Monday, February 19, 2018

பாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்!





தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தலுக்கும் ஆளாக்கப்படுகின்றார்கள். காதல் குறித்து அறியாமலே எல்லா தவறுகளும் நடைப்பெறுகின்றன. பாலியல் கல்வி பள்ளி அளவிலே கொடுக்கப்பட வேண்டும். எதிர்பால் கவர்ச்சி குறித்து ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேச வேண்டும். மாணவர்களை மதிப்பெண் நோக்கி நகர்த்துவது போன்று நற்பண்புகள் போதித்து திருத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தைரியம் கொடுக்க வேண்டும். கள்ளிப்பாலில் தப்பிய குழந்தைகள் ஒருதலைக்காதலில் மாட்டிக்கொண்டு பள்ளி படிப்பை நிறுத்துவதுடன், திருமங்களம் போன்று 
உடல் எரிந்து அவதிக்குள்ளாகின்றனர்.



ஒருபுறம் சேர்ந்து சுற்றினால் கட்டி வைத்துவிடுவோம் என்று காட்டுமிராண்டிதனத்துடன் காதல் அணுகப்படுகின்றது. மறுபுறம் காதல் குறித்த புரிதல் இன்றி வலுக்கட்டாயம், வன்முறை இவற்றின் பெயரால் ஆதிக்க ஆண் வர்க்கம் பெண்குழந்தைகளின் வாழ்வை சூறையாடுகின்றனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் குழந்தைகளிடம் தொடர்ந்து பேசி அவர்களின் பால் சார்ந்த புரிதல் இன்மையை நீக்க வேண்டும். காலத்தின் அவசியம் பாலியல் கல்வியும் , எட்டாம் வகுப்புக்கு மேல் கவுன்சிலிங்கும் என்பதை கல்வித்துறை உணரவேண்டும்.

Thursday, July 13, 2017

செகாவ் அமைக்க நினைத்த சானிடோரியம் கேட்கின்றோம் உதயா...!

தொடர்ந்து கல்வியில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் கல்விச் செயலர் குறித்து சொல்லாமல் இருக்க இயலவில்லை. மிக அருமையான திட்டங்கள் வழி மொழிகின்றார். அரசும் அவர் மீது நம்பிக்கை கொண்டு செயல்படுத்துகின்றது. பாராட்டுகள். குவான்டிட்டி சரி செய்யும் உங்களிடம் ஒரு கேள்வி. அரசு பள்ளிகளை தரமான பள்ளிகளாக மாற்ற சுமார்ட் வகுப்பறை போன்ற திட்டங்களால் கொண்டுவருவது சாத்தியமே! ஆனால், அதனை கண்காணிக்க எப்போதும் அரசு தவறுகின்றது. ஏன்?
கண்காணிப்பு என்பது பயிற்சியில் மட்டுமா? அது போதுமா? பயிற்சியில் பெற்றவற்றை வகுப்பறைகளில் கொண்டு சேர்க்கின்றனரா? அதனை யார் சரி செய்வது?
இதனை வாசிப்பவர்கள் அவரிடம் எனது கேள்விகளை கொண்டு செல்லக்கூடும்.
மானிட்டரிங் குறித்து குறிப்பிடும் போது பயிற்சியின் போது மட்டும் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட்டால் தரம் நிச்சயம் உயர்த்தப்படும். பலஅரசு பள்ளிகளில் சரியான கண்காணிப்பு இல்லாததால் போதிய வசதிகள் இருந்தும் குழந்தைகள் இருந்தும் கல்வியின் தரம் குறைவால் ஆங்கில வழிக்கல்வியை தனியாரிடம் நாடிச் செல்கின்றனர்.

அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களை கண்டிக்கும் உரிமை தலைமையாசிரியர்களுக்கு முழுமையாக தரப்பட வேண்டும். ஆன் லைன் மூலம் தினசரி வகுப்பறை நிகழ்வுகளை  தலைமையாசிரியர்கள் அப்லோடு செய்ய  வேண்டும். அதற்கான செயலியை ஏற்படுத்த வேண்டும். உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இரு அதிகாரிகள் நியமிக்கப் பட்டு ஒருவர் நிர்வாகத்திற்கும், மற்றொருவர் பள்ளிகளை கண்காணிக்கவும் இருப்பதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு உடனடியஅளிக்கவும் அதே வேளையில் பள்ளிகள் தரம் மிக்க கல்வியை அளிக்கவும் இயலும்.
தற்போது உள்ள நிலையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் தகவல் கொடுக்கவும், நிர்வாகப்பணிகளை சரி செய்யவும் இருப்பதால் பள்ளிகளில் அசிரியர்கள் கண்காணிக்கப்படுவதில்லை. முழுமையான கல்வி போய் சேருவதில்லை.  பாடப்புத்தகங்களை அரசு பாடநூல் நிறுவனமே பள்ளிகளுக்கு கூடுதலாக பணியாளர்களை நியமித்து வழங்கலாம் அல்லது காண்ட்ராக்ட் முறையில் ஏலம் கொடுத்து புத்தகங்களை பள்ளிக்கு அனுப்பலாம்.

மிக முக்கியமான ஒன்று.. ஆசிரியர்கள் கல்வி குறித்தும் கல்வியின் இன்றைய நிலை குறித்து பேசுவதற்கான தளத்தை ஏற்படுத்த வேண்டும். அவசியம்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். ரஷ்ய புகழ் பெற்ற எழுத்தாளர் ஆண்டன் செகாவ் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது சக எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி அவரை பார்க்க சென்றார். அப்போது பேசும் போது , ஒரு சானிடோரியம் அமைக்க இருக்கின்றேன் என்று செகாவ் கூறியுள்ளார்.
அவர் நோய்வாய் பட்டு இருந்ததால், கார்க்கி கிராம பகுதியில் நல்ல தொரு மருத்துவ சிகிச்சை மையம் தேவை என நீங்கள் கருதுவது சரியே என்றார்.

