Monday, September 22, 2014

புத்தக விமர்சனம்.

’என் முதல் ஆசிரியர்’ – சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய ரஷ்ய மொழி குறுநாவல். இதை தமிழில் பூ. சோமசுந்தரம் என்பவர் மொழி பெயர்த்துள்ளார். புரட்சிக்கு பிந்தைய சோவியத் சமுதக்த்தில் குர்க்குரீ என்ற கிராமத்திற்கு வரும் துய்ஷேன், கல்வியறிவு இல்லா கிராமத்தில் தனிமனிதனாக பள்ளிக்கூடம் தொடங்கப் போராடுகிறார். அம்மக்களின் கேலிகளையும் புறக்கணிப்புகளையும் தாங்கிக் கொண்டு, அக்கிராமத்தின் நிலப்பிரபுக்கள் காலி செய்து விட்டுப்போன குதிரைக் கொட்டடியில் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கின்றார்.
    எந்த படிப்பறிவு வாசனையும் இல்லாத அக்கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை வேண்டா வெறுப்பாகவே அனுப்பி வைக்கின்றனர். துய்ஷேன் பள்ளியை ஆரம்பிப்பதற்காக வீடுவீடாக சென்று குழந்தைகளை தூக்கி வருகின்றார். அப்படி அப்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டவர் தான் இக்குறுநாவலின் நாயகி அல்டினாய்.


    தாய்-தந்தை இருவரையும் இழந்து அநாதையாகிவிட்ட இளம் சிறுமி அல்டினாய், அவளது சித்தியால் கொடுமைப்படுத்தப்படுகிறாள். அல்டினாய் பள்ளிக்கு செல்வதை அவள் விரும்பவில்லை. அவளுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்கின்றார். சித்தியை மீறி அல்டினாய் படிப்பை தொடர துய்ஷேன் என்ன உதவி செய்தார் என்பதை மிகவும் பரபரப்போடு ஆழ்ந்த துக்கத்துடன் கதை விவரிக்கிறது.
அல்டினாயின் முதல் ஆசிரியர் துய்ஷேன், முறையான ஆசிரியர் பயிற்சி பெற்றவர் அல்ல. அவருக்கு இலக்கணம் தெரியாது. பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையும் தெரியாது. ஆனால் அவரால் ஆரம்ப எழுத்தறிவைக் கற்றுத்தர முடிந்தது.  
   அவரால் அல்டினாய் போல் பல பிள்ளைகளுக்கு  ஒரு புத்தகமும் இல்லாமல், சாதரண பாலப்பாடகப் புத்தகம் கூட இல்லாமல், குழந்தைகளுக்கு கற்றுத்தர முடிந்தது. அந்த குழந்தைகளால் அவரின் மண் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு புதிய ஆச்சரியமான உலகத்தை பார்க்க முடிந்தது.
காலத்திற்கும் மாறாத வசனங்கள் இந்த குறுநாவலில் இடம் பெற்றுள்ளன.
“துய்ஷேன் டீச்சரா கட்டைச் சுமந்து செல்கிறார்?”
“அவனே தான்”
“பாவம் , ஆசிரியர் வேலைகூட சுலபமானது இல்லை போலிருக்கிறது “
“நீ என்ன நினைத்தாய்? பார், கொத்தடிமைக்கு எந்த விதத்திலும் குறையாமல் எவ்வளவு சுமக்கிறான்”
மாணவர்கள் ஆசிரியர் உறவை மிகவும் அருமையாக இக்குறுநாவல் எடுத்துரைக்கிறது. ஆசிரியர் மூன்று நாட்கள் விடுப்பு எடுக்கிறார். அவர் வரும் நாளுக்காகக மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.இன்றும் நல்லாசிரியர்களுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அல்டினாய் அவளுடைய ஆசிரியருக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் அவஸ்தையை இவ்வரிகள் நமக்கு எடுத்துரைக்கும்.
“எங்கே ஆசிரியரே, எங்கே உங்களைக் காணோம்? உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தாமதப்படுத்தாதீர்கள், விரைவில் திரும்பி வாருங்கள். நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றோம். புரிகின்றதா? ஆனால் ஓர் ஆள் கூட தென்படவில்லை”    
குர்க்குரீ கிராமத்துப்பண்ணை விவசாயிகள் சேர்ந்து கட்டிய புதிய பள்ளிக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்காக அந்தக் கிராமத்தின் முதல் ஆசிரியரும், முதல் கம்யூனிஸ்டுமான துய்ஷன் அழைக்கப்பட்டு பெருமையும் , கவுரவத்தையும் அடைந்திருக்குமாறு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாசுமருவற்ற பொன் போன்ற அந்த அம்மனிதர் வாழ்த்துத் தந்திகளை விழாவிலிருந்தவர்களிடம் சேர்ப்பதற்காகச் சிரமப்பட்டு சவாரி செய்கிறார். மற்ற தந்திகளைக் கொடுப்பதற்காகவும் அவர் போய் கொண்டிருக்கிறார். இதுமாதிரியான சம்பவங்களை நாம் தினமும் எதிர்கொள்ளவே செய்கிறோம். ஆகையினால்தான் குறநாவலின் நாயகி அல்டினாய் எழுப்புகிற இந்த கேள்வியை நமது இதயமும் வேதனைப் பெருமூச்சினிடையே எதிரொலிக்கிறது என இக்குறுநாவலுக்கு முன்னுரை எழுதிய கமலாலயன் கூறுகிறார்.

கிராமத்து பள்ளிக் கட்டிடத்திறப்புவிழாவில் கலந்து கொள்ளும் கல்வித்துறை அறிஞர் அல்டினாய் , விழாவிலிருந்து உடனடியாக இரயில் ஏறி சென்றுவிடுகின்றார். அதன்பின் அவ்விழாவில் கலந்து கொண்ட இலக்கிய படைப்பாளியும் ஓவியருமான இளைஞருக்கு எழுதும் கடிதத்தினால்  வாரலாறாக வளர்ந்து நிறைவு பெறுகிறது இந்நாவல்.

ஆசிரியர்கள் இச்சமுகமாற்றத்திற்கு எவ்வளவு பாடுபடுகின்றனர் என்பதையும், அவர்களுக்கு உரிய மதிப்பு எப்போதும் அளிக்கப்படுவதில்லை என்பதையும் ’முதல் ஆசிரியர்‘ மிக அழகாக எடுத்துரைக்கிறது. இந்நாவல் காலத்தால் முற்பட்டாலும் இளம் வயது திருமணம் என்பது இன்றும் தொடர்கதையாக வருகின்றது என்ற வகையில் அனைவரும் படிக்க வேண்டிய நாவல் ஆகும்.
வெளியீடு : புக் பார் சில்ட்ரன்
விற்பனை உரிமை: பாரதிபுத்தகாலயம்
விலை. 40/-

Saturday, September 20, 2014

அணிலும் மாயமாய் மறையும் குதிரையும்- சிறுவர்களுக்கான கதை


பள்ளி முடிந்து வந்த முகிலன், வீட்டில் தன் அக்கா அகிலா இல்லாததால், அவளைத் தேடிக்கொண்டு சென்றான். எப்போதும் விளையாடும் அந்த புங்கைமரத்தடியில் தேடினான். அவள் அங்கு இல்லை. அம்மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த ராகவனிடம் தன் அக்காவை பற்றி விசாரித்தான். அகிலா அடுத்த தெருவில் வசிக்கும் ரேகாவிடம் பாரதியார் பற்றிய புத்தகம் பெற்றுவர சென்றிருப்பதாக கூறினான். 
முகிலன் வேகமாக தன் அக்காவைத் தேடி அடுத்த தெருவிற்கு ஓடினான்.

அவன் சிறிது தூரம் நகர்ந்து இருப்பான். அவனை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தான். ஓட்டத்தை தளர்த்தி நின்று திரும்பி பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை யாரும் தென்படவில்லை. ஏன் அப்படி எண்ணத்தோன்றியது என்றபடி நடந்தான். 

அவனுக்கு முன்னால் விரைந்து ஓடிய அணில், அவனை திரும்பி பார்த்தது. “என்ன முகிலா, நின்றுவிட்டாய், மூச்சு திணறுகிறதா ? “ என்றது. 

முகிலன் குரல் மட்டும் கேட்கிறது யாரும் இல்லையே என பயந்தான். முகிலா பயப்படாதே , நான் தான் அணில் பேசுகின்றேன் என்றது. தனக்கு முன்னால் நிற்கும் அணிலை பார்த்து ஆச்சரியப்பட்டான். உனக்கு பேசத்தெரியுமா? என்று கேட்டான். ஏன் தெரியாது? தினமும் நீங்கள் புங்கை மரத்தடியில் இருந்து விளையாடும் போதும் , அம்மரத்தடியில் இருந்து கதைகள் கூறும் போதும் நான் கேட்டு இருக்கின்றேன். உங்களிடம் இருந்து நான் பேசக்கற்றுக்கொண்டேன் என்றது அணில்.

