Saturday, March 23, 2013

அப்பாவ எனக்கு பிடிக்காது..!


இரண்டு நாட்களுக்கு முன் குழந்தைகளை ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அலுவல் வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு  வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப்பில் தெரிந்த முகம் கொண்டவர் போல இருந்த நபர் கை காட்டி லிப்ட் கேட்கவே , அந்த அவசரத்திலும் நான் வண்டியை நிறுத்தினேன். அதற்குள் லிப்ட் கேட்ட நபர் ஓடி வந்தார். நான் நினைத்த மாதிரி அருகில் வந்த போது அவர் தெரிந்த முகமாயில்லை. அருகில் வந்தவர்(மிகவும் இளைமையாக இருந்தான்) , தனக்கு உடம்புக்கு முடியவில்லை என்றும் அடுத்த ஸ்டாப் ஆத்திக்குளம் போலீஸ் பீட் அருகில் நிறுத்தினால் புண்ணியமாக போகும் எனவும்  கெஞ்சவே , நானும் யோசிக்க ஆரம்பித்தேன்.

அதுவரையிலும் எனக்கு தெரியாமல் வைத்திருந்த சிக்ரெட் துண்டை என்னிடம் காட்டி , சாரி சார், என தூக்கி கீழே போட்டான். சரி உட்காருங்கள் என பின் இருக்கையில் அமர வைத்தேன். வண்டி நகரத்தொடங்கியது. சாராயவாடை அடிக்கவே , தண்ணி அடிச்சிருக்கியா? என்றேன். லைட்டா சார். உடம்புக்கு என்ன செய்யுது? அப்புறம் தண்ணி அடிச்சிருக்க? தண்ணி அடிச்சதுனால தான் சார் பிரச்சனையே. ஆனாலும் நிறுத்த முடியல. எனக்கு லிவர் வீக்கம் இருக்கு . சலம் வச்சுருக்காம் என குண்டை தூக்கி போட்டான். உனக்கு வயசு என்ன? இருபத்து ஐந்து. லிவர் கெட்டு போச்சுன்னு சொல்லுற அப்புறம் இப்படி குடிக்கலாமா? இல்ல சார் ரெம்ப முடியாம செத்து பொழச்சேன் போன வருசம்.நடுவில சுத்தமா  குடிக்கிறத நிப்பாட்டிட்டேன். போன மாசம் போல ஐயப்பனுக்கு மாலை போட்டேன் . உடம்பு நல்ல இருக்கிற மாதிரி தெரிஞ்சுச்சு…. அதுனால லைட்டா தண்ணி அடிச்சேன்..அது நாலு அஞ்சு நாள தொடரவே வயிறு வலிச்சு ஆஸ்பத்திரியில சேர்ந்தேன். திரும்ப லிவர் கெட்டு போச்சுன்னு சொல்லி ஆஸ்பத்திரியில தங்க வச்சுட்டாங்க.. நேத்து தான் ஆஸ்பத்திரியில இருந்து வந்தேன். நடக்க முடியல.. அதான் லிப்ட் கேட்டேன் என்றான். என்ன வேலை செய்ற? தச்சு வேலை. பில்டிங்குக்கு கதவு, ஜன்னல் செய்து மாட்டிற வேலை. நல்ல வருமானத்தை சேத்து வைக்கலாமே .. ஏன் குடிக்குற? பாழா போன குடியை நிறுத்த முடியல… சார் ....இங்க தான் நிறுத்துங்க என இறங்கிக் கொண்டான்.

வீட்டிற்கு வந்தேன். அனைவரும் கோவில் செல்ல தயாரக இருந்தனர்.  லிப்ட் கேட்டவன் இளம் வயதில் சாராயம் அடித்து கெட்டு போன கதையை சொல்லி வருத்தப்பட்டேன் . என் மனைவி இப்படி தான் ஆறாவயல் சித்தப்பா குடித்து குடல் வெந்து போய் ஆஸ்பத்திரியில கிடக்கிறார்… அவரை போய் பார்க்க போகணும் . அவரும் மில்லில கூலி வேலை பார்க்கிறார். கிடைக்கிற வருமானத்தை இப்படி குடிச்சே அழிக்கிறார் என ஆதங்கப் பட்டு கொண்டார்.

