Thursday, June 9, 2011

இரயில் பயணம்-2

     நான் எப்போதும் சென்னை செல்வதென்றால் முன்பதிவு செய்தே செல்வேன். சில இக்கட்டான தருணங்களில் பயிற்சி வகுப்புகள் உடனடியாக செல்ல நேரும் போது முத்து நகர் எக்ஸ்பிரசில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிப்பது உண்டு. அன்று பயணிக்கும் போது அவர்களை பார்த்தேன். கல்லூரி முடித்து அப்போது தான் வேலைக்கு சேர்ந்து இருப்பான் என்று நினைக்கிறேன். அவனுடன் வந்த அந்த பெண்ணிற்கு இருபது இருக்கும். வெளிர் சிவப்பு நிறம். நீளமான முடி. ஒல்லியான தேகம். கையில் தங்க வளையல். காலில் தங்க கொலுசு. விரல்களில் மருதாணி இட்டு , மோதிர விரலில் பாம்பு போன்ற நீண்ட தங்க சுருள் மோதிரம். அவளை பணக்கார பெண் என அடையாளம் காட்டியது.

   அவர்களை திண்டுக்கல் நெருங்கும் போது தான் பார்த்தேன். அதற்கு முன் நடந்த சுவரஸ்யமான தகவலை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு , உங்களை அந்த பெட்டியின் அறுபத்து நான்காம் இருக்கைக்கு அழைத்துச் செல்கிறேன்.

    அன்று கூட்டம் அதிகம் . இருப்பினும் நான் உள்ளே நுழைந்து இடம் அமர்வதற்கு கிடைக்கிறதா என பார்த்துக் கொண்டே சென்ற போது , வயதான ஒருவர் தம்பி இங்க உட்காருங்க என் சின்ன மகன் மேலே ஏறி படுத்துக்குவான் என சொல்ல , முதலாலாக அமர்ந்தேன். அப்போது ஜன்னல் ஓர சீட்டில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவனின் மடியில் ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை அமர்ந்து இருந்தது. அந்த பெண் அவனிடம் சில தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் சமமான வார்த்தையை கேட்டுக் கொண்டு வந்தாள். அம்மா ... மதர் . அப்பா- பாதர். தம்பி-பிரதர். பிளாக் போர்டு- அவன் முழித்தான். அது ஆங்கிலம் என்றான். அதற்கான தமிழ் சொல் என்னவென்று சொல்ல வில்லை. பின் டஸ்டர் என்றாள் அதுவும் ஆங்கிலம். அதற்கான தமிழ் சொல் தெரியவில்லை. இப்படி ஆங்கிலம் தமிழாகி இருந்தது. டீச்சர் அப்படி தான் சொல்லி கொடுத்தாங்கள் என்றாள்.  ஆங்கிலம் தமிழில் கலந்து இருப்பது மட்டும் அல்ல அது பேச்சு தமிழாக மாறியிருப்பதை பார்க்கும் போது செந்தமிழ் மாநாடு எல்லாம் பெயரளவில் தான் போல தெரிகிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் வகுப்புகளில் தனித் தமிழ் சொற்களை கற்றுத் தர வேண்டும். மேலும் தமிழில் உள்ள நடைமுறையில் பயன்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை சொல்லி த் தரவேண்டும்.

