Monday, December 19, 2011

சமூக அக்கறையில் ஈரோட்டின் பங்கு


   ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக கடந்த ஞாயிறு காலை பதிவர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. நாளைய சமூகத்தை உருவாக்குவதில் வலைப்பதிவர்களின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை பதினைந்து நபர்களை மேடையேற்றி அறிமுகம் செய்து வைத்த போது உணரச் செய்தது. 

        
         ஏதோ பொழுது போக்குக்கு எழுதுபவர்களை , இணையத்தின் முக்கியத்துவத்தை இந்த அறிமுகம் உணர்த்துவதாக இருந்தது. புதியவர்களுக்கு ஒரு அறிமுகத்தையும் , அவர்களுக்கு தேவையான உற்சாகத்தையும் , அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலையும் இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது. 







         சமூகப் பங்களிப்பு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாயந்தது என்பதை உணர்த்துவதாக சிறப்பு அழைப்பாளர் ஸ்டாலின் குணசேகரனின் பேச்சு அமைந்தது. எழுத படிக்க தெரிந்த எவனும் புத்தகம் வாங்கி வாசிக்க  வேண்டும் என்ற உணர்ச்சிகரமான பேச்சு அவரின் சமூக அக்கறையை உணர்த்துவதாக அமைந்தது.  



    சமூகத்தில் சிறந்த தலைவனாக விளங்க உழைப்பும் , உண்மையும் எவ்வளவு முக்கியத்துவம் . ஆம் , பிற துறைகளில் உழைப்பும் , உண்மையும் முழுமையாக  இல்லையெனில் பாதிப்பது என்பது அவர்களுக்கு மட்டுமே. ஆனால், சமூக பங்களிப்பில் என்பது இச்சமூகத்தின் ஒட்டு மொத்த சீரழிவுக்கும் காரணமாகவும் , சமூகத்தின் நேர்மறையான வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துவிடும்.   கதிர் , தாமோதர் சந்துரு, ஜாபர் , லவ்டேல் ….என பெயர் சொல்லி எழுதி தள்ள ஆசை இருந்தாலும் ,ஈரோடு பதிவர்களின்  தோழமைப்பண்பு, கட்டுப்பாடு, நம்பகத்தன்மை , கவர்ச்சி , அத்துடன் போட்டிப்போடும் பண்பு என்னை வியக்க வைக்கிறது. அனைவரின் ஒட்டுமொத்த உழைப்புக்கு கிடைத்த ஒரு பரிசு தான் அரங்கம் நிரம்பி வழிந்தற்கு சாட்சியாக அமைந்திருந்தது. கல்யாண விருந்தை போன்ற பிரமிப்பு… முதல் நாள் இரவில் இருந்து ஆரம்பித்து , மறுநாள் மதியம் வரை சைவம் , அசைவம் என நிறைவான விருந்து…. இவர்களால் மட்டும் எப்படி சாத்தியம் என மதுரை பதிவர்களை மட்டுமல்ல அனைத்து பதிவர்களையும் வாய் பிளக்க செய்யும் பெருமை ஈரோடுக்கே உள்ள தனித் திறமை ….! 



    இந்த சந்திப்பு எனக்கு நிறைய நண்பர்களை தேடி தந்துள்ளது. புது உற்சாகத்தை , உத்வேகத்தை கொடுத்துள்ளது. சமூகத்தில் எனக்குள்ள பொறுப்பை உணர்த்துவதாக உள்ளது. இது வருங்காலத்தில் நல்ல மாற்றம் தரும் அரசியல் அமைப்பாகவும் மாறலாம் என மணிஜி சிரித்துக் கொண்டே வெற்றி சின்னத்தை காட்டி … இந்த நிகழ்ச்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவதை பாருங்கள். 

Saturday, December 3, 2011

இவர்களையும் புறக்கணிக்கலாமா?


