Friday, June 5, 2015

மன்னித்துவிடு மரணமே! (சிறுகதை)


இறப்பை பற்றிய நினைப்பு எரிச்சல் தருகின்றது. இறப்பது எல்லோருக்கும் நிகழும் ஒரு நிகழ்வு தான் என சாதாரணமாக கடக்க முடியவில்லை. இப்போதெல்லாம் கோபம் நிறைய வருகின்றது. அதுவும் அன்புக்குரியவர்களிடம், எரிச்சல் படும் போது, இதற்கு விரைவில் இறந்துவிடலாம் எனவும் எண்ணத் தோன்றுகின்றது.
ஆதங்கத்தின் முழுவடிவம் அன்புக்குரியவர்களிடத்தில் அதிரும் குரலாக ஒலிக்கும் போது, அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து போவது எதார்த்தமே! அப்படி எளிதாக பிரிந்து போக விட முடியவில்லை. எப்படியாவது மீண்டும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து கொள்கின்றேன். இருந்தாலும் நான் அவளிடம் அப்படி பேசியிருக்க கூடாது.
மரணம் என்பதை விட மரணபயம் மிகவும் கொடிதாக இருக்கின்றது. இது தான் வியாதி என்று தெரிந்த பின் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நேரம் குறித்த பின் அதைவிடவும் கொடுமையாக இருக்கின்றது. இனி நாம் இப்புவியில் வருவோமா? தெரியவில்லை.
அப்படி பிறந்தாளும் அவள் என் தாயாக வருவாளா? இல்லை எனக்கு நட்பாக இருப்பாளா? அவளை ஒருபோதும் தோழியாக நினைக்கவில்லையே? ஒரு தாயாக தானே நினைத்தேன். இன்று மட்டும் எனக்கு ஏன் இவ்வளவு கோபம் கொப்பளித்து வருகின்றது? அப்படி மூஞ்சியை ஏறிட்டு பார்க்காத அளவுக்கு திட்டி விரட்டி இருக்க கூடாது? உனக்கு யார் மீது கோபம்? அவள் மீதா? இல்லை
மரணத்தின் மீதா? உனக்காக அழ இனி யார் இருக்கிறார்?
இந்நினைவுகளுடன் அய்யோ என கதறி அழுகின்றான் சுதாகரன். என்னை மன்னித்துவிடு. கவிதா.. வர வர எனக்கே என்னை பிடிக்காமல் போகும் போது ,எப்படி நான் உன்னிடம் முகம் கொடுத்து பேசுவது?
என் இயலாமையை உன்னிடம் எப்படி தெரிவிப்பது? தவிக்கின்றேன். என்னிடம் ஏதோ ஒரு மாற்றத்தை நீ காண்கின்றாய். சத்தியமாய் உன்னை விட்டு பிரிய மனமில்லை. ஆனால் பிரிந்து தானே ஆக வேண்டும். சண்டை இட்டு விலகுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை , என தலையில் அடித்து அழுத சுதாகரன், கொஞ்சம் நேரத்தில் சுயநினைவு இன்றி கீழே விழுந்து கிடந்தான். சுற்றி ஈக்கள் மொய்க்க தொடங்கி இருந்தன.
மரணம் அடைந்துவிட்டானா? இல்லையா? புதிராக தான் இருக்கின்றது. நானும் உங்களைப்போன்று தான் ,அவனிடத்தில் ஏதாவது ஒரு அசைவு தெரிகின்றதா? என்றபடி காத்திருக்கின்றேன். கவிதா அவனை பார்க்க வருவாளா? இதை நீங்கள் கவிதாவிடம் தான் கேட்க வேண்டும்.

நீங்கள் கவிதாவை தேடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்,
கவிதா இவனை நினைத்து தானே கழுத்தில் கட்டிகொண்ட தாலியை கழுத்தில் இருந்து கழட்டி எரித்து கொண்டிருந்தாள்!
மதுரை சரவணன்.

No comments:

Post a Comment