Thursday, February 3, 2011

கவனம். நிகழ் காலமும் நம் கையில் தான்...!

     திங்கள் காலை பத்து மணியளவில் ஒன்றாம் வகுப்பு அ பிரிவில் இருந்து ஒரு மாணவி என் அறைக்கு வந்தாள். சார் பால்பண்ணைப்பகுதியில் இருந்து வரும் ரவிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) முடியவில்லையாம் , நீங்க அவுங்க அப்பாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லுவீங்களாம் என டீச்சர் சொன்னார்கள் எனறாள். போன் நம்பரும் தந்தாள். என்ன செய்யுதாம் அவனுக்கு என்று அவள் பேசும் கொஞ்சு தமிழில் நானும் கேட்டேன். அவன் வாந்தி வாந்தியா எடுக்கிறான் சார்... என்றாள். சரி போன் செய்கிறேன் என்று போன் செய்தேன் . அவரின் தந்தை போன் எடுத்தார். விசயத்தை கூறினேன். உடனே வந்து அழைத்துச் சென்றார்.

மறுநாள் தெரிய வந்த விபரம்:
        அவர் அழைத்துச் செல்லும் வழியெங்கும் வாந்தி எடுக்கவே பால் பண்ணை அருகில் உள்ள சிட்டி மருத்துவமனைக்கு அருகிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.டாக்டர் அவனின் பல்ஸ் மிகவும் மோசமாக உள்ளதைப்பார்த்து , பதட்டமடைந்து அதற்கான சிகிச்சை தந்து , அவனை பிழைக்கச் செய்திருக்கிறார்.

இன்னும் அந்தப் பையனுக்கு ஆஸ்பத்திரியில் தான் டீரிப் ஏற்றிக் கொண்டுள்ளார்கள்.

     “யேவ் , இவ்வளவு நேரம் இவனை எப்படியா வச்சிருந்த.. இன்னும் பத்து நிமிசம் கழிச்சு கொண்டாந்து இருந்தா ... நிச்சயம் உன் மகனைப் பார்த்திருக்க மாட்டே...”என டாக்டர் கேட்க.

“அய்யா... பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டேன்..... “

” அப்புறம் எப்படியா கூட்டியாந்தே...”

”அவுங்க டீச்சர் முடியலைன்னு சொன்ன வுடனே ... தலைமை ஆசிரியர் போன் செய்சாரு.. அதான் கூட்டி வந்தேன்... “

”முதல்ல போயி டீச்சருக்கு நன்றி சொல்லுய்யா... இன்னைக்கு உன் பிள்ளை உயிரோடு இருக்குதுன்னா ... அதுக்கு அவுங்க தான் காரணம் ...”


    சாதாரணமாக வாந்தி எடுத்தால் , வாயை கொப்பளிக்கச் சொல்லி , நாங்கள் வகுப்பிலேயே படுக்கச் செய்து விடுவோம். சில ஆசிரியர்கள் தகவல் தருவார்கள் . சிலர் வாந்தி தானே என்று என்னிடம் கூறுவது கூட இல்லை. நான் ரவுண்ட்ஸ் போகும் போது பார்த்துக் கேட்கும் போது , தெரிய வந்தால் தான் உண்டு.
      
         ஆனால், இந்த ஆசிரியர் எதையும் உடனே , தலைமை ஆசிரியர் என்ற முறையில்,உடனேதெரிவித்துவிடுவார். மிகவும்பொருப்பானாவர்.குழந்தைகளைத் தன் பிள்ளைகளைப் போல பார்த்துக் கொள்வார். அவரின் வகுப்பு மாணவர்கள் படிப்பிலும் முதலாவதாக இருப்பர். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் , அவர்களின் பெற்றோர் வசதி குறைவாக இருந்தால், அதை அவரே அவரின் செலவில் வாங்கித் தந்திடுவார். அதிகாரிகள் முதல் ஆசிரியர் பயிற்றுநர்கள் வரை அனைவரும் அவரின் வகுப்பை பாராட்டுவார்கள். பெற்றோர்கள் முதல் வகுப்பில் அவரின் வகுப்பில் சேர்ப்பதற்கு போட்டிப் போடுவார்கள். அதனாலேயே அவரின் வகுப்பில் சராசரி வருகை என்பது நூறு சதவீதமாக இருக்கும். நோ அப்சண்டீஸ்.


