Sunday, July 31, 2011

கற்பனை திறன் வளர்ப்பது எப்படி?


      மாணவர்களின் கற்பனை குதிரையை தட்டி விட்டு , அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கவும் , அனைத்து மாணவர்களும் வகுப்பறையில் பங்கேற்கவும் செய்யவும் , எந்த வித கருவும் , தலைப்பும் தராமல் ,சுதந்திரமான போக்கில் வாக்கியங்களை அமைத்து கதை சொல்ல வைக்க வேண்டும் . ஆனால் அதற்கு ஆயுத்தப்படுத்துதலாக நாம்(ஆசிரியர்கள்)  சில கதைகளைக் கூற வேண்டும். அதன் பின்பு ,ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனையும்  பெயர் சொல்லி அழைத்து . ஒரு வாக்கியம் கூற செய்யவும். என் வகுப்பில் முதலாவதாக வந்த மாணவன் . "எனக்கு நாய் பிடிக்கும்" என்றான். அதற்கு அடுத்து ஒரு பெண்ணை அழைத்தேன். அவள் அதற்கு அடுத்த வரியாக ”குழந்தை அழுதது” என்றாள்.   நான் முதல் வரிக்கும் , இரண்டாவது வரிக்கும் தொடர்பு இல்லை. ஆகவே, கதை தொடர்ச்சி இல்லாமல் இருக்குமல்லவா என சொல்லி அடுத்த வரி தொடர்புடையதாக கூற தூண்டினேன். ஒரு மாணவன் எழுந்து ,” நாய் குரைக்கும் சத்தமும், குழந்தையின் தொடர் அழுகையையும் கேட்டு , சமையல் அறையில் இருந்து ஓடி வந்து நாயை உள் அறையில் கட்டிப் போட்டு, குழந்தையை சமாதானப் படுத்தினாள்” என்றான். அடுத்து ஒரு பெண்ணை அழைத்தேன். அவள் மீண்டும் ,”நான் அறையில் நாயுடன் விளையாடச் சென்றேன்” என்றாள். அடுத்த மாணவன், ”மழை திடீரென்று பெய்தது” என்றான். அதற்கு அடுத்து வந்த மாணவி,” நான் மழையில் விளையாடச் சென்றேன்”. அதற்கு அடுத்த வந்த மாணவன்,” என் எதிர்வீட்டு கோபி, பக்கத்து வீட்டு குப்பு, பின்புற வீட்டு ரவி என அனைவரும் மழையில் நனைந்து விளையாடினோம்” என்றான். அதற்கு அடுத்து வந்த மாணவி,” அனைவரும் கப்பல் செய்து விளையாடினோம்”என்றான். அடுத்து வந்து மாணவன்,” ரவியின் கப்பல் மழையில் நனைந்து தண்ணீரில் முழ்கியது” என்றான். அடுத்து வந்த மாணவி,”என் கப்பல் அனைவர் கப்பலை விட முழ்காமல் சென்றது” என்றாள். அடுத்து வந்த மாணவி,” ரவி குப்புவின் கப்பலை மிதிக்கவே , இருவரும் சட்டையை பிடித்து சண்டை போட்டனர்” என்றாள். அதற்கு அடுத்து வந்த மாணவன், ”குப்புவையும் ரவியையும் விலக்கி விட நான் முயன்ற போது குப்பு தடுமாறி விழுந்தான்” என்றான். அதற்கு அடுத்து வகுப்பு முழுவதும் கோரசாக, “ குப்புவின் மண்டை உடைந்தது” என்றனர். வியப்பாக இருந்தது. விதிப்படி ஒருவர் மட்டுமே கூற வேண்டும் என்று மீண்டும் நினைவு படுத்தி ஒரு மாணவனை அழைத்து அடுத்த வரியை சொல்ல தூண்டினேன். அதற்கு அவன்,” அனைவரும் அவரவர் வீட்டிற்கு ஓடினோம்” என்றான். அடுத்த பெண் , ”குப்புவின் அப்பா என் அம்மாவுடன் சண்டை போட்டு கொண்டிருந்தார்.” அதற்கு அடுத்த மாணவன். ” குப்புவும் , ரவியும், நானும் தெருவில் இருந்த மழை நீரில் விளையாடினோம்” என்றான். அடுத்த மாணவி , “இதை பார்த்த பெற்றோர்கள் சண்டை யை மறந்து , எங்களைப் பார்த்து சிரித்தனர்”. என கதையை முடித்தாள்.

நீங்களும் முயன்று பாருங்கள். நிச்சயம் அனைத்து மாணவர்களும் கற்பனை குதிரையை தட்டிவிட்டு , ஒரு அற்புதமான கதையை படைப்பார்கள் என்பது உண்மை. அதற்கு அடுத்து அவர்களின் விளையாட்டு முறையும்  அப்படியே மாறி விடும்.  வகுப்பறைகளில் ஆசிரியர்கள் இல்லையென்றால் , அமைதியாக நோட்டும் பேனாவும் எடுத்துக் கொண்டு , கதை எழுத ஆரம்பித்து விடுவார்கள். இப்போது என் வகுப்பறையில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி தினமும் ஒரு கதை எழுத ஆரம்பித்துள்ளாள் என்றால் அது எனக்கு கிடைத்த வெற்றியாகும்.              

Wednesday, July 27, 2011

கற்பனை திறன் வளர்ப்பது எப்படி?


