Monday, November 17, 2014

இதை சொன்னா என்னை லூசுன்னு சொல்றான்...!


எல்லாக்குழந்தைகளிடமும் ஆர்வமும் ஆற்றலும் இருக்கின்றன. அவற்றை கண்டறிந்து , குழந்தைகள் விரும்பும் வண்ணம் தேவையான சரியான கல்வி கொடுக்கும் ஆசிரியர்கள் குறைப்பாடு , மாணவர்களை திறமை குறைந்த மாணவர்கள் என்று தரம் பிரிக்க சொல்கின்றது.

மொழித்திறனில் பிரச்சனை உள்ள மாணவர்களுக்கு மொழிப்பயிற்சியினை குழந்தைகள் விரும்பும் வண்ணம் தயாரித்து கற்றுக்கொடுப்பதன் மூலம், அவர்களுக்கு மொழித்திறன் வளர்ப்பதில் ஆர்வம் உண்டாக்கலாம். அதற்கு குழந்தை மையக்கல்வியை முதன்மைப்படுத்த வேண்டும். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க செய்ய வேண்டும்.

அரசாங்கம் மிகத்தெளிவாக அரசாணை வெளியிட்டுள்ளது. காலை மாலை செயல்பாடுகள். அதன் படி ஆசிரியர்கள் தெளிவாக செயல்பாட்டால், வாசித்தல் எழுதுதல் தானாக வரும். அதன் பின் திறன்களை செயல்வழிக்கற்றல் முறையில் கற்றுக்கொடுத்தால் போதும். மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள் தமிழ் ஆங்கிலம் சரளமாக வாசிப்பதால், பிழையின்றி எழுதுவதால்,நூலகத்திற்கு சென்று புத்தகம் வாசிப்பவனாக மாறிவிடுவான். பல புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்து விடுவான். தினமும் செய்திதாள்களை தானாக வாசிப்பதால் , சமுக சிந்தனை கொண்டு சமுக நலனில் அக்கறை காட்டுபவனாக மாறி விடுவான்.

"working memory is the gateway to long-term memory " என்பது அறிவியல் உண்மை. தினமும் மாணவன் மதிய உணவு இடைவேளையில் தமிழ், ஆங்கிலம், வாய்ப்பாடு சொல்லுதல், எளிய கணக்குகள் செய்தல் போன்றவற்றை தினப்பயிற்சியாக செய்து வருவதால் , அவை நீண்டகால நினைவுகளாக மாறி, பிழையின்றி எழுதவும் பேசவும், கணிதங்கள் செய்யவும் பழகிவிடுவார்கள். மேலும் மாணவனுக்கு பிடித்தப்படி செயல்வழிக்கற்றல் முறையில் பாடங்கள் நடத்தினால் அப்பாடத்திலுள்ள திறன்களை எளிதாக கற்றுக்கொள்வான்.

திறன்கள் என்பது மதிப்பெண் பெறுவதற்கானது அன்று என்று ஆசிரியர்களுக்கு எப்போது புரியுமோ !. மாணவர்களிடம் எதிர்பார்க்கும் அனைத்து திறன்களும் அவனை இச்சமுகச்சூழ்நிலையில் மகிழ்ச்சியாக வைப்பதற்கும், சமுக சூழல் மகிழ்வாக இருக்க சிந்திப்பதற்கும் தான். திறன்கள் இன்று மதிப்பெண்களால் மழுங்கச்செய்யப்படுகின்றன.

தயவு செய்து குழந்தைகளை குழந்தைகளாக நடத்துங்கள். குழந்தைகளை மதியுங்கள் . அதாவது மகிழ்வாக வைத்திருங்கள். குழந்தைகள் உரிமையை உறுதிப்படுத்துங்கள். அட ஆசிரியர்களே ஒன்றும் செய்ய வேண்டாம். நீங்கள் குழந்தைகள் சரியான செயல்களுக்கு கைத்தட்டி பாராட்டினால் போதும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட பலமடங்கு திறன்களைப் பெற்று திறமைசாலிகளாக மாறிவிடுவார்கள்.

குழந்தைகளுக்கு விளையாட்டு மூலமா கல்வி கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு பிடித்தமான விதத்தில் ஆடிப்பாடி ஓடி சொல்லித்தாருங்கள். ஒரே இடத்தில் கை கட்டி வாய் பொத்தி அமர்வதை தவிர்க்கவும். குழந்தைகள் நம்மைப்பார்த்தால் மகிழ்ச்சியாக ஓடி வரவேண்டும். பத்தடி தூரம் ஓடக்கூடாது.

அட மாணவர்களிடம் குழுக்கற்றல், சக மாணவர் துணையோடு கற்றல், தனித்து கற்றல் போன்ற எல்லாவகையான கற்றலையும் முறைப்படுத்துங்கள் . நான் சொல்லுவேன் அதை நீ கேட்க வேண்டும் என்பதை தவிர்த்து விடுங்கள். குழந்தைகள் இன்று நம்மை விட புத்திசாலிகளாக இருக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழையவும்.

கல்வி கற்றுக்கொடுத்தல்அல்லது திறன்களை மாணவர்களுக்கு கொடுத்தல் என்பது தொடர் நிகழ்வு என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள். மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துங்கள்.

மொத்தத்தில் குழந்தைகளை குழந்தைகளாக மதித்தால் , கற்றல் தானாக முறைப்படும். டியூசன், கூடுதல் வகுப்புகள் செய்யாத ஒன்றை செய்து தரும்.

மதுரை சரவணன்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

”தளிர் சுரேஷ்” said...

உங்களின் ஆலோசனைகள் சிறப்பானவை! பாராட்டுக்கள்!

Post a Comment