Wednesday, December 30, 2015

இரவின் தேவதைகள்...!

இந்த இரவின் சாட்சியாக இருப்பதில் பெருமை கொள்கின்றேன்..!
பரிசுத்த ஆவியின் பெயராலே , இந்த ஆண்டின் இறுதி நாள் இப்படி ஆரம்பிக்கும் என்று எதிர்பாக்கவில்லை.
கடுமையான காய்ச்சல், அசதி, உடம்பு வலி, மனவலிமை குன்றி மிகவும் நெந்து நூலாகி போய் இருந்த எனக்கு திடீரென்று புத்துணர்ச்சி ஏற்பட்டது.
ஓடி சென்று சென்ற ஆண்டின் நினைவுகள் குறித்து பதிவு ஒன்றை எழுதினேன். அதன் பின் நண்பர்களுக்குள் பிரச்சனை வேண்டாம் என்று பதிவு போட்டு, மூடிவைத்து , சாப்பிட்டு அமர்ந்த எனக்குள் ஒரு வேகம் உண்டானது.
புதிய தொடக்கமாக இருக்கட்டு என்று இரவு 9 மணி வாக்கில் வாக் ஒன்று போகலாம் என்று மெல்ல நடந்தேன். துணைவியாரும் வருகின்றேன் என்றார். எப்போதும் வாக் என்றால் போன் பேசும் தொலைவு தான் என்று அறிந்திருந்தார். வா..ஏன் இம்புட்டு சந்தேகம். கொஞ்சம் திணமணி தியேட்டரை சுற்றி வருவோம் என்று கிளம்பினோம்.
மனைவியுடன் வாக்கிங் போவதை அனேகமான கணவர்கள் ஏன் தவிர்க்கின்றார்கள் என்ற ரகசியத்தை முதன் முறையாக கண்டு கொண்டேன்.
அட நீங்க யோசிக்கிறது தப்பு! நாங்க ரெம்ப ஜாலி டைப். ஆனந்த விகடன் வாங்கவில்லை வாங்கி கொள்கின்றேன் என்ற போது வேண்டாம் என்றார். ஓகே நடைக்கு வந்து நிற்க வேண்டாம் என்று தலையாட்டி நடந்தேன். கொஞ்சம் தூரம் சென்றதும் ஒரு பேன்சி ஸ்டோர் ஒன்றை கண்டார். ஹேர் பேண்டு வாங்கி கொள்கின்றேன். இப்படி வரும் போது வாங்கினால் தான் உண்டு என்று புகுந்தார். ஹேர்பாண்ட், பொட்டு, கிளிப், என குறைந்த பட்சம் தொகைக்கு வாங்கி கொண்டார். பர்ஸ் எடுத்துட்டு வரலை.. நீங்களே கொடுத்திடுங்க என்றார். வாங்கியது என்னவோ 100 ரூபாய்க்கும் குறைவாக தான் ! தினமும் இப்படி வாக்கிங்க் போனால் என்னாவது!
ரமணா விஜய காந்த் போல் கணக்கு போட்டது மனசு! காலை மாலை இரண்டு முறை வாக்கிங் வந்தால், ஒரு மாதத்திற்கு ஆறாயிரம் ரூபாய்... ஒருவருடத்திற்கு அப்பா முக்கால் லட்சம். இதுவே, இருநூறு ரூபாய் என்றால் லட்சத்தை தாண்டும் போல் இருக்கின்றதே...!
அட , நிஜங்க.. நான் அநேகமான ஆண்கள், மனைவியுடன் செல்லும் போது காய்கறி, சமையல் சாமான்கள் வாங்கி வருவதை கண்டு இருக்கின்றேன். அடுத்த சில நாட்களில் தனி தனியாக வாக்கிங் செல்வதையும் கண்டிருக்கின்றேன். அதற்கான ரகசியத்தை முதல்நாளிலேயே கற்று கொடுத்த துணைவியார் வாழக பல்லாண்டு!
வாக்கிங் முடித்து இன்னும் சுறுசுறுப்பானேன். மூளை எப்போதும் போல் சுறு சுறுப்படைந்தது. கணினியை எடுத்தேன். இனி லேப்டாப் தொடக்கூடாது டாடி என்று கண்டித்த மகன் சத்யாவுக்கு தலைவணங்கி, புத்தகம் வாசிக்கலாம் என்றால் மனசு கேட்க வில்லை.