வார்த்தைகள் கொடுத்து கதை எழுத கற்றுத் தந்ததைத் தொடர்ந்து   ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்க உதவும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டது. மாணவர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.  குழுவில் கலந்து ஆலோசித்து ஒருவர் மட்டுமே பதில் சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் , ஒரு கரு கொடுக்கப்பட்டது. பேருந்தில் பயணம் என்று கொடுக்கப்பட்டது.  முதல் குழுவில் உள்ள மாணவன் ஒருவன் எழுந்து, “நான் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன் “ என்றான். அடுத்தக் குழு மாணவன் ஒருவன் எந்தவித ஆலோசனையும் சக மாணவனுடன் செய்யாமல் உடனே எழுந்து ,”திடீரென்று பேருந்தின் டையர் வெடித்தது” என்றான். மீண்டும் மாணவர்களுக்கு குழுவில் கலந்து கொண்டு முடிவெடுக்க கற்றுக் கொடுக்கப்பட்டது. மூன்றாவது குழு ஆலோசித்து முடிவெடுத்து ,”டிரைவர் பத்திரமாக பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்” என்றனர். நான்காவது குழு மாணவர்கள் ,”வண்டி ஓட்டுனரும் , நடத்துனரும் சேர்ந்து டயரை சரி செய்து வண்டியை எடுத்தனர்” என்றனர். ஐந்தாவது குழுவை சேர்ந்த மாணவர்கள் நீண்ட ஆலோசனைக்கு பின்பு , “ மீண்டும் வண்டி மெதுவாக கிளம்பியது. அனைவரும் ஆனந்தப் பட்டு பயணித்த பொழுது வண்டி மீண்டும் நின்றது” என்றனர். ஆறாவது குழு மாணவர்கள் நிதானமாக ஆலோசித்து கதையை முடித்து வைத்தனர்.  ஆச்சரியமாக இருக்கிறதா ! அவர்கள் அளித்த பதில் இதோ : பயணிகள் அனைவரும் இறங்கினர். மீண்டும் நடத்துனரும் , ஓட்டுனரும் சேர்ந்து சரிசெய்ய முயன்றனர். நான் ஆட்டோ பிடித்து குறித்த நேரத்தில் வேலைக்கு சென்றேன்.
இதேப் போல பல தலைப்பு மற்றும் கருக்கள் கொடுக்கப்பட்டு கதைகள் சொல்லப்பட்டன. உங்கள் குழந்தைகளுக்கும் இதே போல தலைப்புகள் கொடுத்து கற்பனைத் திறனை வளர்க்கலாம். அடுத்த பதிவில் தனித் தனியாக மாணவர்கள் செயல்பட்டு கற்பனைத் திறனை வளர்ப்பது எப்படி என்பதனைப் பார்க்கலாம்.   

Tuesday, July 19, 2011

கற்பனைத் திறன் வளர்ப்பது எப்படி?

சமச்சீர் கல்வி அமல்படுத்தும் வரை புத்தகம் இல்லாமல் மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள் அதனால் பெற்றோர் வருத்தப்படுகிறார்கள் என அரசியல் ஆக்கப்படும் கல்வி சாலைகளில் ஆசிரியர்கள் திறம்பட மாணவர்களின் கற்பனைத் திறன் வளர்க்கிறார்கள் என்பதற்கு என் வகுப்பறையில் (ஐந்தாம் வகுப்பு )இன்று நான் மேற்கொண்ட கற்பித்தல் முறையே சான்றாகும்.
மாணவர்கள் எப்போதும் போல என்னிடம் சார் கதை சொல்லுங்கள் என்று ஆரம்பித்தார்கள் . ஒரு மாறுதலுக்கு…. என நிறுத்தினேன் .கதையை நீங்கள் சொல்லுங்கள் என  நான் சொல்லுவேன் என்று எதிர்பார்த்த மாணவர்களுக்கு , கதையை நாம் உருவாக்குவோம் என்றேன். அனைவரும் சார் நான் கதை சொல்லுறேன்  என் மீண்டும் புரியாமல் கையை தூக்கி கதை சொல்ல தயாராக இருந்தனர்.
நான் மெதுவாக அவர்களை  பொறுமையாக இருக்கch செய்து. முதல் வரிசையில் அமர்ந்துள்ள மாணவிகள் வரிசையை நோக்கி , உனக்கு பிடித்த விலங்கு எது ? (கலந்து  ஆலோசனை செய்து சொல்ல சொன்னேன்) முதல் குழுவில் முயல் என்றனர். பின்பு ,எதிர் புறம் அமர்ந்துள்ள இரண்டாவது வரிசை மாணவர்களை நோக்கி, உங்களுக்கு பிடித்த பறவை எது என்று கேட்டேன். அவர்கள் கிளி என்றனர். அதே போல் முறையே மூன்றாவது மாணவர் வரிசை , நான்காவது மாணவியர் வரிசையை உங்களுக்கு பிடித்த காய்கறி? உங்களுக்கு பிடித்த நிறம் ? என்ற கேள்விகளுக்கு முறையே  காரட், சிவப்பு என்றனர். அடுத்ததாக கடைசி வரிசை மாணவியரை பார்த்து உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர் கேட்டேன். அதற்கு அவர்கள் சினிமா நடிகையை சொல்லலாமா? எனக் கேட்டனர். சரி என்றேன். திரிஷா என்றனர். கடைசி பெஞ்ச் மாணவரை பார்த்து உனக்கு பிடித்த கடல் உயிரி ? என்றேன். அதற்கு அவர்கள் மீன் என்றனர்.  
அவர்கள் சொன்ன பதில்கள்
முயல்
கிளி
காரட்
சிவப்பு
திரிஷா
மீன்

