Sunday, May 22, 2011

மனிதாபிமானம்


தெருவில் கிரிக்கெட்
சரியாக பதினொரு நபர்கள்
காய்கறி விற்பவள்
சலவை துணி அயன் செய்பவன்
சைக்கிள் காரன்
ரிக்ஷாகாரன்
இவர்களுடன்
ஆட்டத்தின் நடுவே
ஆட்டோ, கார் , லாரி
என கடந்து செல்ல ...
அளவாக வீசப்பட்ட பந்து
சரியாக அடிக்க
சற்றே பயந்து நடுங்கி வந்த
கிழவியின் மண்டையை
பதம் பார்க்க ...
சிதறியது இரத்தம் மட்டுமல்ல
அனைவரும் தான்... 

Friday, May 20, 2011

இயல்பு



எந்த வொரு மாற்றமும் இல்லை
தெருக்கள் எப்போதும் போலிருந்தது
தெருமுனையின் டீக்கடையில்
கூட்டம் குறைந்த பாடில்லை
பூக்கடைக்காரன்
பேரம் பேசி விற்றுக் கொண்டிருந்தான்
ஆட்டோக்காரன் சவாரி
படியாமல் முனங்கி கொண்டிருந்தான்
புதிதாய் முளைத்த கொட்டுச் சத்தமும்
சங்கு சத்தமும்
எந்த சலனத்தையும்
ஏற்படுத்தவில்லை
கால் நீட்டி படுக்க வைக்கப்பட்ட
பிணம்
நனைகிறது ...
சுற்றி இருப்பவரின்
உப்பு நீரில்...
அவர் அலைந்து திரிந்த தெருக்களில்
அடையாளமாய்
 மயானம் வரை
உதிர்ந்த
ரோசா மலர்கள்
இயந்திரத் தனமான மனிதர்களின்
நடமாட்டங்களுக்கு மத்தியில்

Thursday, May 19, 2011

வெளிச்சம்



ரவு சாலையில்
முந்திச் சென்ற பைக்
டிம் பிரைட் அடித்து
சீறி பாய்ந்தது...
பின் இருக்கையில்
சதை மடிப்பில் அடித்த
வெளிச்சம்....
அடித்த அவனை
வெளிச்சம் போட்டுக் காட்டியது

Wednesday, May 18, 2011

அவள்


இரவின்
இரயில் சத்தங்கள்
நினைவூட்டுகின்றன
பெயர் தெரியாத அவளின்
முகத்தை ...
எதிர் எதிர் இருக்கையில்
தண்டவாளங்கள் போல்
நானும் அவளும்...
மேல் இருக்கையில்
படுக்கும் முன் ...
அவள் குடித்த நீரின்
ஒரு சொட்டு
என் மீது பட்டு
பருகத்தூண்டியது... 
அவள் புரண்டு படுக்கும் போது
மேலிருந்து உதிர்ந்த பூ
என்னையும் புரட்டி எடுத்தது
ானும் இரயிலைப்போலக்
கூவிக் கொண்டு இருந்தேன்
இரவு  முழுவதும்....

Tuesday, May 17, 2011

ஓட்டம்



ன் இருப்பிடத்திற்கான
பேருந்து இன்னும்
வரவில்லை...
எங்கிருந்தோ வந்தான்
சற்றும் யோசிக்கவில்லை
தாமதிக்கவில்லை
அதே தடம் தான்...
 வந்த பேருந்தில் ஏறினான்
சென்று கொண்டே இருந்தான்
ஏறி இறங்கி
இறங்கி ஏறி
இருப்பிடத்தை அடையும் வரை...
தேங்கி நிற்பதை இருப்பதை விட
ஓடுவது தான் உத்தமம்

Saturday, May 14, 2011

சோலையம்மாள்


   மதுரை என்றாலே கடுமையான வெயில்.  செங்கதிர்கள் ஊசியாய் தசைகளில் குத்தி ஏற்படுத்திய வலி , எலும்பை ஊடுருவி, உயிரை பறிக்கும் வேதனையைத் தந்தது. கருப்புச் சாலைகளின் தார், வெயிலின் வெப்புத் தாங்காமல் உருகி, கார்களின் சக்கரங்களில் ஒட்ட இடம் தேடுகின்றன. வாகனங்களின் ஓட்டங்களில் சாலைகளிலிருந்து வெளிப்படும் வெப்பக் காற்று , வீதியோரக் கடைகளில் எரிச்சலை உண்டாக்கி, ’ஏன் மதுரையில் பிறந்தோம்?’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.  மின்சாரம் அற்ற  மதியம், வெப்பத்தால் மனிதனை வாட்டுகின்றது. மனம் பதற்றமடைகிறது. .மின்விசிறிகளின் காற்றைப் பழகிப்போன உடல்கள் காற்றில்லாமல் வெக்கைத் தாங்காமல், புழுகி வெந்து சாகின்றன.

