Monday, February 3, 2014

ஏடிஎம் செண்டரில் பணம் எடுக்க வரிசையில் நிற்கும் பெண்கள், கவனிக்கப்படவேண்டியவர்கள்...!

      என் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் எனது வாசகி , எனது சமீபத்திய கட்டுரைகளை படித்து , என்னிடம் ,”உங்கள் எழுத்து சமீபத்தில் நீங்கள் கொண்டாட விரும்பியவரின் எழுத்துக்களைப் போல் இருக்கிறது” என்கிறாள். அவளை அன்பிரண்ட் செய்வது என முடிவெடுத்து விட்டேன். செய்தும் விட்டேன். நான் யாரையும் போலச் செய்பவன் அல்ல என்பதை இதை விட எப்படி உணர்த்த முடியும். செய்தது சரிதானே என்று எப்போதும் நான் நியாயாம் கேட்பதில்லை. என் மனதிற்கு பிடித்ததை என்றும் செய்பவன். என்னுடன் இருப்பவர்களுக்கும் அதே சுதந்திரத்தை வழங்கியும் உள்ளேன்.
என் மாணவர்களிடமும் அவர்களுக்கு பிடித்ததை , விரும்பியதை செய்ய சொல்கின்றேன். யாருடைய வற்புறுத்தலுக்கும் உடன்படாதீர்கள். எவரின் திணிப்புக்கும் அடிமையாகி விடாதீர்கள் என்கின்றேன். நீங்கள் நீங்களாக இருங்கள். அதுவே நீங்கள் எதுவாக விரும்புகிறீர்களோ அதுவாக உயர்வத்துவதற்கு வழியை உருவாக்கும்.
நான் அவர்களுக்கு போதிப்பதெல்லாம் ஒருபோதும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள் என்பதை தான்.

      நான் கற்று கொடுப்பதெல்லாம் அவர்களிடம் உள்ள நம்பிக்கையை வெளிகொணர்வதற்கான வழிமுறைகளை மட்டுமே. அடிக்கடி தலைவாரிக்கொள்ளும் மாணவனை அருகில் இருந்த ஆசிரியர் கண்டித்தார். படிக்கிற வயசுல கண்ணாடி பார்க்கிறான் பாரு, படிக்கிற வேளையை பாரு என்று திட்டி அனுப்பினார். நான் அம்மாணவனை அழைத்து, அவர் திட்டியதற்கு வருந்தாதே, நீ தலைவரிக்கொள், மிகவும் அழகாக இருக்கிறாய். உன்னிடத்தில் அற்புதமான கலைஞன் ஒழிந்துள்ளான். அவன் வெளிப்பட நீ முயற்சி செய்ய வேண்டும் . அதற்கு நீ நன்கு படித்தவனாகவும் இருக்க வேண்டும். படிப்போடு சேர்ந்த திறன் மட்டுமே உன்னை மிகப்பெரிய இடத்திற்கு இட்டு செல்லும் என்றேன். அவுங்க திட்டினதுக்கு நான் வருந்துகின்றேன். நீ எப்போதும் போல் தலைவாரிக்கொள் ஆனால் பள்ளியில் வகுப்பறையில் அடிக்கடி சீவிக்கொள்வதை தவிர்க்கவும் என்றேன். அவன் சிரித்தப்படி சரி என்று சென்றான். சென்றவன் என் பைக் கண்ணாடியை பார்த்து ஒரு கர்வத்துடன் தன்னம்பிக்கை கொண்டவனாய் , தன்னை தானே ரசித்தப்படி நடந்து சென்றான். இப்போது அவன் நன்றாக படிக்கிறான் என்பது தனி கதை. சிலர் பல நேரங்களில் நம்பிக்கை இழந்து விடுகின்றனர்.

     இன்று மாலை ஏடிஎம் செண்டரில் பணம் எடுக்க காத்திருந்தேன். எனக்கு முன்னால் இரண்டு வயதான பெண்மணிகள் இருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு இளைஞன் நின்றிருந்தான். அதற்கும் முன்பாக ஆண் பெண் என மாறி மாறி ஏழு பேர் நின்றிருந்தனர். ஒவ்வொருவரும் சென்று பணம் எடுத்துவர குறைந்தது பத்து நிமிடம் ஆக்கினார்கள். எனக்கு எரிச்சல் வந்தது. எல்லோரும் ஏதோ இன்று தான் பணம் எடுப்பவர்கள் போல திணறிக்கொண்டு இருந்தார்கள். அதில் பலபேர் மினிபேலண்ஸ் பார்த்து , அதன் பின் பணம் எடுத்தார்கள். இந்த எரிச்சலை நான் வெளிப்படையாகவே அங்க என்ன பாடமா நடத்துறாங்க...என்ன சொல்லுதுன்னு பார்த்து பட்டனை தட்டுவதற்கு இத்தனை நேரமா? என்று கத்தவும் செய்தேன். பத்தாயிரம் ரூபாய் எடுக்க முக்கால்மணி நேரம் ஆகிவிட்டது.