உடனே செகாவ்  நான் சிகிச்சை மையம் அமைக்க விரும்புவது நோயாளிகளுக்கு அல்ல. ஆசிரியர்களுக்கு. உண்மையில் அது என்னுடைய கனவு. இந்த இடத்தில் நிறைய தங்குமிடங்கள் அமைத்து ரஷ்யா முழுவதும் உள்ள ஆசிரியர்களை அழைத்து வந்து தங்க வைத்து அவர்களுக்கு கல்வி குறித்த ஆழ்ந்த புரிதலையும் முக்கியத்துவத்தையும் எடுத்து சொல்ல வேண்டியிருக்கிறது.
இன்றைய ஆசிரியர்களை ஒரு நோய் பற்றியிருக்கிறது. அது கல்வி குறித்த அலட்சியம். அது களைந்து எறியப்பட வேண்டிய நோய். அதுவே ஆசிரியர்கள் இங்கு தங்கிக் கொண்டு நிறைய படிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். அத்துடன் அவர்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் செகாவ்.

நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் பல ஆசிரியர்கள் அலட்சியமாகவே இருக்கின்றார்கள். ஆகவே , கல்விச் செயலாளரே ஆசிரியர்கள் தொடர்ந்து கல்வி குறித்து பேசுவதற்கு விவாதிப்பதற்கான அரங்கை மாவட்டம் தோறும் ஏற்படுத்தலாமே..!

மதுரை சரவணன்.

Thursday, September 1, 2016

குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகளே!

சிற்றுளிகளிடம் தோற்றவன்...!
*
இன்று மதியம் குழந்தைகளுக்கு வாய்ப்பாடு எளிமையாக கற்பது குறித்து கற்று கொடுத்தேன்.
"சார் , இவ்வளவு ஈசின்னு தெரியாம போச்சு ...இப்ப 20 வரை வாய்ப்பாடு எளிமையாக தெரியுமே" என தர்ஷினி கூறினாள்.
நான் பெருமையாக , இன்னும் நிறைய விசயம் தெரியும். ஒரு நாளைக்கு ஒண்ணு தான் என்றேன்.
அருகில் இருந்த யுவராணி, நீங்க பெரிய ஆள் என்றால் நான் சொல்வதை சொல்லுங்க என்றாள்.
"ம்.. கேளு சொல்லுவேனே" என்றேன்.
ஒரு பேருந்தில் எட்டு பேர் புறப்பட்டார்கள் என நிறுத்தினாள்.
ம் கேளு என்றேன்.
நான் சொல்றதை சொல்லுங்க என்றாள். நான் அவள் சொல்வதை போன்றே கூறினேன்.
அடுத்த நிறுத்தத்தில் எட்டு பேரும் இறங்கிவிட்டார்கள். என்றாள். நானும் அதேப்போல் கூறினேன்.
இப்ப பேருந்தில் எத்தனை பேர் என கேட்டாள். இப்ப பேருந்தில் எத்தனை பேர் என்றேன். அட சொல்லுங்க சார் என அதட்டினாள்.
நான் உணர்ச்சி வயப்பட்டு , ஏன் அதட்டுற , எல்லாரும் இறங்கிட்டா பேருந்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றேன்.
சார், நீங்க சரியான முட்டாள். நான் சொல்றதை தானே சொல்ல சொன்னேன். கேள்விக்கு பதிலா கூற சொன்னேன் என்றாள். சுற்றி இருந்த அனைவரும் சிரித்தனர் .
" கல்லும் தகரும் தகரா கொல்லுலை கூடத்தினால் " என்றாள் பவித்ரா .
குழந்தைகள் மிக எளிமையாக ஆசிரியரின் கனத்தை உடைத்து விடுகிறார்கள். அதிகாரம் உடையும் போது ஜனநாயகம் பிறக்கிறது என்பதை உணர்கின்றேன். ஜனநாயக வகுப்பறையே குழந்தைகளை நம்மோடு என்றும் ஒன்றிணைக்கும்.
மதுரை சரவணன்

