Friday, October 24, 2014

பெட்டிக்கடை

எப்பொழுதும் பெட்டிக்கடைகள் வார இதழ்கள் படிப்பதற்கான இடமாக மட்டுமல்லாமல், பல நண்பர்களை தரும் இடமாகவும் உள்ளது. நம்மை உயர்த்துவதற்கான இடமாகவும், பல தொடர்புகளை ஏற்படுத்தி தரும் தளமாகவும் இருப்பதை உணர்கின்றேன்.

பெருமழையில் ஒதுங்கிய போது தான் எனக்கும் பெட்டிக்கடைக்குமான நட்பு மலர ஆரம்பித்தது. மதுரை, திணமனி தியேட்டர் சந்திப்பு பகுதியில் பல கடைகள் உள்ளன. இட்லிக்கடை, புரோட்டாக்கடை, பொங்கல் கடை, பூக்கடை, இவற்றுடன் பல பெட்டிக்கடைகளும் உள்ளன. ரவி பெட்டிக்கடை என்றால் தனிக்கூட்டம் உண்டு.கல்லூரி நாளில் புத்தகங்களின் மீது கொண்ட காதலில் தொடங்கியது தான் பெட்டிக்கடை சிநேகம். முத்தாரம் ,ராணி, ஆனந்தவிகடன், குமுதம், துக்ளக், ஜீனியர்விகடன் என பல இதழ்களை அறிமுகப்படுத்திய இடம் தான் பெட்டிக்கடை.

நூலகங்கள் செல்வதற்கு வெகுதொலைவு பயணிக்க வேண்டும். அதே வேளையில் நூலகத்தில் எந்த நேரத்திலும் சென்று படிக்க முடியாது. காலவரையறை உண்டு. ஆனால் , பெட்டிக்கடை அப்படி அல்ல. பெட்டிக்கடை வைத்துள்ள நண்பர்களுடன் கொஞ்சம் பேசினால் போதும், கடை நமக்கானதாகி விடும். எந்நேரமானாலும் நமக்கு வேண்டிய புத்தகங்களை படிக்கலாம். ஆனால் , அவர்கள் எல்லோரிடமும் அவ்வளவு எளிதாக பழகி விடுவதில்லை. அதேவேளையில் அவர்கள் நண்பர்களாகிவிட்டால்,நம்மை எளிதில் வீட்டிற்கு செல்ல அனுமதிப்பதில்லை. ரவியுடனான உறவு சிறிய டீயில் தான் ஆரம்பித்தது. ஆனால் இன்று ஆலமரமாக விரிந்து பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

திருமணமாகி வீடு மாறிய பின்பு பெட்டிக்கடைகள் நட்பு விரிந்துள்ளது. பெட்டிக்கடைகள் என்னை மட்டும் நட்பாக்கி கொள்ள வில்லை. தன்னோடு நட்பாகி உள்ள அனைவரையும் நமக்கு தந்துவிடுகின்றன. சிறிது நேரம் நாம் செய்திதாளை விரித்து படித்துக்கொண்டிருக்கையில் , அங்கு சிக்ரெட், பாக்கு, கூல்டிரிங்க்ஸ் மற்றும் பத்திரிக்கைகள் வாங்கும் டாக்டர், இன்ஞிநியர்கள், வக்கில்கள்,ஆசிரியர்கள்,அரசியல் வாதிகள் மற்றும் பலத்தரப்பட்ட தொழில் புரிவோரை நமக்கு நட்பாக தந்துவிடுகின்றது. சிறிய புன்னகையுடன் ஆரம்பிக்கு இந்த அறிமுகம் நாளடைவில் பெரிய நட்பாக மாறவும் வாய் ப்பு உள்ளது. வியபாரிகள் பொருத்தவரையில் இந்நட்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

மாவட்ட நீதிமன்றம் எதிரில், திணமனி தியோட்டர் அருகில், சௌராஷ்டிரா பள்ளி அருகில் , அம்மா மெஸ் எதிரில், அய்யர் பங்களா கார்னர், புதூர் பிடிஆர் அருகில், எஸ்.இ.வி பள்ளி எதிர்புறம், அவுட் போஸ்ட், ஆத்திக்குளம் கார்னர்  என பெட்டிகடையின் நட்பு விரிந்து கொண்டே செல்கின்றன.