     நான் கையில் வைத்திருந்த ஏடிஎம்கார்டை பார்த்த என் முன் நின்றிருந்த வயதான பெண்மணி , இந்தியன் வங்கி கார்டா..வச்சுருக்கிங்க தம்பி... இழுத்து இப்படி சொன்னாள். எப்பவும் ஸ்டேட்பேங்க் ஏடிஎம் செண்டரில் தான் பணம் எடுக்க முடியுது. இந்தியன் வங்கி ஏடிஎம் சுத்த மோசம். எப்ப பாரு பணம் இருக்காது, இல்ல மிஷின் ரிப்பேர் , இல்லை கார்டு போட்ட மாட்டீக்குது . இது போன்ற அடுக்கடுக்காக புகார்களை கொட்டி தள்ளினார். எனக்கு விபரம் தெரிந்து நாராயணபுரம் இந்தியன் வங்கி ஏடிஎம் இப்படி தான் எப்போது சென்றாலும் இயங்காமல் உள்ளது. பின்பு பிற வங்கி ஏடிஎம்களில் தான் பணம் எடுக்க வேண்டியிருக்கிறது.

     பெண்கள் பணத்தை எடுத்து , எண்ணி அங்கேயே தனித்தனியாக பிரித்து தங்களுக்கு வசதியுள்ள எல்லா இடங்களிலும் பதுக்கி வைத்து செல்வதை கண்டேன். பாவம் பெண்கள் , தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை பதுக்கிதான் தன் பெற்றோர்களுக்கு உதவ வேண்டியுள்ளது என்ற நிலையை பார்க்கும் போது மனம் கணக்க தான் செய்கின்றது. கைநிறைய சம்பளம் வாங்கினாலும் தன் சகோதர சகோதரிகள், பெற்றோர்களுக்கு கொடுத்து உதவி செய்திட முடியாத கையாளாகத தனத்தை நினைத்து வெந்து புலம்பும் சகோதரிகளை பார்க்கும் போது ஆண்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அதைவிட கொடுமை தங்களின் ஏடிஎம் கார்டை கணவனிடம் கொடுத்து , எப்போதும் அவர்களின் கைகளை எதிர்பார்த்திருக்கும் நிலமை. எனக்கு தெரிந்து ஒரு ஆசிரியர் தன் கணவனிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு, குடிகாரனாகிய அவனிடம் அடிஉதை வாங்கி வருவதுடன், வீட்டு வாடகை கூட காட்ட முடியாமல் , தன் சக பணியாளர்களிடம் கடன் வாங்கி குடித்தனம் நடத்துவதை காண்கின்றேன். இந்த நிலமை மாற பெண்ணீயம் பேசினால் போதுமா என்பது தான் என் கேள்வியாக எப்போதும் இருக்கிறது. பெண்களுக்கு எப்போதும் தங்கள் மீது நம்பிக்கை பிறக்கிறதோ அன்று தான் இப்பிரச்சனை தீரும். ஆகவே நான் வகுப்பறையில் அறிவை விட , நம்பிக்கையை விதைக்கின்றேன். மாணவிகளிடம் தன்னம்பிக்கை விதைகளை தூவுகின்றேன்.

     நேரம் முக்கியமானது. நேரத்தை நாம் ஏடிஎம் செண்டர்களில் வரிசையில் நின்று தொலைக்கின்றோம். இது போன்ற சமூக சிந்தனைகள் உதிப்பதற்கு காரணமாக , சில வீணடிக்கும் நேரங்கள் அமைத்து விடுகின்றன. வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் , நாம் அறிந்து கொள்ள பாடங்கள் நிரம்பியுள்ளன. நாம் கவனித்தால் அது நமக்கு கிட்டும். ஒவ்வொரு நிமிடமும் தகவலோடு பயணிக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் நமக்கு சில புரிதல்களை தருகின்றன. ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஒரு அனுபவத்தை தருகின்றன. இவை நம் தகுதியை மேம்படுத்துகின்றன.

     எனக்கு முன் நின்ற வயதான பெண்மணிக்கு கார்டை கொண்டு பணம் எடுக்க தெரியவில்லை. அதற்காக அவர் வருந்தவில்லை. தம்பி எனக்கு உதவுங்கள் என்று அழைத்தார். உதவினேன். அவர் சொன்னார். எங்கப்பா பணம் எடுக்க விடுறாங்க...செக்புக்கில கையெழுத்து வாங்கி அவுங்களே எடுத்துக்கிறாங்க...எதோ என் தேவைக்கு ஆயிரம் இரண்டாயிரம் என எடுத்து கொள்கின்றேன் என புலம்பினார். வயோதிகம் என்பது இம்மாதிரியான வேதனை குரல்களில் ஒலிக்கும் போது மனம் கஷ்டப்படுவது இயற்கையே. என் தாய் என் கண்முன் தோன்றினார். அவரும் பாவம் கால்கடுக்க வங்கிக்கு சென்று பணம் எடுத்துவருவதை நினைத்து வருந்துகின்றேன். என் தாய் ஏடிஎம் என்றால் அலர்ஜி என்பார் . இதுவரை கார்டு வாங்கியதில்லை. ஒருசமயம் வங்கியே வலுக்கட்டாயமாக திணித்தது. அவர் அதை இன்று வரை கையில் தொட்டதில்லை. இப்போது புரிகிறது சக பணியாளர்களின் எச்சரிக்கை உணர்வாக கூட இருக்ககூடும். நாங்கள் அப்படி அல்ல என்று சொன்னாலும் , அந்த தாய்க்கு தான் தெரியும் , அவரின் பாதுகாப்புக்கு என்ன செய்யவேண்டும் என்பது. அதுவும் ஒருவகை நம்பிக்கை தான்.