தாய் மொழி அறிவு அவசியம்


மொழி குழந்தைகளிடம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. குழந்தைகளின் திறமையை வளர்த்தெடுப்பதில் மொழி முக்கியப்பங்கு வகிக்கின்றது. மொழி திறன் பெற்றவர்கள் மிகவும் சிறப்பாக வகுப்பறையில் இயங்குவதை காண்கின்றேன்.
மொழித்திறன் அற்ற மாணவர்கள் தங்களின் உடல் உபாதைகளை கூட வெளிப்படுத்த சிரமப்படுகின்றார்கள். மாணவர்கள் சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் மொழி அவசியப்படுகின்றது. அதை விட வினைப்புரிவதற்கு மொழி முக்கியமாக உள்ளது.
இன்று காலை பால முருகன் என்ற மாணவனின் கன்னத்தில் நகக்கீறல் காணப்பட்டது. அவன் குற்றாலம் செல்வதாக கூறி சென்ற வாரம் வெள்ளி விடுமுறை எடுத்திருந்தான். ஆகவே , சென்ற இடத்தில் எதுவும் நடந்துவிட்டதோ? என பதறி கேட்டேன்.
“சார், குற்றால் போன்னேன்னா.. குளிச்சேன்னா.. ஏசுக்காரங்க வந்தாங்களா.. அப்ப குளிச்சேனா. ஏசுக்காரங்க என் பக்கத்தில் குளிச்சாங்க..” என இழுத்தான்.
“அப்புறம் என்னாச்சுடா” என பொறுமை இழந்த மாணவன் மணிகண்டன் கேட்டான்.
“சார்.. குளிச்சேனா.. குற்றால் மெயின் பால்ஸ்.. ஏசுக்காரங்க..சிலுவை போட்டு இருந்தாங்களா. நான் குனிச்சு குளிச்சேனா.. அவுங்க குனிஞ்சாங்களா..”
“டேய் காயம் எப்படி பட்டுச்சு.. குற்றாலம் போனா குளிக்க தாண்டா செய்வாங்க..” என்றாள் தர்ஷிக்கா.
“ஏசுக்காரங்க ... நிமிந்தாங்களா...அப்ப அந்த ...கிழிச்சிடுச்சு..”
“அந்த எது கிழிச்சிடுச்சுடா..?” திரும்பவும் மணிகண்டன் கேட்டான்.
“போடா.. சார்... நான் குளிச்சேனா..ஏசுக்காரங்க..”
“சார்.. எனக்கு புரிஞ்சு போச்சு..சார் இவன் குளிச்சப்பா பக்கத்தில் இருந்தவரின் சிலுவை கீறி விட்டு கன்னத்தில் காயம் உண்டாச்சு சார்....”என்றான் ஆதீஸ்வரன்.
“ஆமாம் ” என்றான் பாலமுருகன்.
தாய்மொழியில் பேசுவதற்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் திணறுகின்றார்கள். இதற்கு போதிய பயிற்சி இன்மை காரணம் என கூறலாம். அவனை குறித்த கேஸ் ஹிஸ்ட்டரியில் அம்மாணவன் இரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் பயின்றவன் என அறிய வந்தேன்.
தாய்மொழி முக்கியம் . அது மட்டுமல்ல. அந்த மொழியினை திறம்பட பயன்படுத்த ஆசிரியர்கள் போதிய பயிற்சி தர வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் கீரிடத்தை கழட்டி வைத்து பேசுவதற்கு அனுமதி தர வேண்டும்.
மாணவர்களோடு மாணவர்களாக இருக்கும் போது மொழி தங்கு தடையின்றி வெளிவரும் . பயம் போக்க வேண்டும். பயம் தாய்மொழியை கூட பேச அனுமதிப்பதில்லை. தடுமாறச்செய்து விடும்.
மொழியின் பயன்பாடு, செயல்பாடு குறித்து ஆசிரியர்கள் சிந்தித்தல் நலம் . அதற்கான பயிற்சியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
மதுரை சரவணன்.

அப்பா கிட்ட பேசி இருக்கீய்யா? கொஞ்சம் யோசிங்க!




