Tuesday, August 10, 2010

கதை சொல்லிகளாக இருந்து ...

      அனைவருக்கும் இருள் வந்தால் பயமும் தொற்றிக் கொள்ளும் . சிறுவர்கள் அனைவரும் காலை ஒளியின் சுகத்தில் விடியலில் சூரியனையும் முந்திக் கொண்டு எழுவார்கள்.வெளிச்சம் நம்மை தொற்றி கொள்ளச்  செய்யும் சந்தோசம் . இருள் மூடநம்பிக்கையின் வெளிப்பாடு.  
 
         சில சமயம் பெரியவர்களையும் இருள் பயத்தை உண்டாக்கி , அவர்களையும் தன்னுள் உள்வாங்கி இருக்கும்.

    முனி இருப்பதாகவும் ,இருளில் தனியாக ஆலமரம் , அரச மரத்தடியில் செல்லக் கூடாது என்றும் ,சுருட்டு வாசனை வரும் , பின்பு கொலுசு சத்தம் வரும் , திரும்பி பார்க்க கூடாது , அவ்வாறு திரும்பி பார்த்தால் முனி அடித்து விடும் . இப்படித்தான் திரும்பி பார்த்த  நான்காவது  தெரு குப்பாயி பாட்டி ரெத்தம் கக்கி இறந்து விட்டதாக கதை கேட்டிருக்கிறேன்.  
    
       பாட்டியின் கதைகள் பயத்துடன் மிரட்டலை தருவதாக இருந்தாலும் அவை மறைமுகமாக இருளில் சிறுவர்கள்  கண்மாய் கரை , தோப்பு போன்ற இடங்களுக்கு தனிமையில் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்துவதாகவே உள்ளன.
தெரியாமல் யாரும் இல்லாத இருள் பொழுதில் தண்ணீரில் கால் தவறி விழுந்து விட்டால் அவனை காப்பாற்ற ஆள்  இருக்காது என்பதற்காகவும் , தனிமையல் தோப்புக்குள் இருளில் செல்வது பூச்சி , பட்டைகளால் தொந்தரவு ஏற்பட்டு மரணம் நிகழலாம் என்பதற்காக புனையப்பட்ட கதைகளாக தான் இருக்கும்.

      இருந்தாலும் கதை மனிதன் மனதை தான் எத்தனை விதத்தில் கவருகின்றன. அதுவும் சிறுவர்களுக்கு  என்றால்  சொல்லவா வேண்டும் !   ஆனால் இன்று சிறு குடும்பங்களாக சுருங்கி உள்ள உலகில் , கதை கூட காணாமல் போயிற்று பாட்டி, தாத்தாவுடன். பாட்டி தாத்தாவை  போன்று குழந்தைகளுக்கு கதைகளும் அன்னியப்பட்டு போயிற்று.  

      இன்று பல பள்ளிகளில் மாணவர்களை சந்தித்து வருகிறேன் . அவர்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் யார்? என்று கேட்பதுடன் ..அவர்களை பற்றி விசாரிக்கும் போதும், பிடித்ததற்கான காரணத்தை ஆராயும் போதும்  ...பல ஆசிரியர்கள் கதை சொல்லிகளாக இருப்பதை உணர்கின்றேன்.வகுப்பறைகளை உயிரோட்டத்துடன் கொண்டு செல்லவும் , மாணவர்களை நல்ல மகிழ்வான மனதுடன் வைத்திருக்கவும் இந்த கதைகள் உதவுகின்றன.   

     ஆசிரிய சமுதாயம் தயவு செய்து மாணவனின் மனதை மையப்படுத்தி தன் கற்பித்தல் பணிகளை செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கட்டாய படுத்தல் மூலமாகவும் , பிரம்பு கொண்டு தண்டிக்கும் விதமாகவும் , வலிந்து கற்றலை திணிப்பதை தவிர்க்க வேண்டும். மாணவன் மனம் கவருவதாக நம் கற்றல் அமையாவிடில் , அங்காங்கே சாவுகள் நிகழ்ந்து நமக்கு சவுக்கடிகளை தந்து கொண்டு தான் இருக்கும்.

       பல ஆசிரியர்கள் மாணவர்கள் கதை என்று கேட்டால் காத தூரம் ஓடுபவர்களாகத்தான் இருக்கிறார்கள் . இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இணையாக
 தங்களை புதுப்பித்து கொள்ள வேண்டும் .இல்லையேல் மாணவன் நம்மை புறக்கணிக்க நேரிடும். மனம் புண்படும் படியான வார்த்தைகள் தவிர்த்தல் வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் ஒரு நல்ல கதை சொல்லிகளாக இருந்து ,மாணவன் மனதில் நல்ல கருத்துக்களை, நற்பண்புகளை, நல்ல குணநலன்களை விதைத்து , நாட்டின் சிறந்த குடிமகானாக உருவாக்க வேண்டும்.
 
           மாணவனின் மன இருள் போக்கி, ஒளி தந்து வாழ்வின் வெளிச்சத்தை உணர்த்த நல்ல கதைகள் பல தந்து , பாக்குடனே  பாடம் நடத்த முன் வருவோம். சமூகத்தில் இருந்து பிற அம்புகள் நம்மை தாக்காமல் இருக்க , கை பிரம்பு தவிர்த்து , கற்றல் புரிவோம்.

 

2 comments:

அமைதி அப்பா said...

கை பிரம்பு தவிர்த்து , கற்றல் புரிவோம்.//

நல்ல வரிகள்.
நன்றி.

நூறுக்கு வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

//கட்டாய படுத்தல் மூலமாகவும் , பிரம்பு கொண்டு தண்டிக்கும் விதமாகவும் , வலிந்து கற்றலை திணிப்பதை தவிர்க்க வேண்டும். மாணவன் மனம் கவருவதாக நம் கற்றல் அமையாவிடில் , அங்காங்கே சாவுகள் நிகழ்ந்து நமக்கு சவுக்கடிகளை தந்து கொண்டு தான் இருக்கும்.//

சரவணன்,

துறை சார்ந்த , சிந்தனையைத் தூண்டும் நேர்த்தியான படைப்பு.

உங்களின், இது போன்ற படைப்புகள் இன்னும் பல ஆசிரியர்களைச் சென்றடைந்து நம் வருங்கால சந்ததியினருக்கு நல்ல வழி காட்டிகளாக இருக்கட்டும்.

வாழ்த்துக்கள்.

Post a Comment