     இதற்கிடையில் தமிழ்வாசி என்னை அழைத்து சாரு நம் சந்திப்பை தரக்குறைவாக சுட்டிக்காட்டியுள்ளார் என்றார். //மதுரையில் ஒருசில நண்பர்கள் gatecrash செய்து வந்து என்னோடு போட்டோ எடுத்துக் கொண்டு போனார்கள். அதுவா கொண்டாட்டம்? // என்ற சாருவின் வரிகளை மெயில் செய்தார். சாருவின் வாசகனாக நாம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது நமது உரிமை. அதை அவர் குறை கூறவில்லை. அவரை நீங்கள் உங்களின் மனம் கவர்ந்த எழுத்தாளனாக பத்ரிக்கை பத்திகளை படித்து , தேடி சென்று வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டது ஒரு வரபிரசாதம். அதற்கு உதவியாக இருந்தேன் என்பதில் பெருமிதம். சாரு எதிர்பார்க்கும் கொண்டாட்டம் என்பது வாசகர் வட்டத்திலுள்ள என் போன்றோர்களுக்கு மட்டுமே புரிகிறவிசயம். புத்தகம் வாங்குவதும் , பிரதியில் கையொப்பம் வாங்குவதும் கொண்டாட்டம் தான், தமிழ்வாசியை போன்ற ஆரம்பகட்ட வாசகனுக்கு என்பதும் சாருவுக்கு தெரியும். அவரிடம் பேசிய சில நொடிகளில் புயலிலே ஒரு தோணி யை செவ்விலக்கியங்கள் என்றும், அதை படிக்க சொன்னார். அதுபோன்று ஒரு நாவலை தான் எழுதப்போவதாக சொன்னார். விஜயகாந்த் நிலமை, மதுரையின் அரசியல் , தான் பஜாகாவுக்கு செல்லாமல் இருப்பது, மோடியை ஆதரிப்பது போன்ற பலவிசயங்களை கொட்டி தள்ளினார்.அதிமுக பாராட்டினாலும் , அதில் தன்னை இணைத்து கொள்வதில் தனக்கு உள்ள பிரச்சனை என சாரு உரையாடியதை என் நண்பர் தமிழ்வாசி உணர்வான் என்று நினைக்கின்றேன். ஆகவே சாரு கூற்றில் எந்த தவறும் இல்லை. நான் என் வருகையை முன்கூட்டியே பதியவில்லை என்பதால் நானும் உங்களுடன் வெளியேறினேன். தமிழ்வாசி பிரகாஷ் , சாருவை படியுங்கள். அவரை புரிந்து கொள்ளுங்கள். பின் நாம் ஒருதருணத்தில் கொண்டாடுவோம். இதுவும் ஒருவகை தன்னம்பிக்கை தான்.


மதுரை சரவணன்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தூவும் தன்னம்பிக்கை விதைகள் மேலும் தொடரவும், நண்பராக இருந்தாலும் (விட்டுக் கொடுக்காமல்) சரியான ஆலோசனைகளுடன் புரிதலுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

தருமி said...

//இந்தியன் வங்கி ஏடிஎம் சுத்த மோசம். எப்ப பாரு பணம் இருக்காது, இல்ல மிஷின் ரிப்பேர் , இல்லை கார்டு போட்ட மாட்டீக்குது . இது போன்ற அடுக்கடுக்காக புகார்களை கொட்டி தள்ளினார். //

மகா மகா மட்டமான வங்கி. பணம் இருக்காது; கதவுகூட ஒழுங்காக இருக்காது. குப்பை ..கூளம் .. ஏசி வேலை செய்ததாக நினைவில்லை. கேள்வி கேட்கணும்.... ஒழித்துத் தொலைக்க முடியாதே...!

ராஜி said...

ஏடிஎம் சுத்த மோசம். எப்ப பாரு பணம் இருக்காது, இல்ல மிஷின் ரிப்பேர் , இல்லை கார்டு போட்ட மாட்டீக்குது
>
இதுக்குதான் நான் ஏடிஎம் செண்டருக்கே போறதில்ல. காசுன்னாலே எனக்கு அலர்ஜி. மாசம் ஒரு முறை பேங்க் போய் வரனும்னாலே சளிச்சுக்குவேன்

G.M Balasubramaniam said...

ATMசெண்டரில் பணம் எடுத்து கள்ள நோட்டு வந்து நஷ்டப்பட்ட அனுபவம் இருக்கிறது. வசதிகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஏடிஎம் வசதி உபயோகிப்பவர் களுக்கு நஷ்டம் விளைவிக்கலாமா. ?

Post a Comment