Thursday, July 13, 2017

செகாவ் அமைக்க நினைத்த சானிடோரியம் கேட்கின்றோம் உதயா...!

தொடர்ந்து கல்வியில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் கல்விச் செயலர் குறித்து சொல்லாமல் இருக்க இயலவில்லை. மிக அருமையான திட்டங்கள் வழி மொழிகின்றார். அரசும் அவர் மீது நம்பிக்கை கொண்டு செயல்படுத்துகின்றது. பாராட்டுகள். குவான்டிட்டி சரி செய்யும் உங்களிடம் ஒரு கேள்வி. அரசு பள்ளிகளை தரமான பள்ளிகளாக மாற்ற சுமார்ட் வகுப்பறை போன்ற திட்டங்களால் கொண்டுவருவது சாத்தியமே! ஆனால், அதனை கண்காணிக்க எப்போதும் அரசு தவறுகின்றது. ஏன்?
கண்காணிப்பு என்பது பயிற்சியில் மட்டுமா? அது போதுமா? பயிற்சியில் பெற்றவற்றை வகுப்பறைகளில் கொண்டு சேர்க்கின்றனரா? அதனை யார் சரி செய்வது?
இதனை வாசிப்பவர்கள் அவரிடம் எனது கேள்விகளை கொண்டு செல்லக்கூடும்.
மானிட்டரிங் குறித்து குறிப்பிடும் போது பயிற்சியின் போது மட்டும் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட்டால் தரம் நிச்சயம் உயர்த்தப்படும். பலஅரசு பள்ளிகளில் சரியான கண்காணிப்பு இல்லாததால் போதிய வசதிகள் இருந்தும் குழந்தைகள் இருந்தும் கல்வியின் தரம் குறைவால் ஆங்கில வழிக்கல்வியை தனியாரிடம் நாடிச் செல்கின்றனர்.

அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களை கண்டிக்கும் உரிமை தலைமையாசிரியர்களுக்கு முழுமையாக தரப்பட வேண்டும். ஆன் லைன் மூலம் தினசரி வகுப்பறை நிகழ்வுகளை  தலைமையாசிரியர்கள் அப்லோடு செய்ய  வேண்டும். அதற்கான செயலியை ஏற்படுத்த வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இரு அதிகாரிகள் நியமிக்கப் பட்டு ஒருவர் நிர்வாகத்திற்கும், மற்றொருவர் பள்ளிகளை கண்காணிக்கவும் இருப்பதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு உடனடியஅளிக்கவும் அதே வேளையில் பள்ளிகள் தரம் மிக்க கல்வியை அளிக்கவும் இயலும்.
தற்போது உள்ள நிலையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் தகவல் கொடுக்கவும், நிர்வாகப்பணிகளை சரி செய்யவும் இருப்பதால் பள்ளிகளில் அசிரியர்கள் கண்காணிக்கப்படுவதில்லை. முழுமையான கல்வி போய் சேருவதில்லை.  பாடப்புத்தகங்களை அரசு பாடநூல் நிறுவனமே பள்ளிகளுக்கு கூடுதலாக பணியாளர்களை நியமித்து வழங்கலாம் அல்லது காண்ட்ராக்ட் முறையில் ஏலம் கொடுத்து புத்தகங்களை பள்ளிக்கு அனுப்பலாம்.

மிக முக்கியமான ஒன்று.. ஆசிரியர்கள் கல்வி குறித்தும் கல்வியின் இன்றைய நிலை குறித்து பேசுவதற்கான தளத்தை ஏற்படுத்த வேண்டும். அவசியம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். ரஷ்ய புகழ் பெற்ற எழுத்தாளர் ஆண்டன் செகாவ் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது சக எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி அவரை பார்க்க சென்றார். அப்போது பேசும் போது , ஒரு சானிடோரியம் அமைக்க இருக்கின்றேன் என்று செகாவ் கூறியுள்ளார்.
அவர் நோய்வாய் பட்டு இருந்ததால், கார்க்கி கிராம பகுதியில் நல்ல தொரு மருத்துவ சிகிச்சை மையம் தேவை என நீங்கள் கருதுவது சரியே என்றார்.

உடனே செகாவ்  நான் சிகிச்சை மையம் அமைக்க விரும்புவது நோயாளிகளுக்கு அல்ல. ஆசிரியர்களுக்கு. உண்மையில் அது என்னுடைய கனவு. இந்த இடத்தில் நிறைய தங்குமிடங்கள் அமைத்து ரஷ்யா முழுவதும் உள்ள ஆசிரியர்களை அழைத்து வந்து தங்க வைத்து அவர்களுக்கு கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலையும் முக்கியத்துவத்தையும் எடுத்து சொல்ல வேண்டியிருக்கிறது.
இன்றைய ஆசிரியர்களை ஒரு நோய் பற்றியிருக்கிறது. அது கல்வி குறித்த அலட்சியம். அது களைந்து எறியப்பட வேண்டிய நோய். அதுவே ஆசிரியர்கள் இங்கு தங்கிக் கொண்டு நிறைய படிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். அத்துடன் அவர்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் செகாவ்.

நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் பல ஆசிரியர்கள் அலட்சியமாகவே இருக்கின்றார்கள். ஆகவே , கல்விச் செயலாளரே ஆசிரியர்கள் தொடர்ந்து கல்வி குறித்து பேசுவதற்கு விவாதிப்பதற்கான அரங்கை மாவட்டம் தோறும் ஏற்படுத்தலாமே..!

மதுரை சரவணன்.

Thursday, September 1, 2016

குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளே!

சிற்றுளிகளிடம் தோற்றவன்...!
*
இன்று மதியம் குழந்தைகளுக்கு வாய்ப்பாடு எளிமையாக கற்பது குறித்து கற்று கொடுத்தேன்.
"சார் , இவ்வளவு ஈசின்னு தெரியாம போச்சு ...இப்ப 20 வரை வாய்ப்பாடு எளிமையாக தெரியுமே" என தர்ஷினி கூறினாள்.
நான் பெருமையாக , இன்னும் நிறைய விசயம் தெரியும். ஒரு நாளைக்கு ஒண்ணு தான் என்றேன்.
அருகில் இருந்த யுவராணி, நீங்க பெரிய ஆள் என்றால் நான் சொல்வதை சொல்லுங்க என்றாள்.
"ம்.. கேளு சொல்லுவேனே" என்றேன்.
ஒரு பேருந்தில் எட்டு பேர் புறப்பட்டார்கள் என நிறுத்தினாள்.
ம் கேளு என்றேன்.
நான் சொல்றதை சொல்லுங்க என்றாள். நான் அவள் சொல்வதை போன்றே கூறினேன்.
அடுத்த நிறுத்தத்தில் எட்டு பேரும் இறங்கிவிட்டார்கள். என்றாள். நானும் அதேப்போல் கூறினேன்.
இப்ப பேருந்தில் எத்தனை பேர் என கேட்டாள். இப்ப பேருந்தில் எத்தனை பேர் என்றேன். அட சொல்லுங்க சார் என அதட்டினாள்.
நான் உணர்ச்சி வயப்பட்டு , ஏன் அதட்டுற , எல்லாரும் இறங்கிட்டா பேருந்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றேன்.
சார், நீங்க சரியான முட்டாள். நான் சொல்றதை தானே சொல்ல சொன்னேன். கேள்விக்கு பதிலா கூற சொன்னேன் என்றாள். சுற்றி இருந்த அனைவரும் சிரித்தனர் .
" கல்லும் தகரும் தகரா கொல்லுலை கூடத்தினால் " என்றாள் பவித்ரா .
குழந்தைகள் மிக எளிமையாக ஆசிரியரின் கனத்தை உடைத்து விடுகிறார்கள். அதிகாரம் உடையும் போது ஜனநாயகம் பிறக்கிறது என்பதை உணர்கின்றேன். ஜனநாயக வகுப்பறையே குழந்தைகளை நம்மோடு என்றும் ஒன்றிணைக்கும்.
மதுரை சரவணன்

தாய் மொழி அறிவு அவசியம்


மொழி குழந்தைகளிடம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. குழந்தைகளின் திறமையை வளர்த்தெடுப்பதில் மொழி முக்கியப்பங்கு வகிக்கின்றது. மொழி திறன் பெற்றவர்கள் மிகவும் சிறப்பாக வகுப்பறையில் இயங்குவதை காண்கின்றேன்.
மொழித்திறன் அற்ற மாணவர்கள் தங்களின் உடல் உபாதைகளை கூட வெளிப்படுத்த சிரமப்படுகின்றார்கள். மாணவர்கள் சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் மொழி அவசியப்படுகின்றது. அதை விட வினைப்புரிவதற்கு மொழி முக்கியமாக உள்ளது.
இன்று காலை பால முருகன் என்ற மாணவனின் கன்னத்தில் நகக்கீறல் காணப்பட்டது. அவன் குற்றாலம் செல்வதாக கூறி சென்ற வாரம் வெள்ளி விடுமுறை எடுத்திருந்தான். ஆகவே , சென்ற இடத்தில் எதுவும் நடந்துவிட்டதோ? என பதறி கேட்டேன்.
“சார், குற்றால் போன்னேன்னா.. குளிச்சேன்னா.. ஏசுக்காரங்க வந்தாங்களா.. அப்ப குளிச்சேனா. ஏசுக்காரங்க என் பக்கத்தில் குளிச்சாங்க..” என இழுத்தான்.
“அப்புறம் என்னாச்சுடா” என பொறுமை இழந்த மாணவன் மணிகண்டன் கேட்டான்.
“சார்.. குளிச்சேனா.. குற்றால் மெயின் பால்ஸ்.. ஏசுக்காரங்க..சிலுவை போட்டு இருந்தாங்களா. நான் குனிச்சு குளிச்சேனா.. அவுங்க குனிஞ்சாங்களா..”
“டேய் காயம் எப்படி பட்டுச்சு.. குற்றாலம் போனா குளிக்க தாண்டா செய்வாங்க..” என்றாள் தர்ஷிக்கா.
“ஏசுக்காரங்க ... நிமிந்தாங்களா...அப்ப அந்த ...கிழிச்சிடுச்சு..”
“அந்த எது கிழிச்சிடுச்சுடா..?” திரும்பவும் மணிகண்டன் கேட்டான்.
“போடா.. சார்... நான் குளிச்சேனா..ஏசுக்காரங்க..”
“சார்.. எனக்கு புரிஞ்சு போச்சு..சார் இவன் குளிச்சப்பா பக்கத்தில் இருந்தவரின் சிலுவை கீறி விட்டு கன்னத்தில் காயம் உண்டாச்சு சார்....”என்றான் ஆதீஸ்வரன்.
“ஆமாம் ” என்றான் பாலமுருகன்.
தாய்மொழியில் பேசுவதற்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் திணறுகின்றார்கள். இதற்கு போதிய பயிற்சி இன்மை காரணம் என கூறலாம். அவனை குறித்த கேஸ் ஹிஸ்ட்டரியில் அம்மாணவன் இரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் பயின்றவன் என அறிய வந்தேன்.
தாய்மொழி முக்கியம் . அது மட்டுமல்ல. அந்த மொழியினை திறம்பட பயன்படுத்த ஆசிரியர்கள் போதிய பயிற்சி தர வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் கீரிடத்தை கழட்டி வைத்து பேசுவதற்கு அனுமதி தர வேண்டும்.
மாணவர்களோடு மாணவர்களாக இருக்கும் போது மொழி தங்கு தடையின்றி வெளிவரும் . பயம் போக்க வேண்டும். பயம் தாய்மொழியை கூட பேச அனுமதிப்பதில்லை. தடுமாறச்செய்து விடும்.
மொழியின் பயன்பாடு, செயல்பாடு குறித்து ஆசிரியர்கள் சிந்தித்தல் நலம் . அதற்கான பயிற்சியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
மதுரை சரவணன்.

அப்பா கிட்ட பேசி இருக்கீய்யா? கொஞ்சம் யோசிங்க!




