Friday, August 28, 2015

உங்களை பாடாய் படுத்தும் 3 ... கொஞ்சம் கவனமாக இருங்கள்..!


3 என்ற இல்லாத பூதம்!
நான் எப்போதும் பாடம் நடத்தும் முன் ஏதாவது ஒரு தலைவர் குறித்தோ அல்லது வாழ்வியல் சிந்தனை குறித்தோ உரையாற்றுவது உண்டு அல்லது புத்தகத்தில் இருந்து வாசித்து காட்டுவது உண்டு. . அதை மிகவும் ஆர்வமாக கவனிப்பார்கள்.
இன்று வகுப்பறையில் நுழைந்தவுடன் மூன்று ஒரே அளவிலான துண்டு தாள்களை கட் செய்தேன். ஒரு துண்டு சீட்டில் 1,2, 4 என எழுதி என் மேசையின் மீது வைத்துவிட்டேன். சார், புத்தகம் வாசித்து செய்தி சொல்ல வில்லையா என கேட்டார்கள். பரீட்சை வருகின்றது ஆகவே, நாம் பாடம் படிப்போம் என்று தமிழ் எடுத்து மூன்று பொற்காசுகள் பாடத்தை வரிசையாக வாசிக்கவும் என்றேன். மாணவர்கள் அயர்ச்சியுடன் வாசிக்க ஆரம்பித்தார்கள். சீக்கிரம் வாசித்தால் நாம் ஒரு ஆக்டிவிட்டி செய்யலாம் என்றேன்.
வேகமாக வாசித்தனர். உடனே ராகவன் சார் பாடத்தை நடத்துவோம் சார், பரீட்சைன்னாலே பயமா தான் இருக்கும். அதனால் இனி டெய்லி நாம் படித்து தேர்வுக்கு தயாராவொம் என்றான். உடனே கீர்த்தனா இப்ப என்ன படிக்காமலா இருக்கோம் என்றாள். எல்லா பாடத்துக்கும் கேள்வி கேட்டால் டான் டான்னு சொல்லுறீய்யே..என்றாள். உடனே, இப்ப அப்படி தான் தெரியும் பரீட்சைன்னு வந்துட்டா.. அப்புறம் தெரியும். எழுதும் போது தானே இருக்கு..சும்மா ஆக்டிவிட்டி, விளையாட்டுன்னு இல்லாம சார் சொல்றமாதிரி இனி தேர்வுக்கு தயாராவோம் என்றான்.
என்னடா ராகவன் சொல்ற மாதிரி தேர்வுன்னா பயமா? என்றேன். சரவணக்குமார் உடனே ஆமாம் சார்.. கொஞ்சம் பயமா தான் இருக்கு. சொல்றத தைரியமா சொல்றோம். ஆனா பரீட்சை வரும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கு என்றான்.
சரி .. எனக்கு மூட் மாறி விட்டது. வாசிப்பை நிறுத்துங்க..! நாம் ஆக்டிவிட்டி செய்வோம். ராகவன் சார்..முதல்ல பாடம் அப்புறம் தான் விளையாட்டெல்லாம். சொன்னதை செய்யுங்க..! உடனே எல்லோரும் அவனை கோரசாக போடா.. முதல்ல ஆக்டிவிட்டி அப்புறம் படிக்கலாம் என்றனர்.
சரி ராகவா.. ஒரு சின்ன ஆக்டிவிட்டி தான் . நான் காலையில் அங்க கார்டு எழுதி வச்சிருந்தேன். அதை எடுத்துகிட்டு வா. வரிசைப்படி அடுக்கி கொண்டுவா என்றேன்.
உடனே சரி என்று தலையசைத்தப்படி சார் ஒரே ஒண்ணு தான் அதுக்கப்புறம் பரீட்சைக்கு படிக்கணும் என்றான்.
நல்லது ராகவா எடுத்து வா..மேசை மீது வரிசையாக எண்கள் எழுதிய அட்டை வைத்துள்ளேன் எடுத்து வா என்றேன்.
அவன் மேசை அருகில் சென்றான். கார்டுகளை எடுத்தான். 1, 2, 4 என பார்த்தான். சார் 3 காணாம் என்றான். உடனே அருகில் இருந்த செந்தில் டேய் நல்லா தேடுடா.. வேண்டாம் வேண்டாம்ன்னு தேடுனைன்னா எப்படி கிடைக்கும் என்றபடி மேசை மீது உள்ள புத்தகங்களை எடுத்து விட்டு தேடினான். ராகவன் கீழே 3 விழுந்து கிடக்கின்றதா என மேசை அடியில், பெஞ்சுக்கு அடியில் தேட ஆரம்பித்தான்.
உடன் பிறரும் இணைந்து கொண்டு தேட ஆரம்பித்தார்கள். டேய் மடையா ஒழுங்க கார்டை எடுக்க தெரியாதா.. உன்னால் ஆக்டிவிட்டி செய்வது வீணாக போகின்றது. டைம் எல்லாம் வேஸ்ட் என்று அவனை கடிந்து கொண்டனர்.