எங்காவது நாம் நின்று பேசும்போது, எவராவது நம்மை பார்த்து புன்னகையை மலர விட்டால், நாம் புன்னகையை பதிலுக்கு அளிப்பதுடன் ,சிறிய யோசனையுடன் யார் என யோசிக்கும் நேரத்தில் அவர் மறைந்துவிடுவார். பின் நாம் யோசித்து யோசித்து கொண்டு வர முயற்சி செய்து பல சமயங்களில் தோல்வியில் , தெரிந்த யாரோ ஒருவர் என முடிவுக்கு வந்துவிடுவோம். அதே நாளில் எதாவது ஒருபெட்டிக்கடையில் நாம் மீண்டும் பார்க்கையில் நினைவுக்கு வந்து அவர் பெயரை கேட்டு, நலம் விசாரிக்கும் போது நட்பு இன்னும் பலம் பெற்றுவிடுகின்றது.

அப்படிதான் இன்று மாலை ஆத்திக்குளம் பகுதியில் நண்பனுக்காக காத்திருந்து ஏமாந்த வேளையில் ஆனந்தவிகடன் வாங்க சென்றேன். தீபாவளியை ஒட்டி பெட்டிக்கடையும் மூடிவிட்ட நிலையில், டீ குடிக்க நினைத்து டீ சாப்பிட நினைக்கையில், தெரிந்த முகம் , நினைவுக்கு வர சிரமப்படுத்தியது. அவரும் என்னை பார்த்தது மாதிரி தெரிகின்றது என புன்னகை மலர செய்தார்.

அவரை நினைவுக்கு கொண்டு வந்து நானே அருகில் சென்று, நீங்கள் சூர்யா புத்தக நிலையத்தில் காமிக்ஸ் புத்தகம் வாங்குவீர்களே என்று கூறி, என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். சிரித்தப்படியே, நான் ராஜ் என்றார்.

அவரை முதன் முதலில் சூர்யா புத்தக நிலையத்தில் (அவுட் போஸ்ட் )  பார்த்தப்போது கைநிறைய காமிக்ஸ் புத்தகத்தை வைத்திருந்தார். அந்த தருணம் என் நண்பன் கார்த்திகைப்பாண்டியன் (கா.பா) என் நினைவில் மின்னல் போன்று மின்னிச் சென்றார். ஆம் காமிக்ஸ் கா. பாவுக்கு  மிகவும் பிடித்த ஒன்று. முத்து காமிக்ஸ் புத்தகம் மீண்டும் கொண்டு வருகிறார்கள் என்றவுடன் பைக்கில் சிவகாசிக்கு நேரில் சென்று புத்தகம் வாங்கி வந்தவர். ஒரே நாளில் வாசித்து முடித்ததாக அப்போது கூறினார். காமிக்ஸ் குறித்து கா.பா பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு ப்ரியம்.

