Tuesday, November 18, 2014

தயவு செய்து என் மீது வாந்தி எடுத்து விடாதீர்கள் !


இன்று ஆசிரியர்கள் என்பவர்கள் பாடங்களைக் கற்றுத்தருபவர்களாகவும் மதிப்பெண்களை எடுக்க வைக்கும் இயந்திரங்களாகவும் செயல்படுகின்றார்கள். வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுத்தருபவர்களாகவும், வழிநடத்துபவர்களாகவும் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கின்றது.

பல இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு மதிப்பெண்ணை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடைபெறும் கல்விமுறையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பது மறக்க முடியாத உண்மை.

பெரியவர்களுக்கு கீழ்படிதல், குருபக்தி போன்றவை இல்லாமல் போய்விட்டன. பெரியவர்களையும், ஆசிரியர்களையும் பட்டப்பெயர்கள் கொண்டு அழைக்கும் மாணவர்கள் அதிகமாக பார்க்க முடிகின்றது. இது அவர்கள் குறையா? இல்லை அவர்கள் வளரும் முறையில் உள்ள குறையா? அவர்கள் வளரும்முறையை உருவாக்கும் சமூகக்குறையா?கல்விமுறையில் உள்ள குறையா? கல்வி கொடுக்கும் ஆசிரியர்களிடம் உள்ள குறையா?

இன்று மாணவர்கள் மீடியா உதவியால் தனித்திறமைகளை வெளிப்படுத்துபவர்களாக உள்ளார்கள். தனித்திறமைகள் பெற்றோரின் உதவியுடனே அரங்கேற்றப்படுகின்றன. சாதரணமாக அந்நிகழ்வில் ஏற்படும் தோல்வியை தாங்கிக்கொள்ள இயலாதவர்களாக குழந்தைகள் உள்ளார்கள். காரணம் ஆசிரியர்கள் அவர்களுக்கு தன்னம்பிக்கை, தோல்வியை எதிர் நோக்கும் பண்பு, போட்டி மனப்பான்மை, குழுமனப்பான்மை, விளையாட்டு விதிகளை பின்பற்றுதல்,விட்டுக்கொடுத்தல், ஒருங்கிணைத்தல், ஒன்றாக செயல்படுதல் என்பது போன்ற இயல்புகள் இல்லாமல் மதிப்பெண் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக செயல்படுவது ஆகும், அதே மனநிலையில் வெற்றி மட்டுமே இலக்காக மேடைநிகழ்வுகளில் செயல்படுவதால் வரும் குறைப்பாடாகும். இக்குறைப்பாடுகளை பயன்படுத்தி மீடீயாக்கள் தங்கள் டிஆர்பி ரேட்டை ஏற்றிக்கொள்கின்றன.

அன்பு , பாசம், மனிதநேயம், மனிதாபிமானம்,சமத்துவம், சகோதரத்துவம், கீழ்படிதல், மதித்தல் போன்ற பண்புகள் மதிப்பெண் கல்வி முறையில் அடியோடு மறக்கடிக்கப்படுகின்றன. இவை எல்லாம் இல்லாத மதிப்பெண் மட்டுமே வாழ்வாக கொண்டவன், சமூகத்தில் அடியெடுத்து வைக்கும் போது எப்படி லஞ்சம் இல்லாமல் வாழ முடியும்? லஞ்சம் என்பதை கையூட்டு மட்டுமல்லாமல்,வாழ்வுக்கு ஒத்துவராத பண்பாகவும் பார்க்கவும்.

அப்படியானால் நம் கல்விமுறையில் மாற்றம் வராதா? யார் சொன்னது கல்வியாளர்கள் மாற்றங்கள் ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கின்றார்கள். கல்வி முறையில் ஏற்படும் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லையா ! இல்லை தயங்கும் ஆசிரியர்களிடம் உள்ள குறைப்பாடு தான் என்ன?

