Monday, November 11, 2013

அன்பான ஆசிரியர்களே இன்று தேவை....

        அன்பு என்பது மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு. அன்பு என்பது தன்னை குறை சொல்லாத ஆசிரியரின் செயலில் உள்ளதாக உணர்கின்றனர். தன்னை தண்டிக்கும் ஆசிரியர் அன்பானவர் இல்லை. கண்டிக்கும் ஆசிரியர் பிடித்த ஆசிரியர் பட்டியலில் இல்லை. அதேவேளையில் அவர்கள் கண்டிக்காத, தண்டிக்காத ஆசிரியர் இடத்தில் இன்னும் கூடுதலாக செல்லத்தையும் எதிர்பார்க்கிறார்கள். செல்லம் என்பது அவனை குறைக்கூறக் கூடாது , அதே சமயம் அவனின் எல்லா செயலுக்கும் ஆதரவு நாடுவது. அதாவது , சினிமா பற்றி பேசினால் அவனுடன் சேர்ந்து பேச வேண்டும். அவனுக்கு பாடம் பிடிக்கவில்லை என்று சொன்னால், அவனை அவன் போக்கிற்கு எதாவது செயலை செய்ய அனுமதிக்க வேண்டும். இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்.


   சுருக்கமாக சொன்னால், மாணவர்கள் அன்புக்குரிய ஆசிரியர்கள் என்பவர், மாணவர்களிடம் மென்மையாக நடக்க கூடியவர்கள், அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு  ஒத்து போவவர்கள் அல்லது ஒப்புக்கொள்ள கூடியவர்கள். அதேவேளையில் அவர்களை ஒருபோதும் குறைகூறாதவர்கள். அவர்களை பற்றி யாரிடமும் குறைத்து பேசாதவர்கள்.இதுவரை பிரச்சனை இல்லை. ஆனால் அன்பை காட்டிலும் கூடுதலாக செல்லமான ஆசிரியரையே மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். விரும்புகின்றனர்.  இன்னும் அபட்டமாக சொல்லப்போனால், அவர்கள் இஷ்டப்படி அவர்களை ஆட விடுபவர்கள். சட்டமும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி இருப்பது இன்னும் வசதியாக இருக்கிறது. பல ஆசிரியர்கள் இதையே விரும்புவர்களாக உள்ளனர். இதில் தவறில்லை என்றே நினைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள் மாணவர்கள்.

       மாணவர்கள், தங்கள் இடத்தில் எந்த வித மாற்றத்தையும் எதிர்பார்க்க கூடாது. அதேப்போல் தங்கள் மாற்றத்திற்காக, எதையும் தங்கள் மீது தங்கள் இஷ்டத்தை மீறி அனுமதிக் கூடாது என்று நினைக்கின்றனர். அந்த இடத்தில் தான் இந்த் அன்புக்குரிய ஆசிரியர்கள் மாணவர்கள் இடத்தில் புரிதலை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் அன்புக்குரிய ஆசிரியர்கள் அவர்களின் செல்ல ஆசிரியராக மாறி விட வாய்ப்பு உண்டு. அவர்கள் உங்களிடத்தில் அன்பையும் மீறி செல்லத்தையும் எதிர்ப்பாக்க கூடும்.

       கொஞ்சம் விரிவாகவே சொல்கின்றேன். அன்பு என்பது மாணவர்களிடம் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அன்பு  மாணவர்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். செல்லம் மாணவர்களை பலவீனப்படுத்தி தவறுதலான பாதைக்கு அழைத்து செல்ல வாய்ப்பு உள்ளது.
அன்பு முக்கியமான மாற்றட்தைனை மாணவனிடத்தில் உருவாக்கும். ஆசிரியர் மாணவனிடம் அன்பு கொண்டால் மட்டுமே, அவனின் மீது அக்கறைக்கொள்ள முடியும்.  அன்பு மட்டுமே ஆக்கபூர்வன தாக்கத்திற்கு உண்டான , ஆலோசனையை மாணவனுக்கு வழங்கும். செல்லம் என்பது மாணவனுக்கு செருக்கை உண்டாக்கும். ஆணவம் உண்டாக்கும்.
   


   இன்று மாணவனுக்கு தேவை ஊக்குவிப்பு. அதனை அன்பால் மட்டுமே தர முடியும். ஆகவே, ஆசிரியர்கள் அன்புக்குரியவர்களாக கட்டாயம் இருக்க வேண்டும் . அதேவேளையில் செல்லம் கொடுத்தலை தவிர்க்க வேண்டும். செல்லம் கொடுத்தீர்களானால், மாணவர்கள் ஆசிரியரை மட்டம் தட்டி விடுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் அன்பாக இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் ஆசிரியர் எதிர்பார்த்திராத, சாதனைகளை செய்ய தூண்டுகோலாக அமையும்.  அன்பு மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்.அன்புள்ள ஆசிரியர், மாணவர்களுக்கு வேண்டிய எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுப்பார்.


அன்பான ஆசிரியர் மாணவர்களை அப்படியே விட்டுவிடமாட்டார். மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் ஆசிரியரின் தூய்மையான அன்பு முக்கியமான பணியினை செய்யவல்லது.  செல்லம் கொடுப்பது  என்பது மாணவ்னை கெடுப்பது ஆகும். மாணவனுக்கு மதுவை கொடுப்பதற்கு சமம். அவனிடம் எந்த வித மாற்றத்தினையும் நாம் எதிர்பார்த்துவிட முடியாது. செல்லம் அவனை தேக்கத்திற்கு ஆளாக்கிவிடும்.  