இப்போது அருகில் இருந்த பெண்குழந்தைகளும் தள்ளுங்கடா நாங்க தேடுறோம் என்று இணைந்தனர். நான் எதையும் கவனிக்காத மாதிரி சீக்கிரம் கொண்டு வாருங்கள். கார்டு 3 வந்த தான் விளையாட முடியும் என்றேன்.
இப்போது என் மேசை மீது உள்ள எல்லா பொருட்களையும் பெண்கள் எடுத்து கீழே அடுக்கி வைத்து தேடினர். 3 கிடைக்கவில்லை. மீண்டும் அழகாக அடுக்கி வைத்து விட்டனர். கடைசியாக அனைவரும் தேடி பிடித்து இல்லை என்பதை உறுதி செய்த பின் சார்.. 3 காணாம் இன்னோரு கார்டு எழுதுங்க ..ப்ளீஸ் விளையாடுவோம். ஆக்டிவிட்டி செய்வோம் என்றனர்.
நான் ஆக்டிவிட்டி முடிந்தது என்றேன். வாங்க வந்து உட்காருங்கள் என்றேன். ராகவன் எதையும் அறியாமல் விழித்தான். பிற மாணவர்கள் என்னது ஆக்டிவிட்டி எப்ப பண்ணோம் என வியந்து பார்த்தனர்.
இல்லாத ஒன்றை தேடுகின்றீர்கள். நான் ராகவனை எண்களை அடுக்கி வரிசையாக கொண்டுவரத்தான் சொன்னேன். நீங்கள் 3 என்ற எழுதாத கார்டை தேடினீர்கள். என்னது 3 நம்பர் எழுதவில்லையா? என கோரசாக கேட்டனர்.
ராகவன் இதெல்லாம் ஏமாத்து வேலை. என்னை பயமுறுத்திட்டீங்க.. நான் எடுக்கும் போது விழுந்துவிட்டதே என தேடினேன். போங்க சார்.இது போங்கு என்றான்.
நான் இப்போது அவர்களுக்கு வாழ்வியல் பாடம் எடுக்க ஆரம்பித்திருந்தேன்.
உண்மை தான். இது போங்கு தான். நாம் ராகவனை போன்று இல்லாத ஒன்றுக்கு பயந்து போய், அது குறித்து அலைந்தப்படி இல்லாததை பெரிதாக நினைத்து கவலைப்பட்டு அதற்காக நம் வாழ்வை செலவழித்து, தொலைத்து கொண்டிருக்கின்றோம். நம் பொன்னான நேரத்தை வீணடித்து கொண்டிருக்கின்றோம். தேர்வு என்ற இல்லாத பூதத்திற்கு பயந்து நடுங்கி நம் சுய சிந்தனையை இழந்து, மனப்பாடம் என்ற தவறான அணுகுமுறையை பயன்படுத்துகின்றோம்.
நாம் வகுப்பரையில் கற்கின்றோம். அதன் தொடர்சியாக வீட்டில் அதனை நினைவுப்படுத்தி பார்க்கின்றோம்.படிக்கின்றோம். படித்து பெற்ற கருத்தை அனுபவமாக செயல்பாடுகள் மூலம் மாற்றுகின்றோம். அதன் நன்மைகளுக்கு ஏற்ப கருத்தை செறிவாக்கி கொள்கின்றோம். பின் அந்த அனுபவத்தை வாழ்வில் பொருத்தி பார்க்கின்றோம். விளையாட்டாய் பாடம் கற்கும் போது தெளிவாக இருக்கின்றோம். ஆனால் தேர்வு என்ற ஒன்று வரும் போது 3 மாதிரி இல்லாத பூதம் என்ற பயம் தொற்றி கொள்கின்றது, உங்களை கொல்கின்றது. சுய சிந்தனை இன்றி செயல்பட ஆரம்பிக்கின்றீர்கள். தன்னம்பிக்கையை இழந்து பயம் உங்களை ஆட்கொள்கின்றது. இது தான் உங்கள் பலவீனம். நாம் பலமான கல்வி இல்லாத , மதிப்பெண் அல்லது தரம் குறியீட்டுக்கள் என்ற அறிவு சோதனைகளுக்காக பயந்து போய் இருக்கின்ற சிந்தனையை மழுங்கடித்து நம்மை இயல்பாய் செயல்படாமல் ஓரிடத்தில் தங்கி இல்லாத ஒன்றிற்காக கவலை கொள்கின்றோம் என்றேன்.
ஆம் என எல்லோரும் தலையசைக்க..ராகவன் ஆமாம் சார் நாங்க தான் டெய்லி நீங்க கேட்கின்ற எல்லா கேள்விக்கும் பதில் அளிக்கின்றோம். பின்பு ஏன் பரீட்சைக்கு பயப்பட வேண்டும். என்றான்.
இனி என்ன இருக்கின்றது. விளையாட்டாய் கல்வி மீண்டும் பலம் பெற தொடங்கியது.
மதுரை சரவணன்.

