Saturday, September 20, 2014

அணிலும் மாயமாய் மறையும் குதிரையும்- சிறுவர்களுக்கான கதை


பள்ளி முடிந்து வந்த முகிலன், வீட்டில் தன் அக்கா அகிலா இல்லாததால், அவளைத் தேடிக்கொண்டு சென்றான். எப்போதும் விளையாடும் அந்த புங்கைமரத்தடியில் தேடினான். அவள் அங்கு இல்லை. அம்மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த ராகவனிடம் தன் அக்காவை பற்றி விசாரித்தான். அகிலா அடுத்த தெருவில் வசிக்கும் ரேகாவிடம் பாரதியார் பற்றிய புத்தகம் பெற்றுவர சென்றிருப்பதாக கூறினான். 
முகிலன் வேகமாக தன் அக்காவைத் தேடி அடுத்த தெருவிற்கு ஓடினான்.

அவன் சிறிது தூரம் நகர்ந்து இருப்பான். அவனை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தான். ஓட்டத்தை தளர்த்தி நின்று திரும்பி பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை யாரும் தென்படவில்லை. ஏன் அப்படி எண்ணத்தோன்றியது என்றபடி நடந்தான். 

அவனுக்கு முன்னால் விரைந்து ஓடிய அணில், அவனை திரும்பி பார்த்தது. “என்ன முகிலா, நின்றுவிட்டாய், மூச்சு திணறுகிறதா ? “ என்றது. 

முகிலன் குரல் மட்டும் கேட்கிறது யாரும் இல்லையே என பயந்தான். முகிலா பயப்படாதே , நான் தான் அணில் பேசுகின்றேன் என்றது. தனக்கு முன்னால் நிற்கும் அணிலை பார்த்து ஆச்சரியப்பட்டான். உனக்கு பேசத்தெரியுமா? என்று கேட்டான். ஏன் தெரியாது? தினமும் நீங்கள் புங்கை மரத்தடியில் இருந்து விளையாடும் போதும் , அம்மரத்தடியில் இருந்து கதைகள் கூறும் போதும் நான் கேட்டு இருக்கின்றேன். உங்களிடம் இருந்து நான் பேசக்கற்றுக்கொண்டேன் என்றது அணில்.

அப்படியானால் நீ தான் என்னை பின் தொடர்ந்தாயா? என்றான் முகிலன். ஆம் என்றது அணில். ஏன் நீ என்னுடன் ஓடி வருகிறாய்? என கேட்டான் முகிலன். நீண்ட நாட்களாக பாரதியார் பற்றி அறிந்து கொள்ள ஆசை. உன் அக்கா பாரதியார் பற்றி புத்தகம் வாங்கி வருவதாக கேள்வி பட்டேன் அதான் உன்னை பின் தொடர்ந்தேன் என்றது அணில். 

பாரதி பற்றி உனக்கு தெரியுமா? என்றான் முகிலன். அதான் நீங்கள் அடிக்கடி ஓடி விளையாடு பாப்பா என பாடியபடி அந்த மரத்தை சுற்றி விளையாடுவீர்களே அப்போது இருந்தே அவர் யார் என அறிந்து கொள்ள ஆசை என்றது அணில். 

சரி வா அக்காவிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் என இருவரும் ரேகா வீட்டை நோக்கி ஓடினார்கள்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்று கூறிய பாரதி, சமஸ்கிருதம், பிரான்ஸ், வங்காளம், இந்தி , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்று திகழ்ந்துள்ளார் என்றாள் அகிலா. தூரத்தில் தனியாக பேசிக்கொண்டு வரும் முகிலனை பார்த்ததும் ரேகா, அகிலாவின் பேச்சை நிறுதி, “ அகிலா உன் தம்பி தானாக பேசிக்கொண்டு வருகின்றான் அங்கே பார்” என்றாள்.

