Thursday, March 20, 2014

தயவு செய்து குடிகாரர்கள் படிக்க வேண்டாம்...!

         மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள இன்னும் ஆழமான புரிதல் தேவைப்படுகிறது. கோபம் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கின்றேன். எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளக் கூடாது. நியாயமான விசயங்களுக்கு , நேர்மறையான எண்ணங்களுடன் கோபம் கொள்ள வேண்டும் என்றும் கற்று தந்துள்ளேன். நம்முடைய கோபம் தப்பு செய்பவர்களுக்கு எச்சரிக்கை தருவதாகவும், தவற்றை செய்யாமல் தடுப்பதாகவும், தவறு செய்யும் எண்ணத்தை போக்குவதாகவும் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளேன். கோபத்தை அடக்க வேண்டாம் என்றும் கற்பித்தவன் என்ற விதத்தில் , சில புரிதல்கள் எனக்கு தேவைப்படுகிறது. அநியாயங்களுக்கு சீறுவதில் தப்பில்லை தான். அதற்காக இப்படியா?
      இந்த மாதிரியான கோபத்தை என்னவென்று சொல்வது? நிச்சயம் புரிதல் தேவை என்பதை நியாயப்படுத்துவதாக இருக்கிறது.
      நேற்று, மிகவும் சோர்வாகவும், சோகமாக காணப்பட்ட வகுப்பு மாணவனை விசாரித்தேன். அவன் சொன்ன விசயம் தூக்கி வாரி போட்டது. எதைய்ம் சட்டை செய்யாமல் எதார்த்தமாக அவன் சொன்ன பதில் வியக்க செய்கிறது!
     “நேத்து நைட் தூங்கலை சார் அதான் டையர்டா இருக்கு” என்றவனிடம் ”ஏன்?” என தொடர்ந்தேன். ”எங்கப்பா தண்ணி அடிச்சு கலாட்டா பண்ணீனாரு...” என அமைதியாக சலனமின்றி பதில் அளித்தவனிடம் , “ நம்ம செய்யும் யோகா செய்ய சொன்னியா ?” என கேட்க, மிக விரைவாக , ” அட போங்க சார்... சும்மா யோகா அது இதுன்னு ...அதெல்லாம் சரி பட்டு வராது.. ” என கோபமாக சொன்னான். ” சரி.... ஏன் சோகமா இருக்க... அப்ப கொஞ்சம் கொஞ்சமா குடியை நிறுத்துவாரு ... “ என சாந்த படுத்த முயற்சித்தேன். “ சார்... இனிமேல் குடிக்க மாட்டாருன்னு நினைக்கிறேன் “ என்றான் .
“வெரி குட் இந்த நம்பிக்கை தான் நமக்கு தேவை.. இந்த நம்பிக்கையே உங்க அப்பாவை குடிக்காம பார்த்துகொள்ளும்” என்று எல்லோரும் கை தட்டுங்க என்றேன். அனைவரும் கை தட்டி முடிந்ததும் மெதுவாக நிதானமாக கூலாக பதில் சொன்னான். என்னை தூக்கி வாரி போட்டது. ஆகவே, நிதானமாக, கூலாக , அதிர்ச்சி அடையாமல் அவன் சொன்ன விசயத்தை படிக்கவும்.
     “குடிச்சு பிட்டு .. எங்க அம்மாவை தகாத வார்த்தை பேசினார்.. குடிச்சா தானே இப்படி பேசுறன்னு.. பக்கத்தில இருக்கிற அம்மிக்கல்ல தூக்கி அவரு கால்ல போட்டுட்டேன்.. இனிமே குடிக்க மாட்டேன்ன்னு என் கால்ல விழுந்து கும்பிட்டு சத்தியம் செய்து கொடுத்துட்டார்.... அப்புறம் டாக்டர்ட்டா கூட்டி போய் ... கட்டு போட்டு ஆய்ண்மெட் வாங்கி கொடுத்தேன்..”
      வகுப்பறை நிசப்தமானது. எல்லா மாணவர்களும் அவனையே பார்த்து கொண்டிருந்தனர். வகுப்பிலுள்ள ஒரு மாணவி “அப்பதாண்ட குடிக்க கடையை தேடி போக மாட்டாங்க “ என்றாள். அதிர்ச்சியில் மேலும் உறைந்து போனேன்.
“டேய்.... கல்ல தூக்கி போடுறது கொலை குத்தமில்லையா...? போலீஸ் கேசாகிடாதா? டாக்டர் எப்படிடா டீரீட் மெண்டு எடுத்தார் ?“ என்றேன்.
“ டாக்டர் எப்படி வீங்கிச்சுன்னு கேட்டார்...நான் தான் கல்ல தூக்கி போட்டேன்... குடிச்சு அசிங்கப்படுத்துரார்ன்னு சொன்னேன்... அவரு ஒண்ணும் சொல்லாம கட்டு போட்டு விட்டுட்டார்..அப்புறம் தனியா கூப்பிட்டு இனி இப்படி செய்யகூடாதுன்னு சொன்னார்... இனி உங்க அப்பன் குடி பக்கம் தலைய வச்சு கூட படுக்க மாட்டார்ன்னு சொன்னார் ...அது தான் எனக்கு சந்தோசமா இருந்தது “ என்றான்.
“அது சரி உங்கப்பா வேலைக்கு போக மாட்டார்.. சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க... இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.. இனி இப்படி செய்ய கூடாது “
“சார்... அம்மா வேலைக்கு போறாங்க.. சாய்ங்காலம் நானும் அண்ணனும் அப்பளக் கம்பெனிக்குபோவோம் இரவு பதினோரு மணிக்கு தான் வருவோம்.. அந்த வருமானம் போதும் . அப்பா சம்பதிக்கிறது குடிக்கவே பத்தாது... அவரு பாக்கெட்டில் இருந்து திருடினா தான் உண்டு....அது தான் அவரு கொடுக்கிற சம்பளம் ”
“ டேய்... அதான் நீ எப்பவும் தூங்குவது போல் உள்ளாயா?” என அதிர்ச்சி அடைந்தேன். மாணவர்களிடம் இன்னும் புரிதல் தேவைப்படுகிறது. அவர்களுடன் இன்னும் இறங்கி பழக வேண்டும் என்றே தோன்றுகிறது. அவர்களுள் ஒருவனாக தோழனாக மட்டும் இல்லாமல், நம்பிக்கைக்கு உரியவனாக இருக்க வேண்டும் என்பதை உணர்கின்றேன்.
காந்தி சுயசரிதை நோத்து தானே படித்து காட்டினேன். தவறுக்காக மனம் வருந்தினார். சிக்ரெட் குடித்தது, தன் அண்ணணிடம் தங்க காப்பு அறுத்து எடுத்தது.. போன்ற விசயங்களுக்கு மனம் வருந்தினார் இல்லையா.. தந்தையிடம் கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டார் இல்லையா...? நீயும் மன்னிப்பு கேட்க வேண்டும் ”என்றேன்.
தலையை ஆட்டினான். ”குடிக்கலைன்னா அவரு ரெம்ப நல்லவரு.. அவர எனக்கு ரெம்ப பிடிக்கும்” என்ற அவனின் பாசம்.. என்னை திக்குமுக்காட செய்தது. கண்களில் நீர் வடிய காட்டிக் கொள்ளாதவனாக ”இனி யாரும் இந்தமாதிரி கோபம் படக்கூடாது “ என்றேன்.
“ சார்... அவன் கல்லை அப்பா கால்ல போட்டது தப்பு தான்.. சாரயம் விக்கிற அரசாங்கத்து மேலே போடணும்...” என்றான்.
“எப்படி டா... அரசு மேல கல்ல போட்டுறது? “ என்ற சக தோழிக்கு..அவன் சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது. (அவன் நான் கண்ட மாணவர்களில் (20வருட அனுபவத்தில்) மிகவும் வித்தியாசமானவன். அவனைப் பற்றி சுட்டி விகடனில் பேச இருக்கிறேன். அடுத்துஅவனைப்பற்றி தான் எழுத போகிறேன். நீங்களே அவனை பார்க்க வருவீர்கள். )
“ எலக்சன் வருதுல்லா... நம்ம ஓட்ட கல்லா போட்டா போச்சு.. துண்ட காணாம் துணிய காணாம்ன்னு ஓடப்போறாங்க...ஒவ்வொருத்தனும் உங்க அம்மா அப்பா அண்ணன் கிட்ட சொல்லி சாராயத்த ஒழிக்கிற கட்சிக்கு ஓட்டு போட சொல்லுங்க.. தானா சாராயத்தை ஒழிச்சிடலாம் “ என்றான். அதிர்ச்சி உறைந்து போனேன். என்ன முதிர்ச்சி. அவன் கூறிய பதில்கள் நாம்மையே சிந்திக்க செய்கின்றன. இவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்பதில் பெருமை படுகின்றேன். அதிர்ச்சி தொடரும்.....

Friday, March 7, 2014

எம்.ஜி.ஆர் வந்துட்டார்…!