மேலே விடைகளாக சொன்ன வார்த்தைகளை கொண்டு ஒரு கதை சொல்லும் படி சொன்னேன். சிலருக்கு புரிய வில்லை. சரி நாம் அனைவரும் சேர்ந்து கதை சொல்லுவோம் என சொல்லி ஆரம்பித்தேன்.
முயல் ஒன்று காட்டில் வசிக்கிறது. அடுத்து ஒரு குழுவை நோக்கி அடுத்த வரியை கூற சொன்னேன். அதற்கு ஒரு மாணவி முயல் காரட் சாப்பிடும் என்றாள். நான் இது கட்டுரை இல்லை. சம்பவங்கள் அல்லது அதற்கு தகுந்த தொடர்புடைய கதையாக மாற வாய்ப்புள்ள வாக்கியங்களை சொல்லுங்கள் அதற்காக ஒவ்வொரு வாக்கியத்திலும் மேலே சொன்ன வார்த்தைகள் இடம் பெற அவசியமில்லை. கதை முடிவில் அனைத்து வார்த்தைகளும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றேன். கடைசி பெஞ்ச் மாணவி ..முயல் பசியால் உணவு தேடி சென்றது என்றாள். மிகச் சரி என்றேன்.  இரண்டாவது பெஞ்ச் மாணவிகள் கோரசாக ,காரட் செடியை பார்த்து மகிழ்ச்சி அடைந்து , காரட்டை கடித்து தின்றது என்றனர். குழுவில் ஒருவர் மட்டுமே சொல்ல வேண்டும் என்றேன்.  அடுத்த மூன்றாவது பெஞ்ச் மாணவர்கள் காரில் வந்த நடிகை திரிஷா , முயலை பார்த்து வண்டியை நிறுத்தினார் என்றனர். சபாஷ்  என்றேன். அடுத்த குழு முயலை பிடித்து திரிஷா தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் என்றார்கள் . அடுத்த குழுவில் ஒரு மாணவி எழுந்து , திரிஷா வீட்டில் கிளி சிவப்பு நிற ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தது என்றாள். சரி அடுத்த குழு என்றேன். அடுத்த குழுவில் உள்ள மாணவர்கள் அனைவரும் திரிஷா மீன் தொட்டியில் மீன் வளர்த்தாள் என்றனர். கதையில் முடிவு இல்லை.. இதே போல தான் எழுத வேண்டும் . இதே போல முயற்சி செய்து கதைக்கு முடிவு தந்து தனி தனியாக குழுவில் எழுத சொன்னேன். அவர்களிடம் இருந்து பெற்ற கதைகளில் சிறந்த இரண்டு கதைகள் இதோ….

அடர்ந்த காட்டில் முயல் ஒன்று வசித்தது. காட்டின் நடுவில் ஒரு பாதை சென்றது. நடிகை திரிஷா அக் காட்டில் சினிமா சூட்டிங்கிற்கு வந்தார். முயல் பசியால் காரட் தேடி சென்றது. படக் குழுவினர் முயலை பிடித்து வந்தனர். நடிகை முயலை அவர்களிடம் இருந்து காப்பாற்றி , தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் வீட்டில் மீன், கிளி போன்ற உயிரினங்களை ஆசையுடன் வளர்த்து வந்தார். திரிஷா கத்தியுடன் வந்தார். முயல் பயந்தது. முயலை கையில் பிடித்து மடியில் வைத்தார். மேஜை மேல் இருந்த ஆப்பிளை எடுத்து நறுக்கி , முயலுக்கும் கொடுத்து உண்டார். சிவப்பு வண்ண மீன் தொட்டியில் நீந்துவதை ரசித்த படி புத்தகம் படித்தார். முயல் பயம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது.


இரண்டாவது:

ஒரு காட்டில் முயல் வசித்தது. அதற்கு பசி எடுத்தது. காரட் செடியில் இருந்து காரட் தின்றது.  அக்காட்டில் ஒரு கிளி வசித்தது. கிளியும் , முயலும் நண்பர்கள். ஒரு நாள் காட்டில் வேட்டைக்கு வந்த நடிகை திரிஷா முயலை பிடித்துச் சென்றார். கிளி தன் நண்பனை பிடித்து செல்வதை பார்த்து பதறியது. திரிஷாவை பின் தொடர்ந்து சென்றது. திரிஷா வீட்டில் முயலை அடைத்து வைத்தார். கிளி பறந்து வந்து வீட்டினுள் நுழைந்தது. திரிஷா ஆசை ஆசையாக மீனுக்கு உணவளித்து, தொட்டியில் மீன் நீந்துவதை பார்த்து ரசித்து சிவப்பு நிற சோபாவில் ஆப்பிள் சாப்பிட்டு கொண்டிருந்தார். அதை பார்த்த கிளி ஒரு யோசனை செய்தது. நேராக மீன் தொட்டியில் சென்று திரிஷாவை பார்த்து என் நண்பன் முயலை விடுதலை செய்ய வில்லை எனில் இந்த மீன்களை கொத்தி கொத்தி தின்று விடுவேன் என மிரட்டியது. விலையுயர்ந்த மீன்களுக்காக, முயலை விடுதலை செய்தாள். நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் காட்டில் வசித்தனர்.

    இதே போல வீட்டில் உங்கள் குழந்தைகளுக்கு சில வார்த்தைகள் கொடுத்து , அவர்களின் கற்பனை திறனை வளர்க்கவும். நீங்கள் அவர்களுக்கு முழுமையான வாக்கியங்கள் அமைக்க உதவலாம். ஆனால் கற்பனை அவர்களின் சொந்தமானதாக இருக்க வேண்டும் . அதற்கான உதவியாக சில முயற்சிகளை செய்ய உதவலாம். தாம் படித்த கதைகள் மூலமாக கொடுக்கப் பட்ட வார்த்தைகளுக்கு உயிரூட்ட செய்யலாம். எலியும் சிங்கமும் கதை தான் இரண்டாவது கதைக்கு உதவியது.  முயற்சி செய்து பாருங்களேன்.  புத்தகம் இல்லாதது பாட சுமைகள் மறந்து உண்மையான திறனை வளர்க்க உவியாக இருக்கிறது என்பது என் கருத்து .         