Monday, August 24, 2015

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்? சிவகங்கை பள்ளிக்கூடம் சம்பவம் புகட்டுவது என்ன?

எங்கிருந்து தொடங்குவது … குழந்தைகளை பாலியல் குற்றங்கள் இருந்து காப்போம்.!
           பள்ளிக்கல்வி துறை வகுப்பில் மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது , அப்படி வந்தால், ஆசிரியர்கள் அதை வாங்கி வைத்துக் கொண்டு , பள்ளி முடிந்து, வீட்டுக்க  அனுப்பும் போது எச்சரித்து திருப்பி கொடுக்க வேண்டும் என்கிறது. இச்செய்தியை பகிர்வதற்கான அவசியம் இருக்கிறது. இன்று செய்தி தாள்களின் பக்கங்களை சிறுவர்களின் மீது ஏற்படுத்தும் பாலியல் வன் கொடுமை தினம் தினம் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் உரிமை சட்டம் சொல்லும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணங்களை சீர்தூக்கி பார்த்தால் , அது வீட்டில் இருந்து ஆரம்பிக்கின்றது. நாம் வாங்கி தரும் சட்டைகள் மிகவும் மார்டனாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு ஆடைகளை வாங்கும் போது, நம் குழந்தைகளின் உடல் வாகுவிற்கு பொருந்தாத ஆடைகள் உடலில் பாகங்களை வெளிப்படையாக காட்டுகின்றன. மார்டன் ஆடை என்ற பெயரில் நாம் விலைகொடுப்பது, நம் குழந்தைகள் மீது செலுத்தப்படும்  வன்கொடுமைகளையும் சேர்த்து தான் !

   குழந்தைகளிடம் இருந்து தப்பி செல்ல வேண்டும் அல்லது ஏதோ ஒருவேளையை நிம்மதியாக பார்க்க வேண்டும் என்று நினைத்து டி.வி பார்க்க வைக்கின்றோம். அவர்கள் சினிமா சம்பந்தமான விசயங்களையே பார்க்கின்றனர். அதனால் மனரீதியாக சில செக்ஸ் வக்கிரங்களை அவர்களை அறியாமலே பதிந்து விடுகின்றனர்.  நாம் நம் குழந்தைகளை அண்டை அல்லது தெரிந்த நபர்களிடம் ஒப்படைக்கும் போது, அவர்களின் இச்சைகளுக்கு உடந்தையாக்கி,  குழந்தைகள் சீரழிந்து போகின்றன. சில சமயம் நமக்கு தெரிந்தவர்களே நம் குழந்தையை சீரழிக்கின்றனர்.
 குழந்தைகளிடம் கொடுக்கப்படும் அலைப்பேசி மிகவும் ஆபத்தனாது. அவர்கள் வரம்புக்கு மீறிய பேச்சுக்கு துணைப்போவதற்கு நாமே உதவுவது போல் ஆகும். அதில் பதிவிறக்கம் செய்யப்படும் படங்கள் , குழந்தைகள் மனதை மிகவும் பாதிக்கின்றன. குறிப்பாக நடிகைகளின் படங்கள் வால் பேப்பர்கள் அவர்களின் மனதை அலைபாய வைக்கின்றன. அதுவே அவனை ப்ளூ பிலிம் வரை கொண்டும் சென்று விடும்.
   
        குழந்தைகள் முன்னால் பேசப்படும் ஆபாச பேச்சுக்கள் , ஆபாச வார்த்தைகள் குழந்தைகளின் மனதை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. முக்கியமாக கணவன் மனைவி இருவரும் போடும் சண்டைகள் குழந்தைகளை மிகவும் பாதித்து, மனசிக்கலை உருவாக்குகின்றன. அது வெளியில் நமக்கு தெரிந்தவர்களால் அல்லது குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லும் நபர்களின் இச்சைக்கு உடன்பட வைத்து , பாலியல் குற்றங்களில் நம் குழந்தைகளை ஈடுபடுத்த நேரிடலாம்.

       இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் வேலை காரணமாக , குழந்தைகளை தனிமையில் விட்டு செல்ல நேரிடுகின்றது. எவ்வளவு தான் வீட்டை பூட்டி, மிகவும் பாதுகாப்பாக இருந்தாலும் குழந்தைகளின் மனதை பூட்டி வைக்க முடியாது. அதனாலே குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். தனிமை குழந்தைகளிடம் மனசிதைவை ஏற்படுத்துகின்றன.

    குழந்தைகள் அன்புக்காக ஏங்கி தவிக்கின்றனர். ஆகவே,குழந்தைகளிடம் பேசுங்கள். அவர்களின் மனதை புரிந்து கொள்ளுங்கள். நம் குழந்தைகளை எந்த புறக்காரணிகளும் பாதிக்காது.
தமிழ்நாட்டில் பெருகி வரும் மதுக்கடைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சர்வேக்கள் சொல்கின்றன. ஆகவே, பெற்றொர்கள் தங்கள் குழந்தைகளின் நலன் கருதி குடிக்காமல் இருந்தல் நலம். மது அருந்துபவர்களை நம்பி நம் குழந்தைகளை ஓப்படைத்து செல்லாதீர்கள். குறிப்பாக பெண் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டாம். போதையில் என்ன செய்கின்றோம் என்பதை மறந்து நடக்க கூடும்.
      