*
சமூக அறிவியல் பாடம் நடத்தும் முன் வரலாற்றில் இடம் பெற்ற மனிதர்கள் குறித்து கூறுவது வழக்கம். இன்று மகாத்மா ஜோதிராவ் புலே குறித்து தெரிந்து கொள்வோம் என்றேன்.
மகாத்மா ன்னா காந்தி தானே ? என கேட்டாள், யுவராணி.
காலையிலே இன்று யாரை பற்றி கூற போகின்றீர்கள் என விசாரித்து , புலே பற்றி புத்தகத்தில் வாசித்திருந்த யோகேஷ் , " அவரு சுதந்திரம் வாங்கி தந்த்தால் மகாத்மா , இவர் இந்தியாவில் சமூக புரட்சி செய்ததால் மகாத்மா என்று கூறினான்.
புலே திருமண நிகழ்வில் கீழ்சாதி என விரட்டபட்ட பின்பு, ஏகத்துக்கும் புத்தகம் வாசித்தார். தாமஸ் பெய்னின் மனித உரிமை நூல் , அவரை ஈர்த்தது. அதில் சொல்லப்பட்டிருந்த விசயம் சார்ந்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தார். அடிமைத்தனம் என்ற புத்தகத்தை எழுதினார். அந்நூலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து எழுதினார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிக்கு கல்வி அவசியம் என எடுத்துரைத்தார். மனைவி சாவித்திரிபாய் வுடன் இணைந்து தாழ்த்தப்பட்ட , இல்லை , அன்று ஒட்டு மொத்த இந்திய பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார். உயர் சாதி மக்கள் கலவரம் செய்தார்கள். கல் எறிந்தார்கள் . அவரது தந்தை இவர்களின் தாக்குதலுக்கு பயந்து அவர்களை வீட்டை விட்டு துரத்தினார்.
" தற்போதைய சமுக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரை சார்ந்திருத்தல், கல்லாமை, அறியாமை, ஏழமை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அப்போது தான் தாழ்த்தப்பட்டவர்கள் சுரண்டப்படிவதை தடுக்க முடியும். மூட நம்பிக்கை ஒழிப்பே சமூக_பொருளாதார மாற்றங்களுக்கு வழிகோலும் " என்ற ஜோதிராவ் புலே வரிகள் இன்றும் பொருத்தமாக உள்ளதை குறித்து சிந்தியுங்கள் என முடித்தேன்.
" சார்,
உண்மையிலேயே ஜோதிராவ் புலே அப்பா, அவரை வீட்டை விட்டு துரத்திட்டாங்களா? " என கேட்டாள் அம்மு.
ஆமாம். உயர்சாதியினர் கெடுபிடி. இதை பத்தி இப்ப புரியாது. வளர வளர நிறைய புத்தகம் வாசிக்க தெரிஞ்சுக்குவீங்க.இப்ப சார் ஒரு விசயம் கேட்பேன் , சொல்லுவீங்களா ? "
" சார், கேளுங்க சொல்றோம்"
"நீங்க உங்க அப்பா கிட்ட பேசி இருக்கீங்களா?"
அனைவரும் ம் என ஒரு குரலில் கத்தினர்.
" ஒவ்வொருத்தரா சொல்லணும் . கடைசியா, உங்க அப்பகிட்ட பேசியது குறித்து சொல்லுங்க "
சார், சார் என கையை உயர்த்த ...ஆதீஷ்வரன் என்றேன்.
" எங்க அப்பா எப்பவும் நைட் ரொட்டி தருவாரா? நேத்து அவரு ரொட்டி வாங்கிட்டு வரலை.. எங்க அம்மா எங்க அப்பா கிட்ட கேட்க சொன்னாங்களா...அப்ப எங்கப்பாட்ட போய்யீ..அப்பா அப்பா இன்னைக்கு ரொட்டி வாங்கலைய்யான்னு சொன்னேன். எங்கப்பா நாளைக்கு வாங்கி தர்றேன்னு சொன்னார்..."
" டேய் சார் கிட்ட ஜாலியா பேசுற மாதிரி ... பேசி இருக்கீய்யா...? "
" ம்...ஒரு தடவை எங்க பாப்பா வேகமாக ஒடி வர்றேன்னு கீழே விழுந்துட்டா.. எங்கப்பா அழுதுகிட்டே வந்த அவள பார்த்து போ கழுதை போ ..போ ன்னு சொன்னார்..இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்.. அவ வந்தா போ கழுதை என்று சிரிப்போம் " என்றான்.
சரி வேறு யாராவது ...பெண் குழந்தை என்றவுடன் தர்ஷினி சொல்ல ஆரம்பித்தாள்.
" கடைசியா ஞாயித்து கிழமை பேசினேன். ? "
" நேத்து பேசலைய்யா? "
" இல்லை சார., எங்கப்ப்பா வாரத்துக்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவாங்க..? அதான் . "
" என்ன பேசின..? " என கேட்டான் ஆதிகர்ணன்.
" அப்பா , அப்பா டெய்லி உங்கள் பார்க்கணும்.ஊர்க்கு போயி வேலை பார்க்காம இங்கய்யே வந்துடுங்கன்னு சொன்னேன் " என்றாள்.
" வெளியூரில் என்ன வேலை பார்கிறார். எந்த ஊர்? " என கேட்டேன்.
" எந்த ஊர்ன்னு தெரியலை...ஊர் ஊர் போய் மிக்சர், பக்கோடா வித்துட்டு வருவார்ன்னு அம்மா சொன்னாங்க "
" சரி உங்க அம்மாட்ட பேசுவய்யா ? " என கேட்க,
உதடுகளை பிதுக்கி இல்லை என்றாள்.
ஏன் ?
" எங்கம்மா வேலைக்கு போறாங்க..்சாய்ங்காலம் வந்தா , எங்க தாத்தா வை பார்க்க பக்கத்தில் போய்டுவாங்க..தூங்கின உடனே தான் வருவாங்க.."
" அப்ப நைட் சாப்பாடு..."
" பக்கத்தில் ஒரு அத்தை கவனிச்சுக்குவாங்க.."
அவுங்க கிட்ட பேசுவய்யா?
" ம்..."
என்ன பேசுவ...?
" அவுங்க குட்டி பார்ப்பாவை சாய்ங்காலம் நான் தான் பார்த்து கொள்வேன். அவ பண்ற சேட்டையை சொல்வேன் .சிரிப்பாங்க "
" யாராவது பள்ளியில் நடக்கிற விசயங்களை பேசுவிங்களா? "
அனைவரும் அமைதியாக புரியாத வாறு இருந்தனர்.
" டேய்..உன் பரண்டு அடிச்சது...சார் திட்டினது இல்லை பாராட்டினது... நம்ம ஆத்துக்கு போனது...உங்க வீட்டு பக்கம் என்ன மண்ணு இருக்கு என்ன செடி வளருது...சொன்னது ..ஜாலியா சினிமா பத்தி " என விளக்கினேன்.
" அது வந்து சார்... "
சினிமா என்றதும் ஆதிகர்ணன் வேகமாக,
" சார், நேத்து நான் ...புட்டு வேணும்ன்னு எங்க அம்மா கிட்ட கேட்டேன். அப்ப ..எங்ம்மா உங்கப்பா கிட்ட கேளுன்னு சொன்னாங்க..நான் உடனே ..அம்பிகா தியேட்டர் போய் ...எங்கப்பா கிட்ட காசு கேட்டேன். உடனே கொடுத்துட்டார் . " என்றான்.
அவனின் அப்பா அம்பிகா தியேட்டரில் வேலை பார்க்கிறார்.
என் அருகில் இருந்த அன்புக்குரியவனை நீ அப்பா கிட்ட எப்ப பேசின...? என கேட்டேன்.
" சார், கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க பாப்பா ஓடி வர்றேன்னு கீழே விழுந்துடுச்சு, பக்கத்துல இருந்த சாக்கடையில் விழுந்து டிரஸ் அழுக்காகிடுச்சு...எங்கப்பா நல்ல குழந்தைகள் கிட்ட சேர்ந்தா நிதானமா வருவ என சொன்னாரு...எங்கம்மா அதுக்கு இங்க நான் ஒருத்தி துவைக்கிறதுக்கு இருக்கேன்ல ன்னு சொன்னாங்க... எங்கப்பா சிரிச்சுகிட்டு ...தோய்க்க தானே இருக்க நீன்னு சொன்னாரு.....அதுக்கப்புறம் ஜெயிலுக்கு போயிட்டார்..."
இப்படி ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடம் தேவைகளை கேட்பதையும், பெற்றோர்களிடம் திட்டு வாங்குவதையும் பேசுவதாக கூறினார்கள்.
தமிழ் வழி கல்வி குழந்தைகள் மட்டும் அல்ல . அனேகமான குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் நல்லது கெட்டதுகளை பகிர்ந்து கொள்வதில்லை் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் நல்லா படி , அதை செய்கிறேன் என்ற கண்டிசன் உடனே குழந்தைகளுடன் பொழுது கழிப்பதாக உணர்கின்றேன்.
கல்வி கொள்கை உருவாக்குபவர்கள் இதை எல்லாம் கணக்கில் கொள்வதில்லை. எந்த சிலபஸ்சிலும் இவர்களின் சிக்கல் குறித்து பேசப்படுவதில்லை. ஆனால் , எதை பத்தியும் கவலை கொள்ளாமல் மாணவர் நலம் பற்றியும் யோசிக்காத புதிய கல்வி கொள்கை குறித்து விவாதித்து தெளிவு பெற வேண்டும்.
மதுரை சரவணன்

Friday, August 26, 2016

குழந்தைகளின் அதிசய சக்தி..!