Thursday, July 14, 2011

கல்வி கண் திறந்த காமராசர்

விருதுபட்டியில் பிறந்த விசித்திர மனிதர் காமராசர்…
காமராசர் –இருண்டு கிடந்த இந்திய தேசத்தில் கருப்பு காந்தியாய் வந்து பிறந்தவர்.
அவரது நிறம் தான் கருமை உள்ளமெல்லாம் களங்கமில்லா வெள்ளை மலர்த்தோட்டம். அந்த வெள்ளை மலர்த் தோட்டம் தான் சிவப்பு ரோஜாவை சூடியிருந்த நேரு பெருமகனாரை சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்தது
அவர் கோட்டையிலே அமர்ந்திருந்தாலும் எண்ணமெல்லாம் குடிசையிலே தான் குடியிருந்தது. ஏழைகளை நேசித்த ஏழை பங்காளன் அவர்.
தேசத்தின் மானத்தை காப்பதற்காக , தேசத்தின் மானத்தை காக்கும் ஜவுளிக்கடை வேலையை வெறுத்தார்.
அரண்மனை வாழ்க்கையை விட்டு வெளியேறியதால் சித்தார்த்தன் புத்தன் ஆனார். பதவிச் சுகங்களை உதறித் தள்ளியதால் காமராசர் கர்மயோகி ஆனார்.
இப்படி இந்த பெயரை எழுதுகிற போதும், கேட்கிறபோதும் , ஏதேதோ நினைவுகள் இன்னும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
இன்று சற்று கூடுதலாக…ஜீலை15 காமராசர் பிறந்த நாள் கவியரசர் கண்ண தாசன் சொன்னதைப் போல “காமராசர் பிறந்த நாள் கவலைகளை மறந்த நாள்” ஆகும்.
இன மொழி எல்லைகளை கடந்த எல்லோர் மனதிலும் இடம் பிடித்த விசித்திரங்களின் விசித்திரம் அவர். விழிகளை வியக்க வைத்த வரின் விழிகள் மூடி விட்டன. அவரின் கடைசி நாட்களை கவியரசர் கண்ணதாசன் ,
தங்கமே, தென்பொதிகை சாரலே
சிங்கமே என்றழைத்து
சீராட்டும் தாய் தவிர
சொந்தமென்று ஏதுமில்லை
துணையிருக்க மங்கையில்லை
துயமணி மண்டபங்கள்
தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டி கையில் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே..”
என்று கவிதைகளால் கண் கலங்கினார்.

தூய்மை, வாய்மை, நேர்மை இந்த மூன்று சொற்கள் இருக்கும் வரைக்கும் கர்மவீரர் காமராசர் பெயர் நிலைத்திருக்கும்.     

  


Tuesday, July 12, 2011

சூர்ப்பணங்கு –நாடக விமர்சனம்



கடந்த வெள்ளிக் கிழமை மாலை கா.பா விடம் இருந்து கைப் பேசியில் அழைப்பு வந்தது. கோணங்கியின் தம்பி முருகபூபதி இயக்கும் நாடகம் மதுரைக்கல்லூரியில் நடக்கிறது , ஆறு மணிக்கு வந்து விடுங்கள் என்றார். நாடகம் என்றவுடன் என் கல்லூரி கால நினைவுகள் என்னை சூழ்ந்துக் கொண்டன. அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் துறையில் படித்தாலும், நான் அடிக்கடி தென்படும் இடம் தமிழ் வகுப்பறைகளிலும் ,என்.எஸ். எஸ் வீதி  நாடகங்களிலும் தான். நாடகங்களை உருவாக்கும்  பேராசிரியர் பிரபாகர் மற்றும் சுந்தர் அவர்களுடனும் பொழுதுகள் இன்றும் பசுமையாக மலர்கின்றன.  சுந்தர் அவர்கள் எந்த ஒரு கருவையும் நாடகமாக்கி , நல்ல திரைக்கதையுடன்(காட்சிப்படுத்தல்) சுவைப்பட இயக்குவதில் வல்லவர். பிரபாகர் அவர்கள் நாடகத்திற்கு தாளம் சேர்ப்பதில் வல்லவர். சூழலுக்கு ஏற்ற இசையினை கொண்டு வந்து நாடக இயல்பினை அதன் தன்மையோடு ரசிக்க வைப்பதில் வல்லவர். வீதி நாடகங்களில் நடிப்பது  மிகவும் சிரமமான ஒன்று. மிகையான நடிப்பு பார்வையாளர்களை முகம் சுழிக்க வைப்பதுடன் , எள்ளி நகையாடச் செய்யும், நாம் சொல்ல வந்த கருத்தினை திசைதிருப்பச் செய்யும். எனக்கு நாடகப் பாத்திரத்தின்  இயல்பு மாறாமல் நடிக்க கற்றுத் தந்தவர் சுந்தர் அவர்கள்.

 மதுரை கல்லூரி நுழைந்தவுடன் சுந்தர் அவர்களை பார்த்தவுடன் மகிழ்ச்சி. அவர் லேசான புன்முறுவலுடன் என்னை பார்த்தார். அதன் அர்த்தம் இன்னும் நீ நாடகப் பைத்தியமாக இருக்கிறாயா? நான் கற்றுக் கொடுத்தது வீண்போகவில்லை என்பது போல இருந்தது. அவரின் நாடகப் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டவன் நான் என்பதில் பெருமிதம் கொள்வேன்.  நாடகம் தொடங்கும் முன் பலர் பேசினர். கல்லூரி சார்ந்து பேசியவர் பார்வையாளர்களின் ஆவல் புரியாமல் தான் கொண்டு வந்த குறிப்புக்களை எப்படியும் கொட்டி விட வேண்டும் என்று துடிப்புடன் பேசிக் கொண்டு இருந்தார். இடையில் சல சலப்பு ஏற்படவே , பார்வையாளர்களைப் பார்த்து , “ஏன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நான் பேசுவதை நிறுத்தி விடவா?  ” என்றார். அனைவரும் சிரித்து விட்டனர். ”அதைத்தானே விரும்புகிறோம் அது கூட புரியவில்லையா? “ என கமண்டு வந்தும் நிறுத்தவில்லை. இப்படியாக நகர்ந்து பொழுது ..என்னை மீண்டும் என் கல்லூரியின் மரத்தடி நிழலுக்கு அழைத்துச் சென்றது.
நாடக சூழல்  மரங்கள் அடர்ந்த வனம் போன்ற பகுதியில் இயற்கையோடு அமைந்து இருந்தது. இது மு.ராமசாமியின் நிஜ நாடக குழுவை நினைவு படுத்தியது. கல்லூரியில்  அனைத்து மாணவர்களும் சென்றவுடன் தமிழ் வகுப்பறைகளுக்கு அருகில் , லைப்ரேரி பின்புறத்தில் அடர்ந்த சருகுகள் நிரம்பிய இடத்தில் அமர்ந்து ஒத்திகைப் பார்ப்பது நினைவுக்கு வந்தது. ஒத்திகையின் நடுவில்  அனைவருக்கும் எதிரில் உள்ள கேண்டீனில் டீயும் , பஜ்ஜியும் வாங்கித் தருவார்கள். சில சமயம் கேண்டீனில் எதுவும் இல்லையெனில் டோக்கன் தந்து விடுவார்கள் மறுநாள் கேண்டீனில் அதை வைத்து ஜமாய்த்து விடுவோம்.

