Wednesday, June 17, 2015

நூலகத்தில் அட்டகாசம் செய்த மாணவர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்



ஒவ்வொரு நாளையும் மாணவர்களுக்காகவே ஒதுக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு மாணவனாக எதை எதை இழந்தேனோ அதை எல்லாம் என் மாணவர்கள் இழக்க கூடாது என்று நினைத்து செயல்படும் போது , அவர்கள் விரும்புவதை செய்வதாக உணர்கின்றேன். அதானால் அவர்கள் வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கின்றேன்.

சுட்டி விகடன் , மாணவர் உலகம், கோகுலம், சிறுவர்கள் கதைகள் என சிறுக சிறுக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து, வாசிப்பின் தன்மையை பொறுத்து ஒவ்வொரு மாணவராக பொதுநூலகத்தினை அறிமுகம் செய்து, நூலக உறுப்பினராக்கி, வருட முடிவில் தினமும் நூலகம் செல்லும் மாணவனாக மாற்றி வருவது எனது வழக்கம்.






பாடப்புத்தகங்களை தவிர்த்து பிற புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அவன் தனது அறிவை பெறுக்கி கொள்ள முடியும் என்று நம்புவனாக உள்ளதால் , நூல்களை எப்படியும் படிக்க செய்ய பழக்குவது எனது வழக்கம்.
இந்த முறை வந்த மாணவர்களில் பாதிக்கும் மேல் ,அவர்களின் அண்ணன், அக்கா என யாரவது ஒருவர் என்னிடம் பயின்றவர்களாக உள்ளதால், என்னை பற்றி நன்கு அறிந்தவர்களாக இருந்ததால், ஆரம்பம் முதலே என்னிடம் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். பயம் என்பது ஆசிரியரிடம் விடுப்படுமானால் கல்வி தானாக அங்கு துலங்க ஆரம்பித்து விடும் . பல ஆசிரியர்கள் இன்னும் ஆசிரியர்கள் என்ற நிலையிலே தங்களை பாவித்து வருகின்றனர். ஆதலால், கருத்துக்களை திணிப்பவர்களாகவே உள்ளார்கள். இந்த திணிப்பு மாணவர்கள் இன்னும் பயந்து நடுங்கி இயல்பு கற்றலை மறக்க செய்து விடுகின்றது.





கற்றலில் மாணவர்களின் ஈடுப்பாடு, முயற்சி மிகவும் அவசியம். அதனை நாம் ஏற்படுத்தினால் போதும் அவர்கள் தாமாகவே கற்றுக் கொள்வார்கள்.ஆசிரியர்கள் அவர்கள் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற சூழலையும், அதற்கான தளத்தையும் ஏற்படுத்தி , ஒரு தோழனாக , துணையாக இருந்து வசதிகளை பெருக்கி கொடுத்து கற்றலுக்கு உதவுபவனாக இருத்தால் போதும், நாம் எதிர்பார்த்தைவிட மிக அருமையான அறிஞர்களாக , சான்றோர்களாக உருவாகி வருவார்கள்.
காலையில் வந்தவுடன் சுட்டிவிகடனில் எப்.ஏ பேஜ் பார்த்து ராகவன் “சார், சூப்பரா இருக்கு.எங்க சார் இந்த புத்தகத்தை வாங்கிறது. “