அதற்குள் என் மாமனார் தபால் தந்தி நகரில் ஆட்சி வீட்டிற்கு அருகில் உள்ள இளைஞன் தண்ணி அடித்து இறந்து விட்டான் அவன் மனைவி ரெம்ப கொஞ்ச வயசு என தன் தரப்புக்கு புலம்பி கொட்டினார்.

அரசு அதிகப்படியான வருவாயை டாஸ்மார்க் வருமானம் மூலம் ஈட்டி, அதனைக் கொண்டு நல்ல திட்டங்களை உருவாக்குகிறது என்பது  கேட்பதற்கு நல்ல விசயமாக இருந்தாலும், இந்த நல்ல நலத்திட்டங்களை அனுபவிக்க ஆட்கள் வேண்டுமே..! திட்டங்களின் பலனை அடையாமலே அல்லது அனுபவிக்கும் முன்னரே தண்ணி அடித்து அடித்து அல்பாய்சில் போய் விடுவார்கள் போலத் தெரிகிறதே..!


வைகோ போன்றோர் டாஸ்மார்க் எதிராக குரல் கொடுப்பது மனசுக்கு ஆறுதல் அளித்தாலும், மதுவிலக்கு என்பது சாத்தியமா? என சிந்திக்க தூண்டுகிறது. கடந்த பத்து வருடங்களாக நல்ல பச்சை லைட்டை போட்டு ஆட்களை கவர்ந்து, சாராயத்திற்கு அடிமை படுத்திய பின் , மதுவிலக்கு பிரச்சாரத்திற்கு தொண்டன் எப்படி வருவான், வந்தாலும் எப்படி இருப்பான்?  சிந்திக்க வேண்டியது.
என் நண்பர் பெரியர் பேருந்து நிலையத்தில் நின்று இருந்தார். அப்போது பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நோட்டீஸ் விநியோகித்த ஒரு கட்சியின் தொண்டன், நோட்டீஸ் கொடுத்து முடித்த பின் , டேய் வேலை முடிஞ்சுச்சு .. ஒரு கட்டிங்க போட்டுட்டு வீடு போய் சேர வேண்டியது தான் என்றானாம் என்று கூறியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மது நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு என்பதை நாம் உணர வேண்டும். அது நம் எதிர் காலத்தை பாதிக்கும் என்பதையும் அறிய வேண்டும். 

சமீபத்தில் இரண்டாம் பருவத்தேர்வு முடிந்த பின் தர மதிப்பீட்டு பட்டியலில் கையொப்பம் பெற என் வகுப்பு மாணவர்களின் பெற்றோரை அழைத்து வர சொல்லியிருந்தேன். அனைத்து மாணவர்களும் தன் தந்தையை அழைத்து வந்து கையொப்பமிட போவதாக பேசிக் கொண்டனர். அப்போது ஒரு மாணவன் என்னிடம் வந்து சார் இதுல கையெழுத்துப் போட அப்பாவ தான் கூட்டிகிட்டு வரணுமா சார்? என கேட்டான். ஏண்டா அப்படி கேட்கிற…?இல்ல சார் எனக்கு அப்பாவ பிடிக்காது ? ஏன்டா அப்படி சொல்லுற?அப்படி யெல்லாம் சொல்லக்கூடாது? இல்ல சார்.. என் அப்பா சாய்ங்காலம் ஆச்சுன்னா.. தண்ணியபோட்டுகிட்டு சண்டை போடும்… ஊடால நான் சிக்கினேன் வச்சுக்கங்க.. என்ன தூக்கி போட்டு மிதிச்சுடும்.. எங்க அம்மா தான் பாவம் நித்தம் அடிவாங்கிட்டு கிடக்குது. அதுனால எனக்கு பிடிக்காது சார்.. அம்மாவை கூட்டிகிட்டு வர்றேன் என்றான்.  

இதுமாதிரி எத்தனை எத்தனை மாணவர்கள் மனதால் புழுங்கி சாகின்றனரோ…? எத்தனை மனைவிமார்கள் போதைஏறிய கணவனின் கொடுமைகளை தாங்கி தன் மகனுக்காக, குடும்பத்திற்காக உயிர்த்தெழுகின்றனரோ? அரசு இதற்கு நல்ல முடிவு எடுத்து மதுவிலக்கு அமுல் படுத்த வேண்டும்.   