 நாடகம் தொடங்க நேரமாகவே,  கோணங்கி அண்ணனை பார்க்க சென்றேன். கோணங்கியின் எழுத்து ஆளுமை என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலத்தரப்பட்ட வாசகருக்கான மொழியின் நெகிழ்ச்சித்  தன்மை கொண்டவர். நவீன இலக்கிய வாதிகளுக்கு முன்னோடியாக திகழ்பவர். அவருடன் பழகியவருக்கு தான் அவரின் எளிமை, பிறரை ஊக்குவிக்கும் தன்மை, அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை புலப்படும். எப்போதும் இலக்கியத்தை தோளில் தொங்கப்போட்டுக் கொண்டிருப்பவர். கல் குதிரை படியுங்கள் , அவரை நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
நான் கோணங்கி அண்ணனை பார்த்த சமயம் ,அவர் வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருந்த நடிகருக்கு (இரமேஸ் என நினைக்கிறேன்)வயிற்றில் எண்ணெய் தடவிக் கொண்டிருந்தார். இதை பார்க்கையில் நான் கல்லூரியில் மேடை நாடகமான  முட்டை’ போடும் சமயம் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. ’முட்டை’ நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இன்பம் என்ற பொருளாதரத் துறையைச் சார்ந்த மாணவனுக்கு தீடீர் என்று வயிற்று வலி வந்தது. தொடர்ந்து ஒத்திகை இடைவிடாது பல்வேறு இடங்களில் நடித்தல் தொடர்ச்சியான பயணம் போன்றவை நடிகனுக்கு உடல் உபாதையை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவிப்பனுக்கு தான் தெரியும். எதையும் வெளியில் இருந்து பார்த்து சரி தவறு என அனுபவம் இல்லாமல் எளிதாக விமர்சித்து விடலாம்.
சிலர் தான் தான் சிறந்த விமர்சகன் , தான் நிறைய புத்தகங்களை பயின்றவன் தன்னால் மட்டுமே சிறந்த விமர்சனத்தை தர முடியும் , சிறந்த படைப்புக்களை தர முடியும் என மார்த்தட்டிக் கொள்வார்கள். ஆனால் அத் துறைச் சார்ந்த எந்த பட்டறிவும் இருக்காது , அனுபவமும்  இருக்காது . ஆனால் அவர்களை தான் இவ்வுலகம் நேசிக்கிறது , கவிஞன் என வர்ணிக்கிறது. அதற்கு அவர்கள் தங்களை  வெளிப்படுத்தும் தன்மை ,மிகச்சிறந்த எழுத்து ஆளுமைகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு, அவர்கள் மூலமாக ஏற்படுத்திக் கொள்ளும் அறிமுகம் மூலம் தன்னை மிகைப்படுத்திக்காட்டுவது  இயல்பான  , நம்மையும் ஏமாறச் செய்கிறது.   போலி டாக்டர்கள் இருப்பது போன்று போலி இலக்கிய வாதிகளும் பெருகி விட்டனர் என எண்ணத் தோன்றுகிறது.
சமீப காலமாக தான், நான் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளேன். என் சக பதிவர்கள் கொடுக்கும் புத்தகங்களை மாய்ந்து மாய்ந்து படிக்கிறேன். சமீப காலமாக இலக்கிய உலகில் மனுஷ்யபுத்திரன் , எஸ்.ராமகிருஷ்ணன் , சாரு , பிரபஞ்சன் ஆகியோரை புகழ்வதும் , அவர்களின் படைப்புகளை பஸ்ஸில் இடுவதன் பேரில் தன்னை ஒரு சிறந்த வாசகர் என்பது போலவும் ,விமர்சகன் என்பது போலவும் ,  தானும் இந்த இலக்கியவுலகில் இருக்கிறேன் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி , தன்னை வளர்த்து கொள்பவர்களையும் , மேற்கண்ட ஆளுமைகளின் மூலம்  பத்திரிக்கைகளில் வாய்ப்பு தேடுபவர்களையும்  பார்க்க முடிகிறது  இத் தனிப்பட்ட கருத்துக்கு எதிர்ப்புகள் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளேன். வாய்ப்புகளை தேடுவது என்பது இயல்பு. வாய்ப்புகளுக்காக தன் சக தோழனையும் இழிவு படுத்தி,முடிந்த அளவுக்கு தனக்கான  வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள மாய தோற்றத்தை ஏற்படுத்துவது என்பது போலி இலக்கியத் தனமாகப்படுகிறது.  


