Thursday, September 1, 2016

குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளே!

சிற்றுளிகளிடம் தோற்றவன்...!
*
இன்று மதியம் குழந்தைகளுக்கு வாய்ப்பாடு எளிமையாக கற்பது குறித்து கற்று கொடுத்தேன்.
"சார் , இவ்வளவு ஈசின்னு தெரியாம போச்சு ...இப்ப 20 வரை வாய்ப்பாடு எளிமையாக தெரியுமே" என தர்ஷினி கூறினாள்.
நான் பெருமையாக , இன்னும் நிறைய விசயம் தெரியும். ஒரு நாளைக்கு ஒண்ணு தான் என்றேன்.
அருகில் இருந்த யுவராணி, நீங்க பெரிய ஆள் என்றால் நான் சொல்வதை சொல்லுங்க என்றாள்.
"ம்.. கேளு சொல்லுவேனே" என்றேன்.
ஒரு பேருந்தில் எட்டு பேர் புறப்பட்டார்கள் என நிறுத்தினாள்.
ம் கேளு என்றேன்.
நான் சொல்றதை சொல்லுங்க என்றாள். நான் அவள் சொல்வதை போன்றே கூறினேன்.
அடுத்த நிறுத்தத்தில் எட்டு பேரும் இறங்கிவிட்டார்கள். என்றாள். நானும் அதேப்போல் கூறினேன்.
இப்ப பேருந்தில் எத்தனை பேர் என கேட்டாள். இப்ப பேருந்தில் எத்தனை பேர் என்றேன். அட சொல்லுங்க சார் என அதட்டினாள்.
நான் உணர்ச்சி வயப்பட்டு , ஏன் அதட்டுற , எல்லாரும் இறங்கிட்டா பேருந்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றேன்.
சார், நீங்க சரியான முட்டாள். நான் சொல்றதை தானே சொல்ல சொன்னேன். கேள்விக்கு பதிலா கூற சொன்னேன் என்றாள். சுற்றி இருந்த அனைவரும் சிரித்தனர் .
" கல்லும் தகரும் தகரா கொல்லுலை கூடத்தினால் " என்றாள் பவித்ரா .
குழந்தைகள் மிக எளிமையாக ஆசிரியரின் கனத்தை உடைத்து விடுகிறார்கள். அதிகாரம் உடையும் போது ஜனநாயகம் பிறக்கிறது என்பதை உணர்கின்றேன். ஜனநாயக வகுப்பறையே குழந்தைகளை நம்மோடு என்றும் ஒன்றிணைக்கும்.
மதுரை சரவணன்

தாய் மொழி அறிவு அவசியம்


மொழி குழந்தைகளிடம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. குழந்தைகளின் திறமையை வளர்த்தெடுப்பதில் மொழி முக்கியப்பங்கு வகிக்கின்றது. மொழி திறன் பெற்றவர்கள் மிகவும் சிறப்பாக வகுப்பறையில் இயங்குவதை காண்கின்றேன்.
மொழித்திறன் அற்ற மாணவர்கள் தங்களின் உடல் உபாதைகளை கூட வெளிப்படுத்த சிரமப்படுகின்றார்கள். மாணவர்கள் சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் மொழி அவசியப்படுகின்றது. அதை விட வினைப்புரிவதற்கு மொழி முக்கியமாக உள்ளது.
இன்று காலை பால முருகன் என்ற மாணவனின் கன்னத்தில் நகக்கீறல் காணப்பட்டது. அவன் குற்றாலம் செல்வதாக கூறி சென்ற வாரம் வெள்ளி விடுமுறை எடுத்திருந்தான். ஆகவே , சென்ற இடத்தில் எதுவும் நடந்துவிட்டதோ? என பதறி கேட்டேன்.
“சார், குற்றால் போன்னேன்னா.. குளிச்சேன்னா.. ஏசுக்காரங்க வந்தாங்களா.. அப்ப குளிச்சேனா. ஏசுக்காரங்க என் பக்கத்தில் குளிச்சாங்க..” என இழுத்தான்.
