Friday, October 24, 2014

பெட்டிக்கடை

எப்பொழுதும் பெட்டிக்கடைகள் வார இதழ்கள் படிப்பதற்கான இடமாக மட்டுமல்லாமல், பல நண்பர்களை தரும் இடமாகவும் உள்ளது. நம்மை உயர்த்துவதற்கான இடமாகவும், பல தொடர்புகளை ஏற்படுத்தி தரும் தளமாகவும் இருப்பதை உணர்கின்றேன்.

பெருமழையில் ஒதுங்கிய போது தான் எனக்கும் பெட்டிக்கடைக்குமான நட்பு மலர ஆரம்பித்தது. மதுரை, திணமனி தியேட்டர் சந்திப்பு பகுதியில் பல கடைகள் உள்ளன. இட்லிக்கடை, புரோட்டாக்கடை, பொங்கல் கடை, பூக்கடை, இவற்றுடன் பல பெட்டிக்கடைகளும் உள்ளன. ரவி பெட்டிக்கடை என்றால் தனிக்கூட்டம் உண்டு.கல்லூரி நாளில் புத்தகங்களின் மீது கொண்ட காதலில் தொடங்கியது தான் பெட்டிக்கடை சிநேகம். முத்தாரம் ,ராணி, ஆனந்தவிகடன், குமுதம், துக்ளக், ஜீனியர்விகடன் என பல இதழ்களை அறிமுகப்படுத்திய இடம் தான் பெட்டிக்கடை.

நூலகங்கள் செல்வதற்கு வெகுதொலைவு பயணிக்க வேண்டும். அதே வேளையில் நூலகத்தில் எந்த நேரத்திலும் சென்று படிக்க முடியாது. காலவரையறை உண்டு. ஆனால் , பெட்டிக்கடை அப்படி அல்ல. பெட்டிக்கடை வைத்துள்ள நண்பர்களுடன் கொஞ்சம் பேசினால் போதும், கடை நமக்கானதாகி விடும். எந்நேரமானாலும் நமக்கு வேண்டிய புத்தகங்களை படிக்கலாம். ஆனால் , அவர்கள் எல்லோரிடமும் அவ்வளவு எளிதாக பழகி விடுவதில்லை. அதேவேளையில் அவர்கள் நண்பர்களாகிவிட்டால்,நம்மை எளிதில் வீட்டிற்கு செல்ல அனுமதிப்பதில்லை. ரவியுடனான உறவு சிறிய டீயில் தான் ஆரம்பித்தது. ஆனால் இன்று ஆலமரமாக விரிந்து பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

திருமணமாகி வீடு மாறிய பின்பு பெட்டிக்கடைகள் நட்பு விரிந்துள்ளது. பெட்டிக்கடைகள் என்னை மட்டும் நட்பாக்கி கொள்ள வில்லை. தன்னோடு நட்பாகி உள்ள அனைவரையும் நமக்கு தந்துவிடுகின்றன. சிறிது நேரம் நாம் செய்திதாளை விரித்து படித்துக்கொண்டிருக்கையில் , அங்கு சிக்ரெட், பாக்கு, கூல்டிரிங்க்ஸ் மற்றும் பத்திரிக்கைகள் வாங்கும் டாக்டர், இன்ஞிநியர்கள், வக்கில்கள்,ஆசிரியர்கள்,அரசியல் வாதிகள் மற்றும் பலத்தரப்பட்ட தொழில் புரிவோரை நமக்கு நட்பாக தந்துவிடுகின்றது. சிறிய புன்னகையுடன் ஆரம்பிக்கு இந்த அறிமுகம் நாளடைவில் பெரிய நட்பாக மாறவும் வாய் ப்பு உள்ளது. வியபாரிகள் பொருத்தவரையில் இந்நட்பு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

மாவட்ட நீதிமன்றம் எதிரில், திணமனி தியோட்டர் அருகில், சௌராஷ்டிரா பள்ளி அருகில் , அம்மா மெஸ் எதிரில், அய்யர் பங்களா கார்னர், புதூர் பிடிஆர் அருகில், எஸ்.இ.வி பள்ளி எதிர்புறம், அவுட் போஸ்ட், ஆத்திக்குளம் கார்னர்  என பெட்டிகடையின் நட்பு விரிந்து கொண்டே செல்கின்றன.