*
சமூக அறிவியல் பாடம் நடத்தும் முன் வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்கள் குறித்து கூறுவது வழக்கம். இன்று மகாத்மா ஜோதிராவ் புலே குறித்து தெரிந்து கொள்வோம் என்றேன்.
மகாத்மா ன்னா காந்தி தானே ? என கேட்டாள், யுவராணி.
காலையிலே இன்று யாரை பற்றி கூற போகின்றீர்கள் என விசாரித்து , புலே பற்றி புத்தகத்தில் வாசித்திருந்த யோகேஷ் , " அவரு சுதந்திரம் வாங்கி தந்த்தால் மகாத்மா , இவர் இந்தியாவில் சமூக புரட்சி செய்ததால் மகாத்மா என்று கூறினான்.
புலே திருமண நிகழ்வில் கீழ்சாதி என விரட்டபட்ட பின்பு, ஏகத்துக்கும் புத்தகம் வாசித்தார். தாமஸ் பெய்னின் மனித உரிமை நூல் , அவரை ஈர்த்தது. அதில் சொல்லப்பட்டிருந்த விசயம் சார்ந்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தார். அடிமைத்தனம் என்ற புத்தகத்தை எழுதினார். அந்நூலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து எழுதினார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிக்கு கல்வி அவசியம் என எடுத்துரைத்தார். மனைவி சாவித்திரிபாய் வுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட , இல்லை , அன்று ஒட்டு மொத்த இந்திய பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார். உயர் சாதி மக்கள் கலவரம் செய்தார்கள். கல் எறிந்தார்கள் . அவரது தந்தை இவர்களின் தாக்குதலுக்கு பயந்து அவர்களை வீட்டை விட்டு துரத்தினார்.
" தற்போதைய சமுக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரை சார்ந்திருத்தல், கல்லாமை, அறியாமை, ஏழமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அப்போது தான் தாழ்த்தப்பட்டவர்கள் சுரண்டப்படிவதை தடுக்க முடியும். மூட நம்பிக்கை ஒழிப்பே சமூக_பொருளாதார மாற்றங்களுக்கு வழிகோலும் " என்ற ஜோதிராவ் புலே வரிகள் இன்றும் பொருத்தமாக உள்ளதை குறித்து சிந்தியுங்கள் என முடித்தேன்.
" சார்,
உண்மையிலேயே ஜோதிராவ் புலே அப்பா, அவரை வீட்டை விட்டு துரத்திட்டாங்களா? " என கேட்டாள் அம்மு.
ஆமாம். உயர்சாதியினர் கெடுபிடி. இதை பத்தி இப்ப புரியாது. வளர வளர நிறைய புத்தகம் வாசிக்க தெரிஞ்சுக்குவீங்க.இப்ப சார் ஒரு விசயம் கேட்பேன் , சொல்லுவீங்களா ? "
" சார், கேளுங்க சொல்றோம்"
"நீங்க உங்க அப்பா கிட்ட பேசி இருக்கீங்களா?"
அனைவரும் ம் என ஒரு குரலில் கத்தினர்.
" ஒவ்வொருத்தரா சொல்லணும் . கடைசியா, உங்க அப்பகிட்ட பேசியது குறித்து சொல்லுங்க "
சார், சார் என கையை உயர்த்த ...ஆதீஷ்வரன் என்றேன்.
" எங்க அப்பா எப்பவும் நைட் ரொட்டி தருவாரா? நேத்து அவரு ரொட்டி வாங்கிட்டு வரலை.. எங்க அம்மா எங்க அப்பா கிட்ட கேட்க சொன்னாங்களா...அப்ப எங்கப்பாட்ட போய்யீ..அப்பா அப்பா இன்னைக்கு ரொட்டி வாங்கலைய்யான்னு சொன்னேன். எங்கப்பா நாளைக்கு வாங்கி தர்றேன்னு சொன்னார்..."
" டேய் சார் கிட்ட ஜாலியா பேசுற மாதிரி ... பேசி இருக்கீய்யா...? "
" ம்...ஒரு தடவை எங்க பாப்பா வேகமாக ஒடி வர்றேன்னு கீழே விழுந்துட்டா.. எங்கப்பா அழுதுகிட்டே வந்த அவள பார்த்து போ கழுதை போ ..போ ன்னு சொன்னார்..இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்.. அவ வந்தா போ கழுதை என்று சிரிப்போம் " என்றான்.
சரி வேறு யாராவது ...பெண் குழந்தை என்றவுடன் தர்ஷினி சொல்ல ஆரம்பித்தாள்.
" கடைசியா ஞாயித்து கிழமை பேசினேன். ? "
" நேத்து பேசலைய்யா? "
" இல்லை சார., எங்கப்ப்பா வாரத்துக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவாங்க..? அதான் . "
" என்ன பேசின..? " என கேட்டான் ஆதிகர்ணன்.
" அப்பா , அப்பா டெய்லி உங்கள் பார்க்கணும்.ஊர்க்கு போயி வேலை பார்க்காம இங்கய்யே வந்துடுங்கன்னு சொன்னேன் " என்றாள்.
" வெளியூரில் என்ன வேலை பார்கிறார். எந்த ஊர்? " என கேட்டேன்.
" எந்த ஊர்ன்னு தெரியலை...ஊர் ஊர் போய் மிக்சர், பக்கோடா வித்துட்டு வருவார்ன்னு அம்மா சொன்னாங்க "
" சரி உங்க அம்மாட்ட பேசுவய்யா ? " என கேட்க,
உதடுகளை பிதுக்கி இல்லை என்றாள்.
ஏன் ?
" எங்கம்மா வேலைக்கு போறாங்க..்சாய்ங்காலம் வந்தா , எங்க தாத்தா வை பார்க்க பக்கத்தில் போய்டுவாங்க..தூங்கின உடனே தான் வருவாங்க.."
" அப்ப நைட் சாப்பாடு..."
" பக்கத்தில் ஒரு அத்தை கவனிச்சுக்குவாங்க.."
அவுங்க கிட்ட பேசுவய்யா?
" ம்..."
என்ன பேசுவ...?
" அவுங்க குட்டி பார்ப்பாவை சாய்ங்காலம் நான் தான் பார்த்து கொள்வேன். அவ பண்ற சேட்டையை சொல்வேன் .சிரிப்பாங்க "
" யாராவது பள்ளியில் நடக்கிற விசயங்களை பேசுவிங்களா? "
அனைவரும் அமைதியாக புரியாத வாறு இருந்தனர்.
" டேய்..உன் பரண்டு அடிச்சது...சார் திட்டினது இல்லை பாராட்டினது... நம்ம ஆத்துக்கு போனது...உங்க வீட்டு பக்கம் என்ன மண்ணு இருக்கு என்ன செடி வளருது...சொன்னது ..ஜாலியா சினிமா பத்தி " என விளக்கினேன்.
" அது வந்து சார்... "
சினிமா என்றதும் ஆதிகர்ணன் வேகமாக,
" சார், நேத்து நான் ...புட்டு வேணும்ன்னு எங்க அம்மா கிட்ட கேட்டேன். அப்ப ..எங்ம்மா உங்கப்பா கிட்ட கேளுன்னு சொன்னாங்க..நான் உடனே ..அம்பிகா தியேட்டர் போய் ...எங்கப்பா கிட்ட காசு கேட்டேன். உடனே கொடுத்துட்டார் . " என்றான்.
அவனின் அப்பா அம்பிகா தியேட்டரில் வேலை பார்க்கிறார்.
என் அருகில் இருந்த அன்புக்குரியவனை நீ அப்பா கிட்ட எப்ப பேசின...? என கேட்டேன்.
" சார், கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க பாப்பா ஓடி வர்றேன்னு கீழே விழுந்துடுச்சு, பக்கத்துல இருந்த சாக்கடையில் விழுந்து டிரஸ் அழுக்காகிடுச்சு...எங்கப்பா நல்ல குழந்தைகள் கிட்ட சேர்ந்தா நிதானமா வருவ என சொன்னாரு...எங்கம்மா அதுக்கு இங்க நான் ஒருத்தி துவைக்கிறதுக்கு இருக்கேன்ல ன்னு சொன்னாங்க... எங்கப்பா சிரிச்சுகிட்டு ...தோய்க்க தானே இருக்க நீன்னு சொன்னாரு.....அதுக்கப்புறம் ஜெயிலுக்கு போயிட்டார்..."
இப்படி ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடம் தேவைகளை கேட்பதையும், பெற்றோர்களிடம் திட்டு வாங்குவதையும் பேசுவதாக கூறினார்கள்.
தமிழ் வழி கல்வி குழந்தைகள் மட்டும் அல்ல . அனேகமான குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் நல்லது கெட்டதுகளை பகிர்ந்து கொள்வதில்லை் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் நல்லா படி , அதை செய்கிறேன் என்ற கண்டிசன் உடனே குழந்தைகளுடன் பொழுது கழிப்பதாக உணர்கின்றேன்.
கல்வி கொள்கை உருவாக்குபவர்கள் இதை எல்லாம் கணக்கில் கொள்வதில்லை. எந்த சிலபஸ்சிலும் இவர்களின் சிக்கல் குறித்து பேசப்படுவதில்லை. ஆனால் , எதை பத்தியும் கவலை கொள்ளாமல் மாணவர் நலம் பற்றியும் யோசிக்காத புதிய கல்வி கொள்கை குறித்து விவாதித்து தெளிவு பெற வேண்டும்.
மதுரை சரவணன்

Friday, August 26, 2016

குழந்தைகளின் அதிசய சக்தி..!


குழந்தைகள் மிக எளிய வழியில் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொள்கின்றார்கள். குழந்தைகளின் மன முதிர்ச்சி மிகவும் ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது.
பள்ளியிலும் சரி வீட்டிலும் குழந்தைகள் ஒரே மாதிரிதான் செயல்படுகின்றார்கள். குழந்தைகளை கையாள்வது என்பது மிகவும் சவாலான விசயமாக இருந்தாலும் , அவர்களை புரிந்து கொண்டால், குழந்தைகளை சமாளிப்பது எளிதான காரியமாகி விடும்!
குழந்தைகள் உலகம் அதிசயமானது. குழந்தைகள் தங்களுக்கென ஒரு உலகத்தை உருவாக்கி கொள்கின்றார்கள். அவர்களின் உலகில் சஞ்சரிப்பது மிகவும் எளிது. குழந்தைகளுடன் குழந்தைகளாக இருந்து பாருங்கள். அதுவே குழந்தைகளை புரிந்து கொள்வதற்கும், நமது குழந்தைமையை மீட்பதற்குமான உத்தியாகும். குழந்தைகள் உலகில் நாம் எளிதாக நுழைந்துவிட முடியும்.
மாலை சத்யா டிவியில் டோரிமான் பார்த்து கொண்டிருந்தான்.
‘பாலிங் நட்சத்திரம் (falling star) கீழே விழுகின்றது, அதை பார்த்து மூன்று முறை கும்பிட வேண்டும். அப்படி கும்பிட்டால், நாம் நினைத்தது நடக்கும்’ என வசனம் வந்ததும் ,சத்யாவை பார்த்தேன்.
“டாடி...பாலிங் ஸ்டார் என்றால் என்ன ? ”
”எரி நட்சத்திரம். மேலே இருந்து பூமியை நோக்கி நட்சத்திரம் கீழே விழும். அது காற்றில் பறந்து வரும் போதே...எரிந்து சாம்பலாகி விடும். அதனால் கீழே விழும் முன் மறைந்து விடும்.”
”ஓ !அதுவா.., எனக்கு தெரியும், டாடி.!.நான் பார்த்திருக்கேன். ஆமா டாடி கீழே விழுகிற துக்குள்ளே மறஞ்சிடுச்சு..டாடி “
”வெரி குட்... நாம் வெளியே போய் எரி நட்சத்திரம் விழுகிறதான்னு பார்ப்போமா?”
“டாடி நான் சொல்ற மாதிரி செஞ்சா நீ நினைச்சது நடக்கும்..”
”எப்படிடா..?”
”போ டாடி நீ எப்பவும் மறந்து மறந்து போயிடுற..”
“சாரி.. மன்னிச்சிடு.. தம்பி “
”டாடி.. தூங்கிறதுக்கு முன்னாடி நம்ம தலைமுடியை பிடிச்சிட்டு..நாம் மனசுகுள்ள எதையாவது நினைச்சு படுத்தா.. அது கட்டாயம் நடக்கும் டாடி..”
”ஓ ! சொன்னேயில்லே..!”
“டாடி, நான் போலீஸ் ஆபிசராகணும்.. திருடங்களை பிடிச்சு ஜெயி ல்ல போடணும்.. தப்பிக்க நினைச்சான் ஒரே சுடு டுமீல்.. அவ்வளவு தான்.. மக்கள் எல்லாம் பயமில்லாம நடக்கணும்.. வண்டியில் போகும் போது ஜெயின் அறுக்கிறவனை ஒரே போடு டுமீல் ...செத்துடுவான்...”
”போதும்சாமி...நீ வருங்கால ஐபிஎஸ் தான்! ”
“டாடி இன்னிக்கு நீ தூங்கிறதுக்கு முன்னாடி நினைச்சிட்டு படு...மறந்துடாம முடியை பிடிச்சுட்டு நினைச்சுக்க...நீ நினைச்சது நடக்கும்”
இப்ப தான் ஞாபகம் வந்தது .
இரண்டு மாதத்திற்கு முன்பு படுக்கையில் உறங்கும் முன் முடியை பிடித்துகொண்டு சிரித்தான்.
நான் பார்த்ததும் அவன் சிரித்தான். நானும் சிரித்தேன். என்ன பண்ற என கேட்டேன்.
“டாடி நான் போலீஸ் ஆபிசராகணும்ன்னு முடியை பிடிச்சு நினைச்சேன். என் ப்ரண்டு சொன்னான்”
நானும் முடியை பிடித்து கொண்டு இந்த முறை மதுரை புத்தக திருவிழாவில் நான் எழுதிய புத்தகம் வர வேண்டும் என்று நினைத்தேன்.
நினைவுக்கு வந்தது.
அப்போது நினைத்தது நடந்துவிட்டது.
குழந்தைகளாக இருப்பது வரம்.
கொஞ்சம் அவர்களோடு இணைந்து இருக்க வேண்டும். அதன் பின் குழந்தைகளை நம் போக்கில் வளர்ப்பது எளிதாகிவிடும்.
”சத்யா வா நாம் படிக்கலாம்..”
”வா டாடி.. தமிழ் முதலில் படிப்போம்..”
டிவியை அவனே அணைத்துவிட்டு வந்தான்.
மதுரை சரவணன்.

Tuesday, August 23, 2016

மொழி குழந்தைகளுக்கு முக்கியமானது...!