Wednesday, March 20, 2013

புகார்களும் நடவடிக்கையும் புஸ்வானமும்


மாலை அண்ணா நகர் பகுதியில் என் நண்பர்  தனியார் உதவி பெறும் பள்ளியின் தாளாருமான அவரை சந்தித்து உரையாடினேன். அப்போது அவர் காலையில் நடந்த கூத்தை சொல்ல ஆரம்பித்தார். பேஸ்புக் என்று காதில் விழவே , எங்கள் அருகில் டீ குடித்துக் கொண்டிருந்த மருத்துவ துறையை சார்ந்த நண்பர் தானாகவே ஆஜராகி தன் ஆதங்கத்தை கொட்ட ஆரம்பித்தார்.

எதாவது ஒரு பேக் இமெயில் ஐடி வைத்து கொண்டு வாய்க்கு வந்ததை அரைகுறை ஆங்கிலத்தில் புலம்பி வைக்கிறார்கள். சில சமயம் தமிழில் அடிக்கிறார்கள். கலெக்டர் நல்ல எண்ணத்துடன் ஆரம்பித்த ஒன்றை பணி செய்ய விடாமல் தடுக்கும் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர் என ஆதங்கத்துடன் சொல்ல ஆரம்பித்தார். நான் மருத்துவ துறையில் மருந்து கொடுக்கும் அதிகாரி . சரியான மருந்தை கொடுக்க வேண்டும் தவறினால் உயிர் பலி யாகி விடும் ஆபாயம் உள்ளது . ஆகவே கண்டித்து வேலை வாங்க வேண்டியுள்ளது. அதனை குறையாக தவறாக பேசுகிறேன் எனவும் , மிகவும் கண்டித்து வேலையை வாங்குவதால் மன உளைச்சலுக்கு ஆளாக நேருகிறது என குறையாக பேஸ்புக் கில் போட்டவுடன் எங்கள் டிடிக்கு கலெக்டர் போன் செய்து விசாரிக்கிறார். பின்பு எங்கள் உயர் அதிகாரியும் மறுப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதனால் அவரும் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடுகிறது. இதே போல் நாம் அவர்கள் குறைகளை பேஸ்புக்கில் பதிவு செய்தால் யாரும் வேலை பார்க்க முடியாது 

 உண்மையாக வேலைபார்ப்பவர்களும் சோர்ந்து போய்விட நேரிடும். புகார்கள் , புகார்களுக்கு உடனடி நடவடிக்கை .
புகார்கள் அதிகப்படியான எண்ணிக்கை . அதிகப்படியான நடவடிக்கை என்பது மனதுக்கு சந்தோசம் கொடுத்தாலும், உண்மை தவறினால் தண்டனை , உண்மையாக இருந்தால் தண்டனை என இருந்தால் , பேஸ் புக் புகார் மனு என்பது நல்ல பயனுள்ள விசயமாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றார். அவர் பக்கமும் நியாயம் உள்ளதாகவே எனக்கு படுகிறது.

    டெங்கு காய்ச்சலில் போது உண்மையாகவே மெடிக்கல் லீவு போட்டு , அதன் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க நினைத்த மருத்துவரை கலெக்டர் பணி நீக்கம் செய்தார். ஆனால்  அந்த மருத்துவர் இப்போது அதே ஊரில் மருத்துவராக பணிபுரிகிறார். எப்படி சாத்தியம் என்பதும் தெரியவில்லை. இதுவும் நடக்கிறது.  வாழ்நாள் முழுவதும் கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு என உழைத்து , எதார்த்தமாக ஒரு நாள் அஜாக்கிரதையாக இருப்பவர்கள் தான் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஆள் பழக்கமும் தெரியாது. யாரை பார்பது என்பதும் அறியாத காரணத்தால் சிக்கலில் இருந்து விடுபட தெரியாமல் தண்டனைக்கு ஆளாகிறார்கள். அப்படிப் பட்ட அப்பாவிகளை வதைக்க உருவானது தான் இந்த பேஸ்புக் புகார் பெட்டி என கூடுதல் தகவலையும் தெளித்து சென்றார்;