நானும் என் வாசிப்பை காமிக்ஸ் மூலமே ஆரம்பித்தேன்.என் நண்பன் ப்ரேம்நாத் உடன் சேர்ந்து வரைந்து நாங்களே தாளில் கதையை உருவாக்கி உள்ளோம். அதனை நண்பர்களுக்கு தனி பிரதியாக கொடுத்து மகிழ்ந்துள்ளேன். அப்போது நான் 10வது  படித்து கொண்டிருந்தேன். ப்ரேம் படிப்பை நிறுத்தி விட்டு பட்டுநூல் தொழிலுக்கு பேய் இருந்தான். ஆனாலும் தீவிர காமிக்ஸ் வாசகன். அவனே எனக்கு எழுதுவதற்கு உந்துதலை தந்தவன். அதன் தொடர்ச்சியாக அப்போது குமுதம், ஆனந்தவிகடனுக்கு கதைகளை அனுப்புவேன். ஒருவருடம் எந்த கதையும் வெளிவரவில்லை என்றவுடன் நாங்களே கையெழுத்து பிரதி ஆரம்பித்தோம். அவன் தன்னுடன் வேலைபார்க்கும் பெண்களிடம் எங்களின் படைப்புகளை கொடுத்து படிக்க சொல்வான். என்னை பாராட்டுவான். ராஜேஸ்குமார் நாவல்களை படிப்பான். சுபா நாவல்களை படிப்பான். சுபா இருவர். அவர்கள் எழுதுவது போல் நாம் சேர்ந்து கதை எழுதினால் என்ன? என்பான். இன்று ப்ரேம் குடும்ப சூழலில் மதுரையில் இல்லை. அப்படி தான் நினைக்கின்றேன். வாழ்க்கை நாம் நினைப்பது போல் நம் கதைகளை வடிப்பதில்லை. அவை அதன் போக்கில் நம்மை வளைத்து கொள்கின்றது. நாமும் நீரோட்டத்தின் போக்கில் செல்வது போல், இழுத்து சொல்லப்படுகின்றோம்.

ராஜ் அவர்களிடம் காமிக்ஸ் ஆர்வம் குறித்து கேட்டேன். சிறுவயது முதல் படித்து வருவதாக சொன்னார். காமிக்ஸ் படங்கள் , அதில் உள்ள வசனங்கள் நமது கற்பனையை தூண்டுபவை. தான் சிறுவயதில் படித்த கதையையும் புத்தகத்தின் பெயரையும் சொல்லி அசத்தினார். போர் குறித்தும், அதில் வீரர்கள் இழப்பு, உணவு பற்றாக்குறை, என காமிக்ஸ் விவரித்தது தனக்கு புது அனுபவத்தை இளமையில் தந்தது என்கின்றார். சமீபத்தில் காமிக்ஸ் கொஞ்சம் பரவாயில்லை. அதற்கு முன் சிறுவர் மலர்களில் காமிக்ஸ் அர்த்தமற்று வந்தது என்றார். காமிக்ஸ்க்கு ஓவியம் மிக முக்கியம். அந்த ஓவியம் பல கற்பனைகளை உருவாக்க வேண்டும் என்றார். ஒரு ப்ரேமுக்கும் மற்றோரு ப்ரேமுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்றார். அதில் அச்சிடப்படும் மொழி முக்கியம் என்றார். அது தான் நம் மொழித்திறனை வளர்க்கும் என்றார். ஆனால் சில வருடங்களுக்கு முன் டிவி க்களை முன் நிறுத்தி தங்கிலீஸில் வெளிவந்தன சிறுவர் மலர் இதழ்கள். அவை நம்மிடம் இருந்த தமிழையும் கொலை செய்தன என்றார். சிறுவர்களை வாசிப்பு அனுபவத்தை விளையச்செய்பவை காமிக்ஸ் என்றார்.

நல்ல சந்திப்பு. என் நண்பன் கா.பா வை நினைவு கூற செய்த நிகழ்வு. அவர் யோக டீச்சர் என்றவுடன் இன்னும் நெருங்கி விட்டோம். இப்படி தான் பெட்டிக்கடைகள் நமக்கு ந்ல்ல உறவுகளை தருகின்றன.

பெட்டிக்கடைகள் புகை பிடிக்கும் அல்லது பீடி சிக்ரெட் விற்கும் இடம் மட்டும் அல்ல . அது தொடர்புகளை உருவாக்கும். தொடர்புகள் தொடரும்.

மதுரை சரவணன். 

Tuesday, October 21, 2014

கசக்கிறது தீபாவளி.!