குழந்தைகள் மிக எளிய வழியில் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொள்கின்றார்கள். குழந்தைகளின் மன முதிர்ச்சி மிகவும் ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது.
பள்ளியிலும் சரி வீட்டிலும் குழந்தைகள் ஒரே மாதிரிதான் செயல்படுகின்றார்கள். குழந்தைகளை கையாள்வது என்பது மிகவும் சவாலான விசயமாக இருந்தாலும் , அவர்களை புரிந்து கொண்டால், குழந்தைகளை சமாளிப்பது எளிதான காரியமாகி விடும்!
குழந்தைகள் உலகம் அதிசயமானது. குழந்தைகள் தங்களுக்கென ஒரு உலகத்தை உருவாக்கி கொள்கின்றார்கள். அவர்களின் உலகில் சஞ்சரிப்பது மிகவும் எளிது. குழந்தைகளுடன் குழந்தைகளாக இருந்து பாருங்கள். அதுவே குழந்தைகளை புரிந்து கொள்வதற்கும், நமது குழந்தைமையை மீட்பதற்குமான உத்தியாகும். குழந்தைகள் உலகில் நாம் எளிதாக நுழைந்துவிட முடியும்.
மாலை சத்யா டிவியில் டோரிமான் பார்த்து கொண்டிருந்தான்.
‘பாலிங் நட்சத்திரம் (falling star) கீழே விழுகின்றது, அதை பார்த்து மூன்று முறை கும்பிட வேண்டும். அப்படி கும்பிட்டால், நாம் நினைத்தது நடக்கும்’ என வசனம் வந்ததும் ,சத்யாவை பார்த்தேன்.
“டாடி...பாலிங் ஸ்டார் என்றால் என்ன ? ”
”எரி நட்சத்திரம். மேலே இருந்து பூமியை நோக்கி நட்சத்திரம் கீழே விழும். அது காற்றில் பறந்து வரும் போதே...எரிந்து சாம்பலாகி விடும். அதனால் கீழே விழும் முன் மறைந்து விடும்.”
”ஓ !அதுவா.., எனக்கு தெரியும், டாடி.!.நான் பார்த்திருக்கேன். ஆமா டாடி கீழே விழுகிற துக்குள்ளே மறஞ்சிடுச்சு..டாடி “
”வெரி குட்... நாம் வெளியே போய் எரி நட்சத்திரம் விழுகிறதான்னு பார்ப்போமா?”
“டாடி நான் சொல்ற மாதிரி செஞ்சா நீ நினைச்சது நடக்கும்..”
”எப்படிடா..?”
”போ டாடி நீ எப்பவும் மறந்து மறந்து போயிடுற..”
“சாரி.. மன்னிச்சிடு.. தம்பி “
”டாடி.. தூங்கிறதுக்கு முன்னாடி நம்ம தலைமுடியை பிடிச்சிட்டு..நாம் மனசுகுள்ள எதையாவது நினைச்சு படுத்தா.. அது கட்டாயம் நடக்கும் டாடி..”
”ஓ ! சொன்னேயில்லே..!”
“டாடி, நான் போலீஸ் ஆபிசராகணும்.. திருடங்களை பிடிச்சு ஜெயி ல்ல போடணும்.. தப்பிக்க நினைச்சான் ஒரே சுடு டுமீல்.. அவ்வளவு தான்.. மக்கள் எல்லாம் பயமில்லாம நடக்கணும்.. வண்டியில் போகும் போது ஜெயின் அறுக்கிறவனை ஒரே போடு டுமீல் ...செத்துடுவான்...”
”போதும்சாமி...நீ வருங்கால ஐபிஎஸ் தான்! ”
“டாடி இன்னிக்கு நீ தூங்கிறதுக்கு முன்னாடி நினைச்சிட்டு படு...மறந்துடாம முடியை பிடிச்சுட்டு நினைச்சுக்க...நீ நினைச்சது நடக்கும்”
இப்ப தான் ஞாபகம் வந்தது .
இரண்டு மாதத்திற்கு முன்பு படுக்கையில் உறங்கும் முன் முடியை பிடித்துகொண்டு சிரித்தான்.
நான் பார்த்ததும் அவன் சிரித்தான். நானும் சிரித்தேன். என்ன பண்ற என கேட்டேன்.
“டாடி நான் போலீஸ் ஆபிசராகணும்ன்னு முடியை பிடிச்சு நினைச்சேன். என் ப்ரண்டு சொன்னான்”
நானும் முடியை பிடித்து கொண்டு இந்த முறை மதுரை புத்தக திருவிழாவில் நான் எழுதிய புத்தகம் வர வேண்டும் என்று நினைத்தேன்.
நினைவுக்கு வந்தது.
அப்போது நினைத்தது நடந்துவிட்டது.
குழந்தைகளாக இருப்பது வரம்.
கொஞ்சம் அவர்களோடு இணைந்து இருக்க வேண்டும். அதன் பின் குழந்தைகளை நம் போக்கில் வளர்ப்பது எளிதாகிவிடும்.
”சத்யா வா நாம் படிக்கலாம்..”
”வா டாடி.. தமிழ் முதலில் படிப்போம்..”
டிவியை அவனே அணைத்துவிட்டு வந்தான்.
மதுரை சரவணன்.

Tuesday, August 23, 2016

மொழி குழந்தைகளுக்கு முக்கியமானது...!

