Tuesday, July 21, 2015

சவால்கள் நிறைந்த வகுப்பறை சாதனைக்கு வழிவகுக்கும்!


“சார், எல்லா பாடங்களுக்கும் விளையாட்டு என்று கூறிய நீங்கள் வண்ணத்து பூச்சிக்கு ஒரு விளையாட்டை கொடுங்களேன் பார்ப்போம்”என்று எப்போதும் போல் என்னிடம் சவால் விட்டான் ராகவன்.
“நிச்சயமாக , சார் ஆள முடியாது “ என்றாள் கீர்த்தனா, விளையாடும் ஆர்வத்தில்.
வார்த்தைகளை பொறுக்க முடியாத சோலையம்மாள் , “ ஏய் சார் ஆள முடியாதது ஒன்றுமில்லை.. இப்ப பாரு நமக்கு ஒரு விளையாட்டு கொடுப்பார் “
விளையாட்டு ரெடி. நாளை காலை விளையாடுவோம். நீங்கள் வண்ணத்து பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை படியுங்கள் என்றேன். அனைவரும் ஆர்வமாக படித்தனர்.




மறுநாள் அபராஜிதா பவுண்டேசனில் இருந்து நண்பர் வந்திருந்தார். அவர் எப்.பி யில் பார்க்கின்றேன். விளையாட்டு விளையாட செய்யுங்கள் என்றார். ஒரு பழைய விளையாட்டை சொல்லி விட்டு, இன்று புதிய விளையாட்டு பாருங்கள் என்றேன்.
விடியோவில் பதிந்தார். இதோ அந்த விளையாட்டு முயன்று பாருங்கள். வகுப்பறை ஆனந்தமே!





விளையாட்டு விதி:
வண்ணத்துப்பூச்சியின் முதல் பருவம் சார்ந்த விசயத்தை கூறும் போது மாணவர்கள் தனித்தனியாக நிற்க வேண்டும்.உ.ம். இலையின் அடிப்பகுதியில் முட்டை இடுதல்.
வண்ணத்துப்பூச்சியின் இரண்டாம் பருவம் சார்ந்த விசயம் கூறும் போது இரண்டு இரண்டு மாணவர்களாக இணைந்து நிற்க வேண்டும்.
உ.ம்: ஐந்து நாட்களுக்கு பின் புழுவாக வெளிவரும்.
பச்சை அல்லது பழுப்பு நிறம். அதிகமாக உணவு உட்கொள்ளும் நிலை. உடல் பல நிறங்களில் வரிவரியாக காணப்படும்.
மூன்றாவது பருவம் குறித்து கூறும் போது மூன்று மூன்று மாணவர்களாக இணைந்து நிற்க வேண்டும்.
உ.ம். உடல் உறுப்புகளில் இறக்கைகள் முளைக்கும் பருவம்.
தன்னை சுற்றி கூடு கட்டிக்கொள்ளும் பருவம்.
கூட்டுப்புழு பருவம். உடல் உறுப்புகள் முளைக்கும் பருவம்.
நான்காவது பருவம் குறித்து கூறும் போது நான்கு நான்கு நபர்களாக இணைந்து நிற்க வேண்டும்.
உம். முழு வண்ணத்துப்பூச்சி . கூட்டை உடைத்து வெளிவரும் பருவம்.
மாணவர்கள் தவறான இணையில் நின்றால் விளையாட்டில் இருந்து விலக்க படுவர்.
வண்ணத்துப்பூச்சியின் நான்கு பருவங்கள் குறித்த அறிவு, விளையாட்டு விதிகளை மதித்தல், இணைந்து செயல்படுதல், குழுவாக செயல்படுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.


இந்த செயல்பாடு 5ம் வகுப்பு அறிவியல் பாடம் 3 வண்ணத்துப்பூச்சியும் தேனீக்களும் பாடத்திற்குரிய செயல்பாடாகும்.
வகுப்பறையை கலகலப்பாக கொண்டு செல்வது ஆசிரியரால் தான் முடியும். மாணவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், படிப்பில் நாட்டம் ஏற்படுத்தவும், சிந்திக்க செய்ய வைக்க முடியும். நல்ல ஆசிரியராக இருக்க கொஞ்சம் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கினால் போதும். குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கும் எல்லா ஆசிரியர்களும் நல்ல ஆசிரியர்களே, நல் ஆசிரியர்களே!
க.சரவணன், தலைமையாசிரியர் .

4 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை சகோ..நல்லதொரு முயற்சி.
//குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கும் எல்லா ஆசிரியர்களும் நல்ல ஆசிரியர்களே, நல் ஆசிரியர்களே!//
உண்மைதான்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் பல முயற்சிகள் சிறக்கட்டும்...

”தளிர் சுரேஷ்” said...

அருமை! சிறப்பாக கல்வி கற்றுக்கொடுக்கின்றீர்கள்!

'பரிவை' சே.குமார் said...

அருமையான முயற்சி சரவணன் சார்...
பாராட்டுக்கள்.

Post a Comment