    இன்று சர்வதேச மாற்று திறனாளிகளின் தினம். மாற்று திறனாளிகள் என்பதனாலே குறைபாடு உடையோர் மனம் நெகிழ்ந்து விடுவர் என்று கருதினால் , அது போன்று ஒரு மூடதனம் வேறு ஒன்றும் இல்லை. இந்த தருணத்திலாவது , (மருத்துவ ரீதியாக இந்தியாவில் வெளிப்படையாக தெரியக்கூடிய ஊனத்தில் சதவீதம் 60% உள்ளவர்கள் மட்டுமே ஊனமுற்றோர் என கருதப்படுகின்றனர்.) மாற்று திறனாளிகளை நினைவு கூர்ந்து அவர்களையும் சக மனிதனாக கருதி, நம்மோடு பிறரைப்போல வாழ மதிப்பு அளிக்க வாய்ப்பு கொடுப்போம்.
    என் நண்பர் பேருந்தில் கன்னியாகுமரியிலிருந்து வரும் போது, ஒரு நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய மாற்றுத் திறனாளியின் அடையாள அட்டையை வாங்கிப் பார்க்காமலே , ”உயிர வாங்குரதுக்குன்னே.. வந்துட்டானுங்க… பார்த்த நல்லா தானே இருக்க… டிக்கட் எடுக்க வேண்டியது தானே ”என ஏளனமாக பேசிய நடத்துனரை பற்றி சொல்லி வருத்தப்பட்டதை நினைவு கூற விரும்புகிறேன். உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கலாம்.

     தயவு செய்து அவர்களையும் கொஞ்சம் தயவு கூர்ந்து ஒரு சக மனிதனாக பாருங்கள். இன்று காலை என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்த ஆனந்த வள்ளி என்ற ஆசிரியை கூறும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பின், நடத்துனர் சக பயணியிடம் , ”இவன ல்லாம் பார்த்த மெண்டல் மாதிரியா தெரியுது, எங்க ஏறணும் , எங்க இறங்கணும் ன்னு தெரியுது.. இவனுக்கு போய் சலுகை கொடுக்குறாங்க பாருங்க..” என்று பேசியது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

     இதற்காக நான் நடத்துனர் எல்லாம் மோசமாக நடந்து கொள்கின்றனர்  என்ற வாதத்திற்கு வரவில்லை. நம்மில் பலர் மாற்று திறனாளிகளை ஊதாசினப்படுத்தியும், அவமதித்தும், ஒதுக்கியும், புறக்கணித்தும் , இவ்வுலகில் வாழ தகுதியற்றவர்கள் என்றும் கருதுகிறோம். ஆனால், பன்னிரெண்டாம் நூற்றாண்றிலே இரண்டாம் ஹென்றி அவர்கள் மனவளர்ச்சி குன்றியோருக்கு என சட்டம் இயற்றியுள்ளார். மரியா மான்டிசோரி அவர்கள் சென்னையில் மாற்று திறனாளிக் குழந்தைகளையும் பிற குழந்தைகளுடன் கல்வி கற்று தந்தார்.

    இன்று நல்ல நிலையில் பயிலும் பள்ளிகளில் , மாற்று திறனாளிகளையும் சேர்த்து படிக்க வைக்க முடியும் என்ற நிலை வந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் அவர்களையும் சேர்த்து எடுத்து வந்தாலும், பலரால்(குடும்பத்தில் உள்ளவர்களே) அவர்கள் புறக்கணிக்கப்பட்டு, சேர்க்கப்படாமல் உள்ளனர். இன்று அரசு அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் , உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் , அனைவருக்கும் கல்வி திட்டத்தில் சிறப்பு ஆசிரியர்களை நியமித்து உள்ளது. அவர்கள் மூலமாக சாதாரண பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியருக்கான கல்வியையும் வழங்கி , ஆசிரியர்களை மாற்று திறனாளிகளின் சிறந்த கல்விக்கு உறுதுணைக்கு வழிவகுத்து, பயிற்சி அளித்து வருகிறது.