பள்ளி தாளாளரும் பள்ளி மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் , தவறினால் தன் நிர்வாகத்திலுள்ள வேறு பள்ளிக்கு மாற்றி விடுவேன் என எச்சரித்துள்ளார். வேறு பள்ளி என்பது மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆகவே வேலைக்கு பயந்து , பள்ளியில் தன்னை கொடுமை படுத்துகிறார்கள் . அமர ஆசனம் தருவதில்லை. பணம் வசூல் செய்கின்றனர் என பெங்களூரில் இருக்கும் தன் மகன் மூலம் புகார் அளித்துள்ளார். ஆசிரியர் பணி என்பது காலப்போக்கில்  தொழில் என உருவாகியுள்ளது வருத்தமளிக்கிறது. அன்று அதிகப்படியான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்பறை என்பதை ஆசிரியர்கள் சந்தோசமாக நினைப்பார்கள். தனக்கு கிடைத்த கொளரவமாக நினைப்பார்கள் இன்று அதிக்கப்படியான எண்ணிக்கை என்பது பணி சுமை யாகி விட்டது வெட்கக் கேடு. இன்று நிலமை தலைகீழாக மாறிவிட்டது மாத ஊதியத்திற்கு வருவாய் ஈட்டும் அரசு ஊத்தியோகமாக நினைக்கும் மனநிலையில் தான்  ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என இப்படிப்பட்ட குறைகளைக் கேட்கும் போது நினைக்கத் தோன்றுகிறது. 

வெகுஜனமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, பொங்கல் போனஸ், ஊக்க ஊதியம், ஊதிய உயர்வு போன்றவற்றை பார்த்து புலம்புவதை அங்கிகரிக்க தோன்றுகிறது.  பணியாற்றும் நிர்வாகத்தினை குறை கூறுவதும் , அதனை புகாராக பதிவு செய்வதும் எப்படிப்பட்ட மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள் என எண்ணத்தோன்றுகிறது. உண்ட வீட்டிற்கு துரோகம் செய்வதற்கு சமம். அதை விட வேடிக்கை என்னவென்றால் புலி தானாக எலி வலையில் சிக்குவதைப் போல , புகார் அளித்த ஆசிரியர் முதலாவது ஆளாக வந்து நான் இப்பள்ளியில் சந்தோசமாக பணியாற்றுகிறேன் என எழுதி கொடுத்து தன் ராஜ விசுவாசத்தை தெரிவித்துள்ளார் என்பது தான்.

  புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மாவட்ட நிர்வாகமே , அது சார்ந்த துறையின் உயர் அதிகாரிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளும் போது துணிவின்றி, தங்கள் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடன் எடுத்துச் சொல்லி, தங்கள் குறையை போக்கிக் கொள்ள பயப்படுவதேன். எதற்காக இந்த புகார்.? எதற்காக அதிகாரிகள் தங்களின் அனைத்துப் பணியினையும் தள்ளி வைத்து , மனுவுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்? நடவடிக்கைக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு நல்கி அக்குறையினை களைய முயற்சித்த போதும் , நேரடி விசாரணையின் போது , மனுவுக்கு புறம்பாக பதில் தருவதேன்?  இதனால் அதிகாரிகளும் சலிப்பு தட்டிவிடுகிறது. பல உண்மையான மனுக்களும் புறம்தள்ளப்படுகின்றன. யாரை மிரட்டுவதற்காக இவை மேற்கொள்ளப்படுகின்றன? சிறிய அதிர்வு எல்லாவற்றையும் சரி செய்து விடுமா? புகார்தாரர்களே சிந்தியுங்கள். சிறந்த பேஸ்புக் திட்டத்தை ;உங்களின் மிரட்டலுக்கு பயன்படுத்தாதீர்கள்.