மண் அதிர
புகை கக்கி 
வானத்தில் தீப்பிழம்பு தெரிய
காதுகளை செவிடாக்குமளவுக்கு
ஓசை ...
வெடிக்கிறார்கள் என்கிறார்கள்.
இதயம் பதறுகிறது
இப்படியாக..
இரத்தம் சிதறி
மண்டை பிளந்து
மூளை வெளிவர
சிதறிய இரத்தம்
முகத்தில் தெறித்த மாத்திரம்
அதிர்ச்சியில் மரணம்
நூறாக ..
வெடித்து சிதறிய பிண்டம்
ஆயிரமாக
எல்லாம் கண்முன் கோரக்காட்சியாக கிடக்க
பித்த நிலையில்
மற்றுமோர் பத்தாயிரம்
இதயம் பதறுகிறது
இப்படியாக இருக்ககூடாது..
வெடிப்பது தவறுதான்
தீபாவளியாக இருந்தாலும்
நிலத்தை இழந்தவன்
உடல் இன்னும் அதிர்ச்சியுற்று
அதிர்வுறுகிறதே...!
மதுரை சரவணன்.

காதல் கவிதை

முழுநிலவு
--------------------
உயரத்திலிருந்து பறக்கும் பருந்தின் கண்கள்
கூர்மையாக்கி கொத்தக் காத்திருக்கின்றன
என்னைப்போலவே...
பார்வை வேறுயெங்கும் இல்லை
என்பதறிந்தும் ரசிக்கின்றாய்
கண்டும் காணாதும்...
கடல் அலையின் இடைவிடா மோதல்
தொடர்ந்து கரையை முட்டிக்கொண்டிருக்கின்றது
கரைக்கும் அலைக்குமான விளையாட்டாய்
நம் பார்வை
ஏழு வகுப்புகள் கடந்தும் ஏழு தோழனை எதிரியாக்கியும்
எதிரியாய் இருக்கும் உன் சகோதரனை நண்பனாக்கியும்
உன் தாய்க்கு பலசரக்கு வாங்கி கொடுத்தும்
உன் தந்தைக்கு பல சரக்குகள் வாங்கி கொடுத்தும்
சிந்துபாத் கதைகளை விட கடுமையான இடர்பாடுகளை
கடந்து எப்போதும் உன்னோடு இருக்கும்
எந்தன் உயிர் உன் இதழ் விரிகையில் பறக்கிறது
அள்ளிக்கொள்கின்றாய் சொல்லிக்கொள்ளாமலே.
கதவு தட்டும் சத்தம் கேட்கின்றது
திறக்கின்றேன் இரவின்
வானத்தில் நட்சத்திரங்களுக்கு மத்தியில்
முழுநிலவாய் நீ.
மதுரை சரவணன்.

Wednesday, October 1, 2014

மதுரையும் காந்தியும் - சிறப்புக்கட்டுரை


காந்தியடிகள் மதுரைக்கு ஐந்துமுறை வருகைப்புரிந்துள்ளார். 

முதல்முறையாக 1919 மார்ச் மாதம் 26ம் தேதி ரௌலட் சத்தியாகிரகத்திற்கு ஆதரவாக மதுரைக்கு வந்தார். ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் தங்கினார். பின் மதுரை கல்லூரித்திடலில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாடினார். அவரது உரையை T.S.S.ராஜன் தமிழில் மொழிப்பெயர்த்தார். அந்தக்கூட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைப்பெற்ற சத்யாகிரகப் போராட்டத்தில் பங்குபெற்ற நாகப்பன் குறித்தும், தெனாப்பிரிக்காவில் நடைப்பெற்ற சத்யாகிரகத்தில் ஈடுப்பட்டதற்கு சிறைத்தண்டனை பெற்று தனது 16வது வயதில் உயிர் நீத்த தமிழ்பெண் நாகலெட்சுமி அம்மாள் அவர்களின் தியாகம் குறித்தும் காந்தியடிகள் பேசினார்.

