Thursday, August 28, 2014

கல்விக்கூடங்களில் வசூல் செய்யும் விநாயகர். ஆச்சரியம் . படிக்க தவறாதீர்கள் !

விநாயகரிடம் ஒரு வேண்டுகோள்
--------------------------------------------------------------
மகளிடம் நாளை விநாயகர் சதுர்த்தி என்றேன். அப்பா விநாயகர் சதுர்த்தி என்றதும் நீ தான் நினைவுக்கு வருகிறாய் என்றாள் மது. சிரித்தேன். வாக்கிங் கீக்கிங் போகாமல் உடலை பராமரிக்காமல் இருக்கும், எல்லா அப்பன்களும் அவர்களின் குழந்தைகளுக்கு விநாயகரைப் போலவே தெரிவார்கள் என்பது தான் உண்மை.

கொஞ்சம் கண்ணாடி முன் சென்று என்னை பார்த்துக் கொண்டேன். துதிக்கை மட்டும் இருந்தால் போதும் அப்படியே விநாயகரை போன்று தெரிவேன். அய்யோ நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. துதிக்கை இருந்தால் என்னை தூக்கிகொண்டு போய் விநாயகராகவே வழிப்பட்டு விடுவார்கள் ! அதனால் எனக்கு அதில் பிரச்சனை எதுவும் இல்லை.

ஆனால் அதன் பின் கரைக்க வேண்டும் என முடிவெடுத்தால் என்ன செய்வது ? நினைத்தாலே செத்து விடுவேன் என்று நினைக்கின்றேன். வைகை வறண்டு இருந்தாலும் பரவாயில்லை ! இவர்கள் விநாயகரை கரைக்கும் இடம் சாக்கடை கழிவுகளும், தோல் கழிவுகளும், தொழிற்சாலை சாயங்களும், நிரம்பி தேங்கி அல்லவா இருக்கிறது. சாக்கடையாக காட்சியளிக்கும் வைகையை நினைக்கும் போது மட்டும் தான் வயிற்றில் புளியை கரைக்கிறது. ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.

இந்த விநாயக சதுர்த்தியில் இருந்தாவது வாக்கிங் கீக்கிங் போய் ஒரு தனுஷ் மாதிரி ஆகலைன்னாலும் , இசை அமைப்பாளர் அனிருத் மாதிரியாவது ஆகிவிடுவது என சபதம் எடுத்து விட்டேன்.

இந்த காமடி ஒருபுறம் இருக்கட்டும். கொஞ்சம் சீரியஸ் பதிவுக்கு வருவோம்.

என் மகளுக்கு நான் நினைவுக்கு வருவது போல், எனக்கு விநாயக சதுர்த்தி என்றதும் , எப்போதும் நினைவுக்கு வருபவர் ,நம் காமராஜர் அய்யா அவர்கள் தான். அதற்கு காரணமும் உண்டு.

அன்றே பள்ளிகளில் சமத்துவம் போதிக்க எல்லோரிடமும் கால் அணா வசூல் செய்து விநாயகர் சதுர்த்தியை பள்ளியில் கொண்டாடினார்கள் என்பதற்காக அல்ல.

அப்போது காமராசர் துவக்கப்பள்ளியில் படித்து கொண்டிருக்கின்றார். ஆசிரியர் அனைத்து மாணவர்களிடமும் காசு வசூல் செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறார். விநாயகரை வழிப்பட்ட பின், பிரசாதம் வழங்குகிறார். அப்போது மாணவர்கள் முண்டி அடித்து சுண்டல் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் காமராஜர் வரிசையில் கடைசி வரை நின்று ,சிறிதளவே பெற்றுக் கொள்கிறார். வாங்கிய சுண்டலை பாட்டியிடம் கொடுத்தப் போது , பாட்டி காமராசரிடம், எல்லோரும் வரிசையில் நிற்காமல் முண்டி அடித்து வாங்கி அதிகமான சுண்டல் பெற்றுள்ளதைப் போல், நீயும் வாங்கி இருக்கலாமே, இப்படி விவரம் இல்லாமல் இருக்கிறாய் என திட்டுகிறார். அதற்கு காமராசர், “எல்லோரிடமும் சமமாக பணம் பெற தெரிந்த ஆசிரியர் அல்லவா, எல்லோரையும் வரிசையில் முறைப்படுத்தி,அனைவருக்கும் சுண்டல் சம அளவு கிடைக்கும் படி செய்திருக்க வேண்டும். நீ ஆசிரியரை திட்டுவதற்கு பதில் என்னை திட்டுகின்றாய் ” என்று கூறினார்.
உண்மையும் அதுவே. ஆசிரியர் செய்த தவறுக்கு சிறுவன் காமராசரை கடிந்து கொண்டது தவறு தான். இதில் கவனிக்க வேண்டியது, அந்த சிறுவயது காமராசர் வரிசையைல் நின்று தன் முறை வரும் வரை காத்திருந்து கிடைத்ததை பெற்றுக்கொண்டான் என்பதை தான்.