   போலி புகார்களை தவிர்த்து அதிகாரிகளை நியாயமான முறையில் பணியாற்ற விடுங்கள். நல்ல திட்டத்தை சிறப்பாக செயல்பட உண்மையான ஆதாரங்களுடன் , தைரியமாக அநியாங்களுக்கு எதிர்த்து நில்லுங்கள். உங்கள் பக்க நியாயங்களை எப்போதும் எந்த சூழலிலும் எடுத்துச் சொல்ல பின்வாங்கி விடாதீர்கள். இது நமக்கான திட்டம் , இதை நாமே பாழ் படுத்தி விடக்கூடாது. இப்படிப்பட்ட மாவட்ட அதிகாரிகள் , மாவட்ட கலெக்டர் கிடைப்பது அரிது . மீனாட்சி கிருபையால் நமக்கு தொடர்ந்து நல்ல அதிகார்கள் கிடைத்திருப்பதை தவறவிட்டு விடக்கூடாது.  

Sunday, March 17, 2013


 முருகதாஸ் தயாரிப்பில் ஒரு படம் வந்திருக்கு அதுல அவரு தம்பி நடிச்சுருக்கானாம்… பார்க்கவே ரெளடி மாதிரி தெரியிறான்..சண்டை படம் போல இருக்கு ..இருந்தாலும்  பார்க்கலாம் வர்றீய்யா என அழைத்த என் நண்பர் பாபுவின் அழைப்பை மறுக்காமல் படம் பார்க்க சென்றேன். தியேட்டர் பழனிஆறுமுகம் என்றதும் கொஞ்சம் யோசித்தேன். மதுரையில் தியேட்டர்கள் நவீனமாகிக் கொண்டு வருகிறது உண்மை என்பதை அங்கும் காண முடிந்தது.

    ஊரு வம்புக்கு போகாத பையனொருவன் , அடுத்தவருக்கு உதவி செய்தால், (அதுவும் கிரிமினல் குற்றங்களை தடுத்தால்) அவனுக்கு என்ன நேரிடும் என்பது தான் கதை. இன்னும் பழசா சொன்னால், தர்மம் காக்கும் ஒருவனை அதர்மம் அழிக்க நினைக்கிறது , தர்மம் வென்றதா? அதர்மம் அழிந்ததா? இது தான் கதை.


டைட்டில் கார்ட்டில் கொலை , கொள்ளை , கடத்தல் செய்திகள் அடங்கிய செய்திகளைக் காட்டி பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதே எதிர்ப்பார்புடன் மூவர் ஒருவரை கொலை செய்ய துடிப்பது போல காட்டி ஏன் என்ற எதிர்ப்பார்ப்புடன் நம்மை இருக்கையை நோக்கி  நகர்த்துகிறார்கள். பின் மெல்ல சீட்டில் சாய்வது உண்மை தான்.

  அட திலீபன் ஆட்டோகாரனாக முயற்சி எடுத்திருந்தாலும் செட்டாக வில்லை. முதல் படத்திலேயே ஆக்சன் நன்றாக வந்துள்ளது பாராட்ட வேண்டியது. காதல் காட்சிகளில் அவ்வளவாக பொருந்தாததற்கு காரணம், அவருக்கு பொருத்தமில்லா அஞ்சலியாக இருக்கலாம். ஆனால், அஞ்சலி பாத்திரத்தில் பொருந்திப் போகிறார் என்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான நடிப்பு நமக்கு முகம் சுளிக்க செய்கிறார். ஆங்கிலம் உதார் விடும் பார்டியாக வந்துள்ள அஞ்சலி ஓவர் பில்ட அப் விடுவது எரிச்சல் தருகிறது.

   தன்னிடம் வழிப்பறி செய்யும் சம்பத் அவனின் கூட்டாளிகளிடம் தன் பணத்தை திரும்ப கேட்டு அடித்தடியில் ஈடுப்பட்டு, அவர்களிடம் பணத்தை திரும்பப் பெறுவதால் அவர்களின் எதிர்ப்பை பெற்றுள்ளான் கதாநாயகன் திலீபன் என்றால் பரவாயில்லை. திலீபன் அடித்ததால் ரவுடி மார்க்கெட் சரிந்தது என்பது ஏற்க முடியவில்லை. அதே சமயம் தெருவில் டீக்கடையில் கொலை பற்றி பேச வாய்ப்பு உள்ளதா? லாஜிக் யோசிக்க வைக்கிறது. அது தவிர்த்து படம் பார்த்தால் விறு விறுப்பான படம் தான்.
சம்பத், ரவிமரியா, ஜெயபிரகாஷ், நண்டு ஜெகன் என அற்புதமான படைப்பாளிகளிடம் குறைந்த வேலை வாங்கப்பட்டுள்ளது. சரண்யா பொன்வண்ணன் அம்மா பாத்திரத்தில் பொருந்திப்போனாலும் இட்டிலியை அள்ளிக் கொட்டுவது ஒட்டவில்லை.