ஏதாவது ஒரு படத்துக்கு போகலாம் என்று தூண்டியது. ஓகே நல்ல விசயம். ஆனால், அம்மா அடிபட்டு கிடக்கின்றார். தங்கை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கொஞ்சம் உடல் நலம் தேறிய நிலையில் , புத்தாண்டில் வீட்டிலிருக்க வேண்டும் என்று இன்றே டிச்சார் ஆகி வந்திருந்தார். எப்படி என்ற போது என் மனைவியிடம் சிபாரிசு கோரினேன். சரி.. போங்க என அனைவரின் அனுமதியுடன் சினிமா சென்றேன்.
பாஜ்ஜிராவ் முடிவு செய்து சென்றால், இன்று இரவு காட்சி இரத்து.. பசங்க 2 அல்லது ஸ்டார்வார்ஸ் போங்க என்றார்கள். சரி ஸ்டார் வார்ஸ் தான் இப்போதைக்கு நமக்கு வாய்த்தது என்று முடிவெடுத்து சென்றேன். நாம் எதிர்ப்பார்ப்பது என்றுமே இராது. ஸ்டார்ஸ் என்னைக்கு சண்டை போட்டது! சாரி போட்டார்கள்.! படத்தை விட முக்கியம் ஒன்று இருக்குங்க. அதுக்கு தான் இந்த பதிவை இந்த நேரத்தில் எழுத தூண்டியது.
படம் சரியாக 12. 45 க்கு முடிந்தது. ஓடி சென்று வண்டியை எடுத்து ஸ்டார் செய்து வேகமாக ஓட்டினேன். யாருமற்ற பனி இரவில் சீறிப்பாயும் என் வண்டியின் வேகம் 40 கிமீ தான்..! இருந்தாலும் அது என்னை அச்சுறுத்தியது. வழி நெடுகிலும் நாய்கள் அலைந்து கொண்டிருந்தன. தனது வாய்ப்பை பறிகொடுத்த ஒரு நாய் என் முன்னே சீறிபாய்ந்து சென்ற வாகனத்தை ஏதோ ஒரு பாசையில் திட்டுவது போன்றே எனக்கு தோன்ற செய்தது.
குருவிக்காரன் சாலை ஒயின்சாப் வாசல் முன்பு ஒரு கும்பல் நின்று கைதட்ட என் முன்னால் சென்றவன் பிரேக் அடித்தான். அய்யோ ! மேதி விட்டேன் என்று நினைத்தேன். ஆனால், பிரேக் அடித்து நின்றேன். இன்னும் கூடுதல் வேகத்தில் வந்திருப்பேனால் போய்யே போய் இருப்பேன். இன்னேரம் எல்லாம் முடிந்திருக்கும். இப்படி ஒரு நல்ல காரியம் ஒன்றை பார்த்திருக்க மாட்டேன்.
சாலையை கடந்து மேட்டில் ஏறினேன். நாய்களின் கூட்டம் இந்த பக்கம் அந்த பக்கம் என 30 நாய்கள் . நம்ப மாட்டீர்கள். ஆனாலும் நம்பி தான் ஆக வேண்டும். எதுவும் குரைக்க வில்லை. இவை தங்களின் வெற்றியை கொண்டாடுகின்றனவா..! அல்லது இப்புத்தாண்டில் இருந்து என்னை போன்று வாய் திறக்க கூடாது என்று சபதம் போட்டுள்ளனா என்று தெரியவில்லை.! இப்போது என் வேகம் 30 கிமீ. வேகம் குறைய குறைய நிதானம் அதிகரித்து கொண்டே இருந்தது.
பைக்கை கணேஷ் தியேட்டர் தாண்டி திருப்பினேன். போலீஸ் கண்ட்ரோல் வேன் நின்றிருந்தது. கையில் தண்ணீர் பாட்டிலுடன் கான்ஸ்டபில் ஓடி கொண்டிருந்தார். யாரும் அடிபட்டு கிடக்கின்றார்களா என்று நோக்கினேன். எப்போதும் போல் மேல் அதிகாரிக்கு சேவை செய்து கொண்டிருந்தார். சாரி எப்போதும் போல் கடமையை செய்து கொண்டிருந்தார்.