எங்காவது நாம் நின்று பேசும்போது, எவராவது நம்மை பார்த்து புன்னகையை மலர விட்டால், நாம் புன்னகையை பதிலுக்கு அளிப்பதுடன் ,சிறிய யோசனையுடன் யார் என யோசிக்கும் நேரத்தில் அவர் மறைந்துவிடுவார். பின் நாம் யோசித்து யோசித்து கொண்டு வர முயற்சி செய்து பல சமயங்களில் தோல்வியில் , தெரிந்த யாரோ ஒருவர் என முடிவுக்கு வந்துவிடுவோம். அதே நாளில் எதாவது ஒருபெட்டிக்கடையில் நாம் மீண்டும் பார்க்கையில் நினைவுக்கு வந்து அவர் பெயரை கேட்டு, நலம் விசாரிக்கும் போது நட்பு இன்னும் பலம் பெற்றுவிடுகின்றது.

அப்படிதான் இன்று மாலை ஆத்திக்குளம் பகுதியில் நண்பனுக்காக காத்திருந்து ஏமாந்த வேளையில் ஆனந்தவிகடன் வாங்க சென்றேன். தீபாவளியை ஒட்டி பெட்டிக்கடையும் மூடிவிட்ட நிலையில், டீ குடிக்க நினைத்து டீ சாப்பிட நினைக்கையில், தெரிந்த முகம் , நினைவுக்கு வர சிரமப்படுத்தியது. அவரும் என்னை பார்த்தது மாதிரி தெரிகின்றது என புன்னகை மலர செய்தார்.

அவரை நினைவுக்கு கொண்டு வந்து நானே அருகில் சென்று, நீங்கள் சூர்யா புத்தக நிலையத்தில் காமிக்ஸ் புத்தகம் வாங்குவீர்களே என்று கூறி, என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். சிரித்தப்படியே, நான் ராஜ் என்றார்.

அவரை முதன் முதலில் சூர்யா புத்தக நிலையத்தில் (அவுட் போஸ்ட் )  பார்த்தப்போது கைநிறைய காமிக்ஸ் புத்தகத்தை வைத்திருந்தார். அந்த தருணம் என் நண்பன் கார்த்திகைப்பாண்டியன் (கா.பா) என் நினைவில் மின்னல் போன்று மின்னிச் சென்றார். ஆம் காமிக்ஸ் கா. பாவுக்கு  மிகவும் பிடித்த ஒன்று. முத்து காமிக்ஸ் புத்தகம் மீண்டும் கொண்டு வருகிறார்கள் என்றவுடன் பைக்கில் சிவகாசிக்கு நேரில் சென்று புத்தகம் வாங்கி வந்தவர். ஒரே நாளில் வாசித்து முடித்ததாக அப்போது கூறினார். காமிக்ஸ் குறித்து கா.பா பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு ப்ரியம்.

