Monday, December 28, 2015

பள்ளிக்கூடம் - தொடர் (கட்டுரை 2)

2.  பேருந்தை துரத்தும் குழந்தைகள்                                                              (பள்ளிக்கூடம் தொடர் )

 “இயற்கையில் குழந்தைகளில் கெட்டவர் என்று யாருமில்லை“- புரோபல்.



பள்ளிக்கூடம் குழந்தைகள் இல்லாமல் சாத்தியமில்லை. குழந்தைகளே பள்ளிகளின் ஆதாரம்! குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரும் காப்பியமாக எழுதலாம்! பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குடிமை பகுதிகளில் உள்ள 5+ குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டும். கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி 1கிமீ தூரத்தில் துவக்கப்பள்ளிகளும், 3கிமீ தூரத்திற்குள் நடுநிலைப்பள்ளிகளும் இருக்கும் படி அரசு, பள்ளிகளை அமைத்து தர வேண்டும். இது அண்மைக்கல்வியை உறுதி செய்வதாக இருக்கின்றது ! ஆனால் நடைமுறையில் பெற்றோர்கள் பல கிமீ கடந்து சென்று குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்புகின்றனர்!

சட்டங்களும் திட்டங்களும் நன்மைக்காக கொண்டுவந்தாலும், அதனை பயன்படுத்தும் மக்கள், தங்களுக்கு எது மிகவும் பயனுள்ளதாக அல்லது உகந்ததாக படுகின்றதோ அதனையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த வித்தியாசங்களை போக்க வேண்டுமானால் நாம் பொது பள்ளி திட்டத்தை கொண்டு வர வேண்டும்! மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ, இன்ஞ்னியரிங் கல்லூரிகளில் இடங்கள் நிரப்ப படுவதாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நாமக்கல் கோழிப்பண்னைகளிலே சேர்க்கின்றனர்.   திறமையின் அடிப்படையில் மதிப்பீடுகளை மாற்றும் வரையில் இந்த நிலை மாறாது! எல்லோரும் பொதுபள்ளிக்கு குரல் எழுப்ப வேண்டும்.


கடல் கடந்து வியாபாரம் செய்வது போன்று எல்லை தாண்டி குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் டிசம்பர் மாதம் முதலே அலைய தொடங்கிவிடுகின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஐந்து வயது பூர்த்தியாகும் குழந்தைகளை தாய் பறவை முட்டையை அடைகாப்பது போன்று டிசம்பர் முதலே காக்க தொடங்கி விடுவார்கள், கவர்ச்சி திட்டங்களால் அதனை பிற பள்ளி ஆசிரியர்கள் கவர்வதும், அதற்காக குழாயடி சண்டை போன்று அடித்து கொள்வது வேடிக்கையாகவும் அதே சமயம் ஆதங்கமாகவும் இருக்கும். குழந்தைகளை சேர்ப்பதில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் திருமங்கலம் பார்முலா தோற்று போகும்  அளவுக்கு உன்னதமானவை!  பாவம், உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்! மாணவர் சேர்க்கைக்காக அரசு தரும் இலவசங்களுடன் தங்கள்  மே மாத சம்பளத்தில் கனிசமான தொகையை ஒதுக்கி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கவும் வேண்டியுள்ளது ! எனக்கு தெரிந்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் வாகனங்கள் மதுரையில் இருந்து சிவகங்கை பார்டர் வரை சென்று வருகின்றன ! இதற்கும் தீர்வு பொது பள்ளிக்கு குரல் கொடுப்பது தான்! ஆனால், ஆசிரியர்கள் கூட்டணி பொது பள்ளிக்கு குரல் கொடுக்காமல் இருப்பது ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றது.


மாணவர் சேர்க்கையில் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் நர்சரி பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சி, 1000க்கும் மேல்….. என்ற உறுதி மொழிகளுடன் மெட்ரிக் பள்ளிகளும் வலம் வருவதில் ஆச்சரியம் இல்லை என்றாலும் சமூகத்தில் யாரும் கண்டு கொள்ளாத, மாணவர்களும் இருக்க தான் செய்கின்றார்கள்! அவர்களின் கல்வி குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. இவர்களை சேர்ப்பதற்கு யாரும் போட்டி போடுவதில்லை. திட்டங்களின் அடிப்படையில் தான் அவர்களின் கல்வி உள்ளது! அதற்காக அவர்களில் படிக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லிவிடுவதற்கில்லை!


நான் பணிபுரியும் பள்ளியில் மாணவர் சேர்க்கை என்பது குறித்த கவலை 1996 வரை ஏற்பட்டதே இல்லை. முதன் முதலில் அக்கவலை ஏற்பட்ட போது வைகை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள குடிசைகள் அகற்றப்பட்டிருந்தன. கூண்டோடு 3000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பதால் அகற்றப்பட்டன. அக்குழந்தைகள்  படித்து வந்த பள்ளிகளின் ஆசிரியர்களும் சர்ப்ளஸ் அடிப்படையில் மாற்றப்பட்டனர். பல அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆட்டம் கண்டன. அதனை சரி செய்ய மெட்ரிக் பள்ளிகளை போன்று இந்த உதவி பெறும் பள்ளிகள் மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் சரி செய்ய தங்கள் பள்ளிகளுக்கு  பேருந்துகளை வாங்க வேண்டி இருந்தது. அனைவரும் பி.ஆர்.சி டிப்போவை நாடினார்கள். எங்கள் பள்ளியின் தாளாளர் திரு ஏ.வி.எஸ்.எஸ்.கண்ணன் அவர்கள் முயற்சியில் பேருந்து வாங்கினோம். 

தொடரும்... பேருந்தை துரத்தும் குழந்தைகள்...!

No comments:

Post a Comment