“அப்புறம் என்னாச்சுடா” என பொறுமை இழந்த மாணவன் மணிகண்டன் கேட்டான்.
“சார்.. குளிச்சேனா.. குற்றால் மெயின் பால்ஸ்.. ஏசுக்காரங்க..சிலுவை போட்டு இருந்தாங்களா. நான் குனிச்சு குளிச்சேனா.. அவுங்க குனிஞ்சாங்களா..”
“டேய் காயம் எப்படி பட்டுச்சு.. குற்றாலம் போனா குளிக்க தாண்டா செய்வாங்க..” என்றாள் தர்ஷிக்கா.
“ஏசுக்காரங்க ... நிமிந்தாங்களா...அப்ப அந்த ...கிழிச்சிடுச்சு..”
“அந்த எது கிழிச்சிடுச்சுடா..?” திரும்பவும் மணிகண்டன் கேட்டான்.
“போடா.. சார்... நான் குளிச்சேனா..ஏசுக்காரங்க..”
“சார்.. எனக்கு புரிஞ்சு போச்சு..சார் இவன் குளிச்சப்பா பக்கத்தில் இருந்தவரின் சிலுவை கீறி விட்டு கன்னத்தில் காயம் உண்டாச்சு சார்....”என்றான் ஆதீஸ்வரன்.
“ஆமாம் ” என்றான் பாலமுருகன்.
தாய்மொழியில் பேசுவதற்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் திணறுகின்றார்கள். இதற்கு போதிய பயிற்சி இன்மை காரணம் என கூறலாம். அவனை குறித்த கேஸ் ஹிஸ்ட்டரியில் அம்மாணவன் இரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் பயின்றவன் என அறிய வந்தேன்.
தாய்மொழி முக்கியம் . அது மட்டுமல்ல. அந்த மொழியினை திறம்பட பயன்படுத்த ஆசிரியர்கள் போதிய பயிற்சி தர வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் கீரிடத்தை கழட்டி வைத்து பேசுவதற்கு அனுமதி தர வேண்டும்.
மாணவர்களோடு மாணவர்களாக இருக்கும் போது மொழி தங்கு தடையின்றி வெளிவரும் . பயம் போக்க வேண்டும். பயம் தாய்மொழியை கூட பேச அனுமதிப்பதில்லை. தடுமாறச்செய்து விடும்.
மொழியின் பயன்பாடு, செயல்பாடு குறித்து ஆசிரியர்கள் சிந்தித்தல் நலம் . அதற்கான பயிற்சியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
மதுரை சரவணன்.

அப்பா கிட்ட பேசி இருக்கீய்யா? கொஞ்சம் யோசிங்க!




*
சமூக அறிவியல் பாடம் நடத்தும் முன் வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்கள் குறித்து கூறுவது வழக்கம். இன்று மகாத்மா ஜோதிராவ் புலே குறித்து தெரிந்து கொள்வோம் என்றேன்.
மகாத்மா ன்னா காந்தி தானே ? என கேட்டாள், யுவராணி.
காலையிலே இன்று யாரை பற்றி கூற போகின்றீர்கள் என விசாரித்து , புலே பற்றி புத்தகத்தில் வாசித்திருந்த யோகேஷ் , " அவரு சுதந்திரம் வாங்கி தந்த்தால் மகாத்மா , இவர் இந்தியாவில் சமூக புரட்சி செய்ததால் மகாத்மா என்று கூறினான்.
புலே திருமண நிகழ்வில் கீழ்சாதி என விரட்டபட்ட பின்பு, ஏகத்துக்கும் புத்தகம் வாசித்தார். தாமஸ் பெய்னின் மனித உரிமை நூல் , அவரை ஈர்த்தது. அதில் சொல்லப்பட்டிருந்த விசயம் சார்ந்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தார். அடிமைத்தனம் என்ற புத்தகத்தை எழுதினார். அந்நூலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து எழுதினார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிக்கு கல்வி அவசியம் என எடுத்துரைத்தார். மனைவி சாவித்திரிபாய் வுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட , இல்லை , அன்று ஒட்டு மொத்த இந்திய பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார். உயர் சாதி மக்கள் கலவரம் செய்தார்கள். கல் எறிந்தார்கள் . அவரது தந்தை இவர்களின் தாக்குதலுக்கு பயந்து அவர்களை வீட்டை விட்டு துரத்தினார்.