அன்பு நிலைக்கண்ணாடி மாதிரி. நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தினை அப்படியே பிரதிபலிக்கும். செல்லம் என்பது ஆசிரியரை நல்லவராக காட்டி, மாணவனை முட்டாளாக்கும். மாணவனுக்கு ஒரு ஆக்கபூர்வமான விமர்சகராக இருக்க, அன்பு செலுத்துங்கள்.


என் அன்புக்குரிய ஆசிரியர் பெருமக்களே! நீங்கள் செலுத்தும் அன்பு உங்கள் மாணவனிடத்தில் நீங்கள் எதிர்பார்த்தப்படியே பிரதிபலிக்காமல்  இருக்கலாம். ஆனாலும், அது உங்கள் குறிக்கோளை நோக்கி செயல்படுகிறது என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மாணவர்களை நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் உருவாக்கும். 

Thursday, November 7, 2013

போட்டி தேவையில்லை....!


     இன்று குழந்தைகளை குறை கூற இயலவில்லை . ஏன் அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டினால் கூட, அவர்கள் அதை உடனே அடுத்தவர்கள் மீது சுமத்த பார்க்கிறார்கள். டேய் வீட்டுப்பாடம் ஏண்டா எழுதவில்லை என்று கேட்டால் அடுத்த நிமிடத்தில் ,  நான் மட்டுமா எழுதவில்லை, அவனும் தானே என்று தங்கள் குறைகளை மறைக்க பார்க்கின்றனர்.

     இன்னும் தெளிவாக கூறினால், ஒழுங்கு தவறி, ஓடிவரும் ஒருவனை , வரிசையில் செல் என்றால், அவன் மட்டும் ஓடி வருகின்றான் என்று பிறர் குறைகள் மீது சவாரி செய்து, தம்மை ஏமாற்றிக்கொள்கிறார்கள் . புத்தக்கத்தை ஏண்டா இப்படி கிழித்து வைத்துள்ளாய் என்று கேட்டால், நான் புக்கு வாங்கிய உடனே சொன்னேன் சார், எங்க அப்பா தான் மூணு மாசத்துக்கு தாண்டான்னு சொல்லிட்டார் என்று சொல்லி அட்டை போட விடவில்லை என்கின்றான். இப்படியாக மாணவர்கள்  பிறர் தவறுகள் மீது சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர்.

      அடுத்தவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம், தன் தவறுகளை மறைக்க பார்க்கின்றனர் அல்லது நியாயப்படுத்த பார்க்கின்றனர். ஒரு வினாவிற்கு இன்னொரு வினா பதிலாக முடியுமா? இன்று சீருடை ஏன் அணியவில்லை என்று கேட்டால் ,    அம்மா துவைக்கவில்லை அழுக்கா இருந்துச்சு என்று ரெடிமேட் பதிலை தந்து அம்மாவின் மீது பலியை தூக்கி போட்டுவிடுகின்றார்கள்.

       தவறுக்கு தவறு விடையாக அமைந்துவிடுகின்றது.இந்த தவற்றில் இருந்து தான் எல்லா தவறுகளும் ஆரம்பமாகின்றன. இதை போக்க வேண்டியது எல்லா ஆசிரியர்களின் கடமை. மாணவர்களுக்கு தேவை சரியான மன பயிற்சியும் , அதன் மூலம் மன ஒருங்கும். சுவாமி விவேகானந்தர் சொல்கின்றார், சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.

        பள்ளிகளுக்கு அரசு கால அட்டவணை தயாரித்து கொடுத்துள்ளது.  தியான வகுப்புகளுக்கு நேரத்தை ஒதுக்கியுள்ளது.  அந்த குறிப்பிட்ட நேரத்தில் முறைப்படி தியானம் செய்தோமானால், நிச்சயம் மனம் ஒருங்கு படும். மன அமைதி பெறும் போது, தெளிவானை சிந்தனை  அமைய வாய்ப்புகள் அதிகம்.  அதனால் அடுத்தவர்களின் குறைப்பாடுகள் தம்மை குறிக்கிடுவதை அனுமதிக்க மாட்டார்கள்.
     
        ஆசிரியர்களும் மாணவர்களை குறைகூறாமல், நம்மை நாம் திருத்திக்கொள்வோம். மாணவர்களின் குறைபாடுகள் நம்மை குறுக்கிடுவதை தவிர்த்து, அவர்களுக்கான சரியான பாதையை காட்டுவோம். சிலர் அந்த பையன் எப்போதும் இப்படிதான் ... வேண்டும் என்றால் கேளுங்கள்  என்ற பதிலை தருவதை பார்த்திருக்கின்றேன். தங்களின் தவறு அல்லது இயலாமையை தவிர்த்து , நம்மை மாற்றிக்கொள்ள பயிற்சி பெறுவோம்.  

மாணவர்களும் , ஆசிரியர்களும் எல்லா சந்தர்பங்களிலும் அடுத்தவர்களின் தவறுகளுடன் போட்டி போடாமல், அதனை கடந்து செல்வோம்.

மதுரை சரவணன்.