Thursday, May 12, 2011

தேர்தல் முடிவு தெரியும் முன்னே கலங்கடிக்கும் தேர்வு முடிவுகள்...!



     காலை ஒன்பது மணி என் நண்பர் கல்யாண் ஜி யிடம் இருந்து அழைப்பு,” முதன்மை கல்வி அலுவலகம் உடனே வாருங்கள் ”. ஏதாவது விசயம் இல்லாமல் அழைக்கமாட்டார் என்பது எனக்கு தெரியும்.  உடனடியாக கிளம்பினேன்.  கடல் அலைப் போல மக்கள் கூட்டம். எதற்கு ?என்று புரிய வில்லை. அலுவலக நுழைவாயிலில் வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் தடுக்க , என்னை பற்றிய அறிமுகம் செய்யும் முன்பே, வண்டியை உள்ளே விடுப்பா என்று தெரிந்த முகம் குரல் கொடுக்க , ஜனத் திரளின் நடுவே வாகனத்தை உருட்டிச் சென்றேன்.  
      
     “ உங்களிடம் நேற்றே ஒரு போஸ்ட் , இது சம்பந்தமாக எதிர்பார்த்தேன். பிளாக்கில் எதுவும் இல்லை என்பதால் அழைத்தேன் ”என்றார். படத்தைப் பார்த்தால் கூட்டம் எவ்வளவு என்பது தெரியும். நேற்று மதுரையில் மட்டும் நான்காயிரம் படிவங்கள் விற்று தீர்ந்து விட்டன. ஆம். தேர்வு முடிவுகள் வெளியாகி யுள்ள நிலமையில் , தங்களின் விடைத்தாளை திருத்திய பின் எடுத்த மதிப்பெண் சரியா என பார்ப்பதற்கு , விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க , விண்ணப்பம் வாங்க வரிசையில் காத்திருப்போரின் கூட்டம் தான் என விளக்கம் அளித்தவுடன் எனக்கு விபரம் புரிந்தது. விண்ணப்ப படிவ விலைரூ300.   



விடைத்தாள் நகல் பெற ஆர்வமுடன் முதன்மை கல்வி அலுவலரின் வாகனத்தின் மீது வைத்து படிவம் நிரப்பும் மாணவர்கள்.


                                                   கூட்டத்தின் ஒரு பகுதி.

 தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் வெகுஜனங்களுக்கு , தேர்வு முடிவுகள் மீது ஒரு அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பதுடன் , தன் குழந்தைகளின் எதிர் காலத்தின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பிரதிபலிப்பு தான் , இப்படி பட்ட கூட்டத்திற்கு காரணம்.

   ஒரு வருடம் இரவு பகலாக முழித்து படித்த மாணவர்களுக்கு தன் ஆசிரியரின் விடை திருத்தல் பணியின் மீது சந்தேகம் என்பதை தான் விண்ணப்பிப்பவரின் அதிகப்படியான எண்ணிக்கை உறுதி செய்வதாக உள்ளது.


     தேர்வுத் துறை , சென்ற வருடமே , இது போன்ற , நகல் பெற்றவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து , அதிகப் படியான மதிப்பெண் பெற்றதால், பல ஆசிரியர்களை கடுமையாக கண்டித்ததுடன் , சஸ்பெண்டு செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. இப்படி இருக்கையில் மீண்டும் இந்த கூட்டம் , ஆசிரியர்கள் மீது அளவுக்காதிகமான அவ நம்பிக்கை கொண்டுள்ளதையே  நிருபிப்பதாக உள்ளது.

  ஏன்? நகல் பெறுகின்றனர்.  கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கவே. மருத்துவத்தை விட , இன்ஞினியரிங் சீட் கட்ஆப் மதிப்பெண் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் என்பதாலும் கட் ஆப் அதிக வித்தியாசத்தில் உயரலாம் என்பதாலும் கணிதம், மற்றும் இயற்பியல் , வேதியல் படங்களில் நகல் பெறவே அதிகம் மாணவர்கள்  விண்ணப்பிக்கின்றனர். கணிதத்தில் இரண்டு மதிப்பெண் என்பது ஒரு கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்க செய்யும்.


