Monday, August 2, 2010

வெறுமை

  இன்று  வெறுமையாக உணருகின்றேன். ஒரு சாதாரண கொத்தனார் வேலை பார்ப்பவன் கூட தன் தொழில் நேர்த்தியை காட்ட ஏதாவது  ஒரு விதத்தில் முயல்வான். கலவை தயாரித்தல், செங்கல் தேர்ந்தெடுத்தல் , வீட்டு முகப்பு அமைப்பு குறித்து ஆலோசனை வழங்கல் என பல விதத்தில் அறிவாளியாக திகழ்வதுடன், வீட்டு உரிமையாளருக்கு உதவியாக இருந்து , அடுத்த வாய்ப்பு கிடைக்க தவம் இருக்கிறான்.


    சாதாரண ஆட்டோ ஓட்டுனர் கூட , தன்னிடம் வரும் பயணிகளை பாதுக்காப்பாக இறக்கி விட்டு, தன் அன்பான பேச்சால் , தொடர்ந்து அந்த பயணிகள் தன் ஆட்டோவில் பயணிக்க முயற்சி எடுக்கிறான். ஒரு கடை நிலை ஊழியன் கூட தன் பணியின் சிறப்பினை பிறர் உணர சிறப்பாக வேலை பார்க்கிறான் .
          குத்து விளக்காய் ஒளி தந்து எப்போதும் மேல் நோக்கியே எரியும் சுடரை போல் 
 அனைவரும் தம் பணியினால் இந்த சமூகத்திற்கு சேவை புரிவதுடன் , தம்மையும் அடையாளம் காட்டிக் கொள்கின்றனர்.

         ஆனால் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும் இந்த ஆசிரிய பணியில் மட்டும் நாம் நம்மை அடையாளம் காட்டி கொள்வதை விட , பிறரால் அடையாளம் காணப்பட வேண்டும்.
        நம் பணியின் சிறப்பினை அன்பால், உண்மையான புரிதலினால்  , நாமே நம்மை ஒரு முன் மாதிரியாய் கொள்வதன் மூலமும் ,மாணவர்களை நண்பர்களாக பாவிக்கும் மனப்பக்குவத்துடன்,கண்டித்தலின்றி ஒருவித ஈர்ப்புடன் தவறை உணரும் புரிதலை ஏற்படுத்துவதை கொண்டும் , சமூகத்தால், பெற்றோர்களால் அடியாளம் காணப்பட வேண்டும்.

        இன்று செய்திதாளில் வரும் பள்ளி செய்திகள் நம்மை ஒரு சமூக விரோதிகளுக்கு இணையாக சித்தரிக்கப்படுவதை நினைக்கும் போது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மனம்  வெறுமை அடைகிறது  . நானும் சாமநியர்களில்  ஒருவனாக ஏதோ ஒருவர் செய்யும் தவறாக ஒதுக்க முடிய  வில்லை. இது நம் சமுகத்தில் புரையோடி கிடக்கும் அசுத்தமாகவே நினைக்கிறேன்.


     நான் என் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை எப்போதும் கவனித்து கொண்டு இருப்பதுடன் மாணவன்  படிப்பில் மட்டும்  கவனம் செலுத்த சொல்ல வில்லை .அவனின்
ஒழுக்கம் , பிற மாணவர்களுடன் பழகும் விதம், மதிய உணவு அருந்துமிடம், விளையாடுமிடம், வகுப்பறை என எல்லா இடங்களிலும் மாணவனின் கண்காணிக்க செய்வதுடன் ஆசிரியர் மாணவனுடன் இருக்கவும் , அவனுடன் பழகவும் , அவனின் குடுப்பம் , உறவினர் ,வீட்டருகே நண்பர் பற்றி தெரிந்து கொள்ளவும் செய்கின்றேன்.
      
      நானும் மாணவர்களுடன்  நட்புடன் பழகுவதால், மிகவும் மகிழ்ச்சியாகவே  என் வாழ்வை உணருகிறேன். மாணவரும் என்னை எளிதில் அணுகுவதால் ஒரு தலைமை ஆசிரியன் என்ற உணர்வையும் மறந்து எந்த ஆசிரியரும் திட்டினாலோ, அடித்தாலோ, உடனே என்னிடம் வந்து சொல்லுவதுடன்,"சார்,பாவம் சார், டீச்சர் , அடிக்காம பார்க்க சொல்லுங்க " என அன்பாய் சொல்லும் பக்குவம் பெற்றுள்ளனர். அதுவும் அடித்தவுடன் அன்றே வருவது இல்லை ,தொடர்ந்து அவர் அடிப்பதாக உணர்ந்தால் மட்டுமே வருவார்கள். அதிலும் ஒன்றாம் வகுப்பில் மாணவன் வந்து சொல்லுவது மிகவும் கொடுமை. . "அண்ணே....அந்த டீச்சர் ...அடிக்கிது....நான் உன்கிட்ட வரேன்..." என்று ஒரு சகோதரனாக சொல்லவது எனக்கு வேதனை தருகிறது  .