“டேய்...காசு இல்லைன்னா..நம்ம நூலகத்தில் போய் படிக்கலாம். அங்க இந்த புத்தகத்தை பார்க்கலாம்” பா. மணிகண்டன். 
“சார், லைப்ரேரி கூட்டிட்டு போவீங்களா? அங்க புத்தகம் எடுத்து படிக்கவா..?” 
“ஓ கே . நீ டெய்லி புத்தகம் படிப்பீய்யா.. சார், உங்க டேபிளில் இருந்த மாணவர் உலகத்தை படிச்சுட்டேன்.”
“சூப்பர்.. எல்லோரும் வாசிக்க தெரிஞ்சா போதும், புத்தகத்தை எடுத்து படிக்கலாம். வாசிக்க அரை குறையாக வந்தாலும் பரவாயில்லை, படக்கதை, சிறுவர் பாடல் என சில புத்தகங்கள் இருக்கும்..அதை படிக்க படிக்க வாசிப்பு மேம்பட்டு நீயாகவே விக்ரமாதித்தன் கதை, சிந்துபாத் கதைன்னு படிக்க ஆரம்பிச்சு விடுவாய்”
”சார்.. நான் இந்த வருடம் 400 புத்தகம் வாசித்து உலக சாதனை படைப்பேன் ” என்றாள் கீர்த்தனா. 
“வெரி குட். பொதுநூலகத்தில் இருந்து புத்தகம் எடுத்து படிக்க , முதலில் உறுப்பினராக வேண்டும்.அதன் பின் நூலகர் நமக்கு ஒரு கார்டு தருவார். அதன் மூலம் நமக்கு தேவையான நூல் பெற்று வீட்டில் கொண்டு வந்து படிக்கலாம். புத்தகத்தை நல்ல நிலையில் திருப்பி கொடுக்க வேண்டும்.”






“சார்...நிறைய புத்தகம் இருக்குமா.. நமக்கு வேண்டியதை எப்படி தேடி பிடிக்க முடியும்?” என கேட்டாள் வீரம்மாள்.
“நூல்களை வரிசைப்படுத்தி இருப்பார்கள். இலக்கியம், சிறுவர் இலக்கியம், கவிதைகள், சிறுவர்களுக்கான கவிதைகள். தன்னம்பிக்கைபுத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், சுயசரிதை புத்தகங்கள், அறிவியல் பகுதி என வரிசைப்படுத்தி நமக்கு தேவையான தலைப்பில் புத்தகங்களை வகைப்படுத்தி இருப்பார்கள். புத்தகத்தின் பெயர் தெரிந்தால் , அதனை கூறி நாம் நூலகரிடம் பெற்றுக் கொள்ளலாம்.”
“சார்... அப்ப எப்ப போகலாம்..”
“இப்பவே...வாங்க போவோம்.அப்படியே வரும் வழியில் காற்று எப்படி மாசுப்படுகின்றது என்பதை வாகனங்களில் வெளிப்படும் புகை அளவு, வாகனங்களின் எண்ணிக்கை மூலம் அறிவோம்..ஓகே”
“சார், நம்ம ஏரியாவில் ரைஸ் மில்லில் இருந்து புகை வருமே..”
”ஆமாம்...நாம் லைப்ரேரி சென்று, மீண்டும் திரும்பும் வரை காற்று மாசுப்பட காரணம் என்ன என்பதை ஆராய்வோம்.”
“அய்யா ...சூப்பர்...” என சமயவேல் கூறியவுடன் அனைவரும் அய்யா என கத்த ஆரம்பித்தனர்.
“அமைதியா இரு.. லைப்ரேரியில் எல்லோரும் படித்து கொண்டிருப்பார்கள். ஆகவே, நாம் அமைதியாக செல்ல வேண்டும். மேலும் அங்கு புத்தகம் வாசிக்கும் போது அமைதியாக புத்தகங்களை வாசிக்க வேண்டும். பிறருக்கு இடையூறு விளைவிக்ககூடாது. “
“ஓகே சார்.. என அனைவரும் அமைதியாக நூலகம் கிளம்பினார்கள்”
“சார்.. நீங்க தான் சார்..பிள்ளைகளை நூலகதிற்கு அறிமுகம் செய்து வைக்கிறீர்கள். சென்ற வருடம் உங்க கிளாஸ் பிள்ளைகள் நாங்க திறந்தவுடனே வந்து செய்தி தாள் படித்து புதுசா புத்தகம் வாங்கி சென்று வ்ந்தார்கள். உங்களை மாதிரி எல்லோரும் இருக்க வேண்டும்.” என்றார் நூலக பெண்மணி.
“சார் தப்பா நினைக்க மாட்டீங்களே.. நூலக ப்ரீயர் வச்சு இருக்கீங்களா,, அதுக்குன்னு தனியா மார்க் போடுவீங்களா..? “என லைப்ரேரியன் கேட்டார்.
“சாரி சார்.. பாடப்புத்தகத்தை தாண்டி நிறைய விசயங்கள் புத்தகங்களில் இருக்கு என்பதை காட்ட வேண்டும். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். இங்கு தான் நூலகம் உள்ளது என்பதை காட்ட வேண்டும். புத்தகம் பெறுவது எப்படி என்பதை பழக்கி கொடுக வேண்டும். நூலகத்திலுள்ள நூல்களை காணச்செய்ய வேண்டும். பயமின்று துணிந்து உள்ளே நுழைந்து உங்களுடன் பேசிப்பழகி, நூல்களை எடுத்து செல்ல வேண்டும். இது தான் என் ஆசை. இதை செய்தால் போதும் அவர்களாகவே புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள்” என்றேன்.
“ஆமாம் சார்.போன வருடம் பசங்க ரெம்ப சுறுசுறுப்பான பசங்க.. டெய்லி எடுப்பாங்க.. பரீட்சை அப்ப கூட எடுத்து படிச்சாங்க.. நான் கேட்டப்ப..நாங்க பாடத்தை எப்பவோ படிச்சுட்டோம். இன்னும் படிக்காத விசயத்தை தேடி வந்திருக்கோம் கொடுங்க என வாங்கி படிப்பாங்க.. நல்லா பேசுவாங்க சார்.. எல்லாம் உங்க ட்ரைனிங்“ என்றார் நூலக பெண்மணி.