   அட நம்மை சுற்றி இவ்வளவு விசயங்கள் நடக்குதா ? என யோசிக்க வைக்கிறார் இயக்குநர் கின்ஸ்லி.  கதையின் முன்பாதியில் காட்டியுள்ள விறுவிறுப்பை கதையின் பிற்பாதியில் கொண்டு செல்லாதது ஏன் என்று தெரியவில்லை. நீண்ட க்ளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை படத்தின் முடிவு தெரிந்ததால் , அசதி ஏற்படுத்தி படத்தின் முன் பாதியின் விறுவிறுப்பை பேசவிடாமல் மறக்க செய்துவிடுகிறது. ஆர்.பி. குரு தேவ் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. பாடல்கள் ஹிட். கிப்ரான் இசை ஒ.கே. வசனம் மனதில் பல இடங்களில் ஒட்டிக் கொள்கிறது.

       படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ரசிக்கலாம்.

வத்திக்குச்சி கொஞ்சம் பதத்தது. இருந்தாலும் பத்திக்கொள்ளும்.  

Friday, March 15, 2013

குற்றம் எங்கே உள்ளது ? பதிலளியுங்கள் கல்வியாளர்களே!


கடந்த வாரம் கூர் நோக்கு இல்லம் சென்று இருந்தேன்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அனைத்துக் குழந்தைகளையும் படிக்க வைப்பதில் முழு முனைப்புடன் எல்லா வழிகளிலும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் படிப்பு தொடர உதவிகள் மேற்கொள்ளப்பபடுகின்றன. 

இத்திட்டத்தின் படி, மைனர் ஜெயில் எனப்படும் கூர் நோக்கு இல்லத்தில் சிறு குற்றங்கள் புரிந்து பெயிலில் வெளி செல்ல முடியாத குழந்தைகளின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காக தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியரை நியமித்து,  அவருக்கு சம்பளம் வழங்குவதும் ,தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தும் ஆசிரியர் கூர்நோக்கு இல்ல மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்கிறாரா என ஆய்வு செய்வதும் , அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாணவர்களுக்கு முறையானபடி கொடுக்கவும் அருகிலுள்ள பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு , அதன் தலைமையாசிரியர் மூலம் அனைத்து செயல்களும் நடைப்பெறுகிறது.

இம்முறை என் பள்ளி மூலம் இச்செயல் பாடு நடைப்பெறுகிறது.இது சார்பாக முதல் முறையாக  கூர்நோக்கு இல்லம் சென்ற போது தனிச்செல்லில் நன்றாக வளர்ந்த மாணவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விசாரித்தேன். கிரிக்கெட் விளையாடும் போது கோபத்தில் மட்டையை வைத்து மண்டையில் அடித்ததால் , அடிப்பட்டவன் இறந்து விட்டதால், கொலை குற்றம் சாட்டப்பட்டு அடைக்கப்பட்டவர்கள் என  அறிந்தேன். ஏன் தனி செல்? என மீண்டும் என் கேள்வியின் அர்த்தத்திற்கான விடையை , இங்கிருந்து சுவர் ஏறி குதிச்சு ஓடிப்போயிட்டேன் அதான் என்ற , அவனின் பதிலில் இருந்து அறிந்துக் கொண்டேன்.

