Monday, January 24, 2011

நண்பேண்டா....

       ஆழ்ந்த சிந்தனையில் இருந்த என்னை, பழனியின் குரல், அவனை திரும்பி பார்க்க செய்தது. அவன் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே நின்றான். என்னை விட நான்கு வயது குறைவு. எதையாவது பேசுவான், சிரிப்பான் , அடிக்கடி வந்து ,’அண்ணே வணக்கம் ‘என சொல்லிவிட்டு ஓடிவிடுவான். அவனை பார்த்ததும் பேசாமல் நாமும் பழனி போல இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றியது. என் அருகில் வந்தான் என் கையையே பார்த்தான். என் வலது கை மோதிரம் அவனை உருத்தியது. ‘அண்ணே அதைக் கொடுங்க பார்த்துட்டு தருகிறேன்’ என பல் இளித்துக் கேட்டான்.அவனை என்னால் திட்ட முடிய வில்லை. என் தனிமையை அவன் கலைத்திருந்தாலும், என் மனம் இன்னும் சரியாக வில்லை. ’பழனி அப்புறம் வா தருகிறேன்’ என்றேன். அவன் நகருவதாக இல்லை. ‘அண்ணே வணக்கம் .கொடுங்க” என மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு என்னிடம் கேட்டான். என் உணர்வுகளை புரிந்து கொள்ளவே யில்லை...மீண்டும் இளித்தான். பின் என்னைப் பார்த்து ’ஐ லவ் யூ’ என சொல்லி விட்டு ஓடு விட்டான்.
      
 
      எங்கள் வீட்டிற்கு அருகே பார்க் உள்ளது. ஆண் , பெண் என அனைவரும் அங்கு தான் உலாவ வருவோம். அங்குள்ள இருக்கையில் நானும் , லதாவும் எப்போதும் அமர்ந்து எதாவது பேசிக் கொண்டு படித்துக் கொண்டு இருப்போம். இப்படித்தான் நானும் லதாவும் , அவளது தோழி உதயாவும் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது எனக்கு பதினாறு இருக்கும் . பழனி வேகமாக வந்தான். லதாவைப் பார்த்து வணக்கம் சொன்னான். அவளுக்கு பழனி என்றாலே பிடிக்காது . ’ரவி அவனை பார்த்தாலே எரிச்சலா வருது.. தயவு செய்து போகச் சொல்லு “ என்றாள். நானும் அவனை சமாதனப்படுத்தி எதேதோப் பொருட்களைக் கொடுத்து போகச் செய்து தோற்றுப்போனேன். ”அண்ணோ , ஒண்ணும் வேணாம்ண்ணே.... வணக்கம் சொல்லச் சொல்லுங்க ”என்று அடம் பிடித்தான். அங்கு வந்த விசால் ’அந்த பிள்ளைக்கு தான் உன்னை பிடிக்காதுள்ள .. போடா ஓங்கி அறைவாங்கிட போற”என கையை ஓங்க ..” ஐ லவ் யூ ’ என சொல்லி லதாவைப் பார்த்து சிரிக்க தொடங்கினான். லதா ஓங்கி பழனியை அறைய , நான் தடுக்க , விசால் இது தான் சந்தர்ப்பம் என பழனியை அடிக்க முயல ,நான் பழனியை ஒரு வழியாக கடத்தி வீடு சேர்த்து வந்தேன். விசால் என்னை விட இரண்டு வயது மூத்தவன். அவனுக்கு லதா மீது ஒரு பார்வை . உதயாவின் தோழி ராம்யாவிற்கு விசால் மீது ஒரு காதல். எல்லாம் ஒரு பக்க காதல்.
    