என் முன்னால் ஆணும் பெண்ணுமாக உடலில் பேர்வையை சுற்றிகொண்டு பைக்கில் தெருவின் இரு மருங்கிலும் எதையோ தேடி கொண்டு நகர்ந்து கொண்டிருந்தார்கள். நான் கடமை யாற்றி கொண்டிருந்தவரை கவனித்ததால் அவர்களை மிஸ் செய்திருந்தேன். இப்போது மைனர் ஜெயில் வாசலில் இரு நாய்கள் மிக கோரமாக சாரி வேகமாக புணர்ந்து கொண்டிருந்தன. இது எதன் குறியீடு என்று யோசித்து நகர்ந்தேன். என்ன இலக்கிய பின் நவீனத்துவம்..! நீ நல்லா வருவடா சரவணா..! என்றவாரே கொஞ்சம் பைக்கை முடுக்கினேன்.
சற்று தொலைவில் சாலையின் எதிர் திசையில் ஒரு பைக்குக்கு அருகில் கும்பலாக நின்றிருந்தார்கள். நானும் பிரேக் அடித்து நின்றேன். ஆக்ஸ்சிடண்டா என்று கேட்டேன். எனக்கு முன்னால் நின்றவர் எனக்கும் தெரியலை..நானும் உங்களை போன்று தான் என்றார். சரியாக சி.எஸ்.ஐ. துவக்கப்பள்ளியின் எதிர்புற திண்ணையில் ஒருவர் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரின் அருகில் நின்ற ஒருவர் அவர் அருகில் அவரின் மூக்கிற்கு அருகில் சென்று எதையோ நுகர்ந்து கொண்டிருந்தார்.
நான் பதறி போய் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்கப்பா என்றேன். ஆனால் என் குரல் எவர் காதிலும் விழவில்லை. டேய் தண்ணி அடிக்கலை .. உண்மையிலே தெருவில் தூங்கிறவர் தான் என்றார். அடுத்த நொடியில் அவருடன் இருந்த அந்த பெண் (இளம் வயது ) படுத்து உறங்கியவரின் மீது போர்வையை போர்த்தி விட்டார். அதனை உடன் இருந்த இரு இளைஞர்கள் சரியாக போர்த்த உதவினார்கள். அப்போது அவர் எழுந்திருந்து, (முழுவதும் எழுந்திருக்காமல் , படுத்த நிலையில் அண்ணாந்து பார்த்து, ஆனந்தமாக) அந்த போர்வையை வாங்கி மகிழ்ச்சியில் போர்த்தி கொண்டார். இப்போது அவர்களை என் நிஜக் கண் கொண்டு கவனித்தேன். அங்கு மனித நேயம் பூத்திருந்தது. இரவில் ஒரு ஒளி விளக்கு சுடர் விட்டு பிரகாசித்தது. அந்த நிலவுக்கும் சூரியனுக்கும் போட்டியாக..!
ஐந்து பைக்குள்( மூன்று ஸ்பிள்ண்டர் வகை பைக், இரண்டு ஆக்டிவா ) ஒவ்வொருவர் கையிலும் போர்வை, பைக்கின் முன்னால் பைகளில் குறைந்தது 100 போர்வைகள் இருக்கும். இப்போது நன்கு உற்று கவனிக்கின்றேன். பின்னால் உட்கார்ந்திருந்த அனைத்து பெண்கள் தலையிலும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் குல்லா.
யார் கொடுத்தார்கள் என்பது பெற்றவரும் அறிய வாய்ப்பில்லை. எவருக்கு கொடுத்தோம் என்பதையும் கொடுத்தவர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவர்கள் பாத்திரம் அறிந்தே பிச்சை இட்டனர் என்பதை புரிந்து கொண்டேன்.