“நீங்க கூட புத்தகம் படிச்சுட்டாங்களான்னு தெரிஞ்சுக்க.. என்ன படிச்சே கதை சொல்லுன்னு கேட்டு சொன்னவுடன் சாக்லெட் வாங்கிகொடுத்து அனுப்பி இருக்கீங்க..உங்க கிட்ட கதை சொல்லி சாக்லெட் வாங்கணும்ன்னு என் கிட்ட கதை சொல்லி பார்த்து வந்த பசங்க அதிகம். இந்த உற்சாகத்தை நீங்க இங்க இருந்து செய்றீங்க.. நான் அங்கு இருந்து செய்கின்றேன். மானவர்கள் வாசிக்கணும்...அது தான் நமக்கு முக்கியம். ”
“உங்களுக்கு சூப்பர் தலைமையாசிரியர் கிடைச்சு இருக்காரு...”
என லைப்ரேரியன் கூற , மாணவர்கள் தங்கள் வருகையை நூலக பதிவேட்டில் எழுதி கையொப்பமிட்டு புத்தகம் எடுத்து வாசிக்க் ஆரம்பித்தனர்.
அரைமணி நேரம் வாசித்த பின், நூலகத்தை சுற்றி காட்டி, புத்தகம் அடுக்கி வைத்திருந்த நூல்களை காட்டி, நூல்களின் வகைகளை பார்க்க செய்து நூலகரின் வாழ்த்துக்களுடன் பள்ளிக்கு வந்து சேர்ந்தோம்.
குழந்தைகளுடன் நேரத்தை செலவழியுங்கள் நீங்கள் இளமையாக மாறுவீர்கள். குழந்தைகளுடம் பழகுங்கள் நீங்கள் குழந்தை தன்மையுடன் என்றும் புதுமையாக இருப்பீர்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள் என்றும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்”
அட மேலே சென்ன இது நம்ம வாத்தியாருங்களுக்கு....!
அப்பா கொஞ்சம் வாத்தியார் என்கின்ற பழமை கெட்டப்பை தூக்கி எறிந்து குழந்தைகளுடன் குழந்தைகளாக இருக்க பழகுங்கப்பா.. புதுசு புதுசா கல்வியில் சாதிக்கலாம்.
மதுரை சரவணன்.

2 comments:

Yarlpavanan said...


"குழந்தைகளுடன் நேரத்தை செலவழியுங்கள்
நீங்கள் இளமையாக மாறுவீர்கள்." என்பதில்
உண்மை இருக்கு
சிறந்த பகிர்வு

தங்கள் தளத்தை
http://tamilsites.doomby.com/ இல்
இணைக்காது இருப்பின்
இணைத்துக்கொள்ளுங்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

நூலகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆசையுடன் சொன்னதை மிகவும் மதிக்கிறேன்... // குழந்தைகளுடன் குழந்தைகளாக // இது அதைவிட சிறப்பு...

வாழ்த்துகள்...

Post a Comment