Saturday, May 14, 2011

சோலையம்மாள்


   மதுரை என்றாலே கடுமையான வெயில்.  செங்கதிர்கள் ஊசியாய் தசைகளில் குத்தி ஏற்படுத்திய வலி , எலும்பை ஊடுருவி, உயிரை பறிக்கும் வேதனையைத் தந்தது. கருப்புச் சாலைகளின் தார், வெயிலின் வெப்புத் தாங்காமல் உருகி, கார்களின் சக்கரங்களில் ஒட்ட இடம் தேடுகின்றன. வாகனங்களின் ஓட்டங்களில் சாலைகளிலிருந்து வெளிப்படும் வெப்பக் காற்று , வீதியோரக் கடைகளில் எரிச்சலை உண்டாக்கி, ’ஏன் மதுரையில் பிறந்தோம்?’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.  மின்சாரம் அற்ற  மதியம், வெப்பத்தால் மனிதனை வாட்டுகின்றது. மனம் பதற்றமடைகிறது. .மின்விசிறிகளின் காற்றைப் பழகிப்போன உடல்கள் காற்றில்லாமல் வெக்கைத் தாங்காமல், புழுகி வெந்து சாகின்றன.

     கீழவாசல் என்றால் உயரமான அந்த சர்ச் தான் நினைவிற்கு வரும். செங்காவி நிறத்தில் அக்கட்டிடம் புனிதத் தன்மைக்கான அடையாளங்களுடன் கம்பீரமாக இருக்கும். மனிதர்கள் அழுக்கு மூட்டைகளுடன் வந்து , மனக் குப்பைகளை மண்டியிட்டு கொட்டிச் செல்வர். சர்ச் வருடா வருடம் வெள்ளையடிக்கப்பட்டாலும் , அதன் உட்புறம் மனித பாவங்களின் மொத்த உருவங்கள் பூதாகரமாகப் பெருகி இருள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறது. இரட்சகரின் உடலிலிருந்து பெருகி வரும் குருதி ,சிலைகளில் இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது, மனித பாவங்களின் பெருக்கத்தால்.

    ஒவ்வொரு பூசைக்குப் பின்னும் சர்ச்சைக் கூட்டிப்பெருக்கினாலும், உண்மையானக் குப்பைகள் இன்னும் நிரம்பி வழிகின்றன. சுவர்களில் பொதித்து வைக்கப்பட்ட சுண்ணக் கோப்பைகளில் உப்புத்தண்ணீர் எதற்கானது என்பதை அறியாமலே பள்ளிச் சிறார்கள் தலையில் அள்ளித் தெளித்து கண்களில் ஒற்றிக் கொண்டு , படிக்காத பாடத்திற்கு நூறு மதிப்பெண்களை வேண்டி ,ஏசுவின் பாதங்களைத் தொட்டுச் செல்கின்றனர். இந்த மூடர்களின் செய்கையை எண்ணி, இன்னும் இரட்சகரின் கண்களில் வடியும் கண்ணீராக இருக்குமோ , இந்த கோப்பைகளின் உப்பு நீர்.

     சோலையம்மாள் காலை ஏழு மணிக்கே தன் கடையை விரிக்கத் தொடங்கினாள். அவளின் காவி நிறப்பற்கள் இன்னும் முந்தைய நாளின் வீச்சத்தை சுமந்து கொண்டு இருந்தன. அவளின் கணவன் ஜோசப் டீத்தண்ணி வாங்கி தூக்குவாளியில் கொண்டு வந்தான். ”வாய அலம்பிட்டு சாப்பிடு” என்றவனின் கரங்களில் இருந்த அப்பம் அவள் வாய் நாற்றத்தில் கரைந்து வயிற்றை நிரப்பியது. மதுரையின் விடியல் அப்பத்தை புசிப்பதற்கானதாக இருப்பது அதிசயமில்லை. டீக்கடைகள் காலைவேளையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அனேகமான கூலித் தொழிலாளிகளின் காலை உணவே ஒரு டம்ளர் டீயும் , அப்பமுமாகத் தான் இருக்கும். அப்பம் சோடா உப்பால் உப்பிப் போய் திருமலைநாயக்கர் வயிறு போல புடைத்திருக்கும். சிறுவர்கள் தங்களின் தந்தையின் கைகளைப்பிடித்துக் கொண்டே தெருவின் முனைக்கு வந்து வடைக்கடை, அதனை ஒட்டியுள்ள புட்டுக் கடை ஆகியவற்றில் புட்டையும் அப்பத்தையும் உண்பதால், மதுரையில் பல மருத்துவர்கள் லாபம் அடைகின்றனர்.