     கீழவாசல் என்றால் உயரமான அந்த சர்ச் தான் நினைவிற்கு வரும். செங்காவி நிறத்தில் அக்கட்டிடம் புனிதத் தன்மைக்கான அடையாளங்களுடன் கம்பீரமாக இருக்கும். மனிதர்கள் அழுக்கு மூட்டைகளுடன் வந்து , மனக் குப்பைகளை மண்டியிட்டு கொட்டிச் செல்வர். சர்ச் வருடா வருடம் வெள்ளையடிக்கப்பட்டாலும் , அதன் உட்புறம் மனித பாவங்களின் மொத்த உருவங்கள் பூதாகரமாகப் பெருகி இருள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறது. இரட்சகரின் உடலிலிருந்து பெருகி வரும் குருதி ,சிலைகளில் இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது, மனித பாவங்களின் பெருக்கத்தால்.

    ஒவ்வொரு பூசைக்குப் பின்னும் சர்ச்சைக் கூட்டிப்பெருக்கினாலும், உண்மையானக் குப்பைகள் இன்னும் நிரம்பி வழிகின்றன. சுவர்களில் பொதித்து வைக்கப்பட்ட சுண்ணக் கோப்பைகளில் உப்புத்தண்ணீர் எதற்கானது என்பதை அறியாமலே பள்ளிச் சிறார்கள் தலையில் அள்ளித் தெளித்து கண்களில் ஒற்றிக் கொண்டு , படிக்காத பாடத்திற்கு நூறு மதிப்பெண்களை வேண்டி ,ஏசுவின் பாதங்களைத் தொட்டுச் செல்கின்றனர். இந்த மூடர்களின் செய்கையை எண்ணி, இன்னும் இரட்சகரின் கண்களில் வடியும் கண்ணீராக இருக்குமோ , இந்த கோப்பைகளின் உப்பு நீர்.

     சோலையம்மாள் காலை ஏழு மணிக்கே தன் கடையை விரிக்கத் தொடங்கினாள். அவளின் காவி நிறப்பற்கள் இன்னும் முந்தைய நாளின் வீச்சத்தை சுமந்து கொண்டு இருந்தன. அவளின் கணவன் ஜோசப் டீத்தண்ணி வாங்கி தூக்குவாளியில் கொண்டு வந்தான். ”வாய அலம்பிட்டு சாப்பிடு” என்றவனின் கரங்களில் இருந்த அப்பம் அவள் வாய் நாற்றத்தில் கரைந்து வயிற்றை நிரப்பியது. மதுரையின் விடியல் அப்பத்தை புசிப்பதற்கானதாக இருப்பது அதிசயமில்லை. டீக்கடைகள் காலைவேளையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அனேகமான கூலித் தொழிலாளிகளின் காலை உணவே ஒரு டம்ளர் டீயும் , அப்பமுமாகத் தான் இருக்கும். அப்பம் சோடா உப்பால் உப்பிப் போய் திருமலைநாயக்கர் வயிறு போல புடைத்திருக்கும். சிறுவர்கள் தங்களின் தந்தையின் கைகளைப்பிடித்துக் கொண்டே தெருவின் முனைக்கு வந்து வடைக்கடை, அதனை ஒட்டியுள்ள புட்டுக் கடை ஆகியவற்றில் புட்டையும் அப்பத்தையும் உண்பதால், மதுரையில் பல மருத்துவர்கள் லாபம் அடைகின்றனர்.

