Tuesday, September 14, 2010

மழை நனைத்த மதுரை

பிரிவின் வலி
உறவின் தூரத்தில்....

மழை நனைத்த மதுரை
வைகை தடம் புரண்ட வீதிகளாய்
தெருவோரப் பள்ளங்களை
மழை நிறைத்து
கம்மாயாக்கியது போன்று ...
மழைநேரத்து இரவுகள்
எங்கள் இதயக்குழிகளை
மழையில் நனைந்த நினைவுகளால் நிரப்பி ...
என்னை உசுப்பியது செல்
காற்றலைகளில் பறந்து வந்த
அவளின் முத்தம்
காதுகளில் விழுந்தாலும்
உதடுகள் இனிக்கின்றன...
அவள் குரலில் ஒசையில்
அவளின் வாசனையை
ஒரு குருடனைப்போல
உணர்கிறேன்....
இன்றைய இரவுகள்
உடல்கள் இணையா
புணர்வுகளாக்கி வெப்பத்தால்
மீண்டும் மீண்டும்
வீட்டுச் சவர்களை
மழையாக்கி நனைகின்றோம்....
அங்கே அவளும்
இங்கே நானும்....


உறவுகள் இருந்தும் 
உறவுகள் அற்றவனாய்
படிப்பு இருந்தும் 
சொந்தநாட்டில் வேலையற்றவனாய்
ஓட்டுரிமையிருந்தும் 
வாக்களிக்க தகுதியற்றவனாய்
ஆண்மையிருந்தும் 
மலடனாய்
இப்படி எல்லாமிருந்தும் 
இல்லாதவனாய்
காகித உயிர்களுக்காய்
கடல் கடந்து ..
கரைகிறேன்...
உடல் மட்டும் அந்நியமண்ணில் 
உயிர் மட்டும் பிறந்த மண்ணில்
உன்னையும் சேர்த்து
உறவுகளையும் விட்டு 
துறவியாய் வாழ்கின்றேன்..!


(அன்னிய மண்ணில் வாழும் எம் சகோதரனுக்காகவும் , சகோதரிக்காகவும் )







4 comments:

அ.முத்து பிரகாஷ் said...

பிரிவின் காலங்களில் பெய்யும் மழை கொடுமை! பெய்யப் பெய்ய அதிகரிக்கும் தனிமை!

மோகன்ஜி said...

பிரிவுகளின் கனத்தை பாசங்கள் நிர்ணயிக்கின்றனவா? அல்லது பாசங்களின் ஆழத்தை பிரிவுகள் நிர்ணயிக்கின்றனவா?

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரிவு எப்போதுமே கொடுமையானது நண்பா

அன்பரசன் said...

ஒத்தை வரியில சொல்லணும்னா பிரமாதம்ங்க

Post a Comment