அந்த சனியனைத் தான் அமத்திப் போடுங்களேன் என்ற நிஜ நாடகங்களுக்கான அறிமுகத்துடனே செல்போன் குறித்து எச்சரித்து 
சூர்ப்பணங்கு நாடகம் ஆரம்பிக்கிறது . நாடகம் ஆரம்பித்தவுடனேயே பின்னனிஇசையும், ரீங்கார  ஒலியும் பார்வையாளனுக்குள் புகுந்து இரசவாதத்தை ஏற்படுத்தி , நாடகத்துடன் லயிக்க செய்கிறது.  . இசை பார்வையாளனுக்கு நாடகத்தின் மீது ஒரு வித ஈர்ப்பையும் எதிர்ப்பார்பையும் ஏற்படுத்தியது . காட்சி மாற்றங்களில் பின்னால் செல்லும் நிழல் உருவங்கள் பார்வையாளனை சோர்வடையாது ஒருவித எதிர்ப்பார்த்தலை ஏற்படுத்தியது . நாடகத்தில் சில இடங்களில் வரும் மொளனம் பார்வையாளனிடம் பல படிமங்களை உருவாக்க இடமளிக்கிறது . இயக்குநர் இடத்தில்  அவரின் குருவான மு.ராமசாமியின் சாயல் இருப்பது மறுக்கமுடியாத உண்மை. நாடகத்தின் உடல்படிங்களில் ஏற்படுத்தியுள்ள கற்பனை ,  பூபதியின் அப்ரித கற்பனைக்கு சான்றாகும். அவரின் மொழி நடை நாடகத்தின் தரத்தை கூட்டி, பார்வையாளன் செவிகளுக்கு இன்பத்தையும், சிந்தனையையும் ஏற்படுத்தி ,  எதார்த்த வாழ்வில் குடும்ப கட்டுக்குள் அடுப்பங்கறையில் அடங்கியுள்ள பெண்ணின்  உப்பு தன்மையை பலபடிமங்களில் உருவகப்படுத்தச் செய்வது  நாடகத்தின் வெற்றியை உறுதி செய்கிறது.   

  காட்சிப்படுத்துதல் என்பது இயக்குநருக்கு தேசிய விருதினை பெற்றுத் தரும் என்பதனை நாடகத்தினை கண்டுணர்ந்தவர்கள் தன் நிலை மறந்து  பாராட்டும் போதும், பூபதியை தொடுதலின் மூlaமும்  அறிய முடிந்தது. ஒவ்வொரு காட்சியும் பார்வையாளனுக்கு பரவசத்தை தந்தது. நல்லதங்காள்  கிணற்றுக்குள் கூந்தல் எடுத்து முடிந்து அணங்காய் மாறி, தன் ஏழுக் பிள்ளைகளுடன் வரும்  காட்சியில் இம் மண்ணின் அவலத்தை அருமையாக காட்சிப்படுத்துகிறார். கடைசியில் சுரக்காய்களை முலைக்காம்புகளாக உருவகப்படுத்தி , அதனை தன் ஏழுக் குழந்தைகளும் பருகும் போது நல்லதங்காள் பரவசப்படும் காட்சி ஒரு கவிதைக்கான தன்மையை வெளிக்கொணர்வதுடன் , அனைவரையும் கட்டிப் போடுகிறது  அனைவரும் அந்த ஐந்து விநாடிகள் நாடகத்தின் காட்சிப்படுத்துதலில் கரைந்து போய், தன்னையே மறந்து இருக்கும் விநாடியில் நாடகம் முடிவது இயக்குநரின் தனித் தன்மையைக் காட்டுகிறது. நாடகத்தின் கற்பனையின் உச்சநிலைக்கு உதாரணமாக சுரக்காய் முலைகளில் பாலூட்டுதல் அமைகிறது.   
 அது மட்டுமின்றி நாடக நடிகர்களின் அனைத்து அங்கங்களும் பேசுகின்றன. கண்கள் வார்த்தைகளுக்கு உயிரூட்டுகின்றன. புருவங்களின் ஏற்ற இறக்கங்கள் பார்வையாளர்களை நாடகத்தின் உணர்வுக்குள் அழைத்து செல்கிறது.  ஒவ்வொரு நடிகராக பாராட்ட ஆசை. இருப்பினும் அதற்கு காரணகர்த்தாவான முருகப்பூபதியைத் தான் பாராட்டத் தோண்றுகிறது.  

   உடையமைப்பு, ஒப்பனை, ஒளியமைப்பு, காட்சி ஜோடனை, நாடகப் பொருட்கள் , நடிகர்களில் உடல் அசைவு, அவர்களின் குரல் ஒலி, மொழியின் உச்சரிப்பு தன்மை,  அத்தனையும் பார்வையாளனை நாடகத்தில் ஒருங்கிணைத்து கட்டிப்போட்டு சத்தமின்றி ,உணர்வுப்பூர்வமாய் ரசிக்கச் செய்தது.  
  நான் போகணுமா … என அடுக்கடுக்கான காரணங்களை முன் வைக்கும் போது , அதிகார வர்க்கத்தின் அதட்டல்களும் ,அதற்கு நல்லதங்காள் அடிக்கிச் சொல்லும் காரணங்களும் , நான் போகணுமா சொல்லு என தொடர்ந்து அழுகையுடன் கேட்கும் காட்சிகளில் வசனங்கள் பார்வையாளனுக்கு பல படிமங்களை உருவாக்கி கொடுக்கிறது.     
  
  அப்பத்தாமார்களை அழைக்கும் போது உலக்கையால் குத்தும் ஒவ்வொரு குத்தும் பார்வையாளனின் இதயத்தை துளைக்கிறது. உண்மையான வலியை உணர்த்துவதாக அமைகிறது. நடிகர்கள் இயல்பு மாறாமல், மிகை நடிப்பு இல்லாமல் , இயல்பாய் நடித்து பார்வையாளனை ஒரு வித மயக்க நிலைக்கு அழைத்துச் செல்வது நடிகர்களின் நடிப்பிற்கு கிடைத்த சான்று.
  பார்வையாளனுக்கு ஒரு படிமத்தை மட்டும் வழங்காமல் ஒவ்வொரு காட்சியும் பல மடிமங்களை ஏற்படுத்தி, பார்வையாளனின் புரிதலை விரிவுபடுத்தியிருப்பது நவீன தமிழ் நாடகங்களின் தன்மையில் முருகப்பூபதியின் நாடகம் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது யாவராலும் மறுக்க முடியாது.