       சினிமா பார்ப்பதை குழந்தைகள் ஒதுக்கி வைப்பது நல்லது. ஹீரோயிசம் என்ற அடிப்படையில் குழந்தைகள் தன்னை ஒரு ஹீரோவாக உருவகம் செய்து, சண்டையில் ஈடுபடுகின்றனர் அதன் விளைவாக காதலிக்கவும் ஆரம்பிக்கின்றனர். காமத்தை தூண்டும் விதமான பாடல்களால் நம் குழந்தைகளை தவறான வழியில் நடக்க செய்யலாம்.

        குழந்தைகள் கோபப் படும் படியாக பேசாதீர்கள். அவர்கள் அடிக்கடி கொள்ளும் கோபம் மனசிதைவை ஏற்படுத்த வாய்ப்பாக அமையலாம்.
         
        இப்படி ஏறக்குறைய குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியில் வன் கொடுமைகளுக்கு குடும்ப சூழலே காரணமாக அமைவதால் , நாம் நம் குழந்தைகளை காலத்தின் அவசியம் கருதி அன்போடு, நல்ல பழக்க வழக்கத்தோடு, கோபப்படாமல், இனிமையாக பேசி, வீட்டில் புத்தகங்கள் நிறைந்து நம் குழந்தைகளோடு டிவி தவிர்த்து, பிறர் கண்களுக்கு உறுத்தாத ஆடைகள் அணிந்து, செல்போன் தவிர்த்து (கொடுக்காமல்)  வாழ்ந்தாலே போதுமனாதாகும்,அது நம் குழந்தைகளை பாலியியல் ரீதியான துன்புறுத்தல் அச்சத்திலிருந்து காத்துவிடும்.     


            தொடர்ந்து பத்திரிக்கையிலிருந்து வரும் செய்திகளை நாம் காணும் போது நம் குழந்தைகளின் மீது தானாகவே கவனம் குவிகின்றது. நாம் யாரையெல்லாம் உயர்வாக நினைக்கின்றோமோ அவர்கள் எல்லாம் பெண்கள் விசயத்தில் மோசமாக இருக்கின்றார்கள். காலத்தின் அவசியம் , நாம் நம் குழந்தைகளுக்கு தன் உடல் மீதான நம்பிக்கையை, அவசியத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அரசும் பாடநூல்களில் பாலியல் கல்வியை மெதுவாக புகுத்தியுள்ளது வரவேற்கதக்கது. எது குட் டச் ? எது பேட் டச் ? என்பதை நாம் நம் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். மூன்றாம் வகுப்பு பாடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது பாலியல் சார்ந்த கல்வி.   

          தகப்பனானாலும் தள்ளி நின்று பேச வேண்டும். தாத்தா வானாலும் மடியில் அமர்ந்து பேசாக்கூடாது போன்ற வரிகள் முக்கியமானவை. ஆசிரியர்கள் நம் குழந்தைகளின் மீது எப்போதும் அக்கறையுடன் தான் இருக்கின்றனர். இருந்த போதிலும் பெற்றோர்களாகிய நாமும் இந்த மாதிரி விசயங்களில் கவனம் கொள்ள வேண்டும். நம் குழந்தைகளை பாலியல் சார்ந்த தொல்லைகளில் இருந்து காப்பாற்ற  , நாம் நம் குழந்தைகளின் உடைகளில் இருந்து கவனம் செலுத்த வேண்டும். வாய்க்கு நுழையாத பேன்சி டிரஸ்களையும்,  வெற்றிப் படங்களின் கதாநாயகிகளின் பெயரிலும் வெளிவரும் கவர்ச்சியான ஆடைகளை நாம் வாங்க கூடாது. நம் குழந்தைகளின் உடல் அமைப்புக்கு ஏற்ற பிறர் கண்களுக்கு உருத்தாத ஆடைகளை நாம் வாங்கி தர வேண்டும். பள்ளிகளில் அதற்காக தான் சீருடை அமைத்து உள்ளனர்.
சினிமா பார்க்காமல் இருப்பது உத்தமம். பாலியல் சார்ந்த விசயங்கள். பாலியல் சார்ந்த வசனங்கள் குழந்தைகள் அவர்கள் என்னவென்று அறியாமலே பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். சினிமாக்கள் வாழ்க்கையின் நிஜம் என மாணவ பருவத்தில் கருதி விடுகின்றனர். அது நம் குழந்தைகளின் மனதில் தேவையில்லா மன குழப்பத்தை விளைவிக்கலாம்.