     சர்ச்சினை ஒட்டிய பள்ளியின் வாசலில் தான் சோலையம்மாள் கடைவிரித்து, மாங்காய், நெல்லிக்காய், மிட்டாய் என விற்றுக் கொண்டிருந்தாள். பத்து வருடங்களுக்கு முன் அவளுக்கு போட்டியேயில்லை. இப்போது அங்கு அவளுக்குப் போட்டியாக நான்கு கடைகள் முளைத்து இருந்தன. ஓவ்வொரு முறையும் யாராவது புதிதாகக் கடைப்போட்டால், காதுகளில் கேட்க முடியாத நாற வசவுகளை அள்ளி வீசி , விரட்டத் துடிப்பாள். அப்படி அவளின் வசவு தங்காமல் ஓடியவள் தான் தங்கம். மூன்று வருடங்கள் முன் கடன் தொல்லையால் ஓடிப் போன கணவனின் தரம் கெட்டத் தனத்தால், தன் பிள்ளைகளின் வயிற்றுப்பசியாற்ற , இரட்சகரை நம்பிக் கடை விரித்தாள். கடன்காரன்களை
விட சோலையம்மாளின் மோசமான வசவால் மனம் பாதிக்கப்பட்ட தங்கம், அழுகையுடன் வாங்கிய சாமான்களை அப்படியே சோலையம்மாளின் மூஞ்சியில் வீசியெறிந்து சென்றாள். சிங்கம் அடித்து சாப்பிட்ட மீதியைச் சாப்பிடும் நரியைப்போல எந்தவித அனுதாபமும் படாமல், வீசிய பொருள்களை விற்று காசு பார்த்தாள். அவளிடம் உள்ள அழுகியபழங்களும் காசாகின. காய்ந்த ரொட்டித்துண்டுகளும் இரக்கமற்று விற்கப்பட்டு பலரின் வயிற்றைப் பதம் பார்த்தன. இப்போது சர்பத் கடை, ஜிகர்தண்டாக் கடை என முளைத்திருந்தாலும், தன் கடைக்கு வரும் பசங்களுக்கு கடன் கொடுத்து வாடிக்கை பிடித்து வைத்திருந்தாள்.
   கடன் வாங்குதல் என்பது வகுப்பறைகளின் கூட்டல் கழித்தல் கணக்குகளையும் தாண்டி ஏமாற்று வித்தையாக இருக்கும். இவளும் ஒன்றும் பெறாதப் பொருள்களை ஒன்றிற்கு இரண்டு மடங்காக விற்பாள். கொள்ளை லாபம் என்பதால் கடன் வாங்கும் சிறுவரும் பொய் கணக்குக் காட்டி மோசடியில் இறங்குவர். ”நேத்து கொடுத்தது மறந்துச்சாக்கா..நான் போய் பொய் சொல்லுவேனாக்கா…”என்ற டயலாக் நிரந்தரமாகி கடைகளின் முன்னால் உலாவரும். இவளின் வசவுகளும் அந்த திண்பண்டங்களில் வாயிலாக , அவர்களின் உடலில் ஊடுருவி, மாணவர்களுக்குள் நடைபெறும் மோதலில் வெளிப்படும் . மோசமான வார்த்தைகள் சர்ச்சின் மணல் பரப்பில் சிதறிக்கிடக்கும். ஒவ்வொரு அடி எடுத்து நடக்கும் போதும்  அவர்களின் பாதங்களில் ஒட்டிக் கொள்ளும் மணல் துகள்களில் , அசுத்த வார்த்தைகளும்  நாடாப்புழுக்கள் போல ஒட்டி உடலில் புகுந்து, இரத்தத்தில் கலந்து அழியாத உறவை ஏற்படுத்திக் கொள்ளும்.” ங்கோத்தா ….மவனே இவன கழுத்த அறுத்தா சரியாப்போயிடும்ண்டா..”என்ற வார்த்தைகளை சாதாரணமாக நாம் கேட்கலாம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை  ,அசிங்கம் பேசி வளர்கிறது.
    கால் ஊனமான சரஸ்வதி, கடை வைத்த போது , தன் மாராப்பு தெரிய உட்கார ஆரம்பித்தாள், சோலையம்மாள் .பெரிய பசங்களை தன் பக்கம் ஈர்க்க ,கழுத்து இறக்கி ஜாக்கெட் தைக்கத் தொடங்கினாள். சரஸ்வதியின் எடுப்பான மார்பு , அவளின் ஊனத்தையும் பொருட்டாக நினைக்காமல் , அந்த ஏரியா டீக்கடை வாலிபர்களை வளைத்துப் போட்டது. சோலையம்மாளின் வார்த்தைத் தோட்டாக்களை  , அவளின் நிமிர்ந்த பருத்த மார்பு கவசமாக்கி ,ஆண்களைத் துணைக்கு வரவழைத்து அழித்தன. சரஸ்வதியிடம் சோலையம்மாளின் பருப்பு எடுப்படவில்லை. அவளின்  தகாத வார்த்தைகள் தார்ச்சாலைகளில் வெப்புத் தாங்காமல் ஆவியாகி பறந்துப் போகின. இப்போது நயந்து பேசி விற்க ஆரம்பித்தாள். இருப்பினும் காவிக் கறைப்படிந்த பற்களின் நடுவில் வெளிவரும் அசுத்த  காற்றைப் போலவே ,வார்த்தைகளும் கறைகளுடனே வந்து விழுந்தன. தொட்டில் பழக்கம் மாற்ற முடியாது என அனைவரும் கேட்டுக் கேட்டு மோசமான வார்த்தைகள் சாதாரண வார்த்தைகளாகிப் போயின. .

