Sunday, January 12, 2014

இளைஞர்களுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெசலா...!

     பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை ஒரே நாளில் படித்து, எந்த கேள்வி கேட்டாலும், பதில் சொல்லி அசத்திய அரிய மனிதன், வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாள் ஜனவரி 12ம் நாள் வருகிறது. ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாக, 1984ல் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு , 1985 முதல் ஒவ்வொரு வருடமும் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

   விவேகானந்தர் ஆற்றிய உரைகள், எழுதிய எழுத்துக்கள் , அவரது வாழ்க்கை என அனைத்தும் இளைஞர்களுக்கான முன் உதாரணமாகவும் தூண்டுகோலாகவும் இருக்கின்றது.
  
   ஒரு நாள் குரங்கு கூட்டம் துரத்தி வரும் போது, எல்லோரும் பயந்து ஓடினார்கள். ஆனால் நரேந்திரன் மட்டும் ஓடாமல் திரும்பி நின்று குரங்குகளை எதிர்த்தார். எல்லா குரங்குகளும் பின் வாங்கி ஓடின. அன்று முதல் தன்னை நம்ப வேண்டும் என உணர்தார். கடைசிவரை தன்னை நம்பினார். இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
 ” முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.” என்கின்றார்.
   
     1863 ஜனவரி 12 ல் விஸ்வநாத் தத்தா , புவனேஸ்வரி தேவி தம்பதியினருக்கு மகனாக பிறந்த நரேந்திரநாத் தத்தா என்ற விவேகானந்தன் குழந்தை பருவத்தில் மிகவும் சேட்டை செய்பவனாகவும் ,அதே நேரத்தில் உதவிகள் செய்பவனாகவும் வளர்ந்தான். யாராவது உதவி என்று வந்தால் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருளையும் கொடுத்து விடுபவனாக இருந்தான்.
   
    ஒருமுறை நான்கு துறவிகள் நரேந்திரன் இடத்தில் உதவி கேட்க, அவர்களுக்கு வேண்டியதை எடுத்துவர வீட்டிற்கு சென்றான். ஆனால், அவன் அம்மா அதை பார்த்துவிட, அவனை அறையில் அடைத்து வைத்தார். ஆனால் , அறையின் ஜன்னல் வழியாக அந்த அறையில் இருந்த சில ஆடைகளை துறவிகளுக்கு தூக்கி வீசினார். மூன்று பேருக்குதான் உதவ முடிந்தது. வேறு எதுவும் கிடைக்க வில்லை. நான்காவது துறவிக்கு உதவுவதற்காக தான் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து கொடுத்து விட்டான்.
     
    அதன் தொடர்ச்சி தான் வளர்ந்த பின் அவர் உருவாக்கிய  “ராமகிருஷ்ண மடம்” என்ற அமைப்பாக இருக்கிறது. உதவி வேண்டுபவர்களுக்கு உங்கள் கரங்களை நீட்டி உதவுங்கள். அப்படி முடியா விட்டால் , உதவுபவர்களை ஆசிர்வதித்து அனுப்புங்கள் என்றார்.
படிக்கும் போது மிகவும் அமைதியாக அம்மா சொல்லும் அனைத்து கதைகளுக்கும் உம் கொட்டி கவனிப்பான். இராமாயணம், மகாபாரதம் கதைகளை மிகவும் கவனமாக கேட்பான். அதனால் தான் விவேகானந்தரான பின் கல்வி பற்றி இப்படி கூறுகிறார்,
“வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற , மனிதனை உருவாக்குகின்ற, குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துக்களை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது.” 
   
     தவறாக ஒரு மாணவனை அடித்த ஆசிரியரை பார்த்து கேலி செய்து சிரித்ததற்காக  அடி வாங்கியவன் நரேந்திரன் , காதில் இரத்தம் வடியவே, அழுகையுடன், ’இனி மேல் காதை திருகி அடித்தால் சும்மா விடமாட்டேன். இனி என்னருகில் வரக்கூடாது’ என்று ஆசிரியரிடம் கூச்சலிட்டான். தலைமையாசிரியர் அப்போது வரவே நடந்ததை எடுத்து கூறி, இனி நான் இப்பள்ளியில் படிக்க போவதில்லை என்று கூற, சமாதானத்திற்கு பின் படிப்பை தொடர்ந்தான்.
   
