Monday, June 14, 2010

இது உசார் பதிவு...

       அய்யா இது உசார் பதிவு. பிள்ளையார் சுழி போடும் போது சரியா போட்டா எல்லாம் நல்லா தான் முடியும் . இல்லன்னா எல்லாம் சிரிப்புல முடியும். வாழ்க்கையும் சிரிப்பா போகும். ஆங்கிலத்தில் WELL BEGUN IS HALF DONE  என்பார்கள்.

       சென்ற வருடம் சேர்க்கையின் போது மாணவர்களை பள்ளியில் சேர்க்க என் பள்ளியில் கூட்டம் அதிகாமாக இருந்தது .அப்போது சேர்க்கையின் போது இருந்த ஆசிரியர்கள், அனைத்து  பெற்றோர்களிடம் மாணவர்களை பற்றிய விபரங்களை கேட்டு பூர்த்தி செய்து அவர்களிடம் கையொப்பம் பெற்றனர். இந்த வருடமும் அதே போன்று கூட்டம் இருந்தது. நான் இம்முறை சென்றவருடம் படித்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு சேர்க்கை படிவம் பூர்த்தி செய்ய  , என்னிடம் அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொண்டேன்.

       உஷார் நேரம் வருகிறது . கொஞ்சம் நகைச்சுவை தவிர்த்து இதிலுள்ள அவசியத்தை மட்டும் கருத்தில் கொள்ளவும்.
 
       சேர்க்கை படிவத்தில் மாணவரின் பெயர், மாணவரின் தந்தை பெயர், பிறந்த தேதி , சாதி, மதம், இதற்கு முன் படித்த விபரம்,சேர்க்கும் வகுப்பு, பெற்றோர் கையொப்பம், தலைமை ஆசிரியர் கையொப்பம் ஆகியவை அவசியம் இருக்கும்.

      என்னிடம் வந்துள்ள பெற்றோரின் மூத்த மகன் இங்கு படிப்பதால், அவனின் பழைய சேர்க்கை படிவத்தில் உள்ளப்படி அவனின் தந்தை பெயரை எழுதினேன். பின்பு அவரிடம் இது உங்க வீட்டுக் காரர் பெயர் தானே என்றேன். ஆம் , என தலையாட்டினார். பின்பு மாணவனை பார்த்து முனியாண்டி மவனே உங்க தாத்த பேரு என்னன்னு கேட்டேன். அந்த அம்மா ,"சார், முனியாண்டி என் வீட்டு காரர் பேரு , ஆனா இவங்க அப்பா பெயரு மாரி என்று மாற்றி சொன்னவுடன்  எனக்கு பகீர் என்றது .

 
       அம்மா கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்க என்றேன். ஒருவேளை இது தற்போது கணவன் என்றும், மூத்த கணவனுக்கு பிறந்த குழந்தை என்றும் நினைத்து என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியரை அழைத்து இவர்கள் சொல்லுவது புரிய வில்லை ...விபரமாக கேட்டு , பின் என்னிடம் அழைத்து வாருங்கள் என்றேன். வந்த பெற்றோரும் என்னை பார்த்து விபரம் புரியாமல் , ''இதுக்கு எதுக்கு இந்த மனுஷன் இப்படி பதறி போய் பொம்பள டீச்சரை என்னிடம் பேச சொல்லுகிறான்'' என்பது போல் பார்த்தார்.


       அவரும்  விசாரித்து விபரம் புரியாமல் ,"சார் நீங்க சொல்லுற மாதிரிதான் கேட்டேன்  அவரு வீட்டு காரராம், இவரு இந்த பயனின் அப்பாவாம் "என்றார். என் சந்தேகத்தை கெட்ட சொன்னேன். "சார் , இதை எப்படி சார், நான் கேட்பது , என்னை வம்பில் மாட்டி விடாதிங்க ...நீங்களே கேளுங்க நான் அருகில் இருக்கேன் " என்று கிரேட் எஸ்கேப் .


     சரி ,என்னைக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை கேட்டு விடுவது என்று , மெல்ல ஆரம்பித்தேன் ," சென்ற வருடம் மூத்த பயனை சேர்க்கும் போது வீட்டு காரர் பெயர் முனியாண்டின்னு கொடுத்து இருக்கீங்க , ஆனா இந்த வருடம் இவனுக்கு அப்ப பெயரு மாரின்னு சொல்லுறீங்க ...கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா ..?"
                
    "கவுண்ட மணி செந்தில் கதையா சொன்னதையே இரண்டு பேரும் கேட்கிறீங்க ."
கிராமத்து உருவம் ,முகபாவம் சற்று கோபமாக ஆவதை கண்டு , அருகில் உள்ள ஆசிரியர் "சார், அதான் திரும்ப திரும்ப அதையே சொல்லுறாங்கள ... கையழுத்து வாங்கி அனுப்புங்க சார் " என்றார் பயந்து.