        டிவியில் நாடகம் பார்ப்பவர்கள், தங்கள் குழந்தைகள் வீட்டில் இல்லாத தருணங்களில் பாருங்கள். தொலைக்காட்சியில் எத்தனையோ நல்ல விசயங்கள் உள்ளன, அப்படி இருக்க தேவையில்லாத நிகழ்வுகளை பார்க்க அனுமதிக்காதீர்கள். அதனால் மனரீதியாக பாலியல் வேட்கையை தூண்டக்கூடும். அது தவறான பாதைக்கு அழைத்து செல்லலாம். நம் குழந்தைகளை நாம் தானே பாதுக்காக்க வேண்டும்.
இண்டர் நெட் உபயோகம் அவசியமானது. இன்று நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ப்ராஜெக்ட் என்ற பெயரில் நெட் செண்டர்களை நாடுகின்றனர். நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  முடிந்தால் நீங்களும் ப்ரவுசிங் செண்டர்களுக்கு சென்று , உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள். சின்ன தவறு கூட உங்கள் குழந்தையை திசை திருப்பி விடும் . இதில் ஆண் , பெண் குழந்தைகள் என்ற பாகுப்பாடு இல்லை.

     அதை விட முக்கியமானது, உங்கள் குழந்தைகளிடம் எப்போதும் உரையாற்றுங்கள். காலை முதல் மாலை வரை அவன் என்னென்ன செய்தான், பள்ளியில் என்ன நடைப்பெற்றது, அவனின் நண்பர்கள் யார், அவர்கள் எப்படி பேசுகின்றனர், ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகின்றனர். வீட்டுக்கு அருகில் யாருடன் பழகுகிறான், பள்ளி தவிர வேறு நண்பர்கள் இருக்கிறார்களா என்பது போன்றவற்றை மெதுவாக , அவனுடன் பேசி, தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் மன தேவைகளை அறிந்து கொள்ளுங்கள். நாம் அவர்களுக்காக தானே வாழ்கின்றோம்.

       உங்களால் முடிந்தவற்றை வாங்கி தாருங்கள். இல்லை என்பதை இல்லை என்று கூறாமல் , அவனை அடிக்காமல், இல்லை என்பதை உணர்த்துங்கள். குழந்தைகள் அதன் பின் நம்மால் முடிந்தவற்றை மட்டுமே கேட்டு பெற்று  கொள்வார்கள்.

     மொத்தத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நண்பராக இருந்தால் போதுமானது. நம் குழந்தைகளுக்கு பாலியல் சம்பந்தமான எந்த குறையும் நிகழாது. குழந்தைகளை நேசியுங்கள். குழந்தைகளை நண்பர்கள் போல நடத்துங்கள். குழந்தைகளை நம் மீது நம்பிக்கையை உண்டாக்குங்கள். உங்கள் நம்பிக்கை வீணாகது. நீங்கள் நினைத்தப்படி அவன் சிறந்து விளங்குவான்.


மதுரை சரவணன்.

Tuesday, August 18, 2015

பசுமை நடை- தெப்பக்குளம் நினைவு அலைகள்


(50வது பசுமை நடை நிகழ்வில் கலந்து கொண்ட பின்  எழுதியது)


“மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்க துளிக்க என்
குட்டன் வந்தென்னைப் புறம் புல்குவான்”.  
-பெரியாழ்வார்
தெருவிலே விளையாடும் குழந்தை சிறுநீர் கழித்து விட்டு , தாயின் நினைப்புடன் உடனே வீட்டுக்குள் ஓடி வந்து, அமர்ந்து வேலை செய்கிற தாயினைப் பின்னாகச் சேர்த்துக் கட்டிப்பிடிக்கிறது. மிச்சமிருக்கின்ற சிறுநீர்த் துளி தாயின் முதுகிலே சொட்டு சொட்டாகப் படிகிறது. தாய் மகிழ்ச்சியால் சிலிர்த்து போகிறாள். இது பெரிய புராணம் கூறும் கதை.


பசுமை நடையின் பயணம் 26.10.2014 அன்று தெப்பக் குளம் என்று முடிவான போது என் கண்களில் விரிந்த காட்சி வேறு. அது பெரிய புராண நிகழ்வில் இருந்து தலைகீழானது. வீட்டில் அம்மாவிடம் கிரிக்கெட் விளையாட போறோம் என்று கூறி விட்டு, அதிகாலை 6 மணிக்கே (இன்றும் எனக்கு அதிகாலை 6.30 அல்லது 7 ஆகவே இருக்கின்றது!)   சைக்கிள் மிதித்து நண்பர்களுடன் சி.எம்.ஆர் ரோட்டில் இருந்து தெப்பக்குளம் சென்றதும், முதலில் வருவது சிறுநீர் தான்! உள்ளே இறங்கியவுடன் வேக வேகமாக சிறு நீர் கழித்து விட்டு, சொட்ட சொட்ட தெப்பக்குளம் நனைய , குச்சி(ஸ்டெம்ப்) ஊன்றி விளையாட தயாராக இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் போது இந்த தெப்ப குளம் மகிழ்ச்சி பொங்க எங்களை அரவணைத்து விளையாட அனுமதிக்கும்! அங்கு விளையாடிய பின் மைய மண்டபத்தில் ஓய்வெடுப்பதில் தனி சுகமே இருக்கின்றது. அதை விட மைய மண்டம் அருகில் ஸ்டெம் ஊன்றி விளையாடும் போது , மையமண்டபத்தில் மேலிருந்து பேட்டிங் செய்யும் நமது அணியினரை உற்சாகப்படுத்தி கண்டு களிப்பது ஏதோ மெல்போர்ன் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடும் உணர்வை தரும்!