     சர்ச்சினை ஒட்டிய பள்ளியின் வாசலில் தான் சோலையம்மாள் கடைவிரித்து, மாங்காய், நெல்லிக்காய், மிட்டாய் என விற்றுக் கொண்டிருந்தாள். பத்து வருடங்களுக்கு முன் அவளுக்கு போட்டியேயில்லை. இப்போது அங்கு அவளுக்குப் போட்டியாக நான்கு கடைகள் முளைத்து இருந்தன. ஓவ்வொரு முறையும் யாராவது புதிதாகக் கடைப்போட்டால், காதுகளில் கேட்க முடியாத நாற வசவுகளை அள்ளி வீசி , விரட்டத் துடிப்பாள். அப்படி அவளின் வசவு தங்காமல் ஓடியவள் தான் தங்கம். மூன்று வருடங்கள் முன் கடன் தொல்லையால் ஓடிப் போன கணவனின் தரம் கெட்டத் தனத்தால், தன் பிள்ளைகளின் வயிற்றுப்பசியாற்ற , இரட்சகரை நம்பிக் கடை விரித்தாள். கடன்காரன்களை
விட சோலையம்மாளின் மோசமான வசவால் மனம் பாதிக்கப்பட்ட தங்கம், அழுகையுடன் வாங்கிய சாமான்களை அப்படியே சோலையம்மாளின் மூஞ்சியில் வீசியெறிந்து சென்றாள். சிங்கம் அடித்து சாப்பிட்ட மீதியைச் சாப்பிடும் நரியைப்போல எந்தவித அனுதாபமும் படாமல், வீசிய பொருள்களை விற்று காசு பார்த்தாள். அவளிடம் உள்ள அழுகியபழங்களும் காசாகின. காய்ந்த ரொட்டித்துண்டுகளும் இரக்கமற்று விற்கப்பட்டு பலரின் வயிற்றைப் பதம் பார்த்தன. இப்போது சர்பத் கடை, ஜிகர்தண்டாக் கடை என முளைத்திருந்தாலும், தன் கடைக்கு வரும் பசங்களுக்கு கடன் கொடுத்து வாடிக்கை பிடித்து வைத்திருந்தாள்.
   கடன் வாங்குதல் என்பது வகுப்பறைகளின் கூட்டல் கழித்தல் கணக்குகளையும் தாண்டி ஏமாற்று வித்தையாக இருக்கும். இவளும் ஒன்றும் பெறாதப் பொருள்களை ஒன்றிற்கு இரண்டு மடங்காக விற்பாள். கொள்ளை லாபம் என்பதால் கடன் வாங்கும் சிறுவரும் பொய் கணக்குக் காட்டி மோசடியில் இறங்குவர். ”நேத்து கொடுத்தது மறந்துச்சாக்கா..நான் போய் பொய் சொல்லுவேனாக்கா…”என்ற டயலாக் நிரந்தரமாகி கடைகளின் முன்னால் உலாவரும். இவளின் வசவுகளும் அந்த திண்பண்டங்களில் வாயிலாக , அவர்களின் உடலில் ஊடுருவி, மாணவர்களுக்குள் நடைபெறும் மோதலில் வெளிப்படும் . மோசமான வார்த்தைகள் சர்ச்சின் மணல் பரப்பில் சிதறிக்கிடக்கும். ஒவ்வொரு அடி எடுத்து நடக்கும் போதும்  அவர்களின் பாதங்களில் ஒட்டிக் கொள்ளும் மணல் துகள்களில் , அசுத்த வார்த்தைகளும்  நாடாப்புழுக்கள் போல ஒட்டி உடலில் புகுந்து, இரத்தத்தில் கலந்து அழியாத உறவை ஏற்படுத்திக் கொள்ளும்.” ங்கோத்தா ….மவனே இவன கழுத்த அறுத்தா சரியாப்போயிடும்ண்டா..”என்ற வார்த்தைகளை சாதாரணமாக நாம் கேட்கலாம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை  ,அசிங்கம் பேசி வளர்கிறது.
    கால் ஊனமான சரஸ்வதி, கடை வைத்த போது , தன் மாராப்பு தெரிய உட்கார ஆரம்பித்தாள், சோலையம்மாள் .பெரிய பசங்களை தன் பக்கம் ஈர்க்க ,கழுத்து இறக்கி ஜாக்கெட் தைக்கத் தொடங்கினாள். சரஸ்வதியின் எடுப்பான மார்பு , அவளின் ஊனத்தையும் பொருட்டாக நினைக்காமல் , அந்த ஏரியா டீக்கடை வாலிபர்களை வளைத்துப் போட்டது. சோலையம்மாளின் வார்த்தைத் தோட்டாக்களை  , அவளின் நிமிர்ந்த பருத்த மார்பு கவசமாக்கி ,ஆண்களைத் துணைக்கு வரவழைத்து அழித்தன. சரஸ்வதியிடம் சோலையம்மாளின் பருப்பு எடுப்படவில்லை. அவளின்  தகாத வார்த்தைகள் தார்ச்சாலைகளில் வெப்புத் தாங்காமல் ஆவியாகி பறந்துப் போகின. இப்போது நயந்து பேசி விற்க ஆரம்பித்தாள். இருப்பினும் காவிக் கறைப்படிந்த பற்களின் நடுவில் வெளிவரும் அசுத்த  காற்றைப் போலவே ,வார்த்தைகளும் கறைகளுடனே வந்து விழுந்தன. தொட்டில் பழக்கம் மாற்ற முடியாது என அனைவரும் கேட்டுக் கேட்டு மோசமான வார்த்தைகள் சாதாரண வார்த்தைகளாகிப் போயின. .

    ஜோசப் வாயில்லாப் பூச்சி. கருத்து வளர்ந்த நெடுக்கான உடலாகயிருந்தாலும் , சோலையம்மாளின் கைக்குள் அடக்கமாகிப் போயிருந்தான். அவளின் வார்த்தைகளுக்கு மறுத்துப் பேச மாட்டான். அவன் சர்ச்சில் கூட்டிப் பெருக்கும் வேலையை செய்து வந்தான். அவனால்  பெருக்கித் தள்ளப்படும் மணல் தூசிகளைப் போல  பல மடங்கு குவியும் சோலையம்மாளின் அசுத்த வார்தைகளை அவனால் அள்ளி எறிய முடியவில்லை. தள்ளிப்போகவும் முடியவில்லை. குழந்தைபாக்கியம் இல்லாததால், இவளின் வார்த்தைகளுக்குப் பயந்து , உச்சிவெயிலின் நிழல் போல அவளின் காலடியிலே கிடந்தான். ஜிகர்தாண்டாக்காரன் கடைவைத்ததிலிருந்து சோலையம்மாளுக்கு காலை பதினோரு மணிக்கும் ,மதியம் மூன்று மணிக்கும் தவறாது இரண்டு டம்ளர் ஸ்பெசல் ஜிகர்தண்டா தருவதால், அவனை இவளுக்கு பிடிக்கும் . அவனுக்கு கிறிஸ்துமஸ்க்கு பணம் தருவதுடன் , சட்டை, பேண்ட் எடுத்துத் தருவாள். காலம் சோலையம்மாளை மாற்றும் என்று ஏமாந்தவர்கள் அதிகம்.
    