" தற்போதைய சமுக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரை சார்ந்திருத்தல், கல்லாமை, அறியாமை, ஏழமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அப்போது தான் தாழ்த்தப்பட்டவர்கள் சுரண்டப்படிவதை தடுக்க முடியும். மூட நம்பிக்கை ஒழிப்பே சமூக_பொருளாதார மாற்றங்களுக்கு வழிகோலும் " என்ற ஜோதிராவ் புலே வரிகள் இன்றும் பொருத்தமாக உள்ளதை குறித்து சிந்தியுங்கள் என முடித்தேன்.
" சார்,
உண்மையிலேயே ஜோதிராவ் புலே அப்பா, அவரை வீட்டை விட்டு துரத்திட்டாங்களா? " என கேட்டாள் அம்மு.
ஆமாம். உயர்சாதியினர் கெடுபிடி. இதை பத்தி இப்ப புரியாது. வளர வளர நிறைய புத்தகம் வாசிக்க தெரிஞ்சுக்குவீங்க.இப்ப சார் ஒரு விசயம் கேட்பேன் , சொல்லுவீங்களா ? "
" சார், கேளுங்க சொல்றோம்"
"நீங்க உங்க அப்பா கிட்ட பேசி இருக்கீங்களா?"
அனைவரும் ம் என ஒரு குரலில் கத்தினர்.
" ஒவ்வொருத்தரா சொல்லணும் . கடைசியா, உங்க அப்பகிட்ட பேசியது குறித்து சொல்லுங்க "
சார், சார் என கையை உயர்த்த ...ஆதீஷ்வரன் என்றேன்.
" எங்க அப்பா எப்பவும் நைட் ரொட்டி தருவாரா? நேத்து அவரு ரொட்டி வாங்கிட்டு வரலை.. எங்க அம்மா எங்க அப்பா கிட்ட கேட்க சொன்னாங்களா...அப்ப எங்கப்பாட்ட போய்யீ..அப்பா அப்பா இன்னைக்கு ரொட்டி வாங்கலைய்யான்னு சொன்னேன். எங்கப்பா நாளைக்கு வாங்கி தர்றேன்னு சொன்னார்..."
" டேய் சார் கிட்ட ஜாலியா பேசுற மாதிரி ... பேசி இருக்கீய்யா...? "
" ம்...ஒரு தடவை எங்க பாப்பா வேகமாக ஒடி வர்றேன்னு கீழே விழுந்துட்டா.. எங்கப்பா அழுதுகிட்டே வந்த அவள பார்த்து போ கழுதை போ ..போ ன்னு சொன்னார்..இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்.. அவ வந்தா போ கழுதை என்று சிரிப்போம் " என்றான்.
சரி வேறு யாராவது ...பெண் குழந்தை என்றவுடன் தர்ஷினி சொல்ல ஆரம்பித்தாள்.
" கடைசியா ஞாயித்து கிழமை பேசினேன். ? "
" நேத்து பேசலைய்யா? "
" இல்லை சார., எங்கப்ப்பா வாரத்துக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவாங்க..? அதான் . "
" என்ன பேசின..? " என கேட்டான் ஆதிகர்ணன்.
" அப்பா , அப்பா டெய்லி உங்கள் பார்க்கணும்.ஊர்க்கு போயி வேலை பார்க்காம இங்கய்யே வந்துடுங்கன்னு சொன்னேன் " என்றாள்.
" வெளியூரில் என்ன வேலை பார்கிறார். எந்த ஊர்? " என கேட்டேன்.
" எந்த ஊர்ன்னு தெரியலை...ஊர் ஊர் போய் மிக்சர், பக்கோடா வித்துட்டு வருவார்ன்னு அம்மா சொன்னாங்க "
" சரி உங்க அம்மாட்ட பேசுவய்யா ? " என கேட்க,
உதடுகளை பிதுக்கி இல்லை என்றாள்.