அப்படியானால் நீ தான் என்னை பின் தொடர்ந்தாயா? என்றான் முகிலன். ஆம் என்றது அணில். ஏன் நீ என்னுடன் ஓடி வருகிறாய்? என கேட்டான் முகிலன். நீண்ட நாட்களாக பாரதியார் பற்றி அறிந்து கொள்ள ஆசை. உன் அக்கா பாரதியார் பற்றி புத்தகம் வாங்கி வருவதாக கேள்வி பட்டேன் அதான் உன்னை பின் தொடர்ந்தேன் என்றது அணில். 

பாரதி பற்றி உனக்கு தெரியுமா? என்றான் முகிலன். அதான் நீங்கள் அடிக்கடி ஓடி விளையாடு பாப்பா என பாடியபடி அந்த மரத்தை சுற்றி விளையாடுவீர்களே அப்போது இருந்தே அவர் யார் என அறிந்து கொள்ள ஆசை என்றது அணில். 

சரி வா அக்காவிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் என இருவரும் ரேகா வீட்டை நோக்கி ஓடினார்கள்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்று கூறிய பாரதி, சமஸ்கிருதம், பிரான்ஸ், வங்காளம், இந்தி , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்று திகழ்ந்துள்ளார் என்றாள் அகிலா. தூரத்தில் தனியாக பேசிக்கொண்டு வரும் முகிலனை பார்த்ததும் ரேகா, அகிலாவின் பேச்சை நிறுதி, “ அகிலா உன் தம்பி தானாக பேசிக்கொண்டு வருகின்றான் அங்கே பார்” என்றாள்.

என்னடா, நீயா பேசிகிட்டே வருகிறாய்? என்றாள் அகிலா. அக்கா நானா பேச வில்லை. இதோ இந்த அணிலுடன் தான் பேசிகிட்டு வருகின்றேன் என்றான். என்ன அணில் பேசுகிறதா என இருவரும் ஒருசேர கேட்டனர். ஆமாம் , நான் தான் அணில் பேசுகின்றேன் என்றது அணில். ஆச்சரியமாக பார்த்தனர். நம்ம கதையை நாம் பேசலாம். பாரதியார் பற்றி புத்தகத்தில் படித்து சொல்லுங்கள் என்றது அணில். ஓ பாரதி பற்றி தெரியணுமா? என கேட்டாள் ரேகா.

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும் என வாசிக்க தொடங்கினாள் அகிலா.

நான் ஒண்ணும் புத்தகத்தை வரிக்கு வரி வாசித்து காட்டச் சொல்லவில்லை. அவரை பற்றி சுவரசியமான தகவல் இருந்தால் சொல்லுங்கள் என்றேன் என்றது அணில். ஓ உனக்கு புத்தகம் படிக்க தெரியுமா? என கேட்டாள் ரேகா. ஏன் தெரியாது? உங்களிடம் இருந்து பேசக்கற்ற நான் , வாசிக்கவும் கற்றுக் கொண்டேன் என்றது அணில்.

“வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர். பாரதி “ என்றாள் ரேகா. இப்படித்தான் அறிய தகவலை பரிமாறச் சொன்னேன் என்றது அணில்.

“மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார் தெரியுமா?” என்றான் முகிலன்.

“சேதுபதி மேல்நிலைப்பள்ளி எங்கு இருக்கிறது” என கேட்டது அணில்.

“நம்ம மதுரை இரயில்வே நிலையம் அருகில் இருக்கும் ஹெட்போஸ்ட் ஆபீஸ் அருகில் தான் சேதுபதி பள்ளி இருக்கிறது ” என்றாள் அகிலா.

நாம் அவர் பணியாற்றிய பள்ளியை பார்ப்போமா? “ என்றது அணில். “அய்யோ, அது இங்கிருந்து 5 கிலோமீட்டர் இருக்குமே” என்றாள் ரேகா.

”என் நண்பன் குதிரையை அழைக்கின்றேன், கண்மூடி திறப்பதற்குள் நம்மை அங்கு சேர்த்திருப்பான் “ என்றது அணில்.

“அய்யோ குதிரையிலா எனக்கு பயமா இருக்கும் “ என்றான் அகிலன். “பயப்படாதே, அது பறந்து செல்லும் குதிரை . யார் கண்ணுக்கும் தெரியாது. நாம் அதில் ஏறி அமர்ந்ததும் நாமும் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம் “ என்றது அணில். அனைவரும் உற்சாகமாகினர். அகிலா அரை மணி நேரத்தில் திரும்பி விட வேண்டும், இல்லை என்றாள் அம்மா தேடி இங்கு வந்துவிடுவாள் “ என்றாள் அகிலா. “சீக்கிரம் வந்துவிடுவோம் “ என்றது அணில்.

அணில் தன் நண்பன் குதிரையை அழைத்தது. குதிரை கம்பீரமாக வெள்ளை நிறத்தில் தோன்றியது. அனைவரும் ஏறி அமர்ந்தனர். கண்மூடி திறப்பதற்குள் சேதுபதி பள்ளி வாசலில் இறங்கினர். வாட்ச் மேன் அப்போது தான் டீக்குடிக்க சென்றான். நுழைவாயிலில் அனைவரும் நுழைந்தனர். கழுத்தளவு வரை இருக்கும் பாரதி சிலையை பார்த்தனர்.

“ஆஹா , என்ன கம்பீரமாக தோன்றுகிறார். இவர் தான் பாரதியா என்றது குதிரை.

“ஆம், இவனின் கவிதைகள் இதை விட கம்பீரமாக இருக்கும்” என்றாள் ரேகா.

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடியவன் பாரதி “ என்றாள் அகிலா.

“விடுதலைக்கவி மட்டுமல்ல. அவன் பெண்கள் விடுதலைக்காகவும் பாடுபட்டவன் குதிரையாரே” என்றது அணில்.

 "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடியவர் “ என்றாள் ரேகா.

“ஆஹா..சபாஷ் “ என்ற குதிரை தன் நாவல் பாரதியை வருடியது.
“குழந்தைகளுக்காக புதிய ஆத்திச்சூடி எழுதியவர் பாரதி “ என்றான் முகிலன்.

“அவர் பதினொரு வயதில் கவி திறனை வெளிப்படுத்தினார். எட்டையாபுர மன்னர் அவருக்கு பாரதி என்ற பட்டத்தை தந்தான் “ என்றாள் அகிலா.

“அவருக்கு மணிமண்டபம் எட்டையாபுரத்தில் கட்டியுள்ளனர் “ என்றாள் ரேகா.

“அங்கு அவரின் முழு உருவ சிலை 7 அடி உயரத்தில் எழுப்பி உள்ளனர் “ என்றாள் அகிலா.

“அணிலே அணிலே உன் குதிரை நண்பன் உதவியுடன் நாம் இப்போது அங்கு செல்ல முடியுமா? “ என கேட்டான் முகிலன்.

“அய்யோ , அம்மா தேடுவார்கள் . வேண்டுமானால் அவர் பாடம் நடத்திய இந்த பள்ளியின் வகுப்பறைகளை பார்வையிட்டு வருவோம் “ என்றாள் ரேகா.

“இங்கே கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. பழைமையான கட்டிடம் இரண்டு மட்டுமே உள்ளன. வா அதை பார்ப்போம் “ என்றது குதிரை.

அனைவரும் சுற்றி பார்த்து விட்டு திரும்பினர்.

“அவர் எப்படி இறந்தார் ? “ என குதிரை கேட்டது.

“யானை மிதித்ததால், அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார் “ என்றாள் ரேகா.

”கீதையை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார் பாரதி “ என்றாள் அகிலா.

“சரி.. அவரின் கவிதை வரிகளில் உனக்குபிடித்த கவிதையை சொல்லு “ என்றது குதிரை.

அகிலா கவிதை புத்தகத்தை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தாள். நான் சொல்கின்றேன் என்றது அணில்.

அக்கா அம்மா தேடி வரப்போறா வா நேரமாவது என்றான் முகிலன்.

சரி அணில் நண்பா கவிதையை சொல் கேட்டுவிட்டு நாம் கலைந்து செல்வோம். நாளை மீண்டும் சந்திப்போம் என்றாள் அகிலா.
“தேடிச் சோறுநிதந் தின்று
     பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?” என்றது அணில்.

அனைவரும் கைத்தட்டி அணிலை பாராட்டினர்.