    பேயாய் வந்த லாரி ,கட்டுப்பாட்டை இழந்து , சாலையின் தடத்தில்  இருந்து விலகி, எமனாக மாறி சோலையம்மாளை நோக்கி வர, எங்கிருந்தோ வந்த அம்பாசிடர் மகால் சாலையிலிருந்து குயவர் சாலை நோக்கி விரைய , லாரி அம்பாசிடரில் மோதி நின்றது. பாவம் சரஸ்வதி, லாரி மோதிய வேகத்தில் அம்பாசிடரின் டயர் வெடித்து , அதிர்ச்சியில் தார்சாலை பிளந்து , அருகில் இருந்த கருங்கல் , பறந்து, அவளின் பொட்டைப் பதம் பார்க்க  மூர்ச்சையாகி இறந்தாள். ஒருநிமிடம் என்ன என்று அறிவதற்குள் , எல்லாம் முடிந்தாகி விட்டது. சாலையோர வியாபாரிகள் சோலையம்மாளையும் தாண்டி , எமனையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. சரஸ்வதியின் சாவைத் தூரத்தில் இருந்து பார்த்த எவரும் இரண்டு நாள் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், இவள் எதையும் பொருட்படுத்தாமல், கடையை நடத்தி, பெங்களூரு அய்யங்கார் பேக்கரியில் பப்ஸ் வாங்கிச் சாப்பிட்டாள். தரையில் சிந்திய இரத்தம் கூட ஈரம் காயவில்லை.

  அரைமணி நேரத்துக்குள் , சர்ச் வாசல் சரஸ்வதி இறந்ததற்கான எந்தச் சுவடும் இல்லாமல், மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பியிருந்தது. பிறப்பும் , இறப்பும் சகஜமாகி விட்ட , மதுரையில் ஒருவர் வாழ்ந்த அடையாளங்கள் அவன் வாழ்ந்து முடிந்த சில நிமிடங்களிலே அழிக்கப்படுவது சர்வ சாதாரணம். அவள் சிந்திய இரத்தம் மண்ணோடு மண்ணாகி அவளைப்போலவே காணாமல் போயிருந்தது. மனிதர்கள் மனதளவில் ஊனப்பட்டவர்கள் என்பதை உணராமலே, ஊனமான சரஸ்வதி செத்துப்போனாள்.
   சோலையம்மாள் எதையும் பொருட்படுத்தாமல் , தன் வேலையைப் பார்த்தாள். ஜோசப் கோபம் பீறிட்டு, ”நீ.. யெல்லாம்…மனுசியா… கண் எதிரில சாவு நடந்து இருக்கு..கொஞ்சம் கூட ஈவு இரக்கம் பார்க்காம,, கடையைத் திறந்து வியாபாரம் பண்ணுறே…”   
”நான் செத்தாலும் இப்படித் தான் எவளாவுது பொழப்பு பார்ப்பாள்.. போடா.. பெரிசா பேச வந்திட்ட… லாரி இந்நேரம் எம்மேல மோத வேண்டியது.. எதோ உயிரோட இருக்கேனேன்னு சந்தோசப்படு..பெரிசா..வந்திட்டே.. மாராப்பப் பார்த்து  வரிஞ்சுக் கட்டிக்கிட்டு, என்னோட சண்டைக்கு வந்த விபச்சாரி.. பசங்க… அவ செத்தவுடனே தன்ன சாட்சிக்கு போலிஸ் கூப்பிடுவான்னு ஓடி ஒளிஞ்சுக்கிட்டாங்க….கடையை இழுத்து மூடிகிட்டானுங்க, அவ செத்த இடம் இது .. அதில அவளுக்கு மரியாத செலுத்தும் விதமா.. இன்னும் போட்டியாதான்யா வித்துக்கிட்டு இருக்கேன்.. அவ செத்ததுக்கு நான் தான் சாட்சி …எவன் சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் கூண்டு ஏறி சாட்சி சொல்லப்போறேன்..அவ குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வாங்கித் தருவேன்… நாம தத்து எடுத்து வளர்ப்போம்ய்யா ”என்று கண்ணீர் விட்டாள். வெப்புத் தாங்காமல் வெடிக்கும் கோடைக்கால பருத்திப்போல, இவனின் வார்த்தைகள் பொறுக்காமல் அவள் வெடித்து சிதறினாள். கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக ஊற்றியது. ஜோசப் கூட்டித்தள்ளிய குப்பைகளுக்கு நடுவில் அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.  
     சோலையம்மாள் கடை முன் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. அவளின் குரல் சர்ச் வாசலில் அமர்ந்திருக்கும் ஜோசப்க்கு கேட்டது. “ உங்கள உங்க ஆத்தா நல்ல நேரத்தில தாண்டா பெத்துப்போட்டுயிருக்கா…. கொஞ்சம் முன்னாடி பள்ளிக் கூடம் விட்டுருந்தா.. நீங்களும் சேர்ந்து எமலோகம் போயிருப்பீங்கடா. . பாவம் சரஸ்வதி ….அவ வாங்கியாந்த வரம் அவ்வளவு தான் … எந்த (பெண் உறுப்பின் பெயர் சொல்லி திட்டினாள்)மவனும்  அவள தூக்க வரலை… பொட்டுன்னு போயிட்டா..”     