இன்றும் பசுமை நினைவாக நான் வீழ்த்திய விக்கெட்டுகள் கண்முன் சரிகின்றன. நான் பிடித்த கேட்சுகளும், அதனை தொடர்ந்து மேலே தூக்கி எறியும் பந்து இன்றும் அந்தரத்தில் மிதந்து மையமண்டபத்தில் இருந்தவாறு நண்பர்களின் பாராட்டுகளில் செவியை கிழிக்கின்றன. நான் அடித்த பவுண்டரிகள், சிக்சர்களில் ஓடிய பந்துகள் மைய மண்டபத்தின் சுவர்களை   முட்டி பரவச படுத்துகின்றன. எத்தனை பாராட்டுகள். எத்தனை பரபரப்புகள்! தெப்பகுளம் என்றதும் எனது பால்யம் அதன் பரப்பை விட பெரிதாக விரிய தொடங்கி விடுகின்றது.


ஆட்சா தான் எங்கள் அணியின் கேப்டன். ரெங்கா (அருணாவின் சகோதரர்)  எங்கள் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின்னர். மணிசேகரன் எங்கள் அணியின் ரவிசாஸ்திரி. ஆறு பந்துகளையும் சிக்சர் விரட்டியவன். மைய மண்டபத்தினுள் பறந்து சிக்சர் அடித்து பந்தை விரட்டியவன். என் கிரிக்கெட் வாழ்வில் வேறு எவரும் அப்படி சிக்ஸ் அடித்ததில்லை. ஜெயக்குமார் ஸ்பின்னர் . அந்தோணி மெடிக்கல் நடத்தும் நண்பர், ஆல் ரவுண்டர். மால்கம் மார்சல், கபில் தேவ், பிரபாகர் போன்ற பெயர்களுடன் நான் பந்து வீசிக்கொண்டிருந்தது இன்னும் தெப்பகுளத்தின் உள் படிந்திருக்கு புல்லினைப் போன்று பசுமையாக காட்சியளிக்கிறது.

இப்படி எண்ணற்ற நண்பர்கள் தெப்பகுளம் முழுவதும் நிரம்பி வழிகின்றனர். தண்ணீர் இல்ல தெப்பக்குளமே மதுரையின் சிறுவர்கள் கல்லூரி இளைஞர்கள் விரும்புவது!. வெகுவாக சில காதலர்களை நாங்கள் மைய மண்டபத்தில் காண்பது உண்டு. ஆனால் பாவம் அவர்கள். சில மணி நேரங்களிலேயே போலீஸ்சாரால் விரட்டப்படுவார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக! எங்கிருந்து தான் மோப்பம் பிடிப்பார்களோ! எதிரிலே போலீஸ் ஸ்டேசன் பி4 இன்றும் இருக்கின்றது.  இன்று காதலர்களை விரட்டும் அந்த வேலையை வேறு நபர்கள் செய்கின்றார்கள்!  


தெப்பக்குளம் என்றதும் எங்களுக்கு நினைவிற்கு வருவது கிரிக்கெட் கிரவுண்ட் தான்! மதுரையின் மெல்போர்ன் கிரவுண்டு. இப்போதும் சிறுவர்கள் முதல் கல்லூரி நண்பர்கள் வரை கிரிக்கெட்விளையாடுவதை பார்க்கலாம். எங்கள் காலத்தில் டோர்னமெண்ட் நடந்தது. பைனல் வரை சென்று தோற்ற மேட்சுகள் அதிகம்! வாங்கிய கப்புகள் சில. என் ஆட்டத்தை காண எனது தந்தை வந்து பார்ப்பதும் உண்டு!
நீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் நீச்சல் அடித்து விளையாடிய அனுபவம் உண்டு. கரையிலிருந்து நீந்தி மைய மண்டபத்திற்கு செல்வதும் உண்டு. சில சமயம் போலீசார் விசில் அடித்து நீந்த தடை போடுவதும் உண்டு.  “டேய் அது சாக்கடை தண்ணீர் அங்கே போய் நீந்தி விளையாடிட்டா வர்ற…” என அம்மாவிடம் திட்டும், சில சமயம் அடி உதை வாங்கியதும் உண்டு. ஒரு சமயம் அதில் விழுந்து யாரோ செத்துவிட்டதாக தகவல் கிடைத்ததும் பயம் வந்தது. அதன் பின் நீந்த சென்றது கிடையாது. ஆம் சடலம் மிதப்பதை பார்த்தால் யாருக்கு தான் நீந்த முடியும்! சில நேரங்களில் சடலங்கள் சகதியில் மாட்டி நான்கைந்து நாட்கள் தேடியும் கிடைக்காமல் போனதுண்டு! ஒரு சிறுவனின் இறப்பு நேரில் பார்த்த போது தான் தெரிந்தது, நான் அடிப்பது நீச்சல் அல்ல. அது காலை கையை உதறி, தண்ணீரை உளப்பி , கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்க கால் சோர்வாகும் போது மேட்டில் நின்று சுவாசம் கொள்வது என்பது! நல்ல வேளை அப்போதெல்லாம் நான் தண்ணீரில் முழ்க வில்லை. மேடான போலீஸ் ஸ்டேசன் பக்கம்(கிழக்கு பக்கம்) நீந்தியதால் இருக்கலாம்! முறையான நீச்சல் ஜெயின் வித்யாசாலாவில் கற்று கொண்ட போது அதை உணர்ந்தேன்!