“இப்ப ஏன் பாரதி பற்றி பேச்சு வந்தது “ என்றது

”அதுவா, வருகிற செப்டம்பர் 11 பாரதியின் நினைவு நாள் வருகிறது. அதற்கு கட்டுரை தாயாரிக்க வேண்டும் . அதற்காக தான் ரேகா வீட்டிற்கு வந்தேன் “ என்றாள் அகிலா.

“சரி எனக்கு நேரமாகி விட்டது , நான் வருகின்றேன் “ என கூறி பறந்தது குதிரை.

ரேகாவும் எனக்கு ஹோம் ஓர்க் அதிகமா இருக்கு என்று கூறி விடைப்பெற்றாள்.

முகிலனும், அகிலாவும் ,அணிலும் நடந்தவண்ணம் பாரதி பற்றி பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

நாளைக்கு புதிசா வேறு விசயம் பேசுவோம் மறக்காம வந்துடங்க என்று கூறி புங்கை மரத்தில் ஏறி மறைந்தது அணில்.

க.சரவணன்.
தலைமையாசிரியர்
மதுரை -9

Friday, September 19, 2014

சிறுவர்களுக்கான சிறுகதை (அறிவியல் புனைவு )

பவானியும் அவளின் டீச்சர் அம்மாவும்

பள்ளியில் இருந்து வேகமாக ஓடிவந்த பவானி தன் அம்மாவை தேடினாள். ஆசிரியராக பணிப்புரியும் அவளின் அம்மா அப்போது தான் பள்ளியிலிருந்து வந்திருந்தார். பவானியின் அண்ணன் ரினேஷ் எதுக்கு அம்மாவை தேடுகிறாய் ? என கேட்டான். உன்கிட்ட அவசியம் சொல்ல வேண்டுமா? என்றாள். அம்மா சமையல் அறையில் சுடு தண்ணீர் வைக்கிறார்கள் என்றான் ரினேஷ். அம்மா என சமையலறையை நோக்கி வேகமாக ஓடினாள்.
எதுக்கு அம்மா, சுடுதண்ணி வைக்கின்றார் என கேட்டாள். ரினேஷ் வரும் வழியில் கீழே விழுந்து அடிப்பட்டு வந்துள்ளான். அவனுக்கு அடிப்பட்ட இடத்தில் துடைத்து , மருந்து போட வேண்டும் என்றாள் பவனாயின் அம்மா லீலா.
அம்மா ஊருவிட்டு ஊரு போகும் போது சில நாடுகளில் விமான நிலையங்களில் அனுமதிக்க மாட்டர்களாமே! என ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“ சில நாடுகளில் உயிரை பறிக்கும் தொற்று நோய்கள் அந்நாடு முழுவதும் பரவி இருக்கும். அந்நாட்டில் இருந்து வருபவர்கள் அந்நோயை வருகின்ற நாட்டில் பரப்பும் அபாயம் உள்ளதால், தீவிர பரிசோதனைக்கு பின்பே நாட்டினுள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றாள் லீலா டீச்சர்.
”அம்மா, சமீபத்தில் தேனியை சேர்ந்த ஒருவரை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்கு பின்பே அனுமதித்ததாக செய்தியில் படித்திருக்கின்றேன்” என்றான் ரினேஷ்.
”சரியா சொன்னாய். எபோலோ வைரஸ் தொற்று இருக்ககூடும் என்று அவரை சந்தேகித்தனர். தீவிர பரிசோதனைக்கு பின்பே அவரை தேனிக்கு அனுப்பி வைத்தனர்.” என்றாள் லீலா டீச்சர்.
“காங்கோ நாட்டில் இருந்து அவர் வந்ததால், அவருக்கு எபோலோ இருக்கும் என்று சந்தேகப்பட்டனர். அவருக்கு காய்ச்சல் இருந்ததால், உள்ளே அனுமதிக்க வில்லை என்று என் நண்பர்கள் சொன்னார்கள், அம்மா ” என்றான் ரினேஷ்.
“அம்மா அதற்கு எபோலோ என்று ஏன் பெயர் வைத்தார்கள் ?” என கேட்டாள் பவானி.
“மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலோ ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்நோய்க்கு ‘எபோலோ வைரஸ்’ என பெயர் வைத்தார்கள்” என்றாள் லீலா டீச்சர்.

”ஏன் அம்மா இந்த நோய் காற்றில் பரவுமா? “ என்றாள் பவானி.

“பவானி, இது காற்று, நீர் மூலமா பரவாது.. விலங்குகள் மூலமா பரவும் வைரஸ் என்கிறார்கள். குரங்கு. வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.” என்றான் ரினேஷ்.

“நல்ல பசங்களோட பழகுறதால நல்ல விசயங்களை தெரிந்து வைத்திருக்கின்றான் ரினேஷ். சபாஷ். நோய் உள்ள மனிதனின் இரத்தம் மலம் மூலம் மற்ற மனிதர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது” என்றாள் லீலா டீச்சர்.

“அம்மா, பத்து பேருக்கு நோய் பரவினால் ஒன்பதுபேர் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளதாம். அதனால் இந்நோய் பரவியவர்களை தனியாக வைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமாம். நோயாளிகள் அருகில் செல்லும் போது கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து செல்வதால், அவர்களின் இரத்தம் நம் மீது படாமல் பாதுகாப்பதுடன், பட்டாலும் இந்நோய் தொற்றிக்கொள்ளாமல் தடுக்கலாம் “ என்றான் ரினேஷ்.

“அம்மா, இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன?“

“ எபோலோ நோய் இருக்கிறதா என்பதை அறிய 5 முதல் 21 நாட்கள் தேவை “ என்றாள் லீலா டீச்சர்.
“காய்ச்சல் தான் முதல் அறிகுறி. சரிதானே! “ என்றான் ரினேஷ்.
“டேய் எல்லாம் தெரிஞ்சவனாட்டம் பேசாத.. எல்லாம் நோய்களையும் காட்ட்டிக்கொடுப்பது காய்ச்சல் தான். பேசாம அம்மா சொல்றத கேளு “ என்றாள் பவானி.
“ அவன் சரியா தான் சொல்லியிருக்கான் பவானி. காய்ச்சல் மட்டுமே அறிகுறி அல்ல. காய்ச்சலை தொடர்ந்து உடல் சோர்வுடன் வலிமை இல்லாமல் இருக்கும். தலைவலி வரும். தொண்டையில் புண் ஏற்படும். அதனை தொடர்ந்து தசை மற்றும் மூட்டு வலி பெரும் தொந்தரவு தரும். நோய் முற்றிய நிலையில் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும்” என்றாள் லீலா டீச்சர்.

“அம்மா, வாந்திக்கு பின் வயிறு தான் வலிக்கும். அப்புறம் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூடும். சரி தானே “ என்றாள் பவானி.

“ நீ மட்டும் யோசிச்சு சொன்னா , நாங்க ஏத்துக்கணுமா? “ என்றான் ரினேஷ்.
“ இல்லை பவானி சொல்வது உண்மை. வயிற்று போக்கை தொடர்ந்து சருமத்தில் கட்டிகளும், அரிப்புகளும் ஏற்படும். அதன் பின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும் “ என்றாள் லீலா டீச்சர்.

“ சிறுநீரகம் பாதித்தா.. நெஞ்சு வலி வர வாய்ப்பு உண்டே? “ என்றான் ரினேஷ்.
   
“ ஆமாம் , நெஞ்சு வலி வரலாம், மூச்சு விட சிரமம் கூட ஏற்படலாம். உடலின் உட்புறமும், வெளிப்புறங்களிலும் இரத்தம் வழிய ஆரம்பிக்கும்” என்றாள் லீலா டீச்சர்.
“அம்மா, இன்னைக்கு என் கிளாஸ்மேட் சத்யா.. ஒருபடம் கொண்டு வந்திருந்தான். அதில் கைகளில் கட்டி, உடைந்து இரத்தம் ஒழுகுகிறது. அவர்களின் கண்கள் சிவந்து காணப்பட்டன” என்றாள் பவானி.  

“ஓ , அதான் வந்ததும் வராததுமா. எபோலோ பத்தி விசாரிக்கிறீய்யா? “ என்றான் ரினேஷ்.

“ஏம்மா, இந்நோய்க்கு மருந்து ஏதாவது கண்டு பிடிச்சு இருக்காங்களா? “

“இல்லை. ஆனால், எபோலோ வைரஸை எதிர்த்துப் போராடும் வண்ணம் மருந்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு கொடுகப்பட்டுள்ளன. இந்நோய் மட்டுமல்ல எந்நோயும் நமக்கு வராமல் இருக்க நாம் கைகளை சோப்பால் நன்றாக கழுவிய பின்பே உணவு அருந்த வேண்டும் “ என்றாள் லீலா டீச்சர்.    