  

Monday, July 11, 2011

சலூன் கடையில் சமச்சீர்

  கடந்த வாரம் முடி திருத்தம் செய்வதற்காக சலூன் கடைக்கு செல்ல முயன்றேன். மழை லேசாக தூரத் தொடங்கியது. இதமான காற்று. லேசான  சாரல். நனைந்த படி சென்றேன். வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம் சலூன் . வெகு தொலைவில் இருந்து பார்க்கும் போது சலூனில் கூட்டம் அதிகமாக தென்படவே, என் கால்கள் நடையை தளர்த்தின. சலூனில் காத்திருப்பது என்பது ஒரு வலி தரும் அனுபவம்.  வேலை வெட்டியில்லாதவர்களுக்கு அதுவே வரப்பிரசாதம். அங்கு தான் அனைத்து விசயங்களும் பேசப்படும். சிறுவயதில் துப்பு துலக்க போலீஸ் முதலில் சலூனிலும், அயன் வண்டி தேய்ப்பவனிடமும் தான் விசாரிப்பார்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன். பலமுறை முடி திருத்தம் செய்யும் போது, தெரு ரகசியங்கள் முதல் உலக அரசியல் வரை பேசக் கேட்டு இருக்கிறேன். பேசிக் கொண்டே முடி வெட்டினாலும் , தொழிலில் சுத்தம் திருத்தம் செய்து  முடிந்ததும் தெரியும்.

    பலர் ஒரே கடையில் காலம் காலமாக முடி திருத்தம் செய்வது உண்டு. சிலர் என்னதான் அழகாக திருத்தம் செய்திருந்தாலும் , கடையை மாற்றிக் கொண்டே இருப்பர். அவர்களுக்கு யாரிடமும் திருத்தி ஏற்படாது. நான் என் இருப்பை தபால் தந்தி நகருக்கு மாற்றி இருந்தாலும் , என் அம்மா வீட்டு அருகில் தான் இன்றும் திருத்தம் செய்கிறேன். பழகிவிட்டது என்பதை விட தலையை வேறு யாரிடமும் கொடுக்க மனமில்லை. குடும்ப டாக்டர், வக்கில் இருப்பது போல முடி திருத்துபவர்களும் பலருக்கு இருக்கிறார்கள். அதில் என் குடும்பமும் அடங்கும். வீட்டில் யாருக்கும் முடியவில்லை, கடைக்கு வர இயலாத சூழல் வந்தால், அழைத்தவுடவே வந்து வீட்டிலேயே முடி திருத்தம் செய்வார்கள். இதில் முக்கியமானது சாதாரணமாக கொடுக்கும் தொகையையே வாங்கிக் கொள்வார்கள்.

   கடைக்கு முன் நிற்கும் கூட்டதைப் பார்த்தவுடன் ,வீட்டிற்கு திரும்பி விடலாமா என்று தோன்றியது. இருப்பினும் மழை நேரமாதலால், ஓதுங்கிய கூட்டமாவும் இருக்கலாம் எனவும் தோன்றவே, சலூன் நோக்கி எட்டு வைத்து நடந்தேன். மழையும் என் நடையின் வேகத்திற்கு தகுந்து தன் வேகத்தைக் கூட்டியது. நல்ல வேளை கடையில் முடி திருத்தம் செய்ய யாரும் இல்லை. உட்கார்ந்தேன். ஆட்டோ ஓட்டுனர் வேகமாக ஓடி வந்து , சார் டி.சி வாங்கி சேர்த்துட்டேன். இன்னும் புத்தகம் கொடுக்கலையே என்று என்னிடம் கேட்டார். ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்பிற்கும் புத்தகம் கொடுத்தாகி  விட்டதே என்றேன். நம்ம பாப்பா நான்காம் வகுப்பு படிக்கிறது என்றார். அதற்குள் முடி வெட்டுபவர், என் பாப்பா ஆறாம் வகுப்பு படிக்கிறது. அதற்கு புத்தகம் கொடுத்தார்கள் . அதில் ஓட்டியுள்ள பகுதியை பிரித்துப் பார்த்தேன். அதில் முந்தைய அரசு தன் கட்சியை , தன் குடும்பத்தை பற்றி செய்திகளை பரப்புவதாகவே செய்துள்ளதாக தோன்றுகிறது. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள், சூரியனை கருப்பு சிவப்பில் உள்ள படமாகப் போட்டுள்ளனர். கனிமொழி பற்றி செய்தி சங்கமம் பற்றிய பாடத்தில்  உள்ளது என்றார். என்ன சார் உண்மையா இல்லையா? என என்னிடம் கேள்வியும் கேட்டார். எனக்கு எதுவும் தெரியாது. நான் ஓட்டிய பகுதிகளைப் பற்றி கவலைப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் புத்தகம் கிடைத்தால் போதும் அதுவே எங்களுக்கு முக்கியம் என்றேன். சார் அரசு ஊழியராம் எப்படி நழுவு கிறார் என்றார் சலூன் கடைக்காரர்.
   
    ஆட்டோகாரர் மீண்டும் என்னிடம் பேச்சுக் கொடுத்து, சார் சமச்சீர் கல்வி வருமா வராதா? என்றார். இதுவரை எந்த அரசும் , எந்த கட்சியும் சமச்சீர் கல்வி  கொண்டு வருவதில், வந்ததில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது முறையாக அனைவருக்கும் சமச்சீராக கிடைக்க வேண்டும் என்பதில் தான் பிரச்சனை. தற்போது உள்ள அரசு புத்தகத்தை ஆய்வு செய்ய கமிட்டி அமைத்துள்ளது என்று கூறிக் கொண்டு இருக்கும் போது, அருகில் புகைத்து கொண்டிருந்தவர், சார் இது தான் எல்லாருக்கும் தெரியுமே? அந்த கமிட்டியில யாரும் அரசு பள்ளி சார்ந்தவர்கள் இல்லையே? உங்களை ஆய்வு பண்ண சொன்னா என்ன சொல்லி யிருப்பீங்க? என எனக்கு கேள்விகளை தொடுத்தார்.