மொழி குழந்தைகளிடம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. குழந்தைகளின் திறமையை வளர்த்தெடுப்பதில் மொழி முக்கியப்பங்கு வகிக்கின்றது. மொழி திறன் பெற்றவர்கள் மிகவும் சிறப்பாக வகுப்பறையில் இயங்குவதை காண்கின்றேன்.
மொழித்திறன் அற்ற மாணவர்கள் தங்களின் உடல் உபாதைகளை கூட வெளிப்படுத்த சிரமப்படுகின்றார்கள். மாணவர்கள் சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் மொழி அவசியப்படுகின்றது. அதை விட வினைப்புரிவதற்கு மொழி முக்கியமாக உள்ளது.
இன்று காலை பால முருகன் என்ற மாணவனின் கன்னத்தில் நகக்கீறல் காணப்பட்டது. அவன் குற்றாலம் செல்வதாக கூறி சென்ற வாரம் வெள்ளி விடுமுறை எடுத்திருந்தான். ஆகவே , சென்ற இடத்தில் எதுவும் நடந்துவிட்டதோ? என பதறி கேட்டேன்.
“சார், குற்றால் போன்னேன்னா.. குளிச்சேன்னா.. ஏசுக்காரங்க வந்தாங்களா.. அப்ப குளிச்சேனா. ஏசுக்காரங்க என் பக்கத்தில் குளிச்சாங்க..” என இழுத்தான்.
“அப்புறம் என்னாச்சுடா” என பொறுமை இழந்த மாணவன் மணிகண்டன் கேட்டான்.
“சார்.. குளிச்சேனா.. குற்றால் மெயின் பால்ஸ்.. ஏசுக்காரங்க..சிலுவை போட்டு இருந்தாங்களா. நான் குனிச்சு குளிச்சேனா.. அவுங்க குனிஞ்சாங்களா..”
“டேய் காயம் எப்படி பட்டுச்சு.. குற்றாலம் போனா குளிக்க தாண்டா செய்வாங்க..” என்றாள் தர்ஷிக்கா.
“ஏசுக்காரங்க ... நிமிந்தாங்களா...அப்ப அந்த ...கிழிச்சிடுச்சு..”
“அந்த எது கிழிச்சிடுச்சுடா..?” திரும்பவும் மணிகண்டன் கேட்டான்.
“போடா.. சார்... நான் குளிச்சேனா..ஏசுக்காரங்க..”
“சார்.. எனக்கு புரிஞ்சு போச்சு..சார் இவன் குளிச்சப்பா பக்கத்தில் இருந்தவரின் சிலுவை கீறி விட்டு கன்னத்தில் காயம் உண்டாச்சு சார்....”என்றான் ஆதீஸ்வரன்.
“ஆமாம் ” என்றான் பாலமுருகன்.
தாய்மொழியில் பேசுவதற்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் திணறுகின்றார்கள். இதற்கு போதிய பயிற்சி இன்மை காரணம் என கூறலாம். அவனை குறித்த கேஸ் ஹிஸ்ட்டரியில் அம்மாணவன் இரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் பயின்றவன் என அறிய வந்தேன்.
தாய்மொழி முக்கியம் . அது மட்டுமல்ல. அந்த மொழியினை திறம்பட பயன்படுத்த ஆசிரியர்கள் போதிய பயிற்சி தர வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் கீரிடத்தை கழட்டி வைத்து பேசுவதற்கு அனுமதி தர வேண்டும்.
மாணவர்களோடு மாணவர்களாக இருக்கும் போது மொழி தங்கு தடையின்றி வெளிவரும் . பயம் போக்க வேண்டும். பயம் தாய்மொழியை கூட பேச அனுமதிப்பதில்லை. தடுமாறச்செய்து விடும்.
மொழியின் பயன்பாடு, செயல்பாடு குறித்து ஆசிரியர்கள் சிந்தித்தல் நலம் . அதற்கான பயிற்சியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
மதுரை சரவணன்.

Tuesday, June 28, 2016

எங்கள் வீட்டில் கழிப்பறை இல்லை , ஐயா!