பேசிக்கொண்டே ரினேஷின் புண்களை துடைத்து மருந்து போட்டு விட்டாள் லீலா டீச்சர்.

“அம்மா , பசிக்குது. சாப்பிட ஏதாவது தருகிறீய்யா?” என கேட்டாள் பவானி.

“முதல்ல கையை கழுவி விட்டு வா. அப்புறம் சாப்பிடுவது பற்றி யோசிக்கலாம்” என்றான் ரினேஷ்.

“ நான் எப்பவும் கை கழுவி தான் சாப்பிடுவேன். நீ முதல்ல கை, கால் முகம் கழுவி உட்கார்ந்து படிக்க பார் “ என்று கடிந்தாள் பவானி.

”அம்மா, இவ ரெம்ப பேசுறா. சொல்லி வைங்க. அப்புறம் நான் கோபமானா என்ன செய்வேன்னு தெரியாது” என்றான் ரினேஷ்.
“டேய் என்னடா செய்வ.. அப்படி தாண்டா பேசுவேன். எபோலோ நோய் வந்தவன் மாதிரி இவனை தனியா படிக்க வைங்க.. இந்த வைரஸ் விட மோசமானவன்..” என்றாள் பவானி.

“டேய் ..அவ கிட்ட ஏண்டா சண்டை இழுக்கிற..அவ பெரிய வாயடி அவளை ஜெயிக்க முடியாது. அவ எல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்து என்னையே செக் பண்றா” என்றாள் லீலா டீச்சர்.

“எப்படிம்மா.. இவ்வளவு புத்திசாலியா இருக்க. உனக்கு எபோலோ பற்றி தெரியுதான்னு செக் தான் பண்ணினேன்” என்றாள் பவானி.

அனைவரும் சிரித்தனர். பின்னர் கைகளை கழுவினர். அதன் பின் சாப்பிட தொடங்கினர்..  

க.சரவணன். தலைமையாசிரியர்
9344124572

இந்த கதை மாணவர் உலகம் மாத இதழில் செப்டம்பர் மாதம் வெளியாகியுள்ளது. 

Thursday, September 18, 2014

அப்படியே செத்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது !


குழந்தைகளின் பாசம், ப்ரியம் அலாதியானது. அவர்களை புரிந்து கொள்ள பல ஜன்மம் எடுக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் ,ஆனால் அவர்கள் காட்டும் பாசம் நேசம் ஒவ்வொன்றும் ஒரே விதம்.
குழந்தைகளின் பிரியங்களை அளக்க எந்த அளவு கோலும் இல்லை. மழைமானி மாதிரி கொட்டும் போதொல்லாம் அளந்து விட முடியாது. ஆனால் குழந்தைகள் தங்களின் ப்ரியங்களை தொடர்ந்து கொட்டிக்கொண்டே தான் இருக்கின்றார்கள்.
நீங்கள் அவர்களின் மனதில் பதிந்து விட்டீர்களானால், அவர்களின் வாழ்வில் நீங்காத இடத்தை பிடித்து விடுவீர்கள். எந்த அழிப்பானும் அவர்கள் மனதில் இருந்து உங்களை அழித்து விட வாய்ப்பு இல்லை.
பாசங்களை போல் உங்கள் மீதுள்ள கோபத்தையும் பாசாங்கு செய்து மறைத்து கொள்வதில்லை. அவர்கள் உடனடியாக கோபம் கொள்கின்றார்கள். அதேவேளையில் உடனடியாக மறந்தும் போய்விடுகிறார்கள். எல்லாம் மாயமாகத்தான் இருக்கும், நடக்கும். குழந்தைகள் உலகம் மந்திரங்கள் நிறைந்தது.
நாம் இல்லாத பொழுதுகளில் நம்மை அவர்களின் விளையாட்டுகளில் இணைத்து விளையாடுவதை காணும் போது பூரித்துப்போவோம். அவ்வேளைகளில் ஏதோவொரு பொம்மையை காட்டி இது தான் நம்ம சார் எனும் போதோ அல்லது நான் தான் நம்ம சார் என்று சொல்லும் போது, நமக்கு அப்படியே செத்துவிடலாம் என்று தோன்றும்.
குழந்தைகளை ரசிப்பதற்கு பூர்வஜென்மத்தில் தவம் இருந்திருக்க வேண்டும். எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்துவிடுவதில்லை. குழந்தைகள் நம் சுவாசமாகி விடும் போது, நம் இதயம் மகிழ்ச்சியில் பலப்படுகிறது.
என்ன குழந்தைகள் புராணம் ! என ஆச்சரியப்படலாம்.
சொந்த அலுவல் காரணமாக விடுப்பு எடுத்து, மறுநாள் பள்ளிக்கு திரும்பிய எனக்கு குழந்தைகளை பார்க்காத குறை இருந்தாலும், அவர்கள் நான் வந்துவிடுவேன் என தேடி அலைந்ததை விசாரித்த போது எனக்கு கண்களில் நீர் பூத்தது.
காலை பள்ளிக்கு வந்தேன். என் வாசலில் கொஞ்சம் மனநலம் குன்றிய ஒன்றாம் வகுப்பு குழந்தை நின்றபடி, சைகையில் நேற்று ஏன் வரவில்லை என்று கேட்டது. அதன் பின் கைகளை நீட்டி டூ விட்டு சென்றது. சாரி சொன்னேன். இதயத்தில் இருந்து வந்த வார்த்தை என்றதும், உடனே பழம் என்று விரல்களை ப வடிவில் வைத்து சிரித்து சென்றான் அக்குழந்தை.
சிறிது நேரத்தில் மூன்றாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவன் வந்தான். அவனும் என் வகுப்பு வாசலில் நின்று சிரித்தான். பின் குட்மார்னிங் என்றான். எல்லாம் வாசலில் தான் கோபமாம். கண்களில் நீர் பூக்க நேன்று ஏன் வரவில்லை என்றான். என்ன சொல்வதென்று முழித்தேன். பின் அவனாகவே தன் கழுத்தில் கைகளை வைத்து காய்ச்சலா என்று கேட்டான். அய்யோ அப்படியே செத்து விழுந்து விட வேண்டும் என்று தோன்றியது. இல்லையடா என் செல்லமே. என்னை பெற்று எடுத்தவள் கூட இவ்வளவுஅக்கறையுடன் கேட்டிருப்பாளா? என்று தெரியவில்லை. சும்மா ஊர் சுற்ற சென்றேன் என்று கைகளைக்காட்டி சொன்னேன். இருந்தாலும் என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. இத்தனை நல்ல குழந்தைகளை எப்படி மறந்து போனேன்!
என் அருகில் உள்ள வகுப்பில் இருந்து ஒரு மாணவன் வெளிப்பட்டான். மெதுவாக வந்தான். உங்களுடன் டூ .. என்னை மறந்துட்டீங்க என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். அதன் பின் ஒளிந்து ஒளிந்து ஒருவன் வந்தாள். எங்க போனே என்று கேட்டாள் அந்த தேவதை!
அய்யோ இப்படி ஒரு சொர்க்கத்தை எப்படி மறந்தேன்.
இப்படி நிறைய கதைகள் உள்ளன. ஒன்றரை நாள் விடுப்பு கொஞ்சம் கூடுதல் தான் போலும்! மதிய உணவு வேளையில் என் காட்டு கதைகளை சாரி கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு சமாதானப்படுத்தினேன்.
இப்படி பிற வகுப்பு குழந்தைகளின் விசாரிப்பு என்றால், என் வகுப்பு குழந்தைகளை கேட்கவா வேண்டும். அதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை. குழந்தைகளுடன் பழகி பாருங்கள் . அப்புறம் அந்த மாய உலகத்தை விட்டு வெளியில் வர இயலாது.
என் தந்தை என்னை கோபக்காரன் என்பார். ஆனால் நான் பிரைமரி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் விதத்தை பார்த்து வியந்து ,என் தாயாரிடம் உன் மவன் பாடம் எடுக்கிறத பார்த்தா எனக்கே அவன் கிளாசில் போய் உட்காரணும் என்று தோன்றும் என்று சொல்வாராம். (என் தந்தையும் நானும் ஒரே பள்ளியில் பணியாற்றினோம்) கோபக்காரனை கூட குழந்தைகள் வசிகரித்து கொண்டு அன்பானவனாக மாற்றிவிடுவார்கள். குழந்தைகளாக மாறிவிடுவீர்கள், அப்புறம் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.
குழந்தை மையக்கல்வி முறையை நேசிப்போம். குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்போம். குழந்தைகள் விளையாடுவதை ரசிப்போம். குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள் என்பதை எப்போதும் மறக்காமல் இருப்போம். குழந்தைகள் நம்மை விட அறிவு பூர்வமான கேள்விகளை கேட்கின்றன என்பதால், நாம் நம்மை எப்போதும் புதுப்பித்து கொண்டே இருப்போம்.
மதுரை சரவணன்.