அழகர் சாமியின் குதிரை-திரை விமர்சனம்

 கோவில் மரக் குதிரை திருட்டு போக , அதனை தொடர்ந்து கிராம மக்கள் போலீஸ்க்கு போய் புகார் கொடுக்க, இடைப்பட்ட தருவாயில் நிஜமானக் குதிரை கிடைக்க , ஊர் மக்களுக்கு அதனால் நன்மை கிடைப்பதாய் உணர்ந்து , நிஜக் குதிரையை வைத்தே ஊர் திருவிழா நடத்த முடிவெடுத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய , குதிரைக்கு சொந்தக் காரன் வந்து குதிரையை கண்டு பிடிக்கிறான்.ஊர் மக்கள் அவனுக்கு குதிரையை தந்தனாரா ?    குதிரை கிடைத்ததா? திருவிழா நடந்ததா? என்பது தான் அழகர் சாமியின் குதிரை.

   கிராமத்து மணம் படம் முழுவதும் வீசுகிறது.   கிராமத்து நக்கல், அதுவும் மதுரையை ஓட்டிய பகுதி என்பதால் கேட்கவா வேண்டும். பாஸ்கர் சக்தியின் எழுத்து(கதையே அவருடையது தான் என்பதாலும்) கதைக்கு வலு சேர்க்கிறது.வசனத்தில் நாத்திக தன்மை அதிகம் வீசினாலும் அவை எதார்த்தமாக கிராமத்து நக்கலாக வந்திருப்பதால் சபாஷ் பெறுகிறது. தேனியின் மலை அழகு கேமராவில் அப்படியே வந்துள்ளது படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆகும்.  ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் நம்மை மலை கிராமத்திற்கே அழைத்துச் செல்கிறார். பாராட்ட வேண்டியவர்.

சுசீந்திரன் மூலக் கதையிலிருந்து நழுவாமல் கதையை அப்படியே கொடுத்துள்ளது சாபாஷ். கிராமத்து காதலுடன் , அழகர் சாமியின் காதலை இணைத்து சுவரசியமாக தந்துள்ளது அருமை. கிராமத்து நாட்டாண்மையும், வாத்தியாரும் இயல்பாக நடித்து படத்தில் கிராமத்து இயல்பை அப்படியே பிரதிபலிக்கின்றனர். “நான் மாகான் அல்ல “ தொடர்ந்து சுசீந்திரன் கொடுக்கும் அருமையான படம் இதுவாகும். முற்றிலும் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து படத்தை இயக்கி இருப்பதும், டைட்டில் கார்டில் புதிய மாற்றம் செய்திருப்பதாலும் சுசீந்திரன் பாராட்டுப் பெறுகிறார்.

    இளையராஜாவின் இசை பார்வையாளர்களை கிராமத்துக்குள் கொண்டு செல்வதுடன் , கதையோடு ஒன்றிணைந்து மெருகூட்டுகிறது. ஆங்காங்கே மேற்கத்திய இசை வாடை யடித்தாலும் அது பொதுவாக வெளியில் தெரியாமல் , கதைக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே உள்ளது. குதிக்கிர குதிக்கிர குதிரை... பாடல் அருமை.

  அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த திரைப்படம் -அழகர் சாமியின் குதிரை.
     
    

Thursday, May 12, 2011

தேர்தல் முடிவு தெரியும் முன்னே கலங்கடிக்கும் தேர்வு முடிவுகள்...!



     காலை ஒன்பது மணி என் நண்பர் கல்யாண் ஜி யிடம் இருந்து அழைப்பு,” முதன்மை கல்வி அலுவலகம் உடனே வாருங்கள் ”. ஏதாவது விசயம் இல்லாமல் அழைக்கமாட்டார் என்பது எனக்கு தெரியும்.  உடனடியாக கிளம்பினேன்.  கடல் அலைப் போல மக்கள் கூட்டம். எதற்கு ?என்று புரிய வில்லை. அலுவலக நுழைவாயிலில் வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் தடுக்க , என்னை பற்றிய அறிமுகம் செய்யும் முன்பே, வண்டியை உள்ளே விடுப்பா என்று தெரிந்த முகம் குரல் கொடுக்க , ஜனத் திரளின் நடுவே வாகனத்தை உருட்டிச் சென்றேன்.  
      