      இப்படி சொல்லும் போதே கொடை ரோடு வந்தது. காபி ,டீ என கூவிக் கொண்டு நடை மேடையில் வலம் வந்த நபரை பார்த்து என் பின் புறம் உள்ள பாட்டியிடம் கெஞ்சியது. அப்போது தான் , நான் அறிய வந்தேன். அவள் அமர்ந்துள்ள மடி என்னைப் போன்ற சக பயணியினுடையது என. அவளின் பாட்டி எதையும் கவனியாது போல முகத்தை வைத்து இருந்தார். மீண்டும் வேறு நபர் பன், வாழைப்பழம் , தண்ணி பாட்டில் எனக் கூவினான். மீண்டும் அவள் அவள் பாட்டியைப் பார்த்து , பசிக்கிறது என்றாள். அப்போதும் அந்த பாட்டி எதுவும் கண்டு கொள்ள வில்லை.  இப்போது நான் திரும்பி பார்த்தேன். அப்போது பாட்டியிடம் சைகை செய்தாள் . அவள் பார்வையில் ஏக்கம். அனைவரும் டீ வெளியில் குடிக்கின்றனர். இந்த இரவில் நாம் பருகினால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம். உண்மையிலே அவளுக்கு பசித்திருக்கலாம். சிறுவயதிற்குரிய எதையும் பார்த்த வுடனே வாங்கி திண்று விட வேண்டும் என்ற ஆசையாக இருக்கலாம். ஆனால் பாட்டியை பார்க்கும் போது அதன் ஏழ்மையும் , வெறுமையும் , இயலாமையும் தான் இருந்தது. நான் திரும்பி பார்க்கும் போது , இயலாமையின் முகம் , என்னை பார்த்தவுடன் திரும்பிக் கொண்டது. ஏழ்மையின் அடையாளமாய் பாட்டியின் இயலாமையும், பேத்தியின் ஏக்கமும் இருந்தது.

  நாம் வாங்கி தரலாம் என்றால் அதனை தவறாக நினைத்து எதையாவது நாம் வாங்கி கட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று பயந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து , பாத்ரூம் கதவுக்கு அருகில் சென்றேன்.அப்போது தான் நான் அவர்களைப் பார்த்தேன்.  அவன் கையில் ஒரு கருப்பு பை வைத்து இருந்தான். பாத்ரூம் அருகில் இருந்தான். கருத்த தோல் , நல்ல உயரம். கழுத்தில் தங்க செயின் . காலில் சூ அணிந்து இருந்தான். மறு கை அவளின் கரங்களை இறுக பற்றி இருந்தன. நான் அவனை பார்த்து ஏன் இங்கு நிற்கிறீர்கள்... உள்ளே வாருங்கள் இடம் தருகிறேன் என்றேன். அவன் என்னை புறக்கணிப்பது போல வேறு எங்கோ பார்த்தான். அவள் அவனை மெல்ல பார்த்தாள். இருவர் கண்களிலும் பயம் தென்பட்டது. அவள் கழுத்தில் தாலி இல்லை.   (தொடரும்)

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரயில் பயணம் சூடு பிடிக்கும் நேரத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே! அவனும் அவளும் யார்? அடுத்த பகுதி வெளியாவதற்குள் மண்டை வெடித்துவிடும் போல் உள்ளதே! சீக்கரம் தொடருங்கள். நன்றி.

ஹேமா said...

இப்போதான் இரண்டு பதிவும் படிக்கிறேன்.தொடருங்கள் !

நிரூபன் said...

பாஸ்....என்னால் ஓரளவு ஊகிக்க முடிகிறது,
இக் கால இளசுகள் போக்குவரத்துச் சாதனங்களை எப்படித் தமது இச்சைக்கேற்ற ம்றை விடமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதன் விரிவான விடயம் அடுத்த பகுதியில் வரும் என நினைக்கிறேன்.

சஸ்பென்ஸ் வைத்து, கூடவே வண்டியில் பயணிப்பது போன்ற உணர்வினையும் ஊட்டி உங்கள் பதிவினை நகர்த்துறீங்க சகோ.

Yaathoramani.blogspot.com said...

இன்றுதான் இரண்டு பதிவுகளையும் படித்தேன்
கட்டுரைபோல் துவங்கி கதைபோல் வளர்ந்து
ஒரு அனுபவமாக விரிகிறது உங்கள் பதிவு
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே.... ட்ரெயின் அனுபவம் கதை வடிவமாக சூப்பர்....


தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

shanmugavel said...

தொடர் சிறப்பாகவே செல்கிறது சரவணன்.சஸ்பென்ஸ் உள்பட !.

vidivelli said...

நண்பரே
நீண்ட நாட்களின் பின் உங்கள் பதிவை படித்திருக்கிறேன்...
நலம் தானே!!!!

நல்ல தொடர் கதையும், ஆர்வமாய் போய்க்கொண்டிருக்கிறது
அடுத்தது என்னவென்ற எதிர்பார்ப்புடன்............!!!!!!



!!நம்ம பக்கமும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...!!!

செந்திலன் said...

அடுத்த பாகத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன் தோழர்.,

Post a Comment