         எனக்கு காதல் என்றாலே பயம் . அதுவும் அந்த வயதில் படித்து அதிக மார்க் வாங்கி எதாவது ஒரு அரசு உத்தியோகம் போக வேண்டும் என்று ஆசை. என் தந்தை ஆயிரம் மார்க் வாங்கிய என்னை பி.எஸ்.ஸி கணிதம் படிக்க செய்தார்.  
அப்போது தான் நான் வேலைக்கானத் தேர்வுகளில் அதிக மார்க் எடுத்து ஒரு அரசு வேலையில் சேர முடியும் என்பது அவரின் கனவு . இருந்தாலும் நானும் லதாவும் ஒன்றாம் கிளாசில் இருந்து சேர்ந்தே படித்து வந்தோம். இப்போது அவள் மருத்துவ படிப்பு படிக்கிறாள். விசாலும் மருத்துவம் தான், ரம்யாவும் , உதயாவும் இன்ஞினியரிங்க் படிக்கின்றனர். இருப்பினும் நாங்கள் நால்வரும் தினமும் மாலை ஆறு மணிக்கு பார்க்கிற்கு வந்து ஏழு மணி வரை அரட்டை அடித்து விட்டுத் தான் செல்வோம். லதாவும் நானும் பல மணி நேரம் பேசினாலும் எனக்கு அவள் நட்பு மீது அதிக நம்பிக்கை உண்டு. அவள் எது சொல்ல நினைத்தாலும் , அதனை நான் அவள் சொல்லும் முன் செய்து முடித்து இது தானே நீ என்னிடம் செய்ய சொல்ல நினைத்தாய் என்பேன் . அவள்,’நீ என்னோட மனச புரிஞ்சு நடக்கிறவன்டா...நீ தான் என் பெஸ்ட் பிரண்டு . “ என ,என் தலையை பிடித்து கோதி விடுவாள் . நான் இது வரை அவளிடம் வேறுவிதமான எந்த பால்வினைச் சம்பந்தமான உணர்வுகளையும் பெற்றது இல்லை.


       ” விசால், இது ஓவருடா.. ஒரு லூசப் போயி அடிக்க வரியே...” என கடிந்துக் கொண்டேன். உடனே, உதயா , “ஒரு பொண்ணப் பார்த்து ‘ஐ லவ் யு ‘ ன்னு சொல்லுறது எவ்வளவு முட்டாள் தனம் , லூசுன்னா எதை வேணாலும் செய்யலாமா...” என்றாள். “ சரி.. நான் உணர்ச்சி வசப் பட்டு இருக்க கூடாது ... என் மேலத் தான் தப்பு ... “என லதா மன்னிப்பு கேட்டாள். அதற்குள் ” எதுக்கு மன்னிப்பு கேட்கிற ...இதே இது ரவி ஒரு லூசா இருந்து உன்ன சொன்னா விட்டுறுவியா? “ என உதயா கோபமாக கேட்டாள்.  அதற்குள் முந்திக் கொண்டு விசால்,” இவன் மட்டும் சொன்னான் , மவளே நானே வெட்டிப் போட்டுறுவேன்” என்றான். அதற்குள் லதா,”இது ரவி மட்டும் சொல்லி இருந்தா.. நானும் சேர்ந்து ‘ஐ டூ லவ் யூ டா “ என சொல்லி இருப்பேன் “ என்றாள்.” ஏ, நிஜமாத்தான் சொல்லுறீயா ” என அழும் குரலில் விசால் கேட்க ,” இதுக்கு எதுக்குடா நீ பீல் பண்ணுற...” என சைடு கேப்பில் ரம்யா வண்டி ஓட்டினாள் . அன்றிலிருந்து அவள் என்னை தொடும் போது ஒருவித பயம் தொற்றிக் கொள்ளும். அதற்கு பின் ரம்யாவும் , விசாலும் தீவிரமாக காதலித்து இரண்டு வருடத்தில் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொண்டனர் என்பது தனிக் கதை.