     “ உங்களிடம் நேற்றே ஒரு போஸ்ட் , இது சம்பந்தமாக எதிர்பார்த்தேன். பிளாக்கில் எதுவும் இல்லை என்பதால் அழைத்தேன் ”என்றார். படத்தைப் பார்த்தால் கூட்டம் எவ்வளவு என்பது தெரியும். நேற்று மதுரையில் மட்டும் நான்காயிரம் படிவங்கள் விற்று தீர்ந்து விட்டன. ஆம். தேர்வு முடிவுகள் வெளியாகி யுள்ள நிலமையில் , தங்களின் விடைத்தாளை திருத்திய பின் எடுத்த மதிப்பெண் சரியா என பார்ப்பதற்கு , விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க , விண்ணப்பம் வாங்க வரிசையில் காத்திருப்போரின் கூட்டம் தான் என விளக்கம் அளித்தவுடன் எனக்கு விபரம் புரிந்தது. விண்ணப்ப படிவ விலைரூ300.   



விடைத்தாள் நகல் பெற ஆர்வமுடன் முதன்மை கல்வி அலுவலரின் வாகனத்தின் மீது வைத்து படிவம் நிரப்பும் மாணவர்கள்.


                                                   கூட்டத்தின் ஒரு பகுதி.

 தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் வெகுஜனங்களுக்கு , தேர்வு முடிவுகள் மீது ஒரு அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பதுடன் , தன் குழந்தைகளின் எதிர் காலத்தின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பிரதிபலிப்பு தான் , இப்படி பட்ட கூட்டத்திற்கு காரணம்.

   ஒரு வருடம் இரவு பகலாக முழித்து படித்த மாணவர்களுக்கு தன் ஆசிரியரின் விடை திருத்தல் பணியின் மீது சந்தேகம் என்பதை தான் விண்ணப்பிப்பவரின் அதிகப்படியான எண்ணிக்கை உறுதி செய்வதாக உள்ளது.


     தேர்வுத் துறை , சென்ற வருடமே , இது போன்ற , நகல் பெற்றவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து , அதிகப் படியான மதிப்பெண் பெற்றதால், பல ஆசிரியர்களை கடுமையாக கண்டித்ததுடன் , சஸ்பெண்டு செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. இப்படி இருக்கையில் மீண்டும் இந்த கூட்டம் , ஆசிரியர்கள் மீது அளவுக்காதிகமான அவ நம்பிக்கை கொண்டுள்ளதையே  நிருபிப்பதாக உள்ளது.

  ஏன்? நகல் பெறுகின்றனர்.  கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கவே. மருத்துவத்தை விட , இன்ஞினியரிங் சீட் கட்ஆப் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் என்பதாலும் கட் ஆப் அதிக வித்தியாசத்தில் உயரலாம் என்பதாலும் கணிதம், மற்றும் இயற்பியல் , வேதியல் படங்களில் நகல் பெறவே அதிகம் மாணவர்கள்  விண்ணப்பிக்கின்றனர். கணிதத்தில் இரண்டு மதிப்பெண் என்பது ஒரு கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்க செய்யும்.


என்னுடைய கேள்வி...
1. திருத்திய விடை தாளில் ஆசிரியர் நன்றாக திருத்தி யிருக்க வாய்ப்பு இல்லை. மேலும் பிழை இருக்கும் என்று நம்பிக்கை இருக்க போகவே தானே இந்த நகல் பெறும் நடவடிக்கை.  அப்படி என்றால் மதிப்பீடு என்பதே தவறு தானே?

2. தாங்கள் எழுதிய விடைகளுக்கு இந்த மதிப்பெண் தானே கிடைக்கும் என்று முன்கூட்டியே தெரிந்த பின்பும் எதற்காக மாணவர்கள் விடைத்தாளின் நகல்
பெற்று , அதை சரி பார்க்க வேண்டும்.  ஏனெனில், நம் தேர்வு முறையே தவறாகும். நாம் மனப்பாடம் செய்து அப்படியே வாந்தி எடுக்கும் முறையை கொண்டுள்ளோம். அல்லது மீண்டும் மீண்டும் எழுதி அதை அப்படியே குறிப்பிட்ட நேரத்தில் பிழையின்றி எழுத பயிற்சி கொடுத்துள்ளோம். இப்படி இருக்க வகுப்பறையில் திறமை வாய்ந்த மாணவர், சுமாரான மாணவர் தன்னை விட மதிப்பெண் அதிகம் பெற்றதால், ஏன் நாமும் மதிப்பெண் பெற நகல் பெற்று பார்ப்போம் என விண்ணப்பிக்கிறான்.