மொழி குழந்தைகளிடம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. குழந்தைகளின் திறமையை வளர்த்தெடுப்பதில் மொழி முக்கியப்பங்கு வகிக்கின்றது. மொழி திறன் பெற்றவர்கள் மிகவும் சிறப்பாக வகுப்பறையில் இயங்குவதை காண்கின்றேன்.
மொழித்திறன் அற்ற மாணவர்கள் தங்களின் உடல் உபாதைகளை கூட வெளிப்படுத்த சிரமப்படுகின்றார்கள். மாணவர்கள் சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் மொழி அவசியப்படுகின்றது. அதை விட வினைப்புரிவதற்கு மொழி முக்கியமாக உள்ளது.
இன்று காலை பால முருகன் என்ற மாணவனின் கன்னத்தில் நகக்கீறல் காணப்பட்டது. அவன் குற்றாலம் செல்வதாக கூறி சென்ற வாரம் வெள்ளி விடுமுறை எடுத்திருந்தான். ஆகவே , சென்ற இடத்தில் எதுவும் நடந்துவிட்டதோ? என பதறி கேட்டேன்.
“சார், குற்றால் போன்னேன்னா.. குளிச்சேன்னா.. ஏசுக்காரங்க வந்தாங்களா.. அப்ப குளிச்சேனா. ஏசுக்காரங்க என் பக்கத்தில் குளிச்சாங்க..” என இழுத்தான்.
“அப்புறம் என்னாச்சுடா” என பொறுமை இழந்த மாணவன் மணிகண்டன் கேட்டான்.
“சார்.. குளிச்சேனா.. குற்றால் மெயின் பால்ஸ்.. ஏசுக்காரங்க..சிலுவை போட்டு இருந்தாங்களா. நான் குனிச்சு குளிச்சேனா.. அவுங்க குனிஞ்சாங்களா..”
“டேய் காயம் எப்படி பட்டுச்சு.. குற்றாலம் போனா குளிக்க தாண்டா செய்வாங்க..” என்றாள் தர்ஷிக்கா.
“ஏசுக்காரங்க ... நிமிந்தாங்களா...அப்ப அந்த ...கிழிச்சிடுச்சு..”
“அந்த எது கிழிச்சிடுச்சுடா..?” திரும்பவும் மணிகண்டன் கேட்டான்.
“போடா.. சார்... நான் குளிச்சேனா..ஏசுக்காரங்க..”
“சார்.. எனக்கு புரிஞ்சு போச்சு..சார் இவன் குளிச்சப்பா பக்கத்தில் இருந்தவரின் சிலுவை கீறி விட்டு கன்னத்தில் காயம் உண்டாச்சு சார்....”என்றான் ஆதீஸ்வரன்.
“ஆமாம் ” என்றான் பாலமுருகன்.
தாய்மொழியில் பேசுவதற்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் திணறுகின்றார்கள். இதற்கு போதிய பயிற்சி இன்மை காரணம் என கூறலாம். அவனை குறித்த கேஸ் ஹிஸ்ட்டரியில் அம்மாணவன் இரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் பயின்றவன் என அறிய வந்தேன்.
தாய்மொழி முக்கியம் . அது மட்டுமல்ல. அந்த மொழியினை திறம்பட பயன்படுத்த ஆசிரியர்கள் போதிய பயிற்சி தர வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் கீரிடத்தை கழட்டி வைத்து பேசுவதற்கு அனுமதி தர வேண்டும்.
மாணவர்களோடு மாணவர்களாக இருக்கும் போது மொழி தங்கு தடையின்றி வெளிவரும் . பயம் போக்க வேண்டும். பயம் தாய்மொழியை கூட பேச அனுமதிப்பதில்லை. தடுமாறச்செய்து விடும்.
மொழியின் பயன்பாடு, செயல்பாடு குறித்து ஆசிரியர்கள் சிந்தித்தல் நலம் . அதற்கான பயிற்சியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
மதுரை சரவணன்.

Tuesday, June 28, 2016

எங்கள் வீட்டில் கழிப்பறை இல்லை , ஐயா!

*
இருப்பதிலே மிகப்பெரிய அவஸ்தையும், மிகப்பெரிய நிம்மதியும் மலம் கழித்தல் ஆகும்.
சிறுவயதில் இருந்தே கழிப்பறைகளை பயன்படுத்திய பலரும் காலை கடன் முடிக்க கிராமத்தினர் பலரும் படும் பாடு அறிந்திருத்தல் அரிது.
காரைக்குடிக்கு பெரியம்மா வீட்டிற்கு சென்ற போது திறந்தவெளி மலம் குறித்து அனுபவம் ஏற்பட்டது.
1980 வாக்கில் சென்றதாக நினைவு.
அக்காமார்கள் 4 அல்லது 5 மணி வாக்கில் , இன்னும் சரியாக சொல்லப்போனால் விடிந்தும் விடியாமலும் உள்ள நேரம், கையில் வாளியும், பித்தாளை செம்பும் எடுத்து சென்றார்கள். கோலம்போட செல்கின்றனர் என நினைத்து உறங்கி விட்டேன். நேரம் சென்று எழுந்து ஆய் வருது என்ற போது உங்க அண்ணன் கூட போ என்றார் பெரியம்மா.
அவர் வீட்டிற்கு வெளியில் அழைத்து சென்றார். நல்லா பார்த்துக்க நாளை பின்ன வந்தா நீயா தான் போகணும் . கம்மாய் ஆழம் ஜாஸ்தி . நான் காட்ற இடத்தில தான் கால் கழுவணும் என கண்டிசன் போட்டார். என் கண்டிசன் ரெம்ப மோசமாகவே கம்மாய் வரை தாங்காது என்றேன்.
அடக்கிக்க என்றார். வந்தவுடனே செல்லும் நகரத்து வாசியான எனக்கு பழக்கம் இல்லாததால் ஓரத்தை தேடினேன் . அங்க இருந்த ஆச்சி திட்டுவாங்க ..இன்னும் செத்த நட என அவசரப்படுத்த ...இரண்டு தெரு வரை திரும்பிய நான் தாங்க முடியாத அவசரத்தில் டவுசரில் இருந்து விட்டேன் .
அப்புறம் அண்ணன் வீட்டுவரை சென்று வாளியில் தண்ணீர் கொண்டு வந்து கழுவி, பின் அம்மணமாக டவுசரை இடது கையில் பிடித்து கூனி குறுகி நடந்து வந்தேன்.
வீட்டிற்கு வந்ததும் பெரியம்மா அந்த பீ த்த டவுசரை அப்படியே போட்டு வர வேண்டியது தானே என்றார். அழுகையாக வந்தது . அது இரண்டு மாதம் முன் தீபாவளிக்கு வாங்கியது.
பாவம் பெண்கள் நன்கு விடிந்த பின் செல்ல முடியாது. விடிவதற்கு முன்பே சென்று விட வேண்டும். அவர்கள் அவஸ்தை தனி.
வீட்டின் முன்புறம் வராண்டா இருக்கும். அதில் என் அக்கா அமர்திருந்தாள். வீட்டினுள் இருந்த பெரியம்மா அக்கா வீட்டுக்கு தூரம் . அவளை தொடாம வா என்றார். ஆய் வந்தா என்ன செய்வே என்றேன். விராண்டாவின் கடைசியில் மாடம் மாதிரி சதுரமாக கட்டி இருந்தனர். பள்ளமாக சறுக்கலாக குழி இருந்தது. அதில் ஆய் இருந்து மண் அள்ளி போடுவார்கள் என விளக்கம் அளித்தார். அதில் மறைப்பாக கோணி சாக்கு இருந்தது.
இன்று சக்கிமங்கலம் பகுதியில் இருந்து எங்கள் பகுதிக்கு வரும் பல மாணவர்களும் திறந்த வெளியில் மலம் செல்பவர்களே!
பல மாணவர்கள் அதன் கஷ்டத்தை உணர்ந்து பள்ளிக்கு வந்தே மலம் கழிக்கின்றனர்.
பல பள்ளிகளில் கழிப்பறை இருந்தாலும், அடைக்கப்பட்ட அல்லது திறந்த அரங்கில் பொது மேடை அமைத்து அதில் மலம் கழிக்கின்றனர். இங்கு முட்காடுகள் மட்டும் இல்லை. அதற்கு பதில் கான்கிரீட் தளம் .
திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது. அதனால் நோய்கள் பரவுகின்றன. வாஸ்தவம்.
ஆனால் இயலவில்லை. என்ன செய்வது?
பள்ளிகளில் செயல்படும் கழிவறைகளே, பல மாணவர்களுக்கு கழிப்பறை.
நவீன படுத்தப்பட்ட பல கழிப்பறைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் அழிவு நிலைக்கு ஒரு சில மாதங்களிலே சென்று விடுகின்றன.
கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் தமிழக கல்வி துறை தொடக்கப் பள்ளி அளவிலாவது அதனை பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இந்து செய்தியில் குஜராத் பள்ளிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பது குறித்த செய்தி படித்தேன். அங்கு மட்டும் இந்த நிலமை இல்லை. தமிழகத்திலும் தான்.
குழந்தைகளிடம் தான் நல்ல பழக்கத்தை விதைக்க முடியும் . குழந்தைகளிடம் இருந்து ஆரம்பிக்கும் ஆரோக்கியமே நிரந்தரம்.
நர்மதா கிராமத்தில் நடைமுறை படுத்தப்பட்ட இவ் விசயம் பாராட்டதக்கது. அதேவேளியில் கழிப்பறை கட்ட பணவசதி களை அரசும் ஏற்படுத்தி தர வேண்டும் . இல்லை எனில் வருகைப்பதிவேட்டு வாசிக்கும் போது இப்படி எங்கள் வீட்டில் கழிப்பறை இல்லை அய்யா என்பது பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் !
மதுரை சரவணன்
LikeShow More Reactions
Comment

Saturday, March 26, 2016

இரத்தமும் சதையுமானவை வகுப்பறைகள்!


வதங்தீகள் படுத்தும் பாடு!

பள்ளிக்கூடம் வெறும் சுவர்களால் உருவாக்கப்பட்ட வகுப்பறைகளாலானதன்று.  பள்ளிக்கூடங்கள் அம்மாவின் கருவறையைப் போன்றவை. குழந்தைகளின் கல்வியோடு பாதுகாப்பையும் முக்கியமாக  வழங்குபவை. குழந்தைகளின்  உண்மையான கனவுகளுக்கான கதவை திறப்பவை.


ஐந்துவிரல்கள் ஒன்றாய் இருப்பதில்லை. அது போல் தான் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. ஒருவர் அன்பால் குழந்தைகளை கட்டி வைக்கலாம். ஒருவர் தன் பிரம்பை காட்டி குரங்குகளை கையால்வது போல் வித்தை காட்டலாம். ஒருவர் எதையும் கண்டு கொள்ளாமல் ,குழந்தைகளின் போக்கில் விட்டுவிடலாம். ஒருவர் குழந்தைகள் விரும்புவதை செய்து , குழந்தைகளுடன் குழந்தைகளாக இருக்கலாம். ஆனால், அனைவரும் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்றே இச்செயல்களை செய்கின்றனர் என்பது தான் உண்மை!   

குழந்தைகளை பாத்ரூம் அனுப்பாத ஆசிரியர் குறித்து விசாரித்தப்படி பள்ளி மைதானத்தில் இருந்தேன். நான்கைந்து பேர் வேகமாக வந்தனர். என்ன என்று  விசாரித்தேன். அண்ணா நகர் பகுதியில் ஒரு பள்ளியிலும் கல்லூரியிலும் வெடி குண்டு வெடித்து விட்டதாக எங்கள் பகுதியில் ஒருவர் கூறினர். மேலும், இது போன்று காமராசர் சாலையில் சில பள்ளிகளிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக டிவியில் கேட்டதாக என் உறவினர் கூறினார். ஆகவே, எங்கள் குழந்தைகளை அழைத்து போக வந்தோம் என்றனர்.

இங்கு பாருங்கள் ! குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர். எல்லா குழந்தைகளும் படித்து கொண்டு இருக்கின்றனர். உங்களுக்கு கவலை வேண்டாம். இதெல்லாம் புரளிதான். இதே மாதிரி சில வருடங்கள் முன் எங்கள் பள்ளிக்கும் போன் வந்தது. விடுமுறை விட்டது தான் மிச்சம். எல்லாம் புரளி. கவலை விடுங்கள். உங்கள் குழந்தைகளை அழைக்கின்றேன். பார்த்து பேசி விட்டு செல்லுங்கள் என்றேன். அவர்கள் ஒத்து கொள்ளவில்லை. கடைசியில் அவர்களின் குழந்தைகளை அழைத்தே சென்றனர்.  

சிறிது நேரத்தில் ஈசலைப்போல் படையெடுத்து வந்தனர். முடிந்தவரை குழந்தைகளை அழைத்து செல்வதை தடுத்து பார்த்தோம். ஆசிரியர்கள் அனைவரும் பெற்றோர்களிடம் இது வெறும் புரளி என்று எடுத்துரைத்தனர். எந்த பிரயோஜனமும் இல்லை. படிப்பு போனா திரும்ப படிச்சிடலாம். உயிர் போனா திரும்பி வருமா! என்றவாரே அழைத்து சென்றனர்.

இந்த மாதிரியான வதந்தி காலம் காலமாக மக்களிடம் உயிர் பயத்தை கொடுத்துள்ளது. மேலும், மக்களிடம் எழும் இந்த பயம் எப்போதும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியுள்ளது 1665ம் ஆண்டில் லண்டன் மாநகரையே பிளேக் நோய் சூறையாடியது. பிளேக் நோய் லண்டன் நகரெங்கும் பரவிப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொள்ளையடித்து கொண்டிருந்தது. சேரிப்பகுதிகளிலும், மர வீடுகளிலும், தூய்மையற்ற சூழ்நிலையில் வாழும் மக்களிடையே இந்நோய் முதலில் பரவியது. குடும்பம் குடும்பமாக தெருத் தெருவாக மக்கள் மடிய ஆரம்பித்தனர். அரசனும், அரவையைச் சேர்ந்தவர்களும் சாலிஸ்பரி நகரத்துக்கு தப்பி ஓடினார்கள். நோய் அங்கும் பரவியது. பின் அரசனும், அங்கிருண்டவர்களும் ஆக்ஸ்ஃபோர்டுக்கு ஓடினார்கள். தப்ப முடியாத ஏழை எளியவர்கள் பரிதாபமாக இறந்தனர். அப்போது தவறான வதந்தி ஒன்று பரவியது.

பிளேக் நோய்க்கு காரணம் நாய்கள் தான். நாய்கள் தான் பிளேக் நோயைப் பரப்புவதாக யாரோ கூற, இந்த வதந்தி நகரெங்கும் பரவ தொடங்கியது. இதை நம்பி மக்கள் ஏரளமான நாய்களைக் கொல்ல ஆரம்பித்தனர். ஆனால், உண்மையிலேயே இந்த நோயைப் பரப்பி வந்த எலிகளைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போயிற்று.! லண்டன் நகரின் மக்கள் தொகையில் ஐந்தில்  ஒரு பங்கு மக்கள் இந்நோய்க்கு பலியாகி இருந்தனர். ஐந்து மாதங்களுக்குள் இந்நோய் முற்றிலும் நீங்கி விட்டது. அதற்கு பின் இன்று வரையில் லண்டனில் பிளேக் நோய் தலை காட்டவில்லை என்பது ஆச்சரியமே!

மக்கள் புரளிக்கு, வதந்திக்கு மதிப்பு கொடுத்து உடனடியாக உயிர் பயத்தில் நடவடிக்கை மேற்கொண்டாலும், இம்மாதிரியான வதந்திகளை ஏற்படுத்துவது யார்? தீவிரவாதிகளா? நிச்சயமாக இல்லை. இந்தியா மாதிரியான நாடுகளில் தீவிரவாதம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்திய சக்திகள் ஆங்காங்கே வெடிகுண்டுகளை வெடிக்க செய்து திசை திருப்பலாம். ஆனால், பள்ளிகளில் குண்டு வைக்கும் அளவுக்கு தீவிரவாதம் உருவாகவில்லை என்றே கருதுகின்றேன்.


