Saturday, February 15, 2014

வெற்றி பெறுவது எப்படி? அது காதலாக கூட இருக்கலாம்.

      14-2-2014 வெள்ளி அன்று மிகவும் ஆனந்தமாக மகிழ்ச்சியாக இருந்தேன். காரணம் நீங்கள் எதிர்பார்க்கும் காதல் தான். ஆனால் பெண்ணின் மீது அல்ல. நான் விரும்பி பார்க்கும் ஆசிரியர் பணி மீதான காதல். என் வகுப்பறையில் நான் படிக்கும் தீரா நதி, காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, காக்கை சிறகினிலே போன்ற இதழ்கள் இருக்கும். மாணவர்கள் காலை, உணவு இடைவேளை, மாலை என ஓய்வு நேரங்களில் படிப்பர். நான் புத்தகங்களை எடுத்து கையில் வைத்தாலே மகிழ்ச்சி கொள்வேன். என் வகுப்பறை முழுவதும் புத்தகங்களால் நிரப்ப ஆசை. என் இருக்கையின் அருகில் பெஞ்ச் ஒன்று இருக்கும். அதில் சிறுவர் வார இதழ்கள், மாத இதழ்கள், கவிதை, கட்டுரை, கதை, திருக்குறள், நன்னூல், நன்னெறி, சுய சரிதை என பல புத்தகங்கள் இருக்கும். என்னை பார்க்க வரும் அதிகாரி , குப்பையா வைத்திருக்கீறீர்கள் கொஞ்சம் நீட் செய்தால் என்ன ? என்பார். நான் சரி செய்கின்றேன் என உறுதி அளிப்பேன். ஆனால் மாணவர்கள் புத்தகங்களை வாசிக்க ஏதுவாக பரப்பியே வைத்திருப்பேன்.

       வகுப்பறையில் படிக்கும் பாடப்புத்தகங்கள் தகவலை மட்டும் தருபவை, நூலகம் சென்று விரும்பிய நூல்கள் படிக்க சொல்வேன். நூல் வாசிப்பு தான் நிரம்பிய அறிவு , ஆழ்ந்த புரிதலை தரும் என்பேன். வாசிப்பு மனிதனை முழுமையடைய செய்யும். வாசிப்பு மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புத்தகங்கள் நமக்கு எப்போதும் துணையிருக்கும் நண்பர்கள் என அடுக்குவேன். அவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள நூலகங்கள் குறித்து தகவல் தருவேன். சனி ஞாயிறு விடுமுறை, மாலை வீடு செல்லும் முன் நூலகம் செல்ல அறிவுறுத்துவேன். ஞாயிறு விடுமுறைக்கு பின் யார் நூலகம் சென்றது என்று கேட்பேன். பெண்களில் பலர் எங்க அப்பா கூட்டிகிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டார் என்பார்கள். மாணவர்களில் சிலர் நூலகம் எங்கிருக்கு தெரியவில்லை என்பார்கள். மீண்டும் அட்ரஸ் சொல்ல வேண்டும். சிலர் போகாமல் படித்தேன் என்பார்கள். எல்லா பதில்களுக்கும் குட் என்பேன். அடுத்தவாரம் நூலகம் சென்று படித்து வா என்பேன். இப்படி நாட்கள் நீளும்.

காந்தி மீயுசியம் சென்றால் அங்குள்ள நூலகம் அழைத்து செல்வேன். வாட்ச் மேன்,” சார் அங்க போக கூடாது .சத்தம் போடுவாங்க..மத்தவங்க படிப்பு கெட்டு போகும் ”என்பார். நான் இருந்தாலும் அழைத்து செல்வேன்.என் வகுப்பில் பலர் ஊரகப் பகுதியில் இருந்து வருவதால் , அப்பகுதி ஊரக நூலகங்கள் விபரம் தந்து , செல்ல வற்புறுத்துவேன். ஊரக நூலகங்கள் பல சமயங்கள் திறக்க வாய்ப்பு இல்லை. கட்டாயம் சனி, ஞாயிறுகளில் இயங்குவதை பார்த்திருக்கின்றேன். நான் குடியிருக்கும் பகுதியில் , தபால் தந்தி நகர் விரிவாகத்தில் செயிண்ட் மைக்கேல் பள்ளி வாட்டர் டேங்க் அருகில் நூலகம் இருக்கிறது. நான் படிக்க சென்ற போது , அங்கு லைப்ரேரியனாக உள்ள பெரியவர், ”சார் நீங்க படித்த வார இதழ் இருந்தா லைப்ரேரிக்கு தாங்க” என்றார். எப்படியாவது நூலகத்தில் மக்களை படிக்க வைக்க வேண்டும் என்ற உறுதிப்பாடுடைய நூலக அதிகாரிகள் இருக்க தான் செய்கின்றார்கள். ”புத்தகங்கள் வாசிப்பு என மாணவர்களிடம் ஆகாதது போகாதது சொல்லி பொழுது கழிப்பான். எப்ப பாரு ஒரு கதையை சொல்வான். புள்ளைக்கு தேவையில்லாத விசயத்தை சொல்வான் “ என்ற பெயர் தான் எனக்கு உண்டு. என்னிடம் படித்த மாணவர்கள் சாட்சி. 

