Tuesday, June 23, 2015

வகுப்பறையை விளையாட்டு மைதானமாக மாற்றிய ஆசிரியர்

குழந்தைகளின் விளையாட்டுத்தனம் படிப்புக்கு உதவும்!
*
குழந்தைகள் இயல்பாக இருப்பதை எப்போதும் விரும்புகின்றார்கள். குழந்தைகளை இயல்பாக வைத்திருக்கும் ஆசிரியரின் வகுப்பறை என்றும் உயிரோட்டம் உள்ளதாக அமைந்து விடுகின்றது. குழந்தைகளின் இயல்பு தனத்தை அப்படியே வகுப்பறையில் பின்பற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் வாழ்வில் மறக்க முடியாத ஆசிரியராக இருப்பதை காணலாம். உங்கள் நினைவுகளில் நிற்கும் ஆசிரியரை பற்றி சிந்தியுங்கள். நிச்சயம் உங்கள் இயல்பை அவர் தக்க வைத்திருப்பார்.

குழந்தைகள் இயல்பு என்பது விளையாட்டு தனமாய் இருப்பது. நல்ல ஆசிரியருக்கு மூலதனமே அந்த குறும்பும் விளையாட்டுத்தனமும் ஆகும். என்றும் என் மாணவர்களை விளையாட்டு தனத்துடன் விளையாட அனுமதிப்பதால்,அவர்கள் எளிதில் கற்று கொள்ள உதவுகின்றேன் . அத்துடன் ,நான் அவர்களுக்கு பிடித்த ஆசிரியராகவும் மாறி விடுகின்றேன். 


அறிவியல் பசுமை உலகம் பாடத்தில் விதைகள் பரவுதல் குறித்து விளையாட்டு கற்று தந்தேன். புகைப்படங்களை பார்த்தால் மாணவர்களின் மகிழ்ச்சி தெரியும்.
விதைகள் காற்று, நீர் , விலங்குகள் , பறவைகள் மற்றும் மனிதர்கள் மூலம் பரவுகின்றன. இவைகள் விதை பரவுவதற்கு உதவும் காரணிகள் ஆகும். இலவம் பஞ்சு காற்று மூலம் பரவுகிறது. ஆகாயத்தாமரை நீர் மூலம் பரவுகின்றது. நெருஞ்சி முள் விலங்குகள் மூலம் பரவுகின்றது. ஆலம் விதை பறவைகள் மூலம் பரவுகின்றது. இப்படி நாம் ஏற்கனவே கற்று தந்திருப்போம்.

அவர்கள் விதை பரவுதல் குறித்து கற்று கொண்டுள்ளனரா? என மதிப்பிடவும். அவர்களுக்கு வலுவூட்டல் செய்வதற்கும் இச்செயல்பாடு பயன்படும்.
மாணவர்களை வட்டமாகவோ இல்லை வரிசையாகவோ நிற்க செய்யவும். நிற்கும் போது இரு கைகளையும் நீட்டி அடுத்தவர் மீது படாதவாறு நிற்க செய்யவும்.


நீங்கள் வெண்டை, தென்னை, தாமரை, வேம்பு, துவரம் பருப்பு, கடுகு,
என தாவரங்களின் பெயர்களை கூற வேண்டும். காற்று மூலம் பரவும் தாவரங்களை கூறும் போது மாணவர்கள் அவர்களை நோக்கி விசிறி கொள்ள வேண்டும். பறவைகள் மூலமாக பரவும் தாவரங்களை கூறும் போது பறப்பது போல் காட்ட வேண்டும். நீர் மூலமாக பரவும் தாவரங்கள் கூறும் போது தண்ணீர் குடிப்பது போல் செய்ய வேண்டும். விலங்குகள் மூலமாக பரவும் தாவரங்கள் பெயர்களை கூறும் போது யானைப்போல் துதிக்கை மடக்கி பாவனை செய்ய வேண்டும். மனிதர்கள் மூலமாக பரவும் தாவரங்கள் பெயர்களை கூறும் போது மாணவர்கள் நடக்க வேண்டும்.


தாமரை என்றவுடன் மாணவர்கள் நீர் குடிப்பது போல் செய்து காட்டுவர். அவர்களின் செய்ய தவறியவர் விளையாட்டில் இருந்து நீக்கப்படுவர். ஆலமரம் என்றவுடன் பறவைப்போல் பறந்து காட்டுவார்கள்.

இப்படி நாம் தாவரங்களின் பெயர்கள் சொல்லும் போது மாணவர்கள் விதை பரவுவதில் எவ்வளவு அளவு அறிவு நிரம்பியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். சரியாக, விதை பரவுதல் சார்ந்த அறிவு பெற்றவர்களுக்கு இது வலுவூட்டல் செயலாகவும், அது சார்ந்த அறிவு பெறாதவர்களுக்கு அது சார்ந்த அறிவு பெற மீள் கற்றலாகவும் இருக்கும்.
மதுரை சரவணன்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ஐயா...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கற்பித்தல்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

Post a Comment