மதுரை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்ததுஎந்த விஐபி வந்தாலும் , தேவர் சிலை அருகில் டிராபிக் மாற்றம் மாறாதஒன்றுஅன்றும் அப்படித்தான்மீனாட்சி கல்லூரி வழியாக பெரியார் நோக்கி செல்லும் பேருந்துகள் மாற்றி விடப்பட்டன.பெரியார்- கோரிப்பாளையம் செல்லும் வண்டிகள் சிம்மக்கல் தரைப்பாளம் வழியாக இராஜாஜி ஆஸ்பத்ரி பின்புறம் வழியாக சிறிய கார்கள், ஆட்டோக்கள், டுவீலர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தது. இனி இராஜாஜி மருத்துவமனை பின்புறம் பயணிப்போம்.
”பெரியம்மா…கால மடக்கு”
“ஏம்பா… என்ன பண்ணப்போற …”
“தேங்காய் உடைக்க போறேன்..”
“அட பாவி முச்சந்தியிலா… தேங்காய் உடைக்க போற…”
“ஆங்… இல்ல உங்க கால பார்த்து உடைக்க போறேன்.. கால மடக்குன்னா… “
”இந்த டிராபிக் வேற.. மாசத்துக்கு இரண்டுதடவ இப்படி மாத்தி விடுறானுக.. இவனுக வேற நிம்மதியா இருக்க விட மாட்றானுக..”
“என்ன பொழம்புற..”
“இருங்கடா..கால …எடுத்துக்குறேன்…”
“இங்கப் பாருடா…முச்சந்தியில தேங்காய் உடைக்க கூட இந்த பெரிசுகள் விட மாட்டீங்கிறாங்க…”
“சரி சரி பேச்ச குறை..வெட்டிய பேசாம தேங்காய உடை…”
தூரத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் தேங்காய் உடைப்பதை பார்த்து ஓடி வருகின்றனர்.
“டேய் சத்தம் போடாம.. சண்டை போடாம பொறுக்குங்கடா…”
ரோட்டில் கும்பல் கூட , டிராபிக் ஜாம் ஏற்பட   தொடங்கியது..
“ஏம்பா…ஆத்து வோற பாதையில போக கூடாதா..”
“யேய் கிழவி.. அந்தபக்கம் தோண்டி போட்டு கிடக்கு..தெரியாத…”என ஆட்டோகாரன் திட்டி நகர்ந்தான்.
முச்சந்தி டீக்கடையில் ஜோரா டீ வியபாரம் நடந்து கொண்டிருந்தது.
“டேய் சுவாமி நாதா.. பில்டர் வில்ஸ் கொடுப்பா…”
“என்ன பாண்டி இந்தபக்கம்…”
“மதுரையில வர வர டிராபிக் பெருகி போச்சு… பஸ், கார் இந்த முச்சந்தி வழியாக மாத்தி விட போறாங்கன்னு … இங்க டூட்டி போட்டுறுக்காங்க…”
”சரி சரி நீ டிராபிக் போலீஸ்ன்னு தெரியும் ..அது என்ன கூட ஒரு பொண்ண கூட்டி வந்திருக்க…”
“டேய்..டேய் சுவாமி நாதா… சத்தமா பேசாதடா… அந்தம்மா காதுல விழப்போகுது… அந்தம்மா. மப்டியில வந்திருக்கிற பெண்போலீஸ்… சத்தமா பேசி காதுல விழுந்தா.. அப்புறம் உன் பெட்டிக்கடை சூரையாடிடும்…”
”யோவ்.. ஏட்டு பாண்டி, என்னய்யா காதக்கடிக்கிற…”
“அட ஒண்ணுமில்லேம்மா…பெட்டிக்கடை சுவாமிநாதன் என் பழைய சிநேகிதன்.உங்கள விசாரிச்சான்…அதான் சொல்லிகிட்டு இருந்தேன்..”
“யோவ்… பெட்டிகடை சுவாமி..உன் நண்பனுக்கு என்ன மாமூல் கொடுக்குறீய்யோ..அத எனக்கும் கொடுக்கணும் …புரிஞ்சுதா..”
“நாசமா போச்சு… அவனுக்கு சாரி… நண்பர் பாண்டி ஏட்டுக்கு பில்டர் வில்ஸ் கொடுத்தேன் ..கலி முத்திபோச்சு..உங்களுக்கும் தரட்டா…”
“யோவ் ..பேச்சை நிறுத்து.. ஏட்டு என்ன உன் நண்பருக்கு வாய் ஓவரா நீளுது..”
“ஏண்டா சுவாமி நாதா… என் ஜீவனை வாங்குற… அம்மாவுக்கு ஒரு பன்னீர் சோடா குடுடா…”
என்று சொல்லியவாரு வண்டிகளை ஒழுங்கு படுத்த கிளம்பினான். நாலு அடி தள்ளி வண்டிகளை ஒன்றுக்கு பின் ஒன்றாக செல்ல சொன்னான்.
பன்னீர் சோடாவை போலீஸ்கார பெண்மணியிடம் கொடுத்தான், சுவாமிநாதன்.
“யேவ் பெட்டிக்கடை..உன் பன்னீர் சோடா நல்லாதான்யா இருக்கு…”
“அம்மா கொஞ்சம் உட்காருங்க…..”
“நான் உட்கார்ந்து ரெம்ப வருசமாச்சு… நீ ஒண்ணும் குச்சு கட்ட வரவேணாம்…”
“என்னம்மா நான் ஒண்னு சொன்னா..நீங்க ஒண்ணு சொல்லுறீங்க..குண்டக்க மண்டக்கா பேசுறீங்க.. சேர் கொண்டுவந்து போடுறேன்னு சொன்னேன்…”
  ”சேர் மட்டும் போடு..என்னை சேர் பண்ணணும்ன்னு நினைக்காத ..அப்புறம் அறுத்து புடுவேன்.. “ என சொல்லி எதிரில் வந்த காரை நிறுத்தினாள்.
“பட்டத்து ராணி பார்வை…” என ரேடியோவில் பாட்டை ஆன் செய்த …கடைபையனிடம்,
“டேய் பாட்டை நிறுத்துடா… அதற்கும் அந்த அம்மா கோச்சுக்க போகுது…”
”யேவ் ஏட்டு…என்ன டிராபிக் கவனிக்கிற அங்க பாரு …கார்காரன் முந்தி வந்திகிட்டு இருக்கான்..இந்த குறுகிய சந்தில…இவ்வளவு வேகமாவா வற்ரது… நிறுத்து…”
“டேய்…வண்டிய நிப்பாட்டு… சின்ன சந்தில..இவ்வளவு வேகமாவா வருவே…என்ன குடிச்சுருக்கீயா..எங்க வாய ஊதிக்காட்டு…”
ஊதுகிறான்.
“சரி போ… மெதுவா போ…”
“வாய மட்டும் ஊதிகாட்ட சொன்னான்… நல்லவேளை காரை சோதனைப்போடலை…தப்பிச்சோம்…என்னய்யா நான் சொல்றது..”
“டேய் மாங்கா மடையா.. அரைவேக்காடு..பேசாம …காரை ஓட்டு ..எதையாவது பேசி மாட்டிவிட்டுறாத…”
அடுத்து வந்த காரை ஏட்டு பாண்டி துருவி துருவி சோதனை போட்டு கொண்டு இருந்தான்.
“யோவ் அப்படி என்னத்தய்யா பார்க்கிற… சந்தேகமா இருந்த வண்டிய… ஊத சொல்லி அனுப்பிட்ட.. இந்த வண்டிய ..துருவி துருவி சோதனை போடுற…”
”இல்லம்மா..இவன் தான் வேகமா வந்தான்..அதான் என்ன அவசரம்ன்னு செக் பண்ணிகிட்டு இருக்கேன்..”
“டிராபிக் ஜாம் ஏற்பட்டுகிட்டு இருக்கு.. வண்டிய ஓரமா போட்டு செக் பண்ணு…”
வண்டியில் இருந்து இறங்கிய பணக்கார மனிதர்,”யோவ்.. டிரைவர் ..இவ்வளவு டிராபிக்.. ஹாரன் சத்தம்.. எந்த கவலையும் இல்லாம..ரோட்டில் படுத்து உறங்கிற ஜனத்த பார்த்தியா…அங்க பாரு ரோட்டிலேயே குளிக்கிறான்..அட சாக்கடை பக்கத்துல..இடியாப்பம் தீங்கிறான்…எந்த கவலையும் இருக்கிற மாதிரி தெரியலைய்யே..”
“அய்யா … வண்டிய செக்பண்ணியவுடன் ஓரமா போட்டு வர்றேன்.. அந்த டீக்கடைகிட்ட நில்லுங்க…”
டீக்கடைக்காரனிடம் காரில் இருந்து இறங்கிய மனிதன்
“இந்த ஜனங்க.. எந்த கவலையும் இருக்கிற மாதிரி தெரியலையே… கொடுத்து வச்சவங்க...”
“அய்யா அப்படி சொல்ல முடியாது.. இருப்பதை கொண்டு திருப்தி அடைஞ்சவங்க.. இன்று என்ன என்பதை மட்டும் பார்த்து வாழ்றவங்க…அதனால் கவலை மறந்து வாழ்றாங்க…”
“அய்யா வண்டி செக்பண்ணிட்டாங்க.. எடுத்து வரவா..”
”இல்ல வேண்டாம்… இந்த ஜனங்களை வேடிக்க பார்க்கணும் போல இருக்கு…வண்டி ஓரமா தானே நிக்குது…”
“யோவ் …வண்டிய ஓரமா நிற்பாட்டி …என்னத்தய்யா டீக்கடையில செய்யுற…”
“சார்…எங்க முதலாளிக்கு இந்த குடிசை மக்கள பார்க்கணும் போல இருக்காம்…”
“அதுசரி..எத வேடிக்க பார்க்கணும்ன்னு விவஸ்தை இல்லை… டிராபிக் ஆகிறதுக்குல்லா எடுத்துடு..”
“டிரைவர்..அங்க இருக்கிற கிழவிக்கு என்ன வேண்டும்ன்னு கேளு…ரோட்டில..கார் போனாலும் வண்டி போனாலும் கவலைப்படாம பேட் பிடித்து விளையாடுற பசங்களுக்கு என்ன வேண்டும்ன்னு கேட்டு இந்த கடையில இருக்கிறத வாங்கி கொடு..”
“ என்ன சார்.. ஏழைகளுக்கு உதவணும்ன்னு மனசு இருக்கு..எதாவது பக்கத்தில ஓட்டலுக்கு போய் சாப்பாடு வாங்கி போடுங்க…”என்றான் ஏட்டு பாண்டி.
“யேவ் ஏட்டு என் பொழப்ப கெடுக்காதீய்யா.. மவராசன் என் கடையில் விக்கிற பொருள்களை வாங்க சொல்லியிருக்காஙக்.. நீஎன்னடான்னா..இதான்யா போலீஸ்காரன் சவகாசம் கூடாதுன்னு சொல்றாங்க…”
“டேய் சுவாமி நாதா.. கோச்சுக்காத…”
“இல்ல ஏட்டய்யா.. எதோ சின்ன பசங்கள பார்த்தவுடன் வாங்கி கொடுக்கணும்ன்னு தோணுச்சு… கிழவிகள பார்த்ததும் எங்க அப்பாயி நினைப்பு வந்திருச்சு.. அதான்…”
“என்ன டிரைவர் மொத்தம் எத்தனை பேர் இருப்பாங்க…”
“அய்யா.. சின்ன பசங்க… 30 பேர் இருப்பானுக..கிழவிக இந்த கடைசியில இருந்து அந்த கடைசி வரைக்கும் 16 பேர் தெருவில உட்கார்ந்து இருக்காங்க…”
“இந்த பெட்டிக்கடையில விற்கிற இனிப்பு, முறுக்கு ,ரொட்டி என எல்லாத்தையும் வாங்கி கொடு…”
டிரைவர் பசங்கள அழைக்க… அனைவரும் ஓடி வந்தனர். பெட்டிக்கடையில் கூட்டம் கூடியது.
“இருங்க..எல்லாருக்கும் உண்டு..வரிசையா வாங்கிகங்க…”
“டேய் சுவாமி நாதா.. எல்லா பொருளும் நல்ல பொருள்தானே…சின்ன சிறுசுக.. கிழடு கெட்டைக..சாப்பிடுறது..எதாவது ஏட கூடமா ஆயிடப்போகுது..நான் வேற டூட்டியில ஸ்பாட்ல இருக்கேன்…”
“எல்லாம் நல்ல சரக்குதான்…கவலைப்படாதே பாண்டி”
கூட்டத்தைப் பார்த்து வந்த போலீஸ்காரம்மாவிடம்,
“அம்மா..அதிகாரி அம்மா…அய்யா கணக்குல… உங்களுக்கு பன்னீர் சோடா தரட்டா… “
“வாங்கிகங்க..மேடம்…”
“ஐயா மகராசன்… நல்லா இருக்கணும்…யாரு எம்.ஜி.ஆரா வந்திருக்காக…அவரு தான் என்ன மாதிரி கிழவிகளையும் ஏழை ஜனங்களையும் பார்த்தா எதையாவது செய்யணும்ன்னு தோணும்…”
“யாரவது எதாவது கொடுத்த எம்.ஜி.ஆர்ன்னு சொல்லுவியா..போ..கிழவி போ…”
என ஏட்டு பாண்டி அதட்டினார்
இவரின் வண்டிக்கருகில் மெதுவாக ஒரு கார் ஒதுங்கியது.
“யோவ் ஏட்டு.. பார்த்தியா..அப்பவே சொன்னேன்… அங்க வண்டிய பார்க் பண்ண விடாதேன்னு… இப்ப பாரு இன்னோரு வண்டி.. அந்த வண்டி பின்னாடி பார்க் ஆகுது…”
“யேவ் வண்டிய எடு…”
”இல்லீங்க.. இந்த வண்டி எங்க அய்யா வண்டி..அதான் நிற்ப்பாட்டினோம்..”
“அதோ அங்க நிக்கிறார்.. வண்டிய ஓரமா போடு…”
“இல்லீங்க..அய்யா..மகள் பிரசவ வலியால துடிக்கிறாங்க.. ஆஸ்பத்ரிக்கு போகணும்… ரூட் மாத்தி விட்டுறுக்கிறதால சிக்கிரம் போக முடியல.. உதவுங்க..அய்யாவையும் கூட்டிகிட்டு போயிடுறோம்..”
“மகராச உன் மகளுக்கு சுக பிரசவம் ஆகும்.. நீ போய் பிள்ளைய பாருய்யா… மகளுக்கு நல்லபடியா பிரசவம் ஆகட்டும் அப்புறம் வந்து எங்கள பாருய்யா…”
”அய்யா மவளுக்கு பிரசவ வலி வந்துடுச்சுன்னு சொல்லி டாக்டர ரெடியா இருக்க சொல்ல போறப்பா தான் .. உங்கள பார்த்துட்டு அப்படியே நிண்ணுட்டாரு…”
“அப்படியா சங்கதி… ஏன் துரை..எலெக்சன்லா. நிக்க போறிய்யா… கண்டிப்பா நீ எந்த கட்சியில நின்னாலும் நாங்க ஓட்டு போடுறோம்…உங்க மகளை ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போங்க…”
”இல்லை…டிரைவர் நீங்க போங்க.. பிரசவம் ஆனவுடன் போன் பண்ணுங்க… இவங்களோட செத்த இருந்துட்டு வர்றேன்…”
வண்டி கிளம்பியது.
”அம்மா தாய்மாரே … நான் ஓட்டு கேட்டு வரல..உங்க வாழ்க்கை முறை என்ன பாதிச்சிடுச்சு… எதுவும் இல்லாட்டினாலும் முகத்தில் ஒரு சந்தோசத்தை பார்த்து நிண்ணுட்டேன்…இது உங்களுக்கு பழகி இருக்கலாம்…எனக்கு இந்த நிலையான சந்தோசம் புதுசா இருக்கு…”
“என்னங்க சாமி.. எங்கள பார்த்து சந்தோசப்படுறீக..நாங்க சந்தோச முகத்தோட இருக்கோம்ன்னு சொல்லுறீங்க…”
“உங்கள பார்த்து பிரமிச்சு போயிட்டேன்… இப்படி நான் ஒருநாளும் இருந்தது இல்லை…”
“ஆண்டவன் புண்ணியத்தில எந்த கஷ்டமும் இல்ல சாமி…விடலை பயலுக..வெள்ளையடிக்க.. கட்டிட வேலைக்கு போறானுக… பொம்பளை பிள்ளைக.. பெரிய வீட்டில பத்து பாத்திரம் தேச்சு..அங்க இருக்கிற மிச்சம் மீதியை கொண்டு வரும்…அத அப்படியே சாப்பிட்டு பொழுத கழிச்சுடுவோம்..எந்த குறையும் இல்ல…”
“சரி உங்களுக்கு எதாவது செய்தாகணுமே…”
“சாமி சொன்னா கோபிச்சுக்கபாடாது.. காலை 11.30 ஆகுது… மதியம் சாப்பாட்டுக்கு எதாவது வாங்கி வர சொல்றீய்யா…”
“ஏய் கிழவி சும்மா இரு… சார் தப்பா நினைக்க போறார்…”
“சும்மா சொல்லுங்க..இதில் தப்பு என்ன இருக்குது….ஒண்ணுமில்லை.. எத்தனை சாப்பாடு வாங்கி வர சொல்ல…”
“சாமி.. வெட்கமா இருக்கு .. சொல்லவா வேணாமா…”
“இதில் என்ன வெட்கம் சொல்லுங்க.. எங்க ஜனங்க எல்லோருக்கும் கோழி பிரியாணி வாங்கி தர முடியுமா..” என்று வெட்கி சிரித்த கிழவியின் கையை பிடித்து ,”அவசியம்” என்றார்.
“டிரைவர்..எல்லோருக்கும் அம்சவள்ளியில கோழி பிரியாணி சொல்லு… “
“எத்தனை…”
“மொத்தம் 300 பேரு தெருவில இருப்போம் சாமி…சின்ன பயலுக.. பெரியவங்க.. கிழவிக எல்லாத்தையும் சேர்த்துட்டேன் சாமி”
கைதொலைபேசியில் அவர் பல ஹோட்டல்களுக்கு பிரியாணி ஆர்டர் கொடுக்க… அனைவரும் அவரை ஆவென அவரை பார்த்தனர்.
12.30க்கு பிரியாணி வந்தது. பிரியாணியுடன் மினரல் வாட்டர் பாட்டிலும் வந்தது.
”அப்ப நான் கிளம்புறேன்..”
”சாமி.. அது எப்படி ..நீங்களும் எங்களோட உட்கார்ந்து சாப்பிடணும்…”
“நான் எனக்கு சாப்பாடு வாங்க சொல்லவில்லையே…”
“அதனால என்ன சாமி.. எங்க பொட்டலத்தில இருந்து ஆளுக்கு ஒரு கை தருகிறோம்..சாப்பிடுங்க..”
காரில் வந்த பெரியவர் அவர்களுடன் கலங்கிய கண்களுடன் அமர்ந்து சாப்பிட்டு சென்றார்.
“அய்யா.. சாமி..உனக்கு பேரன் பிறந்து இருப்பான்.. சுகப்பிரசவம் ஆகியிருக்கும்..கவலைப்படாம போ…” என்ற முதியவரின் வார்த்தையை கேட்டு சிரித்தபடி காரில் சென்றார்.
“யோவ் சாமிநாதா என்னாய்யா ஆச்சு..இன்னிக்கு நல்ல மனசு காரன்கள பார்க்க முடியுது…”
“ஆமாம் பாண்டி… இன்னிக்கு எம்.ஜி.ஆர் பிறந்த நாள்… அந்த மவராசன் மேலே இருந்து …நல்ல மனசு காரங்கள அனுப்புகிறார் போல… ”
ரேடியோவை ஆன் செய்தான். உரிமைக்குரல் படத்திலிருந்து எம்.ஜி.ஆர் பாடல் பாடிக்கொண்டு இருந்தது.
 ( இக்கதை என் நண்பர் சுரேந்திரபாபு எழுதியது. அதை என் எழுத்துக்களில் செம்மைப்படுத்தியுள்ளேன். அவர் எம்ஜிஆர் ரசிகர். அவரை வாழ்த்தலாம். வாருங்கள்.)
-மதுரை சரவணன்.