ஆம் அந்த காத்திருக்கும் பண்பு தான் காமராசரை தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்கியது. அவரின் பெருந்தன்மை தான் அவரை இந்தியாவிற்கே பிரதமரை உருவாக்கும் தகுதியை உருவாக்கியுள்ளது. வரிசையில் நின்று பொறுமையாக இருந்த பண்பு தான் அவரை பாட்டியிடம் தைரியமாக பேச செய்தது. சிறுவயதில் நாம் கொண்டிருக்கும் பண்புகள் தான் நம்மை உயர்த்தும்.

எல்லா தலைவர்களின் இளம் வயது சம்பவங்களை உற்று நோக்கினால் அவர்களிடம் இருக்கும் தலைமைப்பண்பு காண முடியும். நாம் கவனிக்க வேண்டியது சிறுவயதில் வளர்த்தெடுக்க வேண்டிய தலைமைப்பண்பை குறித்தே. ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் சிறிய சிறிய சம்பவங்களிலும் வெளிப்படும் தலைமைப்பண்புகளை அப்படியே அடிமனதில் பதிய வைத்தால் மட்டும் போதுமானது , அவை அவனை நல்ல குடிமகனாக மாற்றிவிடும். ஆசிரியரின் தலையாக கடமையும் அதுவே என கருதுகின்றேன்.(அப்ப மதிப்பெண் எடுக்க திணித்து வாந்தியெடுக்க செய்வது தலையாயக் கடமை இல்லையா என கேள்வி எழுப்பக்கூடாது )

இன்று சொசைட்டி சென்றேன். என்ன சங்கர் சார்( ஓ.ஏ.) நம்ம சொசைட்டியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில்லையா..? என்றேன். “தலைவரே, நாம் சரஸ்வதி பூஜை தான் கொண்டாடுவோம்” என்றார். ஆயுத பூஜைன்னு சொல்லுங்க என்றார் கிளார்க் ஜோதி. அட தலைவர் ஹெச்.எம். என்பதால் அப்படி சொன்னேன் என்றார் சங்கர். அருகில் இருந்த ஜோதி தலைவரே பள்ளியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வில்லையா? என கேள்வி எழுப்பினார். இல்லை , பள்ளியில் இருக்கும் விநாயகருக்கு எங்கள் பள்ளியின் உறவின் முறையில் இருந்து சிறப்பாக நாளை பூஜை செய்து கொண்டாடுவார்கள். ஊர் மக்களும் அப்பூஜையில் கலந்து கொள்வார்கள். பள்ளியில் வேறு சில சமயவிழாக்கள் கொண்டாடுவது உண்டு என்றேன்.

“என்ன தலைவரே , பள்ளி பள்ளிக்கு விநாயகர் கோவில் ஒண்ணு வச்சுகிறாங்க.. பிள்ளைகளிடம் ஐந்து ரூபாய் கொண்டு வா.. என கட்டாய வசூல் நடக்குது. காலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட காசு கொடுத்தா தான் நான் பள்ளிக்கூடம் போவேண்ணு அடம் பிடிக்குதுக. இரண்டாயிரம் மூவாயிரம் பிள்ளைகள் படிக்கிற பள்ளியில் காசா இருக்காது. விநாயகர் நேரில் வந்து பிள்ளைகள் தான் காசு தரணும்ன்னு சொல்லி வாங்க சொல்றார். நிர்வாகவே இருநூறு ரூபாய் செலவு செய்து கும்பிடக்கூடாதா..? அதை பிள்ளைகள் இடம் வசூல் செய்து தான் கொண்டாட வேண்டுமா! . எது எதுலா தான் காசு சம்பாதிக்கணும் என்று விதி விலக்கு இல்லை. கல்வி என்ற பெயரில் நடக்கும் இந்த கொள்ளையை என்ன செய்வது ? யாருகிட்ட சொல்றது ? ( என் கிட்ட சொல்லிட்ட நான் எழுதிடுவேன். அது தான் எனக்கு தெரியும் என மனதினுள்ளே நினைத்துக்கொண்டேன்.) பெரி சுண்டால் கூட தர மாட்டானுங்க..” என பொரிந்து தள்ளினார். நான் சும்மா இருக்காமல் அதான் காசு கொடுத்த வயிற்று எரிச்சலில் பொரிந்து தள்ளுறீங்களே அதை விடவா பொரி வேண்டும் என்றேன்.