      நான் இப்போது ஒரு வங்கியின் மேனேஜர். இன்னும் திருமணம் ஆகவில்லை. லதாவுக்கும் தான். இருப்பினும் ரம்யா, உதயா, அவர்களின் தோழிகள் கலா, ஜெயா, ராதா என நட்பு வட்டாரம் பெருகி விட்டது. அதே போல என் தோழர்கள், அலுவலக நண்பர்கள் என அருண், சாந்துரு, கர்ணன், ஆறுமுகம் என ஒரு பட்டாளம் தினமும் சேர்ந்து அரட்டை அடிக்க தொடங்கினோம், ஒரு நாள் அவள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது ,” ரவி நான் சொல்லுறதுக்கு முன்னாடியே   நான் நினைக்கிற எல்லாத்தையும் செய்து முடிக்கிற , ஆனா இன்னும் என்னை புரிஞ்சுக்க மாட்டிங்கிற..உண்மையாவே நான் சொல்லுகிறேன் ‘ஐ லவ் யூடா “ என்றாள். அவளை அந்த மாதிரி என்றும் நான் நினைத்துப் பார்த்தது இல்லை. இப்படி என்றாவது கூறி விடுவாளோ என்று பயந்து தான் அவள் தொடும் போது ஒதுங்கி விடுவேன். ”  இது எனக்கு அப்பவே தெரியும் ,  அவள் தொடுறதும் இவன் சிரிக்கிறதும், இவங்க லவ் பண்ணுறாங்கன்னு அப்பவே சொன்னேனே , நீ நம்பல “ என என் நட்பை கொச்சைப் படுத்தி பேசி விடக்கூடாது என கருதியே , அவள் என் தோல்மீது கை போடும் போதேல்லாம் தவிர்த்து, ஒதுங்கி வந்தேன்.


      ”என்ன ரவி, உனக்கு அவளை பிடிக்கலையா...? நீயும் அவளும் நல்ல பிரண்டு தானே...?அப்புறம் என்ன ..?”   எனக் கேட்டாள் ரம்யா.
” ரம்யா , நீயும் என்னை புரிஞ்சுக்கிற மாட்டீங்கிற ... அவளை எனக்கு பிடிக்கும் அவ என் பிரண்டு , அவளை வேறு மாதிரி எனக்கு பார்க்க தோணாது.அவ பிரண்டா இருந்து என் நல்லது, கெட்டது எல்லாம் பார்த்துக்கிறா... அதேப் போல அவளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் .. புரியுதா...? ஏன் ஒரு ஆணும் பெண்ணும் நட்பா இருக்க கூடாதா.. ? அந்த நட்பும் ஒரு காதலாத் தான் முடியணுமா...?இதுனாலத் தான் ரோட்டில ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பேசினாலே ஒரு லவ்வர்ஸ் என்று தான் நினைக்கிறாங்க...”

”டேய் , நீ நினைக்கிற மாதிரி இருக்கணும்ன்னா.... விஜயா தான் உன்னை க் கட்டிக்கணும் . அப்பத்தான் அவ நீ லதா கூட பேசும் போதெல்லாம் சந்தேகப்படாம இருப்பா...? லதா அருண கட்டிகிட்டாத்தான் அவ உன்னுடன் பேசும் போது சந்தேகப்பட மாட்டான்.”


“எனக்கு சம்மதம் ப்பா... என்ன ரவி வீட்டில மாப்பிளை பார்க்க வர சொல்லட்டா...?” எனக் கலாய்த்தாள் விஜயா.

“சரி , வரச் சொல் ... ஆனா லதாவுக்கு நீ எனக்கு பொறுத்தமானவளாம்ன்னு சொல்லட்டும் அப்புறம் கட்டிக்கிறேன்..”என்றேன்.

 “அப்ப உனக்கு கல்யாணமே நடக்காது.. இந்தா விஜயா புது வீடு கட்டினதுக்கு .. கேக் எடுத்துக்கங்க...” என ரம்யா கேக் நீட்ட ... அனைவரும் எடுத்தனர். லதா என்னை முறைத்துப் பார்க்க எனக்கு வயிறு சரியில்லை என சமாளித்தேன். அன்றிலிருந்து யார் எதை கொடுத்தாலும் சுதாரித்து தான் வாங்குவேன். நான் நட்பு வட்டாரத்தில் இருந்து ஓதுங்க ஆரம்பித்தேன். எதையாவது பேசி நானும் லதாவும் சண்டைப் போட்டுக் கொள்வதை தவிர்க்க ஆரம்பித்தேன். அவளும் கிளினிக்கில் பிசி என்பதைப்போல அனைவரிடமும் காட்டி , கூட்டம் சேருவதை தவர்த்து வந்தாள். தினமும் அவளிடம் செல் போன் உரையாடல் தொடர்ந்தது. ஆனாலும், அவள் என்னிடம் நட்பு ரீதியாக சண்டைப்போடுவாள். ”ஒரு கிளார்க் அவனைபோயி என்னுடன் ...அதப்பார்த்து நீ ஏன் சும்மா இருந்த ..எங்க அப்பா ... அம்மா மாப்பிள்ளை ப்பார்த்துக்கிருவாங்கன்னு சொல்ல வேண்டியது தானே...”என சண்டைக்கு வருவாள்.