*
இருப்பதிலே மிகப்பெரிய அவஸ்தையும், மிகப்பெரிய நிம்மதியும் மலம் கழித்தல் ஆகும்.
சிறுவயதில் இருந்தே கழிப்பறைகளை பயன்படுத்திய பலரும் காலை கடன் முடிக்க கிராமத்தினர் பலரும் படும் பாடு அறிந்திருத்தல் அரிது.
காரைக்குடிக்கு பெரியம்மா வீட்டிற்கு சென்ற போது திறந்தவெளி மலம் குறித்து அனுபவம் ஏற்பட்டது.
1980 வாக்கில் சென்றதாக நினைவு.
அக்காமார்கள் 4 அல்லது 5 மணி வாக்கில் , இன்னும் சரியாக சொல்லப்போனால் விடிந்தும் விடியாமலும் உள்ள நேரம், கையில் வாளியும், பித்தாளை செம்பும் எடுத்து சென்றார்கள். கோலம்போட செல்கின்றனர் என நினைத்து உறங்கி விட்டேன். நேரம் சென்று எழுந்து ஆய் வருது என்ற போது உங்க அண்ணன் கூட போ என்றார் பெரியம்மா.
அவர் வீட்டிற்கு வெளியில் அழைத்து சென்றார். நல்லா பார்த்துக்க நாளை பின்ன வந்தா நீயா தான் போகணும் . கம்மாய் ஆழம் ஜாஸ்தி . நான் காட்ற இடத்தில தான் கால் கழுவணும் என கண்டிசன் போட்டார். என் கண்டிசன் ரெம்ப மோசமாகவே கம்மாய் வரை தாங்காது என்றேன்.
அடக்கிக்க என்றார். வந்தவுடனே செல்லும் நகரத்து வாசியான எனக்கு பழக்கம் இல்லாததால் ஓரத்தை தேடினேன் . அங்க இருந்த ஆச்சி திட்டுவாங்க ..இன்னும் செத்த நட என அவசரப்படுத்த ...இரண்டு தெரு வரை திரும்பிய நான் தாங்க முடியாத அவசரத்தில் டவுசரில் இருந்து விட்டேன் .
அப்புறம் அண்ணன் வீட்டுவரை சென்று வாளியில் தண்ணீர் கொண்டு வந்து கழுவி, பின் அம்மணமாக டவுசரை இடது கையில் பிடித்து கூனி குறுகி நடந்து வந்தேன்.
வீட்டிற்கு வந்ததும் பெரியம்மா அந்த பீ த்த டவுசரை அப்படியே போட்டு வர வேண்டியது தானே என்றார். அழுகையாக வந்தது . அது இரண்டு மாதம் முன் தீபாவளிக்கு வாங்கியது.
பாவம் பெண்கள் நன்கு விடிந்த பின் செல்ல முடியாது. விடிவதற்கு முன்பே சென்று விட வேண்டும். அவர்கள் அவஸ்தை தனி.
வீட்டின் முன்புறம் வராண்டா இருக்கும். அதில் என் அக்கா அமர்திருந்தாள். வீட்டினுள் இருந்த பெரியம்மா அக்கா வீட்டுக்கு தூரம் . அவளை தொடாம வா என்றார். ஆய் வந்தா என்ன செய்வே என்றேன். விராண்டாவின் கடைசியில் மாடம் மாதிரி சதுரமாக கட்டி இருந்தனர். பள்ளமாக சறுக்கலாக குழி இருந்தது. அதில் ஆய் இருந்து மண் அள்ளி போடுவார்கள் என விளக்கம் அளித்தார். அதில் மறைப்பாக கோணி சாக்கு இருந்தது.
இன்று சக்கிமங்கலம் பகுதியில் இருந்து எங்கள் பகுதிக்கு வரும் பல மாணவர்களும் திறந்த வெளியில் மலம் செல்பவர்களே!
பல மாணவர்கள் அதன் கஷ்டத்தை உணர்ந்து பள்ளிக்கு வந்தே மலம் கழிக்கின்றனர்.
பல பள்ளிகளில் கழிப்பறை இருந்தாலும், அடைக்கப்பட்ட அல்லது திறந்த அரங்கில் பொது மேடை அமைத்து அதில் மலம் கழிக்கின்றனர். இங்கு முட்காடுகள் மட்டும் இல்லை. அதற்கு பதில் கான்கிரீட் தளம் .
திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது. அதனால் நோய்கள் பரவுகின்றன. வாஸ்தவம்.
ஆனால் இயலவில்லை. என்ன செய்வது?
பள்ளிகளில் செயல்படும் கழிவறைகளே, பல மாணவர்களுக்கு கழிப்பறை.
நவீன படுத்தப்பட்ட பல கழிப்பறைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் அழிவு நிலைக்கு ஒரு சில மாதங்களிலே சென்று விடுகின்றன.
கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் தமிழக கல்வி துறை தொடக்கப் பள்ளி அளவிலாவது அதனை பராமரிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இந்து செய்தியில் குஜராத் பள்ளிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பது குறித்த செய்தி படித்தேன். அங்கு மட்டும் இந்த நிலமை இல்லை. தமிழகத்திலும் தான்.
குழந்தைகளிடம் தான் நல்ல பழக்கத்தை விதைக்க முடியும் . குழந்தைகளிடம் இருந்து ஆரம்பிக்கும் ஆரோக்கியமே நிரந்தரம்.
நர்மதா கிராமத்தில் நடைமுறை படுத்தப்பட்ட இவ் விசயம் பாராட்டதக்கது. அதேவேளியில் கழிப்பறை கட்ட பணவசதி களை அரசும் ஏற்படுத்தி தர வேண்டும் . இல்லை எனில் வருகைப்பதிவேட்டு வாசிக்கும் போது இப்படி எங்கள் வீட்டில் கழிப்பறை இல்லை அய்யா என்பது பாகுபாட்டை மாணவர்களிடம் உருவாக்கும் !
மதுரை சரவணன்
LikeShow More Reactions
Comment

Saturday, March 26, 2016

இரத்தமும் சதையுமானவை வகுப்பறைகள்!


வதங்தீகள் படுத்தும் பாடு!

பள்ளிக்கூடம் வெறும் சுவர்களால் உருவாக்கப்பட்ட வகுப்பறைகளாலானதன்று.  பள்ளிக்கூடங்கள் அம்மாவின் கருவறையைப் போன்றவை. குழந்தைகளின் கல்வியோடு பாதுகாப்பையும் முக்கியமாக  வழங்குபவை. குழந்தைகளின்  உண்மையான கனவுகளுக்கான கதவை திறப்பவை.


ஐந்துவிரல்கள் ஒன்றாய் இருப்பதில்லை. அது போல் தான் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. ஒருவர் அன்பால் குழந்தைகளை கட்டி வைக்கலாம். ஒருவர் தன் பிரம்பை காட்டி குரங்குகளை கையால்வது போல் வித்தை காட்டலாம். ஒருவர் எதையும் கண்டு கொள்ளாமல் ,குழந்தைகளின் போக்கில் விட்டுவிடலாம். ஒருவர் குழந்தைகள் விரும்புவதை செய்து , குழந்தைகளுடன் குழந்தைகளாக இருக்கலாம். ஆனால், அனைவரும் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்றே இச்செயல்களை செய்கின்றனர் என்பது தான் உண்மை!   