இம் முறை என்னுடன் வந்த மேற்பார்வையாளர் நீண்ட உரைக்கு பின் ஒரு மாணவனை எழுப்பி நீ என்ன தவறுக்காக வந்தாய் என்றார். திருடி விட்டேன் என்றான். அது தவறு என உணர்ந்து விட்டாயா? ம் என தலையாட்டினான். என்ன செய்தாய்? என்றார். மெடிக்கல் சாப்பில் 3000 ரூபாய் திருடினேன். உண்மை தான ? ஆமாம். எடுத்த காச போலீசுல கொடுத்துட்டேன். தப்பு செய்ய கூடாதில்லையா? ஆமா. உங்க அப்பா என்ன செய்கிறார்? அப்பா இல்ல சார். அம்மா? இருக்காங்க.. துணி தேய்ச்சு கொடுக்கிறாங்க. பார்த்தியா , அம்மா எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார் போலீஸ் உன்னை பிடிச்சுட்டு போனப்ப. சார் இவன் வகுப்பில முதல் மாணவன் . நல்லா படிப்பான் என்று ஆதரவாய் பேசினார் கூர் நோக்கு இல்லத்தின் மூதாய்.

பெற்றோர்களின் கவனிப்பு அற்ற குழந்தைகள் கோபத்தில் தவறு செய்து மாட்டியவர்கள், குடும்ப வறுமைக்காக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுவதை குறித்து மேற்பார்வையாளர் ஆதங்கப் பட்டுக் கொண்டார். 

திருட்டு  , கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக மட்டுமே கைதாகி இங்கு உள்ளனரோ என கேட்டேன். அதிர்ச்சி தரும் தகவலை தந்தார்கள். குடும்ப பகைக்காக கற்பழிப்பு வழக்கில் ஒரு சிறுவன் வந்துள்ளான். ஒருபுறம் உண்மையிலே பாலியல் குற்றங்கள் பெருகுவதை தடுக்க குரல் கொடுத்து வரும் சூழலில், கடுமையான சட்டங்கள், இது போன்ற சம்பவங்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றமற்றவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ? அவனும் நன்றாக படிப்பவனாம் என்பது எனக்கு மேலும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

நேற்று மாலை செய்தி. தேர்வு அறையில் கணித வினாத்தாள் கடினம் என்பதால் மாடியில் இருந்து விழுந்து கை, கால் முறிந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள உசிலம்பட்டி சிறுவன்.
ஒருபுறம் கோபத்தில் தவறு செய்து விட்டு வாடும் சிறுவர்கள். மறுபுறம் இயலாமையால் , தன்னை தானே மாய்த்துக் கொள்ள நினைக்கும் சிறுவர்கள். தேர்வு எழுதும் போதே, இப்படி என்றால் ? தேர்வு முடிவுகள் வெளிவந்தால் , இயலாமையால் தன்னை அழித்துக் கொள்ள நினைக்கும் இம்மாணவர்களை நினைத்து பயம் கொள்ள வேண்டியுள்ளது. இவர்களை என்ன செய்வது?

நானும் கணிதத்தில் ஆறாம் வகுப்பில் முட்டை வாங்கியவன் தான் என்றால் நம்ப முடியவில்லை தானே. இருப்பினும் எனக்கு மனதைரியத்தை அன்றைய கல்வி முறை வழங்கியிருந்தது என்று தான் நினைக்கிறேன். அது மட்டுமல்ல என் தந்தையும் தாயும் அதற்காக என்னை அடிக்கவும் இல்லை, திட்டவுமில்லை. கவனமாக கணக்கு செய் நீயும் பிறரைப் போல நூறு மதிப்பெண் பெறுவாய் என்றனர். இருவரும் ஆசிரியர் என்பதால் இருக்கலாம். என்னுடைய கணக்கு ஆசிரியர் மட்டும் இருகைகளிலும் பிரம்பால் அடித்ததாக நினைவு இருக்கிறது. அந்த தேர்வுக்கு பின் எனக்கு முதல் வரிசை இருக்கை அளிக்கப்பட்டு, கரும்பலகையில் நானே கணக்குகள் செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டு, தவறுகள் , பிழைகள் ஏற்படும் போது, அன்பால் அவைகள் திருத்தப்பட்டு, சரி செய்யப்பட்டு , அதன் தொடர்ச்சி, +2 வில் கணித குரூப்பை தேர்வு செய்ய தூண்டியிருந்தது. என் நினைவில் அச்சம்பவத்தை தவிர ஆசிரியர்கள் யாரும் அடித்ததாக நினைவு இல்லை.