Saturday, February 15, 2014

காதலர்கள் படிக்க கூடாத சிறுகதை

கொலை வெறி - சிறுகதை.
-------------------------------------
பிப்ரவரி என்றாலே காதலர்களுக்கு கொண்டாட்டம். காதலிப்பவர்களை பார்பவர்களுக்கும் திருவிழா தான். பலருக்கு காதல் தோன்றினாலும் சமூக அந்தஸ்து கருதி, நல்ல பிள்ளை என்ற பெயர் வேண்டும் என்பதற்காக தம் காதலை மறைத்தே வைத்திருக்கின்றனர். வீட்டிலும் அப்படிபட்ட சூழலே நிலவுகிறது . இதில் தவறு ஒன்றுமில்லை. எல்லோரும் குடும்ப கட்டமைப்புக்குள் கட்டுப்பட்டவர்கள் தான். சிலர் விதிவிலக்கு. காதலிப்பவர்களை தவறானவர்கள் எனவும் சொல்லக்கூடாது. காதல் கவிதை எழுதினாலே கீழ்பாக்கமும் , இரத்தினா ஆஸ்பத்திரிக்கு போ என்று சொல்லும் சமூகத்தில் தான் வாழ்கின்றோம். முருகன் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் வாழ்பவன். முருகனைப் பொறுத்தவரை குடும்பக்கட்டுப்பாடு, நல்ல பிள்ளை, சமுக அந்தஸ்து என்ற சிக்கல் எல்லாம் இல்லை. அவனுக்கு இருக்கும் பிரச்சனை வேறு. காதலி கிடைப்பது தான் அவனின் ஒரே சிக்கல். அவனும் ஆள் மாற்றி ஆள் காதலிக்கவே முயற்சி செய்கின்றான். ஆனால் எதுவும் ஓர்க் அவுட் ஆனதில்லை. வரும் பிப்ரவரியிலாவது லவ் யு சொல்லி தன் காதலை ஏற்க செய்திட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். இதோ முருகன் வீட்டை விட்டு கிளம்பிவிட்டான். அவனை தொடர்வோம். 

பஸ் ஸ்டாப்பில் எப்போதும் போல கூட்டம் அதிகமாயிருந்தது. 

இந்த கூட்டத்தில் தானே தொடர்ந்து நான்கு வருடங்களாக முயற்சி செய்கிறோம். நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது. சுந்தரபாண்டி படம் போல,இவன் பார்க்கும் எல்லா பெண்களும் இவனுகு பின்னால் முன்னால் இருப்பவர்களுக்கு செட் ஆகி விடுகிறார்கள் . எப்படியும் ஒரு பெண்ணையாவது காதலித்து திருமணம் செய்திட வேண்டும் என்ற இலட்சயத்துடன் நடந்தான். அவன் அதிர்ஷ்டம், இன்று ஆரஞ்சு கலர் சுடிதார் அவனை பார்த்து சிரிப்பதை கண்டான். முன்னெச்சரிக்கையாக தன்னை தான் பார்த்து சிரிக்கிறாளா என முன்னும் பின்னும் செக் செய்து கொண்டான். 

அவள் அவனை இப்போது நெருங்கி வந்தாள். அவன் மனதில் இளையராஜாவில் ஆரம்பித்து ஏ ஆர் ரஹ்மான் வரை உள்ள இசையமைப்பாளர்கள் காதல் வயலின் வாசிக்க ஆரம்பித்தார்கள். அவள் அவன் சந்திப்பு எட்டு அடியில் முடிந்துவிடும். ஆனால் அவனுள் அதற்குள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள எண்ணூறு காதல் ஹிட் பாடல்களும் இசைக்கப்பட்டு விட்டது. இப்போது முருகன் முருகனாய் இல்லை. நாம் நாமாக இல்லாத தருணங்கள் அற்புதமானவை. யாருக்கு வாய்க்கும்! அது இப்போது முருகனுக்கு வாய்த்திருந்தது. காதலித்து பாருங்கள் . நீங்களும் உங்களை மறக்க கூடும் . இந்த மயக்க நிலை மட்டும் தான் தாய் , தந்தை, உற்றார், உறவினர் என எல்லோரையும் மறக்க செய்கிறது. இந்த மயக்கம் தான் எல்லாவற்றையும் உதறி தள்ளி ஓடச்செய்கிறது. காதலித்தவர்கள் அறிவார்கள். இது என்னுடைய வார்த்தை அல்ல. இது முருகன் எல்லோருக்கும் சொல்லும் வார்த்தை. காதல் வயப்படும் தருணம் உணர உங்களை பெண்கள் நெருங்கி வரும் போது உணரலாம் என்பான். 

நெருங்கி வந்தவள், ”நீங்கள் முருகன் தானே !” என்றாள். இப்போது அவனுக்கு அவன் பெயர் பிடித்திருந்தது. ஏன் பிடிக்கவில்லை? பல சமயங்களில் அவன் தன் பெயரை உச்சரிக்கும் போது இப்படி அலுத்துக்கொள்வதுண்டு. “எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஒரு பொண்ணு கூடா ஏறெடுத்து திரும்பி பார்க்க மாட்டேன்கிறாள். சாமி பெயராம். அந்த சாமி முருகனுக்கு கூட ரெண்டு பொண்ணுங்க ..இந்த சைடில் ஒண்ணு அந்த சைடில் ஒண்ணு ..நமக்கு பெயர் வைத்த ராசி ஒண்ணு கூட அமைய மாட்டீங்குது. இதுவரை ஓராயிரம் பொண்ணுகளுக்கு காதல் கடிதம் எழுதியிருக்கிறேன் . ஒண்ணும் செட் ஆக மாட்டீங்குதே...பெயரை பாரு முருகனாம் முருகன்...!”

இரவு வானத்தின் தெளிந்த நிலா...! 
மஞ்சள் வர்ணம் பூசி வருகிறது ! 
நெஞ்சம் கிள்ளி ,துள்ளி வருகிறது ! 
என் பெயர் உச்சரிக்கும் போது 
உன் பெயர் கேட்டு நச்சரிக்கிறது மனது!
என மனதினுள்ளே கவிதை சொல்ல ஆரம்பித்தான். அவள் நெருங்கி விட்டாள். மீண்டும் நீங்கள் தானே முருகன் ! என்றாள். ப்லோரசண்ட் சிரிப்பில் ஆமாம் என்றான். அவன் நெஞ்சுக்குள் அத்தனை பல்புகளும் பிரகாசமாய் எரிந்தன. திரிக்‌ஷா, நயன்தாரா, இலியானா என அத்தனை அழகு நட்சத்திரங்களையும் சேர்த்து செய்த கலவையாக தெரிந்தாள். 

நானே தான் முருகன் என்று திருவிளையாடல் நாகேஷ் போல் வேகவேகமாக பதில் சொன்னான். “அதில் என்ன சந்தேகம் !”என்றான். “நீங்க தப்பா நினைக்க மாட்டீங்கன்னா
? ” என்று இழுத்தாள். “நீங்க சொல்லாட்டா தான் தப்பா நினைப்பேன்” என்றான். 

அது வந்து... என இழுத்தவளை , பரவாயில்லை , சொல்ல வந்ததை டக்குன்னு சொல்லிடணும் என்று தூண்டினான். ”காதலுக்கு டைமிங்க் தேவையில்லை. டைம்மிங் காமடிக்கு தான் தேவை . ட்டைம்மிங்க் எதிர்பார்த்தால் காதல் காமடி ஆயிடும். டீ கிளாஸ் இந்த கையிலிருந்து அந்த கைக்கு மாத்திடும் நேரத்தில் காதல் சொல்லாட்டி மாறிடும் “ என்பான். சொல்லிட்டாளே என்ற கும்கி பாடலை யானை மீது ஏறி பாடுவதாக அவன் மனசு கனவு கண்டது. அவள் இன்னும் எதுவும் சொல்லவில்லை. கனவில் மிதக்கும் அவனை ஏற இறங்க பார்த்தாள். 

அவன் கண்கள் பிரகாசமாகின. பிப்ரவரி பிப்ரவரி தான் என்று முணுமுணுத்தான். என்ன ? என்றாள் . பிப்ரவரி காதலர்களுக்கான மாதம் என்றான். அவள் நானும் அதை தான் சொல்லவந்தேன் என்றாள். “ எனக்கு அப்பவே தெரியும் ...நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னா ...” என தன் முடிகளை கோதிவிட்டு ஸ்டைலா கேட்டான். 
மாவீரன் படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் காஜல் அகர்வால் விரல்களை தொட்டுக்கொள்ளும் போது ஏற்படும் மின்னல் போன்ற உணர்வுகள் வேகமாக பயணித்த பேருந்தினால் ஏற்பட்ட காற்றில் ,அவள் துப்பட்ட அவனை உரசியபோது உணர்ந்தான். அவள் பேச தொடங்கினாள். ராம் சரண் தேஜா போல குதிரையில் துரத்தினான். அவம் கனவில் அவள் பேருந்தில் சென்று கொண்டிருந்தாள். 

”என்ன கனவா ? “என்றவளிடம், ”இல்லை ” என்றான். 
“ இருந்தாலும் நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே” என்றாள். “ இதில என்னங்க தப்பு இருக்கு? மனச ஏமாத்திடக்கூடாதுங்க...! ” என்றான். மனம் இப்போது எதையோ சாதித்தது போல உணர்வில் தலையை ஆட்டிக் கொண்டான். “நான் கடந்த நான்கு மாதமா வாட்ச் பண்ணுகிறேன்” என்றாள் . ”நான் உங்கள கடந்த எட்டு மாதமா பார்க்கிறேன்” என்றான். “தெரியும்”. இப்பவும் கேட்கிறேன் தப்பா நினைக்க மாட்டீங்களே” என்றாள். அட சொல்லுங்க...! என்றான். தமிழ் சினிமாவின் காதல் பாடல்களின் இசை அவன் மனதில் எப்போதையும் விட கூடுதலாக இசைக்க தொடங்கியது. 

”நானும் உங்கள மாதிரி தான் மனச ஏமாற்ற மாட்டேன்” என்றாள். அவன் இப்போது மௌனமாக இருந்தான். எல்லா இசையும் இப்போது பின்நவீன இசையாக நின்று போயிருந்தது. எல்லா ஓசைகளும் அவனுக்கு மட்டும் கேட்கவில்லை. இப்போது அவள் குரல் மட்டுமே கேட்டுக் கொண்டு இருந்தது. ”என்ன பேசாம நிக்கிறீங்க ”என்றாள். ”நீங்க பேசுங்க.. கேட்டுகிட்டே இருக்கணும்ன்னு தோணுச்சு” என்றான். அவள் அவனை பார்த்து சிரித்து கேட்டாள், “நீங்க எப்பவும் இப்படி தானே என்று!”. அவன் சிரித்தான். குதிரையில் துப்பட்டாவை சுழற்றி சென்றான். 