3. மருத்துவம் , பொறியியல் சீட்கள் திறமையில் அடிப்படையில் மாணவனை சோதித்து கொடுப்பதில்லை. கடந்த நான்கு வருடங்களாக , பொது தேர்வு முறை நீக்கி, கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் பெறுவதால், மாணவன் பெற்றுள்ள தகுதி (அதாவது மதிப்பெண் ) அடிப்படையில் தேர்வு பெறுகிறான். இண்டலெக்சுவல் திறன் கொண்ட மாணவர் இதில் எதாவது ஒரு இடத்தில் சோர்ந்து , மூளைக்கு வேலை கொடுத்து , தகுதி இழக்க வாய்ப்பு அதிக மென்பதாலும் , நான் இந்த தேர்வு முறையினையும், அதன் மதிப்பீடு தன்மையையும் வெறுக்கிறேன். அதுவும் நகல் பெற காரணமாகும்.

4.  பெற்றோர்களுக்கு தன் குழந்தைகளின் படிப்பு மீது சந்தேகம் அல்லது தங்களின் கனவு நசுங்கி விடக்கூடாது என்பதன் ஆதங்கம் , எவ்வளவு ரூபாய் செலவானாலும் கொடுக்க தயார். குழந்தைகளின் விருப்பம் யார் கையில்?

5. மறு கூட்டலில் மதிப்பெண் அதிகம் பெறுகிறான் என கொள்வோம். அப்படியானல் , ஆசிரியர்களுக்கு தன் பணியின் மீது ஆர்வம் இல்லையா ? இல்லை அரசு இந்த ஆசிரியர்களுக்கு தேவையான போதுமான வசதிகள் விடைத்தாள் திருத்த ஏற்படுத்தி தரவில்லையா? கொடுக்கப்படும் பணம் தான் பத்த வில்லையா? இதில் கோடை விடுமுறை ஈடுசெய்ய கூடுதல் விடுமுறை ஏன் ?


இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தவர்கள் பதில் கூறுங்களேன்.


Thursday, May 5, 2011

வெளிச்சத்திற்கு பின் ...

  எதை எழுதுவது என்று தெரியாமலே எழுதுகிறேன். நீண்ட நாட்கள் எழுத மறந்ததால் ஏற்பட்ட விளைவா? இல்லை எழுத்து என்பது  கருத்துகளுக்குள் அடைப்பட்ட ஒன்று என்ற சிந்தனையால் வந்ததா? பொருள் அற்று எழுதுதல் சுவரசியம் அற்றதாக அமைந்து விடுமோ? ஆனால் ,இன்று எதையாவது எழுதவேண்டும் என்று முடிவுக்கு வந்து   அமர்ந்த போது தான், நடுத்தர வர்க்கத்தினர் வயிற்று பசிக்கு எதையாவது அடுக்களையில் தேடி ,பசியை போக்க போராடும் உணர்வு ஏற்பட்டு ,எழுத தேடி அவதிப் படுகின்றேன்.

      தினமும் காலை எட்டு மணிக்கு எழுந்து ,தன் இயந்திர வாழ்வைத் தொடரும் ஒருவன் , திடீரென அதிகாலை  ஐந்து மணிக்கு எழுந்து , சூரிய உதயத்தின் முன் அமைதியாக இருக்கும் தெருவில் , அந்த ஊசியாய் துளைக்காத வெது பனியில், மெல்ல நடந்து , அதன் இதமான குளிரில் , வீதியின் அழகை ரசிக்கும் போதே, குளித்த தலையுடன் துண்டை தலையில் கட்டி, கையில் மாவெடுத்து கோலமிடும் மகளிரை  ரசித்துக் கொண்டே விதிகளை விட்டு வெளிவந்து , வயல் பரப்புகளின் ஓரங்களின் நடக்கும் போது , கண்களுக்கு கிடைக்கும் பசுமையும் , அதன் குளுமையும், அதனையும் மீறி நம் பார்வையை கவரும் நாரை, காடை , குருவி , காகம் ஆகியவற்றின் குரல் இனிமை , பறவைகளுடன் நம்மையும் பறக்க செய்யும் அதிர்ஷ்டம் கிடைக்கப் பெற்றவனாக , நான் கருத்தின்றி இதை எழுதும் போது , ஆனந்தம் கிடைக்கிறது என்படை உணர்ந்தேன்.
     
        கதையை எழுதுவதா? கதைக்குள் அடைப்பட்ட கருத்தை எழுதுவதா? கதை சொல்லும் சமூக விழிப்புணர்வை எழுதுவதா? சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கும் போலியான ஓட்டு முறையையும் , நட்பு என்ற முறையில் போடப்படும் போலியான விமர்சனத்தையும் , ஆஜர் அய்யாவையும் பற்றி எழுதுவதா? எல்லாவற்றையும் எல்லோரும்  எழுதி விட்டார்கள் ! எழுதாத ஒன்று எது ? என் நண்பன் ஸ்ரீ சொல்வான், ”எல்லாவற்றையும் எல்லாரும் எழுதிவிட்டார்கள் , ஆனால் , நீ எதை எழுத வேண்டும் என நினைத்தாலும் ,அதை எழுதும் முன் அதை வேறு யாரும் எழுதி விட்டார்களா ? என பார்த்துவிடு ,நிச்சயம் அது எழுதப்பட்டு இருக்கும் , ஆனால் , அதை வேறு ஆங்கிலில் யோசித்துப் பார், சொல்லும் முறையை , நடையை , உத்தியை , சொல்ல முயலும் தன்மையை .... அப்போது தான் நீ இலக்கிய உலகில் அறியப்படுவாய்”.  