தெப்ப திருவிழாவிற்கு தெப்பத்தில் தண்ணீர் நிரப்புவார்கள். அப்போது கரும்பு, சௌமிட்டாய் விற்கும் அதனை வாங்கி சாப்பிட்டு கொண்டு, கூட்டத்தில் தூரத்தில் தேர் இழுப்பதை பார்த்து பிரமித்து, இடிப்பட்டு வீட்டிற்கு வந்து சேர்வது உண்டு. ஒருமுறை கூட்டத்தில் அம்மாவை தவற விட்டு, வீட்டிற்கு நடந்து வந்து, சௌமிட்டாயையும், திண்பண்டங்களையும் தவற விட்டதுடன், திட்டும் பெற்று கொண்டேன்.

இவை தான் தெப்பக்குளம் என்றதும் நினைவில் வருவது. அது தவிர வரலாறாக பார்த்தால் திருமலை நாயக்கர் மீனாட்சி அம்மன் கோவில் கட்ட மண் அள்ளிய இடம் . ஆழம் அதிகமாகவே, தெப்பக்குளமாக மாறியது. வைகையில் இருந்து நீர் கொண்டு வரப்படுகின்றது என்பது மட்டுமே தெரியும். இதன் நீளம் அகலம் பற்றி எல்லாம் கவலை எப்போதும் கொண்டதில்லை. தெப்ப திருவிழா தை மாதம் நடக்கும் என்ற கூடுதல் தகவலுடன் வேறு வரலாறு தெரியாது.


என்ன புதிய தகவல் கிடைக்கும் என்ற எண்ணத்துடனும், அதேவேளையில் சாந்தலிங்கம் அய்யாவின் நக்கல் மிகுந்த சமூகச்சாடல் மிக்க பேச்சினை கேட்கவே பயணப்பட்டேன். தொடர்ந்து முத்துகுமாரின் சீடர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருகை புரிந்து, அனைவரையும் ஒருங்கிணைத்து, எல்லோருக்கும் வாகனம் ஏற்பாடு செய்து , கோழி தன் குஞ்சை பாதுகாப்பது போல் பாதுகாத்து குறிபிட்ட இடத்தில் ஒன்று கூடச்செய்து, சாந்தலிங்கம் அய்யாவின் உரையை கேட்க மைக் தாயர் செய்து, ஒரு மாணவர்களை போல் ஓடியாடி வேலை பார்த்து பிரமிக்க செய்வது எப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது! அன்று பிளாக்கர் மீட்டிங் மதன கோபால மந்திர் அரங்கில் நடக்க இருப்பதால் நிறைய நண்பர்களை காணலாம் என்று விரைந்தேன்.


பசுமை நடையில் கிடைத்த கூடுதல் தகவல்கள் இங்கே உங்களுக்காக..வரலாற்றை புரட்டும் நேரம் கொஞ்சம் சீரியசாக வாசிக்கவும்.
-    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கே 3.9கிமீ தொலைவில் தெப்பகுளம் உள்ளது.
-    வண்டியூர் தெப்பக்குளம், மாரியம்மன் தெப்பக்குளம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
-    கி.பி 1645ல் மன்னர் திருமலை நாயக்கரால் திருமலைநாயக்கர் அரண்மனை கட்ட மண் தோண்டிய இடம் தெப்பகுளமாயிற்று. வைகையில் இருந்து நீர் வர சுரங்க கால்வாய் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-    தென்வடலாக 1000அடியும், கீழ்மேலாக 950 அடியும் ஏறத்தாழ மீனாட்சி அம்மன் கோவில் இடத்திற்கு சமமானது இத்தெப்பக்குளம்.
-    தெப்பக்குளத்தின் நடுவே மையமண்டபம் உள்ளது. அதன் நான்கு மூலையிலும் நான்கு சிறிய மண்டபங்கள் உள்ளன. நீர் நிரம்பியபோது சிறிய தீவாக காட்சி அளிக்கும்.
-    தைமாதம் பூசநட்சத்திரத்தன்று தெப்பத் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இது திருமலைநாயக்கரின் பிறந்தநாள்விழா எனவும் கூறப்படுகின்றது.
-    இதை தோண்டும் போது முக்குறுணிப்பிள்ளையார் கிடைத்ததாக கூறுவார்கள். தெப்பகுளத்தின் மேற்கு பகம்  முக்திஸ்வரர் கோயில் உள்ளது. வடக்கு பக்கம் தியாகராசர் கலைக்கல்லூரியும் மாரியம்மன் கோவிலும் உள்ளது.

