Friday, July 24, 2015

வகுப்பறை குழந்தைகள் விரும்பும் கருவறை! *





நான் வளர்கின்றேனே மம்மி! இந்த விளம்பரம் பார்க்கும் போது கேலியாக இருந்தது. ஆனால் எவ்வளவு உண்மை. அந்த விளம்பரத்தில் மகிழ்ச்சியுடன் துள்ளி குதிக்கும் குழந்தை இப்போதும் நினைவுக்கு வருகின்றான். மம்மி..அது சாதாரண வார்த்தை அல்ல. அது உயிர், மகிழ்ச்சி. அன்பு, பாசம் , நேசம், பாதுகாப்பு, வளர்ச்சி, அரவணைப்பு என அத்தனையும் உள்ளடக்கியது.





கருவாக இருக்கும் போது எல்லாவற்றையும் தனது எதிர்காலத்திற்காக கொடுத்து, அதற்காகவே தன்னை அர்பணித்து , மகிழ்ச்சியாக இருந்து, தன் கவலை மறந்து, கருவின் பாதுகாப்பையே முக்கியமாக உணர்ந்து தனது உதிரம் தந்து, கருவின் அறிவு வளர்ச்சிக்கு புத்தகம் பல படித்து, உடல் ,உள்ளம், அறிவு என எல்லாவற்றிலும் முழுவளர்ச்சியை கொடுக்கும் தாய் மட்டுமே, என்றும் குழந்தைகளின் விருப்பமாக உள்ளது.

நான் எனது வகுப்பறையை குழந்தைகள் விரும்புமாறு மகிழ்ச்சியோடு பாதுகாப்பு, அன்பு, நேசத்தோடு அவர்களின் முழுவளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும் தாயின் கருவறையாக எப்போதும் குழந்தைகளை உணரச் செய்கின்றேன் என்பதில் பெருமை பட்டு கொள்கின்றேன். தாயின் உணர்வை ஒவ்வொரு நாளும் பெருகின்றேன்!




சமூக அறிவியல் மூன்றாம் பாடம் நாம் வாழும் பூமி பாடத்திற்கு எப்படி விளையாட்டை உருவாக்குவீர்கள். அவை எல்லாம் பூழியின் நில அமைப்பை பற்றி அல்லவா உள்ளது என அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் ஆச்சரியத்துடன் கேட்டார்! கவலை வேண்டாம் பிரதர் நாங்கள் ஏற்கனவே அந்த பாடத்திற்கு விளையாட்டை உருவாக்கி விட்டோம். விளையாண்டு கொண்டிருக்கின்றோம். இன்று முகநூலில் காணவும் என்று விளக்கமளித்தேன். சபாஷ். விரைவில் எல்லா வகுப்புகளுக்கும் எல்லா பாடங்களுக்கும் விளையாட்டை உருவாக்கினால் நலம் என்றார். அதற்கான பணியை தொடங்கிவிட்டேன் என்றேன். மகிழ்ச்சியுடன் வாழ்த்தி போனை கட் செய்தார்.

அதற்கு அடுத்து காலையில் முல்லைநிலவன் செம்மலரில் நான் எழுதியுள்ள “வாத்தியார் ஹீரோவாகிறார்” கதையை படித்துவிட்டு, பாராட்டினார். மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற உற்சாகங்கள்.
இப்போது விளையாட்டு குறித்து காண்போம்.





விதிமுறைகள்:
1.கண்டங்கள் ஏழு . அவற்றின் பெயரை கூறும் போது கண்ணை கைகள் கொண்டு மூட வேண்டும்.
2.மலைகள் 5. இமயமலை, ஆண்டிஸ் , ஆல்ப்ஸ், ராக்கி, கிளிமாஞ்சாரோ என சொல்லும் போது கைகளை நன்றாக உயரமாக உயர்த்தி, கைகள் சேர்த்து மலை போன்று காட்ட வேண்டும்.
3.பீட பூமிகள் திபெத், தக்காணம், கொலராடோ என கூறும் போது கைகளை நெஞ்சுக்கு அருகில் கூம்பு போல் சேர்த்து காட்ட வேண்டும். அதாவது மலையை உயர்த்தி காட்டியது போல் அப்படியே நெஞ்சுக்கு அருகில் காட்ட வேண்டும். மலையை விட உயரம் குறைந்த பூமி மட்டத்திற்கு மேல் உள்ளவை பீட பூமி என்பதற்காக!
4. சமவெளி : சிந்து கங்கை, லியானஸ், லம்பார்டி எனும் போது மாணவர்கள் சமமாக இரு கைகளையும் காற்றில் அலைய விட்டு காட்ட வேண்டும்.
5. பள்ளத்தாக்குகள்: நைல், கிராண்ட்கேன்யான், சிந்து எனும் போது மாணவர்கள் கீழே அமர வேண்டும்.
6. கடல்கள் : பசிபிக், அட்லாண்டிக், இந்திய, தெற்கு, ஆர்டிக் எனும் போது மாணவர்கள் ஒரு கையால் காற்றில் அலையை ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களை வட்டமாக நிற்க செய்யவும். ஆசியா என்றவுடன் தானாக கண்களை கைகள் கொண்டு முடுவான். கிளிமாஞ்சாரோ எனும் போது தானாக கைகளை உயர்த்தி மலையை நினைவுபடுத்தி நிற்பான்.தக்காணம் என்றவுடன் கைகளை நெஞ்சுக்கு நேராக குவிப்பான், ஆர்டிக் என்றவுடன் ஒரு கையால் அலை எழுப்புவான், சிந்து கங்கை என்றவுடன் இரு கைகளால் சமம் என காட்டுவான்.
தொடந்து விளையாட மாணவர்களுக்கு கண்டங்கள், மலைகள் பீடபூமிகள், சமவெளிகள், பள்ளதாக்குகள், கடல்கள் குறித்து பரிச்சயமாகி விடுவான்.

விளையாடுங்கள். வகுப்பறையை மகிழ்ச்சியாகவும் பாட கருத்துகள் எளிமையாக குழந்தைகள் மனதை சென்றடையவும் துணைபுரியுங்கள். எல்லாம் நம் கையில் தான். எனது வகுப்பறை ஒரு தாயின் கருவறை என்ற உணர்வை கொண்டதாக குழந்தைகளுக்கு எப்போதும் இருக்கும். அதனால் எப்போதும் இல்லை ஆப்சண்டிஸ்!

குழந்தைகளுடன் நானும் வளர்க்கின்றேன். மகிழ்கின்றேன். நாளை எப்படி ஆக்கபூர்வமாக வகுப்பறையை கொண்டு செல்வது என்பதற்கு அதுவே வினை ஊக்கியாக இருக்கின்றது. தினமும் ஒரு தாயின் உணர்வோடு உறங்க செல்கின்றேன் !
மதுரை சரவணன்.

6 comments:

'பரிவை' சே.குமார் said...

மிகச் சிறப்பான பணி...
வாழ்த்துக்கள் சரவணன் சார்.

'பரிவை' சே.குமார் said...

தமிழ் மணத்தில் இணைத்து ஒரு ஓட்டும் போட்டுட்டேன் சார்...

திண்டுக்கல் தனபாலன் said...

மாணவ மாணவியர்கள் அனைவரும் உங்கள் பள்ளியில் படிக்க கொடுத்து வைத்தவர்கள்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

சிறந்த ஆசிரியர் நீங்கள் , வாழ்த்துகள்

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் ஆசிரியரே!

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/

Post a Comment