”அய்யோ பஸ் வந்திருச்சு...” கனவு கண்ட அவன் , ஆமாம் பஸ் போகுது என்றான். ”முருகன் நான் சொல்றது கேட்குதா..” ” கேட்குது, சொல்லுங்க “ என சுயநினைவு வந்தவனாக கூறினான். அப்போது அவள் அவனிடம் இருந்து நாலடி தள்ளி சென்று கொண்டிருந்தாள். ”பிளீஸ் சொல்லுங்க” என கெஞ்ச ஆரம்பித்தான். “ பிப்ரவரி 14 க்கு என் காதலை ப்ரப்போஸ் செய்யணும் .. அதனால் என் காதலனுக்கு கொடுக்கிற மாதிரி செம கவிதை ஒண்ணு எழுதி தர முடியுமா?” என்றாள் .
பேருந்தின் ஹாரன் ஒலி அவன் கேட்காமலே அவன் காதில் இரைந்தது. செவிடான உணர்வு. எல்லா இசை கலைஞர்களும் அவனை விட்டு பிரிந்து சென்று கொண்டிருந்தனர். 

வேகமாக பேருந்தில் ஏறியவள் , ”இன்னும் இரண்டு மூணு நாளில் கொடுத்துடுங்க முருகன் அண்ணா” என்றாள். 
அவன் காதுகளை பொத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்தான். முடியவில்லை. அருகில் வந்த ஆட்டோவில் தனுஷ் குரல் கொடுக்க அனிரூத் இசைத்து கொண்டிருந்தார்,” ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டீ...!”

மதுரை சரவணன்.

வெற்றி பெறுவது எப்படி? அது காதலாக கூட இருக்கலாம்.

      14-2-2014 வெள்ளி அன்று மிகவும் ஆனந்தமாக மகிழ்ச்சியாக இருந்தேன். காரணம் நீங்கள் எதிர்பார்க்கும் காதல் தான். ஆனால் பெண்ணின் மீது அல்ல. நான் விரும்பி பார்க்கும் ஆசிரியர் பணி மீதான காதல். என் வகுப்பறையில் நான் படிக்கும் தீரா நதி, காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, காக்கை சிறகினிலே போன்ற இதழ்கள் இருக்கும். மாணவர்கள் காலை, உணவு இடைவேளை, மாலை என ஓய்வு நேரங்களில் படிப்பர். நான் புத்தகங்களை எடுத்து கையில் வைத்தாலே மகிழ்ச்சி கொள்வேன். என் வகுப்பறை முழுவதும் புத்தகங்களால் நிரப்ப ஆசை. என் இருக்கையின் அருகில் பெஞ்ச் ஒன்று இருக்கும். அதில் சிறுவர் வார இதழ்கள், மாத இதழ்கள், கவிதை, கட்டுரை, கதை, திருக்குறள், நன்னூல், நன்னெறி, சுய சரிதை என பல புத்தகங்கள் இருக்கும். என்னை பார்க்க வரும் அதிகாரி , குப்பையா வைத்திருக்கீறீர்கள் கொஞ்சம் நீட் செய்தால் என்ன ? என்பார். நான் சரி செய்கின்றேன் என உறுதி அளிப்பேன். ஆனால் மாணவர்கள் புத்தகங்களை வாசிக்க ஏதுவாக பரப்பியே வைத்திருப்பேன்.

       வகுப்பறையில் படிக்கும் பாடப்புத்தகங்கள் தகவலை மட்டும் தருபவை, நூலகம் சென்று விரும்பிய நூல்கள் படிக்க சொல்வேன். நூல் வாசிப்பு தான் நிரம்பிய அறிவு , ஆழ்ந்த புரிதலை தரும் என்பேன். வாசிப்பு மனிதனை முழுமையடைய செய்யும். வாசிப்பு மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புத்தகங்கள் நமக்கு எப்போதும் துணையிருக்கும் நண்பர்கள் என அடுக்குவேன். அவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள நூலகங்கள் குறித்து தகவல் தருவேன். சனி ஞாயிறு விடுமுறை, மாலை வீடு செல்லும் முன் நூலகம் செல்ல அறிவுறுத்துவேன். ஞாயிறு விடுமுறைக்கு பின் யார் நூலகம் சென்றது என்று கேட்பேன். பெண்களில் பலர் எங்க அப்பா கூட்டிகிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டார் என்பார்கள். மாணவர்களில் சிலர் நூலகம் எங்கிருக்கு தெரியவில்லை என்பார்கள். மீண்டும் அட்ரஸ் சொல்ல வேண்டும். சிலர் போகாமல் படித்தேன் என்பார்கள். எல்லா பதில்களுக்கும் குட் என்பேன். அடுத்தவாரம் நூலகம் சென்று படித்து வா என்பேன். இப்படி நாட்கள் நீளும்.

காந்தி மீயுசியம் சென்றால் அங்குள்ள நூலகம் அழைத்து செல்வேன். வாட்ச் மேன்,” சார் அங்க போக கூடாது .சத்தம் போடுவாங்க..மத்தவங்க படிப்பு கெட்டு போகும் ”என்பார். நான் இருந்தாலும் அழைத்து செல்வேன்.என் வகுப்பில் பலர் ஊரகப் பகுதியில் இருந்து வருவதால் , அப்பகுதி ஊரக நூலகங்கள் விபரம் தந்து , செல்ல வற்புறுத்துவேன். ஊரக நூலகங்கள் பல சமயங்கள் திறக்க வாய்ப்பு இல்லை. கட்டாயம் சனி, ஞாயிறுகளில் இயங்குவதை பார்த்திருக்கின்றேன். நான் குடியிருக்கும் பகுதியில் , தபால் தந்தி நகர் விரிவாகத்தில் செயிண்ட் மைக்கேல் பள்ளி வாட்டர் டேங்க் அருகில் நூலகம் இருக்கிறது. நான் படிக்க சென்ற போது , அங்கு லைப்ரேரியனாக உள்ள பெரியவர், ”சார் நீங்க படித்த வார இதழ் இருந்தா லைப்ரேரிக்கு தாங்க” என்றார். எப்படியாவது நூலகத்தில் மக்களை படிக்க வைக்க வேண்டும் என்ற உறுதிப்பாடுடைய நூலக அதிகாரிகள் இருக்க தான் செய்கின்றார்கள். ”புத்தகங்கள் வாசிப்பு என மாணவர்களிடம் ஆகாதது போகாதது சொல்லி பொழுது கழிப்பான். எப்ப பாரு ஒரு கதையை சொல்வான். புள்ளைக்கு தேவையில்லாத விசயத்தை சொல்வான் “ என்ற பெயர் தான் எனக்கு உண்டு. என்னிடம் படித்த மாணவர்கள் சாட்சி. 

ஐந்தாவது படிக்கும் மாணவன் நூலகம் செல்வானா? அதுவும் மெம்பர் ஆகி, புத்தகம் எடுத்து படிப்பானா? நூலகம் சென்று தான் படிக்கும் புத்தகத்தில் இருந்து குறிப்புகள் எடுப்பானா? நூலகத்திலிருந்து வர சாத்தியம் உண்டா? போன்ற கேள்விகளுக்கு, என் இரண்டு மாணவர்கள் சாட்சி. சுவர் சொல்லும் வரலாறு என்ற பாடம் எடுத்த போது , எப் ஏ பிராஜகெட் ஆக நான் செஞ்சிக்கோட்டை பற்றி தகவல்களை சேகரித்து வர சொன்னேன். தேவதர்ஷினி என்ற மாணவி, சார் நான் செல்போனில் இருந்து தகவல்களை கொண்டு வ்ந்துள்ளேன் என்றாள். ஆங்கிலத்தில் செல்போன் பயன்பாடு குறித்து விளக்கியதன் விளைவு. இரண்டு முழுத்தாள்களில் செய்தி கொண்டு வந்திருந்தாள். மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது கார்த்தி சார் நான் லைப்ரேரி போய் புக்கு எடுத்தேன் சார், கல் சொல்லும் கதை என்று இருந்தது. அதில் படித்தேன் . எல்லா கோயில்கள் பற்றி போட்டிருந்துச்சு என்றான். சபாஷ் என்றேன். காகிதத்தில் குறிப்புகள். ஆச்சரியம். என்னை நானே பாராட்டிகொண்டேன். வானில் பறந்தேன். சாதித்தவனாக உணர்ந்தேன். அருகில் இருந்த மணிப்பாண்டி கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்திருந்தான். சார் நானும் தேடினேன் . கிடைக்கவில்லை. அவன் வைத்துள்ள புத்தக தலைப்பு தன்னம்பிக்கை. சபாஷ். அனைவரையும் கைதட்ட சொன்னேன். கார்த்திக் நானும் வீட்டில் புத்தகம் எடுத்து வைத்துள்ளேன் என்றான். 30 கட்டணம் கட்டணும் என்று பிற மாணவர்களுக்கு லைப்ரேரி மெம்பர் ஆவது குறித்து சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு தன்னம்பிக்கை அதிகரித்து இருந்தது. 

இத்தனை நாள் புலம்பல் நிறைவேறிய சந்தோசம். உண்மையில் என் காதலுக்கு கிடைத்த வெற்றி. இப்போது ஆசிரிய பணியை இன்னும் கூடுதலாக காதலிக்கின்றேன். காதல் உண்மையாக இருப்பின் வெற்றி நிச்சயம் என்பதற்கு இதை தவிர வேறு உதாரணம் சொல்ல முடியாது. 

இந்த மாலைவேளையில் என் மாணவர்களில் எவனாவது ஒருவன் மதுரையில் இருக்கும் எதாவதொரு நூலகத்தில் எதாவது ஒரு மூலையில் அமைதியாய் படித்து கொண்டிருப்பான். குறிப்பெடுட்து கொண்டிருப்பான். இந்த நம்பிக்கை தான் என்னை வழி நடத்துகிறது.

Thursday, February 13, 2014

காதலிப்பவர்கள் தூக்கில் தொங்க வேண்டியதில்லை...!

காலை பிரார்த்தனை கூட்டம் முடிந்து, எப்போதும் போல் தன்னம்பிக்கை விதையை தூவ ஆரம்பித்தேன். 

பிரச்சனையில் இருந்து நழுவுதல் தவறு என்பது என் கான்சப்டாக இருந்தது. எஸ்கேபிசம் தவறு என்று கதை சொல்ல ஆரம்பித்தேன். வாசிக்க வரவில்லை, எழுத தெரியவில்லை என வாசிப்பதிலும் , எழுதுவதிலும் இருந்து நழுவுதல் என்பது நம்மை நாமே ஏமாற்றுவது, நாம் கொண்ட குறிக்கோள்(டாக்டர், இஞ்சினியர், ஐஏஎஸ், ஐபிஎஸ்) தோல்வியில் முடிய காரணமாகிவிடும் . சில சமயம் நம் குறிக்கோள் மீது வெறுப்பை ஏற்படுத்தி, கோபத்தை உண்டாக்கும். கோபம் பொல்லாதது என்றேன். என் வகுப்பில் பயிலும் கார்த்தி,” சார் ,எங்க வீட்டு பக்கம் இப்படி தான் சார் ஒரு அண்ணம் தோத்துவிடுவோம்... என்று தூக்கு போட்டு கொண்டார்” என்றான். எதுக்குடா என அருகில் இருந்த அய்யப்பன் கேட்டான்.

” அந்த அண்ணன் ஒரு பிள்ளைய காதலித்தாங்க. அவுங்க அம்மா , அவுங்க அண்ணன் பெண்ணை கட்டிக்க சொன்னாங்க. அவுங்களுக்கு பிடிக்கல. அதுக்காக அந்த அண்ணன் சண்டை போட்டிருக்காங்க. ஆனா அவுங்க அம்மா ஒத்துக்கல. கட்டின அண்ணன் பொண்ணத் தான் கட்டணும் இல்லை செத்து போன்னு சொல்லியிருக்கு. அவுங்க மாமாவும் தன் பெண்ணை கட்டிக்க சொல்லியிருக்கு. கட்டினாலும் கட்டி வச்சுடுவாங்கன்னு.. கடைசியில அந்த அண்ணன் நேத்து தூக்கு மாட்டிகிடுச்சு...” என முடித்தான் கதையை.

அருகில் இருந்த அய்யப்பன், “ ஏண்டா , அவுங்க மாமா பொண்ணு நல்லா இருக்காதா? “ என கேட்டான்.
”போடா ... அந்த அக்கா சிவப்பா அழகா சினிமா ஸ்டார் மாதிரி சூப்பரா இருப்பாங்க...”
”உனக்கு எப்படிடா தெரியும்...”
“ அவுங்க எங்க சொந்தக்காரங்க.. அந்த அண்ணனோட அம்மா எனக்கு ஆயா முறை வேண்டும்”
”இதுக்கெல்லாமாடா தூக்குல தொங்குவாங்க...”அருகில் இருந்த மணிகண்டன்.
”ஏன் சார் ...அந்த அக்காவ கட்டிக்க முடியாதுன்னு நினைச்சு தானே ...மாமா பொண்ணுக்கு கட்டிவச்சுடுவாங்களோன்னு நினைச்சு ..பிரச்சனையில் இருந்து தப்பிக்க தானே தூக்கில் தொங்கிட்டாங்க...”
”சூப்பர்டா... எப்படி பாடத்தோட பொருத்துறான்...இவன் பெரிய வாத்தியார வருவாண்டா...”
“ அவன் போலீஸ் அதுவும் ஐபிஎஸ்” என்றான் சஞ்சை.
நல்லது நாம் இப்போது தமிழ் பாடம் படிப்போம் என்றேன்.

