Friday, November 28, 2014

விருதுநகர் மாணவர் கொலை பின்னனி? யார் குற்றவாளி?


என்ன சொல்வதென்று தெரியவில்லை ?  மாணவர்களிடம் ஏன் இப்படிப்பட்ட ஒழுக்க கேடான செயல்கள் இருக்கின்றன என தெரியவில்லை.  மாணவர்களிடம் மோதல் , கொலை, கடத்தல் என மோசமான செயல்களில் ஈடுப்படுகின்றார்கள். யாரை குறை கூறுவதென்று தெரியவில்லை.
ஆனாலும் மனம் வலிக்கின்றது. ஏன் குழந்தைகள் தங்கள் மனதில் வன்மத்தை வளர்த்து கொள்கின்றன?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்டு கொள்வதில்லை. ஆசிரியர்கள் மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக கொண்டு பாடம் நடத்துகின்றனர். சோசியல் மீடியாக்களில் ஆபாசம் மட்டுமே பெரிதாக படுகின்றது மாணவர்கள் பருவத்தில் !

மாணவர்களின் ஒழுக்க கேடான செயல்களுக்கு காரணம் என்ன? ஏன் ?

எல்லோரும் இயந்திரத்தனமாக இருக்கின்றார்கள். பெற்றோர்கள் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக இருக்கின்றார்கள். ஆசிரியர்கள் மதிப்பெண்கள் பெற்றுத்தரும் இயந்திரமாக இருக்கின்றார்கள். மாணவர்கள் தங்களின் குழந்தை தன்மையை இழந்து விட்டார்கள். மாணவர்கள் தங்களின் இயல்புகளை மறந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.


ஆசிரியர்களும் மதிப்பெண்கள் என்ற அசுரனால், தங்களின் மன நிம்மதியை இழக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் பணிபுரியும் இடத்தில்  உள்ள பிரச்சனைகளால் மன உளைச்சலில் இருக்கின்றார்கள். இப்படி எல்லா இடங்களிலும் மனம் நிம்மதி இழந்து கிடக்கின்றது.

எந்த இடத்தில் இருந்து நாம் பிரச்சனைகளை ஆராய்வது ? யாரிடம் இருந்து விசாரணைகளை தொடங்குவது? நம் குழந்தைகளிடத்தில் ஒழுக்கம் சார்ந்த குறையை ஏற்படுத்தியது எது?

எல்லாவற்றையும் அவிழ்க்கும் முடிச்சாக நம் கல்வி முறை உள்ளது. குழந்தைகள் மையப்படுத்துதல் எல்லாம் சரிதான். ஆனால் நாம் கவனிக்க மறந்த ஒழுக்கம் சார்ந்த நன்னெறியை எந்த தருணத்திலாவது எதிர்பார்த்திருக்கின்றோமா? இல்லை அது சார்ந்து நாம் யோசித்து இருக்கின்றோமா? பெற்றோர்கள் தங்கள் மகனின் மதிப்பெண் தவிர்த்து பள்ளிகளில் மாணவனின் ஒழுக்கம் சார்ந்து பேசி இருக்கின்றோமா? ஆசிரியர்கள் தான் மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்து புகார் அளிக்கின்றோமா?

கலாச்சார ரீதியாக நாம் பலவிசயங்களை முன்னெடுத்து பேசுகின்றோம். எது எதற்காகவோ குரல் கொடுக்கின்றோம். எது எதற்காகவோ ஆதங்கப்படுகின்றோம். அதிகாரிகளும் ஆசிரியர்களும் 30 ஆயிரங்களுக்கு மேல் சம்பளம் வாங்குகின்றார்கள் என பிரச்சனை வரும் போதெல்லாம் பேசுகின்றோம். சாதரணமாக 160 ரூபாய் அடிப்படை சம்பளம் பெற்ற போது இருந்த ஒழுக்க நெறி இல்லை என்கின்றோம்.

கொஞ்சம் நிறுத்தி இங்கு சிந்திப்போம். மாணவர்களை அடிக்க கூடாது, அடிப்பது என்பது மனித உரிமை மீறல் என சட்டம் சொல்கின்றது. ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க கூடாது, அதே சமயம் மனரீதியாகவும் புண்படுத்தக்கூடாது என்கின்றது கட்டாய இலவசக் கல்வி சட்டம். ஆசிரியர்களும் பயந்தோ அல்லது சட்டத்திற்கு கட்டுப்பட்டோ அடிக்க தவறுகின்றார்கள். மீறி கோபம் ஏற்பட்டு அடித்தால், மாணவர்கள் அளிக்கும் புகார்களால், சட்டம் தன் கடமையை செய்வதை பல இடங்களில் செய்தியாகவும் பார்க்கின்றோம். இப்போது பெற்றோர்கள் அந்த கடமையை கையில் எடுத்து பள்ளிகளில் அடியாட்களை வைத்து ஆசிரியர்களை மிரட்டி அடிக்கவும் செய்கின்றார்கள்.