பரீட்சையை நிறுத்துவதற்கும், பள்ளி விடுமுறை விட செய்வதற்கும் மாணவர்களால் செய்யப்படும் வதந்தியே ,இம்மாதிரியான வெடி குண்டு புரளிகள் உள்ளன . ஏன் மாணவன் இம்மாதிரியான புரளிகளை , வதந்திகளை பரப்ப வேண்டும். நம் கல்வி முறையில் அல்லது பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பிடிக்காத செயல் அல்லது மாணவர்கள் ஏற்று கொள்ள இயலா செயல் உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. வெடி குண்டு புரளிகளை ஏற்படுத்தும்  மாணவர்களை குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அல்லது யார் இப்படி போன் செய்யும் அளவுக்கு மாணவரை உருவாக்குவது ? கல்வி முறையா? ஆசிரியரா? 

மதுரை சரவணன்.

Wednesday, March 23, 2016

வு மருத்துவர்கள் நமக்கு வேண்டாமே!



நகரமையமாதல் , நவீன பொருளாதாரம் ஆகியவற்றின் பாதிப்பு மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. 100 ரூபாயில், ஒரு லட்சத்திற்கான (சம் அஸ்யூர்ட் ) ஆக்ஸீடென்டல் பாலிசி வழங்க பன்னாட்டு இன்சுரன்ஸ் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.
இன்சுரன்ஸ்சுக்கும் மாணவர் சேர்க்கைக்கும் என்ன சம்பந்தம்!
அட ..அது எக்ஸ்ட்ரா பேக்கேஜ் ஆகிடுச்சுங்க. ! ஆங்கில பள்ளிகள் குரூப் இன்சுரனரஸ்சை கையில் எடுத்து கொண்டு , தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் 1 (அ )2 லட்சத்திற்கான பாலிசி ப்ரிமியம் பள்ளியால் வழங்கப்படும் என விளம்பரம் படுத்துகின்றன. எனக்கு தெரிந்து ஒரு பள்ளியின் ஆண்டறிக்கையில் மாணவர்களின் குடும்ப நலன் கருதி இன்சுரன்ஸ் இவ்வாண்டு நடைமுறைபடுத்தப்பட்டதாக பெருமை பட்டு கொண்டார்கள்.
இன்றைய இளய தலைமுறை புதிய தொழில் நுட்பத்தை , நவீன அறிவியலை மிக எளிதாக உள்வாங்கி , நம்மை பிரமிக்க வைக்கின்றனர். ஒவ்வொரு ஆசிரியரும் தன்னைப் புதுப்பித்து கொள்ள வேண்டும் என்பது ஏட்டில் அல்லவா இருக்கிறது. ஆசிரியர் மாணவனை விட பின் தங்கியே இருக்கின்றனர்!
மாணவர் சேர்க்கைக்கு நம்மிடம் எந்த பேக்கேஜ் வும் இல்லை. இருக்கிற நவீன கற்றல் முறையையாவது தூக்கி பிடிக்க வேண்டாமா?!
இன்னும் நாம் பழைய கல்வி முறைகளை தூக்கிபிடிக்காமல் , மாணவர்களை மையப்படுத்தும் கல்வி முறையை கையில் எடுக்க வேண்டும் . இது காலத்தின் அவசியம். பழைய முறை வேண்டும் என்பது சீனாவின் 'வு' மருத்துவர்கள இன்று தேவை என கூறுவதை போன்றது.
அரிய மூலிகைகள் மூலம் நோய் நீக்கும் வித்தை அறிந்தவர்கள் , 'வு' மருத்துவர்கள் . ஆனால், கொள்ளை நோய் வரும் சமயத்தில் இம்மருத்துவர்கள் ஒன்று கூடி அரைநிர்வாணத்துடன் வெறி கொண்டு ஆடி, பாடி, நாக்கிலும் , உடம்பிலும் ஊசிகளைத் தைத்து, செந்நீர் சுரக்கும் நிலையில் மந்திரம் சொல்வார்கள். சிலர் , கத்தி முனை மீதோ, ஆணிகளின் மீதோ உடலைக் கடத்திக் கூக்குரல் இடுவார்கள். பேரொலியும் ஆரவாரமும் கூடிய இத்தகைய செயல்கள் மூலம் கொள்ளை நோய்க்கு காரணமான பிசாசுகளை விரட்டி, நோயிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள் .
பள்ளி விட்டு வீடு செல்ல பள்ளி வாகனத்திற்கு வரிசையில் நகர்ந்த சிறுவன் திடீரென்று கீழே விழுந்தது விட, பதறி ஓடினேன். கீழே விழுந்தவன் கை கால்கள் வெட்ட ஆரம்பித்தன. அச்சம் , பயம் தொற்ற அவன் அருகில் செய்வதறியாது , அவன் பெயரை அழைத்து ஒன்றுமில்லை என்றேன்.
என் அருகில் இருந்த மூன்றாம் வகுப்பு மாணவன் , " சார் பதறாதீங்க... வெட்டுறது கொஞ்சம் நேரத்தில் நின்றுவிடும். காற்று விட்டு நில்லுங்கள். அவன் பல்லுல் நாக்கு கடிபடாம இருக்க கர்சீப் கொடுங்க . தலை கல்லு மேல மோதிடாம பார்த்து கங்க...." என்றான்.
அம்மாணவன் கூறியது. போல் எதுவும் நடக்காதது போல் எழந்து நின்றான். " சாரி சார்., மதியம் மாத்திரை போட மறந்துட்டேன் " என்றான். விசாரித்த போது , மண்டையில் உள்ள இரத்தக் கட்டி நரம்பில் உருண்டு ஓடும்போது இம்மாதிரியான தலை சுற்று, வலிப்பு வருமாம்.கட்டி கரைக்க சிகிச்சை மேற்கொள்வதாக கூறினான்.
அருகில் இருந்த மூன்றாம் வகுப்பு மாணவனிடம் எப்படி இவனை பற்றி தெரியும் என கேட்டேன். சார் , இரண்டு வருசமா இவன் எங்க ஏரியால இருக்கான். இப்ப எங்க எரியாவில் டைல்ஸ் கல் பதிச்சுட்டாங்க . இவன் கீழே விழுந்து மண்டையை உடைச்சுக்கிறான்னு , மண் ரோடுக்கு போயிட்டாங்க, அதுனால தெரியும்., மூளையில் இரத்தம் கட்டி உருளுதாம் என்றான்.
தேன் கலந்து மருந்த சாப்பிட சொல்லுங்க , சார் என ஆலோசனையும் வழங்கினான், சித்தனை போல், அம் முன்றாம் வகுப்பு மாணவன்.
இம்மாணவரை நல்வழிப்படுத்தி ஆர்வம் ஊட.டினால் , நல்ல தமிழ் மருத்துவனாக்கலாம் . சித்த மருத்தும் தாங்க தமிழ் மருத்துவம். சித்த மருத்துவர்களில் தலையானவர் அகத்தியர் .இவர் முப்பத்தெட்டு நூல்கள் எழுதியுள்ளார். சித்த வைத்தியத்தில் தேன் முக்கிய அங்கம் வகிக்கிறது.
மூன்றாம் வகுப்பிலே அனுபவ வைத்தியனாக , ஆசிரியரை விட தெளிவாக இருக்கும் மாணவர்களிடம் மீண்டும் பழைய முறையில் தான் பாடம் நடத்துவேன் என்றால் என்னாவது.?
ஆங்கில பள்ளிகள் மாணவர்கள் மதிப்பெண்களுடன் , உடல் நலன், எதிர்காலம் , மருத்துவம் , இன்சுரன்ஸ் என சர்வ பலத்தையும் உபயோகித்து மாணவர் சேர்க்கையை எதிர் கொண்டுள்ள இந்நேரத்தில் , நாம் கற்பித்தல் முறையை குறை கூறுவதை தவிர்த்து, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை விட பல மடங்கு சம்பளம் பெறுகிறோம் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை தக்க வைக்க முடியும்!
மதுரை சரவணன்.

Tuesday, March 22, 2016

யாரை பிடிச்சா காரியம் நடக்கும்? !




இன்று மாலை அமைதியாக அம்மா வீட்டில் அமர்ந்திருந்தேன். வாசலில் யாரோ நிற்பது போல் நிழலாடியது. யாரே வருகின்றார்கள் என நினைத்து எழுந்து வாசல் கதவை  திறந்தேன். இரண்டு பெண்கள் நின்றிருந்தார்கள். என் மொட்டை தலையை பார்த்ததும், கொஞ்சம் அதிர்ந்து , மெதுவாக பேச துவங்கினார்கள். “சார், ஸ்கூலில் சேர்ப்பது போல் குழந்தை இருக்கின்றதா?” என ஆரம்பித்தார்கள். “ம் “ என்றேன். மதுரையில் சமீபத்தில் தொடங்கிய மெட்ரிக் பள்ளியில் இருந்து வந்திருந்தனர்.

“சார்.. எங்க பள்ளியில் சேருவதற்கு ஒரு லட்சம் டெபாசிட் கட்டணும். அதற்கு நாங்க ஸ்கூல் அருகிலேயே ஒரு கிரவுண்டு இடம் பதிந்து தருகின்றோம். நீங்க விரும்பினா இரண்டாவது வருடம் படிக்கும் போது அங்க வீடு கட்ட நாங்களே லோன் வாங்கி தருகின்றோம். பீஸ் கட்டுற மாதிரி எங்க ஆபீஸ்லேயே நீங்க லோன் அமண்ட கட்டிக்கலாம். உங்க பையனோட கனவோட உங்க கனவும் நிறைவேறி விடும். பள்ளிக்கூடமும் வீடும் ஒண்ணா இருந்தா.. பிள்ளைகள் படிப்புக்கு பல மைல் தூரம் செல்ல வேண்டியது இல்லை” என என் வாயை அடைத்தனர்.

இன்னும் என் வாசலில் நிழல் ஆடிக் கொண்டு தான் இருக்கின்றது. அம்மா இறந்த துக்கத்தில் மன பிரமை எதுவும் பிடித்து விட்டதா? என யோசிக்க தொடங்கினேன்.

என் பள்ளி தோழன் செயிண்ட் மேரீஸ் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் வின்செண்ட் கதவை திறந்து உள்ளே வந்தான். “என்னடா… ஒரு வார்த்தை சொல்லவில்லை.  இன்று தான் ஆசிரியர்கள் கூறினார்கள் “ என துக்கம் விசாரித்தான். கவலைப்படாதே..! உனக்கு நண்பன் நான் இருக்கின்றேன் என்று ஆறுதல் கூறினான். மாமா , அக்கா எங்கே என விசாரித்தான். ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் வந்து ஆஸ்பத்திரியில் பார்த்திருப்பேனே என்றான். ஏண்டா அப்பலோ கிப்பலோன்னு நல்ல மருத்துவ மனையா சேர்த்திருக்கலாம் என்றான். அம்மா போக வேண்டும் என்று விதி. அம்மா இல்லாமல் தவிக்கவேண்டும் என்பது கர்ம பலன் என கூறினேன். மனச தேத்திக்க என கூறி கதவை சாத்தி சென்றான்.

அப்போலோவை பற்றி மனம் பயணித்தது. கிரேக்கர்கள் உடல் நலத்துக்கும் மருத்துவ கலைக்கும் தலைவனாக அப்போலோ எனும் கடவுளை வணங்கி வந்தார்கள். கிரேக்க புராணங்களில் அப்போலோவின் மருத்துவத் திறன்கள் குறித்து கொட்டி கிடக்கின்றன.

ஆஸ்பத்திரியில் இருந்த போது பலரின் குரலாக இதுவே இருந்தது. “ என்னப்பா.. இப்ப வைத்தியம் பார்க்கிறாங்க.. எல்லாத்துக்கும் ஒரு டெஸ்ட். அதுக்கு மேலே.. ஸ்கேன் ..ஸ்கேனுன்னு எடுத்து தள்ளி, ரிப்போர்ட்டுக்கு வெயிட் பண்ணி, பண்ணியில்ல வைத்தியம் பார்க்கிறாங்க..? அப்ப எல்லாம் நாடி பிடிச்சா போதும். இதுதான் வியாதி. இது தான் மருந்து. இந்த வியாதிக்கு இதை  உணவா எடுத்துக்கணும். இந்த உணவை தவிர்க்கணும்ன்னு டக்கு டக்குன்னு சொல்லிபுடுவாங்க… இப்ப எல்லாம் வைத்தியம் காச பிடுங்கிற வேலையா இருக்கு!”    

நோய்களை நலமாக்கும் ஒரு சிறந்த மருத்துவராக மட்டும் இல்லாமல், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் பெற்றவராக மருத்துவர் இருந்தால் எப்படி இருக்கும்! கிரேக்க புராணங்களில் அப்படி ஒரு மருத்துவர் இருந்தார்.  அவர் அப்போலோவின் மாணவனான, ஏஸ்கிலிபியாஸ் ஆவார். இறப்பவர்களை உயிர்ப்பித்ததால், சிக்கல் உருவானது! கிரேக்கர்களின் தலைமைக் கடவுளான சீயஸ், ஏஸ்கிலிபியாசின் மருத்துவ பணியில் குறுக்கிட வேண்டியதாயிற்று. ஆகவே, வான் இடியை வரவழைத்து ஏஸ்கிலிபியாசை கொன்றதாக, வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. கொல்லப்பட்ட பின்பும் ஏஸ்கிலிபியாசின் புகழ் அழியவில்லை. அவரது பெயரால், கிரேக்க நாடெங்கும் ‘ மருத்துவ கோவில்கள்’ நூற்றுக்கனக்கில் தோன்ற ஆரம்பித்தன.