    ஒன்று மட்டும் தெரிந்துக் கொண்டேன். நிறைய படிக்க வேண்டும். நிறைய படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நம்  மனம் கவரும் வகையில் எழுத முடியும். ஆம். ஒருவனுக்கு தன்னையே பிடிக்க வில்லையென்றால் , எப்படி பிறருக்கு பிடிக்கும் .  முதலில் எழுதும் எனக்கு பிடிக்க வேண்டும். அதற்கான முயற்சி தான்  சாருவையும், ராமகிருஷ்ணனையும் படித்துக் கொண்டு இருக்கிறேன். அவர்களின் இருள் நிரம்பிய பக்கங்களை பார்த்து வியப்படைந்துள்ளேன் .  இருள் சிலருக்கு பழகிய ஒன்று . சிலர் இருள் என்ற வார்த்தையை கேட்டாலே ஓடி ஒளிந்து விடுவர். இருளில் சர்பம் பார்த்து பயந்து ஓடிய எதிர்வீட்டுக் காரனால் , இன்றும் இருள் என்றால் பாம்பின் ஞாபகம் வந்து விடும்.  சாருவின் ஸீரோ டிகிரி படித்த பின் சர்ப்பம் வேறு அர்த்தம் பட்டது. அதற்காக மட்டமாக சிந்திக்க வேண்டாம். சாருவின் அழுத்தமான உணர்வு ரீதியான எழுத்தில் பாலியல் வன்மத்தை புதிய கட்டமைப்புடன் தந்திருக்கும் புதுமை வியக்க வைத்தது. அதே போல் எஸ். ரா. வின் உறுபசி வேகமான நடை, உணர்வு பூர்வமான பகிர்வாக அமைந்துள்ளது.   

     என் மனம் எதையாவது எழுதியே தீர்த்து விட வேண்டும் என துடித்து , துடித்து , இன்றைய வெகுஜன வார இதழ்களைப் போல இலங்கை உத்த களம் சார்பான கதைகளை , ஐ. நா . சபை இலங்கை ராணுவத்தின் கொடுமைகளை அம்பலப் படுத்தியதால் , பர பரப்புக்காக எழுதி தள்ளுவதா ? இருப்பினும் என் மனம் இவ் விசயத்தில் இருள் அடைந்ததால் , மீண்டும் இருள் மீதே என் பார்வையை திருப்புகிறேன். கால் கேட் விளம்பரம் போல பூதத்தை கண்டு பயப்படாத  மனிதன் உண்டா? என் மூத்த மகள் இருளில் மெழுகு வர்த்தி ஏற்றி , இருளில் நிழல் உருவத்தை ஏற்படுத்தி விளையாடும் பொது எனக்கு இருள் பிடிக்கும். இருளில் கொடிய மிருகங்கள் செய்து அதற்குரிய குரல் கொடுக்கும் போது , அவைகள் நமக்கு பிடித்துப் போகின்றன. ஆம், நிஜத்தில் பயப்படும் சில வியங்கள் நிழலாக தெரியும் போது பயமின்றி பிடித்து தான் போகின்றது.

    நண்பா எதையாவது எழுத வேண்டும் என்று எழுதி விட்டேன். தயவு செய்து ஏன் இது நாள் வரை எழுத வில்லை என்று மட்டும் கேட்டு விடாதே , நீ கேட்கவும் மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் இதை கூறுகின்றேன் . . சொல்லுவதா ? வேண்டாமா என்ற குழப்பமெல்லாம் இல்லை . நீ எனக்காக வருந்துவதை தவிர்க்கவும் விரும்ப வில்லை. இருப்பினும் நடந்து முடிந்த ஒன்றை பேசி பிரோஜனமில்லை.   நீயும் என்னைப் போல மனம் படைத்து என்னிடம் கேட்காமலும் இருந்திருக்கலாம். நல்லது . இது வரை எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் .  நம்பிக்கையில் தான் நாளை கடத்த முடியும் . நான் இப்போதெல்லாம் இருளில் நம்பிக்கையுடன் , அதன் உட்புகுந்து ஆந்தை கண்களால் , எழுதுவதற்கான இரை கிடைக்கிறதா என கூர்ந்து கவனிக்கிறேன்.  நண்பா , இருளில் நடக்க பழகிக் கொள் . வெளிச்சத்திற்கு பின் ஒளிந்துள்ள பல விசயங்கள் நமக்கு புலப்படும்.