Tuesday, August 27, 2013

தலைகளுக்காக உயிர்விடும் கலாச்சாரத்தை மாற்றியமைப்போம்.

நான் செய்யும் சேவையானது ஒரே ஒரு துளிதான். ஆனால் தேவையோ ஒரு கடலளவு. அந்த ஒரு துளியை நான் சேர்க்காவிடில், கடலில் ஒரு துளி குறைந்து விடும்” - அன்னை தெரசா.

ஆதரவற்ற குழந்தைகள் , தொழு நோயாளிகள் , சாவின் விளிம்புகளில் ஆதரவற்று வாழும் ஜீவன்கள் , போர் அகதிகள், அனாதை குழந்தைகள் , போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், தீராத நோய் கண்டவர்கள் , உடல் ஊனமுற்றோர், ஏழைகள்  என அனைவரும் நீலக்கரையிட்ட எளிய, கெட்டிப்புடவைக்கு சொந்தக்காரியான அன்னையின் அணைப்பில் கடலளவு சேவையை பெற்றவர்கள்.

யுகோஸ்லேவியாவில் உள்ள ஸ்கோப்ஜே என்ற ஊரில் 1910ம் ஆண்டு ஆகஸ்டு 27ல் பிறந்த அக்னேஸ் என்ற குழந்தை , முதல் உலகப்போரின் முடிந்த மூன்றாண்டுகளில் தந்தையை இழந்தவர், யுகேஸ்லோவியாவில் பள்ளிப்படிப்பை முடித்து, 18 வயதில் பெண் துறவியானவர் தான் நம் அன்னை தெரசா.  1946 செபடம்பர் 10 இந்தியாவின் இயமமலையின் கர்ஸியாங் பகுதியிலுள்ள தூய மேரி மடத்தில் சேர்ந்து, கல்கத்தாவின் சேரிப்பகுதியில் தன் தொண்டை ஆரம்பித்தார்.

பள்ளியில் புவியியல் ஆசிரியராக பணியினை தொடங்கிய அன்னை, பள்ளியின் எதிரில் உள்ள மோதிஜீல் பகுதியிலுள்ள ஏழை மக்களின் வாழ்வு நிலமையினை பார்த்து , அவர்களின் நோய் , வேலையின்மை, பசி, கல்வியற்று தெருக்களில் சுற்றி திரியும் குழந்தைகளின் நிலமையினை பார்த்து , மடத்தை விட்டு( அனுமதியுடன்) வெளியேறி, சேரி மக்களுடனே  வாழ்ந்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து, அப்பகுதியில் அவர்களுக்கு என்றே ஒரு பள்ளியை தொடங்கி தன் சேவையை துவக்கியவர் தான்  நம் அன்னை தெரசா.

மைக்கேல் கோம்ச் என்ற தர்ம சிந்தனையாளர் அளித்த ஒரு சிறிய அறையில் 1948ல் அன்னை தன் (அன்னை இல்லம்)அறக்கட்டளையை துவங்கினார். எண்டாலியில் தன்னிடம் பயின்ற சுபாஷிணிதாஸ் முதல் உதவியாளராக சேர்ந்து சேவைபுரிந்தார். இன்று மைக்கேல் தந்த இடம் தான் தலைமையகமாக செயல்படுகிறது.

அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து , தியானம், பிரார்த்தனை, கூட்டுவழிப்பாடு என நடத்தி முடித்து, எளிய உணவு அருந்திய பின், கல்கத்தாவின் குடிசைப்பகுதியில் பசியால் வாடும் மக்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை தேடி அழைத்து உதவி செய்வார்கள் அன்னையின் உதவியாளர்கள்.

கல்கத்தாவின் காளி கேயில் எதிரில் மாநகராட்சி ஒதுக்கிய வீட்டில் சாவும் தருவாயில் உள்ளவர்களுக்க்கான இல்லம் தொடங்கப்பட்டது. சாகும் தருவாயில் ஆதரவற்று நிற்கும் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதன் மூலம், இறப்புக்கு முன் சிறிய மகிழ்ச்சி பெறுவதை அன்னை விரும்பினார். சாக விரும்பி வந்தவர்கள் மனம் மாறி மீண்டும் தங்கள் இல்லம் சென்றதும் உண்டு. நோயின் கொடுமையால் விடப்பட்டவர்கள் (காலரா, கால் புண் புரை) அன்னையின் அன்பில் , மருத்துவ சேவையில் குணமாகி சென்றுள்ளனர். இந்து மத எதிர்ப்பு குரல்கள் இவரின் சேவையை கண்டு ஒதுங்கி சென்றனர். காளி கோயில் பூசாரி காலரா நோயால் கைவிடப்பட்ட போது, அன்னை தன் அன்பால், மருத்துவ சேவையால் காப்பாற்றியதை அறிந்து , எதிர்த்தவர்கள் மனம் வருந்தினர்.

1972 ஜவஹர்லால் நேரு விருது, 1973 மத நல்லிணக்கத்துக்கான டெம்பிள்டன் விருது, 1974 ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின், மாடர் எட் மஜிஸ்ட்ரா விருது, 1979 அமைதிக்கான நோபல் பரிசு , 1980 ல் இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது ஆகியவை அன்னை பெற்ற விருதுகள்.


தன்னலமற்று எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சேவைபுரிபவர்கள் அரிதாகி விட்ட இன்றைய கால கட்டத்தில், அன்னையின் வரலாற்றை விதைப்பதன் மூலம் , நம் குழந்தைகளிடத்தில் சேவை மனப்பான்மையுடன் அன்பு செய்ய கற்று தருவோம். தலைகளுக்காக உயிர்விடும் கலாச்சாரத்தை மாற்றி, வரியவர்களுக்கு உதவி செய்யும் தலைமுறையை உருவாக்குவோம். 

8 comments:

Yaathoramani.blogspot.com said...

சிறப்புப் பதிவு வெகுசிறப்பு
இந்த நாளில் அவரை நினைவு கூறுவதம் மூலம்
நம்முள் தொண்டு மனம் வளர்த்துக் கொள்ள
முயல்வோம்
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...


கணினியைத் திறந்தால் டாஷ் போர்டில், இந்தப் பதிவின் தலைப்பு ( ஒரு பத்து இருக்கும்) சொடுக்கினால் sorry. என்று வருகிறதே சரவணன், any problem? கடைசியில் blog முகவரி மூலம் வந்தேன். இன்னும் படிக்கவில்லை. படிப்பேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

தொண்டு மனப்பான்மையினை வளர்க்க இதுபோன்ற பதிவுகள் அவசியம். அருமை

Unknown said...

தலைப்பை பார்த்து படிக்க வரும் கூட்டத்தைநன்றாய் புரிந்து வைதுள்ளீர்கள்...
அன்னை தெரசாவை நினைவுகூர்ந்த விதம் அருமை !
# காலச்சாரத்தை #சரியாக திருத்துங்கள் சார் !

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

தலைப்பை பார்த்து படிக்க வரும் கூட்டத்தைநன்றாய் புரிந்து வைத்துள்ளீர்கள்...
அன்னை தெரசாவை நினைவுகூர்ந்த விதம் அருமை !
# காலச்சாரத்தை #சரியாக திருத்துங்கள் சார் !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அன்னை அன்னை தான் .

சரியா சொன்னீங்க .

G.M Balasubramaniam said...


அன்னை தெரெசா பற்றிப் பலமுறைக் கேள்விப்பட்டிருந்தாலும் , பலமுறை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அபூர்வப் பிறவி அவர்.நினைவூட்டலுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

Post a Comment