இத்தகைய கோவில்களுக்கு நோயாளிகள் சென்று, உடலையும், மனத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு அருகேயுள்ள திறந்த வெளிகளில் படுத்து உறங்குவார்கள். இரவில் ஏஸ்கிலிபியாஸ் கனவின் மூலமாகவோ, நேரடியாகவோ வந்து நோயாளிகளைத் தொட்டு, நலமாக்குவதாக கிரேக்க மக்களிடையே நம்பிக்கை நிலவி வந்தது. பல பண்டைய மருத்துவக் கோவில்களின் இடிந்த பகுதிகளை கிரேக்க நாட்டில் இன்றும் பார்க்கலாம்.

பொதுவாக மருத்துவர்களை மக்கள் அனைவரும் கடவுளாகத்தான் பார்க்கின்றார்கள். கையை கூட தொட்டு பார்க்காமல் வைத்தியம் பார்க்கும் மேல்மட்ட வைத்திய முறையை நினைக்கும் போது கொஞ்சம் கவலையை வரவழைக்க தான் செய்கின்றது. ஃபேன் காற்றில் மாணவர் சேர்க்கை நோட்டீஸ் பறந்தது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது கொஞ்சம் பீதியை தான் கொடுக்கும் போல் தெரிகின்றது. யாரை என்ன செய்வது என்று தெரியவில்லை.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்க்கவே நினைக்கின்றார்கள். என் நண்பர் காமராஜ் அவர்களின் குழந்தையை சேர்க்க நண்பர்கள் குயவர் பாளையம் ரோட்டில் முதல் நாள் இரவு ஒன்பது மணியில் இருந்தே காத்திருந்தது மனதில் வந்து சென்றது. இன்றும் மார்ச் கடைசியில் அந்த பக்கம் ரோட்டில் மக்கள் படுத்திருப்பதை காணலாம். நல்ல பள்ளி என்பதற்கு பெற்றோர்கள் எதை அளவு கோலாக வைத்துள்ளார்கள்? பணமா? மதிப்பெண்ணா? குழந்தைகளின் ஒழுக்கம் சார்ந்த செயலா? குழந்தைகளின் முழு திறன் வெளிப்படுத்த முன்னெடுக்கும் பள்ளியா? இவை புரியாத புதிரே!

என் நண்பரை பார்த்து கேட்டேன்,  “உன் பிள்ளையை உன் பள்ளியில் சேர்ப்பாயா?” ”சேர்ப்பேனே …ஏன் கேட்கின்றாய் ?” என கேட்டார்.  “உண்மையாகவா ! மன சாட்சியுடன் சொல்லு..”  என்றேன்.  “ உண்மையான்னா.. என் மகன என் பள்ளியில் ஒன்றாவது, அப்புறம் நான்காவது, ஐந்தாவது மட்டுமே சேர்ப்பேன்” என்றான்.  சிரித்தேன்.  உண்மை. அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிலமை இதுதான். ஒரு சில ஆசிரியர்களை வைத்தே பள்ளிகள் இயங்குகின்றன. இந்த உண்மை கசக்க தான் செய்யும். எந்த பள்ளியிலோ மாணவர்கள் படித்தால் சரிதான்.

20 – 03-2016 இரவு நீயா நானா வில் இளங்கோ கல்லாணையின் பேச்சு அற்புதமாக இருந்தது. கேட்கவில்லை என்றால் யூ டியூப்பில் ஆவது பார்த்து அவரின் சீற்றத்தை உள்வாங்கி கொள்ளுங்கள். பத்ரி சொல்வது போல் இங்கு பள்ளிக்கல்வி அளவிலாவது அரசே பள்ளிகளை எடுத்து நடத்த வேண்டும். தனியார் கைகளில் பள்ளிகல்வி இருப்பது தான் ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம்.
பொது கல்வி முறை ஏற்படுத்த முடியுமா? தெரியவில்லை. ஆனால், பரவலாக பொது கல்வி குறித்த பேச்சை எடுத்து செல்வதன் வாயிலாக பெரும் போராட்டம் ஏற்படுத்தி, கல்வி அரசு மட்டுமே நடத்திட வேண்டும். அதையும் இலவசமாக தந்திட வேண்டும். கட்டாய இலவச கல்வி சட்டமே சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகள் கடந்தே நமக்கு கிடைத்துள்ளது. பொது கல்வி குறித்து நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் தான்?

இரவு வீட்டிற்கு சென்றேன். என் மனைவி காத்திருந்தாள். ”என்னங்க.. கல்வி புரட்சி அது இதுன்னு பேசி பொழுதை ஒப்பேத்திட்டீங்களே..! அரசு பள்ளியில் தான் சேர்க்கணும். அப்படி இப்படி சொல்லி. செண்ட்ரல் ஸ்கூலில் அப்பளிகேசன் போட்டீங்களே? ரிசல்ட் 18 தேதி போட்டுட்டான் பார்த்தீங்களா? “ விழி பிதுங்கி நின்றேன். “பேச்சு தான் வாய் கிழிய இருக்கு. உங்க பிள்ளையை சேர்க்க வழி பாருங்க.. சத்யா நம்பர் வரலைய்யாம்..யாரையாவது சிபாரிசு பிடிச்சு.. சேர்க்கிற வழிய பாருங்க.. இல்லை எங்க இஷ்டத்துக்கு ஒரு பள்ளியில் சேர்த்திடுவோம்..!”
“அட நாம் இப்ப அட்மிசனுக்கு யாரை பிடிக்கிறது? அட யப்பா சாமிகளா? செண்ட்ரல் ஸ்கூலில் சேர்க்க யாரை பிடிக்கணும் சொல்லுங்கப்பா?”


மதுரை சரவணன்.    

Friday, March 11, 2016

வாழ்க்கையில் கடன் மட்டும் வாங்க கூடாதுங்க.. நம்ம என்ன விஜய் மல்லைய்யாவா?

கடன் வாழ்க்கையில் வாங்க கூடாது இல்லைன்னா..?!
*
அந்த படிக்கட்டுகளை மிதித்து ஏறும் போது மனம் பதை பதைக்கின்றது. ;

எத்தனையோ முறை இந்த படிக்கட்டுகளில் ஏறி இருக்கின்றேன். பல ஆயிரம் ரூபாய் கட்டுகளை எண்ணி பையில் வைத்து கொண்டு எந்த வித பயமும் இன்றி என்னுடைய மோபட்டில் இந்த படிகளில் ஏறி இறங்கி வந்திருகின்றேன். இன்று ஏறுவதற்கு கால்கள் பின்னுகின்றன. தயக்கம் காட்டுகின்றன.

என்னை பார்த்தவுடன் சார் குட்மார்னிங் என்று அழைத்து உட்காருங்க சார் என ப்யூன் காட்டும் ஆர்வம் அப்போது என்னை பரவசப்படுத்தும். இப்போது அந்த ப்யூன் என்ன சொல்வானோ என்றப்படி பயந்து செத்து படிக்கட்டுகளில் ஏற வேண்டி இருகின்றது. பல லட்சங்களை சுமந்து ஏறிய போது எந்த பயமும் இல்லை. இன்று எந்த லட்சமும்...,அட போங்க எந்த பைசாவும் இல்லை இருந்தாலும் பயந்து சாக வேண்டி வருகின்றது.

முகத்தில் வியர்வை கொட்டியது. அப்படி ஒன்றும் வெயில் இல்லை. வெளியில் அப்போது தான் மழை பெய்து குளுமையாக இருந்தது. உள்ளுக்குள் அவ்வளவு நடமாட்டம் இல்லை. அந்த அறை குளிரூட்டப்பட்டு தான் இருந்தது. கர்சீப்பை எடுத்து துடைத்து கொண்டேன். தெரிந்தவர்கள் யாரும் இருக்கின்றார்களா என துடைப்பது போல் பார்த்து கொண்டேன்.

தூரத்தில் ஒருவர் என்னை போலவே மிகவும் பயந்து அமர்ந்து இருப்பதாக உணர்ந்தேன். அப்படி நினைக்க ஒரு காரணம் இருக்கின்றது. அவரின் முகபாவனைகள் நான் செய்வது போல் இருப்பதாக உணர்கின்றேன். அப்படி அவர் இருந்தால் ஆறுதல் தான்! அவரிடம் என்ன சொல்வார்கள், அவரை எப்படி நடத்துவார்கள் என்பது தெரிந்துவிடும்!

நான் அமர்ந்திருக்கும் இந்த வங்கியின் மேனேஜர் அறையில் இதற்கு முன் கொடுத்த மரியாதையை நினைத்து பார்க்கின்றேன். அது பொற்காலம். அப்போது எனது தொழில் பிரகாசமாக இருந்தது. கிடைத்த லாபத்தை எல்லாம் இங்கு தான் சேமித்து வைத்தேன். என்னுடைய அனைத்து பரிவர்த்தனைகளையும் இந்த வங்கியின் மூலமே நடத்தினேன்.

நான் நினைத்த அளவு எனது தொழிற்சாலை பெரியதாக இல்லை என்றாலும், எனக்கு அதுவே பெரிய தொழிற்சாலையாகவும், போதிய வருமானம் கொடுப்பதாகவும் இருந்தது. என்னை சார்ந்து 20 பேர் எனது தொழிற்சாலையில் வேலை பார்த்தனர். யாருக்கும் எந்த குறையும் வைக்காமல் கூடுதல் கூலியுடன் நேர்மையான முறையில் தொழில் நடத்தினேன். எனக்கென்று ஒரு சேமிப்பும் , ஒரளவு வசதியுடன் குடும்பத்தை கடன் இல்லாமல் நடத்தி வந்தேன்.

இந்த வங்கியின் மேனேஜர் என்னை பார்க்க தொழிற்சாலைக்கு வருவதாக கூறினார். நான் அவரை வாங்க என அழைத்திருக்க கூடாது!

ஆம்! நான் உள்ளே நுழைந்தாலே , சார் என ப்யூன் முதல் எல்லோரும் அழைப்பார்கள். கிளார்க் டீ குடித்தால் கூட ஓடி வந்து சார் டீ குடிங்க என்பார். மேனேஜர் அவரது அறையில் இருந்து எழுந்து வந்து எனது பெயர் சொல்லி அழைத்து உள்ளே வாருங்கள் என மரியாதையுடன் பேசி, எனது வேலையை உடனே முடித்து தருவார். இன்றும் எனது பெயரை உச்சரிக்கின்றார் ஆனால், வித்தியாசம் இருக்கின்றது.

அன்று வந்த வங்கியின் மேலாளர் தொழிற்சாலையை சுத்தி பார்த்தார். சொந்த இடமா? என்றார். இல்லை என்றேன். ஒத்திக்கு இருக்கின்றேன் என்றேன். வேறு சொத்து இருக்கின்றதா என கேட்டார். பத்து செண்டு சிட்டியில் இருக்கு என்றேன். உற்பத்தி அதிகரிக்கலாமே? என்றார். அதிகரிக்க வேண்டும் அதற்கு புதிய மிஷினரி வாங்க வேண்டும். கொஞ்சம் சேத்து வைக்கணும் . அதன் பின் தான் தொடங்கணும் . எப்படியும் இரண்டு வருடம் ஆகிடும் என ரெம்ப ஏமாளியாக கூறினேன். உடனே எந்த வித சலனமும் இல்லாமல், நீங்க ஏன் புதிசா மிஷின் இப்பவே வாங்க கூடாது? நீங்க ஓகேன்னு சொன்னா நீங்க எதிர்பார்க்கின்ற பணத்தை லோனா த்ர்றேன் என்றார். அவர் வலை விரிக்கின்றது புரியாமல், மிகவும் சந்தோசமாக சார் நிஜமாவா சொல்றீங்க ! நீங்க என் தெய்வம் என்றேன். தெய்வம் நின்னு கொல்லும் என்று சொல்வாங்க.. இப்ப என்னை மூணுமணிநேரமா நிக்க வைச்சு கொல்லுறான் ! அந்த மேனேஜர்.

சார் என்ற அந்த புயூன் இதோ வந்துவிட்டான்! அவன் எனக்கு இப்போது அளிக்கும் மரியாதையை பாருங்கள். என்னப்பா சேகர் ! ஏதாவது பணம் கொண்டு வந்தீய்யா..! மேனேஜர் வர்ற நேரம் கொஞ்சம் ஓரமா நில்லு.. இல்லைன்னா என்னை ஏன் உட்கார வச்சன்னு கேட்பார். வாங்கின கடனை கட்டுறதுக்கு துப்பில்ல.. உட்கார சீட் கோட்குதான்னு கேட்பார்..எதையாவது அடகு வச்சு கட்டிருப்பா..சேகர் நீ வை வாங்கிறத பார்த்தா எனக்கே கஷ்டமா இருக்கு. சரி சரி.. நான் பேசினா கூட அதுக்கும் சேர்த்து உன்னை தான் திட்டுவார்.. “

என்னிடம் இருந்த 10 செண்ட் இடத்தை அடகு வச்சு தானே பணம் தந்தீர்கள். இனி தருவதற்கோ இல்லை விற்பதற்கோ எப்படி முடியும். அந்த பத்து செண்டு இடம் வித்தா இப்ப 60 லட்சம் போகும். ஆனா , பேங்க் கடன்ல்ல அடகு வச்சிருக்குன்னு சொன்னா.. 40க்கும் குறைவா கேட்குறாங்க.. அதை வித்தாவது கட்டலாம்ன்னு நினைச்சா... நீங்க தான் ஏலம் விடுவேன்னு சொல்லுறீங்க.. ஏலம் விட்டு அதை விட குறைச்சு போச்சுன்னா.. மீதி பணத்துக்கு நான் என் கழுத்தை வித்தாலும் அடைக்க முடியாது. நானா பேங்குல லோன் வேண்டும்ன்னு கேட்டேன்! என மனதினுள்ளே புலம்பி கொண்டேன். வெளியில் பேசினால் நாண்டு சாகும்படி பேசுவார்கள்.

என்னப்பா சேகர். கொஞ்சமாவது சோத்தில் உப்பு போட்டு திங்கிறிய்யா.. சும்மா சும்மா வந்து பல்ல காட்டி வெக்கமில்லாமா திட்டு வாங்கிட்டு போற.. அடுத்து கூண்டில் ஏத்தி விசாரிக்க வைக்க போறங்க.. பேசாம சொத்த ஏலம் விட சொல்லி எழுதி கொடுய்யா..என கிளார்க் சண்முகம் திட்டி சென்றான்.

