Wednesday, September 3, 2014

நம்பிக்கை தானே எல்லாம் ! சிரிக்க வைத்த சுஜாதா..!

      நம்பிக்கை. அது தான் வாழ்க்கையின் எல்லா விதமான உற்சாகத்தையும் கொடுக்கும் டானிக். அது நீங்கள் விரும்பும் எதையும் உங்களிடம் கொண்டு சேர்க்கும். 
    
        உங்கள் மீது நீங்கள் கொள்ளும் நம்பிக்கை , நீங்கள் சந்திக்கும் அல்லது பேசும் அத்தனை பேரிடமும் பரவி, அனைவரையும் உற்சாகம் கொள்ளச் செய்யும். உற்சாகம் நிறைந்த இடத்தில் நமக்கானது எல்லாம் சாத்தியமாகும். சாத்தியமானவைகளை சாத்தியப்படுத்தும் நேரம் கூடி விடுமானல், நாம் நினைத்த அந்த புள்ளியை அடைவது சாத்தியமே.

         ஒவ்வொரு வருடமும் காலையில் பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும், மாணவர்களை கொஞ்சம் தியானம் செய்ய சொல்வேன். (அதாவது மனதை ஒருமுகப்படுத்துதல் நடக்கும். பலர் இந்த தியானம் மாணவர்களை கட்டிப்போடும் செயல். துள்ளி ஓடும் மாணவர்களை அடக்கி ஒடுக்க வைக்கும் செயல் என்று கூறுவார்கள். இது தவறானது. உளவியல் ரீதியில் மாணவனின் உள்ள(ம்) ஓட்டங்களை முறைப்படுத்தும் வழிமுறை. அது மட்டும் அல்ல இது அவனின் கவனம் கொள்ளும் சக்தியை (கான்சன்ரேசன் பவர் ) அதிகரிக்கும். குழந்தை மையக்கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தியானம் தேவை என்பதை வலியுறுத்துவார்கள். )

        அதன் பின் குழந்தைகளுக்கு நல்ல கருத்துக்களை அடக்கியுள்ள புத்தங்களை வாசித்து காட்டுவேன். அப்புத்தகம் முடியும் வரை தொடர் வாசிப்பு இருக்கும். வருடத்திற்கு பத்து அல்லது அதற்கு மேற்பட்ட புத்தகங்கள் குறித்து அறிந்து கொள்வார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தது இரண்டு அல்லது நான்கு மாணவர்கள் ( ஐந்தாம் வகுப்பு ) அவர்கள் பகுதியில் உள்ள நூலகத்தில் புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

             மாணவர்களிடம் ஐந்தாம் வகுப்பிலேயே பாடப்புத்தகம் மட்டுமே புத்தகம் அல்ல என்பதை புரிந்து கொள்ள செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையான ஆசை என்னிடம் உள்ளது . அறிவு புகட்ட, உற்சாகம் ஊட்ட, இனிமை கொடுக்க, இருந்த இடத்திலிருந்தே விசயங்களை தெரிந்து கொள்ள பாடப்புத்தகங்கள் மட்டுமே போதுமானது அல்ல. அதை தவிர பல புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பதை அவன் அறிய வேண்டும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையான ஆசை உள்ளது.
அதனை நோக்கியே என் செயல்பாடுகளும் உண்டு.

           தொடர்ந்து வகுப்பில் புத்தகங்களை வாசித்து காட்டுகின்றேன். என் பையில் உரிமையோடு புத்தகங்களை எடுத்து வாசிக்கும் உரிமையை அளிக்கின்றேன். மதியம் வாசிக்க கதைகளையும் கதை புத்தகங்களையும் தருகின்றேன்.

          சமீபத்தில் இந்த வருடம் சுஜாதவின் அறிவியல் கதைகளில் இருந்து சில கதைகளை வாசித்து காட்டினேன். தண்ணீரில் ஓடும் கார் குறித்த கதையை வாசித்த போது கடைசியில் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அடக்க முடியாமல் சிரித்தார்கள். அதை ரசித்தேன். இந்த மாலைப்பொழுதில் பள்ளி பேருந்துக்காக காத்திருந்த அவர்கள் பிற வகுப்பு குழந்தைகளிடமும் இதை பகிர்ந்தே சென்றிருப்பர். இப்படி தான் அவர்களிடம் புத்தம் குறித்த ருசியை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டுகின்றேன்.

          நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்த புத்தகங்கள் குறித்து சொல்கின்றேன். இதுவும் எனக்கான நம்பிக்கையில் ஒரு பகுதி தான். என் நம்பிக்கை சரி என்றே என்றும் நம்புவேன்.

        இந்த முறை புத்தக கண்காட்சி நடப்பதை கூறியதுடன் தாய் தந்தையருடன் செல்லுங்கள் என்று கூறினேன். வாய்ப்பு இருந்தால் அழைத்து செல்கின்றேன் என்றேன். அவர்களும் சரி என்றனர். நேற்று சென்னைக்கு CCE IN ABL பயிற்சிக்கு கேஆர்பி யாக சென்றேன். இன்று காலை வகுப்பறைக்குள் நுழைந்தேன் . இரு மாணவர்கள்( சதீஸ், மணிகண்டன் ) புத்தகங்கள். ஆச்சரியம். எப்படிடா என்றேன். நேற்று என் தந்தையுடன் புத்தக கண்காட்சி சென்றேன். வாங்கினேன் என்றார்கள். அனைவரும் அந்த புத்தகத்தை வாங்கி வாங்கி படித்தார்கள்.
   

          யானை பற்றிய அறிய தகவல்கள் தெரிந்து கொண்டார்கள். மதிய இடைவேளையில் சார் குழந்தை பிறக்கும் போது யானை கூட்டமா சுத்தி நிக்குமாம் சார் என்றான் கஜேந்திரன். மோகன் தாஸ் என்பவன் சார் யானை தண்ணி குடிக்கும் போது அது குட்டிகளை முதல்ல அனுப்பாதாம் . தாய் யானை குடித்த பின் தான் குடிக்க அனுமதிக்குமாம் என்றான். மணிகண்டன் சார் ஆத்த கடக்கும் போது குட்டியானையை தான் முதல்ல அனுப்புமாம் என்றான். இந்துவில் வந்திருந்த எறும்புக்கு பயந்த அரசன் கதையை ஐஸ்வர்யாவும், திருக்கனியும் படித்து பகிர்ந்தார்கள்.

       நான் என் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். நாளை நிர்வாகம் மாணவர்களை புத்தக கண்காட்சி அழைத்து செல்ல அனுமதிக்கும். நாளை கல்வி அதிகாரி அதற்குரிய அனுமதியினை வழங்குவார்.

           இதை விட என்னிடம் வரும் மாணவர்கள் புத்தகங்களை வாசிப்பார்கள் நேசிப்பார்கள் என்று நம்புகின்றேன். நம்பிக்கை தானே வாழ்க்கை அல்ல. நம்பிக்கை கொண்டால் வாழ்க்கையே நம் வசப்படும். நீங்களும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். எல்லாம் கை கூடும். எல்லாம் ஒரே சமயத்தில் கை கூடுவதில்லை என்பதையும் மனதில் வைத்து நம்பிக்கை தளராமல் நம்பிக்கை கொள்ளுங்கள். 


மதுரை சரவணன். 

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

நம்பிக்கை கொண்டால் வாழ்க்கையே நம் வசப்படும.

அருமையான பகிர்வுகள்ள் ..பாராட்டுக்கள்.!

Yarlpavanan said...

அருமையான பகிர்வு
தொடருங்கள்

கோமதி அரசு said...

தியானம், புத்தகம் வாசித்தல், என்ற முறையில் மாணவ செல்வங்களை வழி நடத்தி செல்லும் பணி வாழ்க! வளர்க!.
நாளைய மாணவ சமுதாயம் நலம் பெறும் என்ற நம்பிக்கை ஊட்டுகிறது

Unknown said...

தங்கள் பணி சிறக்க வாழ்த்து!

தருமி said...

// மாணவர்களிடம் ஐந்தாம் வகுப்பிலேயே பாடப்புத்தகம் மட்டுமே புத்தகம் அல்ல என்பதை புரிந்து கொள்ள செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையான ஆசை என்னிடம் உள்ளது .//

மிக நல்ல எண்ணம். நல்ல முயற்சி. தொடர்ந்து நடத்த என் வாழ்த்து.

மாதேவி said...

நல்ல வழிநடத்தல். வாழ்த்துகள்.

Post a Comment