தன்னம்பிக்கை தாத்தா கதை சொல்கிறேன் என்றான் தங்க மணி. மூணு வரியில் சொல்ல வேண்டும் என்றேன். பக்கத்து ஊருக்கு போகணும்ன்னா மலையை சுற்றி தான் போகணும். தூரத்தை குறைக்க மலையை குடைந்து வழி அமைக்க வேண்டும். தாத்தா அனைவரையும் அழைத்தார். யாரும் வரவில்லை. இது ஆகாத வேலை என்று சென்றுவிட்டனர். ஆனால் தாத்தா காலையில் கடப்பாரை கம்பியுடன் மலையை வெட்ட ஆரம்பித்தார். அனைவரும் அவரை பார்த்து சிரித்தனர். நான் இறந்தாலும், எனக்கு பின் என் மகன் இந்த மலையை உடைப்பான். அதன் பின் என் பேரன் இந்த மலையை உடைப்பான் என்றார். அனைவரும் அவரின் தன்னம்பிக்கையை வியந்து மலையை குடைய ஆரம்பித்தனர். வழி கிடைத்தது. சூப்பர் என்று பாராட்டினேன்.

இப்படி மெதுவாக கற்றல் பணி நடைப்பெற்றது. இடைவேளை வந்தது.

மணி கார்த்திக்கை பார்த்து , அந்த அண்ணன் உங்க அடுத்த வீடா ? என கேட்டான். ஏன் கேட்கிற ?என்றேன். ”இல்லை சார் பேய்யா வந்து சுத்துவாரு அதான் சொல்ல வந்தேன் .“
” அடுத்த தெரு. அந்த காம்பவுண்டுல ஹவுஸ் ஓனர் பையனும் கத்தி வச்சு குத்தி கொன்னுபுட்டாங்க.”
பாத்தீங்களா சார்.. அந்த ஆவி தான் தூக்கில தொங்க வச்சுருக்கும்”
“ ஆமா..சார்... இப்ப அந்த காம்பவுண்டுல எல்லோரும் காலி பண்ணிட்டாங்க. எங்க ஆயாவும் ஹவுஸ் ஓனரும் தான் இருக்காங்க...” என்றான்.

எனக்கு உயிர்மையில் இந்த மாதம் படித்த சாருவின் பேய் கதை நினைவில் வந்தது. “கீழே குருதி தோய்ந்து கிடக்கும் நாக்கையும், கண்களையும் எடுத்துத் தின்று பசியாறுவான். மனித உடம்பில் அவனுக்குப் பிடித்தமானது மூளை. சடங்கு முடிவதற்குள் கபாலமும் உடைபட்டுத்தான் இருக்கும். அதிலிருந்து மூளையை எடுத்து உண்பான்.” ( இந்தவார உயிர்மை ’இல்லாதவர்களின் நிழல்கள்” சாரு நிவேதிதா)
அதற்குள் வரிசையாக அவரவர் வீட்டுப்பகுதியில் நடந்த பேய்கதைகளை சொல்ல ஆரம்பித்தனர். நானும் பேய்கதைகள் எழுதும் அளவுக்கு திகில் நிரம்பிய கதைகள் பல வெளிவந்தன. கணக்கு பாடம் படிப்போம் என்றேன். சார் ஆங்கிலம் என்றான் ஒருவன். சரி ஆங்கிலம் படிப்போம் என்று மெல்ல ஆங்கிலத்தில் உரையாட தொடங்கினோம்.

மதியம் சாப்பாட்டு நேரம் . வட்டமாக அமர்ந்து மாணவர்களுடன் உணவு அருந்துவது வழக்கம். அப்போது மீண்டும் அழகேஸ்வரி என்ற அழகி ... காதல் தோல்வியில் முடிந்த தூக்கு கதைகளை சொல்ல ஆரம்பித்தாள். வரிசையாக ஏரியா வாரியாக காதல் தோல்வியால் முடிந்த தூக்கு கதைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். என் ஆசிரிய தோழன் செல்வக்குமார் , மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்ட நண்பன் ஒருவனுக்கு எம்ப்ளாய்மெண்டில் சிறப்பு பதிவு செய்ய தேவையான அரசாணையை கேட்டான். கொடுக்கிறேன் என்றேன்.

காதல் பற்றி பேசுவது தவறு. காதல் புரிவது தவறு. சாதி என்ன என்று தெரிந்து காதல் கொள் . காதலித்து திருமணம் முடிப்பவன் அனாதை. அவனுக்கு எந்த உறவும் இருக்காது. காதலித்தால் சாவு தான் மிச்சம் என்பது போன்ற பயமுறுத்தல்கள் இருக்கத்தான் செய்யும்.

சாதி, மதம் மாறி திருமணம் முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் சலுகைகள் வழங்கினாலும், காதல் என்பது கனவு பிரதேசத்தின் கனியாகவும். எழுத்தில் மட்டுமே வாழும் விசயமாகவும் உள்ளது. வருத்தத்துக்குரியது. காதலை வளர்க்க வேண்டாம். காதலர்களை வெறுக்காமலாவது இருக்க பழகுங்கள். அடுத்த தலைமுறையாவது சரியாகட்டும்.

மோடி அலைவீசும் இந்த நேரத்தில், பார்க் பீச் பொது இடங்களில் கூடும் காதலர்களை பாசிச மதவாத பழமைவாதியினர் என்ன செய்யவிருக்கிறார்கள் என்று பார்ப்போம். ஓட்டுக்களை குறி வைத்து இருக்கும் இவர்கள் மாறியிருக்கிறார்களா ? நாளை வரை காத்திருப்போம்.

நான் காதலிக்கும் வனப்பேச்சி...!

காதல் வயப்பட்டவனாய் கனிந்த காதலை மனதிலேந்தி , கையில் ரோஜா செடி , அவள் வீட்டு வாசலில், அவள் எழுந்து கோலமிடும் முன்பே பதியமிட திட்டமிட்டு செல்கின்றேன். அவள் எனக்கு முன்பே வாசல் தெளித்து , ஒரு வனத்தை உருவாக்கி இருந்தாள். அதில் அவளும் நானும் காதல் புரிவதாக செய்தியை மறைத்து வைத்திருந்தாள். யாரும் அறியாத சமயத்தில் ரோஜா செடியுடன் வனம் புகுந்தேன். தேடினேன். வழியில் , வனபேச்சியிடம் அவள் இருப்பிடம் கேட்டேன். அவள் ஒற்றை புன்னகையுடன் மறைந்தாள். என்ன நினைத்தாலோ தெரியவில்லை , என் கையில் இருந்த ரோஜா செடியை பறித்துக் கொண்டாள். மலர்ந்து இருந்த ஐந்து ரோஜாக்களை எடுத்து கொண்டு, செடியை தூக்கி எறிந்தாள். ரோஜாவின் இதழ்களை ஒவ்வொன்றாக பிய்த்து போட , அது வீழ்கின்ற இடமேல்லாம் , தங்கமென மின்ன , இருபுறமும் பசுமையின் ஊடே அவளின் வாசனை வந்தது. எல்லோருக்கும் ஒரு வாசனை உண்டு. அவள் வாசனை என்னை வழிநடத்த ,அவளை தேடி விரைகின்றேன். காற்றின் ஈரப்பதம் மிகுதியால் குளிர்ச்சி அதிகமாய் இருந்தது. அடர்ந்த காட்டினுள் தேடுதல் தீவிரமானது. வாசனையும் தீவிரமாகவே அவள் வெகு அருகில் இருப்பதாக உணர்ந்தேன். அப் போது, எதிரில் வனபேச்சி மீண்டும் தோன்றினாள். உற்று கவனிக்கிறேன். இப்போது என்னை பின்னால் இருந்து யாரோ கட்டிப் பிடிக்கின்றனர். எதிரில் இருந்த வனபேச்சியை காணவில்லை. கரங்கள் தொட்ட வேளையில் உணர்கின்றேன் , அந்த மென்மை என்னவளுடையது தான். இன்னும் ஐந்து நிமிட நடையில் காதல் மரம் வந்துவிடும் என்று காதில் கிசுகிசுத்தாள். உற்று கவனித்தேன். அதில் கனிகள் பறித்து புசிப்போம்.அதன் ருசியில் நீ என்னை கண்டுபிடி. அதுவரை திரும்பி பார்க்காமல் என்னை அழைத்து செல் என்ற போது. குரலில் வித்தியாசம் அறிந்து, நீ என்னவள் அல்ல , முடியாது என்றேன். வாழ்வில் அவளை தவிர வேறு யாரையும் நான் சுமப்பதில்லை, இதை அவள் அறிவாள். சந்தேகிக்காத காதலிகள் உண்டோ! வானம் அதிரும் படியாக சிரிப்பொலி கேட்டது. ஏன் என்னை பயமுறுத்துகிறாய்? என்றேன். ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது சிவப்பு கலர் மீது கொண்ட மோகத்தால், உடன் பயிலும் அம்முவை உன் மனதில் சுமந்தாய். இரண்டாம் வகுப்பில் நீ விரும்பி சுவைக்கும் முறுக்கு நொறுக்க கொடுத்தால் (தினமும்) ஊர்மிளாவை சுமந்தாய். ஐந்தாம் வகுப்பில் உனக்கு வீட்டுப்பாடம் எழுதி கொடுத்ததால் கண்ணம்மாவை சுமந்தாய். ஏழாம் வகுப்பில் நீளமுடியில் மயங்கி நிவிதாவை சுமந்தாய். இருவருடம் முன்பு கூட கருப்பு தான் உண்மையான நிறம் என சொல்லி கண்ணகியை சுமந்தாய் . இப்படி உண்மையை அடுக்கிக் கொண்டே போனது அந்த குரல். போதும் நிறுத்து என்று எரிச்சல் கொண்டேன். அவையெல்லாம் அறியாமல் சுமந்தவைகள். இப்போது அவள் இன்றி நான் இல்லை. அவளைத்தவிர வேறு யாரையும் நான் சுமப்பதில்லை. இறங்கு என்றேன். முதுகில் இருந்து இறங்க வில்லை. இப்போது முன்பு போல் பாரம் உணரமுடியவில்லை. அவள் இறங்கி இருக்க கூடும். இப்படி இருந்தும் இல்லாமலும் இருப்பது தான் காதல் உணர்வா! மெல்ல நடக்கின்றேன்.அவளின் வாசனை தீவிரமாக வருகிறது. இப்போது என் உதடுகளை யாரோ வருடுவது போல உணர்கின்றேன். யாரோ எனக்கு முத்தம் கொடுக்கிறார்கள். இந்த உணர்வு நிஜம். நீங்கள் முத்தம் கொடுத்ததுண்டா? இல்லையெனில் இப்போதே உங்கள் காதலியை தேடி சென்று இதழ்களை சுவையுங்கள். முத்தம் உங்களில் உள்ள(ம்) உணர்வுகளை அப்படியே உடலின் எல்லா பாகங்களுக்கும் கடத்தும் ஹை வேல்ட் டிரான்ஸ்பாரம் ஆகும். ஒவ்வொரு முத்தமும் உங்களை அவளின் இதயத்தில் நீங்கா இடம் பிடிக்க செய்யும். நான் முத்தம் கொடுத்த அந்த நாளை நினைத்துப் பார்க்கின்றேன். அது ஒரு மழைப் பொழுது. தூறல் நின்ற சமயம் ஆகும். அவள் கரங்கள் பற்றி யாருமற்ற வீதியில் நடக்கின்றேன். ஏதோ உந்துதலில், தீடீரென்று வீதிகளை சுற்றி பார்க்கின்றேன். யாரும் இல்லை என்பதை உணர்கின்றேன். அவளின் தலையை பிடித்து, அவள் உதட்டை என் உதட்டால் கவ்வி, என் சுவாசத்தை அவளுள் செலுத்தினேன். அப்போது அவள் பதறிப் போனாள். அதன் பின் முத்தம் அற்ற நாட்களே இல்லை. அவள் அடைந்த அதே பதற்றம் இப்போது எனக்கு ஏற்படுகிறது. என் எச்சில் உறிஞ்ப்படுகிறது. ;உதட்டில் உணர்வுகள் ,சுவையாகத்தான் பரிமாறப்படுகின்றன. சபலம் தட்டுகிறது. இருப்பினும் அது அவள் இல்லையென்றால் என்ன செய்வது? என் தலையை அழுந்த பிடித்து ....விவரிக்க முடியாத உணர்வில் ஒரு முத்தம். அவளை, என் அவளை முற்றிலும் மறந்தேன். முத்தம் முத்தம் ஆனந்தம். அதே மயக்க நிலையில் இருந்து இன்னும் மீளவிலை. நான் என்ற நினைவை அற்று, தான் என்ற அகந்தை மறைந்து , ஏதோ ஒரு தியான நிலையில் இருக்கின்றேன். எங்கிருந்தோ ஆலம் விழுது போன்ற நீண்ட காதல் மரத்தின் கரங்கள் என்னை சுற்றி தன்னுள் இழுத்துக்கொண்டு போகிறது. தூரத்தில் வனப்பேச்சி ஒரு புள்ளியாய் தெரிகின்றாள். காதல் மரம் தன் கரங்களால் என்னை பற்றி தூக்கி செல்கிறது. மரம் இரண்டாக பிரிகிறது. கதவு போல திறந்து . இப்போது வன பேச்சி என்னை நோக்கி வருகிறாள். மிக அருகில். உற்று நோக்குகின்றேன். அது என்னவள். மிக அழகாய். அவள் வாசம் அந்த மரம் முழுவதும் நிரம்பியுள்ளதாய் உணர்கின்றேன். கனிகளை தருகின்றாள். புசிக்கின்றேன். அவள் இதழ்கள் தான் கனியாக மாறியிருக்கின்றன . சுவைத்த போது உணர்ந்தேன். காதல் மரத்தின் உள்ளே அவளும் நானும் நுழைகின்றோம். தன் கரங்களால் என்னை தழுவிக் கொண்டு , தன் நாவினால் காதல் சுவையூட்டிக் கொண்டு, இதழ்களின் வழியாக காதல் மொழி பேசிக்கொண்டு செல்கின்றோம். நான் கொண்டு வந்த ரோஜா செடி .... வழியெங்கும் பூத்து குலுங்குகிறது. வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்து வாசனை பரப்புகின்றன. இப்போது அந்த வனத்தில் நானும் அவளும் மட்டும். ஆதாம் ஏவாள் காலம் . உடைகள் இல்லா நிர்வாண காலம். அவளை நானும், என்னை அவளும் ரசிக்கின்றோம். இன்னும் தூங்கலையா ...? இது என் வனப்பேச்சி கட்டிலிருந்து அதட்டுகிறாள். காதல் கனவில் இருந்து வெளிவருகின்றேன். ஏனென்றால் அவள் எப்போது வேண்டுமானாலும் இரத்த காட்டேரியாக மாறும் சாத்தியம் உண்டு.