இதோ அலுவலகம் பொறுக்கும் ஆயா வருகின்றாள். எத்தனை முறை அவள் மகள் படிப்பிற்கு பணம் கொடுத்திருப்பேன். அவள் இப்போது எப்படி அழைப்பாள் பாருங்கள். என்னப்பா சேகர்..உன்னை நினைச்சாலே கஷ்டமா தெரியுதுப்பா.. என் மகளுக்கு உதவி செய்த இப்ப என்னன்னா நொடிச்சு போயிட்டா.. ஏதோ பத்து அம்பதுன்னா நான் கூட கொடுத்து உதவிடுவேன். நீ பாட்டுக்கு மேனேஜர் தர்றார்ன்னதும் ஒரு கோடி வாங்கிட்ட... சரியான ஆளுய்யா.. ஒண்ணு சொல்றேன் பொண்டாட்டி வீட்டில் எதையாவது வித்து கட்ட சொல்லு.. அவன் அவன் பொண்டாட்டியையயே வித்து லோன்னை அடைக்கிறான். நீ என்னடான்னா கவலை பட்டுகிட்டு இருக்க.. பிள்ளையை படிக்க வைக்கின்றேன்னு மேலும் கடன் ஆக்கி கிடாத.. பேசாம வேலைக்கு போய் சம்பாதிக்க சொல்லு கடனை அடை..”

நான் சொல்றது நிஜம்ங்க.. ஆனா நம்ப மாட்டீங்க..! இதை விட மேனேஜர் மட்டமா பேசுவார்ங்க..! அதை கேட்டா கொஞ்சம் பால்டால் வாங்கி சாக தோணும். செத்த பின்னாடி பிள்ளைகளையும் பொண்டாட்டியையும் கொடுமை படுத்துவாங்கண்ணு நினைச்சு பயமா இருக்கு. கடன் வாங்கிறவன் ஏன் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிறான்னு இப்ப தாங்க தெரியுது. தயவு செய்து பேங்க் காரன் மரியாதையா சார் அப்படி இப்படி பேசி நமக்கு லோன் தர்றான்னா வாங்கிடாதீங்க..!

ஒரு கோடி லோன். ஒரு வருசத்துல ஐம்பது லட்சம் அடச்சுட்டேன். மொத்தம் 60 தவணை. ஏன் கெட்ட நேரம் சரக்கு டெலிவரி பண்ணி, சரக்க எடுத்தவன் கொடுத்த செக் திரும்பிடுச்சு. ஒரு கோடி சரக்கு. ஏமாந்தது தான் மிச்சம். இப்ப நான் கடன் காரனா நிக்கிறேன். முன்ன எல்லாம் சிறியதா பண்ணிய போது காசு கொடுத்தா சரக்கு என்று இருந்தேன். அகல கால் வச்சதும் எல்லாம் கடன் ஆகி போச்சு.. நானும் கடன் ஆகிட்டேன். என் சொத்தும் அடமான மா இருக்கு. இப்ப சிறுசா நடத்தலாம். ஆனா என்னை நம்பி எவனும் வர மாட்டேன்னு சொல்றான்.. என்ன செய்ய ? “

என்னங்க பார்க்கிறீங்க நான் ஏன் சிரிக்கின்றேன் என்றா? இல்லீங்க மேனேஜர் அறையில் ஒட்டியிருந்த வாசகம் சிரிக்க வைத்தது. கஷ்டமர் இஸ் கிங் இன் அவர் சர்வீஸ் என்று இருந்தது. அதோ டிவியில் பாருங்க. கிங் பிஷர் நிறுவனர் மல்லைய்யா தப்பி ஓட்டம்ன்னு ஸ்க்ரோலிங் வருது..!
நான் என் பொண்டாட்டி வீட்டுக்கு போய் கடன் வாங்க போனேன். அங்கேயும் மோப்பம் பிடிச்சு வந்து இந்த மேனேஜர்.. மானக்கேட வஞ்சுட்டானுங்க்..!
இப்ப கூட கையில் இரண்டு லட்சம் கடன் வாங்கி கொடுக்க தான் வந்திருக்கேன். ஐம்பது லட்சம் தான் பாக்கி தரணும். ஆனா இவனுங்க வட்டி மேல வட்டி போட்டு இந்த மூணு வருசத்தில் எண்பது லட்சம் தரணும்ன்னு சொல்றான்.. கோட்டில் கேசு போட்டு பேசிக்க.. இல்லை...என மானக்கேட திட்டுறான்..!

வாழ்க்கையில் கடன் மட்டும் வாங்க கூடாதுங்க.!

வாழ்க்கையில் கட்னே கூடாதுங்க. இல்லீங்க நான் தப்பா சொல்றேன். கடன் வாங்க தெரிஞ்சிருந்தா.. வெக்கம் ரோசம் பார்க்காம 7000 கோடி 5000 கோடின்னு சுருட்டீட்டு வெளிநாட்டில் ஏமாத்தி வாழ தெரிஞ்சு இருக்கணும்ங்க..!
இதோ மேனேஜர் வந்துட்டார்.. காதை பொத்தீக்கங்க..!
மதுரை சரவணன்.

Wednesday, December 30, 2015

இரவின் தேவதைகள்...!

இந்த இரவின் சாட்சியாக இருப்பதில் பெருமை கொள்கின்றேன்..!
பரிசுத்த ஆவியின் பெயராலே , இந்த ஆண்டின் இறுதி நாள் இப்படி ஆரம்பிக்கும் என்று எதிர்பாக்கவில்லை.
கடுமையான காய்ச்சல், அசதி, உடம்பு வலி, மனவலிமை குன்றி மிகவும் நெந்து நூலாகி போய் இருந்த எனக்கு திடீரென்று புத்துணர்ச்சி ஏற்பட்டது.
ஓடி சென்று சென்ற ஆண்டின் நினைவுகள் குறித்து பதிவு ஒன்றை எழுதினேன். அதன் பின் நண்பர்களுக்குள் பிரச்சனை வேண்டாம் என்று பதிவு போட்டு, மூடிவைத்து , சாப்பிட்டு அமர்ந்த எனக்குள் ஒரு வேகம் உண்டானது.
புதிய தொடக்கமாக இருக்கட்டு என்று இரவு 9 மணி வாக்கில் வாக் ஒன்று போகலாம் என்று மெல்ல நடந்தேன். துணைவியாரும் வருகின்றேன் என்றார். எப்போதும் வாக் என்றால் போன் பேசும் தொலைவு தான் என்று அறிந்திருந்தார். வா..ஏன் இம்புட்டு சந்தேகம். கொஞ்சம் திணமணி தியேட்டரை சுற்றி வருவோம் என்று கிளம்பினோம்.
மனைவியுடன் வாக்கிங் போவதை அனேகமான கணவர்கள் ஏன் தவிர்க்கின்றார்கள் என்ற ரகசியத்தை முதன் முறையாக கண்டு கொண்டேன்.
அட நீங்க யோசிக்கிறது தப்பு! நாங்க ரெம்ப ஜாலி டைப். ஆனந்த விகடன் வாங்கவில்லை வாங்கி கொள்கின்றேன் என்ற போது வேண்டாம் என்றார். ஓகே நடைக்கு வந்து நிற்க வேண்டாம் என்று தலையாட்டி நடந்தேன். கொஞ்சம் தூரம் சென்றதும் ஒரு பேன்சி ஸ்டோர் ஒன்றை கண்டார். ஹேர் பேண்டு வாங்கி கொள்கின்றேன். இப்படி வரும் போது வாங்கினால் தான் உண்டு என்று புகுந்தார். ஹேர்பாண்ட், பொட்டு, கிளிப், என குறைந்த பட்சம் தொகைக்கு வாங்கி கொண்டார். பர்ஸ் எடுத்துட்டு வரலை.. நீங்களே கொடுத்திடுங்க என்றார். வாங்கியது என்னவோ 100 ரூபாய்க்கும் குறைவாக தான் ! தினமும் இப்படி வாக்கிங்க் போனால் என்னாவது!
ரமணா விஜய காந்த் போல் கணக்கு போட்டது மனசு! காலை மாலை இரண்டு முறை வாக்கிங் வந்தால், ஒரு மாதத்திற்கு ஆறாயிரம் ரூபாய்... ஒருவருடத்திற்கு அப்பா முக்கால் லட்சம். இதுவே, இருநூறு ரூபாய் என்றால் லட்சத்தை தாண்டும் போல் இருக்கின்றதே...!
அட , நிஜங்க.. நான் அநேகமான ஆண்கள், மனைவியுடன் செல்லும் போது காய்கறி, சமையல் சாமான்கள் வாங்கி வருவதை கண்டு இருக்கின்றேன். அடுத்த சில நாட்களில் தனி தனியாக வாக்கிங் செல்வதையும் கண்டிருக்கின்றேன். அதற்கான ரகசியத்தை முதல்நாளிலேயே கற்று கொடுத்த துணைவியார் வாழக பல்லாண்டு!
வாக்கிங் முடித்து இன்னும் சுறுசுறுப்பானேன். மூளை எப்போதும் போல் சுறு சுறுப்படைந்தது. கணினியை எடுத்தேன். இனி லேப்டாப் தொடக்கூடாது டாடி என்று கண்டித்த மகன் சத்யாவுக்கு தலைவணங்கி, புத்தகம் வாசிக்கலாம் என்றால் மனசு கேட்க வில்லை.
ஏதாவது ஒரு படத்துக்கு போகலாம் என்று தூண்டியது. ஓகே நல்ல விசயம். ஆனால், அம்மா அடிபட்டு கிடக்கின்றார். தங்கை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கொஞ்சம் உடல் நலம் தேறிய நிலையில் , புத்தாண்டில் வீட்டிலிருக்க வேண்டும் என்று இன்றே டிச்சார் ஆகி வந்திருந்தார். எப்படி என்ற போது என் மனைவியிடம் சிபாரிசு கோரினேன். சரி.. போங்க என அனைவரின் அனுமதியுடன் சினிமா சென்றேன்.
பாஜ்ஜிராவ் முடிவு செய்து சென்றால், இன்று இரவு காட்சி இரத்து.. பசங்க 2 அல்லது ஸ்டார்வார்ஸ் போங்க என்றார்கள். சரி ஸ்டார் வார்ஸ் தான் இப்போதைக்கு நமக்கு வாய்த்தது என்று முடிவெடுத்து சென்றேன். நாம் எதிர்ப்பார்ப்பது என்றுமே இராது. ஸ்டார்ஸ் என்னைக்கு சண்டை போட்டது! சாரி போட்டார்கள்.! படத்தை விட முக்கியம் ஒன்று இருக்குங்க. அதுக்கு தான் இந்த பதிவை இந்த நேரத்தில் எழுத தூண்டியது.
படம் சரியாக 12. 45 க்கு முடிந்தது. ஓடி சென்று வண்டியை எடுத்து ஸ்டார் செய்து வேகமாக ஓட்டினேன். யாருமற்ற பனி இரவில் சீறிப்பாயும் என் வண்டியின் வேகம் 40 கிமீ தான்..! இருந்தாலும் அது என்னை அச்சுறுத்தியது. வழி நெடுகிலும் நாய்கள் அலைந்து கொண்டிருந்தன. தனது வாய்ப்பை பறிகொடுத்த ஒரு நாய் என் முன்னே சீறிபாய்ந்து சென்ற வாகனத்தை ஏதோ ஒரு பாசையில் திட்டுவது போன்றே எனக்கு தோன்ற செய்தது.
குருவிக்காரன் சாலை ஒயின்சாப் வாசல் முன்பு ஒரு கும்பல் நின்று கைதட்ட என் முன்னால் சென்றவன் பிரேக் அடித்தான். அய்யோ ! மேதி விட்டேன் என்று நினைத்தேன். ஆனால், பிரேக் அடித்து நின்றேன். இன்னும் கூடுதல் வேகத்தில் வந்திருப்பேனால் போய்யே போய் இருப்பேன். இன்னேரம் எல்லாம் முடிந்திருக்கும். இப்படி ஒரு நல்ல காரியம் ஒன்றை பார்த்திருக்க மாட்டேன்.
சாலையை கடந்து மேட்டில் ஏறினேன். நாய்களின் கூட்டம் இந்த பக்கம் அந்த பக்கம் என 30 நாய்கள் . நம்ப மாட்டீர்கள். ஆனாலும் நம்பி தான் ஆக வேண்டும். எதுவும் குரைக்க வில்லை. இவை தங்களின் வெற்றியை கொண்டாடுகின்றனவா..! அல்லது இப்புத்தாண்டில் இருந்து என்னை போன்று வாய் திறக்க கூடாது என்று சபதம் போட்டுள்ளனா என்று தெரியவில்லை.! இப்போது என் வேகம் 30 கிமீ. வேகம் குறைய குறைய நிதானம் அதிகரித்து கொண்டே இருந்தது.
பைக்கை கணேஷ் தியேட்டர் தாண்டி திருப்பினேன். போலீஸ் கண்ட்ரோல் வேன் நின்றிருந்தது. கையில் தண்ணீர் பாட்டிலுடன் கான்ஸ்டபில் ஓடி கொண்டிருந்தார். யாரும் அடிபட்டு கிடக்கின்றார்களா என்று நோக்கினேன். எப்போதும் போல் மேல் அதிகாரிக்கு சேவை செய்து கொண்டிருந்தார். சாரி எப்போதும் போல் கடமையை செய்து கொண்டிருந்தார்.
என் முன்னால் ஆணும் பெண்ணுமாக உடலில் பேர்வையை சுற்றிகொண்டு பைக்கில் தெருவின் இரு மருங்கிலும் எதையோ தேடி கொண்டு நகர்ந்து கொண்டிருந்தார்கள். நான் கடமை யாற்றி கொண்டிருந்தவரை கவனித்ததால் அவர்களை மிஸ் செய்திருந்தேன். இப்போது மைனர் ஜெயில் வாசலில் இரு நாய்கள் மிக கோரமாக சாரி வேகமாக புணர்ந்து கொண்டிருந்தன. இது எதன் குறியீடு என்று யோசித்து நகர்ந்தேன். என்ன இலக்கிய பின் நவீனத்துவம்..! நீ நல்லா வருவடா சரவணா..! என்றவாரே கொஞ்சம் பைக்கை முடுக்கினேன்.
சற்று தொலைவில் சாலையின் எதிர் திசையில் ஒரு பைக்குக்கு அருகில் கும்பலாக நின்றிருந்தார்கள். நானும் பிரேக் அடித்து நின்றேன். ஆக்ஸ்சிடண்டா என்று கேட்டேன். எனக்கு முன்னால் நின்றவர் எனக்கும் தெரியலை..நானும் உங்களை போன்று தான் என்றார். சரியாக சி.எஸ்.ஐ. துவக்கப்பள்ளியின் எதிர்புற திண்ணையில் ஒருவர் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரின் அருகில் நின்ற ஒருவர் அவர் அருகில் அவரின் மூக்கிற்கு அருகில் சென்று எதையோ நுகர்ந்து கொண்டிருந்தார்.
நான் பதறி போய் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்கப்பா என்றேன். ஆனால் என் குரல் எவர் காதிலும் விழவில்லை. டேய் தண்ணி அடிக்கலை .. உண்மையிலே தெருவில் தூங்கிறவர் தான் என்றார். அடுத்த நொடியில் அவருடன் இருந்த அந்த பெண் (இளம் வயது ) படுத்து உறங்கியவரின் மீது போர்வையை போர்த்தி விட்டார். அதனை உடன் இருந்த இரு இளைஞர்கள் சரியாக போர்த்த உதவினார்கள். அப்போது அவர் எழுந்திருந்து, (முழுவதும் எழுந்திருக்காமல் , படுத்த நிலையில் அண்ணாந்து பார்த்து, ஆனந்தமாக) அந்த போர்வையை வாங்கி மகிழ்ச்சியில் போர்த்தி கொண்டார். இப்போது அவர்களை என் நிஜக் கண் கொண்டு கவனித்தேன். அங்கு மனித நேயம் பூத்திருந்தது. இரவில் ஒரு ஒளி விளக்கு சுடர் விட்டு பிரகாசித்தது. அந்த நிலவுக்கும் சூரியனுக்கும் போட்டியாக..!
ஐந்து பைக்குள்( மூன்று ஸ்பிள்ண்டர் வகை பைக், இரண்டு ஆக்டிவா ) ஒவ்வொருவர் கையிலும் போர்வை, பைக்கின் முன்னால் பைகளில் குறைந்தது 100 போர்வைகள் இருக்கும். இப்போது நன்கு உற்று கவனிக்கின்றேன். பின்னால் உட்கார்ந்திருந்த அனைத்து பெண்கள் தலையிலும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் குல்லா.
யார் கொடுத்தார்கள் என்பது பெற்றவரும் அறிய வாய்ப்பில்லை. எவருக்கு கொடுத்தோம் என்பதையும் கொடுத்தவர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவர்கள் பாத்திரம் அறிந்தே பிச்சை இட்டனர் என்பதை புரிந்து கொண்டேன்.
அவன் போதையில் மதி மயங்கி படுத்து கிடக்கின்றானா என்பதை செக் செய்த பின்பே தந்தனர். அதற்கு தான் அவன் அருகில் சென்றது என்று உணர முடிந்தது. ஏனெனில் அவனை சுற்றி பிளாஸ்டிக் டம்பளர்கள். அவர்கள் அறிந்திருக்க வாய்பில்லை. அருகில் டீக்கடை இருக்கின்றது என்பதை!
ஒன்று மட்டும் நிச்சயம். இந்த குளிர் வீட்டிற்குள் பாதுகாப்பாக உறங்கும் பலரின் உடலை பதம் பார்த்து காய்ச்சலை உருவாக்கி , சாவை கூட வரவழைத்துவிடும். தெருவில் எந்த வித போர்வையும் இன்றி , குளிரால் இறப்பவர் எத்தனை பேர்..!மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு குளிர் அதிகம் தான்..!
இவர்களுக்காக யோசித்து இவர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்த இந்த ஆண்களும் பெண்களும் எப்போதும் கலாச்சார இழுக்கானவர்கள் அல்ல.! ஆணும் பெண்ணும் இணைந்தால் தவறு என்ற எண்ணங்களை சுக்கு நூறாக்கி தூர எறியுங்கள். நாளைய எதிர்காலம் சிறப்பானதாக அமைவதற்கு இந்த இரவு சாட்சியாக எனக்கிருக்கின்றது.
நம்மை சுற்றி பல நி்கழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் பல நன்மை தருவதாகவும் உள்ளன. சில தீமை தருவதாக உள்ளன. ஆனாலும் , நம்மை கவர்வன தீமை தருவனவாகவே இருக்கின்றன. நாம் பல நல்ல விசயங்களை ஏதோ ஒரு சாதரண நிகழ்வுப்போல் கடந்து சென்று விடுகின்றோம். தீமை தருவன வற்றை பற்றி கொண்டு அதில் ஏதாவது நன்மை கிடைத்துவிடாதா என தொங்கி கொண்டிருக்கின்றோம். விசாலப்பார்வையால் இனி விழுங்குவோம்!
இந்த வருடத்தின் கடைசி நாளின் தொடக்கம் , நல்ல நிகழ்வை அடையாளப்படுத்தி அடுத்த வருடத்தின் சிறப்பை பறைசாற்றிவிட்டது. நண்பர்களே! இனி நாம் நல்லவற்றை மட்டும் காண்போம். நல்லவற்றை மட்டும் பேசுவோம். எல்லாம் நல்லவையாக மாறிட பாடுபடுவோம்.
தீமைகள் நோக்கோம். தீமைக்கு துணை போகாமால், சாரி தீமையை கண்டு உற்றால் தானே துணை போக..!
ஊர் பேர் தெரியாத, ஒரு கிறிஸ்துமஸ் தாத்தாவின் குல்லா எனக்கான அடையாளத்தை காட்டியது போல், உங்களுக்கான ஆன்மாவை திறக்க ஏதாவது ஒரு தாத்தாவோ, பாட்டியோ வருவார்கள்! நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன். எனக்கான பயணம் இனி பாசிடிவ்வான விசயங்களை நோக்கியதாக அமையும். எல்லாம் நன்மைக்கே.!
மதுரை சரவணன்.