Wednesday, September 17, 2014

அதிகாலை காட்டில் ஒரு பயணம் - அனுபவக்கட்டுரை

காடு கதைகள் புதைத்து வைத்திருக்கும் பெரும் புத்தகம். ஒவ்வொரு பக்கங்களும் புது அனுபவத்தை தருகின்றன.

புதுமை என்னவென்றால் இரவில் புரட்டும் போது அதன் பக்கங்கள் பயத்துடன் பிரமிக்க வைக்கின்றன. அதிகாலையில் பயத்தை விட்டு ஒழித்து காடு அதன் அழகை காட்டி ரசிக்க வைக்கிறது. மதிய வேளையில் மிதமான குளிரும் அதே நேரத்தில்  சுட்டு எரித்து வெயிலையும் தந்து புது அனுபவத்தை கொடுக்கின்றது. மாலையில் காடும் அதனைச் சார்ந்த பகுதிகளும் அமைதியாகி விடுகின்றன. மேலும் காடு விலங்குகளை அதன் கரங்களின் ஓரத்தில் ஓட வைத்து ஆச்சரியப்படுத்துகின்றது.

இரவில் காட்டின் பிரமாண்டத்தை ரசித்தப்படி, அதன் குளிரில் நனைந்தப்படி வெகுநேர உரையாடலில் கொஞ்சம் தூக்கம் வரவே தூங்கச் சென்றோம். அதிகாலை காடு எப்படி இருக்கும் என்ற ஆவலும் பலவித கற்பனைகளும் கண்களுக்குள் சுழன்று வர , உறக்கத்தில் காடு விரிந்தது. விடியலும் சேர்ந்து வந்தது.

காடு விடியலில் பலவித ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தது.

கடல் மட்டத்திலிருந்து குறைந்த பட்சம் 1300 அடி உயரத்தில் இருந்தோம்.

மேகங்கள் பனியால் மறைக்கப்பட்டு இருந்தன. காரின் வைப்பர் போன்று சூரியன் தன் கரங்களால் பனிமூட்டத்தை துடைத்து ஊடுருவியது.    

எங்கும் பசுமை. பச்சைப்பசேல் என காட்சியளித்தது காடு. அப்போது தான் குளித்து தலை துவட்டாமல் வந்து நிற்கும் புதுமணப்பெண்ணைப் போன்று வசிகரித்தது. ஆம் புதுமணமகனைப்போன்று காட்டை மீண்டும் மீண்டும் வாஞ்சையுடன் ரசித்துக் கொண்டு இருந்தோம்.

காட்டில் தடம் பதித்து நடக்க ஆரம்பித்தோம்.

மண் ஈரமாக இருந்தது. மழைப்பெய்து நனைந்தது மாதிரியான ஒரு ஈரம். மண்ணில் எண்ணற்ற ஜீவராசிகள் ஊர்ந்து கொண்டிருந்தன. எங்கள் கால்களில் ஒட்டிக்கொண்ட அட்டையைத்தவிர வேறு எதன் பெயரும் எங்களுக்கு தெரியாது.

அருகில் குடியிருக்கும் நபரின் பெயரே தெரியாமல் வாழும் நமக்கு, சமவெளிக்கும் மலைக்கும் இடையில் வாழும் ஜீவராசிகளின் பெயர்கள் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. காட்டிலிருந்து எவ்வளவு அந்நியப்பட்டுள்ளோம் என்பதற்கு இதுவே சாட்சி.

எறும்பு கூட வித்தியாசமாய் சிவப்பு நிறத்தில் இருந்தது. அதை மா மரங்களின் சிவப்பு கடி எறும்பை விட வித்தியாசமாய் ஒருந்தது.

காப்பி செடியில் இலைகளின் பசுமை கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டின. காப்பி செடிகளின் இலைகள் பசுமையை வெவ்வேறு அளவுகளில் செறிவுகளில் காட்டி அதிசயிக்க செய்தன. காமிரா தன் கண்களை திறந்து அதனை நகல் எடுத்துக் கொண்டிருந்தது.

காப்பி கொட்டைகள் சடை சடையாக தொங்கின. அதில் பழுத்த காப்பி கொட்டைகள் பசுமைக்கு நடுவில் வசிகரிக்க செய்தன. பழுத்த கொட்டைகள் சிவப்பாக நம்மை வசிகரித்தன.

ஒரு காப்பி கொட்டையில் ஒரு விதை மட்டுமே இருந்தால் அது குவாலிட்டியான ரகம் என்றார் திலகபாமா. ஆம், மனிதனில் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்பவன் தானே ஒழுக்கத்தில் சிறந்தவன். அவனையே மதிக்கின்றோம்.

காப்பி கொட்டையில் இரண்டு விதை( சீட் )இருந்தால் , அது நம்பர் 2 குவாலிட்டி என்றார் திலகபாமா. மேலும் அவர் கூறுகையில், கையில் கொட்டைகளை அள்ளிப்பார்ப்பார்கள். அதில் உள்ள ஒற்றை விதைகளின் அளவை வைத்து ,  விலையை நிர்ணயிப்பார்கள் என்றார்.

நாம் மனிதர்கள் ஆயிற்றே சாதி பார்ப்பதில் நம்மை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்பது எல்லாம் ஏட்டளவில் தான் என்பதை காடு சிரித்தப்படி நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

காப்பி செடிகளுக்கு நடுவில் ஆரஞ்சு பழ மரங்கள். வழியெங்கும் பழுத்த பழங்கள் பறிக்க ஆள் இன்றி விழுந்து கிடந்தன. அவை மக்கி காய்ந்து உரமாகிக் கொண்டிருந்தன.

கவிதைக்காரன் இளங்கோ பறித்து கொடுத்த ஆரஞ்சு அந்த அதிகாலைக்குளிரில் புளிப்பை ஊட்டி உடலை நடுங்கச் செய்தது. அதன் சுவையை எழுத்தால் வர்ணிக்க இயலவில்லை. ஆரஞ்சு பழத்தை சுவைக்கையில் அதன் புளிப்பு உடலில் பரவி புத்துணர்ச்சியை தந்தது. ஆரஞ்சு சுளையின் புளிப்பு  உடலில் பரவி உடலை குலுக்கியது. அது அமிர்தத்தை விட கூடுதல் சுவை என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.

எல்லோரும் அமைதியாக வாருங்கள் என்று வழிக்காட்டி திலகபாமா கூற அனைவரும் அமைதியானோம். எங்களுக்கு கொஞ்சம் அருகில் ஒரு காட்டு எருமை.

என்னத்தான் அமைதியானானலும், அதற்கு மனித வாடை தெரியாதா, என்ன? கொஞ்சம் மிரட்சியுடன் திரும்பி பார்த்தது. துள்ளி உயரே எழுந்து குதி குதித்து ஓடியது. கொஞ்சம் திரும்பி வந்திருந்தால் எங்கள் கதி அதோ கதி தான்.

திலக பாமா இரவில் காட்டு எருமையின் எடை 3000 கிலோ இருக்கும் என்றார். அமிர்தம் சூர்யா சிரித்தார். நம்பவில்லை. ஆனால் திலகா கூறியது தான் உண்மை. அவர் கூறியதை விட கூடுதலாக தான் இருக்கும். அது எகிறி குதித்து முட்டி தள்ளும் போது நடிகர் சூர்யா மாதிரி வசனம் பேசினால், “ஓங்கி மிதிச்சா..3 டன் வெயிட்டு ”என்று தான் கூறும்.

அது நின்ற இடத்தில் கொஞ்சம் பள்ளம் பறிக்கப்பட்டு இருந்தது. அதன் தடங்களை பார்த்தேன். அந்த ஈரத்தில் ஆழமாகவே பதிந்து இருந்தது.
அதன் கால்தடங்கள் காட்டு எருமை குறித்த பயத்தை தந்தது.

 மிளகு கொடிகள் உயர்ந்த இலவம் பஞ்சு மரத்தில் பற்றி ஏறி இருந்தன. அதன் இலைகள் வெற்றிலையைப் போன்று தோற்றம் தந்தன.

காப்பி பயிரிட குளிர்ச்சி அவசியம். அதற்காக தோட்டத்தின் ஓரங்களில் இலவம் பஞ்சு மரங்களை நட்டு வைத்துள்ளோம் என்றார் தோட்டக்காரர். ஓவ்வொரு மரமும் 300 அடி உயரம் இருக்கும் . அதன் அடியை பிடிக்க ஆறுக்கும் மேற்பட்ட நபர்கள் தேவைப்பட்டார்கள். மரங்கள் அண்ணாந்து பார்த்தப்படி நம்மை சிந்திக்க செய்தன.