          மிகவும் வருந்த தக்கது ....அவரை கண்டித்தால் அவர் ,"சார் ...நான் அடிக்கிறதே இல்லை , என்னை பார்த்தாலே பயபடுகின்றனர்..." என மழுப்பலான பதில் வரும் . கோபப் படுவதை    தவிர வேறு எதுவும் என்னால் செய்ய இயலாது. மேலும் அதையும் மீறி ஒரு மெமோ கொடுப்போம் என்றால் அந்த ஆசிரியர் அடிக்கிறார் என்று புகார் கொடுக்க யாரும் வரமாட்டார்கள். என்றாவது ஒருநாள் யாரவது எழுதி கொடுத்தால் நிர்வாகம் , "சார், உங்களுக்கு அந்த  ஆசிரியரை கண்டாலே பிடிக்காது ...இத போய் பெருசு படித்திகிட்டு .எழுதி வங்கிட்டீங்களே ,பெற்றோரை சாமதானம் பண்ணி அனுப்பி விடுங்க "என நமக்கே அந்த ஆயுதம் திரும்பி வரும். பின்பு ஆறு மாதம் இந்த பயமுறுத்தல் மாணவர்களை காப்பற்றும்.
     பிரச்சனை எனக்கு மட்டும் விதி விலக்கு  அல்ல , என்னை போன்ற அனைத்து தலைமை ஆசிரியருக்கும் தான் . முளையிலே கண்டிக்க தவறும் போதும் ,ஆசிரியர் தம் தவறை உண்மையாய் உணராத போது  மட்டுமே , மாணவனை அடித்தல் என்பது பெற்றோரால் பெரிதாக உணரப்படும் போது, மீடியாவால் பெரிசாக்கப்பட்டு , அசிங்கபடுத்த படுகிறார்கள் .பள்ளிக்கும் , நிர்வாகத்துக்கும், தலைமை ஆசிரியருக்கும் , குறிப்பிட்ட அந்த ஆசிரியருக்கும் அசிங்கம்.

    இரண்டாவது ,பாலியல் வன்முறை...
           இது குறிப்பாக நடு நிலை ,உயர்நிலை, மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் நடைபெறும் தவறாக செய்தி தாளில் வருகிறது. என்னுடைய சந்தேகம் எல்லாம் , எப்படி மாணவர்கள் தனிமை படுத்தப் படுகிறார்கள். தனிப்பட்ட ஒரு மாணவியை ஆட்டுமந்தையில் இருந்து  பிரிப்பது போன்று , தனிமை படுத்தி, தம் மகள் வயதை ஒத்த சிறுமி அல்லது சிறுவன் மீது ...சொல்ல வாய் கூசுகிறது.    
   நான் இந்த  விசயத்தில் அனைத்து ஆசிரியரையும் குறைக் கூற கடமை பட்டுள்ளேன். ஒரு ஆசிரியர் நடவடிக்கை பற்றி கட்டாயம் சக ஆசிரியருக்கு தெரியாமல் இருக்காது. உண்மையில் மாணவனுடன் நன்றாக ஆசிரியர் உறவு முறை பேணப்பட்டால், நிச்சயம் எவனாவது ஒருவன் , தலைமை ஆசிரியருக்கோ , அல்லது தன் வகுப்பு ஆசிரியருக்கோ,அத் தவறை உணர்த்துவான். தலைமை ஆசிரியரே தவறாக நடந்து கொண்டாலும் தன் வகுப்பு ஆசிரியரிடம் புகார் தெரிவிப்பான்.

     என் பள்ளியில் நான் துவக்க பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தாலும், என்னிடம் பயின்று மேல் வகுப்பில் பயிலும் மாணவர்கள் தங்கள் வகுப்பு ஆசிரியர் திட்டுவதையும் , ஜோக் சொல்லுவதையும் , பிற மாணவர்கள் செய்யும் சேட்டையும் சொல்லுவார்கள். அது மட்டும்  அல்ல ...பேச்சு , கட்டுரை , நடன போட்டிகளில் பங்குகொள்ள ஆலோசனை மேற்கொள்ளுவார்கள். என்றும் பல மாணவர்கள் என் பள்ளியில் தன் ஒன்றாம் வகுப்பு, மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியருடன் தொடர்பு கொல்வதை காண்கிறேன். ஆலோசனை பெறுவதையும் , தன் வகுப்பில் நிகழும் நிகழ்வுகளையும் சொல்வதை பார்க்கிறேன். (இவை அனைத்தும் ஒரே காம்பசில் இரு பள்ளிகள் இயங்குவதால் உணர்கிறேன்)  


     ஒட்டு மொத்த தவறின் வெளிப்பாடு தான் ...பள்ளியில் பாலியல் கொடுமை . அத் தவற்றை தண்டிக்க தவறும் அப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் தண்டிக்க பட வேண்டியவர்களே  ....இவர்களை பாலியல் வன்கொடுமையின் சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்க வேண்டும். தன் குழந்தையை ஒருவன் இப்படி செய்தால் சக ஆசிரியர்கள் விடுவார்களா...? தனக்குத் தெரியாது என்று சப்பைக்கட்டு கட்டுவதே பிழைப்பு ...என் வர்க்கத்தை குறை கூறுவதில் நான் வருந்தவில்லை, இருப்பினும் என் பணியின் மீது  ஒரு வெறுமை உணருகிறேன்.