காமராசர் கொண்டுவந்த இலவச கல்வி , மதிய உணவு திட்டம் என எல்லாம் புதிய பரிமாணம் எடுத்து வரும் நிலையில் இந்த காசு வாங்கும் பழக்கம் மட்டும் இன்னும் விட வில்லையே. முதலாளிக்கு தான் தெரியும் காசை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று. இன்று அநேகப் பள்ளிக்கூடங்கள் முதலாளிகளிடம் தான் இருக்கின்றன. பொதுப்பள்ளிகள் சாத்தியம் என்று உருவாகுமோ விநாயகா பாவம் இந்த ஏழைகளை காப்பாற்று.
மதுரை சரவணன்.

இதைப்படிக்கும் மதுரைக்கார அண்ணண் கோபித்து கொள்ளக்கூடாது !

தி கோல்டன் அவர்
-------------------------------
குழந்தைகள் பிரியமானவர்கள். குழந்தைகளின் உலகம் நாம் அறிய முடியாத புதுமை. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். அத்தனைக்குழந்தையும் அற்புதம்.

குழந்தைகளுக்கு யாரை பிடிக்கும் யாரை பிடிக்காது என்பதற்கான காரணங்களை சொல்ல முடியாது. திடீரென்று நேற்று நட்புடன் இருந்த ஒரு குழந்தை , இன்று எதிரியாகிவிட முடியும். எதிரியாகி இருந்த ஒரு குழந்தை நட்பாகி விட முடியும். எதற்கு சண்டை போடுகிறார்கள் , எதற்கு சேர்ந்து கொள்கின்றார்கள் என்பதெல்லாம் ஒரு மேஜிக்.

இந்த மேஜிக்கை வயது வந்த நாம் செய்ய முடியாது. இயலாது.நம்மை சுற்றி நாம் கட்டமைத்துள்ள வட்டம் அதற்கு இடம் கொடுக்காது.

இருபதுக்கும் மேற்பட்ட வருடங்கள் குழந்தைகளுடன் நட்பு கொண்டு வாழ்ந்து வருகின்றேன். ஒவ்வொரு வருடமும் புதுபுது முகங்கள். முதல் முறையாக என்னை பார்க்கும் குழந்தைகள் கொஞ்சம் அச்சம் கொள்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு அவர்கள் முதன்முறையாக அந்நியர்களை சந்திக்கும் போது ஏற்படும் பய உணர்வு காரணமாகும்.

கொஞ்சம் பழக பழக அவர்கள் அதிகம் நேசிக்கும் அற்புதமான உறவாக மாறிவிடுகின்றேன்.

இது மிகை இல்லை. அவர்களின் தந்தை, தாய்க்கு இணையாக நேசிக்கின்றனர். சகோதரனாக, சகோதரியாக, என அவர்கள் நேசிக்கும் ஒருவராக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அதை உணரும் தருணம் . ஆசிரியர் என்பதிலுள்ள அற்புதத்தை, இந்த மேஜிக்கை உணருகின்றேன். இந்த மேஜிக் ஆசிரியர்களுக்கு மட்டுமே சாத்தியம்.அந்த வகையில் நான் புண்ணியம் செய்தவன். கடவுள் இப்பிறவியை கொடுத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்கின்றேன்.

இன்று ஓடி வந்து அண்ணே ரைட் போடுங்க என்றாள் திருக்கனி. ( மதுரையின் பாசக்கார தம்பிகள் கோபித்துக்கொள்ள வேண்டாம்)