நானும் என் வாசிப்பை காமிக்ஸ் மூலமே ஆரம்பித்தேன்.என் நண்பன் ப்ரேம்நாத் உடன் சேர்ந்து வரைந்து நாங்களே தாளில் கதையை உருவாக்கி உள்ளோம். அதனை நண்பர்களுக்கு தனி பிரதியாக கொடுத்து மகிழ்ந்துள்ளேன். அப்போது நான் 10வது  படித்து கொண்டிருந்தேன். ப்ரேம் படிப்பை நிறுத்தி விட்டு பட்டுநூல் தொழிலுக்கு பேய் இருந்தான். ஆனாலும் தீவிர காமிக்ஸ் வாசகன். அவனே எனக்கு எழுதுவதற்கு உந்துதலை தந்தவன். அதன் தொடர்ச்சியாக அப்போது குமுதம், ஆனந்தவிகடனுக்கு கதைகளை அனுப்புவேன். ஒருவருடம் எந்த கதையும் வெளிவரவில்லை என்றவுடன் நாங்களே கையெழுத்து பிரதி ஆரம்பித்தோம். அவன் தன்னுடன் வேலைபார்க்கும் பெண்களிடம் எங்களின் படைப்புகளை கொடுத்து படிக்க சொல்வான். என்னை பாராட்டுவான். ராஜேஸ்குமார் நாவல்களை படிப்பான். சுபா நாவல்களை படிப்பான். சுபா இருவர். அவர்கள் எழுதுவது போல் நாம் சேர்ந்து கதை எழுதினால் என்ன? என்பான். இன்று ப்ரேம் குடும்ப சூழலில் மதுரையில் இல்லை. அப்படி தான் நினைக்கின்றேன். வாழ்க்கை நாம் நினைப்பது போல் நம் கதைகளை வடிப்பதில்லை. அவை அதன் போக்கில் நம்மை வளைத்து கொள்கின்றது. நாமும் நீரோட்டத்தின் போக்கில் செல்வது போல், இழுத்து சொல்லப்படுகின்றோம்.

ராஜ் அவர்களிடம் காமிக்ஸ் ஆர்வம் குறித்து கேட்டேன். சிறுவயது முதல் படித்து வருவதாக சொன்னார். காமிக்ஸ் படங்கள் , அதில் உள்ள வசனங்கள் நமது கற்பனையை தூண்டுபவை. தான் சிறுவயதில் படித்த கதையையும் புத்தகத்தின் பெயரையும் சொல்லி அசத்தினார். போர் குறித்தும், அதில் வீரர்கள் இழப்பு, உணவு பற்றாக்குறை, என காமிக்ஸ் விவரித்தது தனக்கு புது அனுபவத்தை இளமையில் தந்தது என்கின்றார். சமீபத்தில் காமிக்ஸ் கொஞ்சம் பரவாயில்லை. அதற்கு முன் சிறுவர் மலர்களில் காமிக்ஸ் அர்த்தமற்று வந்தது என்றார். காமிக்ஸ்க்கு ஓவியம் மிக முக்கியம். அந்த ஓவியம் பல கற்பனைகளை உருவாக்க வேண்டும் என்றார். ஒரு ப்ரேமுக்கும் மற்றோரு ப்ரேமுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்றார். அதில் அச்சிடப்படும் மொழி முக்கியம் என்றார். அது தான் நம் மொழித்திறனை வளர்க்கும் என்றார். ஆனால் சில வருடங்களுக்கு முன் டிவி க்களை முன் நிறுத்தி தங்கிலீஸில் வெளிவந்தன சிறுவர் மலர் இதழ்கள். அவை நம்மிடம் இருந்த தமிழையும் கொலை செய்தன என்றார். சிறுவர்களை வாசிப்பு அனுபவத்தை விளையச்செய்பவை காமிக்ஸ் என்றார்.

நல்ல சந்திப்பு. என் நண்பன் கா.பா வை நினைவு கூற செய்த நிகழ்வு. அவர் யோக டீச்சர் என்றவுடன் இன்னும் நெருங்கி விட்டோம். இப்படி தான் பெட்டிக்கடைகள் நமக்கு ந்ல்ல உறவுகளை தருகின்றன.

பெட்டிக்கடைகள் புகை பிடிக்கும் அல்லது பீடி சிக்ரெட் விற்கும் இடம் மட்டும் அல்ல . அது தொடர்புகளை உருவாக்கும். தொடர்புகள் தொடரும்.

மதுரை சரவணன். 

2 comments:

Yarlpavanan said...


சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மதுரை வலைப்பதிவர் விழாவில்
தங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. வலையுலக நட்பைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.

Post a Comment