இரண்டாவது முறையாக ஒத்துழையாமை நடைப்பெற்று கொண்டிருந்த போது வருகைப்புரிந்தார். 1921 செப்டம்பர் 21ம் தேதி மதுரைக்கு வந்து டேர் நம்பர் 251 –ஏ, ராம்ஜி கல்யாண் ஜி என்பவரது இல்லத்தில் தங்கினார். மறுநாள் (செப்டம்பர் 23) காலை காந்தியடிகளின் உடையில் பெரும்மாற்றம் ஏற்பட்டது. சட்டை மற்றும் தலையில் சுற்றிக்கொள்ளும் ஆடை ஆகியவற்றை நீக்கிவிட்டு இடுப்பளவு மட்டும் உடை அணிந்து வந்தார். ஏழை மக்கள் மிகுதியாக உள்ள இந்தியாவில், அனைவரும் அணிவதற்கு போதிய ஆடை இல்லாததால், தான் இடுப்பளவு மட்டும் ஆடை அணியப்போவதாக கூறினார். இடுப்பளவு ஆடை மட்டும் அணிந்து சௌராஷ்டிரா மக்களது கூட்டத்தில் உரையாற்றினார். அவர் உரையாற்றிய இடம் இந்நாளில் அலங்கார் திரையரங்கு அருகில் காந்தி சிலையுடன் காந்தி திடல் என்று அழைக்கப்படுகிறது.

மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசிய காந்தி, “கதராடை அணிந்து சுதேசி இயக்கத்தை வலுப்படுத்தினால்தான் சுயராஜ்ஜியம் பெற முடியும்” என்று மக்களிடம் பேசினார்.

கதரியக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மகாத்மா காந்தி 1927ம் ஆண்டு நாட்டின் பலப்பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். 1927 செப்டம்பர் 28ம் நாள் மதுரைக்கு மூன்றாவது முறையாக வருகைபுரிந்தார்.  T.C.செல்வம் அய்யங்கார் தனது கையால் நூற்ற அழகிய மூன்று நெசவு கதர்துணிகளை காந்திக்கு வழங்கி வரவேற்றார். அன்று பேசிய பொதுக்கூட்டத்தில் மதுரை பள்ளிகளில் மாணவர்களின் நூல் நூற்றல் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்று கூறி மதுரை நகராட்சியை பாராட்டினார். அன்று இரவு ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் தங்கினார்.

மாரியம்மன் தெப்பக்குளத்தின் கீழ்புறம் அமைந்துள்ள சௌராஷ்டிரா கிளப்பில் 1927 செப்டம்பர் 29ல் காந்தியடிகள் உரையாற்றினார். சௌராஷ்டிரா சமூகத்தினர் கதர் நிதியாக ரூ 3669/- நன்கொடையை காந்தியிடம் வழங்கினர். கூட்டத்தில் கலந்து கொண்ட சௌராஷ்டிரா மகளிர் பலர் தங்களது தங்க அணிகலன்களையும் காந்தியிடம் அன்பளிப்பாக வழங்கினர்.

1927 செப்டம்பர் 30ல் மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மகாத்மா காந்தி உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு மதுரை மகளீர்கள் ஏரளமாக கூடினர்.  மதுரை மக்கள் கதர் நிதிக்கென வழங்கிய நன்கொடை ரூ13,472/- மகாத்மா காந்தியிடம் வழங்கப்பட்டது. இப்பெரும் நிதியை திரட்டுவதில் முக்கிய பங்காற்றியவர் திரு A. வேதராம ஐயர் ஆவார். மதுரையில் மகளிரின் கதர் நிதையைப் பெருமளவு பெற ஜார்ஜ் ஜோசப்பின் துணைவியார் திருமதி சூசன் ஜோசப் முயற்சி செய்தார். மதுரை மகளிரால் கதர் நிதிக்கு வழங்கப்பட்ட தொகை சென்னை நகரையும் ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றது குறிப்பிடதக்கது.

 மகாத்மா காந்தி நான்காவது முறையாக 1934 ஜனவரியில் வருகைப்புரிந்தார். ஜனவரி  25, 26 என இரண்டு நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். இம்முறை என்.எம்.ஆர் சுப்புராமன் இல்லத்தில் தங்கினார்.

