Friday, November 13, 2009

குட்டீஸ் கதைக் கேளுங்கள் !
என் ஆசிரிய நண்பர் மணியை பல நாட்களுக்குப் பின் காண நேர்ந்தது. அவரின் மனைவி இறந்துவிட்டதாக என் நண்பர்கள் கூறிய விசயம் ஞாபகத்திற்கு வரவே தயக்கத்துடன் அதைப் பற்றி விசாரித்தேன். அவரும் தயக்கத்துடன் “என்ன உனக்கு தெரியாதா ? ஊருக்கே தெரியும் ... இப்பதான் மூன்று மாதம் கழித்து வெளியே வந்து இருக்கேன்”. “ தப்பா நினைக்கக் கூடாது ... என்ன உடம்புக்கு எதுவும் முடியவில்லையா?”.
“ உனக்கு விசயமே தெரியதா ? அவள் சுசைட் செய்து கொண்டாள்”. “ஏ விளையாடதப்பா...உனக்கு போய் ... அதுக்கு வாய்ப்பேயில்லை... நீ அதிர்ந்து கூட பேசமாட்டியே...” “ ஏய் உண்மையிலே தான் ... உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டாள் ..” என்று மிகவும் கம்மியக் குரலில் பேச ஆரம்பித்தார்.
அவருக்கு ஆறுதலாக பேசினேன். என்னால் முடிந்த அளவு அவரின் மனத்திற்கு ஆலோசனைகள் கூறி, கவலையை மறக்க பல புத்தகங்கள் வாசிக்கவும், தனிமையை தவிர்க்கவும், நண்பர்கள் வட்டாரத்துடன் இருக்கவும் கட்டளையிட்டேன்.
அவர் மனைவி எம்.பில் பட்டம் பெற்றவர். கல்லூரியில் விரிவுரையாளராய் இருந்தவர். இவரின் மீது மிகவும் பாசம் கொண்டவர். பேசும் போது தற்கொலைக்கான காரணம் என்னை அதிர்ச்சிக்௦௦ குள்ளாக்கியது! கை தொலைப் பேசியில் அழைத்துள்ளார் , இவர் வேலைப் பழுவால் பின்பு பேசுகிறேன் என கூறியுள்ளார். பலமுறை அழைத்தும் இவர் கை தொலைப்பேசியை எடுக்கவில்லை. பின்பு பேசவும் என கூறி , சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இவரின் நண்பரின் தொலைப் பேசியிலும் அழைத்தும் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் இந்த மோசமான முடிவை ஒரு படித்த பலருக்கும் ஆலோசனைக்கூறும் நிலையில் உள்ள பெண் எடுத்துள்ளார்!
அவரின் வளர்ப்பு மிகவும் செல்லமாகவும் , எதையும் உடனே பெறக்கூடியதாகவும் , எளிமையனதாகவும் ,கடுமையான சொற்களை காதால் கேட்க்காதவராகவும் இருந்துள்ளதை அறிந்து கொண்டேன்.
இந்த விபத்து நம் வீட்டுக் குழந்தைகளுக்கும் நடந்து விடக்கூடாது. குழந்தைகள் மீது பாசத்தை பொழியுங்கள், ஆனால் என்றும் கண்டிக்க மறந்து விடாதீர்கள். மனதை பக்குவ படுத்த கற்றுத்தாருங்கள். பாழாய் போன நம் சமுகத்தின் நல்லது கெட்டது பற்றி எடுத்துக் கூறுங்கள். தினமும் அவரின் நிகழ்வுகளைக் கேட்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஆரோக்கியமான சண்டை போட சொல்லுங்கள். உதவும் எண்ணத்தை வளர்க்கவும்.
முக்கியமாக தேசத்தலைவர்கள் கதைகளைக் கூறுங்கள். காமரசர் சிறுவயதில் பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினார்கள். அனைவரிடமும் அவரின் ஆசிரியர் கால் அணா வாங்கி விழா நடத்தினார் . அனைவருக்கும் சுண்டல் பொறி வழங்கப் பட்டது. மாணவர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு சுண்டல் வாங்கினர். ஆனால் காமராசர் வரிசையில் பொறுமையாக நின்று மிகவும் குறைந்தளவு சுண்டலுடன் தன் பாட்டியிடம் சென்றான்.அதைப்பார்த்த பாட்டி நீயும் முண்டியடித்து வாங்கவேண்டியது தானே? என கூறியதற்கு வரிசையில் நின்று தராத தன் ஆசிரியாரைக் குறைக் கூறாமல் , தன்னை ஏன்? குறை கிறாய் என கடிந்துக் கொண்டார்.
இப்படி கதைக் கூறினால் குழந்தைகள் மனது பக்குவப்படும். காமரசர் இவ்வாறு பொறுமையைக் கடைப்பிடித்ததால் தான் காந்தியைப் போன்று புகழப்பட்டார். தேசத்தின் பிரதமர்களை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்வு அடைய முடிந்தது எனக் கூறி பொறுமையின் அவசியத்தை விளக்கவும் வேண்டும்.
‘இட்லியாக இருங்கள்’ என்ற புத்தகத்தில் ஆசிரியர் வள்ளியப்பன் பொறுமையின் சிறப்பை ‘மாணவர்கள் மிட்டாய் எடுப்பதில்’ இருந்து விளக்கி உள்ளார். உடனடியாக ஒரு மிட்டாய் பெறுபவர்கள் மற்றும் பொறுமையாக இருந்து இரண்டு மிட்டாய் பெறுபவர்கள் பற்றிய ஆய்வில் பொறுமையைக் கடைப்பிடித்த மாணவர்கள் பிற்காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தனர் என விளக்குகிறார்.
பொறுமையைக் கடைபிடித்திருந்தால் என் நண்பனின் மனைவி வண்ணமிக்க வாழ்க்கையை தொலைத்திருக்க மாட்டார். வார்த்தை எண்ணத்தின் வெளிப்பாடு. அதன் பிற்பாடு எதைக் கூறினாலும் மாறிவிடுவதில்லை. நிச்சியம் கூப்பாடுத்தான். வார்த்தை பயண்பாடுகளின் அவசியத்தை எடுத்துக் கூற தயங்கக்கூடாது. தீயினால் சுட்டவடு ஆறாது என்பது உண்மையாகி இங்கு தீயே சுட்டுவிட்டது.
நாம் குழந்தைகளின் மனதை திடப் படுத்தவும் கற்றுக் கொடுக்க வேண்டும். கடும் சொற்களை தாங்கிக் கொள்ளும் மனத் தைரியத்தைக் கற்றுக் கொடுக்கவேண்டும். அவை புத்தகத்தின் வாயிலாகத்தான் முடியும். ஆகவே புத்தகம் வாசிக்க கற்றுத் தாருங்கள் . புத்தகம் வாங்கும் பழக்கத்தை உண்டாக்குங்கள். புத்தகம் புதிய மனிதனை உருவாக்கும். புத்தகம் புதிய சிந்தனையை உருவாக்கும். புத்தம் புதிய உலகம் படைக்க குழந்தைகள் தினத்தில் நம் குழந்தைகளுக்கு புதிய சிந்தனை ஏற்படுத்தும் புத்தகங்களை வாங்கிக் கொடுப்போம். அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

1 comment:

Post a Comment