            பொறுப்பின்றி இச் சமூகத்தின் மிகப்  பெரிய பொறுப்பை வகிக்கும் ஆசிரியர்கள் ,
தவறுகளுக்கு உடந்தையாக இருப்பதை கண்டிக்கிறேன். தனக்கு என ஒரு வாழ்க்கை இருப்பதாக உணரும் யாரும் தயவு செய்து இந்த அறப்பணியை ஒரு தொழிலாக  , அல்லது ஒரு பிழைப்புக்கு வழியாக கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டாம். சமூகத்திற்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் , முடிந்தளவு சமூகத்திற்கு பயந்தாவது நடக்க கற்றுக் கொள்ளவேண்டும். ஒரு சிறு தவறுக்கு கூட இடம் தரக்கூடாது. பொய் பேசுவதற்கு கூட தயங்க வேண்டும் .( நான் ஆறாவது படிக்கும் போது என் கணக்கு வாத்தியார் புகைப்பதை கூட மாணவர்களுக்கு பயந்து ஏரியா விட்டு ஏரியா செல்வார்.ஏதாவது சீருடை தெரிந்தால் தான் புகைப்பதை தூக்கி எரிந்து விடுவதை பார்த்திருக்கிறேன். )
 

      ஆசிரியர்கள் நம்மை நாமே திருத்தாவிடில் ,சமூகத்தில்  முதல் குற்றவாளியாக விளங்குவோம். நாம் நம்மை உணர வேண்டும். பெற்றோர்களும் தம் குழந்தையின் மீது அக்கறை செலுத்துவதுடன், வாரம் அல்லது மாதம் ஒருமுறை பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், சக மாணவர்கள் சந்தித்து தம் பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாட வேண்டும். பள்ளியில்  முறையாக பெற்றோம் ஆசிரியர் கூட்டம் நடைபெறுமானால் , அனைத்து தவறுகளும் நடக்க வழியில்லை.

    
      

5 comments:

கண்மணி/kanmani said...

கண்டிப்பை விட அன்பான அணுகுமுறையே மாணவர்களைத் திருத்தச் சிறந்தவழி என்பதே என் கருத்தும்.கோபப்படுவது போல காட்டலாம்.ஆனால் ஆக்ரோஷமான முரட்டு குணமும் அடியும் பயத்தை வளர்க்குமேயன்றி மாணவனைப் பக்குவப் படுத்தாது.கேட்டால் 'அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்'எனச் சப்பை கட்டு சொல்வர்

இராகவன் நைஜிரியா said...

// பள்ளியில் முறையாக பெற்றோம் ஆசிரியர் கூட்டம் நடைபெறுமானால் , அனைத்து தவறுகளும் நடக்க வழியில்லை. //

ஏற்றுக் கொள்ளப்படவேண்டிய கருத்து.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப சரியான கருத்து..

இங்கே US -இல் பெற்றோர் வகுப்புகளில் போய், உதவி செய்ய வசதியாய் வச்சிருக்காங்க.. அப்படிப் போவதால்... அங்கே என்ன நடக்கிறது என்பது, தெரிவது மட்டுமல்ல.... நம் குழந்தைகள் எந்த மாதிரி சூழலில் வளர்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது..

அது மட்டும் அல்லது, ஒவ்வரு 3 மாத கால இடைவெளியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்துரையாடல் நடக்கும்.. அதில் உங்கள் குழந்தை குறித்த அனைத்து கேள்விகளும் கேட்டு, தெரிந்து கொள்ள முடிகிறது..

Thenammai Lakshmanan said...

மிகச்சிறந்த ஆசிரியர் சரவணன்.. சமூகப் பொறுப்புணர்வோடு. மாணவர் நலன் கருதி எழுதப்பட்ட இந்த இடுகைக்கு என் வாழ்த்துக்கள். உங்களுக்கு

அமைதி அப்பா said...

முதலில் உங்களுக்கு நன்றி. ஒரு ஆசிரியாராக பணிபுரிந்து கொண்டு, தனது துறையின் குறைகளைச் சுட்டிக்காட்ட பெரிய மனசு வேண்டும். தன்னுடன் பணிபுரிபவர்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று தெரிந்திருந்தும், இது போன்று எழுதும் தங்களை மனமாரப் பாராட்டுகிறேன்.

Post a Comment