ஏன் ?
" எங்கம்மா வேலைக்கு போறாங்க..்சாய்ங்காலம் வந்தா , எங்க தாத்தா வை பார்க்க பக்கத்தில் போய்டுவாங்க..தூங்கின உடனே தான் வருவாங்க.."
" அப்ப நைட் சாப்பாடு..."
" பக்கத்தில் ஒரு அத்தை கவனிச்சுக்குவாங்க.."
அவுங்க கிட்ட பேசுவய்யா?
" ம்..."
என்ன பேசுவ...?
" அவுங்க குட்டி பார்ப்பாவை சாய்ங்காலம் நான் தான் பார்த்து கொள்வேன். அவ பண்ற சேட்டையை சொல்வேன் .சிரிப்பாங்க "
" யாராவது பள்ளியில் நடக்கிற விசயங்களை பேசுவிங்களா? "
அனைவரும் அமைதியாக புரியாத வாறு இருந்தனர்.
" டேய்..உன் பரண்டு அடிச்சது...சார் திட்டினது இல்லை பாராட்டினது... நம்ம ஆத்துக்கு போனது...உங்க வீட்டு பக்கம் என்ன மண்ணு இருக்கு என்ன செடி வளருது...சொன்னது ..ஜாலியா சினிமா பத்தி " என விளக்கினேன்.
" அது வந்து சார்... "
சினிமா என்றதும் ஆதிகர்ணன் வேகமாக,
" சார், நேத்து நான் ...புட்டு வேணும்ன்னு எங்க அம்மா கிட்ட கேட்டேன். அப்ப ..எங்ம்மா உங்கப்பா கிட்ட கேளுன்னு சொன்னாங்க..நான் உடனே ..அம்பிகா தியேட்டர் போய் ...எங்கப்பா கிட்ட காசு கேட்டேன். உடனே கொடுத்துட்டார் . " என்றான்.
அவனின் அப்பா அம்பிகா தியேட்டரில் வேலை பார்க்கிறார்.
என் அருகில் இருந்த அன்புக்குரியவனை நீ அப்பா கிட்ட எப்ப பேசின...? என கேட்டேன்.
" சார், கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க பாப்பா ஓடி வர்றேன்னு கீழே விழுந்துடுச்சு, பக்கத்துல இருந்த சாக்கடையில் விழுந்து டிரஸ் அழுக்காகிடுச்சு...எங்கப்பா நல்ல குழந்தைகள் கிட்ட சேர்ந்தா நிதானமா வருவ என சொன்னாரு...எங்கம்மா அதுக்கு இங்க நான் ஒருத்தி துவைக்கிறதுக்கு இருக்கேன்ல ன்னு சொன்னாங்க... எங்கப்பா சிரிச்சுகிட்டு ...தோய்க்க தானே இருக்க நீன்னு சொன்னாரு.....அதுக்கப்புறம் ஜெயிலுக்கு போயிட்டார்..."
இப்படி ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடம் தேவைகளை கேட்பதையும், பெற்றோர்களிடம் திட்டு வாங்குவதையும் பேசுவதாக கூறினார்கள்.
தமிழ் வழி கல்வி குழந்தைகள் மட்டும் அல்ல . அனேகமான குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் நல்லது கெட்டதுகளை பகிர்ந்து கொள்வதில்லை் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் நல்லா படி , அதை செய்கிறேன் என்ற கண்டிசன் உடனே குழந்தைகளுடன் பொழுது கழிப்பதாக உணர்கின்றேன்.
கல்வி கொள்கை உருவாக்குபவர்கள் இதை எல்லாம் கணக்கில் கொள்வதில்லை. எந்த சிலபஸ்சிலும் இவர்களின் சிக்கல் குறித்து பேசப்படுவதில்லை. ஆனால் , எதை பத்தியும் கவலை கொள்ளாமல் மாணவர் நலம் பற்றியும் யோசிக்காத புதிய கல்வி கொள்கை குறித்து விவாதித்து தெளிவு பெற வேண்டும்.
மதுரை சரவணன்