     தவற்றை தட்டி கேட்கும் மனப்பான்மை விவேகானந்தரிடம் இளமையிலே இருந்தது. 
    
    ”நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகுபொருந்தியவை ஆக்குகின்றன. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன. நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்து கொள்ளக் கற்றுக்கொள்”  என்று கூறும் விவேகானந்தரின் மனப்பான்மையை நாம் புரிந்து கொண்டால், இந்த உலகம் அழகாக தெரியும்.

     கல்கத்தாவிற்கு வந்த போர்கப்பலை சுற்றிப்பார்க்க , துரையின் அனுமதி வேண்டி அவரின் வீட்டிற்கு சென்ற போது , அவனை வீரர்கள் விரட்டி விட, கட்டிடத்தின் பின் பக்கம் வழியாக ஏறி சென்று , துரையிடம் அனுமதி பெற்று போர்கப்பலை சுற்றி பார்த்தார்.
தான் எண்ணியதை செய்து முடியும் மன உறுதி பெற்றிருந்தார்.
மரத்திற்கு மரம்  தாவி விளையாடுவதை பார்த்த , அவனின் தாத்தா, அவனிடம் பலமுறை சொல்லியும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மரம் தாவுவதை நிறுத்த வில்லை, எனவே மரத்தில் பேய் இருப்பதாக சொல்லவே, நண்பர்கள் விளையாட பயந்தனர். ஆனால் நரேந்திரன் மரத்தில் ஏற தொடங்கினான், குதித்து விளையாடியபடி நண்பர்களிடம், ”இம்மரத்தில் பேய் இருந்திருக்குமானால் என்னை ஏற அனுமதித்திருக்காது, மரத்தில் பேய் இருப்பது என்பது பொய்யான விசயம்” என்றான். 

     எப்போதும் பகுதறிந்து புரிந்து பேசும் மனப்பான்மை கொண்டிருந்தார் விவேகானந்தர்.
அது மட்டுமல்ல தன் உடல் மீது அக்கறையை கொண்டு இருந்தார். நீச்சல், மல்யுத்தம், சிலம்பம், உடற்பயிற்சிகளைப் பழகி இருந்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட பெண்ணிடம், தன்னையே மகனாக ஏற்றுக்கொள்ளம் படி அறிவுரை கூறினார். அமெரிக்காவில் தன் உரையை சகோதர, சகோதரிகளே என்று தொடங்கினார்.

     இப்படி விவேகானந்தர் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்றைய இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கவும், தங்கள் மீது நம்மைபிக்கை கொள்ளவும் விவேகானந்தரின் வாழ்க்கையை படித்தாலே போதும். அவரின் பொன்மொழிகளை வாசித்தால் போதும் வாழ்வு வசந்தமாகும்.

   எழுந்து நில் ! விழித்து கொள் ! இலட்சியத்தை அடையும் வரை ஓயாது உழை !!!
என்ற விவேகானந்தரின் உரையை மனதில் பொதித்து, அவரின் 150 வது பிறந்த நாளை கொண்டாடுவோம். விவேகானந்தரை போன்று நம் குழுந்தைகளுக்கு வேதங்களையும், உலக இலக்கியங்களையும், பைபிள் , இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களை வாசிக்க செய்வோம். நல்ல பண்பு உள்ளவர்களாக மாற்றுவோம்.



     மாணவர் உலகம் இதழுக்கு எழுதிய கட்டுரை . 

   

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் இலட்சியங்கள் அசர வைக்கிறது...

சிறப்பான கட்டுரைக்கு வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

இன்றைய இளைஞர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்கவும், தங்கள் மீது நம்மைபிக்கை கொள்ளவும் விவேகானந்தரின் வாழ்க்கையை படித்தாலே போதும். அவரின் பொன்மொழிகளை வாசித்தால் போதும் வாழ்வு வசந்தமாகும்.//

மிகவும் சரியாக சொன்னீர்கள் சரவணன்...!

கரந்தை ஜெயக்குமார் said...

சிறப்பான கட்டுரைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

Post a Comment