Wednesday, October 1, 2014

மதுரையும் காந்தியும் - சிறப்புக்கட்டுரை


காந்தியடிகள் மதுரைக்கு ஐந்துமுறை வருகைப்புரிந்துள்ளார். 

முதல்முறையாக 1919 மார்ச் மாதம் 26ம் தேதி ரௌலட் சத்தியாகிரகத்திற்கு ஆதரவாக மதுரைக்கு வந்தார். ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் தங்கினார். பின் மதுரை கல்லூரித்திடலில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாடினார். அவரது உரையை T.S.S.ராஜன் தமிழில் மொழிப்பெயர்த்தார். அந்தக்கூட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைப்பெற்ற சத்யாகிரகப் போராட்டத்தில் பங்குபெற்ற நாகப்பன் குறித்தும், தெனாப்பிரிக்காவில் நடைப்பெற்ற சத்யாகிரகத்தில் ஈடுப்பட்டதற்கு சிறைத்தண்டனை பெற்று தனது 16வது வயதில் உயிர் நீத்த தமிழ்பெண் நாகலெட்சுமி அம்மாள் அவர்களின் தியாகம் குறித்தும் காந்தியடிகள் பேசினார்.

இரண்டாவது முறையாக ஒத்துழையாமை நடைப்பெற்று கொண்டிருந்த போது வருகைப்புரிந்தார். 1921 செப்டம்பர் 21ம் தேதி மதுரைக்கு வந்து டேர் நம்பர் 251 –ஏ, ராம்ஜி கல்யாண் ஜி என்பவரது இல்லத்தில் தங்கினார். மறுநாள் (செப்டம்பர் 23) காலை காந்தியடிகளின் உடையில் பெரும்மாற்றம் ஏற்பட்டது. சட்டை மற்றும் தலையில் சுற்றிக்கொள்ளும் ஆடை ஆகியவற்றை நீக்கிவிட்டு இடுப்பளவு மட்டும் உடை அணிந்து வந்தார். ஏழை மக்கள் மிகுதியாக உள்ள இந்தியாவில், அனைவரும் அணிவதற்கு போதிய ஆடை இல்லாததால், தான் இடுப்பளவு மட்டும் ஆடை அணியப்போவதாக கூறினார். இடுப்பளவு ஆடை மட்டும் அணிந்து சௌராஷ்டிரா மக்களது கூட்டத்தில் உரையாற்றினார். அவர் உரையாற்றிய இடம் இந்நாளில் அலங்கார் திரையரங்கு அருகில் காந்தி சிலையுடன் காந்தி திடல் என்று அழைக்கப்படுகிறது.

மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசிய காந்தி, “கதராடை அணிந்து சுதேசி இயக்கத்தை வலுப்படுத்தினால்தான் சுயராஜ்ஜியம் பெற முடியும்” என்று மக்களிடம் பேசினார்.

கதரியக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மகாத்மா காந்தி 1927ம் ஆண்டு நாட்டின் பலப்பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். 1927 செப்டம்பர் 28ம் நாள் மதுரைக்கு மூன்றாவது முறையாக வருகைபுரிந்தார்.  T.C.செல்வம் அய்யங்கார் தனது கையால் நூற்ற அழகிய மூன்று நெசவு கதர்துணிகளை காந்திக்கு வழங்கி வரவேற்றார். அன்று பேசிய பொதுக்கூட்டத்தில் மதுரை பள்ளிகளில் மாணவர்களின் நூல் நூற்றல் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்று கூறி மதுரை நகராட்சியை பாராட்டினார். அன்று இரவு ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் தங்கினார்.

மாரியம்மன் தெப்பக்குளத்தின் கீழ்புறம் அமைந்துள்ள சௌராஷ்டிரா கிளப்பில் 1927 செப்டம்பர் 29ல் காந்தியடிகள் உரையாற்றினார். சௌராஷ்டிரா சமூகத்தினர் கதர் நிதியாக ரூ 3669/- நன்கொடையை காந்தியிடம் வழங்கினர். கூட்டத்தில் கலந்து கொண்ட சௌராஷ்டிரா மகளிர் பலர் தங்களது தங்க அணிகலன்களையும் காந்தியிடம் அன்பளிப்பாக வழங்கினர்.

1927 செப்டம்பர் 30ல் மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மகாத்மா காந்தி உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு மதுரை மகளீர்கள் ஏரளமாக கூடினர்.  மதுரை மக்கள் கதர் நிதிக்கென வழங்கிய நன்கொடை ரூ13,472/- மகாத்மா காந்தியிடம் வழங்கப்பட்டது. இப்பெரும் நிதியை திரட்டுவதில் முக்கிய பங்காற்றியவர் திரு A. வேதராம ஐயர் ஆவார். மதுரையில் மகளிரின் கதர் நிதையைப் பெருமளவு பெற ஜார்ஜ் ஜோசப்பின் துணைவியார் திருமதி சூசன் ஜோசப் முயற்சி செய்தார். மதுரை மகளிரால் கதர் நிதிக்கு வழங்கப்பட்ட தொகை சென்னை நகரையும் ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றது குறிப்பிடதக்கது.