Thursday, February 6, 2014

இந்த கெட்டவார்த்தைகளை படிக்க வேண்டாம்.

கெட்ட வார்த்தை என்ற நல்ல வார்த்தை 
-------------------------------------------------------
தவிர்க்கமுடியாத, மிகவும் சிரமத்திற்குள்ளாகும் தருணங்களில், எப்போதாவது படித்த ஏதாவது ஒரு விசயத்தை அசைப்போட்டு சிரித்துக் கொள்வதுண்டு. அப்படி தான் இன்று காலை வகுப்பறையில் நுழைந்த பையன் , ”சார், இவன் கெட்ட வார்த்தை பேசுறான் சார்...” என்றான். உடனே இசையின் வரிகள் நினைவுக்கு வந்தது. “நான் கெட்ட வார்த்தைகள் அர்த்தமற்றுப் புழங்கும் நிலத்திலிருந்து வருகிறேன். அங்கே சும்மாணாச்சிக்கும் கோபப்படுவது, நிஜமாகவே சினம் கொள்வது, மண்ணள்ளித் தூற்றுவது என எல்லாவற்றிற்கும் கெட்ட வார்த்தைகள் தான். அங்கே போலியாக நடிப்பது , காதலாகிக் கசிவது, நெஞ்சைப் பிளந்து காடுவது என எல்லாவற்றிற்கும் கெட்டவார்த்தைகள் தான்” -இசை. (அதனினும் இனிது அறிவினர் சேர்தல், பக் 16 )

விசாரித்தேன். இனிமேல் இப்படி சொல்லாதே என அனுப்பிவைத்தேன். நான் திட்டவில்லை என வாதிட்டான். இசை சொல்வது போல் நெஞ்சை பிளந்து காட்ட உபயோகித்தது தான் அந்த வார்த்தை என்பது புரிகிறது. அதன்படி அது நல்ல வார்த்தையாகவே தோன்றியது. புகார் தெரிவித்த இவனின் கையெழுத்தைப் பார்த்து,
”கோத்தா ..என்னாமா எழுதுறாண்டா.. எழுத்துன்னா இப்படிதாண்டா இருக்கணும்..” என்று சொல்லியிருக்கிறான். ஒரு இலக்கியவாதியாக, அவன் இவனை பாராட்டி தான் பேசியுள்ளான் என்பது உண்மையானாலும், ஆசிரியராய் என் நிலை மாறாமல், ’தவறான வார்த்தைகளை , தீய வார்த்தைகளை உபயோகிக்க கூடாது’ என்று காறாராக சொல்லி அனுப்பினேன். அவன் வாய் முணு முணுத்தது. சிரித்தேன். அவன் முறைத்தப்படி, முணுமுணுத்தே சென்றான். நிச்சயம் இந்த முறை அவன் சொல்லும் வார்த்தை நல்ல வார்த்தை அல்ல என்பது மட்டும் புரிந்தது. இப்படி தான் நாம் நல்லது செய்ய நினைத்து அது நமக்கே கெட்டதாக முடியும். கணக்கு தப்புவது இயற்கையே.

கணக்கு என்றவுடன் எளிய முறையில் கணக்குகள் கற்று தருவது நினைவுக்கு வருகிறது. இன்று கற்றுக்கொடுத்தது. ஒன்றாம் ஸ்தானம் ஐந்தில் முடியும் ஒரே எண்களை பெருக்கும் எளியமுறையை கற்று தந்தேன். 25 x 25 போன்று ஐந்தில் முடியும் எண்களை பெருக்க கிடைக்கும் விடையின் கடைசி இரண்டு இலக்கங்கள் 25 ஆகும். எனவே 25 போட்டு கொள்ளவும் . 5 ( ஒன்றாம் ஸ்தானம்) தவிர்த்து உள்ள பிற எண்களை பார்க்கவும். இந்த கணக்கில் 2. ஆகவே ( 2 )அதனுடன் 1 யை கூட்டவும். கூட்டி வரும் தொகையை அந்த கூட்டிய எண்ணுடன் பெருக்கி 25க்கு முன்னால் போடவும் .விடை கிடைத்துவிடும் . 3 X 2 = 6: 25க்கு முன்னால் போட 625 என கிடைக்கும் என்றேன். 135 X 135 எனில் கடைசி இலக்கம் 25. ஒன்றாம் ஸ்தானம் தவிர்த்து உள்ள எண் 13 . ஆகவே 13 வுடன் 1 ஐ கூட்ட 14. பின் 13ஐ 14 வுடன் பெருக்க 182. விடை 18225. சரியா இல்லையா என்பதை உங்கள் கால்குலேட்டர் மூளைக்கொண்டு சரிபார்க்கவும்.

இப்போதும் வகுப்பின் பின்புறம் இருந்து , நல்ல பதத்தில் ஒருவன்,” .......,ரெம்ப ஈஸியா இருக்கிதுல்ல” என்றான். அவன் பாராட்ட தான் செய்தான் என்பது உண்மையாக இருந்தாலும், நகர வாழ்வில் கெட்ட வார்த்தைகள் அர்த்தமில்லாமல் , மிக நல்லவார்த்தைகளாக புழங்குவதை பார்க்கும் போது மனது வெம்புகிறது. மாணவனை அழைத்தேன். யார் இது மாதிரி பேச கற்றுக் கொடுப்பது என்றேன். ”சார் ,இதையெல்லாம் போய் கெட்ட வார்த்தை..ன்னா மத்த வார்த்தைகளை யெல்லாம் என்ன சொல்றது. எங்க வீட்டுபக்கம் இதவிட செமயா திட்டுவாணுங்க. சாரி சார் இனி வகுப்பில் பேசலா ”என்றான்.
எங்கப்பா டீ நல்ல இருந்துச்சுன்னா...எங்கம்மாவ பார்த்து “தாயோலிமவ ..இன்னைக்கு டீ சூப்பாரா போட்டுடிருக்கான்னு சொல்லுவாறு...”. “கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று அப்பாவிடம் சொல்லவேண்டும் தம்பி” என்றேன். ”அப்பா உன்னை திட்டுதுண்ணு சொன்னா, எங்கம்மா சொல்லுது... அப்பா திட்டலைடா நான் போட்ட டீ நல்லாஇருக்குன்னு சொல்லுது ன்னு அம்மா சொல்றாங்க சார்...” என்கிறான்.

குட்டி கதை சொல்லுங்க என்றனர். ஒரு வீட்டுல ஒரு கிளி வளர்த்தாங்க. அந்த கிளி நல்லா பேசும். ஆனா கெட்ட கெட்ட வார்த்தையா பேசும். கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று சொல்லி பார்த்த , அதன் உரிமையாளர், ஒரு முனிவரிடம் அழைத்து போய் காட்டினார். கிளியின் கெட்டவார்த்தைகளை கேட்ட , அந்த முனிவர் சாபமிட்டார். இனி நீ கெட்ட வார்த்தைகளை பேசினால், உன் தலையிலிருந்து ஒவ்வொரு முடியாக தானாக உதிர்ந்து விடும் என்று சாபமிட்டார். அன்றிலிருந்து அந்த கிளி கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை என்றேன். உடனே ஒருவன் சார் அது பெம்பள கிளிதானே சார்...அதான் முடி உதிரது பத்தி கவலை வருது என்றான். அடுத்தவன் ,சார், இனி நீங்களும் சாபம் போடுங்க சார்..அப்பதான் கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார்கள்” என்றான். தம்பி கதை முடியல.. என்றேன். சார் போதும் என்றான். டேய் கெட்ட வார்த்தை பேசினா சார் முனிவர் மாதிரி சபித்துவிடுவார் என்று கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். வகுப்பறையில் நானும் கதையை அத்துடன் முடித்து விட்டேன்.

மீதிக் கதையை உங்களிடம் சொல்லி தானே ஆக வேண்டும். சில ஆண்டுகள் கழித்து , கிளியின் உரிமையாளரை பார்க்க முனிவர் வந்தார். இப்போது அவரின் தலையில் முடிகள் இல்லை. முடிகள் கொட்டிப் போயிருந்தன. இதைப் பார்த்த கிளி
சிரித்தது. முனிவர் கிளியிடம் ,”நீ எதையாவது நினைத்து சிரிக்கிறாயா? “ என்றார். அதற்கு கிளி, “ இல்லை, இல்லை, நான் உங்கள் தலை ஏன் மொட்டையானது என்று நினைத்தேன் . சிரித்தேன் . அவ்வளவு தான் ”என்றது.

இப்போது நீங்கள் எதை நினைத்து சிரித்தாலும் பரவாயில்லை. நல்லவார்த்தைகளாய் புழங்கும் நிஜமான கெட்ட வார்த்தைகளை குழந்தைகளில் வாழ்க்கையில் இருந்து பிரிக்க வேண்டும். இதன் விபரீதத்தை உணர்ந்து நாம் அர்த்தமின்றி பயன்படுத்தும் கெட்டவார்த்தைகள் தவிர்ப்போம். அல்லது குழந்தைகள் முன் பேசாது இருப்போம்.

- மதுரை சரவணன்.

Monday, February 3, 2014

ஏடிஎம் செண்டரில் பணம் எடுக்க வரிசையில் நிற்கும் பெண்கள், கவனிக்கப்படவேண்டியவர்கள்...!

      என் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் எனது வாசகி , எனது சமீபத்திய கட்டுரைகளை படித்து , என்னிடம் ,”உங்கள் எழுத்து சமீபத்தில் நீங்கள் கொண்டாட விரும்பியவரின் எழுத்துக்களைப் போல் இருக்கிறது” என்கிறாள். அவளை அன்பிரண்ட் செய்வது என முடிவெடுத்து விட்டேன். செய்தும் விட்டேன். நான் யாரையும் போலச் செய்பவன் அல்ல என்பதை இதை விட எப்படி உணர்த்த முடியும். செய்தது சரிதானே என்று எப்போதும் நான் நியாயாம் கேட்பதில்லை. என் மனதிற்கு பிடித்ததை என்றும் செய்பவன். என்னுடன் இருப்பவர்களுக்கும் அதே சுதந்திரத்தை வழங்கியும் உள்ளேன்.
என் மாணவர்களிடமும் அவர்களுக்கு பிடித்ததை , விரும்பியதை செய்ய சொல்கின்றேன். யாருடைய வற்புறுத்தலுக்கும் உடன்படாதீர்கள். எவரின் திணிப்புக்கும் அடிமையாகி விடாதீர்கள் என்கின்றேன். நீங்கள் நீங்களாக இருங்கள். அதுவே நீங்கள் எதுவாக விரும்புகிறீர்களோ அதுவாக உயர்வத்துவதற்கு வழியை உருவாக்கும்.
நான் அவர்களுக்கு போதிப்பதெல்லாம் ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள் என்பதை தான்.