காட்டுக்குள் செல்லும் முன் ரோட்டோரங்களில் வெள்ளைப்பூக்கள் புத்து குலுங்கின. அவைகள் பறிக்க முற்பட்ட போது அவைகள் விசமானவைகள் என்றார்கள். வட நாட்டில் அந்த பூவைத்தான் சிவனுக்கு படைப்பதாக சென்னார் அருகில் இருந்த சஞ்சய் பன்சால்.

காடு என்னத்தான் தன்னை மனிதர்கள் நெருங்கக்கூடாது என்பதற்காக தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மனிதன் காட்டை அழிப்பதில்  அதனை விட சிறப்பாகவே செயல்படுகின்றான். அவன் அவனையே அழித்துக் கொள்கின்றான் என்பதை உணராமல், காட்டை சூரையாடுவது தான் வருத்தமளிக்கிறது.

 மரங்களின் இடைவெளிகளில் மெல்ல நடந்தோம். மரக்கிளைகள் விலக்கி குனிந்து சென்றோம். இலவம் பஞ்சு வெடித்து சிதறி இலைகளின் பசுமையில் விநோதமாக காட்சி அளித்தன. பலவிதமான கற்பனைகளை ஏற்படுத்தி தந்தன. துரத்தில் பார்க்கும் போது ஏதோ ஒரு பறவை இலையின் மீது முட்டை இட்டுள்ளது போன்று தெரிந்தது. அருகில் சென்ற போது பூஞ்சை என எண்ணத்தோன்றியது.

இங்க பாருங்கள் காட்டுபன்றி குழிப்பறித்து சென்றுள்ளதை என்றார் திலகா. கிழங்குக்காக அவைகள் குழிப்பறித்து சென்றிருந்தன. காட்டு பன்றியின் பற்கள் கத்தியை விட கூர்மையானவை. அவை கடித்தால் விசம். மேலும் சதையை பேர்த்துக் கொண்டு போய்விடும் என கேள்விப்பட்டுள்ளேன்.

காட்டில் விலங்குகள் மனிதனைக் கண்டு பயப்படவே செய்கின்றன. மனிதனின் சிறு அசைவையும் கண்டு அச்சம் கொண்டு, அவ்விடத்தை விட்டு ஓடிவிடவே முயல்கின்றன  அல்லது மனிதனின் வாடை அடிக்காத இடத்தை தேடி செல்கின்றன. மனிதன் உறங்கிய இரவில் தான் காடுகளில் விலங்குகள் சுதந்திரமாக பயமின்றி உலாவுகின்றன.

காப்பி செடிகள் அடந்த காட்டுப்பகுதியில் , அச்செடிகளை விலக்கியும் ஒதுக்கியும் அவைகளின் கிளைகளின் ஊடாகவும் தவழ்ந்தே சென்றோம்.

குடியானவர்கள் இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். காடு அக்காட்டு மனிதர்களை எவ்வளவு வெகுளியாக வைத்திருக்கிறது. மிக ஏழ்மையாக இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் அழகாக தவழ்ந்து வந்து அதிசயமாக எங்கள் கும்பலை கண்டு ரசித்தது. நாங்கள் மிருகங்களை ரசிக்க வந்துள்ளோம் என நினைத்தப்போது அக்குழந்தையின் பார்வையில் மனித மிருகங்களாகவே காட்சியளித்தோம்.

மிளகு கொடி வளர்வதை காட்டினார் திலகா. அவைகள் வெயில் படாமல் குளிர்ச்சியாக மூடி வைக்கப்பட்டு இருந்தன. மிளகு சாப்பிளிங்குகள் என்றார். செடிகள், கொடிகள் , மரங்கள் வளர்வதற்கு ஏற்ற சீதோசனை நிலை முக்கியம் என்றார்.

மரம், செடி, கொடி வளர்வதற்கு போதிய மண்வளம், காற்று , சூரிய ஒளி இருந்தாலும் பருவ நிலைகள் தேவைப்படுகின்றன என்றார், திலகா.

திலகபாமா அவர்களின்  உறவினர் இங்கிலாந்திற்கு இங்கிருந்து அந்திமந்தாரை பூ மற்றும் சில பூ வகைகளை கொண்டு சென்றார்களாம்.  அவைகள் அங்கு நன்கு வளர்ந்தனவாம். ஆனால் அவை பூக்கவில்லை என அவரின் உறவினர் கவலை கொண்டார்கள்  என்றார்.

திடீரென்று ஒருநாள் போன் செய்து, அவரின் வீட்டில் அப்பூச்செடிகள் பூக்கத்தொடங்கின என்றாராம். காரணம் அன்று வெயில் கொஞ்சம் கூடுதலாக அடித்ததாம். பாருங்கள் செடிகள் பூக்க சீதோசனை நிலை தேவை என்றார்.  

எங்கும் பசுமை. கண்கள் எரிச்சல் இல்லாமல், வாகனப்புகைகளில் சிக்காமல் , மிகவும் இயல்பாக குளிர்ந்து காணப்பட்டது. காற்று இதமாகவும், சுத்தமாகவும் இருந்தது. அதனால் சுவாசம் சிரமம் இன்றி சீராக அமைந்து இருந்தது. காட்டின் மேடு பள்ளங்களில் நடந்து உருண்டு சென்ற போதும் , உடலில் எந்தவித அயர்ச்சியையும் உணர முடியவில்லை.

இப்போது மண் சரிவதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட கல்பதித்த பாதையில் செடிகள் அடர்ந்திருக்க கொஞ்சம் தவறினால் பள்ளத்தில் விழ வேண்டிய மேட்டில் நடந்தோம். கிளைகள் சிரமப்பட்டு தாண்டி சென்றொம். மறக்க முடியாத அனுபவம் .

வெயில் பனிக்கூட்டத்தை பொசுக்கி இப்போது நன்றாகவே காட்டில் உலவிக் கொண்டு இருந்தது.

இலைகளில் பனித்துளிகள் பூத்து இருந்தன. பதின்மவயது பெண்ணின் முகப்பருவைப் போன்று மொட்டு  விரித்து வசிகரித்தது.

பனி இரவு முழுவதும் இலைகளுடன் விடாது பதித்த முத்தத்தில் அதன் இதழ் தடம் இலைகளில் நீர்துளிகளின் சாட்சியத்தில் அடையாளம் காணப்பட்டன.

இலைகளில் இருந்து சரிந்து ஒழுகத் தொடங்கிய நீர் காமிரா கண்களில் மிக அழகாகப் படம் பிடிக்கப்பட்டன. காடு இலைகளை விதவிதமாக காட்டி அதிசயிக்க வைத்தது. கண்கள் தவித்து விட்டன. எல்லாவற்றையும் பார்க்க ஏங்கியது. மகளீர் கல்லூரி முன் தவிக்கும் ஆணின் கண் போன்று எல்லாவற்றையும் ஒரே தடவையில் பார்த்துவிட ஏங்கியது.


காட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் போது இயற்கை நம்மை அச்சுறுத்த தவறுவதில்லை. தவறிப்பெய்யும் பருவமழையும், பூமியின் ஆழத்தில் போய் கொண்டிருக்கு நிலத்தடி நீருமே இயற்கையின் அச்சுறுத்தலுக்கு சாட்சி. இருந்தாலும் மனிதன் மனசாட்சி மறந்து முற்றிலும் முரனாகவே செல்கின்றான்.

காடு , அதுவும் காப்பி தோட்டம், அதன் ஊடே ஒரு பிரயாணம் எனும் போது,  தேயிலை தோட்டம் நினைவுக்கு வராமல் இல்லை. எரியும் பனிக்காடு நினைவுக்கு வராமலா போகும் ! பேசிக்கொண்டோம் , மக்களின் கஷ்டங்களை..! எங்களுடனே தமிழ்மகன் இருந்ததால், வனசாட்சிக்கு நாங்கள் அலையவில்லை. மனிதன் மட்டும் மனசாட்சியை கழட்டி வைத்து அலைவதுதான் பிரச்சனை.


எப்போதும் கேள்விகளை அடுக்கி கொண்டு வரும் டிராக்டர், சளைக்காமல் பதில் சொல்லிவரும் கவிஞர் திலகபாமா, ஆச்சரியங்களுடனும் பரப்பரப்புகளுடனும் வந்த கவிஞர்கள் அமிர்தம் சூரியா, கவிதைக்காரன் இளங்கோ, காமிராவுடன் கவிதைகளை வடித்து கொண்டு வந்த அருணாச்சலம், செல்வம்ராமசாமி மற்றும் தன் மனதில் காட்டின் சாட்சியை உறையவைத்துள்ள எழுத்தாளர் தமிழ்மகன் மற்றும் பல சிறந்த நண்பர்களுடன் இப்பயணத்தை தொடர்ந்தது வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது.