என்னுடைய கேள்வி...
1. திருத்திய விடை தாளில் ஆசிரியர் நன்றாக திருத்தி யிருக்க வாய்ப்பு இல்லை. மேலும் பிழை இருக்கும் என்று நம்பிக்கை இருக்க போகவே தானே இந்த நகல் பெறும் நடவடிக்கை.  அப்படி என்றால் மதிப்பீடு என்பதே தவறு தானே?

2. தாங்கள் எழுதிய விடைகளுக்கு இந்த மதிப்பெண் தானே கிடைக்கும் என்று முன்கூட்டியே தெரிந்த பின்பும் எதற்காக மாணவர்கள் விடைத்தாளின் நகல்
பெற்று , அதை சரி பார்க்க வேண்டும்.  ஏனெனில், நம் தேர்வு முறையே தவறாகும். நாம் மனப்பாடம் செய்து அப்படியே வாந்தி எடுக்கும் முறையை கொண்டுள்ளோம். அல்லது மீண்டும் மீண்டும் எழுதி அதை அப்படியே குறிப்பிட்ட நேரத்தில் பிழையின்றி எழுத பயிற்சி கொடுத்துள்ளோம். இப்படி இருக்க வகுப்பறையில் திறமை வாய்ந்த மாணவர், சுமாரான மாணவர் தன்னை விட மதிப்பெண் அதிகம் பெற்றதால், ஏன் நாமும் மதிப்பெண் பெற நகல் பெற்று பார்ப்போம் என விண்ணப்பிக்கிறான்.

3. மருத்துவம் , பொறியியல் சீட்கள் திறமையில் அடிப்படையில் மாணவனை சோதித்து கொடுப்பதில்லை. கடந்த நான்கு வருடங்களாக , பொது தேர்வு முறை நீக்கி, கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் பெறுவதால், மாணவன் பெற்றுள்ள தகுதி (அதாவது மதிப்பெண் ) அடிப்படையில் தேர்வு பெறுகிறான். இண்டலெக்சுவல் திறன் கொண்ட மாணவர் இதில் எதாவது ஒரு இடத்தில் சோர்ந்து , மூளைக்கு வேலை கொடுத்து , தகுதி இழக்க வாய்ப்பு அதிக மென்பதாலும் , நான் இந்த தேர்வு முறையினையும், அதன் மதிப்பீடு தன்மையையும் வெறுக்கிறேன். அதுவும் நகல் பெற காரணமாகும்.

4.  பெற்றோர்களுக்கு தன் குழந்தைகளின் படிப்பு மீது சந்தேகம் அல்லது தங்களின் கனவு நசுங்கி விடக்கூடாது என்பதன் ஆதங்கம் , எவ்வளவு ரூபாய் செலவானாலும் கொடுக்க தயார். குழந்தைகளின் விருப்பம் யார் கையில்?

5. மறு கூட்டலில் மதிப்பெண் அதிகம் பெறுகிறான் என கொள்வோம். அப்படியானல் , ஆசிரியர்களுக்கு தன் பணியின் மீது ஆர்வம் இல்லையா ? இல்லை அரசு இந்த ஆசிரியர்களுக்கு தேவையான போதுமான வசதிகள் விடைத்தாள் திருத்த ஏற்படுத்தி தரவில்லையா? கொடுக்கப்படும் பணம் தான் பத்த வில்லையா? இதில் கோடை விடுமுறை ஈடுசெய்ய கூடுதல் விடுமுறை ஏன் ?


இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தவர்கள் பதில் கூறுங்களேன்.


2 comments:

Chitra said...

தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் வெகுஜனங்களுக்கு , தேர்வு முடிவுகள் மீது ஒரு அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பதுடன் , தன் குழந்தைகளின் எதிர் காலத்தின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பிரதிபலிப்பு தான் , இப்படி பட்ட கூட்டத்திற்கு காரணம்.



...... அந்த ஆதங்கம், நியாயமானதுதான்.


...... தேர்தல் முடிவுகள் தெரிந்து கொள்ள, ஒரு மாதம் காத்திருப்பது என்பது நீண்ட காலம் தான். இனி, எந்த முடிவு வந்தாலும், இந்த ஒரு மாதத்தில் ஏதோ கோல்மால் நடந்து விட்டது என்று தான் அடுத்த கட்சி, அழுகுணி ஆட்டம் ஆடப்போகுது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தவர்கள் பதில் கூறுங்களேன்.>>>>>>>
ஆசிரியர் உங்களுக்கே விடை தெரியலையா?

Post a Comment