      நான் கற்று கொடுப்பதெல்லாம் அவர்களிடம் உள்ள நம்பிக்கையை வெளிகொணர்வதற்கான வழிமுறைகளை மட்டுமே. அடிக்கடி தலைவாரிக்கொள்ளும் மாணவனை அருகில் இருந்த ஆசிரியர் கண்டித்தார். படிக்கிற வயசுல கண்ணாடி பார்க்கிறான் பாரு, படிக்கிற வேளையை பாரு என்று திட்டி அனுப்பினார். நான் அம்மாணவனை அழைத்து, அவர் திட்டியதற்கு வருந்தாதே, நீ தலைவரிக்கொள், மிகவும் அழகாக இருக்கிறாய். உன்னிடத்தில் அற்புதமான கலைஞன் ஒழிந்துள்ளான். அவன் வெளிப்பட நீ முயற்சி செய்ய வேண்டும் . அதற்கு நீ நன்கு படித்தவனாகவும் இருக்க வேண்டும். படிப்போடு சேர்ந்த திறன் மட்டுமே உன்னை மிகப்பெரிய இடத்திற்கு இட்டு செல்லும் என்றேன். அவுங்க திட்டினதுக்கு நான் வருந்துகின்றேன். நீ எப்போதும் போல் தலைவாரிக்கொள் ஆனால் பள்ளியில் வகுப்பறையில் அடிக்கடி சீவிக்கொள்வதை தவிர்க்கவும் என்றேன். அவன் சிரித்தப்படி சரி என்று சென்றான். சென்றவன் என் பைக் கண்ணாடியை பார்த்து ஒரு கர்வத்துடன் தன்னம்பிக்கை கொண்டவனாய் , தன்னை தானே ரசித்தப்படி நடந்து சென்றான். இப்போது அவன் நன்றாக படிக்கிறான் என்பது தனி கதை. சிலர் பல நேரங்களில் நம்பிக்கை இழந்து விடுகின்றனர்.

     இன்று மாலை ஏடிஎம் செண்டரில் பணம் எடுக்க காத்திருந்தேன். எனக்கு முன்னால் இரண்டு வயதான பெண்மணிகள் இருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு இளைஞன் நின்றிருந்தான். அதற்கும் முன்பாக ஆண் பெண் என மாறி மாறி ஏழு பேர் நின்றிருந்தனர். ஒவ்வொருவரும் சென்று பணம் எடுத்துவர குறைந்தது பத்து நிமிடம் ஆக்கினார்கள். எனக்கு எரிச்சல் வந்தது. எல்லோரும் ஏதோ இன்று தான் பணம் எடுப்பவர்கள் போல திணறிக்கொண்டு இருந்தார்கள். அதில் பலபேர் மினிபேலண்ஸ் பார்த்து , அதன் பின் பணம் எடுத்தார்கள். இந்த எரிச்சலை நான் வெளிப்படையாகவே அங்க என்ன பாடமா நடத்துறாங்க...என்ன சொல்லுதுன்னு பார்த்து பட்டனை தட்டுவதற்கு இத்தனை நேரமா? என்று கத்தவும் செய்தேன். பத்தாயிரம் ரூபாய் எடுக்க முக்கால்மணி நேரம் ஆகிவிட்டது.

     நான் கையில் வைத்திருந்த ஏடிஎம்கார்டை பார்த்த என் முன் நின்றிருந்த வயதான பெண்மணி , இந்தியன் வங்கி கார்டா..வச்சுருக்கிங்க தம்பி... இழுத்து இப்படி சொன்னாள். எப்பவும் ஸ்டேட்பேங்க் ஏடிஎம் செண்டரில் தான் பணம் எடுக்க முடியுது. இந்தியன் வங்கி ஏடிஎம் சுத்த மோசம். எப்ப பாரு பணம் இருக்காது, இல்ல மிஷின் ரிப்பேர் , இல்லை கார்டு போட்ட மாட்டீக்குது . இது போன்ற அடுக்கடுக்காக புகார்களை கொட்டி தள்ளினார். எனக்கு விபரம் தெரிந்து நாராயணபுரம் இந்தியன் வங்கி ஏடிஎம் இப்படி தான் எப்போது சென்றாலும் இயங்காமல் உள்ளது. பின்பு பிற வங்கி ஏடிஎம்களில் தான் பணம் எடுக்க வேண்டியிருக்கிறது.

     பெண்கள் பணத்தை எடுத்து , எண்ணி அங்கேயே தனித்தனியாக பிரித்து தங்களுக்கு வசதியுள்ள எல்லா இடங்களிலும் பதுக்கி வைத்து செல்வதை கண்டேன். பாவம் பெண்கள் , தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை பதுக்கிதான் தன் பெற்றோர்களுக்கு உதவ வேண்டியுள்ளது என்ற நிலையை பார்க்கும் போது மனம் கணக்க தான் செய்கின்றது. கைநிறைய சம்பளம் வாங்கினாலும் தன் சகோதர சகோதரிகள், பெற்றோர்களுக்கு கொடுத்து உதவி செய்திட முடியாத கையாளாகத தனத்தை நினைத்து வெந்து புலம்பும் சகோதரிகளை பார்க்கும் போது ஆண்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அதைவிட கொடுமை தங்களின் ஏடிஎம் கார்டை கணவனிடம் கொடுத்து , எப்போதும் அவர்களின் கைகளை எதிர்பார்த்திருக்கும் நிலமை. எனக்கு தெரிந்து ஒரு ஆசிரியர் தன் கணவனிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு, குடிகாரனாகிய அவனிடம் அடிஉதை வாங்கி வருவதுடன், வீட்டு வாடகை கூட காட்ட முடியாமல் , தன் சக பணியாளர்களிடம் கடன் வாங்கி குடித்தனம் நடத்துவதை காண்கின்றேன். இந்த நிலமை மாற பெண்ணீயம் பேசினால் போதுமா என்பது தான் என் கேள்வியாக எப்போதும் இருக்கிறது. பெண்களுக்கு எப்போதும் தங்கள் மீது நம்பிக்கை பிறக்கிறதோ அன்று தான் இப்பிரச்சனை தீரும். ஆகவே நான் வகுப்பறையில் அறிவை விட , நம்பிக்கையை விதைக்கின்றேன். மாணவிகளிடம் தன்னம்பிக்கை விதைகளை தூவுகின்றேன்.

     நேரம் முக்கியமானது. நேரத்தை நாம் ஏடிஎம் செண்டர்களில் வரிசையில் நின்று தொலைக்கின்றோம். இது போன்ற சமூக சிந்தனைகள் உதிப்பதற்கு காரணமாக , சில வீணடிக்கும் நேரங்கள் அமைத்து விடுகின்றன. வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் , நாம் அறிந்து கொள்ள பாடங்கள் நிரம்பியுள்ளன. நாம் கவனித்தால் அது நமக்கு கிட்டும். ஒவ்வொரு நிமிடமும் தகவலோடு பயணிக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் நமக்கு சில புரிதல்களை தருகின்றன. ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஒரு அனுபவத்தை தருகின்றன. இவை நம் தகுதியை மேம்படுத்துகின்றன.

     எனக்கு முன் நின்ற வயதான பெண்மணிக்கு கார்டை கொண்டு பணம் எடுக்க தெரியவில்லை. அதற்காக அவர் வருந்தவில்லை. தம்பி எனக்கு உதவுங்கள் என்று அழைத்தார். உதவினேன். அவர் சொன்னார். எங்கப்பா பணம் எடுக்க விடுறாங்க...செக்புக்கில கையெழுத்து வாங்கி அவுங்களே எடுத்துக்கிறாங்க...எதோ என் தேவைக்கு ஆயிரம் இரண்டாயிரம் என எடுத்து கொள்கின்றேன் என புலம்பினார். வயோதிகம் என்பது இம்மாதிரியான வேதனை குரல்களில் ஒலிக்கும் போது மனம் கஷ்டப்படுவது இயற்கையே. என் தாய் என் கண்முன் தோன்றினார். அவரும் பாவம் கால்கடுக்க வங்கிக்கு சென்று பணம் எடுத்துவருவதை நினைத்து வருந்துகின்றேன். என் தாய் ஏடிஎம் என்றால் அலர்ஜி என்பார் . இதுவரை கார்டு வாங்கியதில்லை. ஒருசமயம் வங்கியே வலுக்கட்டாயமாக திணித்தது. அவர் அதை இன்று வரை கையில் தொட்டதில்லை. இப்போது புரிகிறது சக பணியாளர்களின் எச்சரிக்கை உணர்வாக கூட இருக்ககூடும். நாங்கள் அப்படி அல்ல என்று சொன்னாலும் , அந்த தாய்க்கு தான் தெரியும் , அவரின் பாதுகாப்புக்கு என்ன செய்யவேண்டும் என்பது. அதுவும் ஒருவகை நம்பிக்கை தான்.

     இதற்கிடையில் தமிழ்வாசி என்னை அழைத்து சாரு நம் சந்திப்பை தரக்குறைவாக சுட்டிக்காட்டியுள்ளார் என்றார். //மதுரையில் ஒருசில நண்பர்கள் gatecrash செய்து வந்து என்னோடு போட்டோ எடுத்துக் கொண்டு போனார்கள். அதுவா கொண்டாட்டம்? // என்ற சாருவின் வரிகளை மெயில் செய்தார். சாருவின் வாசகனாக நாம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது நமது உரிமை. அதை அவர் குறை கூறவில்லை. அவரை நீங்கள் உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளனாக பத்ரிக்கை பத்திகளை படித்து , தேடி சென்று வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டது ஒரு வரபிரசாதம். அதற்கு உதவியாக இருந்தேன் என்பதில் பெருமிதம். சாரு எதிர்பார்க்கும் கொண்டாட்டம் என்பது வாசகர் வட்டத்திலுள்ள என் போன்றோர்களுக்கு மட்டுமே புரிகிறவிசயம். புத்தகம் வாங்குவதும் , பிரதியில் கையொப்பம் வாங்குவதும் கொண்டாட்டம் தான், தமிழ்வாசியை போன்ற ஆரம்பகட்ட வாசகனுக்கு என்பதும் சாருவுக்கு தெரியும். அவரிடம் பேசிய சில நொடிகளில் புயலிலே ஒரு தோணி யை செவ்விலக்கியங்கள் என்றும், அதை படிக்க சொன்னார். அதுபோன்று ஒரு நாவலை தான் எழுதப்போவதாக சொன்னார். விஜயகாந்த் நிலமை, மதுரையின் அரசியல் , தான் பஜாகாவுக்கு செல்லாமல் இருப்பது, மோடியை ஆதரிப்பது போன்ற பலவிசயங்களை கொட்டி தள்ளினார்.அதிமுக பாராட்டினாலும் , அதில் தன்னை இணைத்து கொள்வதில் தனக்கு உள்ள பிரச்சனை என சாரு உரையாடியதை என் நண்பர் தமிழ்வாசி உணர்வான் என்று நினைக்கின்றேன். ஆகவே சாரு கூற்றில் எந்த தவறும் இல்லை. நான் என் வருகையை முன்கூட்டியே பதியவில்லை என்பதால் நானும் உங்களுடன் வெளியேறினேன். தமிழ்வாசி பிரகாஷ் , சாருவை படியுங்கள். அவரை புரிந்து கொள்ளுங்கள். பின் நாம் ஒருதருணத்தில் கொண்டாடுவோம். இதுவும் ஒருவகை தன்னம்பிக்கை தான்.


மதுரை சரவணன்.

Thursday, January 30, 2014

காந்தி இன்றைய பிம்பம்.....!


  மணி எட்டு. படுக்கையில் வார இதழ் படித்தப்படி படுத்திருக்கின்றேன். இந்த இரவை கழிக்க வேண்டியவனாய் படுக்கையில் புரண்ட படி வார இதழில் கவனம் கொள்கின்றேன். விடிந்தால் காந்தி இறந்த தினம். இருந்தாலும் நாளை தை அம்மாவாசை. அருகில் மகள் எஸ்.ரா தமிழில் மொழிப்பெயர்த்துள்ள வம்சி பதிப்பின் ஆலிஸின் அற்புத உலகம் படித்து கொண்டிருக்கிறாள். செல்போனில் அம்மா அழைத்தார் ,தம்பி நாளை காலையில் கோயிலுக்கு போகணும். விரதம் இருக்கணும். மதியம் விரதம் விடணும். அம்மா வீட்டுக்கு சாப்பிட வந்து விடு என கட்டளைகள் தொடர்கின்றது. அனைத்திற்கும் சரி என தலையாட்டி வைத்தாயிற்று. என் மகள் கேட்கிறாள்,” ஏம்பா , அப்பத்தா எப்பா பார்த்தாலும் விரதம் இருன்னு சொல்றாங்க! விரதம்ன்னா என்னப்பா!”

இதற்கு முன் அன்னஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது விரதம் சம்பந்தமாக கேள்வி எழுப்பியது உண்டு. டிவியில் செய்தியில் சின்னகுழந்தை ஜூஸ் கொடுப்பதை பார்த்து , ஏம்பா ஜூஸ் குடிச்சு தான் விரதத்தை முடிக்கணுமா? என்று கேட்டவள். அப்போது அவள் உண்ணா விரதம் என்று சேர்ந்து இருந்ததால், சாப்பிடாமல் பட்டினி இருப்பது என்பதை உணர்ந்து வேறு எந்த கேள்வியும் எழுப்பவில்லை. காந்தி பற்றிய அடையாளம் ரூபாய் நோட்டிலும், புத்தகத்தில் , காந்தி கண்காட்சியகத்தில் மேலாடை அற்ற, தொப்பி அற்றவராக காட்சியளித்ததால் காந்தி போலன்னு சொல்றாங்க என ஹசாரேவை பார்த்து மோலோட்டமான கேள்வியை மட்டும் முன் வைத்து என்னை நழுவ விட்டுவிட்டாள். நான் பல கேள்விகளுக்கு பதில்களை அவளின் அம்மாவையே கேட்டு தெரிந்து கொள்ள சொல்வேன்.