எல்லா சிறப்புகளும் எங்கள் எல்லோரையும் அழைத்து அற்புதமான பயணத்தை ஏற்படுத்தி கொடுத்த கவிஞர் எழுத்தாளர் திலகபாமா அவர்களையே சாரும். அவர் இயற்கையை நேசிக்கிறார், ஆகவே கவிதை அவரை நேசிக்கிறது. இல்லை அவரிடம் கவிதை வசிக்கிறது.  எப்போதும் இயற்கையை ரசிக்க செய்யும் அருணாச்சலத்திற்கும் நன்றிகள்.

மதுரை சரவணன்.

Tuesday, September 16, 2014

அனுபவக்கட்டுரை - இரவில் காடு

காடு அழகானது. அதிலும் இரவில் காடு மணப்பெண்ணிற்கான அலங்காரத்துடன் கூடுதல் அழகாகவே தென்படுகிறது. காடு இரவில் தனது இரகசியத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இரவில் காடு அற்புதமான அனுபவத்தை தருகிறது. காட்டின் பிரமிப்பு சங்கரின் சினிமாவை விட மிக பெரிய பிரமிப்பை கொடுக்கிறது. அது நம் மனக்கண்களில் இருந்து எளிதில் அகல்வது இல்லை.

இரவு காட்டின் நினைவுகள் நிரந்தரமாக நம் எண்ணங்களில் தங்கிவிடுகின்றன. கணினியின் ஹாட் டிஸ்கில் உள்ள நிரந்தர நினைவுகளாக(பெர்மநன்ட் மெமரி ) நம் வாழ்வில் சேகரித்து வைக்கப்படுகின்றன. முதல் இரவு போன்று காட்டின் முதல் இரவு நம் வாழ்வில் நீங்காத இடத்தைபிடித்து விடுகிறது. இருளில் காடு நமக்கு நிறையவே அனுபவத்தை தருகின்றன.

தாண்டிக்குடிக்கு 7கிமீ முன்னால் பெரியபாறைக்கு கொஞ்சம் தாண்டி உள்ள காபி எஸ்டேட்டில் 15.9.2014 இரவு கவிஞர் திலகபாமா அவர்களின் ஏற்பாட்டில் தங்கினோம்.

இரவு ஏழு மணிக்கு குளிர் லேசாக தன் கரங்களை நீட்டி வரவேற்க தொடங்கியது. தூரத்தில் இருந்து இருளில் காட்டின் அழகை பார்ப்பது கொஞ்சம் அஞ்சம் தருவதாக இருக்கிறது. இருந்தாலும் அந்த உயர்ந்த மரங்களை நட்சத்திர பின்னனியுடன் பார்க்கும் போது அச்சத்தை மீறி ஒரு ஈர்ப்பை உண்டாக்கி , காட்டை நோக்கி நம்மை நகர்த்துகின்றன.

இருட்டை விட மனித மனங்களிலிருந்து வெளிப்படும் இருளுக்குள் புதைந்துள்ள காட்டைப்பற்றிய ரகசியங்கள் பயங்கரமான அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. எதாவது ஒரு ஒலியை கேட்டவுடன் , அது குறித்து பலவிதமான புனைவுகள் வடிக்கப்படும் போது கொஞ்சத்துக்கும் அதிகமாகவே பயத்தை உருவாக்குகிறது.

புலி , சிங்கம், சிறுத்தை, காட்டெருமை, யானை என வரிசையாக மிருகங்கள் மனிதர்களின் மன இருளில் இருந்து வெளிப்படும் போது நிஜத்தை விட மிக கொடுரமாக உருவெடுத்துவிடுகின்றன.  அதன் உண்மையான இயல்பை மீறி சத்தம் எழுப்புகின்றன. பாவம் அவைகள்.

நெட்வொர்க் இல்லாமல் எல்லா தொடர்புகளும் அறுந்து விடப்பட்ட மனங்களில் காடு ,நெட்வொர்க் இல்லாமல் இருந்தலின்  பயங்கரத்தை விட கூதலான அச்சத்தை ஏற்படுத்த இயலவில்லை. காடு, அதன் இயல்பில் துள்ளியளவு கூட மாறாமல் இருளில் கம்பீரமாக இருந்தது.

பசுமை சூழ்ந்த காட்டின் தாய்மை குளிரினை தன் தூய காற்றின் வழியாக அனுப்பி உடலுக்கு குளிர்ச்சியை தந்தது. அதன் பேரமைதி நம்மிடம் பல சங்கதிகளை கூறிக்கொண்டிருந்தன ஒரு தாலட்டைப்போல்.

குளிர்ச்சி கொஞ்சம் சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்ற நினைப்பை கொடுத்தது. அப்போது டீ யின் நினைப்பு வந்தது. டீயை வரவழைத்து அருந்தினோம்.

வெளிச்சத்திற்கும் அப்பால் இருந்த இருள் காட்டை அழகுப்படுத்தி, வா வா என அழைத்தது. பலவிதமான குரல்கள் காட்டின் இருளை மீறி காதிகளில் வந்து விழுந்தது. சிறு குழந்தைகளாக மாறி அவற்றை பலவிதமான விலங்குகள் மற்றும் பறவைகளுடன் பொருத்தி மகிழ்ந்தோம். தோற்றும் போனோம்.

டீ அருந்தும் போது வந்து விழுந்த ஒரு அழுகுரல் பன்றி, காட்டெருமை என ஆள் ஆளுக்கு யுகங்களை ஏற்படுத்த , அருகில் இருந்த அந்த மண்ணின் மைந்தனை கேட்டோம். அவன் சிரித்துக்கொண்டே, மரம் அறுக்கிறார்கள். அந்த ரம்பத்தின் இழுப்பில் வரும் குரல் தான் அது என்றான். மரங்களும் தன்னை அறுக்கும் போது அழுவதை அந்த இரவில் காட்டின் அமைதியில் கேட்க முடிந்தது. கொஞ்சம் துடித்து தான் போனேன்.


காட்டிற்குள் நடக்க தீர்மானித்தோம். வேனில் ஒரு கிலோ மீட்டர் பயணித்தோம். இரவில் வாகனங்கள் பேரொலி ஏற்படுத்தி , காட்டையே பீதி கொள்ள செய்து, தங்கள் பயணத்தை தொடர்ந்தன.

ஆற்றுப்பாலத்தின் ஓரத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. அதிலிருந்து காட்டை பார்த்தோம். நிச்சயமாக அந்த இருளில் எங்கள் முன் யார் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. இருள் கருமையை போர்த்தி தன்னை புதைத்து இருந்தது . இல்லை வெளிச்சத்தில் இருந்து மறைந்து இருந்தது. காடு அந்த இருளில் மிகவும் அமைதியாக எங்களை வரவேற்கிறது.

மின்மினிப்பூச்சிகள் காட்டின் கண்களோ என்று எண்ணத்தை ஏற்படுத்தி பறந்தன. அங்காங்கே மின்மினிப்பூச்சிகள் மினுக்குவது, காடு தன் கண்கள் திறந்து பார்ப்பது போல் உணர்வை ஏற்படுத்தியது. சிறியவர் பெரியவர் என்றில்லாமல், மின்மினிப்பூச்சிகளை கைகளில் பிடித்து ரசிக்க தொடங்கினோம். அவை கைகளிலிருந்து விடுப்படும் போது ஏற்படும் ஒளி , பரவசம் கொள்ள செய்கிறது.

இருளில் கொஞ்சம் நடக்க தொடங்கியதும், கண்கள் பழகி விட்டன. விண்ணில் நட்சத்திரங்கள் காட்டின் பேரமைதியில் ,எப்போதும் இல்லாத அழகையையும் ஒளியையும் வீசிக்கொண்டிருந்தன. மேலிருந்து நட்சத்திரங்கள் காட்டில் எங்களுக்கு பாதையை ஏற்படுத்தி கொடுத்துக் கொண்டிருந்தன. இருளில் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என எடுத்து தள்ளினோம். உண்மையில் இருளை பேக் ட்ராப்பாக கொண்ட புகைப்படங்கள் முகங்களில் கூடுதல் வனப்பை ஏற்படுத்தி கொடுத்தன.