     இருப்பினும் இதை கேட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்து தைரியமாக ," அம்மா, இந்த முனியாண்டி எப்படி வீட்டு காரர்....?"
"சார், போன வருடம் கீழயிருந்த டீச்சர் ...."உங்க வீட்டு காரர் பேரு கேட்டாங்க அப்பவே நான் கேட்டேன் எங்க வீட்டு காரர் பேரு எதுக்கு கேட்கிறீங்க ன்னு ...அப்பறம் வீட்டுக்கார பேரு போடாம யாரு  பேரு போடுறதுன்னு எழுதி வாங்கிட்டாங்க ..இப்ப நீங்களும் இந்த டீச்சரும் வந்து ஏதோ தப்பா  கொடுத்த மாதிரி அப்பா பேரு என்ன , வீட்டு காரர் பேரு என்னே பாடி மாத்தி கேட்கிறீங்க .....நான் இதை சொல்ல...."


எனக்கு சற்று விபரம் புரிந்தது. கிராமத்து பெண் , புதிதாக பட்டணம் வந்து பிள்ளையை சேர்க்கும் போது ஒரு குழப்பம் வந்து விட்டது .வீட்டு  காரர் முனியாண்டி இவனுக்கு என்ன வேணும் .?என்று நான் கேட்ட போது புதிர் ஓடைந்தது . " சார் , அவரு எங்க வீட்டு காரர்  (ஹவுஸ் ஓனர் ),அவங்க வீட்டில தான் நாங்க குடி இருக்கோம்..மாரி இவன் அப்பா பெயர் ..." என்றார்.
  
     இது மாதிரி தான் நாம் தகவல்களை மாற்றி அவசரத்தில் கொடுத்து விடுவோம். படிவம் எழுதும் நபர்களும் தகவல் கிடைத்தது என்பதற்காக கையொப்பம் பெற்று பணியை முடித்து விடுவர். சற்று  சிந்தித்து பாருங்கள் , அவனின் பிற்கால வாழ்க்கை எவ்வளவு கேள்வி குறியாகி விட்டிருக்கும்..இதே இது அவரின் கணவர் வந்து இத் தவறை சுட்டி காட்டினால் வீடு இரண்டாகி இருக்காதா....?ஆகவே , நாம் கல்வி கொடுக்க பள்ளிகளுக்கு அனுப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் , கொடுக்கும் தகவல்கள் முறைப்படி கொடுக்க வேண்டுமல்லவா...?

      
    பிறந்த தேதி , தந்தை பெயர், மாணவனின் பெயர் , சாதி மதம் போன்றவை முறையாக எழுத பட்டுள்ளனவா என பார்த்து படித்து கையொப்பம் இட வேண்டும். சேர்க்கையின் போது அவசியம் பிறந்த சான்றிதழ் கொடுத்து மட்டுமே சேர்க்கவும்.
    
    அரசு எத்தனை முறை நமக்கு சுட்டி காட்டினாலும் பிறப்பு, இறப்பு சான்றிதல்களை நாம் பதிவது இல்லை. சிலர் பதிந்தாலும் முறையாக அதை பெறுவது இலை. பெயர் கொடுத்து விட்டது , இனி எல்லாம் தானாக நடந்து விடும் என சோம்பேறி தனமாக இருந்து விட்டு , முறையான விலாசம் தராததால் அதை முறை படி பெற தவறுகிறார்கள்.

        எம் ஆசிரிய பெருமக்கள் வீடு வீடாக சென்செஸ் எடுக்க வருகை புரிகிறார்கள். தயவு செய்து அரசு கொடுத்துள்ள புள்ளி விபரங்களை முன்பே எடுத்து வைத்து, நீங்கள் கொடுக்கும் விபரம் முறையாக கொடுத்துள்ள தகவல் படி பதிகிறார்களா என சரி பார்த்து கையொப்பம் இடவும். ஒரு படிவம் எழுத குறைந்தது அரை மணி நேரம் ஆகிறது என்பதால் இப்பதிவை படிக்கும் அனைத்து இந்தியரும், அவர்களுக்கு உதவி புரிவதற்காக ,அரசு விளம்பரத்தில் கண்ட விபரங்களை முன்பே எடுத்து வைத்து மக்கள் குடி கணக்கு வெற்றிகரமாக முடிக்க உதவவும்.  தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை தெரிவித்து உதவி செய்யவும்.

      


        

10 comments:

நேசமித்ரன் said...

ஆஹா இப்படியுமா?

ஆசிரியரே பயனுள்ள இடுகை

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

அருமை அருமை - பள்ளியில் நடந்த் அஒரு நகைச்சுவையினில் துவங்கி - ஆசிரியப் பெருமக்கள் செய்யும் அரிய பணியான கணக்கெடுப்பில் முடித்த இடுகை நன்று நன்று.