Monday, December 28, 2015

பள்ளிக்கூடம் தொடர்..கட்டுரை 2ன் தொடர்ச்சி.

பேருந்தை துரத்தும் குழந்தைகள் !


முதல் வருடத்தில் அனுப்பானடி, மேல அனுப்பானடி, பால்பண்ணை, அண்ணாநகர்,  வண்டியூர் வரை பள்ளிப்பேருந்து அனுப்பப்பட்டது. அடுத்த வருடத்தில் ஆற்றங்கரையில் இருந்து சென்றவர்கள் களஞ்சியம் பகுதிக்கு குடி போய் உள்ளார்கள் என்றவுடன் வண்டி கல்மேடு சென்றது. அதன் பின் எல்.கே.பி நகர் சத்யா நகர் குடியிருப்பு வரை சென்றது. சத்யாநகர் செல்லும் போது அதன் ஆரம்ப பகுதியில் குடியிருப்பவர்கள் நரிக்குறவர்கள் ஆவர்கள். நரிகுறவர் குடியிருப்பு பகுதியில் பல குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தார்கள்.  அக்குழந்தைகள்  மூக்கு ஒழுகியும், அழுக்குபடிந்த தலையுடன் , வித்தியாசமான உடைகள் அணிந்தும் இருந்தார்கள்.  பள்ளியின் பேருந்தை வேடிக்கை பார்த்த வண்ணம் இருப்பார்கள். இவர்களையும் சேர்க்கலாமே என என்னை போன்ற இளவட்டங்கள் கூறுவோம். 




 எங்கள் பள்ளியில் பணிபுரியும் சீதா ஆசிரியர், “போதும்ப்பா….நீங்க பிள்ளைகளை சேர்க்கிற லட்சணத்தில் இது வேறவா..! உங்களால் அதெல்லாம் முடியாது. இது மாதிரி குழந்தைகளை தான் 1965 வாக்கில் நாங்கள் எஸ்.எம்.பி காலணியில் இருந்து பள்ளிக்கு அழைத்து வந்து,  குளிப்பாட்டி, புது ட்ரஸ் கொடுத்து படிக்க வைத்தோம். இப்ப எல்லாம் யார் செய்கிறாங்க..” என ஆதங்க படுவார். அப்போது எங்கள் பள்ளி வாகனத்தில் ஏறி பள்ளிக்கு வருவதற்கு குழந்தைகளிடம் எந்த கட்டணமும் வாங்குவதில்லை. ஏனெனில் இந்த மாணவர்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு புலம்பெயர்ந்ததாலும் எங்கள் உறவின்முறை சார்ந்த அரிசி ஆலைகளில் வேலைப்பார்த்ததாலும்,  குழந்தைகள் படிப்பு கெடாமல் தொடர வேண்டும் என்பதற்காகவும் நிர்வாகத்தினர் பணம் செலவழித்தார்கள்.

நரிக்குறவக் குழந்தைகள் எங்கள் பள்ளி வாகனம் வரும் போது பின்னால் துரத்தி வருவார்கள். ஏனெனில், அடுத்தடுத்து 50 அல்லது 100 மீட்டர் தொலைவுகளில் நிறுத்தங்களில் மாணவர்களை ஏற்றி கொள்வோம். பிற குழந்தைகள் ஏறுவதை ஏக்கத்துடன் வேடிக்கைப் பார்ப்பார்கள். ”சாமி.. ப்ரீய்யா தானே.. எங்க குழந்தைகளும் படிக்கலாமா? ”என்று அதன் தலைவர் சௌந்திரப்பாண்டியன் கேட்பார்.  ”படிக்கலாம். ஆனா குளிச்சு நீட்டா வரணும்” என்பார் அப்போதைய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர். (1998ல் எங்கள் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது)




ஆனால் தலைவர் வழியில் மக்கள் இல்லை. ஆம்! தலைவர் சரியாக இருந்தால் அவரை பின்பற்றுபவர்கள் சரியாக இல்லை. மக்கள் சரியாக இருக்க நினைத்தால் அவர்களை வழி நடத்தும் தலைவர்கள் சரியாக இருப்பதில்லை! அந்த நரிக்குறவ ஜனங்கள் தலைவரின் குரலுக்கு செவிமடிப்பதில்லை. அதையும் மீறி குழந்தைகளை சேர்க்க சென்றால்,  “சார்..அவருக்கு வேலையில்லை உங்களுக்குமா …என்னமோ கலெக்ட்ராக்க போறமாதிரி பேசுவார்…அடுத்தவாரம் வந்திட்டா திருவிழா வந்திடும்..( கார்த்திகை தாண்டி ஐப்ப , முருகன் சீசன்) நாங்க ஊருக்கு பாசி விக்க கிளம்பிடும் சாமி.. குழந்தைகளை யார் பார்ப்பா? ஹாஸ்டல் வச்சிருக்கீய்யா?”  என்பார்கள். ஆனால் குழந்தைகள் வேனில் போக வேண்டும் என்பதற்காக ஆசையில் நான் வர்றேன் என்று குரல் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் குளிக்காமல் இருப்பார்கள் என்பதால் சேர்ப்பதற்கு எந்த பள்ளியும் சேர்ப்பதற்கு தாயாராயில்லை.

எஸ்.எஸ்.ஏ திட்டம் வந்தவுடன் நரிக்குறவர் குழந்தைகளுக்காக உண்டு உறைவிடப்பள்ளி ஏற்படுத்தப்பட்டது. என்.ஜி.ஓ உதவியுடன் அக்குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்துக்கள் கற்றுதர ஏற்பாடு செய்யப்பட்டன. அத்திட்டப்படி, இக்குழந்தைகள் ஓராண்டு அல்லது இராண்டுக்கு பின் மெயின் ஸ்ட்ரீமில் அதாவது சாதாரண பள்ளியில் பிற மாணவர்களுடன் சேர்க்கப்பட வேண்டும் . ஆனால், திட்டமாக தான் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு சிலரே இந்த உண்டு உறைவிடப்பள்ளியில் இருந்து எல்லோரையும் போல் தினமும் பள்ளிக்கு சென்றனர். ஒரு சிலரே அருகிலுள்ள இளமனூர் துவக்கப்பள்ளியிலும், உயர்நிலைப்பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் எப்போதும் அந்த உண்டு உறைவிடப்பள்ளியில் தொடர்ந்தனர்.




நான் தலைமையாசிரியரான பின்பு மீண்டும் நரிக்குறவர் சங்க தலைவர் சௌந்திரப்பாண்டியன் வந்தார். 2006 ஜீன் மாதம் பள்ளியின் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவும், நரிக்குறவர் குழந்தைகளையும் ஏன் படிக்க வைக்க முயற்சிக்க கூடாது என்ற எண்ணத்துடன் எம் பள்ளியில் உள்ள எல்லா ஆசிரியர்களுடன் கலந்து விவாதித்து,  முடிவெடுத்து, நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அக்குழந்தைகளை சேர்க்க முன் வந்தோம்.  “காலை மூச்சி கழுவி அனுப்பி விடுங்கள். நாங்கள் அங்கு குளிக்க வைத்து கொள்கின்றோம்” என்றவாறு சேர்த்தோம். எங்கள் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்களின் வயதுக்கு தகுந்த வகுப்பில் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் படி பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்பு சேர்க்கை திட்டத்தின் படி சேர்க்கப்பட்டனர்.

அக்குழந்தைகளின் பெயர்கள் எனக்கு சிரிப்பை வரவழைத்தன. அட்மிசன் போடும் ஆசிரியர் வேகமாக ஓடி வந்து, “ சார்.. எல்லா குழந்தைகளும் சினிமா நடிகர்களின் பெயர்களை கூறுகின்றார்கள். தயவு செய்து நாளை பார்ம் பூர்த்தி செய்து கொள்வோம்” என்றார். அவர்களின் பெயர்கள் நக்மா, நதியா, குஷ்பு, அமலா, பிரபு, கார்த்திக், எம்.ஜி.ஆர்., அசோகன் என்று இருந்தன. அவர்களில் பீமன் வளர்ந்தவன் அவனை அழைத்து இவை தானே பெயர் என்றேன்.  “சார் , எங்க தாய்மார்கள் எல்லாம் இப்படி தான் பெயர் வைப்பாங்க “ என்றான்.