அவன் போதையில் மதி மயங்கி படுத்து கிடக்கின்றானா என்பதை செக் செய்த பின்பே தந்தனர். அதற்கு தான் அவன் அருகில் சென்றது என்று உணர முடிந்தது. ஏனெனில் அவனை சுற்றி பிளாஸ்டிக் டம்பளர்கள். அவர்கள் அறிந்திருக்க வாய்பில்லை. அருகில் டீக்கடை இருக்கின்றது என்பதை!
ஒன்று மட்டும் நிச்சயம். இந்த குளிர் வீட்டிற்குள் பாதுகாப்பாக உறங்கும் பலரின் உடலை பதம் பார்த்து காய்ச்சலை உருவாக்கி , சாவை கூட வரவழைத்துவிடும். தெருவில் எந்த வித போர்வையும் இன்றி , குளிரால் இறப்பவர் எத்தனை பேர்..!மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு குளிர் அதிகம் தான்..!
இவர்களுக்காக யோசித்து இவர்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்த இந்த ஆண்களும் பெண்களும் எப்போதும் கலாச்சார இழுக்கானவர்கள் அல்ல.! ஆணும் பெண்ணும் இணைந்தால் தவறு என்ற எண்ணங்களை சுக்கு நூறாக்கி தூர எறியுங்கள். நாளைய எதிர்காலம் சிறப்பானதாக அமைவதற்கு இந்த இரவு சாட்சியாக எனக்கிருக்கின்றது.
நம்மை சுற்றி பல நி்கழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் பல நன்மை தருவதாகவும் உள்ளன. சில தீமை தருவதாக உள்ளன. ஆனாலும் , நம்மை கவர்வன தீமை தருவனவாகவே இருக்கின்றன. நாம் பல நல்ல விசயங்களை ஏதோ ஒரு சாதரண நிகழ்வுப்போல் கடந்து சென்று விடுகின்றோம். தீமை தருவன வற்றை பற்றி கொண்டு அதில் ஏதாவது நன்மை கிடைத்துவிடாதா என தொங்கி கொண்டிருக்கின்றோம். விசாலப்பார்வையால் இனி விழுங்குவோம்!
இந்த வருடத்தின் கடைசி நாளின் தொடக்கம் , நல்ல நிகழ்வை அடையாளப்படுத்தி அடுத்த வருடத்தின் சிறப்பை பறைசாற்றிவிட்டது. நண்பர்களே! இனி நாம் நல்லவற்றை மட்டும் காண்போம். நல்லவற்றை மட்டும் பேசுவோம். எல்லாம் நல்லவையாக மாறிட பாடுபடுவோம்.
தீமைகள் நோக்கோம். தீமைக்கு துணை போகாமால், சாரி தீமையை கண்டு உற்றால் தானே துணை போக..!
ஊர் பேர் தெரியாத, ஒரு கிறிஸ்துமஸ் தாத்தாவின் குல்லா எனக்கான அடையாளத்தை காட்டியது போல், உங்களுக்கான ஆன்மாவை திறக்க ஏதாவது ஒரு தாத்தாவோ, பாட்டியோ வருவார்கள்! நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன். எனக்கான பயணம் இனி பாசிடிவ்வான விசயங்களை நோக்கியதாக அமையும். எல்லாம் நன்மைக்கே.!
மதுரை சரவணன்.

4 comments:

நெல்லைத் தமிழன் said...

உதவி செய்த அந்த உள்ளங்கள் வாழ்க. இது தன்னலமில்லா, விளம்பரம் இல்லா உதவி. அவர்கள் மனம் மிக்க சாந்தி அடைந்திருக்கும்.

Yarlpavanan said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் said...


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post a Comment