Monday, September 22, 2014

புத்தக விமர்சனம்.

’என் முதல் ஆசிரியர்’ – சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய ரஷ்ய மொழி குறுநாவல். இதை தமிழில் பூ. சோமசுந்தரம் என்பவர் மொழி பெயர்த்துள்ளார். புரட்சிக்கு பிந்தைய சோவியத் சமுதக்த்தில் குர்க்குரீ என்ற கிராமத்திற்கு வரும் துய்ஷேன், கல்வியறிவு இல்லா கிராமத்தில் தனிமனிதனாக பள்ளிக்கூடம் தொடங்கப் போராடுகிறார். அம்மக்களின் கேலிகளையும் புறக்கணிப்புகளையும் தாங்கிக் கொண்டு, அக்கிராமத்தின் நிலப்பிரபுக்கள் காலி செய்து விட்டுப்போன குதிரைக் கொட்டடியில் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கின்றார்.
    எந்த படிப்பறிவு வாசனையும் இல்லாத அக்கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை வேண்டா வெறுப்பாகவே அனுப்பி வைக்கின்றனர். துய்ஷேன் பள்ளியை ஆரம்பிப்பதற்காக வீடுவீடாக சென்று குழந்தைகளை தூக்கி வருகின்றார். அப்படி அப்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டவர் தான் இக்குறுநாவலின் நாயகி அல்டினாய்.


    தாய்-தந்தை இருவரையும் இழந்து அநாதையாகிவிட்ட இளம் சிறுமி அல்டினாய், அவளது சித்தியால் கொடுமைப்படுத்தப்படுகிறாள். அல்டினாய் பள்ளிக்கு செல்வதை அவள் விரும்பவில்லை. அவளுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்கின்றார். சித்தியை மீறி அல்டினாய் படிப்பை தொடர துய்ஷேன் என்ன உதவி செய்தார் என்பதை மிகவும் பரபரப்போடு ஆழ்ந்த துக்கத்துடன் கதை விவரிக்கிறது.
அல்டினாயின் முதல் ஆசிரியர் துய்ஷேன், முறையான ஆசிரியர் பயிற்சி பெற்றவர் அல்ல. அவருக்கு இலக்கணம் தெரியாது. பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையும் தெரியாது. ஆனால் அவரால் ஆரம்ப எழுத்தறிவைக் கற்றுத்தர முடிந்தது.  
   அவரால் அல்டினாய் போல் பல பிள்ளைகளுக்கு  ஒரு புத்தகமும் இல்லாமல், சாதரண பாலப்பாடகப் புத்தகம் கூட இல்லாமல், குழந்தைகளுக்கு கற்றுத்தர முடிந்தது. அந்த குழந்தைகளால் அவரின் மண் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு புதிய ஆச்சரியமான உலகத்தை பார்க்க முடிந்தது.
காலத்திற்கும் மாறாத வசனங்கள் இந்த குறுநாவலில் இடம் பெற்றுள்ளன.
“துய்ஷேன் டீச்சரா கட்டைச் சுமந்து செல்கிறார்?”
“அவனே தான்”
“பாவம் , ஆசிரியர் வேலைகூட சுலபமானது இல்லை போலிருக்கிறது “
“நீ என்ன நினைத்தாய்? பார், கொத்தடிமைக்கு எந்த விதத்திலும் குறையாமல் எவ்வளவு சுமக்கிறான்”
மாணவர்கள் ஆசிரியர் உறவை மிகவும் அருமையாக இக்குறுநாவல் எடுத்துரைக்கிறது. ஆசிரியர் மூன்று நாட்கள் விடுப்பு எடுக்கிறார். அவர் வரும் நாளுக்காகக மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.இன்றும் நல்லாசிரியர்களுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அல்டினாய் அவளுடைய ஆசிரியருக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் அவஸ்தையை இவ்வரிகள் நமக்கு எடுத்துரைக்கும்.
“எங்கே ஆசிரியரே, எங்கே உங்களைக் காணோம்? உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தாமதப்படுத்தாதீர்கள், விரைவில் திரும்பி வாருங்கள். நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றோம். புரிகின்றதா? ஆனால் ஓர் ஆள் கூட தென்படவில்லை”    
குர்க்குரீ கிராமத்துப்பண்ணை விவசாயிகள் சேர்ந்து கட்டிய புதிய பள்ளிக் கட்டிடத்தின் திறப்பு விழாவிற்காக அந்தக் கிராமத்தின் முதல் ஆசிரியரும், முதல் கம்யூனிஸ்டுமான துய்ஷன் அழைக்கப்பட்டு பெருமையும் , கவுரவத்தையும் அடைந்திருக்குமாறு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாசுமருவற்ற பொன் போன்ற அந்த அம்மனிதர் வாழ்த்துத் தந்திகளை விழாவிலிருந்தவர்களிடம் சேர்ப்பதற்காகச் சிரமப்பட்டு சவாரி செய்கிறார். மற்ற தந்திகளைக் கொடுப்பதற்காகவும் அவர் போய் கொண்டிருக்கிறார். இதுமாதிரியான சம்பவங்களை நாம் தினமும் எதிர்கொள்ளவே செய்கிறோம். ஆகையினால்தான் குறநாவலின் நாயகி அல்டினாய் எழுப்புகிற இந்த கேள்வியை நமது இதயமும் வேதனைப் பெருமூச்சினிடையே எதிரொலிக்கிறது என இக்குறுநாவலுக்கு முன்னுரை எழுதிய கமலாலயன் கூறுகிறார்.

கிராமத்து பள்ளிக் கட்டிடத்திறப்புவிழாவில் கலந்து கொள்ளும் கல்வித்துறை அறிஞர் அல்டினாய் , விழாவிலிருந்து உடனடியாக இரயில் ஏறி சென்றுவிடுகின்றார். அதன்பின் அவ்விழாவில் கலந்து கொண்ட இலக்கிய படைப்பாளியும் ஓவியருமான இளைஞருக்கு எழுதும் கடிதத்தினால்  வாரலாறாக வளர்ந்து நிறைவு பெறுகிறது இந்நாவல்.

ஆசிரியர்கள் இச்சமுகமாற்றத்திற்கு எவ்வளவு பாடுபடுகின்றனர் என்பதையும், அவர்களுக்கு உரிய மதிப்பு எப்போதும் அளிக்கப்படுவதில்லை என்பதையும் ’முதல் ஆசிரியர்‘ மிக அழகாக எடுத்துரைக்கிறது. இந்நாவல் காலத்தால் முற்பட்டாலும் இளம் வயது திருமணம் என்பது இன்றும் தொடர்கதையாக வருகின்றது என்ற வகையில் அனைவரும் படிக்க வேண்டிய நாவல் ஆகும்.
வெளியீடு : புக் பார் சில்ட்ரன்
விற்பனை உரிமை: பாரதிபுத்தகாலயம்
விலை. 40/-

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே

மகேந்திரன் said...

அருமையானதொரு புத்தக அறிமுகம்...
நன்றிகள் பல நண்பரே...

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு புத்தக அறிமுகம்...
வாழ்த்துக்கள் நண்பரே...

Post a Comment