என்னடா, நீயா பேசிகிட்டே வருகிறாய்? என்றாள் அகிலா. அக்கா நானா பேச வில்லை. இதோ இந்த அணிலுடன் தான் பேசிகிட்டு வருகின்றேன் என்றான். என்ன அணில் பேசுகிறதா என இருவரும் ஒருசேர கேட்டனர். ஆமாம் , நான் தான் அணில் பேசுகின்றேன் என்றது அணில். ஆச்சரியமாக பார்த்தனர். நம்ம கதையை நாம் பேசலாம். பாரதியார் பற்றி புத்தகத்தில் படித்து சொல்லுங்கள் என்றது அணில். ஓ பாரதி பற்றி தெரியணுமா? என கேட்டாள் ரேகா.

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும் என வாசிக்க தொடங்கினாள் அகிலா.

நான் ஒண்ணும் புத்தகத்தை வரிக்கு வரி வாசித்து காட்டச் சொல்லவில்லை. அவரை பற்றி சுவரசியமான தகவல் இருந்தால் சொல்லுங்கள் என்றேன் என்றது அணில். ஓ உனக்கு புத்தகம் படிக்க தெரியுமா? என கேட்டாள் ரேகா. ஏன் தெரியாது? உங்களிடம் இருந்து பேசக்கற்ற நான் , வாசிக்கவும் கற்றுக் கொண்டேன் என்றது அணில்.

“வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர். பாரதி “ என்றாள் ரேகா. இப்படித்தான் அறிய தகவலை பரிமாறச் சொன்னேன் என்றது அணில்.

“மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார் தெரியுமா?” என்றான் முகிலன்.

“சேதுபதி மேல்நிலைப்பள்ளி எங்கு இருக்கிறது” என கேட்டது அணில்.

“நம்ம மதுரை இரயில்வே நிலையம் அருகில் இருக்கும் ஹெட்போஸ்ட் ஆபீஸ் அருகில் தான் சேதுபதி பள்ளி இருக்கிறது ” என்றாள் அகிலா.

நாம் அவர் பணியாற்றிய பள்ளியை பார்ப்போமா? “ என்றது அணில். “அய்யோ, அது இங்கிருந்து 5 கிலோமீட்டர் இருக்குமே” என்றாள் ரேகா.

”என் நண்பன் குதிரையை அழைக்கின்றேன், கண்மூடி திறப்பதற்குள் நம்மை அங்கு சேர்த்திருப்பான் “ என்றது அணில்.

“அய்யோ குதிரையிலா எனக்கு பயமா இருக்கும் “ என்றான் அகிலன். “பயப்படாதே, அது பறந்து செல்லும் குதிரை . யார் கண்ணுக்கும் தெரியாது. நாம் அதில் ஏறி அமர்ந்ததும் நாமும் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம் “ என்றது அணில். அனைவரும் உற்சாகமாகினர். அகிலா அரை மணி நேரத்தில் திரும்பி விட வேண்டும், இல்லை என்றாள் அம்மா தேடி இங்கு வந்துவிடுவாள் “ என்றாள் அகிலா. “சீக்கிரம் வந்துவிடுவோம் “ என்றது அணில்.

அணில் தன் நண்பன் குதிரையை அழைத்தது. குதிரை கம்பீரமாக வெள்ளை நிறத்தில் தோன்றியது. அனைவரும் ஏறி அமர்ந்தனர். கண்மூடி திறப்பதற்குள் சேதுபதி பள்ளி வாசலில் இறங்கினர். வாட்ச் மேன் அப்போது தான் டீக்குடிக்க சென்றான். நுழைவாயிலில் அனைவரும் நுழைந்தனர். கழுத்தளவு வரை இருக்கும் பாரதி சிலையை பார்த்தனர்.

“ஆஹா , என்ன கம்பீரமாக தோன்றுகிறார். இவர் தான் பாரதியா என்றது குதிரை.

“ஆம், இவனின் கவிதைகள் இதை விட கம்பீரமாக இருக்கும்” என்றாள் ரேகா.

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடியவன் பாரதி “ என்றாள் அகிலா.

“விடுதலைக்கவி மட்டுமல்ல. அவன் பெண்கள் விடுதலைக்காகவும் பாடுபட்டவன் குதிரையாரே” என்றது அணில்.