”விஜயா இன்று என் வங்கிக்கு வந்தாள்” என்று சொன்னால் போதும் .. சண்டைக்கு வந்து விடுவாள். நானும் வாய் தவறி சொல்லி விடுவேன். அவளிடம் இருந்து எதையும் மறைக்கக்கூடாது என்ற எண்ணத்திலும் . பின்பு அவள் வந்ததை மறைத்தேன் என்று தெரிந்தால் வேதனைப்படுவாள் என நினைத்து எது நடந்தாலும் சொல்லி விடுவேன். ”என்ன ஈன்னு பல்லைக்காட்டி வேலை பார்த்து இருப்பீயே... நீ அன்னைக்கே சொன்னவன் தானே .. நான் சொன்னா கட்டிக்குவானாம்.. இப்ப சொல்லுறேன் கட்டிக்க.. “ என கடிந்து விடுவாள். மேலும் இரண்டு நாட்களுக்கு போன் பேச மாட்டாள்.


     இப்படித்தான் ஒரு நாள் கலா, ராமு, சந்துரு , லதாவும் நானும் சினிமா சென்றோம் . பின்பு உணவு சாலைக்கு சென்று உணவு அருந்தும் போது எதார்த்தமாக ” ரவி, நம்ம சந்துரு தங்கச்சி, உமா ரெம்ப நல்ல பொண்ணு , நம்ம லதா போலவே பழக பேச அருமையான பொண்ணு.. உனக்கும் வயசாகுது.. பேசாம கட்டிக்கவே....”என கலா வாயை திறக்க...

“லதா மாதிரின்னா நல்லது தான் பேசாம சந்துரு அப்பாகிட்ட போட்டோ ஜாதகம் கொடுட்து பேச சொல்லு ...” என்றேன். நான்கு நாட்கள் அவள் என்னுடன் பேசவேயில்லை. நட்பு வட்டாரத்திலும் பேசவேயில்லை.

பின்பு ஒரு வழியாக ஒரு தமாசுக்கு தான் சொன்னேன் என சாமாளித்தேன். அவள் நீ என் நண்பன் என்றால் என்னிடம் கேட்டு தானே பொண் பார்த்து இருக்க வேண்டும் என்று சொல்லி தன் நட்பு காரணமாக த் தான் சண்டைப்போட்டேன் என சப்பைக் கட்டுக் கட்டி பேசினாள்.

அப்போது தான் புரிந்தது . ஒரு பெண்ணுடன் நட்புக் கொள்ளும் கடினம்.அப்படி நட்புக்கொண்டபின் பிறருடன் பழகும் போது பார்த்து பழகவேண்டும் . அதுவும் ஒரு பெண்ணுடன் நட்பு க் கொண்டு , பிற பெண்ணுடன் பேசு வது என்பது மிகவும் கடினம்.அதனால் தான் ஆண்கள் பெண்களை நட்புக் கொள்ளும் போது காதலிக்கின்றனர். காதலி எந்த காதலனையும் சந்தேகிப்பது இல்லை. அதேப்போல எந்த ஒரு காதலனும் கணவனாவதை தவர்க்கிறான். ஏனெனில், காதலி மனைவியாக சந்தேகிக்கக்கூடாது என்று .


           பழனி என் ஆழ்ந்த சிந்தனையை களைத்து இருந்தான் . பேசாமல் நான் பழனியாயிருந்தால் சிறுவயது முதலே என்னை லதாவுக்கு பிடித்து இருக்காது . என்னால் அவள் யாருடனும் பேசாமல் இருந்து இருக்கவும் மாட்டாள். என்னுடனும் பேசுவதை தவிர்க்கிறாள். காரணம் கேட்டாள் உனக்கும் எனக்கும் சண்டை வரும் ..அப்புறம் நீ சமாதனம் படுத்துவாய் . சாரி . நீ உன் வழியை பார்த்து போ. நான் என் வழியை பார்த்து போகிறேன். அதையும் மீறி வழிய கிளினிக் சென்று பேசினால் , எனக்கு என் பேசண்டை பார்க்கவே நேரமில்லை என ஒதுக்கி பேசுவாள். இருப்பினும் அவளாள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்க முடியாது.