அக்குழந்தைகளை சேர்த்த ஒரு வாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இருந்து போன் பேசுகின்றோம் என்று பிஆர்டி ஒருவர் பேசினார்.  “சார் அந்த மாணவர்களுக்கு என்று உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகின்றது. நீங்கள் எப்படி அவர்களை உங்கள் பள்ளியில் சேர்க்கலாம்?” . “அவர்களுக்கு உண்டு உறைவிடப்பள்ளி எத்தனை வருடங்களுக்கு ? என்று கேட்டேன்.  “அதுவந்து சார்…அங்க படிக்கிற குழந்தைகளை நீங்க அள்ளிக்கிட்டு போறதா.. என்.ஜீ.ஓ கம்ப்ளெயிண்ட் அதான்..?” “சார்..அந்த அம்மாவை பேச சொல்லுங்க.. அந்த குழந்தைகளை நரிக்குறவர் சங்க தலைவர் சௌந்திர பாண்டியன் தான் சேர்த்துள்ளார். முடிந்தால் அவரிடம் பேச சொல்லுங்க என்று போனை கட் செய்தேன். பின்பு நேரில் அந்த என்.ஜி.ஓ வந்தார். எல்லா குழந்தைகளும் 3,4,5ம் வகுப்புகளில் பயில்வதை உறுதி செய்து, சேர்க்கை படிவத்தில் அவர்களின் பெற்றோரே கையெழுத்தும், ரேகையையும் வைத்திருப்பதை சரிசெய்துவிட்டு சென்றார். இன்று நானும் அந்த பி.ஆர்.டியும் நல்ல நண்பர்கள். அவரே திட்டம் திட்டமாக தான் செயல்படுகின்றது. கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும் கல்விமுன்னேற்றம் தேவை குறித்து உங்களை மாதிரி வெகுசிலரே யோசிக்கின்றனர் என்றும் கூறி சென்றார்.

நரிக்குறவர்கள் மராட்டிய வம்சத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் சிவாஜி படையில் பணிபுரிந்தவர்கள் ஆவார்கள். முகலாயர்களுடனான சண்டையில் தோற்றவுடன், முகலாயர்களின் அடிமையாக்கப்பட்டனர். அதன்பின் முகலாயகர்களிடம் இருந்து தப்பி, நகர வாழ்வை மறந்து,  காடுகளில் பதுங்கி வாழ்ந்தவர்கள். இவர்கள் காட்டில் நரிகளை வேட்டையாடி விரும்பி உண்டதால் இவர்களுக்கு நரிகுறவர்கள் என்று பெயர் வந்தது என்ற வரலாறும் உண்டு. இவர்கள் பேசும் மொழி வாக்ரிபோலி ஆகும். இதற்கு எழுத்துவடிவம் இல்லை. இவர்கள் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையினை கொண்டவர்கள். ஆனால் , தமிழ்நாடு அரசு இவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் கொடுத்தேன். அதற்குள் அவர்களின் தலைவர், “சார் , மனு கொண்டு வந்திருக்கேன். எங்களை மலைசாதி வகுப்பில் சேர்க்க வேண்டும். கையெழுத்து போடுங்கள் என்றார். மேலும் எங்க குழந்தைகள் இங்க படிக்கின்றார்கள் என்று சான்று வேண்டும்” என்று கேட்டார். இது நடந்த போது வருடம் 2009 ஆகும். மனுவினால் எதுவும் நிகழுமா? அதுவும் பட்டியல் மாற்ற முடியுமா? எனா எனக்குள் எண்ணம் ஓடிய போதும் வாய் தானாக கேட்க தொடங்கியது, “ஏங்க..எப்படி இது சாத்தியம்?”.  “சார்.. மனு போட்டுள்ளோம். எம்.ஜி.ஆர் மட்டும் இருந்திருந்தால் நாங்க எப்பவோ முன்னேறி இருப்போம். ” என்று கூறியப்படி படிவங்களில் என் முத்திரையுடன் கையொப்பம் போட்டார்.  “சார்.. தரலைன்னா எங்களுக்கு கொடுத்த ரேசன் கார்டை ஒப்படைக்க போறோம்” என்றார். (எல்லாம் சினிமா பார்த்து வளர்ந்த உலகம்)
 . 
அதன் பின் 2013ல் செய்தி தாளில் வந்த செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது. அரசியலைப்பு சட்டத் திருத்த மசோதாவில் நரிகுறவர் ஜாதியை சேர்க்க கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆக்ஸ்ட் 27 , 2013ல் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிய செய்தி வந்தது. நரிக்குறவர் அல்லது குருவிக்காரன் என அழைக்கப்படும் இவர்களை நாடோடி பழங்குடி பட்டியலில் சேர்த்து, ஏழ்மை நிலையில் உள்ள இவர்களுக்கு அரசியலைப்புச் சட்டப் பிரிவு 342 (1), 342 (2)ன் கீழ் அனைத்து உத்திரவாதங்களை வழங்குவது அவசர தேவையாகும் என்று முதல்வர் ஜெயலலிதா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் 36 ஜாதிகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.



அப்போது அது புரட்டாசி மாசம் ஆகும். 4ம் வகுப்பு படிக்கும் அமலா வேகமாக ஓடி வந்தாள். என் வகுப்பில் படிக்கும் பீமா வை பார்த்து, “ இவன் நேத்து மாட்டு இரத்தத்தை பச்சையா குடிச்சான் சார்” என்றார். ”சார்.. நாங்க எருது வெட்டி , அதன் இரத்தத்தை பச்சையா குடிச்சு , காளிக்கு கொடுப்போம். பொம்பள பிள்ளைக அங்க வரக்கூடாது, சார்.”
“சார்.. வாயை கழுவாம அப்படியே வாய் முழுசும் இரத்தம் வடிஞ்சு வந்தான், சார்”
நரிக்குறவர்கள் வித்தியாசமான பழக்க வழக்கம் கொண்டவர்கள். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து கடைசி வெள்ளிக்கிழமை தங்கள் பெட்டியில் வைத்திருக்கும் தெய்வத்தை எடுத்து மஞ்சள், குங்குமம் பூசி , வணங்கி ,  அரிசி மாவு, தேங்காய் படையலாய் வைத்து வெல்லத்துடன் பிணைந்து சாப்பிட்டு, இரவு முழுவதும் பாட்டு பாடி நடனம் ஆடுவார்கள். அப்போது ஆண்களும் பெண்களும் சாராயம் குடித்து தன்னை மறந்து ஆடுவது வழக்கம். ஆட்ட முடிவில் தெய்வத்திற்கு மாட்டை பலிக்கொடுப்பார்கள். மாட்டின் தலையை வெட்டியவுடன் அதில் இருந்து பீய்ச்சி வரும் இரத்தத்தை ஆண்கள் , வளர்ந்த சிறுவர்கள் பச்சையாக குடித்து நேர்த்தி கடன் செலுத்தி கொள்வார்கள். இந்த பலி கொடுக்கும் நிகழ்வில் பெண்களுக்கு இடம் இல்லை. ஆனால், பலி கொடுத்த மாட்டின் கறியை சமைத்து சாப்பிட அனுமதி உண்டு.

”சார்..என் பையில் இருந்த 1000 ரூபாயை காணவில்லை.” ஓடி வந்தார் 4ம் வகுப்பு ஆசிரியர்.      
நீங்கள் நினைப்பது சரிதான் எல்லோர் பார்வையும் கோணலாகவே இருந்தது. ஆனால் நான் தெளிவுடன் இருந்தேன். அதற்கு காரணங்கள் உண்டு. தினமும் இந்த குழந்தைகள் பள்ளி கேண்டினில் 500 ரூபாய் தாள்களை அல்லது 100 ரூபாய் தாள்களை கொடுத்து வேண்டிய திண்பண்டங்களை வாங்குவது வழக்கம். கொடுத்தவுடன் அங்குள்ள பொறுப்பாளர் வந்து ”சார், இந்த வகுப்பில் படிக்கும்.. இந்த பையன் ரூபாய் 500 கொடுத்துள்ளான். நான் வேண்டிய பண்டங்களை கொடுத்துவிட்டேன். ஆனால், சில்லறை கொடுக்க வில்லை. விசாரிங்க..யார் காசாவது இருக்க போகுது..”



“இருக்காதும்மா.. அந்த பசங்க.. திருடுற பசங்க இல்லை. உண்மையை பேசுறாங்க.. சூது தெரியாத பசங்க..உங்களுக்கு தான் வித்தியாசமா தெரியுது..” என்பேன்.
அவ்வாறு நிகழும் சிறிது நேரத்தில் அந்த பையனுடைய தந்தை மேல் ஆடை அணியாமல் தோலில் டப்பாவை போட்டு கொண்டு என் அறைக்கு முன்பு நிற்பார்.  “சார் …வேலைக்கு போகணும்.. என் மகன் பிரபு..காசை எடுத்துட்டு வந்துட்டான்.“ “எவ்வளவு? “ “முழுசா..500 ரூபா சாமி..” “ஏங்க 500 கேண்டீனில் கொடுத்தவுடன் திருடிட்டு …வந்துட்டான்னு நினைச்சுட்டாங்க..”
”சாமிய்யோ..எங்க சாதி ஜனம் திருடாது சாமி.... ஊசி பாசி வித்து உழைச்சு திங்கிற ஜாதி…இப்ப ஊர் திருவிழா நேரமில்லை..கையில் காசு பொளங்கும் ..அதான் கேட்காம எடுத்து வந்துட்டான்..மன்னிச்சிடுங்க..சாமி.. அவன் வாங்கின பொருளுக்கு காச நான் தர்றேன்..” என்றார்.
எப்போதும் நரிக்குறவர் குழந்தைகள் தவறு செய்யாதவர்கள் அல்லது செய்ய தெரியாதவர்கள் என்பது குறித்தே என் நினைவலைகள் இருந்தன.  இதுமாதிரியான நிகழ்வுகளை அவர்கள் இன்னும் பழகவில்லை. அல்லது கற்று கொள்ளவில்லை.

ஆசிரியர் குற்றம் சுமத்திய பையனை தனியாக அழைத்து பேசினேன். அவன் விசயத்தை கூறிவிட்டான். மேலும் அவன் பேரம் பேசப்பட்டதையும் ஒத்து கொண்டான். ஆம. நீ காட்டி கொடுக்காவிட்டால் உனக்கு 100 ரூபாய் தருகின்றேன் என்று அப்பணத்தை எடுத்த பையன் கூறியுள்ளான். இவன் மறுத்துள்ளதுடன் கட்டாயம் பெரிய சார் கிட்ட சொல்லுவேன் என்றும் கூறியுள்ளான். அனைவரும் திட்டமிட்டு இவன் மீது பலி சுமத்தி உள்ளனர்.
“சார்.. இந்த நரிக்குறவப் பசங்க எடுக்க மாட்டாங்கன்னு தெரியும்.. இருந்தாலும் மத்த பசங்களோட சேர்ந்து கெட்டு போயிட்டாங்களோன்னு நினைச்சுட்டேன்..”



இயற்கையோடு இணைந்து வாழும் இவர்கள் இயற்கைக்கு முரணாக செயல்படுவதில்லை. இவர்களிடம் உள்ள இயற்கை சார்ந்த பலவிசயங்களை நாம் கற்று கொள்ள வேண்டும். இந்த குழந்தைகள் சில பூச்சிகளை பார்த்து இன்று மழை வரும் என்று கணித்துவிடுவார்கள். இக்குழந்தைகள் செடி, கொடிகள், மரங்கள் மீது பற்று உள்ளவர்களாக இருக்கின்றார்கள். நரிக்குறவர்கள் குழந்தைகளுக்கு முறையான கல்வியை கொடுத்து , அவர்கள் கொண்டுள்ள இயற்கை வைத்திய முறைகளை நாம் காத்து கொண்டால், இயற்கையாக பல நோய்களை நாம் குணப்படுத்தி கொள்ள முடியும். ஆங்காங்கு உள்ள ஆசிரியர்கள் உண்மையான கல்வியை தர நினைப்பவர்கள் இக்குழந்தைகளை திரட்டி பெற்றோர்கள் உதவியுடன் கல்வி கொடுத்தால் நலமே! அதில் உண்டாகும் நடைமுறை சிக்கலை அரசு முன்னெடுத்து களைய வேண்டும். நடமாடும் வகுப்பறைகள் இவர்கள் கல்வி தொடர உதவும். எங்கோ பணிபுரியும் அரசு ஊழியர் எலக்சன் நேரத்தில், தகுந்த சான்றை பெற்று வாக்களிக்க முடியும் என்றால், இக்குழந்தைகள் பெற்றோருடன் ஊர் திருவிழாவிற்கு இடம்பெயரும் போது ஏன் ஒரு மொபைல் வகுப்பறையை உருவாக்க கூடாது?!

2013, டிசம்பரில் 19ல் நரிக்குறவர் ஜாதியை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிஷோர்சந்திர தேவ் அறிமுகம் செய்தார். இந்த சட்டத்திருத்த மசோதாவில் பழங்குடியினர் பட்டியலில் தமிழகத்தில் இருந்து “நரிக்குறவர்” சாதியும் சத்தீஸ்கரில் ”தனுஹர், தனுவார்” ஆகிய இரு சாதிகளும் சேர்க்க வலியுறுத்தப்பட்டது.



இப்போது சக்கிமங்கலம் சத்யாநகர் பகுதிக்கு மதுரையில் இருந்து எல்லா பள்ளிகளின் பேருந்துகளும் செல்கின்றன. ஆனால், இந்த இனத்தின் குழந்தைகள் இன்னும் பள்ளி பேருந்துகளை வேடிக்கை பார்த்தப்படியே உள்ளார்கள். அவர்களின் பெற்றோர்களும் இந்த குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முன் வர வேண்டும்! 

மதுரை சரவணன்.

தொடரும்.. பள்ளிக்கூடம்( அடுத்த கட்டுரையில் வித்தியாசமன பிரச்சனை குறித்து பேசுவோம்!)