ஐந்தாவது படிக்கும் மாணவன் நூலகம் செல்வானா? அதுவும் மெம்பர் ஆகி, புத்தகம் எடுத்து படிப்பானா? நூலகம் சென்று தான் படிக்கும் புத்தகத்தில் இருந்து குறிப்புகள் எடுப்பானா? நூலகத்திலிருந்து வர சாத்தியம் உண்டா? போன்ற கேள்விகளுக்கு, என் இரண்டு மாணவர்கள் சாட்சி. சுவர் சொல்லும் வரலாறு என்ற பாடம் எடுத்த போது , எப் ஏ பிராஜகெட் ஆக நான் செஞ்சிக்கோட்டை பற்றி தகவல்களை சேகரித்து வர சொன்னேன். தேவதர்ஷினி என்ற மாணவி, சார் நான் செல்போனில் இருந்து தகவல்களை கொண்டு வ்ந்துள்ளேன் என்றாள். ஆங்கிலத்தில் செல்போன் பயன்பாடு குறித்து விளக்கியதன் விளைவு. இரண்டு முழுத்தாள்களில் செய்தி கொண்டு வந்திருந்தாள். மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது கார்த்தி சார் நான் லைப்ரேரி போய் புக்கு எடுத்தேன் சார், கல் சொல்லும் கதை என்று இருந்தது. அதில் படித்தேன் . எல்லா கோயில்கள் பற்றி போட்டிருந்துச்சு என்றான். சபாஷ் என்றேன். காகிதத்தில் குறிப்புகள். ஆச்சரியம். என்னை நானே பாராட்டிகொண்டேன். வானில் பறந்தேன். சாதித்தவனாக உணர்ந்தேன். அருகில் இருந்த மணிப்பாண்டி கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்திருந்தான். சார் நானும் தேடினேன் . கிடைக்கவில்லை. அவன் வைத்துள்ள புத்தக தலைப்பு தன்னம்பிக்கை. சபாஷ். அனைவரையும் கைதட்ட சொன்னேன். கார்த்திக் நானும் வீட்டில் புத்தகம் எடுத்து வைத்துள்ளேன் என்றான். 30 கட்டணம் கட்டணும் என்று பிற மாணவர்களுக்கு லைப்ரேரி மெம்பர் ஆவது குறித்து சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு தன்னம்பிக்கை அதிகரித்து இருந்தது. 

இத்தனை நாள் புலம்பல் நிறைவேறிய சந்தோசம். உண்மையில் என் காதலுக்கு கிடைத்த வெற்றி. இப்போது ஆசிரிய பணியை இன்னும் கூடுதலாக காதலிக்கின்றேன். காதல் உண்மையாக இருப்பின் வெற்றி நிச்சயம் என்பதற்கு இதை தவிர வேறு உதாரணம் சொல்ல முடியாது. 

இந்த மாலைவேளையில் என் மாணவர்களில் எவனாவது ஒருவன் மதுரையில் இருக்கும் எதாவதொரு நூலகத்தில் எதாவது ஒரு மூலையில் அமைதியாய் படித்து கொண்டிருப்பான். குறிப்பெடுட்து கொண்டிருப்பான். இந்த நம்பிக்கை தான் என்னை வழி நடத்துகிறது.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேவதர்ஷினி + கார்த்தி இவர்களைப் போல பலரும் சிறக்கட்டும்... உங்கள் நம்பிக்கை மேலும் மேலும் பெருகட்டும்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் ஐயா...

Unknown said...

உங்கள் வீட்டுக்கருகில் உள்ள கிருஷ்ணாபுரம் காலனியிலும் படித்து விட்டுமட்டுமே செல்லும்படியானஇலவச நூலகம் செயல்படுகிறது ,பயன்படுத்திக் கொள்ளுங்கள் ,சரவணன் ஜி !
த ம 2

Nagasubramanian said...

சரவணன்,
நானும் ஒரு ஆசிரியனாக வேண்டுமென்றே விரும்பியவன் - அதிலும் குறிப்பாக பள்ளி ஆசிரியன். காரணம், பள்ளியில் ஒரு மாணவனை/மாணவியை சரியான திசையில் செலுத்தியானால்தான் அவர்களால் சரியான வயதில் மிகச் சரியான வெற்றியை அடைய முடியும். ஆனால், அது கைகூடவில்லை.
புத்தகங்களை நோக்கி நீங்கள் மாணவர்களை செலுத்துவது கண்டு மகிழ்கிறேன்.
வாழ்துக்கள்!!!

நாம் நண்பர்கள் said...

உங்கள் பணி சிறக்கட்டும் ,உங்களை போல் உள்ள சிலரால் மட்டுமே இந்த மொத்த மக்கள் திரள் மீதும் நம்பிக்கை ஏற்படுகிறது ,உங்கள் மாணவ ,மாணவியர்கள் சாதிக்க வாழ்த்துக்கள் .அவர்களின் புத்தகம் மீது உள்ள ஆர்வம் மெய் சிலிர்க்க வைக்கிறது ,அதற்கு வேண்டி நீங்கள் எவளவு உழைத்து இருகிறீர்கள் என்பதும் புரிகிறது ....

Post a Comment