Saturday, November 22, 2014

தள்ளாடும் மதுரை


சனிக்கிழமையாகி விட்டாலே பயமா இருக்கு. மாலை 5 மணிக்கு நண்பரை போனில் அழைத்தேன். இன்று மாலை சந்திப்போம் என்று கூறி இருந்தார். அதனை தொடர்ந்து பலமுறை போன் செய்தேன். அவர் எனக்கு எந்த பதிலும் தரவில்லை. வழக்கமாக எஸ்.எம். எஸ் அனுப்பிவிடுவார். வருகின்றேன். இல்லை நீங்கள் போங்கள் என்பார். ஆனால் இன்று அவரிடம் எந்த பதிலும் இல்லை. மழை துணையாக வந்து என்னோடு ஒட்டிக்கொண்டது.

போனை தொலைத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை. சரி அப்படியே நனைந்தவாரே என் அம்மா வீட்டிற்கு செல்வோம் என்று நினைத்தேன். அதற்கு முன் மீண்டும் ஒருமுறை போன் செய்து பார்ப்போம் என போன் செய்தேன். இப்போதும் அவர் எடுக்க வில்லை. நான் காத்திருக்கின்றேன் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு திரும்பி பார்க்கின்றேன். ஒருவன் என்னைப்பார்த்து பல் இளித்தான். புரியவில்லை. திரும்பி பார்த்தேன். என் பின்னால் எவரும் இல்லை. மீண்டும் சிரித்தான். அவன் தடுமாறி நடக்கும் போது சாராய அரக்கன் அவன் உடம்பில் இருப்பது தெரிந்தது, !

சரி இவனிடம் தப்பிக்க வேண்டும் என்பதற்காக கல்கி வாங்க அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு புகுந்தேன். அங்கே ஒருவன் கடைக்காரரிடம் சிக்ரெட் தா .. நாளைக்கு காசு தருகின்றேன் என வாதாடிக்கொண்டிருந்தான். வருகின்ற கஸ்டமரை கவனிக்க இயலாத அவர், ஒரு சிக்ரெட் மட்டும் தந்து அனுப்பினார். சாய்ங்காலம் ஆயிட்டாலே இப்படி போதைக்கிராக்கிங்க வந்து உயிர எடுக்கிறாங்க..! தெரிஞ்சவன் சார், சிக்ரெட் தராவிட்டால் இங்கேயே டோரா போட்டு விடுவான். அப்புறம் கஷ்டமர்கள் சங்கடப்படுவார்கள் என புலம்பினார் .

சிரித்துக்கொண்டே அருகில் இருந்த டீக்கடையில் டீ குடிக்க ஒதுங்கினேன். போன் வந்தது. அவராக தான் இருக்கும் என நினைத்து ஹாலோ என்றேன். இது ஈரோடா என்றான். இல்லை மதுரை என்றேன். அட ஈரோட்டுக்கு போன் போட்டா மதுரைக்கு போகுது.. சரி கொஞ்சம் அப்படியே போன ஈரோடுக்கு கொண்டு போய் கொடு என்றான் போனில் பேசியவன். யாரோ தெரிந்தவர்கள் தான் கலாய்க்கிறார்கள் என நினைத்து, எனக்கு ஈரோட்டில் உள்ள பிரபலம் கதிரை தான் தெரியும் என பதிலுக்கு கலாய்த்தேன். அங்கே இருந்தவன், “ மாமு இவனும் போதையில் இருக்கான் போல தெரியுது. இவன் சரிபட்டு வர மாட்டான் என கட் செய்தான்.

கஷ்ட காலம் ! காலையில் இருந்து நான் யாருக்கு போன் போட்டாலும் போனை எடுக்க மாட்டேன் என்கின்றார்கள். இவர்கள் போனை உபயோகிப்பது எதற்கு? அவசரத்திற்கு கூப்பிட்டால் என்ன செய்வார்களாம் என மனதில் திட்டியப்படி டீ ஆர்டர் கொடுத்தேன். அப்போது ஒருவன் சார் 5 கொடுங்க.. டீ சாப்பிடணும் காசு பத்தலை என்றான். நான் வேறு சிந்தனையில் இருந்ததால் , அவசர பட்டு 5 ரூபாயை கொடுத்து விட்டேன். அவன் சென்று விட்டான். டீக்கடைக்காரர் சார் இப்படி யார் கேட்டாலும் கொடுக்காதீங்க சார். அவன் கட்டிங் போட கேட்கின்றான். அங்கே பாருங்க என்றார். அங்கே இன்னொருவரிடம் நான் கொடுத்த 5 ரூபாயை காட்டி, மற்றொரு 5 ரூபாய் பெற்றான். இப்படியே 100, 200 தேத்தி, 7 மணிக்கெல்லாம் போதையை போட்டு இந்த ரோட்டில் சலம்பி , கடைசியில் மட்டையாகி ரோட்டில் கிடப்பான் என்றார்.

கடைசி வரை நான் எதிர்பார்த்த நண்பர் வரவில்லை. அவரிடம் இருந்து அழைப்பும் வரவில்லை. மழை மட்டும் என்னோடு துணைக்கு இருந்து கொண்டே இருந்தது. அதுவும் என்ன நினைத்ததோ தெரியவில்லை. என்னோடு சேர்ந்து சுத்தினால், எதாவது பிரச்சனை வந்துவிடும் என நினைத்து ஒரு மணி நேரத்தில் அதுவும் டாட்டாக்காட்டி சென்றது. (மழை நின்றது ) அப்போது தான் பார்க்கின்றேன். அந்த டீக்கடையில் மழைக்கு ஒதுங்கியவர்கள் பாதிப்பேர் போதையில் இருந்ததை!

வண்டியை ஸ்டார் செய்தேன். வேகமாக தள்ளாடியப்படி ஒருவன் வந்தான். நிறுத்தினான். மாப்பிள்ளை இதுக்கு மேல வண்டி ஓட்ட முடியலை. எஸ்.இ.வி ஸ்கூல் முன்னாடி வண்டிய பார்க் பண்றேன். ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போறேன். வீட்டுக்கு வந்து சாவி வாங்கி எடுத்துட்டு வந்துடு என்றான். தெளிவாத்தான் இருக்காங்க என நினைத்தப்படி வண்டியை எடுத்தேன். ஆட்டோ வந்தது. அவன் ஏறினான். ஆனால் ஆட்டோ தள்ளாடியப்படி சென்றது.

சனிக்கிழமை மாலை ஆகிவிட்டாலே ரோட்டில் வண்டியை ஜாக்கிரதையாக தான் ஓட்ட வேண்டி இருக்கின்றது.
மதுரை சரவணன்.

4 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆஹா,,, நல்ல குடிமகன்கள்

”தளிர் சுரேஷ்” said...

எங்க ஊர்பக்கம் சனிக்கிழமை மட்டுமல்ல தினம் தினம் மாலை வேளைகளில் இப்படித்தான் ஊற்றிக் கெடுத்துக் கொண்டிருக்கிறது தமிழகம்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இது அன்றாடம் நடக்கும் ஆடல் கலைதானே... சொல்லிச் சென்ற விதம் நன்று
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே.....
ஒரே நாள்ல இத்தனை அனுபவமா???
தமிழகமே இப்படித்தான் இருக்கு... உங்கள் நடை மட்டும் செம தெளிவா இருக்கு...

Post a Comment