அருகில் இருந்த கார்த்திகா , “ யேய், சாரை போய் அண்ணே என்கிறாய்” என கடிந்தாள். நான் அப்படித்தான் சொல்வேன் என்றாள் திருக்கனி. “அவரு உனக்கு என்ன அண்ணணா..?” ( மதுரையிலுள்ள அண்ணன் கோபித்துக்கொள்ள வேண்டாம்)
“ஆமாம் போ.. எனக்கு சார் அண்ணன் தான். எனக்கு அண்ணன் என்றால் பிடிக்கும் . ரெம்ப பிடிக்கும். அண்ணணை பிடிக்காதவர்கள் யாரும் இருப்பார்களா..? ( மதுரையில் அண்ணணை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா! )
இந்த உரையாடலை கவனிக்காதது போல இருந்த என்னிடம் திருக்கனி, “சார், நீங்க எனக்கு அண்ணன் தானே..?” என கேட்டாள்.
“இதில் என்ன சந்தேகம்..நான் உன் அண்ணன் தான் “ என்றேன்.
“சார், நீங்க எங்களுக்கு அப்பா மாதிரி” என்றாள் கார்த்திகா.
அருகில் இருந்த வாயாடன் மோகன்ராஜ், “ ஏ அவரு தாத்தா.. “ என்றான்.
“ ஆமாண்ட மோகன் ...சார்க்கு முடி நரச்சு போச்சு...தாத்தா தான் ” என மூச்சு வாங்காமல் வேகமாக வந்த சொன்னான் சதீஸ்.
“ஏய் சார்..நமக்கு அம்மா மாதிரி இப்படி எல்லாம் பேசக்கூடாது..எல்லாரும் மன்னிப்பு கேளுங்க..” என்றாள் அபிநயா.
சிரித்துக்கொண்டே..”எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள்.. இப்போது நாம் ஆங்கிலம்’ தி கோல்டன் ஹவர்’ வாசிப்பு பயிற்சி மேற்கொள்வோம் “ என்றேன்.

சிரிப்பு வந்தது. சென்றவருடம் படித்த மாணவி ப்ரியா பள்ளி விட்டு செல்லும் போது சொல்லியது நினைவுக்கு வந்தது. “ சார் , நாங்க உங்க கிளாசுக்கு வரும் போது பயந்தோம் தெரியுமா.. அப்புறம் போகப்போக பயமே இல்லாம போச்சு...கிளாசு ரெம்ப ஜாலியா இருந்துச்சு.. எல்லார் கிட்டையும் சொல்லி வச்சிருக்கோம்...உங்க கிட்ட தான் படிக்கணும்ன்னு .. ஏன்னா நீங்க ஒரு டம்மி பீஸ் சார்..” என்றாள்.

மதுரை சரவணன்.

Thursday, August 7, 2014

குழந்தை மையக்கல்வி முறைக்கு ஆதரவு தருவோம் !