        1934 ஜனவரி 26 மதுரை சேதுபதி பள்ளியில் நடைப்பெற்ற கூட்டத்தில், அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, சேதுபதிஉயர்நிலைப்பள்ளி, மதுரைக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி மதுரை கல்லூரியில்படித்த மாணவர்கள் , அரிசன நிதியை திரட்டி காந்தியிடம் வழங்கினர். அரிசன மாணவர்களைத் தங்களது சகோதரர் போல் நடத்த வேண்டும் என்றும் சேரிகளில் வாழும் அரிசன குழந்தைகளின் ஆடைகள் சுத்தமாக இருக்க உதவி செய்யுமாறும் இக்கூட்டத்தில் காந்தியடிகள் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.              

    அதேநாளில், மேலமாசி வீதியில் அமைந்துள்ள சந்திரா திரையரங்கில் நடைபெற்ற மகளீர் கூட்டத்தில் நாட்டுப்பற்று மிக்க பெண்கள் பலர், தங்களது தங்க அணிகலன்களை அரிசன நிதிக்காக மகாத்மா காந்தியிடமும் அவருடன் வருகைபுரிந்த ஆங்கிலேய பெண்மணியான மீரா பென் அம்மையாரிடமும் வழங்கினர். அன்று மதுரை சேரிகளை பார்வையிட்டார். அதன் பின் முனிச்சாலை பகுதியிலுள்ள மணல்மேட்டில் பேசினார். தீண்டாமை நமது நாட்டிலிருந்து முற்றிலும் நீக்க வேண்டும் என்று கூறினார். தான் பொதுமக்களிடம் பெற்ற அரிசன நிதியிலிருந்து ஒரு தொகையை மதுரை அரிசன மக்கள் நலனுக்காக வழங்கினார்.

 1934 சனவரி 26ல் விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ,“தீண்டாமை ஒரு பாவச்செயல் , அதை நமது சமூகத்திலிருந்து அகற்ற வேண்டும்” என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டார். அக்கூட்டத்தில் அரிசன மக்கள் நலனில் மிகுந்த ஆர்வமுடைய ச். தாயம்மாள் மகாத்மா காந்தியிடம் விலையுயர்ந்த பரிசுபொருட்களை அரிசனநல நிதிக்காக வழங்கினார்.

ஐந்தாவது முறையாக காந்தியடிகள் 1946 பிப்ரவரி 2ம் தேதி மதுரை 
வந்தார். அன்று மாலை பந்தயத்திடலில் நடைப்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அன்று இரவு பனகல் மன்னர் கட்டிடத்தில் (இன்றைய அரசினர் மீனாட்சி மகளீர் கல்லூரி ) தங்கினார். மறுநாள் பிப்ரவரி 3ம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். “எனது மனதிலிருந்து நீண்டநாள் ஆவல் இன்று நிறைவேறியது குறித்து நான் மிக்க மகிழ்வடைகிறேன்” என்று மீனாட்சி அம்மன் கோவிலின் பார்வையாளர் ஏட்டில் மகாத்மா காந்தி குறிப்பிட்டார். V.I. முனிசாமி பிள்ளை, கே.காமராஜ், தக்கர் பாபா மற்றும் பலர் மகாத்மா காந்தியுடன் கோவிலி வழிபட சென்றனர். 1939 சூலை  8 முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அரிசன மக்களின் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்ட சிறப்பு மிக்க நிகழ்வுக்கு மதுரை மக்களைப் பாராட்டவே ஐந்தாவது முறையாக மதுரைக்கு மகாத்மா காந்தியடிகள் வருகைப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சரவணன். தலைமையாசிரியர்
மதுரை 9.
செல் 9344124572

(இக்கட்டுரை அக்டோபர் மாத மாணவர் உலகம் இதழில் வெளிவந்துள்ளது. )