Friday, October 29, 2010

மனசு சொன்னது

மருத்துவமனையில்
சாகும் தருவாயிலுள்ள
நோயாளியை
பார்க்கும் போது பிறக்காத இரக்கம்
உன்னை பார்த்தபோது ஏற்பட்டு   
மனசு சொன்னது
நீ செத்துப்  போ என்று ...!

எனக்கு மட்டும் எமன் போல
உயிர் பறிக்கும் உரிமை இருந்தால்
உன்னை பார்த்த மாத்திரத்திலேயே
கொன்றிருப்பேன்...
இந்தியாவில் பிறந்ததினால்
அதற்கு சட்டத்தில் இடமில்லை...!

உயிர் ...
இரத்தமும் சதையுமாய் உருவானது
நீயோ
மலமும் சலமுமாய்
மனநலமும் இன்றி
உருகிக் கொண்டு இருப்பதாலே
ஈக்கள் மொய்த்த உடலை
ஈக்கள் மொய்த்த சடலமாய்
பார்க்க ஆசை படுகிறேன்
என்னை மறந்து சென்றக் காதலியை
புதைத்ததுப் போலவே
அப்படியே அள்ளி புதைக்கவே
மனம் விரும்புகிறது ....!

நடைப்பாதை
நாடக மேடை
உன்னையும் ஒரு நடிகையாகப்
பார்த்தாலும் ...
எனக்கு மட்டும் பிடிக்கவில்லை
ஆடைகள் அற்ற உன்னை
மேயும் கண்கள்
இரவு நேர ஆந்தைகள்
இரைக்கு...
நீ இறந்தே போகலாம் ...!

இரவு நேர வேட்டையில்
நகக் கீறல்களினால்
ஏற்பட்ட தொடை காயங்களில்
புழுக்கள் நெளிந்தாலும் ...
ஜன்னலோர பேருந்து வாசிகள்
சைக்கிள் , ரிக்ஷாக்காரன்
மோட்டார் வண்டிக்காரன்
என் அத்தனை காரனின்
பார்வையும் ....
காயம் படாத ....
மறைக்கப்படாத  மார்பில் அல்லவா
புழுக்களைப் போல
நெளிந்து செல்கின்றன...
இதைக் கூட அறிய முடியாத
நீ இருப்பதை விட
இறப்பதே மேல்...!

கருணை மனுக் கொடுத்து
காத்திருக்க விரும்பாததால்
நீ உடனே சாக
வழித்தெரியாமல்
முழிக்கிறேன் வலியுடனே...!

நான் உடுத்திய உடையை
உன் மீது போர்த்திய போது
என்னை பார்த்து ஏளனமாய்
சிரித்து
என் சட்டையை மட்டும் கிழித்து
எறிய வில்லை
என்னையும் சேர்த்து
எறிந்து விட்டாய்
பார்வையில் அம்மணமாய்
தெரிபவர்கள் எல்லாம்
என் மானத்தை பார்த்து
சிரித்து ஏமாளி , கோமாளி
என்கின்றனர்...
மன நோயாளிகள் .!

8 comments:

விஜய் said...

வலிக்கிறது கவிதை உரைக்கும் உண்மை

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

Chitra said...

மனதில் ஒரு வலி ...ம்ம்ம்.....

சிவராம்குமார் said...

வார்த்தைகள் சுடுகின்றது!!!

க.பாலாசி said...

நல்ல வடிவம் இந்த கவிதை... ஆழமான வலிபொருத்தும் வரிகளும்..

சுந்தரா said...

படிக்கும்போதே மனசுக்குள் என்னவோசெய்கிறது...

இதுமாதிரிக் காட்சிகள் கண்ணில்படும்போது, உயிரோடு வைத்து வதைப்பதைக்காட்டிலும், ஆண்டவன் இவர்கள் உயிரை எடுத்துவிடலாம் என்ற எண்ணம்வருவது இயல்புதான்.

சைவகொத்துப்பரோட்டா said...

வேதனையான விஷயம்.

G.M Balasubramaniam said...

uyir parikkum urimai irunthaalum kolla mudiyuma.?
sinthikka vaedukiraen. ungal vali purikirathu.

Muruganandan M.K. said...

மனம் முழுவதும் வேதனையை விதைக்கிறது. நல்ல கவிதை.

Post a Comment