   அப்படித்தான் அன்று அம்மாணவனை அந்த பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  எங்கள் பள்ளியில் மூன்று பள்ளிப் பேருந்துகள் உள்ளதால், காலையிலேயே ஆசிரியர்கள் மாணவர் வசிக்கும் பகுதிக்கு சென்று , முதல் நாள் வராத மாணவர்களின் பெற்றோர்களிடம் லீவ் போடக்கூடாது என்று சொல்லி அவனை அழைத்து வருவர். அப்படி அந்த ஆசிரியர் செல்லும் போது,பையனுக்கு முடியவில்லை என்பதைப் பார்த்து வீட்டில் இருந்து பையன கவனிங்க என சொல்லி இருக்கிறார். இவன் திங்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றாலே அப்படித்தான் டீச்சர் சொல்லுவான் என பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார் அவனின் பெற்றோர்.


      மீண்டும் இதற்கான காரணம் உணவு ஒவ்வாமையே. முதல் நாள் கோழிக் குழம்பை சுட வைக்காமல், பள்ளிச்செல்லும் அவசரத்தில் அவனுக்கு சாதத்தை பிசைந்து , குழம்பை ஊற்றி கொடுப்பது தான் வினை.
சனிக்கிழமை பாண்டிகோயிலில் ஆடு வெட்டுக்கு போக வேண்டியது. அங்கு மீதி இருப்பதை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்பதால் பக்கத்து வீட்டுக் காரங்களுக்கு கொடுக்க வேண்டியது. அவர்கள் அதை அப்படியே வைத்து இரு நாட்கள் உபயோகிக்க வேண்டியது. பின் இப்படி பட்ட உணவு ஒவ்வாமையை கொண்டு ஆஸ்பத்திரிக்கு அழுக வேண்டியுள்ளது. அய்யா தயவு செய்து குழந்தைகளின் சாப்பாட்டு விசயத்தில் கவனம் எடுத்துக்கங்க...இல்லையினா உங்க பிள்ளைகளை உயிரோட பார்க்க முடியாம போயிடும்.. !

       ஆசிரியர் பணியில் கவனம் இல்லையேல் ஒரு விலை மதிப்பில்லா உயிரை இழக்க நேரிடும் . ஆம்.. மாணவர்களின் எதிர்காலம் மட்டும் அல்ல நிகழ் காலமும் நம் கையில் தான் உள்ளது. ஆசிரியர்கள் தங்களை முழுமனதோடு அற்பணித்து செயல் பட்டால் மட்டுமே , மாணவர்களை காக்க முடியும். 

14 comments:

Philosophy Prabhakaran said...

முதலில் கதை என்றுதான் நினைத்தேன்... பின்னர்தான் உண்மை என புரிந்தது... அந்த ஆசிரியைக்கு எனது பாராட்டுக்கள்...

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - அந்த ஆசிரியைக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - உடனே செயல் புரிந்த உங்களுக்கும் வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Ramesh said...

ஒரு ஆசிரியனாய் ஆசிரியைக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கிறேன் உங்களுக்கும் சேர்த்து.

சுவாமிநாதன் said...

அந்த ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் பணி மென்மேலும் சிறப்படைய ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
சுவாமிநாதன்.மோ - மதுரை

Victor Suresh said...

தன்னுடைய பணியை ஆர்வத்துடனும் பொறுப்புடனும் செய்யும் ஆசிரியருக்கும், அதைப் பாராட்டி மேலும் ஊக்குவிக்கும் உங்களுக்கும் என் தலைவணக்கங்கள்.

Chitra said...

இந்த அளவுக்கு, விவரம் தெரியாமல் பெற்றோர்கள் இருக்கிறார்களே.... ம்ம்ம்ம்...... அக்கறை உள்ளம் கொண்ட ஆசிரியர்களை பாராட்டுகிறேன்.

Nimal said...

மனமார்ந்த பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam said...

உங்கள் பதிவுகளைப் படிக்கப் படிக்க உங்கள் மேல் என் மதிப்பு உயருகிறது.KEEP IT UP SARAVANAN.

இளங்கோ said...

பெரும்பாலும் பெற்றோர்களின் கவனக் குறைவினாலே இது போல நிகழ்கின்றன. அந்த ஆசிரியருக்கும், உங்களுக்கும் எனது நன்றிகள்.

MANO நாஞ்சில் மனோ said...

அக்கறை உள்ளம் கொண்ட ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உதாரணத்துக்கு கேரளாவில் மாணவன் செய்த தப்புக்கு தானே தனக்கு தண்டனை கொடுத்து மாணவனை திருத்திய ஒரு டீச்சர்....!!!

Anonymous said...

வாழ்த்துக்கள்

geethappriyan said...

மிக்க நெகிழ்ச்சியாய் உள்ளது.

Unknown said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

ஹுஸைனம்மா said...

இந்த உணவு ஒவ்வாமை பிரச்னையைப் பிள்ளைகளிடமும், பெற்றோர்களிடமும் விளக்கிச் சொல்லுங்களேன். நிறையப் பேருக்கு இதுகுறித்து விழிப்புணர்வு சிறிதும் இல்லை.

Post a Comment