இன்று மாலை ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவனைச் செல்ல ஒருமணி நேரம் முன் அனுமதி வழங்கப்பட்டது. அந்த ஆசிரியர் அவரின் மாணவர்களை நானே (தலைமை ஆசிரியரான நானே) பார்த்துக்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொண்டார். நானும் ஆவலோடு சரி என்று சம்மதித்தேன். சுயநலமும் உண்டு.
என்னால் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைக்கூட நல்ல மாதிரி வைத்துக்கொண்டு கற்பித்தல் பணியினைச் செய்ய முடியும் என அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற சுயநலமே!
ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடம் மூளையும் உடல் உறுப்புகளும் நடத்திக் கொண்டிருந்தேன். எஸ் ஏ எல் எம் முறையில் கற்பித்தல் நடந்தது. மாணவர்கள் தாங்களாகவே பாடத்தினை வாசித்து முடித்து அதில் இருந்து சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டனர். அவர்களுக்கு அதற்குரிய அர்த்தம் கூறப்பட்டது.
மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து இருந்தனர். அவர்களுக்கு அப்பாடத்திற்கான கருத்து வரைப்படம் கொடுக்கப்பட்டு பாடத்தினை குறித்த கருத்துக்கள் புரியும் வண்ணம் குழுவில் உரையாடி குறிப்பேட்டில் வரைந்து கொண்டனர். பின்னர் என் உதவியுடன் கருத்துக்களை தொகுக்க ஆரம்பித்து இருந்தனர். எல்லாக்குழுக்களுக்கும் சென்று பணி நடைப்பெறுகிறதா என மானிட்டர் செய்து, அவர்களுக்கு தேவையான உதவி புரிந்தேன்.
மாணவர்களுடன் இணைந்து செயல்படும் போது இளமை தானாகவே திரும்பி விடுகின்றது. பயமின்றி நம்மிடம் பேசும் அவர்களை பார்க்கும் போது பொறாமை கொள்ளச்செய்கிறது. இருக்க தானே செய்யும்.
மாணவர்கள் என்னை விட அதிக வேகத்துடன் மிக உயர்நிலையில் சிந்திக்கும் போது, டப்பாக்களில் திணிப்பது போல நம் மூளையில் தெரிந்த விசயங்களை திணித்து, அந்த விசயங்களைக்கூட தொடர்பு படுத்தி பார்க்க விடாமல், அப்படியே வாந்தி எடுக்க செய்யும், நம்மை சிந்திக்க, பேச வாய்ப்பு தராத ஆசிரியர் மையக் கல்வி முறை குறித்து வெறுப்பு வருவதால், குழந்தை மையக்கல்வி முறையில் பயிலும் இவர்கள் மீது பொறாமையும் தானாகவே வந்து சேர்கிறது.
அந்த மாதிரியான பொறாமையான நேரத்தில் தான் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் வந்து சேர்ந்தனர். மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்திருக்கும் என்னைப்பார்த்ததும் அதில் ஒரு மாணவி அண்ணே என்றாள். அதற்குள் அதில் ஒருவன் யேய் சார்ன்னு சொல்லு என்றான். என் மாணவர்கள் இவர் தான் பெரிய சார்.. ஆனா டம்மி சார் என்றார்கள்.அவர்கள் சிரித்தார்கள். என் மாணவிகளில் ஒருத்தி டம்மி இல்லைடா.. நம்ம மம்மி சார் டா... நம்ம மம்மி மாதிரி நல்லா பார்த்துக்குவார் என்றாள்.
ஜாலியா பேசுவதை பார்த்து ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அச்சம் போக்கி என்னை அவர்களுக்குள் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். அதோப்பார் ரோடு.. என சைகையோடு பாடினேன். நிலா நிலா வா என சைகையோடு பாடினேன் செய்தேன். அவர்கள் ஜாலியாகி போனார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவர்களை குழுவில் தொகுத்தல் செய்து முடிக்க சொல்லி ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன் இணைந்தேன்.
என்ன விளையாடலாமா என கேட்டேன். அனைவரும் மகிழ்ச்சியாக ஜாலி என்றனர். என்ன விளையாடலாம் என்றேன். ஒரு மாணவன் தன் பையிலிருந்து பிளாஸ்டிக் பந்தை எடுத்து காட்டினான். சூப்பர் நாம் பந்து போட்டு விளையாடலாம் அப்படியே படிக்கலாம் என்றேன்.
உங்களுக்கு அஆஇஈ தெரியுமா என்றேன். எல்லோரும் விளையாட்டு என்றவுடனே ஒத்துக் கொண்டனர். கீழ்மட்டக் கரும்பலகையில் ஐந்தாம் வகுப்பு மாணவனை பெரிதாக இடம் தள்ளி அ ஆ இ ஈ உ ஊ என எழுதச் செய்து அதற்கு கீழே மற்ற உயிரெழுத்துக்களை எழுதச் செய்தேன். இப்போது மாணவர்களை சற்று தூரமாக வட்ட வடிவில் அமரச் செய்தேன். கரும்பலகை அருகில் இருந்து நான் மாணவர்களுக்கு பந்தை பிடிக்க சொல்லி வீசினேன். பின் அவர்களை பந்தை என்னை நோக்கி வீச சொல்லினேன். ஒவ்வொருவராக வீசினார்கள் பந்தைபிடித்தும் தவறச் செய்தும் மகிழ்ந்தோம்.