தற்போது ஆசிரியர்கள் மத்தியில் மாணவர்கள் குறித்து அக்கறையில்லை என்று தான் நினைக்கிறேன். சமீபத்தில் ஆசிரியப் பயிற்றுனராக இருந்து , முதுகலையாசிரியரா சென்றுள்ள என் நண்பர் என்னிடம் குறைப்பட்டுக் கொண்டது என்னவென்றால், மாணவர்கள் படிப்பு குறித்து எவரும் அக்கறை கொள்வதில்லை. அது போல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பயந்து நடக்க வேண்டும் என்ற மனநிலையில் இல்லை. செய்திதாள் செய்திகளை சுட்டிக்காட்டி மிரட்டும் நிலையில் மாணவர்கள் போக்கு உள்ளது. தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களை தண்டிக்கும் கண்டிக்கும் திறன் அற்றவர்களாக எந்த வம்புகளிலும் சிக்காமல் காலத்தை தள்ளவே நினைக்கிறார்கள். பட்டதாரி , முது நிலை ஆசிரியர்கள் டியூசன் அமைத்து வருமானத்தை ஈட்டுவதில் தான் ஆர்வமாக உள்ளார்கள். பெற்றோர்களும் டியூசன் அனுப்பி தன் மகனை அதிக மதிப்பெண் எடுக்க வைக்கவே நினைக்கிறார்கள். பள்ளியில் நன்றாக ஆசிரியரை கற்பிக்கச் செய்யலாமே ? அதற்காக தானே ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர்ஆசிரியர் கழகம் உள்ளது. பெஆக மூலம் தலைமையாசிரியருக்கு ஆதரவு தெரிவித்து வகுப்பறையிலே அனைத்தையும் மாணவர்களுக்கு கற்று தர செய்யலாமே என்ற மனநிலை பெற்றோரிடம் இல்லாதது இவர்களின் பலம். +1 ல் ஆங்கிலத்தில் எளிய வார்த்தைகளைக் கூட வாசிக்க தெரியாத மாணவர்கள் அதிகம். இவர்கள் எப்படி தேர்ச்சி பெற்று வந்துள்ளார்கள் என்பது கூட விந்தையாக இருக்கிறது என்று ஆதங்கப்பட்டு பேசினார்.

சமீபத்தில் மதுரையில் ஆசிரியர்கள் கைது எதிரொலிக்கு பின், நடந்த பாலியல் குற்றங்கள் சார்ந்த கல்வி நிலைய தலைமையாசிரியர், கல்வி அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் மாவட்ட உயர் அதிகாரி , சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் புரிந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்த போது, தொடக்க கல்வி துறையில் இருந்து பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களாக உள்ளது என்றும் , தொடக்க கல்வி ஆய்வு மேற்கொள்ளும் அதிர்காரிகள் , முக்கியமாக ஆண் ஆசிரியர்கள் மீது கெடிபிடியுடன் கண்காணிப்புடன் இருக்க ஆணையிடப்பட்டுள்ளதாகவும் ,அரசாணை 121 அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி கையொப்பம் பெற்று பைல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்த  கல்வி அதிகாரி, தவறு செய்வதில் என்ன தொடக்க கல்வி , உயர்கல்வி என ஆதங்கப்பட்டுக் கொண்டார்.
      
இவைகள் எல்லாவற்றையும் அலசி ஆராயும் போது எங்கோ எதிலோ ஓட்டையுள்ளது தெளிவாக தெரிகிறது. அந்த ஓட்டை கல்வி முறையிலா, கற்பிப்பவர் மன நலன் பாதிப்பிலா, மாணவர்களின் அறிவு நிலைக்கு தகுந்த வாய்ப்புள்ள கல்வி இல்லாததாலா, விழுமியங்கள் குறைந்த கல்விமுறையா? நீங்கள் யோசியுங்கள் !முடிவுக்கு வாருங்கள் ! முடிந்தால் என் கமண்டு பெட்டியில் பதிவு செய்து செல்லுங்கள்.
( இனி தினம் இடுகைகள் வரும் …சூடான விவாதங்களுக்கு தயாரக இருங்கள் கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்பட இணைவோம்.)