தேன். பாவம் அத்தனை நெருக்கடி... இருசக்கர வாகனம் கூட நகர முடியாத ஒரு போக்குவரத்து இடஞ்சல்.  எத்தனை ஏக்கங்களுடன் தூக்கங்களுடன் குழந்தைகளை பிரிந்து கணவன் மனைவி இருவரும் பயணிக்கிறார்கள். இவர்கள் இரவில் உறங்கி , காலை பயணத்தை தொடரும் போது காணமல் போகும் குழந்தைகளின் எதிர்காலத்தை பட்டணத்தில் தொலைத்து விடுகிறார்கள்...

அன்பு மழையில் நனைந்தாலும்.. சென்னைவாசிகள் இருப்புக்கள் குறித்து கனத்த மனதுடன் பஸ் ஏறி வந்தேன்....!