திட்டங்கள் கொண்டு வரும் அதிகாரிகளே அத்திட்டம் நடைமுறைப்படுத்தி வெற்றிப்பெறும் முன் , மதிப்பெண் வேண்டும் , 100 சதவீத தேர்ச்சி வேண்டும் என்று கட்டளை இடுவதும், ஆங்காங்கே மீட்டிங் போட்டு தலைமையாசிரியர்களை வறுத்து எடுப்பதும் ஆகும். செய்திதாள்கள் நாள் தோறும் 100 சதவீத தேர்ச்சி குறித்து பார்க்கும் போது அத்தனை நவீனங்களும் ,குழந்தை மையக்கல்வி முறையும் மீண்டும் மதிப்பெண் என்ற வாந்தி யெடுக்க வைக்கும் முறைக்குள் புதைக்கப்பட்டு விடுகின்றதே என்ற ஆதங்கம் ஏற்படச் செய்கின்றது!

ஆசிரியர்களுக்கு நவீன கல்வி முறை குறித்த பயிற்சி முறையாக கொடுப்பது இல்லை. நவீன கல்வி முறை செயல்படுத்தப்படுகின்றதா என்கின்ற கண்காணிப்பும் இல்லை. முறைப்படுத்தாமைக்கு விளக்கமும் கேட்பதில்லை. எல்லாம் ஒரு வட்டத்திற்குள் செயல்படும் சர்க்கஸ் வித்தையாகவே உள்ளது. ஆம் ரிசல்ட் என்ற புள்ளி எல்லா ஆரம்பங்களையும் தொடக்கப்புள்ளிகளிலேயே நிறுத்தி விடுகின்றது. ஆரம்பித்த இடத்திலேயே ஓட வேண்டியதாக உள்ளதாக ஆசிரியர்கள் குறைப்பட்டுக்கொள்கின்றனர்.

ஆரம்ப பள்ளிகளில் செயல்படும் எளிய செயல்வழிக்கற்றல் முறை, படைப்பாற்றல் கல்வி முறையை நடைமுறைப்படுத்தினால், நாம் எதிர்நோக்கும் குழந்தை மையக்கல்வி முறை நடைமுறைக்கு வந்துவிடும். அது ஏன் குழந்தை மையக்கல்வி முறை ? அப்போது தான் ஆசிரியர்கள் கம்பு எடுத்து தான் சொல்வதை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது. இன்னும் புரியும் படி சொன்னால், குழந்தைகள் தங்கள் இயல்பு மாறாமல், ஜாலியாக வெவ்வேறு இடங்களில் சென்று, நண்பர்களுடன், சகஜமாக பேசி, தனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து, தனக்கு தெரியாதவற்றை எந்த சங்கோஜம் இல்லாமல் தெரிந்து கொண்டு, தேவைப்படும் போது ஆசிரியர் உதவியை நாடி, குழந்தை தன் இயல்பில் கற்றுக்கொள்வதாகும்.

வாந்தி எடுக்கும் முறையை ஒழிக்க திறமைக்கு உண்மையான ஆளுமைக்கு மதிப்பு அளிப்போம், மதிப்பெண்களை தவிர்த்து மதிப்பிடுவோம் மாணவனை! மதிப்பு மிக்க சமூதாயத்தினை படைப்போம்!

மதுரை சரவணன்.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

மிகவும் நல்ல பகிர்வு சரவணன்...
முகநூலிலேயே பார்த்தேன்...

மதிப்பெண்களை தவிர்த்து மதிப்பிடுவோம் மாணவனை!

இது நடந்தால் உண்மையிலேயே மதிப்பு மிக்க மாணவ சமுதாயத்தைப் படைக்க முடியும்...

உங்கள் கனவு நனவாகட்டும்...

KILLERGEE Devakottai said...

உங்கள் கனவு நனவாக வாழ்த்துகிறேன்.

Post a Comment