    அரசு ஒருபுறம் மாற்று திறனாளிகளின் நலம் பற்றி சிந்தித்து , தொடர் நடவடிக்கை எடுத்து வந்தாலும் , சக மனிதர்களாகிய நாம் நம் மனதில் மாற்று சிந்தனைகளை விதைத்து , அவர்களை நம்மில் ஒருவராக கருதி , அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் , திறனையும் வளர்க்கும் விதத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    பார்வையற்றோருக்கு கண் பார்வை மட்டும் தெரிவதில்லை. காது கேளாதவருக்கு கேட்கும் திறன் மட்டும் இல்லை. வாய் பேசத் தெரியாதவர்களுக்கு பேச இயலாது. கால் ஊனமுற்றோருக்கு காலின் செயல்பாடு குறைப்பாட்டின் அளவினைப் பொருத்து செயல்பாடு அளவு இருக்கும். இவர்களுக்கு எல்லாம் இவர்களின் ஊனம் தெரியும் அல்லது உணர முடியும். சற்று சிந்தியுங்கள். மனவளர்ச்சி குன்றியோருக்கு தனக்கு என்ன குறைபாடு உள்ளது என்பதே அவர்களுக்கு தெரியாது. நீ லூசு என்றாலும் புரியாது?  அவர்களை புறக்கணிக்கலாமா?


     மனவளர்ச்சிக் குன்றியோருக்கு  தேவையான அதாவது அன்றாட செயல்பாடுகளான குளித்தல், பல்துலக்குதல், சிறுநீர் மற்றும்  மலம் கழித்தல், உடம்பினை தூய்மையாக வைத்திருத்தல், சாப்பிடுதல், கை கழுவுதல்   என்ற தன்னை தானே தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும் அடிப்படை செயல்பாடுகளை கற்றுத்தரும் சிறப்பு ஆசிரியர்களின் பணியினை நினைத்து பார்க்க வேண்டும். இத் தருணத்தில் அவர்களை பாராட்டியே தீர வேண்டும்.

     இவர்களுக்காக செயல்படும் மதுரையை சார்ந்த அன்பகம் உண்மையிலேயே சிறந்த நிறுவனம் . அங்கு சிறப்பு ஆசிரியருக்கான பயிற்சி பெற நான் கடந்த முப்பது நாட்களாக செல்கிறேன். அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் அக் குழந்தைகளை அவர்கள் பராமரிக்கும் விதத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். அக்குழந்தைகளை பார்க்கும் போது , கடவுள் இவ்வுலகில் நம்மை எவ்வளவு சிறப்பாக படைத்துள்ளார் என்பதன் அருமை புரியும். நாம் பிறந்த நோக்கத்தின் புனிதம் புரியும் . தவறு செய்த யாரையும் சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டாம் இக்குழந்தைகளுடன் ஒரு வாரம் தங்கியிருந்து பணிவிடை செய்ய சொல்லுங்கள் . அதுவே அவர்களை நல்வழிப் படுத்திவிடும்.

மாற்று திறனாளிகள் பிறக்காமல் இருக்க….
1.   சொந்தத்தில் திருமணம் வேண்டாம்( காதல் செய்தா சும்மா கட்டி வைங்கப்பா)

2.   இரத்த வகை சரிபார்த்து திருமணம் செய்தல் நலம். ஆர்ஹெச்+ க்கும் + க்கும் திருமணம் நலம். _ க்கும் – க்கும் திருமணம் நலம். –க்கும்  +  க்கும் என்றாலும், + க்கும் – க்கும் என்றாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின் குழந்தைப் பெற்றுக்கொள்ளல் நலம்.
3.   
கற்பகாலத்தில் சந்தோசமாக இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து உட்கொள்ள வேண்டும்.

4.   கருவுற்ற காலத்தில் அடிப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
5.   பயிற்சி பெற்ற அனுபவமிக்க மருத்துவர் உதவியுடன் பிரசவம் பார்க்க வேண்டும்.

6.   பிறந்தவுடன் குழந்தை அழுவதில் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்க வேண்டும்.

7.   பதினெட்டு வயதுக்கு முன் திருமணம், மூப்பத்தைந்துக்கு மேல் திருமணம் செய்து , குழந்தை பிரசுவித்தல், குறைபாடுடைய குழந்தைக்கு வாய்ப்பளிக்கிறது.