   இந்த முறை அவள் என்னை அழச் செய்து விட்டாள் . பேசாமல் நாம் டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்கு சென்றால் , அவள் அடிக்கடி சண்டை போடாமல் இருப்பாள். நாமும் தேவையில்லாமல் யாருடனும் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவளும் நம் நட்பு வட்டாரத்தில் சகஜமாக பழகுவாள். தன் வேலை டென்சனை குறைத்துக் கொள்வாள் என முடிவு செய்து போன் போட்டுக் கொண்டே இருந்தேன். அவள் எடுக்க வில்லை. எது அவள் போனுக்கு டயல் செய்வது இருநூறாவது தடவை. எந்த போனையும் அவள் அட்டண்டு செய்ய வில்லை.குறுஞ்செய்திகளையும் அள்ளித் தள்ளினேன். எந்த பதிலும் இல்லை.


     மறுநாள் , காலை என் வீட்டு வாசலில் அவளின் கார் வந்து நின்றது. அதிலிருந்து அவளின் தாய் , தந்தை , மற்றும் அவரின் தாய் மாமன் வந்திருந்தனர். அப்பா ஒரு வழியா அவள் தாய் மாமனை கட்டிக்க சம்மதம் கேட்க வருகிறாள் . இன்று முதல் என்னை தொந்தரவு செய்ய மாட்டாள். ஒரு பில்டிங்க் காண்ட்ராக்டர போய் கல்லயாணம் பண்ணச் செய்வதா? என என் மனம் உருத்தியது. அவன் அவளுக்கு பொறுத்தாமாகவேயில்லை.அவளை எதற்கும் சிந்தித்து முடிவெடு என கூறுவோம் என நினைத்து மாடி ஏறி உடுப்பு மாற்றிக் கொண்டு வர சென்றேன். எதற்கு இவள் நம்முடன் சண்டைப்போட்டால் என்பது தெரியாமல் பேசக்கூடாது எனவும் முடிவெடுத்து மாடியிலேயே அமர்ந்தேன்.



அவள் மாடி ஏறி வரும் ஓசைக் கேட்டது. அவளின் கொலு ஒலி என்னை சுதாரிக்கச் செய்தது. ’சரி , சரி புத்தகம் படிச்சது போதும் ... நான் என் ரவியை இழக்க விரும்பவில்லை. அதனால ஒரு முடிவெடுத்து வந்திருக்கேன். வா என் அப்பா , அம்மா உன்னிடம் பேசணுமாம் ”என்றாள்.  ”அது இருக்கட்டும் என்னுடன் ஏன் பேசவில்லை ?”
”உனக்கு தெரியாதா...?”
”அன்னைக்கு ஜெயா வீட்டு கிரகபிரவேசம் அன்னைக்கு நான் போகவில்லை .. அதனால உன்னை , என்னை , ரம்யா, அருண் , முரளீயை கூப்பிட்டு ட்ரீட் கொடுத்தா .. நான் தான் அனாசியமா யாரிடமும் உன்னை பத்தியும் , என் கல்யாணம் பத்தியும் பேச விடலையில்லை...”

”அது முக்கியமில்லை... நீ எனக்கு பிடிக்காதது சொஞ்ச..அதான் “என்றாள் லதா.

“தெரியல.. நீயே சொல்லு...”

“ அவகிட்ட இருந்து ... வீட்டில செஞ்சுகிட்டு வந்த கொழுக்கட்டையை ஏன் திண்ணே...? எனக்கு தான் அவ எதை தந்து நீ வாங்கினாலும் பிடிக்காதுலா.. அப்ப உனக்கு அவ மேல ஆசை இன்னும் இருக்கு ... அவ என்னை விட உனக்கு பெரிசா போயிட்டா..அதான் பேசல.போதுமா கீழே இறங்கி வா ”

”நான் உன்னை பார்த்தேன் .. நீ தான் பரவாயில்லை சாப்பிடு என்றாய். அதனால எடுத்தேன்...”