 "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடியவர் “ என்றாள் ரேகா.

“ஆஹா..சபாஷ் “ என்ற குதிரை தன் நாவல் பாரதியை வருடியது.
“குழந்தைகளுக்காக புதிய ஆத்திச்சூடி எழுதியவர் பாரதி “ என்றான் முகிலன்.

“அவர் பதினொரு வயதில் கவி திறனை வெளிப்படுத்தினார். எட்டையாபுர மன்னர் அவருக்கு பாரதி என்ற பட்டத்தை தந்தான் “ என்றாள் அகிலா.

“அவருக்கு மணிமண்டபம் எட்டையாபுரத்தில் கட்டியுள்ளனர் “ என்றாள் ரேகா.

“அங்கு அவரின் முழு உருவ சிலை 7 அடி உயரத்தில் எழுப்பி உள்ளனர் “ என்றாள் அகிலா.

“அணிலே அணிலே உன் குதிரை நண்பன் உதவியுடன் நாம் இப்போது அங்கு செல்ல முடியுமா? “ என கேட்டான் முகிலன்.

“அய்யோ , அம்மா தேடுவார்கள் . வேண்டுமானால் அவர் பாடம் நடத்திய இந்த பள்ளியின் வகுப்பறைகளை பார்வையிட்டு வருவோம் “ என்றாள் ரேகா.

“இங்கே கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. பழைமையான கட்டிடம் இரண்டு மட்டுமே உள்ளன. வா அதை பார்ப்போம் “ என்றது குதிரை.

அனைவரும் சுற்றி பார்த்து விட்டு திரும்பினர்.

“அவர் எப்படி இறந்தார் ? “ என குதிரை கேட்டது.

“யானை மிதித்ததால், அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார் “ என்றாள் ரேகா.

”கீதையை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார் பாரதி “ என்றாள் அகிலா.

“சரி.. அவரின் கவிதை வரிகளில் உனக்குபிடித்த கவிதையை சொல்லு “ என்றது குதிரை.

அகிலா கவிதை புத்தகத்தை எடுத்து புரட்டிக்கொண்டிருந்தாள். நான் சொல்கின்றேன் என்றது அணில்.

அக்கா அம்மா தேடி வரப்போறா வா நேரமாவது என்றான் முகிலன்.

சரி அணில் நண்பா கவிதையை சொல் கேட்டுவிட்டு நாம் கலைந்து செல்வோம். நாளை மீண்டும் சந்திப்போம் என்றாள் அகிலா.
“தேடிச் சோறுநிதந் தின்று
     பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?” என்றது அணில்.

அனைவரும் கைத்தட்டி அணிலை பாராட்டினர்.

“இப்ப ஏன் பாரதி பற்றி பேச்சு வந்தது “ என்றது

”அதுவா, வருகிற செப்டம்பர் 11 பாரதியின் நினைவு நாள் வருகிறது. அதற்கு கட்டுரை தாயாரிக்க வேண்டும் . அதற்காக தான் ரேகா வீட்டிற்கு வந்தேன் “ என்றாள் அகிலா.

“சரி எனக்கு நேரமாகி விட்டது , நான் வருகின்றேன் “ என கூறி பறந்தது குதிரை.

ரேகாவும் எனக்கு ஹோம் ஓர்க் அதிகமா இருக்கு என்று கூறி விடைப்பெற்றாள்.

முகிலனும், அகிலாவும் ,அணிலும் நடந்தவண்ணம் பாரதி பற்றி பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

நாளைக்கு புதிசா வேறு விசயம் பேசுவோம் மறக்காம வந்துடங்க என்று கூறி புங்கை மரத்தில் ஏறி மறைந்தது அணில்.

க.சரவணன்.
தலைமையாசிரியர்
மதுரை -9

2 comments:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது

மகேந்திரன் said...

கதை வாயிலாக முண்டாசுக் கவி பற்றிய தகவல்கள் அருமை நண்பரே...

Post a Comment