மாணவர்களுக்கு கல்வி எதற்காக போதிக்கப்படுகின்றது? இதற்கு பதிலாக பெற்றோர் மட்டும் அல்ல மாணவனும் சேர்ந்து நல்ல வேலை கை நிறைய சம்பளம் என்கின்றார்கள். ஆசிரியரும் அதற்கு தகுந்தாற்போல் அடிக்காமல் பாடத்தை புகட்டி வாந்தி எடுக்க செய்ய வேண்டும். இங்கு திறமைகளோ திறன்களோ பரிசோதிக்கப்படுவதில்லை.   இவர் மாணவனுக்கு மதிப்பெண் பெறச் செய்ய ப்ரவேட் டியூசன் எடுக்கின்றார். சட்டம் டியூசன் எடுக்க கூடாது என்கின்றது. ஆனால் இவர்கள் சொல்கின்றார்கள். அச்சட்டம் 1 முதல் 8ம் வகுப்பு வரை சொல்லிக்கொடுக்கும் மாணவர்களுக்கு தான். கட்டாய கல்வி சட்டம் 8 வரை உள்ள குழந்தைகளையும் ஆசிரியர்களையும் குறிக்கின்றது. ஆகவே, நாங்கள் டீயுசன் எடுப்பது தவறில்லை என்கின்றார்கள். இப்படி பெற்றோர்கள், மாணவர்கள் நல்ல சம்பளம் வேலை குறித்தும், ஆசிரியரும் நல்ல மதிப்பெண் அதற்காக காசு என்றும் இருக்கின்றனர்.


இதில் மாணவனின் மனநிலையில் ஏற்படும் அழுத்தம் ஒரு சிலரை தற்கொலைக்கு இழுத்து சொல்கின்றது.  அவர்கள் கோழைகள் என்கின்றார்கள். அதனை நான் மனசு பக்குவப்படாத பிஞ்சுக்கள் என்கின்றேன். சிலர் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க , தைரியமாக சோசியல் மீடியாவுக்குள் நுழைந்து பாதை தடுமாறி, பாழான பலவிசயங்களை தெரிந்து, தங்கள் பால்ரீதியான விசயங்களுக்கு தங்களை பலிகொடுத்து இயங்க ஆரம்பிக்கின்றார்கள். அதில் வரும் பிரச்சனை, மன உளைச்சல் தைரியம் அடிதடிக்கு வலிசெய்கின்றது. முடிவில் கொலையாகவும் முடிகின்றது!

கொஞ்சம் யோசியுங்கள். எதற்கும் நான் விடை தேட முயற்சிக்க வில்லை. பிரச்சனைகளை மட்டுமே காரணமாக முன்னிலைப்படுத்த வில்லை. ஆனாலும் இந்த புதிரை அவிழ்க்க வேண்டிய இடத்தில் கல்வியாளர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் உள்ளோம் என்பதை மட்டு ம் மிக ஆழமாக பதிய ஆசைப்படுகின்றேன்.


மதுரை சரவணன். 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய கல்வி முறை தொடர்ந்தால்
இது போன்ற நிகழ்வுகளும் தொடரத்தான் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே
வகுப்பறையில் ஒரு ஆசிரியர் கொலை செய்யப் பட்டார், பெரும்பாலோருக்கு அது ஒரு செய்தியாகத்தான் தெரிந்தது,
இன்று ஒரு மாணவன் கொலை, சில நாட்கள் பரபரப்பு, பின்னர்அனைவரும் இந் நிகழ்வினை மறந்து போய்விடுவார்கள்
ஒரு குற்றம் நடந்த பிறகும் கூட அதிலிருந்து, பாடம் கற்றுக் கொள்ள மறுத்து வருகின்றோம், கல்வித துறை பயணிக்கும் பாதையினை செப்பனிட மறந்து வருகிறோம்
வேதனையாகத்தான் உள்ளது நண்பரே

Post a Comment