இருளில் காடு மனிதர்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொடுத்தது. ஒருவருக்கொருவர் நீ இருக்கிறாயா, அவர் இருக்கிறாரா என்ற விசாரிப்புகளுடன் பயணத்தை தொடரச் செய்தது. காற்றும் குளிரும் எங்களை காட்டின் உள் இழுத்து சென்றன. மனிதர்களின் புனைவுகளின் வழியாக மிருகங்கள் வந்து சென்று கொண்டிருந்தன.

மனிதனுக்கு காட்டின் உள் செல்ல செல்ல ஒருவித பயம் தொற்றிக் கொள்கிறது. அதேப்போல் காட்டிற்குள் மனிதன் உள் ஏறி வர வர காடும் அச்சம் கொள்ளவே செய்கின்றது. மனித நடமாட்டம் தென்பட தென்பட காட்டின் புதர்களில் இருந்து சலசலப்பு ஏற்படவே செய்கின்றது.

இருளில் உயர்ந்த மரங்களில் கம்பீரத்தில் தொங்கும் கொடிகள் விக்ரமாதித்தனின் வேதாளத்தை நினைவுப்படுத்தியே பயம் கொள்ள செய்கின்றன . விடைத்தேட முடியாத கதைகள் காடுகளில் புதைந்திருக்க, காட்டின் பூதத்தை புனைந்தே முதுகில் சுமந்து, விக்ரமாதித்தனைப் போன்று புத்திச்சாலித்தனமாக காட்டை நோக்கி நகர்கின்றோம். ஏதோ ஒரு இடத்தில் பெரும் ஒலி கேட்கவே, திரும்பும் முடிவுக்கு வருகின்றோம். காடு இருளில் அழகானது தான் என்பதற்கு அந்த சிறுது தூர நடை சாட்சியாக அமைந்தது.

காப்பி எஸ்டேட்டுக்கு திரும்பிய பின்பும் காட்டின் இருள் மகிழ்ச்சியை தந்து கொண்டிருந்தது. அந்த இரவில் காட்டின் அமைதியுடன், எப்போதாவது எழும் ஓசையில் இது யாருடையது, யாருக்கானது என்ற விசாரிப்புகளுடன் பேசப்படும் பேச்சுக்கள் கூடுதல் சுகமளிப்பதாக இருந்தன.

குளிர் குபீரென்று உடலை தழுவிக் கொள்கின்றது. கண்கள் அசர மறுக்க இரசித்தப்படி ஆன்மீகம், சினிமா, கவிதை என உரையாடல்கள் தொடர்ந்தபடி இருக்க , காடு மெல்ல விழிக்கிறது. நம் கண்கள் மெல்ல தூங்க ஆரம்பிக்கின்றன.

இந்த பயணத்தில் எழுத்தாளர் தமிழ்மகன், கவிஞர்கள் திலகபாமா, கவிதைக்காரன் (இளங்கோ),அமிர்தம் சூர்யா, புகைப்பட க(வி)லைஞர்கள் அருணாச்சலம், செல்வம் ராமசாமி, மற்றும் பல்துறை வித்துவான் டிராக்டர் முருகன், மற்றும் பலர் பங்கேற்றனர்.

மதுரை சரவணன்.
(விடியலில் காட்டின் அனுபவத்தை நாளை காண்போம்.) 

Thursday, September 4, 2014

மதுரை புத்தகக்கண்காட்சியில் மாணவர்களுடன் மனுஷ்யபுத்திரன்

இன்று புத்தகக்கண்காட்சிக்கு மதியம் பன்னிரெண்டு இருபது மணிக்கு மேல் குழந்தைகளை அழைத்து சென்றேன். எஸ்.ராமகிருஷ்ணனின் கால் முளைத்த கதைகள் வாங்குவது என முடிவெடுத்து வந்திருந்த குழந்தைகளுக்கு உயிர்மை ஸ்டாலில் புத்தகம் வாங்கி கொடுத்தேன். மனுஷ்யபுத்திரன் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். 

ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் ஆர்வத்துடன் புத்தகம் வாங்குவதை பார்த்து அதிசயித்தார். அவர்கள் தாங்கள் வாசித்த சுஜாதாவின் வாட்டர் கார் மேட்டர் சிறுகதை குறித்து சொன்னேன். அவர் இன்னும் ஆச்சரியமாகப் பார்த்தார். மேலும் அவர் குழந்தைகளுடன் அன்பாக நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து அதிசயித்து என்னை உற்று கவனிக்க தொடங்கினார். அந்த மகிழ்ச்சியான தருணம் வாழ்நாளில் மறுக்க முடியாத தருணமாக இருந்தது. 

    பின் நண்பன் எர்னஸ்டோ சுஜாதவின் திருக்குறள் மற்றும் சுஜாதாவின் குழந்தைகளுக்கான நூல்களை காட்டினார். அவை 100 ரூபாய்க்கும் மேல் விலை இருந்தது. மாணவர்கள் ஐம்பது ரூபாய் தான் இருக்கிறது. புத்தகம் வேண்டும் என்றனர். உடனே மனுஷ்யபுத்திரன் புத்தகங்கள் வாங்கும் ஆர்வத்தை பார்த்து அனைவருக்கும் கேட்கும் புத்தகங்களை ஐம்பதுக்கே கொடுக்க சொன்னார். கொஞ்சம் கூச்சமாக இருந்தது. எவ்வளவு உயர்வான மனுசன் இவர். குழந்தைகளுக்காக குழந்தையின் ஆசைகளை நிறைவேற்ற புத்தகத்தை பாதிக்கும் மேற்பட்ட விலையில் கொடுக்கிறார். குழந்தைகளுடன் பேசினார். மகிழ்ந்தார். புகைப்படம் எடுத்துக்கொண்டார். 


 அதன்பின் குழந்தைகள் புக் பார் சில்ட்ரன் ஸ்டாலுக்கு சென்றனர். அங்கும் புத்தகங்கள் வாங்கினர். அதன் பின் விகடன் ஸ்டால் என வரிசையாக சென்று எல்லோரும் புத்தகம் வாங்கினர். நேற்று விடுமுறை எடுத்து இன்று வந்த மாணவர்கள் மட்டும் காசு கொண்டு வராததால் புத்தகம் வாங்க வில்லை. அவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் சேர்ந்து வாங்கி விடுவார்கள் என்றே நம்புகின்றேன். கரும்பலகை நாவலை எழுதிய ரஷ்யா அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். (தமிழினி ஸ்டாலில்.) பின் வெளியில் வந்து சிறிது நேரம் விழா பந்தலில் அமர்ந்து புத்தகங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். விடைப்பெற்றோம். அனைவரும் மகிழ்ந்த அந்த தருணம் என் வாழ்நாளில் பொக்கிஷ்ம் போன்றது. 


 எனக்கு குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதி தந்த நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்

Wednesday, September 3, 2014

வயதானவர்களுக்கு மட்டுமேயான சீரியஸ் பதிவு.

வயசாகிடுச்சு..!
-----------------------------

இன்று மதியம் வகுப்பறைகளைப் பார்வையிட சென்றேன். 

“சார்..நல்லா இருக்கீங்களா..” என வாஞ்சையுடன் என் கையை பிடித்தான் அன்று என்னுடன் பந்து விளையாடி உயிர் எழுத்துக்களைக் கற்றுக் கொண்ட மாணவன். 

பெயர் மறந்து போனதால், “டேய் தம்பி நல்லா இருக்கீய்யா..?” என கேட்டேன். ம்.. என சிரித்தான். 
“டேய் மணிகண்டா என்ன அட்டை வைத்திருக்கிறாய் ?” என்றேன். 

அருகில் நின்றிருந்த மாணவன் என் பெயரை மட்டும் சொல்ல மாட்டீங்கிறீங்க என ஆதங்கப்பட்டான்.

சாரிடா தம்பி பெயர் மறந்து போச்சு.. என்றேன். அன்னீக்கு(அன்று ) வந்த போதும்..பெயர் மறந்து போச்சுன்னு சொன்னீங்க...”

“சாரிடா தம்பி...சாருக்கு வயசாச்சு இல்லை..(என சொல்லியவாரு யோசித்து ).அசார்.. சரிதானே..” என்றேன்.

“சார்..நான் ஹமீது ”என்றான்.
”சாரிடா மன்னிச்சிடு..ஹமீது” என்றேன்
”எப்ப பாரு..ஹமீது ஹமீதுன்னு உங்க கிட்ட பெயரை சொல்லி சொல்லி எனக்கு தான் வயசாகிட்டு வருது.. நீங்க தான் சின்ன பிள்ளை மாதிரி பெயரை மறந்து போகிடுறீங்க...” என்றான்.

எப்படி சிந்திக்கிறார்கள் குழந்தைகள். நாம் தான் பேச மறுக்கிறோம். குழந்தைகள் நம்மை விட நன்றாகவே சிந்திக்கிறார்கள்.

மதுரை சரவணன்.