    ஜோசப் வாயில்லாப் பூச்சி. கருத்து வளர்ந்த நெடுக்கான உடலாகயிருந்தாலும் , சோலையம்மாளின் கைக்குள் அடக்கமாகிப் போயிருந்தான். அவளின் வார்த்தைகளுக்கு மறுத்துப் பேச மாட்டான். அவன் சர்ச்சில் கூட்டிப் பெருக்கும் வேலையை செய்து வந்தான். அவனால்  பெருக்கித் தள்ளப்படும் மணல் தூசிகளைப் போல  பல மடங்கு குவியும் சோலையம்மாளின் அசுத்த வார்தைகளை அவனால் அள்ளி எறிய முடியவில்லை. தள்ளிப்போகவும் முடியவில்லை. குழந்தைபாக்கியம் இல்லாததால், இவளின் வார்த்தைகளுக்குப் பயந்து , உச்சிவெயிலின் நிழல் போல அவளின் காலடியிலே கிடந்தான். ஜிகர்தாண்டாக்காரன் கடைவைத்ததிலிருந்து சோலையம்மாளுக்கு காலை பதினோரு மணிக்கும் ,மதியம் மூன்று மணிக்கும் தவறாது இரண்டு டம்ளர் ஸ்பெசல் ஜிகர்தண்டா தருவதால், அவனை இவளுக்கு பிடிக்கும் . அவனுக்கு கிறிஸ்துமஸ்க்கு பணம் தருவதுடன் , சட்டை, பேண்ட் எடுத்துத் தருவாள். காலம் சோலையம்மாளை மாற்றும் என்று ஏமாந்தவர்கள் அதிகம்.
    
    பேயாய் வந்த லாரி ,கட்டுப்பாட்டை இழந்து , சாலையின் தடத்தில்  இருந்து விலகி, எமனாக மாறி சோலையம்மாளை நோக்கி வர, எங்கிருந்தோ வந்த அம்பாசிடர் மகால் சாலையிலிருந்து குயவர் சாலை நோக்கி விரைய , லாரி அம்பாசிடரில் மோதி நின்றது. பாவம் சரஸ்வதி, லாரி மோதிய வேகத்தில் அம்பாசிடரின் டயர் வெடித்து , அதிர்ச்சியில் தார்சாலை பிளந்து , அருகில் இருந்த கருங்கல் , பறந்து, அவளின் பொட்டைப் பதம் பார்க்க  மூர்ச்சையாகி இறந்தாள். ஒருநிமிடம் என்ன என்று அறிவதற்குள் , எல்லாம் முடிந்தாகி விட்டது. சாலையோர வியாபாரிகள் சோலையம்மாளையும் தாண்டி , எமனையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. சரஸ்வதியின் சாவைத் தூரத்தில் இருந்து பார்த்த எவரும் இரண்டு நாள் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். ஆனால், இவள் எதையும் பொருட்படுத்தாமல், கடையை நடத்தி, பெங்களூரு அய்யங்கார் பேக்கரியில் பப்ஸ் வாங்கிச் சாப்பிட்டாள். தரையில் சிந்திய இரத்தம் கூட ஈரம் காயவில்லை.