குழந்தைகளை பாத்ரூம் அனுப்பாத ஆசிரியர் குறித்து விசாரித்தப்படி பள்ளி மைதானத்தில் இருந்தேன். நான்கைந்து பேர் வேகமாக வந்தனர். என்ன என்று  விசாரித்தேன். அண்ணா நகர் பகுதியில் ஒரு பள்ளியிலும் கல்லூரியிலும் வெடி குண்டு வெடித்து விட்டதாக எங்கள் பகுதியில் ஒருவர் கூறினர். மேலும், இது போன்று காமராசர் சாலையில் சில பள்ளிகளிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக டிவியில் கேட்டதாக என் உறவினர் கூறினார். ஆகவே, எங்கள் குழந்தைகளை அழைத்து போக வந்தோம் என்றனர்.

இங்கு பாருங்கள் ! குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர். எல்லா குழந்தைகளும் படித்து கொண்டு இருக்கின்றனர். உங்களுக்கு கவலை வேண்டாம். இதெல்லாம் புரளிதான். இதே மாதிரி சில வருடங்கள் முன் எங்கள் பள்ளிக்கும் போன் வந்தது. விடுமுறை விட்டது தான் மிச்சம். எல்லாம் புரளி. கவலை விடுங்கள். உங்கள் குழந்தைகளை அழைக்கின்றேன். பார்த்து பேசி விட்டு செல்லுங்கள் என்றேன். அவர்கள் ஒத்து கொள்ளவில்லை. கடைசியில் அவர்களின் குழந்தைகளை அழைத்தே சென்றனர்.  

சிறிது நேரத்தில் ஈசலைப்போல் படையெடுத்து வந்தனர். முடிந்தவரை குழந்தைகளை அழைத்து செல்வதை தடுத்து பார்த்தோம். ஆசிரியர்கள் அனைவரும் பெற்றோர்களிடம் இது வெறும் புரளி என்று எடுத்துரைத்தனர். எந்த பிரயோஜனமும் இல்லை. படிப்பு போனா திரும்ப படிச்சிடலாம். உயிர் போனா திரும்பி வருமா! என்றவாரே அழைத்து சென்றனர்.

இந்த மாதிரியான வதந்தி காலம் காலமாக மக்களிடம் உயிர் பயத்தை கொடுத்துள்ளது. மேலும், மக்களிடம் எழும் இந்த பயம் எப்போதும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியுள்ளது 1665ம் ஆண்டில் லண்டன் மாநகரையே பிளேக் நோய் சூறையாடியது. பிளேக் நோய் லண்டன் நகரெங்கும் பரவிப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொள்ளையடித்து கொண்டிருந்தது. சேரிப்பகுதிகளிலும், மர வீடுகளிலும், தூய்மையற்ற சூழ்நிலையில் வாழும் மக்களிடையே இந்நோய் முதலில் பரவியது. குடும்பம் குடும்பமாக தெருத் தெருவாக மக்கள் மடிய ஆரம்பித்தனர். அரசனும், அரவையைச் சேர்ந்தவர்களும் சாலிஸ்பரி நகரத்துக்கு தப்பி ஓடினார்கள். நோய் அங்கும் பரவியது. பின் அரசனும், அங்கிருண்டவர்களும் ஆக்ஸ்ஃபோர்டுக்கு ஓடினார்கள். தப்ப முடியாத ஏழை எளியவர்கள் பரிதாபமாக இறந்தனர். அப்போது தவறான வதந்தி ஒன்று பரவியது.

பிளேக் நோய்க்கு காரணம் நாய்கள் தான். நாய்கள் தான் பிளேக் நோயைப் பரப்புவதாக யாரோ கூற, இந்த வதந்தி நகரெங்கும் பரவ தொடங்கியது. இதை நம்பி மக்கள் ஏரளமான நாய்களைக் கொல்ல ஆரம்பித்தனர். ஆனால், உண்மையிலேயே இந்த நோயைப் பரப்பி வந்த எலிகளைப் பற்றி யாருக்கும் தெரியாமல் போயிற்று.! லண்டன் நகரின் மக்கள் தொகையில் ஐந்தில்  ஒரு பங்கு மக்கள் இந்நோய்க்கு பலியாகி இருந்தனர். ஐந்து மாதங்களுக்குள் இந்நோய் முற்றிலும் நீங்கி விட்டது. அதற்கு பின் இன்று வரையில் லண்டனில் பிளேக் நோய் தலை காட்டவில்லை என்பது ஆச்சரியமே!

மக்கள் புரளிக்கு, வதந்திக்கு மதிப்பு கொடுத்து உடனடியாக உயிர் பயத்தில் நடவடிக்கை மேற்கொண்டாலும், இம்மாதிரியான வதந்திகளை ஏற்படுத்துவது யார்? தீவிரவாதிகளா? நிச்சயமாக இல்லை. இந்தியா மாதிரியான நாடுகளில் தீவிரவாதம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்திய சக்திகள் ஆங்காங்கே வெடிகுண்டுகளை வெடிக்க செய்து திசை திருப்பலாம். ஆனால், பள்ளிகளில் குண்டு வைக்கும் அளவுக்கு தீவிரவாதம் உருவாகவில்லை என்றே கருதுகின்றேன்.


பரீட்சையை நிறுத்துவதற்கும், பள்ளி விடுமுறை விட செய்வதற்கும் மாணவர்களால் செய்யப்படும் வதந்தியே ,இம்மாதிரியான வெடி குண்டு புரளிகள் உள்ளன . ஏன் மாணவன் இம்மாதிரியான புரளிகளை , வதந்திகளை பரப்ப வேண்டும். நம் கல்வி முறையில் அல்லது பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பிடிக்காத செயல் அல்லது மாணவர்கள் ஏற்று கொள்ள இயலா செயல் உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. வெடி குண்டு புரளிகளை ஏற்படுத்தும்  மாணவர்களை குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அல்லது யார் இப்படி போன் செய்யும் அளவுக்கு மாணவரை உருவாக்குவது ? கல்வி முறையா? ஆசிரியரா? 

மதுரை சரவணன்.