  ”சும்மா அவரையே கேள்வி கேட்காதீங்க… நான் சொல்லுகிறேன்..” என முருக்கு விற்பவர் எனக்கு பதிலாக ஆஜராகியதல்லாமல், ”சார் முருக்கு வாங்கி சாப்பிட்டுகிட்டே பேசுங்க…”என வியாபாரத்தையும் செய்து கொண்டு,”நாலு முருக்கு சாப்பிடுகிறவனுக்கு , இரண்டு முருக்கு சாப்பிடனும்ன்னு சொன்னா எப்படி இருக்கும்? ஒரு முருக்கு சாப்பிடுகிறவனுக்கு இரண்டு முருக்கு  தந்தா எப்படி இருக்கும் ? அப்படி தான் சமச்சீர் கல்வி மெட்ரிக் பள்ளிக் காரனுக்கு போதாதது..அதுவே சாதா தமிழ் மீடியம் காரனுக்கு கொண்டாட்டமனாதாக உள்ளது, ஆனாலும் அது பற்றி விழிப்புணர்வு பொது மக்களிடம் கம்மியாகத் தான் உள்ளாது ” என்றார்.

   உடனே சலூன் கடைக்காரர் அடிப்படை வசதிகளையும் , ஆசிரியரின் தரத்தையும் கூட்டாமல் புத்தகத்தில் மட்டும் தரத்தை கூட்டினால் எல்லாம் சமச்சீர் ஆகிவிடுமா? என கேட்க, மழை தன் வேகத்தை கூட்டியது. சரியாக மாட்டிக் கொண்டோம் என நினைத்தேன்.

    பள்ளிக்கூடம் திறந்து ஒரு மாதம் ஆகப்போகிறது,காலாண்டு வரப் போகிறது புத்தகம் தராமல், மாகால், தெப்பக்குளம் என ஊர் சுற்றிக் கொண்டு இருந்தால் என்ன செய்வது? இதை பற்றி எல்லாம் யார் கவலைப்படுகிறார்கள் ?என ஆட்டோகாரர் மீண்டும் ஊசுப் பேற்றினார்.

   டீச்சருக்கும் வாத்தியாருக்கும், கல்வியாளருக்கும் அரசுக்கும் அக்கறையில்லாதது போல சும்மா எதிர்மறையாகவே பேசாதப்பா? அது அதுக்கு தகுந்த படி ஆங்கிலம் , பொது அறிவு , உடல் நலக் கல்வி, சுகாதாரக் கல்வி ,  டிவியில கேசட் போட்டுக் காட்டுறாங்க? என் புள்ள இப்ப எவ்வளவு மகிழ்ச்சியா ஸ்கூலுக்கு போகுது..அருமையா ஆங்கிலம் பேசுது என முருக்கு விற்பவர் அதட்டினார். ”எல்லாருக்கும் ஒரு அதிரசம் , இரண்டு முருக்கு கொடுங்க .. காச நான் தருகிறேன்” என்றேன்.

  இதுவரை பேசாதிருந்த பெயிண்டர், ”அவரு சொல்றதும் சரிதான். இப்படி எதுவும் படிக்கலைன்னா பொது மக்கள் சும்மா விடுவாங்களா? இன்நேரம் சாலைமறியல் , பள்ளிகூடம் முன் போராட்டம், அது இதுன்னு எதாவது நடந்து இருக்கும்லா.. சமச்சீர் பத்தி ஏன் அக்கறை இல்லைன்னா… மெட்ரிக் பள்ளியில படிப்பவர்கள் தான் அதிகம். என் பிள்ளை எடுத்துக்க நர்சரியில தான் சேர்த்து இருக்கேன். உன் மக கான்வெண்டு ஸ்கூல்ல தமிழ் மீடியம் படிக்குது. இவரு குழந்தை மெட்ரிக் படிக்குது. இவரு பிள்ளை தனியார் பள்ளியில தமிழ் மீடியம் படிக்குது. இங்கேயே  எல்லாரும் தனியார் பள்ளி தான். யாரும் அரசு பள்ளிக் கிடையாது. அப்படி இருக்க இதற்கு வலுசேர்ப்பது என்பது தவறானது. எல்லாரும் தகுதியான , நல்ல கல்வி தான் தேடுறோம்.. என் பக்கத்து வீட்டுக் குழந்தை போன வருடம் எல்.கே.ஜி படிச்சது. அதுக்கு ஆயிரம் வரை எழுத படிக்க தெரியும். ஆனா இப்ப கொடுத்த ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் கணக்கில் நூறு வரைத் தான் உள்ளது. அதுக்கு ஏ,பி,சி, டி எல்லாம் தெரியும் ,சின்ன சின்ன வாக்கியம் எழுதும் , ஆனா இப்ப  அதவிட கம்மியா தான் படிக்கிறா!இப்படி எனக்கே தெரியுற குறை அம்மாவுக்கு அதிகமா தெரியாதா? அதான் புத்தகத்தை சரி செய்யாணும்ன்னு சொல்லுறாங்க… நம்ம புள்ளைகளுக்கு நல்லது தான் செய்வாங்க.., “

   திசை மாறிய கப்பலாக அம்மாவின் மதுரை பேச்சு, சமகால அரசியல், அதனை தற்போது நிறைவேற்றி வருவது என பேச்சு அரசியலாக, மழையும் தன்னை மறந்து தூங்கிப் போக, நான் மெதுவாக விடைப்பெற்றேன்.

    சலூனில் கிடைக்கப் பெறும் அனுபவம் மிகவும் சுவரசியமானது. சில சமயம் அதுவே சண்டைக்கு காரணமாகி , கத்திக் குத்து கொலையில் முடிவதும் உண்டு. அதனால், என் மூத்த தம்பி(கிரிமினல் லாயர்) சலூனுக்கு போனமா முடி வெட்டுனோமான்னு வந்திடனும் , அநாசியமாகப் பேசக் கூடாது . பின்னாடி வம்பு வந்திடும் என என்னையும் , என் தந்தையையும் எச்சரித்துக் கொண்டேயிருப்பான். இன்று அவர்களின் அரசியல் பேச்சும் அப்படி தான் கார சாரமாக இருந்தது. உங்களுக்கும் இது போன்ற அனுபவம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த அனுபவம் உங்களின் சலூன் கடையை நினைவுபடுத்தியிருக்குமானால் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும்.