“ அப்ப நான் எது சொன்னாலும் செஞ்சுடுவியா.. எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சுதானே அன்னைக்கு செய்த .. அதான் பத்து நாளா பேசல..”

“நீ எல்லாம் எப்ப தான் திருந்தப்போறியோ........ சாப்பாட எடுத்தா ... அவகூடவே போயிடுவேனா.. என்ன ஒரு ராங்கி த்தனம் “ என சண்டை போட தொடங்க...
“டேய் ...ரவி. வா” என என் தந்தை அழைத்தார்.


‘இங்க பாருங்க ரவி, நான் ஒரு காண்ட்ராக்டர். என் மாமன் மகளை கட்டிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இருந்தாலும் அவ ஆசை .. உங்கள் கட்டிக்கணும்ன்னு தான். .. வேறு யாரக்கட்டினாலும் அவ உங்க கூடப் பேசாம வாழ முடியாது .அதை எவனும் விரும்ப மாட்டான்.அவள் இந்த பத்து நாளும் எங்கேயும் போகல... வீட்டிலேயே அழுது புழம்பினா... நான் ரவியை ரெம்ப திட்டீட்டேன் ... கொடுமைப்படுத்துரேன்.. அவனும் நான் எது சொன்னாலும் கேட்டுட்டு , என்னை ஒரு அன்பா ஒரு நல்ல நட்பா பழகுறான். மாமா உங்கள கட்டிக்கிட்ட ரவியோட பேச விடுவீங்களான்னு கேட்டுக்கிட்டு அழுகிறா.. என்னைப்பொருத்தவர அவளை புரிஞ்சுகிட்ட நீங்களே அவள் கட்டிகிட்ட அவ வாழ்க்கை நல்லா இருக்கும் .. நீங்க அவள யாரும் தப்பா நினைக்ககூடாதுன்னு அவ நட்பை பாராட்டினதுக்கு எங்க எல்லாரோட சம்மதத்துடன் எங்க லதாவ உங்க மனைவியா எத்துக்கணும்..” என்றார்.


“ தப்பா நினைக்காதீங்க ... எந்த ஆம்பிளையும் தன் மனைவி இன்னொரு ஆணுடன் பழகுவதை ஒத்துக் கொள்வது இல்லை. .. அதனால நான் லதாவக் கட்டிகிட்டாலும் , அவள உங்களோட பேச அனுமதிக்க முடியாது . லதா மனைவியா எத்துக்க உங்க நட்பு இடம் கொடுக்கலைன்னா... இனி எப்பவுமே மறந்திடுங்க... அவள் எப்படி போனாலும் உங்களூக்கு கவலையில்லைன்னா... வேணாம்ம்ன்னு சொல்லுங்க”


லதாவின் கண்ணீர் என் கண்ணை கலங்கச் செய்தது.  ஒரு ஆண் , பெண்ணின் நட்பு காதலாகத்தான் இருக்க கூடாது. அதுவே கல்யாணமாக முடியும் என்றால்  மிகவும் மகிழ்ச்சியாத் தானே இருக்கும். ஆம்.. இப்போதேல்லாம் நான் யாருடன் பேசினாலும் லதா சண்டைப்போடுவதே யில்லை.
சொல்ல மறந்திட்டேன்.. பிப்ரவரி பதிநான்கு கல்யாணம் எல்லாரும் வந்திடுங்க... 

5 comments:

Philosophy Prabhakaran said...

உருகி உருகி காதலிச்ச அந்த லதா யாருங்க... இந்த மாதிரி எல்லாம் கூட பொண்ணுங்க இருக்காங்களா...

Chitra said...

நல்ல புரிதலுடன், கதையின் பாத்திரங்கள் மனதில் பதியும்படி எழுதி இருக்கிறீங்க. பாராட்டுக்கள்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான கதை...

ஆர்வா said...

லதாவின் கண்ணீர் உங்களை மட்டுமல்ல என்னையும்தான் கலங்க செய்தது..

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

MANO நாஞ்சில் மனோ said...

கல்யாணத்துக்கு நானும் வாரேன் மக்கா பிளேன் டிக்கெட் எடுத்து அனுப்பும் ஹி ஹி ஹி ஹி...

Post a Comment