( கரும்பலகை வரை அவர்களால் பந்தை வீசத் தெரிகிறாதா என்பதற்கும் வீசுவதற்குமான பயிற்சி தான் இது )
இப்போது மாணவர்களுடன் ஒருவராக அமர்ந்து கொண்டேன். பின் பந்தை கரும்பலகையில் எழுதி இருக்கும் எழுத்தை நோக்கி வீசினேன். அது உ என்ற எழுத்தின் மீது படவே உ என்று கத்தினேன். அவர்களும் என்னுடன் சேர்ந்து உ என கத்தினர். பின் பந்தை அ மீது வீசினேன். அ என்று அவர்களாகவே கத்தினர். என் அருகிலிருந்த மாணவனிடம் பந்தை கொடுத்து வீச சொன்னேன். அவன் வீசிய பந்து ஓ வில் விழ ஓ என்றேன். அனைவரும் ஓ என கத்தினார்கள். அடுத்தவன் என எல்லோரும் நான்கந்து முறை எழுத்தை நோக்கி வீசி எறிந்து உயிரெழுத்துக்களை அறிந்து கொண்டோம்.
அதன்பின் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் ஒரு குழு எல்லாம் முடித்து விட்டாயிற்று என்று வந்தனர். அவர்களையும் சேர்த்து கொண்டேன்.
இப்போது ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் உயிரெழுத்தில் ஒன்றை கூற ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அந்த குறிப்பிட்ட எழுத்தின் மீது பந்தை வீச வேண்டும். சரியாக வீசியவர்களுக்கு ஒரு பாயிண்ட் கொடுக்கப்படும் . அதிக பாயிண்ட் எடுத்தவர் வின்னர்.
ஐந்தாம் வகுப்பு மாணவன் ஓ என்றான் நான் வேண்டுமென்றே தவறாக வீசினேன். அனைவரும் சார் அவுட்டு என்று கத்தினர். அடுத்து...குமரேசன் என்ற மாணவன். அவனுக்கு ஆ என்றனர். அவன் சரியாக வீசி ஒரு பாயிண்ட் எடுத்தான். அடுத்து ப்ரியா அவளும் சரியாக வீசினாள். அதற்கு அடுத்து மணிகண்டன் அவன் பந்தை எழுத்தையும் தாண்டி வீசினான் அனைவரும் அவுட் அவுட் என்றனர். மிக மகிழ்ச்சியாக விளையாட்டாக உயிரெழுத்துக்களை கற்று கொண்டிருந்தனர். அதற்கடுத்து கவிதா .. அவள் ஏ என்றதற்கு ஊ வில் வீசினாள். ரஞ்சித் ஏ ன்னு சொன்னா ஊ வில வீசுது என்றான்.கடைசியில் கவிதா ஆறு பாயிண்ட் எடுத்து வின்னர் ஆனாள்.
அனைவரும் வேர்க்க விறுவிறுக்க விளையாடிய பின் வரிசையாக போய் எழுத்துக்களை வாசிக்க சொன்னேன். வேக வேகமாக வாசித்து காட்டினர். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அதிசயமாக பார்த்தனர். அனைவரும் எல்லா உயிரெழுத்துக்களை சொல்வதை பார்த்தவுடன் அதிசயமாக பார்த்து என்ன சார் மேஜிக் இது என்றனர். எங்க அக்கா டெய்லி சொல்லி தர்றா சொல்ல மாட்டான் இன்னைக்கு எல்லாம் சொல்றான் என்றனர்.
ஓகே நாம் செய்தி தாள்ல இந்த எழுத்துக்கள் இருக்கான்னு பார்ப்போம் என அனைவருக்கும் ஒரு செய்தி தாள் கொடுத்தேன். அவர்களுடன் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை இணைத்தேன். 5ம் வகுப்பு மாணவர்கள் யாரும் எழுத்துக்களை கூறக்கூடாது. கொடுக்கப்பட்ட செய்தி தாளில் பெரிய எழுத்துக்கள் அதாவது தலைப்பு செய்திகளில் இடம் பெற்றுள்ள உயிர் எழுத்துக்களை சொல்லி வட்டமிடச் செய்ய வேண்டும். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சரியாக செய்கின்றனரா என பார்க்க மட்டும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எல்லா மாணவர்களும் மிகச்சரியாக உயிர் எழுத்துக்களை கூறி வட்டமிட்டனர். அதனை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பீடு செய்தனர்.
மணி ஒலித்தது. பேருந்து வந்தது. அனைவரும் மிக மகிழ்ச்சியாக சென்றனர். நாளைக்கு வர்றோம் என்றனர். செல்லும் போது தேங்யூ என்றனர்.
சகமாணவர்களுடன் கற்றுக்கொள்ளும் போது ஒரு புரிதலும் அச்சம் நீங்கி மகிழ்ச்சியாக கற்றல் அமைவதை காண்கின்றேன். ஆசிரியர் சக தோழனாக, மாணவர்களுக்கு உதவி புரிவராக, மாணவர்களை மதிப்பவராக , எளிமையான கற்றல் உபகரணங்களை கொண்டு விளையாட்டாய் கற்றலை வெளிப்படுத்தும் போது கல்வி இனிமையாகிறது. முழுமை பெறுகிறது.
ஆனால் இன்னும் ஆசிரியர்கள் அதிகாரத்தை வெளிப்படுத்தும் முதலாளிகளாகவே இருக்க முயற்சிப்பதும், செயல்வழிக்கற்றலை புறக்கணிப்பதும் மாணவர்களுக்கும் , வாங்கும் சம்பளத்திற்கும் செய்யும் கொடுமையாகவும் துரோகமாகவும் பார்க்க தோன்றுகிறது!
மதுரை சரவணன்.