 மகாத்மா காந்தி நான்காவது முறையாக 1934 ஜனவரியில் வருகைப்புரிந்தார். ஜனவரி  25, 26 என இரண்டு நாட்கள் மதுரையில் தங்கியிருந்தார். இம்முறை என்.எம்.ஆர் சுப்புராமன் இல்லத்தில் தங்கினார்.

        1934 ஜனவரி 26 மதுரை சேதுபதி பள்ளியில் நடைப்பெற்ற கூட்டத்தில், அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, சேதுபதிஉயர்நிலைப்பள்ளி, மதுரைக்கல்லூரி உயர்நிலைப்பள்ளி மதுரை கல்லூரியில்படித்த மாணவர்கள் , அரிசன நிதியை திரட்டி காந்தியிடம் வழங்கினர். அரிசன மாணவர்களைத் தங்களது சகோதரர் போல் நடத்த வேண்டும் என்றும் சேரிகளில் வாழும் அரிசன குழந்தைகளின் ஆடைகள் சுத்தமாக இருக்க உதவி செய்யுமாறும் இக்கூட்டத்தில் காந்தியடிகள் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.              

    அதேநாளில், மேலமாசி வீதியில் அமைந்துள்ள சந்திரா திரையரங்கில் நடைபெற்ற மகளீர் கூட்டத்தில் நாட்டுப்பற்று மிக்க பெண்கள் பலர், தங்களது தங்க அணிகலன்களை அரிசன நிதிக்காக மகாத்மா காந்தியிடமும் அவருடன் வருகைபுரிந்த ஆங்கிலேய பெண்மணியான மீரா பென் அம்மையாரிடமும் வழங்கினர். அன்று மதுரை சேரிகளை பார்வையிட்டார். அதன் பின் முனிச்சாலை பகுதியிலுள்ள மணல்மேட்டில் பேசினார். தீண்டாமை நமது நாட்டிலிருந்து முற்றிலும் நீக்க வேண்டும் என்று கூறினார். தான் பொதுமக்களிடம் பெற்ற அரிசன நிதியிலிருந்து ஒரு தொகையை மதுரை அரிசன மக்கள் நலனுக்காக வழங்கினார்.

 1934 சனவரி 26ல் விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ,“தீண்டாமை ஒரு பாவச்செயல் , அதை நமது சமூகத்திலிருந்து அகற்ற வேண்டும்” என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டார். அக்கூட்டத்தில் அரிசன மக்கள் நலனில் மிகுந்த ஆர்வமுடைய ச். தாயம்மாள் மகாத்மா காந்தியிடம் விலையுயர்ந்த பரிசுபொருட்களை அரிசனநல நிதிக்காக வழங்கினார்.

ஐந்தாவது முறையாக காந்தியடிகள் 1946 பிப்ரவரி 2ம் தேதி மதுரை 
வந்தார். அன்று மாலை பந்தயத்திடலில் நடைப்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அன்று இரவு பனகல் மன்னர் கட்டிடத்தில் (இன்றைய அரசினர் மீனாட்சி மகளீர் கல்லூரி ) தங்கினார். மறுநாள் பிப்ரவரி 3ம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். “எனது மனதிலிருந்து நீண்டநாள் ஆவல் இன்று நிறைவேறியது குறித்து நான் மிக்க மகிழ்வடைகிறேன்” என்று மீனாட்சி அம்மன் கோவிலின் பார்வையாளர் ஏட்டில் மகாத்மா காந்தி குறிப்பிட்டார். V.I. முனிசாமி பிள்ளை, கே.காமராஜ், தக்கர் பாபா மற்றும் பலர் மகாத்மா காந்தியுடன் கோவிலி வழிபட சென்றனர். 1939 சூலை  8 முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அரிசன மக்களின் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்ட சிறப்பு மிக்க நிகழ்வுக்கு மதுரை மக்களைப் பாராட்டவே ஐந்தாவது முறையாக மதுரைக்கு மகாத்மா காந்தியடிகள் வருகைப்புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

க.சரவணன். தலைமையாசிரியர்
மதுரை 9.
செல் 9344124572

(இக்கட்டுரை அக்டோபர் மாத மாணவர் உலகம் இதழில் வெளிவந்துள்ளது. )   

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சிறப்பான தகவலுடன் காலம் உணர்ந்து கட்டுரை பதிவிட்டமைக்கு நன்றிகள் மாணவர் உலகம் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

துளசி கோபால் said...

அறியாத தகவல்களுடன் கட்டுரை அருமை!

இனிய பாராட்டுகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
மகாத்மா போற்றுவோம்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

Unknown said...

இன்றைய காந்தி ஜெயந்தி நாளை நினைவூட்டும் நல்ல பதிவு !
த ம 3

'பரிவை' சே.குமார் said...

மகாத்மாவின் மதுரைப் பயணம் குறித்த சிறப்பான பகிர்வு சரவணன்.

Post a Comment