அம்மாக்கள் எப்போதும் குழந்தைகளை எளிதாக சமாளிக்கும் திறன் பெற்றவர்கள். அப்பண்பு இயற்கையாகவே அமைந்து விடுகிறது. இதன் ரகசியம் தெரிந்து தான் துவக்கப்பள்ளியில் ஆண் ஆசிரியர்களை விட அதிகம் பெண் ஆசிரியர்களுக்கு அரசு முக்கியத்துவம் தருகின்றது. பெண் ஆசிரியர்களுக்கு அற்பணிப்பு பண்பு உண்டு. சிலர் எதிலும் விதிவிலக்கானவர்கள். அவர்களை பற்றி நான் எப்போதும் பேசுவது இல்லை. ஆண் ஆசிரியர்கள் குறித்து ஒரு செய்தி.

சமீபத்திய ஜ.நா அறிக்கை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதற்கு , ஆசிரியர்கள் வகுப்புக்கு முறையாக வராததும் காரணம் என்கிறது. ஆசிரியர்கள் பள்ளி அல்லது வகுப்புக்கு வராமல் தவிர்க்கும் வீதம் 10 சதவீதம் அதிகரித்தால், அது 1.8 சதவீதம் மாணவர்கள் வருகையை குறைக்கிறது எனவும் புள்ளிவிபரத்தை தருகிறது. பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களே தொடக்கப் பள்ளி அளவில் அலுவலக உதவியாளர்கள் இல்லாத காரணத்தால், அனைத்து வேலைகளையும் பார்க்க நேரிடிகிறது என்பதையும் அரசு நினைவில் வைத்துக் கொண்டால் இந்த குறையை தவிர்க்கலாம். சமீபத்தில் ஆன் லைனில் பள்ளி மாணவர் விபரம் சேர்க்கையில் ஆண் ஆசிரியர்களே இரவு பகல் பாராமல் இணையத்தில் மாணவர்களின் புள்ளி விபரங்களை பதிவேற்றினார்கள் என்பதை அனைத்து ஆசிரியர் உலகமும் அறியும். வகுப்புகளில் ஆசிரியர்கள் வருகை முறைப்படுத்த வாயளவில் பிற பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னாலும் அலுவலக உதவியாளரை நியமிக்காத வரை ஆண் ஆசிரியர்கள் வகுப்புக்கு செல்லாமல் அலுவலக பணிகளை செய்ய நேரிடும் என்பதும் நிதர்சன உண்மை.

விரதம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது காந்தி தான். நாளை தியாகிகள் தினம் என்று என் மகளிடம் சொன்னேன். அவள் சுதந்திரத்துக்கு போராடினவர்கள் நினைவாக கொண்டாடப்படுகிறதா ? என்றாள். காந்தி இறந்த தினம். கோட்சே தானேப்பா காந்தியை சுட்டார். அவர் ஏன்னப்பா சுட்டார்? காந்தி அமைதியானவர் தானே அப்பா? அவர்கிட்ட வேட்டியை தவிர எதுவும் இல்லையே அப்பா அப்புறம் எதை புடுங்க காந்தியை சுட்டார் என பரிதாபமாக கேட்டாள். அவளை உறங்க வைப்பதற்கான கதை கரு கிடைத்த மகிழ்ச்சியில் சொல்ல துவங்கினேன். இந்து முஸ்லீம் பிரிவினை கல்கத்தா கலாட்டா என உரையாற்ற தொடங்கினேன். வாத்தியார் வேலையை இங்கேயும் விடமாட்டீயாப்பா.. சுருக்கமா சொல்லுப்பா... இல்லை புத்தகம் இருந்தா கொடு நான் படிச்சுக்கிறேன். அதான் நான் எதையும் அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். நீ எப்பவுமே வள வளா கொள கொளா என்றாள்.

விரதம் பத்தி கேட்டா இவரு காந்தி அது இதுன்னு அறுக்கிறார் அம்மா? என்றாள். என் மனைவி , விரதமா மது...! அது வேற ஒண்ணுமில்லை காலையில வழக்கம் போல இட்லி சாப்பிட்டு...(பலகாரம்) காபி டீ குடிச்சுட்டு....அதுக்கு பின்னாடி நொருக்கு தீணி சாப்பிடாம . நேரடியா மதியம் புல் மீல்ஸ் அவுங்க அப்பா புண்ணியத்தில் வடை பாயசத்துடன் சாப்பிடுறது என்றாள். நல்ல விளக்கம்.
ஈரான் மீது பொருளாதர தடையை நாடாளுமன்றம் கொண்டு வந்தா தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்வேன் என்று சொல்ல நான் என்ன அமெரிக்க அதிபர் ஓபாமாவா...! என் மனைவியின் விரதம் சார்பான விளக்கத்திற்கு தடை விதிக்க. அதை அப்படியே ஏற்று கொள்ள அமெரிக்க பாரளுமன்றம் அல்ல என் மகளும். !

ஜெயமோகன் எழுதிய காந்தி பற்றிய புத்தகத்தை தேடி, இரவை காந்தியின் நினைவுடன் கழிக்க முற்படுகின்றேன். இதோ அதை பற்றி எழுத தொடங்கி விட்டேன். காந்தி நினைவு தினத்தில் உலக தொழு நோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்த நோய் பாதிப்பு இந்தியாவில் அதிகம். இந்த நோயை உருவாக்கும் கிருமியை நார்வே டாக்டர் ஹெர்கார்ட் ஆர்மோர் கான்ஸன் 1873ல் கண்டு பிடித்தார். அதன் பிறகு தான் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை குறித்து விரிவாக இன்னொரு தருணத்தில் பார்க்கலாம்.

பித்ருகடனைத் தீர்க்க தை அம்மாவாசை விரதம் இருக்க வேண்டும். கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கவலை ஆட்கொள்கின்றது. அப்பா எனக்காக செய்த தியாகங்கள் என் கண் முன் விரிய , என் தந்தையை கோட்சே போல பலமுறை சுட்டு வீழ்த்தியது காட்சிக்கு வர அப்படியே உறங்கிப்போனேன்.
 

Wednesday, January 15, 2014

இந்தமாதிரி காதல் உங்களுக்கும் இருக்கலாம்...!

   காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, 6 மணிக்கு வெள்ளை சாட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து , சூ பாலிஷ் போட்டு, கிளம்ப எத்தனிக்கையில், ”டேய் வாசல் தெளிக்கவில்லை, கொஞ்சம் நில்லுடா” என்று அம்மாவின் குரல் கேட்கும். வேகமாக பறபறக்க தண்ணிர் தெளித்து, சிறியதாய் கோலம் போட்டு , பார்த்து போயிட்டு வா என்று வழியனுப்ப, சைக்கிள் பெல்லை பக்கத்து வீட்டு வசந்திக்கு கேட்கும் விதத்தில் அழுத்தி, ஓசை எழுப்பி, அவள் பல் இளிக்க , பைக்கை உதைப்பதை போல, சைக்கிள் பெடலை உதைத்து , சைக்கிளில் செல்லும் போது , கனவும் சேர்ந்தே வரும்.

    பாகிஸ்தான் பார்டர், சுற்றிலும் கடல், மிதந்து செல்லும் இந்திய கப்பலில் வெள்ளை சீருடை அணிந்து , பைனாகுலரில் ரோந்து பார்க்கையில், சீறிவரும் விசைப்படகை கை தூப்பாக்கியில் சுடவும் மற்றோரு கையில் கை எறி குண்டு எறிந்து வெடிக்க செய்து, இந்திய இராணுவ கப்பலில் இருந்து குதித்து, கடலில் நீந்தி சென்று பாகிஸ்தான் பார்டரில் நிற்கும் எதிரி கப்பலை அடைந்து, பதுங்கி பதுங்கி , கப்பலில் ஏறி, அனைவரையும் சுட்டு வீழ்த்தி, கடைசியில் கப்பலை சிறைப்பிடித்து, தகவல் கொடுக்க அனைவரும் பாராட்டினர். வீரபதக்கத்துடன் ,ஜனபாதிபதி அருகில் நிற்கும் புகைப்படம், இ அத்துடன் செய்திய மறுநாள் செய்திதாளில் அனைவரும் படிக்கும் கனவுடன் ,அமெரிக்கன் கல்லூரியில் நுழைகையில் பரேட் ஆரம்பித்து இருந்தது.

    ப்ரேட் சீதே சல், பாயே மூட், பீச்சே மூட், சவுதான் என்ற கட்டளைகளுக்கு அடிபணிந்து வியர்க்க வியர்க்க லைப்ட் ரைட் , லைப்ட் ரைட் போட்டு நடந்து, இந்திய இராணுவம் பற்றியும் , கப்பல் படை குறித்த செய்திகள், அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் நிலை குறித்தும் தெரிந்து, அவர்கள் கொடுக்கும் பூரியை சாப்பிடும் போது, பசிக்கு அமிர்தம் போல இருக்கும்.

    கல்லூரியில் , இந்திய இராணுவத்தில் கேப்டனாக வருவேன் என்ற நண்பனை பார்க்கையில் பெருமையாக இருக்கும். பிசிக்ஸ் படிச்சா உடனே கப்பல் படையில் சேர்த்து கொள்வார்கள் என்ற நண்பனிடம், சுவாலஜி படித்தால் சேரமுடியாத என அப்பாவி தனமாக கேட்டு , எம். எஸ் சி  மெரைன் பயாலஜி படி , கண்டிப்பாக கப்பல் படையில் சேரலாம் என்ற டிப்ஸ் பெற்று மனம் திருப்தி கொள்ளும். தேசிய உணர்வு மிகுந்து இருக்கும் அந்த கணங்களில் , காந்தி அம்பேத்கார் பற்றிய உறவு விவாதங்கள் நிறைந்து இருக்கும்.

    உலகில் இந்திய  இராணுவம் 4வது பெரியது. சுமார் 20 லட்சம் வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய ராணுவம் தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, கடலோர காவல் படை,ய  துணை ராணுவப் படை என ஐந்து படைப்பிரிவுகள் உள்ளன.
     
     கல்லூரி முடிந்து 1999 ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் ,இந்திய இராணுவம் வெற்றி பெற்றது. செய்தி தாளில் செய்தி படிக்கும் போது நம்முடன் பயின்ற நண்பர்கள் பெயர்  இருக்க்கிறதா என்று பார்ப்பேன். எனக்கு விவரம் தெரிந்து என்னையும் சேர்த்து யாரும் இராணுவத்தில் சேர்ந்ததாக விவரம் இல்லை. இருப்பினும் செய்திதாள்களில் நம் வீரர்கள் பாகிஸ்தான், சீனர்களின் எல்லை அத்துமீறல்களை தடுக்கும் வீரர்களை  நினைக்கும் போது, என் நானே இராணுவ வீரனான உணர்வு ஏற்படும்.

   என்னுடைய என்.சி.சியின்  பி, மற்றும் சி சர்டிபிகேட்டுகளை எடுத்து பார்க்கின்றேன். அவை என் கனவுகளை போல நொருங்கி விழுகின்றன. இருந்தாலும் அவை என்னுடைய கனவை தாங்கி இன்னும் சான்றிதழாகவே அடையாளம் காணப்படுகின்றது. என்னைப்போன்று எத்தனைப்பேரின் கனவுகளை தாங்கி வீட்டில் பி, மற்றும் சி சர்டிபிகேட்டுகள் உறங்கி கிடக்கின்றனவோ..! நம் வீரர்களை நினைத்து பெறுமை கொள்கின்றேன்.

   இந்திய இராணுவத்தில் இடம் பெறும் கனவுகளுடன் அந்த நாள் முழுவதும் நண்பர்களுடன் பேசி களைத்து போய் வீடுதிரும்புகையில், நான் அணிந்து இருக்கும் சீருடையை கண்டு, வீட்டுக்கு அருகில் இருக்கும் பெரியவர்கள் சுபாஷ் சந்திர போஸ் இராணுவத்தில் சேர பர்மாவிற்கு சென்ற நண்பர்கள், உறவினர்கள் கதைகள், மதுரைக்கு காந்தி வந்த கதை, ஆடை துறந்த கதை என சொல்லி , நம் மனதில் தேச பற்றை விதைத்து , நம்மை இராணுவ வீரனாகவே மெருகேற்றி விடுவார்கள்.

1948 ஜனவரி 15 ல் ராணுவ தளபதி கரியப்பா பெறுப்பேற்ற , இந்த நாள் ஜனவரி 15, இந்த வரலாற்று நினைவை கவுரவிக்கும் பொருட்டும் , நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்காலுக்குமரியாதை செலுத்தும் விதமாகவும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. நாம்மிடம் இரானுவத்தில் சேர வேண்டும் என்ற உணர்வு நிரம்பி இருந்தாலும் , நாம் சேர இயலாமைக்கு ஆயிரமாயிரம் காரணம் இருந்தாலும், நாம் பாதுகாப்பாக இருக்க காரணமான இராணுவ வீரர்களை இந்நாளில் நினைத்து போற்றுவோம். நம் இளைய சமூகம் ராணுவத்தில் சேர ஊக்குவிப்போம்.

   என்னுடைய சி, மற்றும் பி சர்டிபிகேட்டுகளுடன் பாரா கிளைம் பேட்ஜ் , மற்றும் பல கேம்புகள் சென்ற சர்டிபிகேட், குடியரசு தின அணிவகுப்பு தேர்வில் பங்கு கொண்ட நினைவுகளுடன் இந்த நாள் முழுவதும் ராணுவ கனவுகளுடன் கடக்கின்றேன்.


ஜெய் ஹிந்த்.