  அரைமணி நேரத்துக்குள் , சர்ச் வாசல் சரஸ்வதி இறந்ததற்கான எந்தச் சுவடும் இல்லாமல், மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பியிருந்தது. பிறப்பும் , இறப்பும் சகஜமாகி விட்ட , மதுரையில் ஒருவர் வாழ்ந்த அடையாளங்கள் அவன் வாழ்ந்து முடிந்த சில நிமிடங்களிலே அழிக்கப்படுவது சர்வ சாதாரணம். அவள் சிந்திய இரத்தம் மண்ணோடு மண்ணாகி அவளைப்போலவே காணாமல் போயிருந்தது. மனிதர்கள் மனதளவில் ஊனப்பட்டவர்கள் என்பதை உணராமலே, ஊனமான சரஸ்வதி செத்துப்போனாள்.
   சோலையம்மாள் எதையும் பொருட்படுத்தாமல் , தன் வேலையைப் பார்த்தாள். ஜோசப் கோபம் பீறிட்டு, ”நீ.. யெல்லாம்…மனுசியா… கண் எதிரில சாவு நடந்து இருக்கு..கொஞ்சம் கூட ஈவு இரக்கம் பார்க்காம,, கடையைத் திறந்து வியாபாரம் பண்ணுறே…”   
”நான் செத்தாலும் இப்படித் தான் எவளாவுது பொழப்பு பார்ப்பாள்.. போடா.. பெரிசா பேச வந்திட்ட… லாரி இந்நேரம் எம்மேல மோத வேண்டியது.. எதோ உயிரோட இருக்கேனேன்னு சந்தோசப்படு..பெரிசா..வந்திட்டே.. மாராப்பப் பார்த்து  வரிஞ்சுக் கட்டிக்கிட்டு, என்னோட சண்டைக்கு வந்த விபச்சாரி.. பசங்க… அவ செத்தவுடனே தன்ன சாட்சிக்கு போலிஸ் கூப்பிடுவான்னு ஓடி ஒளிஞ்சுக்கிட்டாங்க….கடையை இழுத்து மூடிகிட்டானுங்க, அவ செத்த இடம் இது .. அதில அவளுக்கு மரியாத செலுத்தும் விதமா.. இன்னும் போட்டியாதான்யா வித்துக்கிட்டு இருக்கேன்.. அவ செத்ததுக்கு நான் தான் சாட்சி …எவன் சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் கூண்டு ஏறி சாட்சி சொல்லப்போறேன்..அவ குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வாங்கித் தருவேன்… நாம தத்து எடுத்து வளர்ப்போம்ய்யா ”என்று கண்ணீர் விட்டாள். வெப்புத் தாங்காமல் வெடிக்கும் கோடைக்கால பருத்திப்போல, இவனின் வார்த்தைகள் பொறுக்காமல் அவள் வெடித்து சிதறினாள். கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக ஊற்றியது. ஜோசப் கூட்டித்தள்ளிய குப்பைகளுக்கு நடுவில் அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.  
     சோலையம்மாள் கடை முன் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. அவளின் குரல் சர்ச் வாசலில் அமர்ந்திருக்கும் ஜோசப்க்கு கேட்டது. “ உங்கள உங்க ஆத்தா நல்ல நேரத்தில தாண்டா பெத்துப்போட்டுயிருக்கா…. கொஞ்சம் முன்னாடி பள்ளிக் கூடம் விட்டுருந்தா.. நீங்களும் சேர்ந்து எமலோகம் போயிருப்பீங்கடா. . பாவம் சரஸ்வதி ….அவ வாங்கியாந்த வரம் அவ்வளவு தான் … எந்த (பெண் உறுப்பின் பெயர் சொல்லி திட்டினாள்)மவனும்  அவள தூக்க வரலை… பொட்டுன்னு போயிட்டா..”     

7 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவா எழுத ஆரம்பிச்சாச்சா? இப்போ தான் பார்த்தேன். இனி தினமும் தொடர்வேன்

நிரூபன் said...

உங்கள் மொழி நடையும், வர்ணனைகளும் பதிவிற்கு மேலும் அழகு சேர்க்கிறது.

thiagu1973 said...

//கடன் வாங்குதல் என்பது வகுப்பறைகளின் கூட்டல் கழித்தல் கணக்குகளையும் தாண்டி ஏமாற்று வித்தையாக இருக்கும்//

இந்த் வரிகளை ரசித்தேன்

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்குது சரவணா....

ஹேமா said...

சிலரது குணாதிசயம் வித்தியாசம் சோலையம்மா போல !

superlinks said...

வணக்கம்,
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

போளூர் தயாநிதி said...

நல்லா இருக்குது

Post a Comment