அங்கு முத்துகிருஷ்ணன் இன்ப அதிர்ச்சி அளித்தார். காற்றின் சிற்பங்கள் என்ற நூலினை வெளியிட்டார். அதில் பசுமைநடையில் கலந்து கொண்டு பிளாக்கிலும் முகநூலிலும் எழுதிய கட்டுரைகளை திருத்தி புத்தகமாக  கொண்டு வந்திருந்தார். எழுதிய அத்தனை நபர்களையும் நிறுத்தி புகைப்படம் எடுத்து கொண்டது பசுமையான நினைவு. அய்யா தாமோதர் சந்துரு வந்திருந்தது கவிஞர் மோகனசுந்தரம் அவர்களுடன் புத்தகத்தை பெற்று கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.


இதுவரை கண்டிராத தெப்பக்குளத்தினை அங்கு கண்டேன். இதுவரை பார்த்திராத அத்தனை புதுமுகங்களையும் கண்டேன். அவர்களின் (பசுமைநடை நண்பர்கள்) முகங்களில் பசுமையை காண முடிந்தது. ஏதோ ஒரு தாகம் தென்பட்டது. அதனை தங்கள் குழந்தைகளை அழைத்து வந்ததன் மூலம் உறுதி செய்தேன். அதேப்போல் குடும்பம் குடும்பமாக வந்து நம் மதுரை நம் வரலாறு அறிந்து கொள்ள வேண்டும். அழிய விடக்கூடாது என்ற முனைப்புடனும் பலர் வந்திருப்பதை காண முடிந்தது. என்னை போன்று பலரும் பலர் நட்புக்காக பலரின் அறிமுகத்திற்காகவும் வந்திருந்ததை காண முடிந்தது. பசுமைநடையுடன் அர்ஷியா, செல்வம் ராமசாமி, தீபா நாகராணி, துர்கா போன்ற நண்பர்கள் தொடர்ந்து பயணிப்பது பிரமிக்க வைக்கின்றது. அன்று கடங்கநேரியான் குடும்பத்துடன் வந்திருந்தார். அவரின் பிரனவ் குட்டி தொடர்ந்து தந்தையிடம் கேள்வி எழுப்பியப்படி இருந்தான். அழகு! இப்படி பல சந்தோசமான தருணங்கள்..பசுமை நடை வரலாறுகளை சொல்வதுடன் ஒரு குடும்பமாக நல்ல சமூகமாக வளர்ந்து இருக்கின்றது. அதில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகின்றேன்.

50 நடையை தொட்ட இந்த விழாவில் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் அய்யா அவர்கள் பேசிய பேச்சு முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது. கல்வி கூடங்கள் ஆசிரியர்கள் கற்று தராத ஒன்றை போதிக்கும் கல்விச்சாலையாக இந்த பசுமை நடை உள்ளது என்ற பேராசிரியர் பிரபாகரன் பேச்சு இதன் பணிக்கு சான்றாகும்.

தொடர்வோம்… அ.முத்துகிருஷ்ணனின் இப்பணி போற்றதக்கது. அவருக்கு பக்கபலமாக விளங்கும் சாந்தலிங்கம் என்ற இளைஞரின் பணி சிறப்பானது, குறிப்பிடதக்கது. அதற்கு உறுதுணையாக இருக்கும் அத்தனை நபர்களும் பாராட்டுக்குரியவர்கள். அனைவரும் இணைவோம். நம் வரலாறு பற்றி அறிவோம். நம் சிறப்பை பரப்புவோம். நம் வரலாற்று சின்னங்களை அடையாளங்களை அழிய விடாமல் பாதுகாப்போம்! மலைகள் போற்றுவோம்! பாறைகளை குவாரியாக்கி, சமணம் வழி வரலாறு அழியாமல் இருக்க, நம் வரலாற்றை அம்மணமாக்காமல் காப்போம்!.  

.மதுரை சரவணன்.  



Thursday, August 6, 2015

விளையாட்டு முறையில் கற்பிப்பது குறித்த தி இந்து ஆங்கில இதழ் செய்தி

அன்பு நண்பர்களே இன்று 07-06-2015 ஆங்கில இந்து மெட்ரோப்ளஸ் பக்கம் 2 இல் என்னுடைய விளையாட்டு முறை கற்பித்தல் குறித்து கட்டுரை வெளிவந்துள்ளது. இம்மிகிழ்ச்சியை உங்களுடன் பகிர்கின்றேன். அதன் லிங்க் இதோ http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/when-learning-is-fun/article7509357.ece