நல்வாழ்த்துகள் சரவணன்
நட்புடன் சீனா

அன்புடன் நான் said...

பயனுள்ள இடுகைங்க... உங்களுக்கு நல்லாசிரியர் விருது தகும்.
பகிர்வுக்கு நன்றிங்க.

AkashSankar said...

நல்ல பதிவு...நல்ல ஆசிரியர் நீங்கள்...

Paleo God said...

//இது மாதிரி தான் நாம் தகவல்களை மாற்றி அவசரத்தில் கொடுத்து விடுவோம்.//

ஏங்க அவங்கள சொல்லி என்ன தப்பு, தந்தை பெயர் என்றுதானே படிவத்தில் இருக்கும் அதை வீட்டுக்காரர் என்று மாற்றிக் கேட்டது யார் தவறு?

பையனோட அப்பா பெயர் என்னம்மா? என்று கேட்டு இருப்பீர்களே ஆனால் தகவல் சரியாக கிடைத்திருக்கும் என்பது என் கருத்து!

:-)

virutcham said...

இது உண்மையா ? அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்பட்டதா?

உண்மை என்றால் அந்த பெண்ணின் அறியாமைக்கு எல்லோரும் தான் பொறுப்பு.
//ஏங்க அவங்கள சொல்லி என்ன தப்பு, தந்தை பெயர் என்றுதானே படிவத்தில் இருக்கும் அதை வீட்டுக்காரர் என்று மாற்றிக் கேட்டது யார் தவறு? //
இதை நான் ஆமோதிக்கிறேன்.
ஆசிரியர்களுக்கே இவ்வளவு அறியாமை இருக்கும் போது கிராமத்துப் பெண்கள் பாவம்.
இவ்வளவு அறியாமை உள்ள மக்கள் இருப்பது தெளிவாகத் தெரிந்த பின் பள்ளிகளோ அரசோ செய்ய வேண்டியது சில இருக்கு.
தகவல் மையங்களை ஆங்காங்கே நடத்த வேண்டும். முக்கியமான படிவங்களில் முறையாக கொடுக்க வேண்டிய விஷயங்களை பற்றிய அடிப்படைகளை அவர்களுக்கு சொல்லித் தரும் பயிற்சி கூடங்களாக அவை செயல்பட வேண்டும். இது வேலை இல்லாதவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பும் கூட

virutcham said...

உங்க கிட்டே மொழிப் பாடத் திட்டம் குறித்த ஒரு கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்கு உங்கள் கருத்தை பகிர்த்து கொள்ளலாமே. கேள்வி மறுபடியும்,

நீங்கள் தமிழ் ஆசிரியரா ? இல்லை என்றாலும் ஆசிரியர் என்பதால் ஒரு கேள்வி?
மொழிப் பாடங்களில் ஏன் மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்ட விரும்பாத அளவு கடினமான அல்லது சுவாரசியம் இல்லாத விஷயங்களே பாடங்களாக வைக்கப் படுகின்றன?
பாடங்கள் குறைவாகவும், மொழியை புரிந்து கொள்ள, அனுபவிக்க வகை செய்ய மாணவர்களின் சுய படைப்புகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டாமா? அந்த அந்த வயதுக்கு ஏற்ற ஏதாவது கதை புத்தகங்களை வாசித்து அதை அவர்கள் புரிந்து கொண்ட முறையில் உரை எழுத வாய்ப்பு கொடுக்க வேண்டாமா?
இப்படி இயல்பாக கற்க அனுமதிக்காமல் எப்போதுமே முற் காலத்தில் பிறர் படைத்தது வைத்து விட்டு போன படைப்புகளையே படித்து தேர்வு எழுதி என்று ஒரு தேர்வு நோக்கிலே, மதிப்பெண் நோக்கிலே மொழிப் பாடங்களும் இருந்தால் அது சரியா ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடடா..

கேள்வியை இன்னும் தெளிவா கேட்டு ..இன்னும் தெளிவா பதில் வாங்கலைன்னா..கஷ்டகாலம் தான்..

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.... வித்தியாசமா தான் இருக்கு. பயனுள்ள இடுகை. வாத்தியாரே, நீங்களே இவ்ளோ எழுத்துப் பிழைகளோட எழுதலாமா...

மாயோன் said...

வீட்டுக்காரர்ன ஹவுஸ் ஓனர்ன்னு என் உங்களுக்கு முன்னமே தோனலை?

உங்களுக்கு சந்தேகம் வந்த உடனே, முனியான்டி வீட்லதான் குடி இருக்கீங்களான்னு நீங்க கேட்ருக்களாமே?

Post a Comment